சிற்றுண்டி


தேவையான பொருள்கள்:

பச்சரிசி மாவு – 1 கப்
தண்ணீர் – 2 கப்
பச்சை மிளகாய் – 3
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு (சுமார் 1 டீஸ்பூன்)
தேங்காய்த் துருவல் – 1 டேபிள்டீஸ்பூன் (விரும்பினால்)
தேங்காயெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க: தேங்காயெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை.

ammani kozhukkattai
 

செய்முறை:

  • பச்சை மிளகாய், உப்பு பெருங்காயத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கப் பச்சரிசி மாவை இரண்டு கப் தண்ணீரில் கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
  • கரைசலுடன் 2 டேபிள்ஸ்பூன் தேங்காயெண்ணெய் விட்டு அடுப்பில் வாணலியில் அடிப்பிடிக்காமல் கைவிடாமல் கிளறவும். (நான்ஸ்டிக் வாணலியில் எளிதாகவும் விரைவாகவும் செய்யலாம்.)
  • மாவு இறுக ஆரம்பிக்கும்போது அரைத்த விழுதையும் சேர்த்துக் கிளறவும். சுமார் 10 நிமிடத்துக்குள் மாவு வெந்து இறுகி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
  • ஆறிய மாவை சுண்டைக்காய் அளவு சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • ஒரு குக்கர் பாத்திரம் அல்லது இட்லிதட்டில் எண்ணெய் தடவி, உருண்டைகளை வைத்து குக்கரில் இட்லிவேக வைப்பதுபோல் வெயிட் போடாமல் ஒரு ஐந்து நிமிடம் மட்டும் வேகவைத்து எடுக்கவும்.
  • அடுப்பை அணைத்த உடனே திறந்து மின்விசிறி அடியில் ஆறவிடவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் தாளித்து, மெதுவாக உருண்டைகளைச் சேர்த்து உடையாமல் நாசுக்காகக் கிளறிவிடவும்.
  • கொழுக்கட்டைகளைச் சேர்த்தபின் ஒரு நிமிடம் மட்டும் அடுப்பில் வைத்திருந்து கிளறி இறக்கிவிடவும்.

* சூடாகவோ ஆறியோ எப்படிச் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.

* கொழுக்கட்டை மாவு மிகுந்தாலும் இந்த மாதிரி செய்யலாம். தேவையான பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம் அரைத்த விழுதை மாவிலேயே நன்கு கலந்துப் பிசைந்து உருண்டைகள் பிடித்து குக்கரில் வேகவைத்து மேலே சொன்னபடி தாளித்துக் கிளறவும்.

மல்லிகை மகள் மே 2008ல் பிரசுரமானது.

வெயில் காலங்களில் பயத்தம் பருப்பு, வெங்காயம், கீரைகளை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது. ரொட்டி, தால் வகையாக இவற்றைச் செய்து பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு – 3 கப்
கடலை மாவு – 1 கப்
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
ஓமம் – 1 டீஸ்பூன்
எள் – 2 டீஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 2 (பெரியது)
கொத்தமல்லித் தழை – 1 கப் (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் 
நெய் அல்லது வெண்ணெய்

Missi_roti_(punjab)1

செய்முறை:

  • இஞ்சி பச்சை மிளகாயை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம் கொத்தமல்லித் தழையை மிகப் பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • கோதுமை மாவு, கடலை மாவு, ஓமம், எள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு, பச்சை மிளகாய் அரைத்த விழுது, தயிர், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் எல்லாவற்றையும் நன்கு கலந்து கையால் அழுந்தப் பிசைந்து கொள்ளவும்.
  • தேவைப் பட்டால் மட்டும் இன்னும் சிறிது நீர் சேர்த்து கெட்டியான மாவாக அடித்துப் பிசைந்து ஒரு மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.
  • ஊறிய மாவை எடுத்து மீண்டும் அழுத்திப் பிசைந்து, எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • உருண்டைகளை மைதா மாவு தோய்த்து, சிறிய சப்பாத்திகளாக இட்டு, நடுவில் சிறிது நெய் அல்லது எண்ணெய் தடவி நான்காக மடித்து, முக்கோண வடிவில் வைத்துக் கொள்ளவும்.
  • மடித்து வைத்துள்ள சப்பாத்திகளை மேலும் மைதா மாவு தோய்த்து சப்பாத்திகளாக இட்டு அடுப்பில் தோசைக்கல்லில் போடவும்.
  • அடிப்பாகம் சிறிது காய்ந்து மேலே சிறிய சிறிய கொப்புளங்கள் வர ஆரம்பிக்கும்போது திருப்பிப் போடவும்.
  • மீண்டும் கொப்புளங்கள் வரும்போது ஃபுல்கா செய்வது மாதிரி ஒரு துணியால் அழுத்தி அழுத்தித் திருப்பிவிடலாம். விரும்புபவர்கள் இந்த நிலையில் மட்டும் சிறிது எண்ணெய் அல்லது நெய் விட்டு கரண்டியால் அழுத்திக் கொடுத்து சாதாரண சப்பாத்தி மாதிரியும் வேகவைக்கலாம்.
  • இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும். எண்ணெய் சேர்க்காமல் ஃபுல்காவாகச் செய்திருந்தால், கல்லிலிருந்து எடுத்ததும் மேல்புறம் சிறிது நெய் அல்லது வெண்ணெய் தடவிப் பரிமாறலாம்.

* மடித்து இடாமல் ஒற்றையாகவும் இட்டு எடுக்கலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

ஊறுகாய், தயிர்ப் பச்சடி, தால் வகைகள் இவற்றில் ஏதாவது ஒன்றோடு சாப்பிட சுவையாக இருக்கும். பிரயாணங்களுக்கு எடுத்துச் செல்ல ஏற்றது. சீக்கிரம் கெட்டுப் போகாது.

 

“ஏய் இங்க வா, உன்னை என்ன கேட்டாங்க?”

“சமையல் குறிப்பு நகைச்சுவையா எழுதச் சொல்லி கேட்டாங்க”

“எழவு நகைச்சுவைக்கும் சமையல்குறிப்புக்கும் என்ன சம்பந்தம்?”

“சமையல்குறிப்புன்னாலே எல்லாருக்கும் நகைச்சுவையாத்தானே இருக்கு. அதனால இருக்கும். :(“

“அடப்பாவமே! நகைச்சுவைக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?”

“சிறுபத்திரிகைக்கும் சமையல்குறிப்புக்கும் என்ன சம்பந்தம்னே முதல்ல எனக்குத் தெரியலை..”

“சரி விடு. எழுதினியா, எத்தனை எழுதின?”

“ரெண்டு”

“ஒண்ணு இங்க இருக்கு. இன்னொன்னு எங்க?”

“அந்த இன்னொன்னு தாங்க இது! :(“

“இதுல என்ன இவ்ளோ கோரமை?”

“தேவை இல்லைதான். ஏதோ ஜெமோ முதல் இதழ்ல எழுதலைன்னு ஃபீலிங்ஸ் வேண்டாம், அவர் எழுத்தையாவது கொண்டுவந்துடலாம்னு இப்படி எழுதிட்டேன். 😦 இனிமே இப்படி நடக்காது.”

—–

அடைப்புக்குறிகளுக்குள் இருக்கும் எழுத்தாளர் ஜெயமோகனின் வரிகளுக்கு நன்றி.

[“வென்றவர்களின் வரலாறு அளவுக்கே தோற்றவர்களின் வரலாறும் முக்கியம் என நமக்கு கற்பித்தது பின்நவீனத்துவமே.”]

ரவை உப்புமா என்ற ஒரு சிற்றுண்டி அளவுக்கு மலிந்துபோன, மக்களால் புறக்கணிக்கப்படும், ஏளனமாகப் பார்க்கப்படும் உணவு வேறு இல்லை. மற்ற எல்லாச் சிற்றுண்டிகளுமே சிலருக்குப் பிடித்தும் சிலருக்குப் பிடிக்காமலும் என்று ஓரளவாவது அங்கீகாரம் பெற்றவையாக இருக்க, குடும்பத் தலைவிகளின் கைவசமாகும் ரவை உப்புமாவிற்கு மட்டும் மோட்சமே இல்லை. ஆனால் பின்நவீனத்துவம் அதை அப்படியே விட்டுவிடுவதில்லை.
 

