ஏப்ரல் 2008


“ஏய் இங்க வா, உன்னை என்ன கேட்டாங்க?”

“சமையல் குறிப்பு நகைச்சுவையா எழுதச் சொல்லி கேட்டாங்க”

“எழவு நகைச்சுவைக்கும் சமையல்குறிப்புக்கும் என்ன சம்பந்தம்?”

“சமையல்குறிப்புன்னாலே எல்லாருக்கும் நகைச்சுவையாத்தானே இருக்கு. அதனால இருக்கும். :(“

“அடப்பாவமே! நகைச்சுவைக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?”

“சிறுபத்திரிகைக்கும் சமையல்குறிப்புக்கும் என்ன சம்பந்தம்னே முதல்ல எனக்குத் தெரியலை..”

“சரி விடு. எழுதினியா, எத்தனை எழுதின?”

“ரெண்டு”

“ஒண்ணு இங்க இருக்கு. இன்னொன்னு எங்க?”

“அந்த இன்னொன்னு தாங்க இது! :(“

“இதுல என்ன இவ்ளோ கோரமை?”

“தேவை இல்லைதான். ஏதோ ஜெமோ முதல் இதழ்ல எழுதலைன்னு ஃபீலிங்ஸ் வேண்டாம், அவர் எழுத்தையாவது கொண்டுவந்துடலாம்னு இப்படி எழுதிட்டேன். 😦 இனிமே இப்படி நடக்காது.”

—–

அடைப்புக்குறிகளுக்குள் இருக்கும் எழுத்தாளர் ஜெயமோகனின் வரிகளுக்கு நன்றி.

[“வென்றவர்களின் வரலாறு அளவுக்கே தோற்றவர்களின் வரலாறும் முக்கியம் என நமக்கு கற்பித்தது பின்நவீனத்துவமே.”]

ரவை உப்புமா என்ற ஒரு சிற்றுண்டி அளவுக்கு மலிந்துபோன, மக்களால் புறக்கணிக்கப்படும், ஏளனமாகப் பார்க்கப்படும் உணவு வேறு இல்லை. மற்ற எல்லாச் சிற்றுண்டிகளுமே சிலருக்குப் பிடித்தும் சிலருக்குப் பிடிக்காமலும் என்று ஓரளவாவது அங்கீகாரம் பெற்றவையாக இருக்க, குடும்பத் தலைவிகளின் கைவசமாகும் ரவை உப்புமாவிற்கு மட்டும் மோட்சமே இல்லை. ஆனால் பின்நவீனத்துவம் அதை அப்படியே விட்டுவிடுவதில்லை.
 

[“தமிழில் பின்நவீனத்துவ சிந்தனைகளில் பெரும்பகுதி தேவையற்ற சிக்கலுடன் முன்வைக்கப்பட்டதென்பது உண்மையே. ஆனால் அவை அடிப்படையில் சிலவற்றை நாம் பார்க்கும்படிச் செய்தன. விளிம்புநிலை மக்கள், புறக்கணிக்கப்பட்ட வாழ்வின் பக்கங்கள் பொதுவில் ஏற்கப்படாத உணர்வுகள். அச்சிந்தனைகளின் விளைவே இப்போது திருநங்கைகளுக்கு கிடைத்திருக்கும் சட்டக்கவனம்.”]

வலிந்து குடும்பத்தில் திணிக்கப்படும்போது, அன்றுமட்டும் டிபன் டப்பாவை வீட்டிலேயே மறந்து(!) வைத்துவிட்டுப் போகும் கணவன், பள்ளி விடுமுறை எடுக்கமட்டுமே வரும் திடீர் வயிற்றுவலி, அன்றும் வந்து சாப்பிட எதுவுமே வேண்டாம்; ஆனால் ஸ்கூலுக்குப் போகிறேன் என்ற முரணான நிலைக்குத் தள்ளப்படும் குழந்தைகள், ஒருநாளும் இல்லாத திருநாளாக அடுத்தவீட்டு அம்மணியே புளிசோறு கொடுத்துட்டாக என்று மறுக்கும் முனியம்மா போன்ற நாசூக்கான அல்லது மௌனமான நிராகரிப்புகள், இன்னிக்கும் அந்த ரவைக்களியைக் கிண்டி வெச்சுட்டாளா என்ற மாமியாரின் பொருமலில் கிளம்பும் உட்குடும்பப் பூசலுக்கான முதல் தீப்பொறி, இவை எல்லாவற்றிற்கும் பின்னும் ரவை உப்புமாவிற்கும் ஒரு கவனிப்பு தேவைப்படத் தான் செய்கிறது.
 