[“தமிழில் பின்நவீனத்துவ சிந்தனைகளில் பெரும்பகுதி தேவையற்ற சிக்கலுடன் முன்வைக்கப்பட்டதென்பது உண்மையே. ஆனால் அவை அடிப்படையில் சிலவற்றை நாம் பார்க்கும்படிச் செய்தன. விளிம்புநிலை மக்கள், புறக்கணிக்கப்பட்ட வாழ்வின் பக்கங்கள் பொதுவில் ஏற்கப்படாத உணர்வுகள். அச்சிந்தனைகளின் விளைவே இப்போது திருநங்கைகளுக்கு கிடைத்திருக்கும் சட்டக்கவனம்.”]

வலிந்து குடும்பத்தில் திணிக்கப்படும்போது, அன்றுமட்டும் டிபன் டப்பாவை வீட்டிலேயே மறந்து(!) வைத்துவிட்டுப் போகும் கணவன், பள்ளி விடுமுறை எடுக்கமட்டுமே வரும் திடீர் வயிற்றுவலி, அன்றும் வந்து சாப்பிட எதுவுமே வேண்டாம்; ஆனால் ஸ்கூலுக்குப் போகிறேன் என்ற முரணான நிலைக்குத் தள்ளப்படும் குழந்தைகள், ஒருநாளும் இல்லாத திருநாளாக அடுத்தவீட்டு அம்மணியே புளிசோறு கொடுத்துட்டாக என்று மறுக்கும் முனியம்மா போன்ற நாசூக்கான அல்லது மௌனமான நிராகரிப்புகள், இன்னிக்கும் அந்த ரவைக்களியைக் கிண்டி வெச்சுட்டாளா என்ற மாமியாரின் பொருமலில் கிளம்பும் உட்குடும்பப் பூசலுக்கான முதல் தீப்பொறி, இவை எல்லாவற்றிற்கும் பின்னும் ரவை உப்புமாவிற்கும் ஒரு கவனிப்பு தேவைப்படத் தான் செய்கிறது.
 

[“விடுதலை, சமத்துவம், உலகநலன் என்றெல்லாம் கூறிய முந்தைய சிந்தனை மையங்கள் உருவாக்கிய அதிகாரக் குவிப்பு மற்றும் வன்முறையை வைத்து நோக்கும்போது பின் நவீனத்துவம் மேலும் ஜனநாயகமானது என்பதை சாதாரணமாக உணரலாம்.”]

பாரம்பரிய உணவு, பத்தே நிமிடங்களில் செய்யச் சுலபமானது, அதிக முன்னேற்பாடுகள், ஊறவைத்தல், அரைத்தல், கரைத்தல்கள் இல்லாதது என்ற ஆண்டாண்டு காலமாக சமையலறை அதிகார வர்க்கம் உருவாக்கி வைத்திருக்கும் பிரசார பீரங்கிகளை குடியரசு தினத்துக்கு மட்டும் எண்ணெய் போட்டு துடைத்து ஊர்வலத்தில் காண்பிக்க உபயோகப்படுத்துவது குடும்பச் சூழலுக்கு எவ்வளவு ஜனநாயகமானது என்பதையும் நாம் மறுதலிக்க இயலாது. அந்த வகையில் ரவை உப்புமாவிற்கான கவனத்தை குடும்பத்தினர் பார்வைக்குக் கொண்டுவர வேண்டியதன் விளைவாகக் கிளம்பியது இந்தக் கலகம்.
 

[“ஐரோப்பாவில் பெரும் கோட்பாடுகளின் சரிவு பின்நவீனத்துவத்தை உருவாக்கியது என்றால் இந்தியாவில் ஜனநாயகத்திலும், அதற்கு எதிரான புரட்சிகர வன்முறையிலும் ஒரே சமயம் உருவான அவநம்பிக்கை அதை உருவாக்குகிறது.”]

குடும்பத்தாரின் விருப்பங்களை அலட்சியப்படுத்தும் அதிகார மனப்போக்கும், அதனைத் தொடரும் உப்புமாவைக் குப்பையில் கொட்டவேண்டிய வன்முறைக்கும் எதிரான சூழ்நிலையில் இந்தக் கலகம் மிக மிக அவசியமாகிறது.
 

[“கருத்துக்கள் என்பவை மொழியால் உருவாக்கப்படுபவை என்ற நம்பிக்கை பின்நவீனத்துவத்திற்கு உண்டு. அவை நிரந்தரமான கட்டுமானங்கள் அல்ல என அது நம்புகிறது. ஆகவே அது கருத்துக்களையும் மொழியையும் சதுரங்க விளையாட்டாக மாற்றிக்காட்டுகிறது நமக்கு.”]

தேவையான பொருள்கள்:

ரவை உப்புமா – 1 கப்
துவரம் பருப்பு – 1/4 கப்
கடலைப் பருப்பு – 1/4 கப்
உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
கொத்தமல்லித் தழை – சிறிது
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்

adai - ravai uppumaa remix (batter)

செய்முறை:

  • ஒரு பின்நவீனத்துவவாதி, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பை ரவை உப்புமா செய்ய நினைக்கும்போதே தண்ணீரில் ஊறவைத்துவிடுவாள்.
  • குறைந்தது இரண்டு மணிநேரம் ஊறிய பருப்புகளோடு காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • ‘ஙே’ என்று விழித்துக்கொண்டிருக்கும் ரவை உப்புமா, தேங்காய்த் துருவலுடன் தேவையான தண்ணீரும் சேர்த்து, அடைமாவு பதத்திற்குக் கலந்துகொள்ளவும்.
  • நறுக்கிய கொத்தமல்லித் தழையையும் பிசிறிக் கொள்ளவும்.
  • அடுப்பில் தோசைக்கல்லைக் காயவைத்து, ஒரு கரண்டி மாவை நடுவில் வைத்து அடைமாதிரி சற்று கனமான வட்டங்களாக வார்க்கவும்.
  • சுற்றிலும் எண்ணெய் விட்டு, நடுவிலும் துளையிட்டு எண்ணெய் விட்டு, சிவக்க வேகவைக்கவும்.
  • மறுபக்கமும் திருப்பிவிட்டு, எண்ணைவிட்டு மொறுமொறுப்பாக எடுத்து, சூடாகப் பரிமாறவும்.

adai - ravai uppumaa remix

* உள்ளே தாளித்த கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாயைப் பார்த்து, குடும்பம் குழம்பும். பரவாயில்லை; பின்நவீனத்துவ அரசியலில் குழப்பம் சகஜம்.

* தக்காளிச் சட்னி, வெங்காயச் சட்னி அல்லது சாம்பாருடன் சாப்பிடச் சுவையாக இருக்கும்.
 

[“ஆனால் பின்நவீனத்துவம் எங்கும் ஒரேவகையானது அல்ல. அந்த ‘டிரெண்ட்’ ஒன்றுதான். வெளிப்பாடு ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வகை. அதற்கு அந்தப் பகுதியின் கலாச்சாரம் வாழ்க்கைமுறை என எத்தனையோ காரணங்கள். அதன் தனித்தன்மை அந்த ஆசிரியனின் ஆளுமை, அவன் வாழும் சூழலின் இயல்பு, மண்ணின் அடையாளம் ஆகியவை கலந்து மாற்று இல்லாத தனித்தன்மையுடன் இருக்கும்.”]

ஆனால் இந்த அடைபோன்ற வடிவம் மட்டுமே உப்புமாவுக்கான இறுதி நிலை என்று கொள்ளத் தேவை இல்லை. அவரவர் வசதி, திறமை, காலக் கெடுபிடிக்கேற்றவாறு இதை பொங்கல், போண்டா, குணுக்கு, தோசை, வடை, இட்லி, இடியாப்பம், இன்னும் இவை எதுவுமே இல்லாத இன்னொன்றாகக் கூடச் செய்துகொள்ளலாம்.
 

[“பின் நவீனத்துவம் இன்றைய வாழ்க்கை நோக்கில் இயல்பாகவே உள்ளது. ரீமிக்ஸ் பாடல்கள் ஓர் உதாரணம். நாம் நிகழ்ந்தவற்றை ஏன் நிகழ்ந்தது எப்படி நிகழ்ந்தது என்று நோக்குகிறோம். மீண்டும் நிகழ்த்திப் பார்க்கிறோம். மாற்றியமைக்கிறோம். கிண்டல்செய்கிறோம். விரிவாக்கிப்பார்க்கிறோம்.”]

ஆக அது அதன் அடிப்படை மட்டும் சாராது, கையாள்பவரின் ஆளுமையையும் தன்வயமாக எடுத்துக்கொள்கிறது. இந்த எடுத்தாள்கைப் படைப்பு, ‘எங்கேயும் எப்போதும்..‘ பாடலைப் போல வெற்றியடையுமா அல்லது ‘பொன்மகள் வந்தாள்…’ போலப் புலம்பவைக்குமா என்பதை காலத்தின் தீர்ப்புக்கு விட்டுவிட வேண்டும். ஆனால் அதுவரை அதுகுறித்த ஓர் ஓயாத விவாதம் சமையல் உலகில் நிகழ்ந்தவண்ணம் இருத்தல் அவசியம்.
 

[“பின்நவீனத்துவம் பற்றிய மிக முட்டாள்த்தனமான பேச்சே இது ஒரிஜினல் பின்நவீனத்துவம் இல்லை, அதுதான் என ஐரோப்பாவையோ அமெரிக்காவையோ காட்டுவது. அப்படிசொல்லக்கூடாது என்றுதான் பின்நவீனத்துவம் வாதிடுகிறது.”]

இங்கே இந்த ரவை உப்புமா ரீமிக்ஸ் மட்டுமே ஒரு பின்நவீனத்துவம் என்பதாகாது. இலக்கிய எழுத்துகளில் தாழ்த்தப்பட்டதாகவும் விளிம்புநிலையிலும் இருக்கும் சமையல் குறிப்புகளும் கூட முதன்முதலாக சிறுபத்திரிகையில் கவனத்தைப் பெற்றவகையில், இந்தக் கட்டுரையேகூட ஒரு கலகக் கட்டுடைப்பாகவும், அதை நோக்கிய முக்கிய முன்னகர்வாகவும் கவனிக்கத் தக்கது.

அம்பலத்தின் என் கதை வெளியாகியும், அதை எனக்குத் தனிமடலில் தெரியப்படுத்தவில்லை, இனிமேல் அம்பலத்துக்கு என் படைப்புகளை அனுப்பவே மாட்டேன்,” என்று குதியாய்க் குதித்த கவிஞர்/ எழுத்தாளர்/ பத்திரிகையாசிரியர் ஹரன் பிரசன்னா, தான் ஆசிரியராக இருக்கும் பத்திரிகையில், அவர்களாகவே கேட்டு, படைப்பை அனுப்பியும் அந்தப் படைப்புகள் நிராகரிக்கப்பட்டதை– காரணம் தேவையில்லை; தகவலாக மட்டும்– சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புவார் என எதிர்பார்ப்பது அப்படி ஒன்றும் தவறு இல்லை என்று நினைக்கிறேன். சுயவிலாசமிட்ட, அஞ்சல்தலை ஒட்டிய உறை உள்ளே வைத்து அனுப்ப சாத்தியமில்லாத மின்னஞ்சல் வகை படைப்புகளுக்கு அது அவசியமும் கூட. இட்லிவடை சொல்லி நான் தெரிந்துகொள்ளவேண்டிய (துர்)பாக்கியத்திற்கு நன்றி.

சேவை என்பது ப்ரும்மப் பிரயத்னமாக இருந்த காலத்திற்குப்பின் இன்ஸ்டண்ட் சேவை வந்து வாழ்க்கையை சுலபமாக்கியது. இது ஒரிஜினலுக்கு ஈடே ஆகாது என்றாலும் நிச்சயம் புறக்கணிக்கக் கூடியதும் அல்ல. எப்பொழுதும் Concord சேவை(200 கிராம் 20 ரூபாய்) உபயோகித்துக் கொண்டிருந்தேன்.

MTR Rice Sevai

இப்போது புதிதாக MTR நிறுவனத்தினர்  With Low Glycemic Index என்கிற லேபிளோடு புதிதாக ஒரு இன்ஸ்டண்ட் சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். 200 கிராம் பாக்கெட் 18 ரூபாய். Glycemic Index தொடர்புடைய ஒரு பதிவு.

Concord நன்கு கொதித்த நீரில் ஐந்தாறு நிமிடங்கள் மூடிவைத்து, பின் நீரை வடிக்க வேண்டும், இதில் 5 நிமிடங்கள் அடுப்பிலேயே கொதிக்கவைத்து நீரை வடிக்கவேண்டும் என்பது தவிர இரண்டுக்கும் தயாரிப்பில் அதிகம் வித்தியாசம் இல்லை.

எந்த சேவையாக இருந்தாலும், சேவை தயாரித்தபின் நமக்கு விருப்பமான வகையில் தேங்காய் சேவை, எலுமிச்சை சேவை, புளி சேவை, தயிர் சேவை போன்றவைகளைத் தயாரித்துக் கொள்ளலாம். எல்லாம் தயாராக இருந்தால் ஒரே பாக்கெட்டில் அரை மணி நேரத்தில் நான்கு வகை சேவைகளை குடும்பத்தினர் விருப்பத்திற்கிணங்க செய்துவிடலாம்.

arisi sevai (plain)puLi sevai

elumichchai sevaithEngaai sevai

எல்லாவற்றிலும் எனக்குப் பிடித்தது, சேவையை எதனோடும் கலக்காமல் அப்படியே சுடச் சுட இருக்கும்போது ஒரு டீஸ்பூன் பச்சைத் தேங்காயெண்ணெய் மட்டும் கலந்து மோர்க் குழம்பு அல்லது காரம் சேர்த்த தயிர்ப் பச்சடியுடன் சாப்பிடுவது.

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு – 1 கப்
மைதா மாவு – 1 கப்
பட்டாணி மாவு – 1 கப் *
பச்சை மிளகாய் – 3
மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்
வெங்காயம் – 1 (பெரியது)
பசலைக் கீரை – 1 கப் (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்
நெய் அல்லது வெண்ணெய்

Missi Roti 1(Gujarat) batter मिस्सी रोटीMissi Roti 1.1(Gujarat) मिस्सी रोटी

செய்முறை:

  • கழுவிய பசலைக் கீரை, வெங்காயத்தை மிகமிகப் பொடியாக அரிந்து கொள்ளவும்.\
  • பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • கோதுமை மாவு, மைதா, பட்டாணி மாவு, மிளகாய்த் தூள், உப்பு, அரைத்த மிளகாய் விழுது, நறுக்கிய கீரை, வெங்காயம், எண்ணெய் சேர்த்து நன்றாக அழுத்திப் பிசையவும்.
  • தேவைப்பட்டால் சிறிது வெந்நீர் விட்டு (கீரை, வெங்காயம் சேர்ப்பதால் தண்ணீர் அதிகம் தேவைப்படாது.) மிகவும் கெட்டியாகவும் இல்லாமல், தளர்வாகவும் இல்லாமல் சுமாராகப் பிசைந்து கொள்ளவும்.
  • பிசைந்த மாவை துணியில் சுற்றி அல்லது ஈரமான மூடிபோட்ட உலர்ந்த பாத்திரத்தில் அரைமணியிலிருந்து ஒருமணி நேரம் வரை வைத்திருக்கவும். மாவு சிறிது தளர்வாகியிருந்தால் ப்ரிட்ஜிலும் வைக்கலாம்.
  • ஊறிய மாவை எடுத்து மீண்டும் அழுத்திப் பிசைந்து, எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • உருண்டைகளை மைதா மாவு தோய்த்து, சிறிய சப்பாத்திகளாக இட்டு, நடுவில் சிறிது நெய் அல்லது எண்ணெய் தடவி நான்காக மடித்து, முக்கோண வடிவில் வைத்துக் கொள்ளவும்.
  • மடித்து வைத்துள்ள சப்பாத்திகளை மேலும் மைதா மாவு தோய்த்து சப்பாத்திகளாக இட்டு அடுப்பில் தோசைக்கல்லில் போடவும்.
  • அடிப்பாகம் சிறிது காய்ந்து மேலே சிறிய கொப்புளங்கள் வர ஆரம்பிக்கும்போது திருப்பிப் போடவும்.
  • மீண்டும் கொப்புளங்கள் வரும்போது ஃபுல்கா செய்வது மாதிரி ஒரு துணியால் அழுத்தி அழுத்தித் திருப்பிவிடலாம் அல்லது நேராக அடுப்பில் காட்டி வாட்டலாம். விரும்புபவர்கள் இந்த நிலையில் மட்டும் சிறிது எண்ணெய் அல்லது நெய் விட்டு கரண்டியால் அழுத்திக் கொடுத்து சாதாரண சப்பாத்தி மாதிரியும் வேகவைக்கலாம்.
  • இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும். எண்ணெய் சேர்க்காமல் ஃபுல்காவாகச் செய்திருந்தால், கல்லிலிருந்து எடுத்ததும் மேல்புறம் சிறிது நெய் அல்லது வெண்ணெய் தடவிப் பரிமாறலாம்.