[“விடுதலை, சமத்துவம், உலகநலன் என்றெல்லாம் கூறிய முந்தைய சிந்தனை மையங்கள் உருவாக்கிய அதிகாரக் குவிப்பு மற்றும் வன்முறையை வைத்து நோக்கும்போது பின் நவீனத்துவம் மேலும் ஜனநாயகமானது என்பதை சாதாரணமாக உணரலாம்.”]

பாரம்பரிய உணவு, பத்தே நிமிடங்களில் செய்யச் சுலபமானது, அதிக முன்னேற்பாடுகள், ஊறவைத்தல், அரைத்தல், கரைத்தல்கள் இல்லாதது என்ற ஆண்டாண்டு காலமாக சமையலறை அதிகார வர்க்கம் உருவாக்கி வைத்திருக்கும் பிரசார பீரங்கிகளை குடியரசு தினத்துக்கு மட்டும் எண்ணெய் போட்டு துடைத்து ஊர்வலத்தில் காண்பிக்க உபயோகப்படுத்துவது குடும்பச் சூழலுக்கு எவ்வளவு ஜனநாயகமானது என்பதையும் நாம் மறுதலிக்க இயலாது. அந்த வகையில் ரவை உப்புமாவிற்கான கவனத்தை குடும்பத்தினர் பார்வைக்குக் கொண்டுவர வேண்டியதன் விளைவாகக் கிளம்பியது இந்தக் கலகம்.
 

[“ஐரோப்பாவில் பெரும் கோட்பாடுகளின் சரிவு பின்நவீனத்துவத்தை உருவாக்கியது என்றால் இந்தியாவில் ஜனநாயகத்திலும், அதற்கு எதிரான புரட்சிகர வன்முறையிலும் ஒரே சமயம் உருவான அவநம்பிக்கை அதை உருவாக்குகிறது.”]

குடும்பத்தாரின் விருப்பங்களை அலட்சியப்படுத்தும் அதிகார மனப்போக்கும், அதனைத் தொடரும் உப்புமாவைக் குப்பையில் கொட்டவேண்டிய வன்முறைக்கும் எதிரான சூழ்நிலையில் இந்தக் கலகம் மிக மிக அவசியமாகிறது.
 

[“கருத்துக்கள் என்பவை மொழியால் உருவாக்கப்படுபவை என்ற நம்பிக்கை பின்நவீனத்துவத்திற்கு உண்டு. அவை நிரந்தரமான கட்டுமானங்கள் அல்ல என அது நம்புகிறது. ஆகவே அது கருத்துக்களையும் மொழியையும் சதுரங்க விளையாட்டாக மாற்றிக்காட்டுகிறது நமக்கு.”]

தேவையான பொருள்கள்:

ரவை உப்புமா – 1 கப்
துவரம் பருப்பு – 1/4 கப்
கடலைப் பருப்பு – 1/4 கப்
உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
கொத்தமல்லித் தழை – சிறிது
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்

adai - ravai uppumaa remix (batter)

செய்முறை:

  • ஒரு பின்நவீனத்துவவாதி, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பை ரவை உப்புமா செய்ய நினைக்கும்போதே தண்ணீரில் ஊறவைத்துவிடுவாள்.
  • குறைந்தது இரண்டு மணிநேரம் ஊறிய பருப்புகளோடு காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • ‘ஙே’ என்று விழித்துக்கொண்டிருக்கும் ரவை உப்புமா, தேங்காய்த் துருவலுடன் தேவையான தண்ணீரும் சேர்த்து, அடைமாவு பதத்திற்குக் கலந்துகொள்ளவும்.
  • நறுக்கிய கொத்தமல்லித் தழையையும் பிசிறிக் கொள்ளவும்.
  • அடுப்பில் தோசைக்கல்லைக் காயவைத்து, ஒரு கரண்டி மாவை நடுவில் வைத்து அடைமாதிரி சற்று கனமான வட்டங்களாக வார்க்கவும்.
  • சுற்றிலும் எண்ணெய் விட்டு, நடுவிலும் துளையிட்டு எண்ணெய் விட்டு, சிவக்க வேகவைக்கவும்.
  • மறுபக்கமும் திருப்பிவிட்டு, எண்ணைவிட்டு மொறுமொறுப்பாக எடுத்து, சூடாகப் பரிமாறவும்.

adai - ravai uppumaa remix

* உள்ளே தாளித்த கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாயைப் பார்த்து, குடும்பம் குழம்பும். பரவாயில்லை; பின்நவீனத்துவ அரசியலில் குழப்பம் சகஜம்.

* தக்காளிச் சட்னி, வெங்காயச் சட்னி அல்லது சாம்பாருடன் சாப்பிடச் சுவையாக இருக்கும்.
 

[“ஆனால் பின்நவீனத்துவம் எங்கும் ஒரேவகையானது அல்ல. அந்த ‘டிரெண்ட்’ ஒன்றுதான். வெளிப்பாடு ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வகை. அதற்கு அந்தப் பகுதியின் கலாச்சாரம் வாழ்க்கைமுறை என எத்தனையோ காரணங்கள். அதன் தனித்தன்மை அந்த ஆசிரியனின் ஆளுமை, அவன் வாழும் சூழலின் இயல்பு, மண்ணின் அடையாளம் ஆகியவை கலந்து மாற்று இல்லாத தனித்தன்மையுடன் இருக்கும்.”]

ஆனால் இந்த அடைபோன்ற வடிவம் மட்டுமே உப்புமாவுக்கான இறுதி நிலை என்று கொள்ளத் தேவை இல்லை. அவரவர் வசதி, திறமை, காலக் கெடுபிடிக்கேற்றவாறு இதை பொங்கல், போண்டா, குணுக்கு, தோசை, வடை, இட்லி, இடியாப்பம், இன்னும் இவை எதுவுமே இல்லாத இன்னொன்றாகக் கூடச் செய்துகொள்ளலாம்.
 

[“பின் நவீனத்துவம் இன்றைய வாழ்க்கை நோக்கில் இயல்பாகவே உள்ளது. ரீமிக்ஸ் பாடல்கள் ஓர் உதாரணம். நாம் நிகழ்ந்தவற்றை ஏன் நிகழ்ந்தது எப்படி நிகழ்ந்தது என்று நோக்குகிறோம். மீண்டும் நிகழ்த்திப் பார்க்கிறோம். மாற்றியமைக்கிறோம். கிண்டல்செய்கிறோம். விரிவாக்கிப்பார்க்கிறோம்.”]

ஆக அது அதன் அடிப்படை மட்டும் சாராது, கையாள்பவரின் ஆளுமையையும் தன்வயமாக எடுத்துக்கொள்கிறது. இந்த எடுத்தாள்கைப் படைப்பு, ‘எங்கேயும் எப்போதும்..‘ பாடலைப் போல வெற்றியடையுமா அல்லது ‘பொன்மகள் வந்தாள்…’ போலப் புலம்பவைக்குமா என்பதை காலத்தின் தீர்ப்புக்கு விட்டுவிட வேண்டும். ஆனால் அதுவரை அதுகுறித்த ஓர் ஓயாத விவாதம் சமையல் உலகில் நிகழ்ந்தவண்ணம் இருத்தல் அவசியம்.
 

[“பின்நவீனத்துவம் பற்றிய மிக முட்டாள்த்தனமான பேச்சே இது ஒரிஜினல் பின்நவீனத்துவம் இல்லை, அதுதான் என ஐரோப்பாவையோ அமெரிக்காவையோ காட்டுவது. அப்படிசொல்லக்கூடாது என்றுதான் பின்நவீனத்துவம் வாதிடுகிறது.”]