Missi Roti 1.2(Gujarat) मिस्सी रोटी

* பட்டாணி மாவு கிடைக்காதவர்கள், அரை கப் மஞ்சள் பட்டாணியை தண்ணீரில் 4 மணி நேரம் ஊறவைத்து, பச்சை மிளகாயுடன் சேர்த்து அரைத்துக் கலந்துகொள்ளலாம். நான் அப்படித்தான் செய்திருக்கிறேன்.

* மடித்து இட நேரமில்லாதவர்கள் ஒரே முறை மட்டும் வட்டமாக இட்டும் செய்யலாம். இந்த முறையிலும் நன்கு உப்பி கொப்புளங்கள் வரும்; மென்மையாக இருக்கும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தக்காளித் தொக்கு, ஊறுகாய், தயிர்ப் பச்சடி, சப்ஜி வகைகள்….

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு – 2 கப்
வெந்தயக் கீரை – 1 கப்
கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
எண்ணெய்

methi roti (maavu)methi roti 1 (मेथी रोटी)

செய்முறை:

  • வெந்தயக் கீரையை, தனித் தனி இலையாக ஆய்ந்து 😦 ஒரு கப் எடுத்து, தண்ணீரில் அலசி நீரை வடியவைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு கீரையை லேசாக 2, 3 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும். கீரை சுண்டிவிடும்.
  • கோதுமை மாவு, கடலை மாவு, தயிர், மிளகாய்த் தூள், தேவையான உப்பு, சுண்டிய கீரை, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, சிறிது சிறிதாக வெந்நீர்விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
  • பிசைந்த மாவை அப்படியே ஈரமான துணியில் சுற்றி அல்லது ஒரு பாத்திரத்தில் மூடியை உட்புறமாக நீரால் துடைத்து, மூடிவைக்கவும்.
  • குறைந்தது ஒருமணி நேரம் கழித்து, மாவை எடுத்து மீண்டும் அடித்துப் பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • மைதா மாவு தோய்த்து, மெல்லிய சப்பாத்திகளாக இட்டு (மிக மெல்லிதாக இடவரும்.) நிதானமான சூட்டில் தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் சில துளிகள் எண்ணெய் விடவும்.
  • திருப்பிப் போட்டு விரும்பினால் இன்னும் சில துளிகள் எண்ணெய் விட்டு தோசைத் திருப்பியால் சுற்றி அழுத்திக் கொடுத்து திருப்பவும்.
  • இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும், கல்லிலிருந்து எடுத்துப் பரிமாறலாம்.

methi roti (मेथी रोटी)

* இந்தச் சப்பாத்தி ஆறியதும் சாதாச் சப்பாத்தியைப் போல் இல்லாமல் சிறிது மொறுமொறுப்பாக ஆகலாம். ஆனாலும் சுவையாக இருக்கும்.

* நீண்ட பிரயாணங்களுக்கும் எடுத்துப் போகலாம். கெடாது.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தயிர்ப் பச்சடி(राइता, Raitha), தால் வகைகள், கார, இனிப்பு ஊறுகாய்கள்… 

தேவையான பொருள்கள்:

ரவை – 1 கப்
அரிசி மாவு – 1/2 கப்
மைதா – 2 டேபிள்ஸ்பூன்
கடலைமாவு – 1 டேபிள்ஸ்பூன்
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
மிளகு
சீரகம்
முந்திரிப் பருப்பு
தேங்காய்
இஞ்சி
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
உப்பு
பெருங்காயம்
எண்ணெய்
நெய்

ravaa dosai 1ravaa dosai

செய்முறை:

  • ரவை, அரிசிமாவு, மைதா, கடலைமாவை உப்பு, பெருங்காயம், தயிர் சேர்த்து தேவையான தண்ணீரில், நீர்க்க கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும். (வழக்கமாகச் சொல்வதுதான் – மாவுக் கலவையை அரை நிமிடம் மைக்ரோவேவில் வைத்து எடுத்தால் சுலபமாகக் கலக்கலாம்.)
  • சிறிது நெய்யில் மிளகு, சீரகம், முந்திரிப் பருப்பு துண்டுகள், பொடிப்பொடியாக நறுக்கிய தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை என்ற வரிசையில் சேர்த்து தாளிக்கவும்.
  • தாளித்த பொருள்களை மாவில் கலக்கி, நறுக்கிய கொத்தமல்லித் தழையும் சேர்த்து அப்படியே ஒருமணிநேரம் வைத்திருக்கவும்.
  • தோசை வார்க்க ஆரம்பிக்கும் முன் மேலும் தேவையிருந்தால் தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். கலவை நீர்க்க இருத்தல் அவசியம்.
  • அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கி, ஒருகரண்டியால் மாவை ஓரத்திலிருந்து சுற்றிவிட்டு, நடுவிலும் விட வேண்டும். (மாவை இழுத்து, காலி இடத்தை நிரப்பப் பார்ப்பது, வட்டவடிவமாக வார்க்க ஆசைப்படுவது எல்லாம் தேவை இல்லை.)
  • சுற்றி எண்ணெய் விட்டு அடுப்பை நிதானமான சூட்டில் வைத்து நன்கு வெந்து அடிப்பாகம் மொறுமொறுப்பாகும்வரை காத்திருந்து திருப்பவும்.
  • அடுத்தப் பக்கமும் சிறிது எண்ணெய் விட்டு நன்கு சிவந்ததும் எடுக்கவும்.
  • சுடச்சுட மட்டுமே பரிமாறவும். ஆறினால் கட்டைமாதிரி ஆகிவிடும்.

* நான்-ஸ்டிக்கை விட இரும்பு தோசைக்கல்லில் சுவையான மொறுமொறுப்பான தோசைகள் வரும். முதலிரண்டு தோசைகள் சரியாகவராமல் படுத்தலாம். [அவற்றை ‘மாமியார் தோசை’ என்பது குழூஉக்குறி. :)] தொடர்ந்து சரியாக வரும்.

* என்னைப் பொருத்தவரை மாவு கரைத்ததுமேகூட வார்க்கலாம். சரியாக வரும்.

* முந்திரிப் பருப்பு, மிளகு, தேங்காய்த் துண்டுகள், எங்கேயோ கொஞ்சமாக வரும் நெய்வாசனை, இவையே ரவா தோசைக்கான அடிப்படை அலங்காரப் பொருள்கள். இவை நான்கின் கூட்டணிச் சுவைதான் ரவா தோசை என்ற அங்கீகாரத்தைத் தரும். (அதிகம் நெய்விடக் கூடாது. நெய், தோசையை மென்மையாக்கிவிடும்.)

* வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, நடுவில் தூவினால் ஆனியன் ரவா.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தேங்காய்ச் சட்னி, தக்காளிச் சட்னி, சாம்பார்…

தேவையான பொருள்கள்:

பச்சைப் பயறு  – 1 கப்
பச்சரிசி – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)\
வெங்காயம் – 1 (விரும்பினால்)
சீரகம் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – சிறு துண்டு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம்

தாளிக்க: எண்ணெய், சீரகம்.

காய்கறி: வெங்காயம், கேரட், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை.

masala pesarattu

செய்முறை:

  • பச்சைப் பயறு, பச்சரிசியை குறைந்தது 12 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
  • வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து நன்கு நைசாக தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு டீஸ்பூன் எண்ணெயில் சீரகம் தாளித்துக் கலந்துகொள்ளவும்.
  • மீண்டும் ஒரு டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெயைச் சூடாக்கி, அதில் மிகப் பொடியாக அரிந்த வெங்காயம், குடமிளகாய், பச்சை மிளகாய், துருவிய கேரட், லேசாய் நசுக்கிய பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வதக்கி, நறுக்கிய கொத்தமல்லித் தழை கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கி, நிதானமான சூட்டில் ஒரு கரண்டி மாவை நடுவில் விட்டு, வழக்கமாக தோசைவார்ப்பது போல் வட்டமாக இழுத்து மிக மெலிதாகப் பரத்தவும்.
  • மேலே காய்கறிக் கலவையை சிறிது பரவலாகத் தூவவும், தோசைத் திருப்பியால் லேசாக ஒட்டிக்கொள்ளுமாறு அழுத்தவும்.
  • சுற்றி எண்ணெய் விட்டு முறுகலாக வேகவைக்கவும்.
  • திருப்பிப் போட்டு, மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.

* அடுத்தடுத்த தோசை வார்ப்பதற்கு முன் கல்லில் சிறிது நீர் தெளித்துக் கொள்ளவும். அப்பொழுதுதான் தோசை சிரமமில்லாமல் மெலிதாக இழுத்து வார்க்க முடியும்.

* காய்கறிக் கலவை மேலே தூவி தயாரிக்க சிரமப்படும் புதிதானவர்கள், மாவுக் கலவையிலேயே இந்த வதக்கிய கலவையைக் கலந்து செய்யலாம்.

masala pesarattu (with uppumaa)

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நாம் மசால்தோசைக்கு உருளைக்கிழங்கு மசாலா நடுவில் வைத்துச் செய்வதுபோல இந்தத் தோசைக்கு நடுவில் கால் டீஸ்பூன் இஞ்சிச் சட்னியைத் தடவி, அதன்மேல் ஒரு சிறு கரண்டி ரவை உப்புமாவை வைத்து மடித்துப் பரிமாறவும். ரவை உப்புமா சன்ன ரவையில் செய்ததாகவும், சற்று தளர்வாகவும் இருந்தால் பொருத்தமாக இருக்கும். பெரிய ரவையாக இருந்தாலும் பரவாயில்லை.

தேங்காய்ச் சட்னி, சாம்பார் பொருத்தமாக இருக்கும்.

தேவையான பொருள்கள்:

பச்சைப் பயறு  – 1 கப்
பச்சரிசி – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)\
வெங்காயம் – 1 (விரும்பினால்)
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – சிறு துண்டு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம்

தாளிக்க: எண்ணெய், சீரகம்.

pesarattu  2 batterpesarattu 2

                                      pesarattu-uppumaa-inji chutney

செய்முறை:

  • பச்சைப் பயறு, பச்சரிசியை குறைந்தது 12 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
  • வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு நைசாக தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு டீஸ்பூன் எண்ணெயில் சீரகம் தாளித்துச் சேர்க்கவும்.
  • அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கி, நிதானமான சூட்டில் ஒரு கரண்டி மாவை நடுவில் விட்டு, வழக்கமாக தோசைவார்ப்பது போல் வட்டமாக இழுத்து மிக மெலிதாகப் பரத்தவும்.
  • சுற்றி சிறிதளவு மட்டுமே எண்ணெய் விட்டு ஒரு நிமிடம் வேகவிடவும்.
  • திருப்பிப் போட்டு, தேவை என்றால் மட்டும் மீண்டும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.

* அடுத்தடுத்த தோசை வார்ப்பதற்கு முன் கல்லில் சிறிது நீர் தெளித்துக் கொள்ளவும். அப்பொழுதுதான் தோசை சிரமமில்லாமல் மெலிதாக இழுத்து வார்க்க முடியும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இந்தத் தோசையை ரவை உப்புமா, இஞ்சிச் சட்னி யுடன் பரிமாறுவது வழக்கம்.

ரவை உப்புமா, பொதுவாக சன்ன ரவையில் தயாரித்து, சற்று தளர்வாகவும் இருந்தால் பொருத்தமாக இருக்கும். பெரிய ரவையாக இருந்தாலும் பரவாயில்லை.

இஞ்சிச் சட்னி

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 1 கப்
ரவை – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2, 3
இஞ்சி – சிறு துண்டு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம்

தாளிக்க: எண்ணெய், சீரகம்.

pesarattu 1

செய்முறை:

  • பயத்தம் பருப்பை 3 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
  • இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். தோசை மாவு பதத்திற்கு ஆனால் மிக மிக நைசாக அரைத்து அத்துடன் ரவையையும் கலந்து கொள்ளவும்.
  • ஒரு டீஸ்பூன் எண்ணெயில் சீரகம் தாளித்துக் கொட்டவும்.
  • அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கி, நிதானமான சூட்டில் ஒரு கரண்டி மாவை நடுவில் விட்டு, வழக்கமாக தோசைவார்ப்பது போல் வட்டமாக இழுத்து மிக மெலிதாகப் பரத்தவும்.
  • சுற்றி சிறிதளவு மட்டுமே எண்ணெய் விட்டு ஒரு நிமிடம் வேகவிடவும்.
  • திருப்பிப் போட்டு, தேவை என்றால் மட்டும் மீண்டும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.

* அடுத்தடுத்த தோசை வார்ப்பதற்கு முன் கல்லில் சிறிது நீர் தெளித்துக் கொள்ளவும். அப்பொழுதுதான் தோசை சிரமமில்லாமல் மெலிதாக இழுத்து வார்க்க முடியும்.

* எவ்வளவு மெலிதாக வேண்டுமானாலும் இந்த மாவை இழுத்து வார்க்க முடியும். சுலபமாகத் திருப்ப முடியும்.

* பொதுவாக பச்சரிசி 2 டீஸ்பூன் சேர்த்து அரைத்து செய்வார்கள். அதைவிட ரவை சேர்ப்பது மொறுமொறுப்பாக வரும்.

* எண்ணெய் குறைவாக விட்டால் போதும். அதிக எண்ணெயை ஏற்காது.

* ரவை, பச்சரிசி எதுவுமே சேர்க்காமலும் மிக மிக மென்மையான ஸ்பான்ச் தோசைகள் வார்க்கலாம்.

* பச்சை மிளகாயைத் தவிர்த்துவிட்டு இரண்டு முந்திரிப்பருப்பை சேர்த்து அரைத்து தோசை செய்தால் சின்னக் குழந்தைகளுக்கும் ஆரம்பத்திலேயே கொடுக்க ஆரம்பிக்கலாம். உண்ணவும், செரிக்கவும் எளிதானது. மிக மிக லேசான இனிப்புச் சுவையுடன் இருக்கும். (ஒரு டேபிள்ஸ்பூன் பருப்பு மட்டும் நனைத்து மிக்ஸியின் சட்னி jar லியே அரைத்து என் பெண்ணிற்கு ஒரு வயதுக்கு மேல் ஆனதும் செய்து கொடுத்திருக்கிறேன்.)

* முடிந்தவரை இதுபோல் எண்ணெய் அதிகம் தேவைப்படாமலே சுலபமாக திருப்பக் கூடிய தோசைகளை மட்டுமாவது இரும்பு தோசைக்கல்லிலேயே தயாரிக்கலாம் என்பது என் கருத்து. இரும்பு வாணலியை உபயோகிப்பது முற்றிலும் நின்றுபோய்விட்ட இந்தக் காலத்தில் தோசைக் கல் மட்டுமாவது உபயோகத்தில் இருப்பது நல்லது.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தக்காளிச் சட்னி, இஞ்சிச் சட்னி
 

நான் திருமணமாகி, மஹாராஷ்டிரா வந்தபோது, ஊருக்கு வந்து இறங்கியதும் ஊர்த்தலைவர் தன் வீட்டிற்குக் கூட்டிப்போய் கொடுத்ததிலிருந்து இந்த ஆலூ போஹா அறிமுகம். அதற்குப்பின் தொடர்ந்து யார் வீட்டிற்குப் போனாலும் எல்லா உணவுகளோடும் நிச்சயம் இது உண்டு. பத்தே நிமிடங்களில் தயாரித்து, ஒரு சிறிய தட்டில் வைத்துக் கொடுக்கப்படும் இந்த உணவின் சுவை என்னை அவ்வளவு ஈர்த்தது. இதற்காகவே அவர்கள் சூஜி கா அல்வா என்று கொடுக்கும் சர்க்கரைக் குறைவான ரவை கேசரியை மன்னித்திருக்கிறேன். ஆனால் எனக்கு என்னவோ அப்பொழுதெல்லம் எத்தனை பேரிடம் செய்முறை கேட்டும், செய்வதை கூடவே நின்று பார்த்தும், செய்யவே வந்ததில்லை. இனி ஆலூ போஹாவே வாழ்க்கையில் செய்ய முயற்சிக்கக்கூடாது என்று ரங்கமணி சத்தியம் வாங்கும் அளவுக்கெல்லாம் சொதப்பியிருக்கிறேன்.