இங்கே இந்த ரவை உப்புமா ரீமிக்ஸ் மட்டுமே ஒரு பின்நவீனத்துவம் என்பதாகாது. இலக்கிய எழுத்துகளில் தாழ்த்தப்பட்டதாகவும் விளிம்புநிலையிலும் இருக்கும் சமையல் குறிப்புகளும் கூட முதன்முதலாக சிறுபத்திரிகையில் கவனத்தைப் பெற்றவகையில், இந்தக் கட்டுரையேகூட ஒரு கலகக் கட்டுடைப்பாகவும், அதை நோக்கிய முக்கிய முன்னகர்வாகவும் கவனிக்கத் தக்கது.

அம்பலத்தின் என் கதை வெளியாகியும், அதை எனக்குத் தனிமடலில் தெரியப்படுத்தவில்லை, இனிமேல் அம்பலத்துக்கு என் படைப்புகளை அனுப்பவே மாட்டேன்,” என்று குதியாய்க் குதித்த கவிஞர்/ எழுத்தாளர்/ பத்திரிகையாசிரியர் ஹரன் பிரசன்னா, தான் ஆசிரியராக இருக்கும் பத்திரிகையில், அவர்களாகவே கேட்டு, படைப்பை அனுப்பியும் அந்தப் படைப்புகள் நிராகரிக்கப்பட்டதை– காரணம் தேவையில்லை; தகவலாக மட்டும்– சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புவார் என எதிர்பார்ப்பது அப்படி ஒன்றும் தவறு இல்லை என்று நினைக்கிறேன். சுயவிலாசமிட்ட, அஞ்சல்தலை ஒட்டிய உறை உள்ளே வைத்து அனுப்ப சாத்தியமில்லாத மின்னஞ்சல் வகை படைப்புகளுக்கு அது அவசியமும் கூட. இட்லிவடை சொல்லி நான் தெரிந்துகொள்ளவேண்டிய (துர்)பாக்கியத்திற்கு நன்றி.

ஆனால் விளம்பரத்தில் கொடுத்திருந்தபடி ஜெயமோகனார் எழுதியது எதுவும் இல்லை. அதனால் ஜெயஸ்ரீ கோவிந்தராஜனும் எழுதவில்லை(சமையல் மாமி அக்கா ). இவர்களை ஈடுகட்டுவதற்காக இன்னும் அதிகமான பேரை எழுதவைத்திருக்கிறார்கள். அப்படியும் முதல் இதழ் ஜெ’ஜெ’ன்னு இல்லை

— இட்லிவடை.

இணையத்தில் பொதுவாக எந்த நேர்மையையும் ஓரளவிற்குமேல் எதிர்பார்ப்பதில்லை என்றாலும், ஊர்ல சொல்றது சொலவடை, உண்மையைச் சொல்றது இட்லிவடை என்றெல்லாம் ‘பன்ச்லைன்’ வைப்பவர்கள் சம்பந்தப்பட்டவர்களையும் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு எழுதினால் வைத்த லைனுக்கு நீதியாக இருக்கும். மீண்டும் மீண்டும் இதைச்  சொல்ல வேண்டியிருப்பது கூட  எரிச்சலாக இருக்கிறது. 

—-

‘எனிஇந்தியன்’ பதிப்பகத்தின் ‘வார்த்தை’ மாத இதழுக்கு அனுப்பி, பிரசுரிக்கப்படாத உணவுக் குறிப்பு.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1/2 கப்
புழுங்கல் அரிசி – 1/2 கப்
பாசிப் பருப்பு – 1/4 கப்
பச்சைப் பயறு – 1/4 கப் (தோலுடன்)
கடலைப் பருப்பு – 1/2 கப்
கோதுமை – 1/4 கப்
வெல்லம் – 2 1/2 கப்
தேங்காய்த் துண்டுகள் – 1/4 கப்
சுக்குப் பொடி – 1/2 டீஸ்பூன்
ஏலப் பொடி – 1 டீஸ்பூன்
நெய் – 1 டேபிள்ஸ்பூன்

poruL viLangaa uruNdai

செய்முறை:

  • பச்சரிசி, புழுங்கல் அரிசி, பாசிப் பருப்பு, பச்சைப் பயறு, கடலைப் பருப்பு, கோதுமை இவற்றை தனித் தனியாக வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
  • எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அல்லது மிஷினில் நைசான மாவாக அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயை மிகச் சிறுசிறு துண்டுகளாக்கி சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.
  • வெல்லத்தை ஒரு கப் தண்ணீர் சேர்த்து கம்பிப் பாகாகக் காய்ச்சிக் கொள்ளவும்.
  • இறக்கும் முன் சுக்குப் பொடி, ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கொள்ளவும்.
  • பாகில் மாவைக் கொட்டி, கட்டிகளில்லாமல் கலந்துகொள்ளவும். 
  • கையில் நெய்யைத் துடைத்துக் கொண்டு, சூட்டோடு வேகமாக உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • 4, 5 உருண்டைகளாக இடையிடையே ஒரு சுளகில் அல்லது முறத்தில் இட்டுச் சுழற்றினால் ஒன்றோடு ஒன்று இடித்து, நன்றாக உள்ளே இறுகிக் கொள்ளும்.
  • பாதி செய்துகொண்டிருக்கும்போதே கலவை இறுகி எடுக்கவரவில்லை என்றால், மீண்டும் அடுப்பில் சிம்’மில் (மட்டும்) வைத்தால் பாகு இளகி எடுக்க வரும். தொடர்ந்து மிச்ச உருண்டைகளையும் பிடிக்கலாம்.
  • ஆறியதும் ஒரு காற்றுப் புகாத டப்பாவில் எடுத்துவைத்து உபயோகிக்கவும். பதினைந்து நாள்களுக்குக் கெடாது. சாப்பிட்டால் நீண்டநேரம் பசிக்காது.

* உடல்வலிமைக்கு, விரதங்களுக்கு, பிரயாணங்களுக்கு ஏற்றது.

—-

பின்நவீனத்துவ கவிதைக்கும் பொருள்விளங்கா உருண்டைக்குமான ஒரு ‘அடுப்படி‘ வாசகியின் புரிதல்கள்….

பொவிஉ – முப்பாட்டிக்கும் மூத்த தமிழ்ப்பாட்டிகள் செய்துவந்த உருண்டை.
பிநக – இன்னமும் எழுத்தாளர்களே இன்னதென்று விளங்க முடியாத சண்டை.

பொவி – எங்குமே அதிகம் காணக் கிடைப்பதில்லை.
பிநக – சிறுபத்திரிகைகளில் மட்டும் விலைபோகும்.

பொவிஉ – உடல்நலத்திற்கு ஏற்றது.
பிநக – மனநலத்தைக் கெடுப்பது.

பொவிஉ – செய்தவன் தவிர ருசிப்பவனுக்கு உள்ளிருக்கும் பொருளைச் சொல்ல முடியாது.
பிநக – எழுதியவன் தவிர படிப்பவனுக்கு உள்ளிருக்கும் பொருளைச் சொல்ல முடியாது.

பொவிஉ – கடிப்பதில் தேங்காய் ஒன்று மட்டுமே புரியும்.
பிநக – படிப்பது தமிழ் என்று மட்டுமே புரியும்.

பொவிஉ – வழமையாக உபயோகிக்கும் தானியங்களில் வகைக்குக் கொஞ்சமாக அள்ளிப் போட்டுக்கொள்ள வேண்டியது.
பிநக – வழமையிலேயே இல்லாத வார்த்தைகளாக வகைவகையாக அகராதியிலிருந்து அள்ளிப் போட்டுக்கொள்ள வேண்டியது.

பொவிஉ – தானியங்கள் சிவக்க வறுக்கப்பட்டிருக்க வேண்டும்.
பிநக – எண்ணம், பொருள், ஏவல் எல்லாமே சிவப்புச் சாயம்தான். (காதல் கவிதைகள் பரீட்சார்த்த தோல்வி என்று கேள்வி.)