மீண்டும் இரண்டரை வருடங்கள் முன்பு ஹாங்காங்கிலிருந்து மும்பையில் விடிகாலை 3 மணிக்கு இறங்கியதிலிருந்து எதுவும் ஓடவில்லை. விடிந்ததும் விடியாததுமாக பெண்ணுக்கு ஸ்கூல் அட்மிஷனுக்கு ஓடிப் போய் அப்ளிகேஷன் வாங்கி, பள்ளிகள் பண்ணும் பாவனைகளை(இந்தியப் பள்ளிகளின் பாவனைகள் எனக்குப் புதிது; அதிர்ச்சி) செரிக்கமுடியாமல் டென்ஷனாகி… “எனக்குப் பசிக்கவேயில்லை. வேலை முடியறவரைக்கும் யாரும் கிட்டயே வராதீங்க,” என்று உட்கார்ந்துவிட்டேன். “அப்படியெல்லாம் உன்னை விட்டுடமுடியுமா? மஹாராஷ்டிரா உன்னை வரவேற்கிறது” என்று சொல்லிக்கொண்டே ஸ்கூல் கேண்டீனில் வாங்கிய ஆலூ போஹா தட்டை ரங்கமணி நீட்டியதும், ஒரே ‘நியாபகம் வருதே நியாபகம் வருதே…’. வித்யாசமாய் நிலக்கடலை எல்லாம் சேர்த்திருந்தார்கள்.

ஏன் இதைத் தயாரிக்க இவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று இப்போது ஆச்சரியமாக இருக்கிறது.

தேவையான பொருள்கள்:

சன்ன அவல் – 1 கப்
வெங்காயம் – 1 (பெரியது)
உருளைக் கிழங்கு – 1 (பெரியது)
பச்சை மிளகாய் – 2, 3
எலுமிச்சை – அரை மூடி
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை
தேங்காய்த் துருவல்

தாளிக்க:
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
நிலக்கடலை – 12, 15 (விரும்பினால்)
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை

 aloo poha

செய்முறை:

  • வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கை தோல் சீவியோ சீவாமலோ(நான் தோலை நீக்குவதில்லை.) பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில், எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • அடுப்பை சிம்மில் வைத்து, அரிந்த வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • உருளைக் கிழங்கோடு, தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மேலும் 3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  • உருளை வதங்கும் நேரத்தில், அவலை நீரில் சில நொடிகளுக்குள் அலசி நன்கு வடியவிடவும். அதிகம் தண்ணீரில் அவல் ஊறிவிடக் கூடாது.
  • வடித்த அவலையும் சேர்த்து மென்மையாகக் கிளறிவிடவும்.
  • அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சைச் சாறு பிழிந்து கலக்கவும்.
  • கேரட் துருவியில் தேங்காயை சன்னமாகத் துருவி, நறுக்கிய கொத்தமல்லித் தழையும் சேர்த்து பரிமாறவும்.

* உப்பு, மஞ்சள்தூளை முதலிலேயே சேர்த்தால்தான் அவலில்  அவை சிரமமில்லாமல் முழுமையாகக் கலக்கும். 

* கெட்டி அவலிலும் செய்யலாம். கெட்டி அவல் 4,5 நிமிடங்கள் ஊறினால் சரியாக இருக்கும். ஆனால் சன்ன அவல் தண்ணீரில் அதிகம் இருந்துவிடாமல் உடனடியாக வடித்து அடுப்பில் சேர்த்துக் கிளறிவிடவேண்டும்.

இப்போதும், “ஆலூ போஹா என்று கேட்காதீர்கள், அவல் உப்புமா என்றேஏ க்கேட்டு வாங்குங்கள்!!” என்று டேபிளுக்கு வரும்போதே ரங்கமணி கிண்டலும் தங்கமினி ‘கிக்கிக்கி’ சிரிப்பும் இருக்கிறது. உண்மையிலேயே நன்றாக இருந்தாலும் எதோ குறைகிறது. தமிழச்சி கைக்கு இவ்வளவுதான் வரும் என்று அலம்பிக் கொண்டிருக்கிறேன்.

ஐந்தே நிமிடங்களில் மாவு தயாரித்து,  புதிதாய்  சமைப்பவர்கள்  கூட சுலபமாக செய்துவிடக் கூடிய எளிய தோசை.
 
தேவையான பொருள்கள்:

மைதா மாவு – 1 கப்
ரவை – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
உப்பு –  தேவையான அளவு
பெருங்காயம்
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை

தாளிக்க – எண்ணெய், கடுகு, சீரகம், பச்சை மிளகாய்.

maida dosai 1maida dosai

செய்முறை:

  • மைதா, ரவை, உப்பு, பெருங்காயம் இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து, சாதாரண தோசைமாவை விட நீர்க்க, கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும். (மைதா, ரவையை 30 செகண்ட் மைக்ரோவேவில் வைத்து எடுத்தால் கட்டிகளில்லாமல் கரைப்பது மிகச் சுலபம்.)
  • ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, சீரகம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்துச் சேர்க்கவும்.
  • பொடியகா நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.
  • அடுப்பில் தோசைக் கல்லைச் சூடாக்கி, நிதானமான சூட்டில் வைக்கவும்.
  • மாவை ஒரு கரண்டியால் எடுத்து கல்லின் விளிம்பிலிருந்து ஆரம்பித்து உள்வரை வட்டமாக ஊற்றிக்கொண்டே வரவும். (சாதாரணமாக தோசை வார்ப்பதுபோல் நடுவில் மாவை விட்டு கல்லில் வட்டமாக இந்த மாவைப் பரத்த முடியாது.)
  • சுற்றி சில துளிகள் மட்டும் எண்ணெய் விடவும். அதிக எண்ணெய் விட்டால் சொதசொதவென்று இந்த மாவு எண்ணெயைக் கக்கிவிடும்.
  • அரை நிமிடத்திலேயே அடிப்பாகம் வெந்து மேலெழுந்துவிடும். புதிதாக தோசை செய்பவர்கள்கூட சுலபமாக முழுதாகத் திருப்பிவிடலாம்.
  • அடுத்தப் பக்கமும் அரை நிமிடம் வேகவைக்கவும்.
  • மேலும் மொரமொரப்பாகத் தேவைப்பட்டால் இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு, இன்னும் சில நொடிகள் வைத்திருந்து எடுக்கலாம்.

* தோசை தயாரித்துக் கொண்டிருக்கும்போதே மாவு கெட்டியாகிவிட்டால் அவ்வப்போது சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். நீர்க்க இருந்தால்தான் மெலிதாக சுவையாக வரும். 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இட்லி (தோசை) மிளகாய்ப் பொடி, தக்காளிச் சட்னி, சாம்பார், வெந்தயக் குழம்பு போன்ற குழம்பு வகைகள்…
 

இந்த வடைக்கு என்று எதுவும் தனியாக யாரும் பெயர் வைக்கவில்லை போலிருக்கிறது. கார்த்திகையன்று (மட்டும்) செய்வதால் கார்த்திகை வடை என்றே நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

kaarththigai vadai 1

தேவையான பொருள்கள்: 

முழு உளுத்தம் பருப்பு – 2 கப் (கருப்புத் தோலுடன்)
கடலைப் பருப்பு – 1/2 கப்
பயத்தம் பருப்பு – 1/2 கப்
பச்சை மிளகாய் – 10, 12
இஞ்சி – பெரிய துண்டு
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
பெருங்காயம்
உப்பு
எண்ணெய்

kaarththigai vadai 2

செய்முறை:

  • தோல் உளுத்தம் பருப்பை அலசி தண்ணீர்ல் குறைந்தது 8 மணி நேரம் ஊறவைக்கவும். (தோல் தனியாகக் கழண்டு  வரும் அளவு ஊறவேண்டும்.)
  • கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊறவைத்து, நீரை ஒட்ட வடித்து, ஒரு துணியில் காயவிடவும்.
  • பாதி இஞ்சி, பாதி மிளகாயை மட்டும் பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையையும் பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • ஊறின தோல்பருப்பைக் களையவும். முக்கால்வாசித் தோல் மட்டும் நீங்கினால் போதும். கால்வாசி அல்லது விரும்பினால் அதைவிட சிறிது அதிகத் தோலை அப்படியே நீக்காமல் வைத்துக் கொள்ளவும்.
  • களைந்த பருப்புடன், தேவையான உப்பு, பெருங்காயம், மீதிப் பாதி இஞ்சி, பச்சை மிளகாயைச் சேர்த்து, அதிகம் நீர் விடாமல், அதிகம் மசியாமல் கெட்டியாக கரகரப்பாக அரைத்து எடுக்கவும். கிரைண்டரில் இப்படி அரைப்பது சுலபம்.
  • அரைத்த மாவுடன் உலர்த்தி வைத்திருக்கும் பருப்புகளை நன்கு கலந்து கொள்ளவும்.
  • நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து அழுத்தாமல் கலந்து கொள்ளவும். பச்சை மிளகாய்த் துண்டுகள் இடையில் அதிகம் இருந்தால் சுவையாக இருக்கும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கவும்.
  • வாழையிலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் தண்ணீர் துடைத்து, மாவை உருட்டி, வடையாகத் தட்டி, நடுவில் துளை போட்டு, நிதானமான சூட்டில், எண்ணெயில் போடவும்.
  • இருபுறமும் திருப்பிவிட்டு, முழுமையாகச் சத்தம் அடங்கி, மொறுமொறுப்பானதும்,  எடுக்கவும். இடையிடையே கரண்டிக் காம்பால் வடையில் குத்தினால் மேலும் கரகரப்பாகும்.

* இந்த வடை வேக சிறிது அதிக நேரம் எடுக்கும். இரண்டு மூன்று நாள்களுக்குக் கெடாது.

* முழுமையாக தோல்பருப்புதான் சேர்க்கவேண்டுமென்பதில்லை. கால் அல்லது அதற்குக் கொஞ்சம் மேலே தோல் உளுத்தம் பருப்பும், மீதிக்கு தோல் நீக்கிய முழுப் பருப்பும் கூட சேர்த்து, கடைசியில் களையாமல் நீரை மட்டும்  வடித்து, அப்படியே அரைக்கலாம். இது அதிகம் ஊறத் தேவையில்லை. நான்கு மணி நேரத்தில் அரைக்கலாம்.

இவர் நம்மாளு உக்காரையின் உடன்பிறந்த சகோதரர் தான். உப்பில் செய்வது. இவர் சுவையில் இனிப்பையே மிஞ்சுவார். ஒரே நாளில் இரண்டையும் செய்வது சுலபமாக இருக்கும்.

தேவையான பொருள்கள்:

பயத்தம்பருப்பு – 2 கப்
கடலைப்பருப்பு – 1/2 கப்
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்

வறுத்துப் பொடிக்க:
தனியா – 2 டேபுள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
க.பருப்பு- 2 டேபிள்ஸ்பூன்
உ.பருப்பு- 2 டேபிள்ஸ்பூன்
 

தாளிக்க: கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை
 

seeyaalam 1seeyaalam 2

செய்முறை:

  • பருப்புகளை நன்கு களைந்து 4 மணிநேரம் ஊறவைத்து சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக- மிக நன்றாக இட்லிமாவுப் பதத்தில் முடிந்தால் கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த மாவை இட்லித் தட்டுகளில் இட்டு வெயிட் போடாமல் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
  • வேகவைத்த இட்லிகளை சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணையைச் சூடாக்கி, மிளகாய், தனியா, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு இவற்றை சிவக்க வறுத்து நைசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  • மீண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, புளியை சற்று நீர்க்கக் கரைத்துவிட்டு, உப்பைப் போடவும்.
  • புளித்தண்ணீர் நன்றாகக் கொதித்தவுடன் இட்லித்துண்டுகளைப் போட்டு நன்றாகக் கிளறவும்.
  • தண்ணீர் நன்றாக வற்றியபின்(அநேகமாக இட்லித் துண்டுகள் நீரை உறிஞ்சிவிடும்.) அரைத்துவைத்துள்ள மசாலாப் பொடியைப் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

seeyaalam 3

* சூடாகச் சாப்பிடவே சுவையாக இருக்கும். ஆனாலும் இந்தச் சீயாளம் மூன்று நான்கு நாள்கள் வரை கெடாது.

* இந்த ‘எங்கள் பக்கத்தி’லேயே ஒரு பக்கத்தில் சீயாளத்துக்கு 1 பங்கு பயத்தம் பருப்பும், 1 பங்கு கடலைப் பருப்பும் போட்டு அரைக்க வேண்டும் என்று சொல்வார்கள். முழுவதுமே பயத்தம் பருப்பிலேயே கூட சிலர் செய்வார்கள். அதெல்லாம் நம் இஷ்டம்தான். பொதுவாக, கடலைப் பருப்பு அதிகம் இருந்தால், நிறைய சீயாளம் காணும். பயத்தம் பருப்பு அதிகம் இருந்தால் நல்ல மணமாக இருக்கும். உள்ளே மெத்தென்று குழலோடி இருக்கும். நடுநிலைவாதிகள் பாதிப் பாதி எடுத்துக் கொள்ளலாம். நான் மேலே சொல்லியிருக்கும் அளவிலேயே செய்வேன்.

* சாதாரண நாள்களில் செய்யும்போது, ஒரேநாளில் சீயாளத்துக்கு இவ்வளவு கஷ்டப்பட முடியாதென்று நினைப்பவர்கள் (உண்மையில் கஷ்டம் எதுவும் இல்லை, நேரம் அதிகம் எடுக்கும் அவ்வளவே.) இட்லிகளை முதலிலேயே செய்து ·ப்ரீசரில் வைத்து, மசாலாப் பொடியும் முதலிலேயே அரைத்துவைத்துக் கொண்டால் தேவைப்படும் பொழுது எடுத்து மைக்ரோவேவ் அவனில் சூடாக்கி, துண்டுகளாக்கி பத்தே நிமிடங்களில் செய்துவிடலாம்.

நவராத்திரி சிறப்புக் கட்டுரை: சிங்கப்பூரில் ஆலயங்கள் – ஜெயந்தி சங்கர்.

பஜ்ஜி குறித்த முந்தைய பதிவு

தேவையான பொருள்கள்:

கடலைப் பருப்பு – 1 கப்
பச்சரிசி – 1/3 கப்
துவரம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
காய்ந்த மிளகாய் – 5 அல்லது 6
பெருங்காயம்
எண்ணெய்
உப்பு – தேவையான அளவு.

பஜ்ஜி மிளகாய் (அதிகக் காரமில்லாத பெரிய சைஸ் மிளகாய்)

milagaai bajji 1

செய்முறை:

  • கடலைப் பருப்பு, துவரம் பருப்பு அரிசியைச் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • ஊறியதும் பெருங்காயம், காய்ந்த மிளகாய், சேர்த்து மிக மென்மையாக இட்லிமாவு பதத்திற்கு அரைக்கவும். கிரைண்டரில் அரைத்தால் நலம். மிக்ஸியும் பரவாயில்லை.
  • அரைத்து எடுப்பதற்கு முன் உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • மிளகாய்களை ஓர் ஊசியால் ஆங்காங்கே துளைகள் செய்து, நான்கு மணி நேரம் உப்புத் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடித்து எடுத்து வைக்கவும். இப்படிச் செய்வதால் மிளகாய் அதிகம் காராமல் இருக்கும்.
  • வழக்கமான முறையில் பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு, இரண்டு பக்கமும் பொரிந்து பஜ்ஜி உப்பி வந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும்.

* தோய்த்திருக்கும் மேல்மாவு அடர்த்தியாக இல்லாமல், மெலிதாக மூடியிருந்தால் பாதி வேகும்போதே வெளியே எடுத்துவிடவும். அடுத்த தவணை பஜ்ஜியை எண்ணெயில் போட்டுவிட்டு, இவை ஆறியதும் மீண்டும் மாவில் தோய்த்து எண்ணெயில் நன்றாகப் பொரித்து எடுக்கவும். இப்படிச் செய்வதால் கனமான பஜ்ஜி கிடைக்கும்.

ஸ்டஃப்ட் மிளகாய்:

milagaai bajji 2

பூரணம் செய்ய: (ஏதாவது ஒன்று)

1. புளி, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயம்
2. உருளைக் கிழங்கு, வெங்காயம், சீரகப் பொடி, கொத்தமல்லித் தழை, எலுமிச்சைச் சாறு
2. கொத்தமல்லிச் சட்னி (காரம் இல்லாமல்)
3. வெங்காயச் சட்னி (காரம் இல்லாமல்)
4. புதினாச் சட்னி (காரமில்லாமல்)

milagaai bajji 3

  • மிளகாய்களை ஜாக்கிரதையாக கத்தியால் காம்புக்குக் கீழிலிருந்து அடிக்கு முன்புவரை நடுவில் ஒரு கீறல் போடவும்.
  • உள்விதை, தண்டை நீக்கிவிடவும்.
  • நீர்த்த புளித் தண்ணீரைக் கொதிக்கவைத்து. அதில் மிளகாய்களைப் போட்டு மூடிவைக்கவும்.
  • ஒரு நிமிடம் கழித்து நீரை வடித்துவிட்டால் காரம் போயிருக்கும்.
  • சிறிது கடலை மாவில் உப்பு, ஓமம் அல்லது சீரகம் கலந்து உள்ளே அடைக்கலாம். அல்லது கடலை மாவிலேயே புளித் தண்ணீர், உப்பு, ஓமம் (அல்லது சீரகம்) சேர்த்துக் கலந்து உள்ளே அடைக்கலாம். உள்ளேயும் கடலை மாவு விரும்பாதவர்கள், வேகவைத்த உருளைக் கிழங்கை, மசித்து, மெலிதாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, சீரக்ப் பொடி, உப்பு கலந்து ஸ்டஃப் செய்யலாம். அல்லது காரம் இல்லாத/ குறைந்த காரமுள்ள வெங்காயச் சட்னி, கொத்தமல்லிச் சட்னி அல்லது புதினாச் சட்னியை உள்ளே சிறிது தடவியும் வைக்கலாம்.

பிரட்:

பிரட் ஸ்லைஸ்களை ஓரம் நீக்கி, அதன் அளவைப் பொருத்து நான்காக அல்லது இரண்டாக வெட்டிக் கொள்ளவும். ப்ரட்டில் செய்யும் போது கொத்தமல்லி அல்லது புதினா சட்னியை ஒரு பக்கத்தில் தடவி, இன்னொரு ப்ரட்டை வைத்து மூடி மாவில் தோய்த்து எண்ணையில் போடவும்.
 

குடமிளகாய்:
 
குடமிளகாயை ஒன்றரை அங்குலத் துண்டுகளாக நறுக்கி, அதன் உள்பகுதியில் ஏதாவது காரமில்லாத சட்னியைத் தடவி, மாவில் தோய்த்துப் போடலாம்.
 

அப்பளம்:

அப்பளங்களை 4 அல்லது 6 பாகமாக உடைத்துக் கொள்ளவும். மசாலா அப்பளமாக இருந்தால் அப்படியே இரண்டு துண்டுகளை சேர்த்து மாவில் தோய்த்துப் போடலாம். சாதா அப்பளமாக இருந்தால் ஏதாவது சட்னி அல்லது நெய்யில் இட்லி மிளகாய்ப் பொடியைக் குழைத்து, ஒரு அப்பளத் துண்டில் தடவி, மற்றொரு துண்டால் மூடி, மாவில் தோய்க்கவும். இது எங்கள் வீட்டில் அதிகம் பேர் வாங்கிய பஜ்ஜி.
 

பனீர்:

பனீர் துண்டுகளை கெட்டியான சட்னியில் பிரட்டி, மாவில் தோய்த்துப் போடலாம். என்னைப் பொருத்த வரை கொத்தமல்லிச் சட்னி அதிகம் பொருந்துகிறது.
 

பேபி கார்ன்:

பேபி கார்னை உப்புக் கலந்த கொதிக்கும் நீரில் பத்து நிமிடங்கள் போட்டு வைத்து நீரை வடிக்கவும். மேலாக பூரணம் செய்ய 1ல் சொல்லியிருப்பதை மெலிதாகத் தடவி, மாவில் தோய்த்துப் போடலாம். அல்லது எலுமிச்சை மூடியை மேலாகத் தேய்த்து, அதன்மேல் மிளகாய்த் தூள் தூவி, பின்னர் மாவில் தோய்த்துப் போடலாம்.பேபி கார்னிலும் மிகச் சிறிய அளவு இருப்பவை மட்டுமே ஏற்றதாக இருக்கிறது. அல்லது கொஞ்சம் பெரிதாக இருந்தால் நீளவாட்டில் குறுக்கே வெட்டி உபயோகிக்கலாம். 
 

கோஸ்:

கோஸ் இலைகளை தனித் தனியாகப் பிரித்து, தண்டுப் பகுதியை நீக்கி, அந்த இடத்தில் இலையை இரண்டாக்கி, ஒவ்வொன்றிலும் சிறிது கொத்தமல்லிச் சட்னியை தடவி மடித்து, மாவில் தோய்த்துப் போடலாம். இது உண்மையிலே எதிர்பாராத அளவு சுவையாக இருக்கிறது.
 

காளான்:

சிப்பிக் காளானை அப்படியே மாவில் தோய்த்து பஜ்ஜி போடலாம் என்று சொல்கிறார்கள். நான் செய்ததில்லை.
 

வாழைப்பழம்:

வாழைப்பழத்தை வட்ட வட்டமாக நறுக்கி பஜ்ஜி செய்கிறார்கள். நான் என்றுமே செய்வதாக இல்லை. விரும்புபவர்கள் முயற்சித்துப் பார்க்கவும்.
 

* மேலே சொல்லியிருப்பவைகளை, சின்னக் குழந்தைகளுக்கு எந்தச் சட்னியும் வைக்காமலும் செய்து கொடுக்கலாம். பஜ்ஜியின் காரமே அவர்களுக்கு அதிகமாக இருக்கும்.

-0-

காலிஃப்ளவர் பஜ்ஜி

தேவையான பொருள்கள்:

காலிஃப்ளவர் – 1
கடலை மாவு –  1/2 கப்
மைதா மாவு – 1/2 கப்
அரிசி மாவு – 1/4 கப்
டால்டா – 1 டீஸ்பூன்
ஓமம் –  1/2 டீஸ்பூன் (விரும்பினால்)
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்

cauliflower bajji

 செய்முறை:

  • காலிஃப்ளவர் பூவை காம்புடன் பெரிய பெரிய கிளையாக எடுத்துக் கொள்ளவும்.
  • நீரைக் கொதிக்க வைத்த உப்பு சேர்த்து பூக்களை அதில் போட்டு மேலும் 2 நிமிடன்கள் கொதிக்கவிட்டு 5 நிமிடங்களுக்கு மூடி வைத்து நீரை வடிகட்டவும்.
  • கடலை மாவு, மைதா, அரிசி மாவு, உப்பு, டால்டா, மிளகாய்த் தூள் கலந்து முதலில் கையால் நன்கு கலந்து பின்பு தேவையான நீர் விட்டு இட்லிமாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்துக் காய்ந்ததும், பூக்களை மாவில் தோய்த்து பொரித்தெடுக்கவும்.

* வழக்கமான பஜ்ஜி மாவிலும் இதைச் செய்யலாம்.

* சின்னச் சின்ன பூக்களாக உதிர்த்து, மாவில் கலந்து பக்கோடா மாதிரி கொத்தாகவும் போடலாம். ஆனால் பக்கோடாவிற்கு இருப்பது போல் பஜ்ஜி மாவு இறுக்கமாக இல்லாமல் தளர்வாகத் தான் இருக்க வேண்டும்.

* பஜ்ஜிக்கு நறுக்கி வைத்து மிஞ்சிய கலவையான காய்களை அப்படியே இரவு, புளியைக் கரைத்து குழம்பு வைக்கும்போது காயாகப் போட்டு, மிஞ்சிய கடலை மாவுக் கலவையைக் குழம்பிலேயே கரைத்து விட்டதில் வந்த கதம்பப் புளிக் குழம்பு, எந்த சமையல் குறிப்புக்கும் அடங்காத அபார சுவை; அவரவர் சமையலறைக்கே பிரத்யேகமான, குறிப்பாகச் சொல்ல முடியாத சில சமையலில் இதுவும் அடங்கும்.

பஜ்ஜி கட்டுரைத் தொடரின் இன்னொரு பார்வை…

அடுத்த பக்கம் »