பொவிஉ – அரிசி, பருப்பு, கோதுமை அடிப்படையில்  முக்கியம்.
பிநக – அல்குல், யோனி, முலை, குறி அதிமுக்கியம்.

பொவிஉ – பாகு முற்றும்முன் துரிதமாக உருண்டைகளைப் பிடித்து முடித்துவிட வேண்டும்.
பிநக – மனநிலை முற்றியபின் மிகத் துரிதமாக எழுத ஆரம்பித்து முடித்தும் விட வேண்டும்.

பொவிஉ – தாமதமாக்கினால் பாகு மாவுடன் பிடித்துக்கொண்டு உருண்டை பிடிக்கவராது.
பிநக – தாமதமாக்கினால் எழுத்தாளனே தன் அபத்தத்தைப் புரிந்துகொண்டு எழுதவராது.

பொவிஉ – கடப்பாரையால் உடைத்தல் அவசியம்.
பிநக – கட்டுடைத்தல் அதன் குணாதிசயம்.

பொவிஉ – உருட்ட முடிந்தால் மட்டுமே அது பொருள்விளங்கா உருண்டை
பிநக – படிக்க முடியாவிட்டால் அது பொருள்விளங்கா மரமண்டை. (இந்த வாசகி மாதிரி!)

மிகக் கொஞ்சமாய் காய், சுவை குறைந்த கடுமையான காய் அல்லது கீரை வகைகள், பருப்பு வேக வைக்க நேரமின்மை, தேங்காய் அதிகம் சேர்க்க விரும்பாமை இப்படி பல காரணங்களுக்காக, இந்தக் கூட்டில் சேர்த்திருக்கும் மசாலாவை உபயோகிப்பது நல்லது. எல்லாக் குறைகளையும் மறைத்து, அடர்த்தியான கிரேவியுடன் மிகுந்த மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

தேவையான பொருள்கள்:
குடமிளகாய் – 1/4 கிலோ
வெள்ளைக் கொத்துக்கடலை – 1/2 கப்
தக்காளி – 2, 3 (விரும்பினால்) **
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை

வறுத்து அரைக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3, 4
துவரம் பருப்பு – 1 1/2 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
மல்லி விதை – 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை.

kudamilagai koththukkadalai stew

செய்முறை:

  • வெள்ளைக் கொத்துக்கடலையை தண்ணீரில் குறைந்தது 10 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.
  • குடமிளகாயை, காம்பு, குடலை நீக்கி, துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • எண்ணெயில் காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மல்லி விதை என்ற வரிசையில் சேர்த்து, நன்கு சிவக்க வறுத்து, தேங்காயுடன் மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் தாளித்து, நறுக்கிய தக்காளி, குடமிளகாயைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  • வேகவைத்த கொத்துக் கடலை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மூடி, மிளகாயை முக்கால் பதம் வேகவைத்துக் கொள்ளவும். (சட்டென வெந்துவிடும். குடமிளகாய் அதிகம் வெந்தால் சுவையாக இருக்காது.)
  • அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து மேலும் ஒரு கப் அல்லது தேவைப்பட்டால் அதற்கும் மேல் தண்ணீர் சேர்க்கவும். இந்த விழுது, அதிகத் தண்ணீர் இழுக்கும்.
  • 3, 4 நிமிடங்கள் சிம்மில் வைத்து, கலவை கொதித்து கெட்டியாகி, அடர்த்தியான கிரேவியாக வந்ததும், இறக்கி, மல்லித் தழை கலந்து உபயோகிக்கலாம்.
  • * இந்தத் தயாரிப்பை குடமிளகாய் கொத்துக்கடலைக்கு மட்டும் இங்கே சொல்லியிருந்தாலும் பொதுவாக எந்த ஒரு தனி காயுடனும், விரும்பினால் அதனொத்த பயறுடனும் சேர்த்தோ சேர்க்கமலோ செய்யலாம். கீரை வகைகளுடனும்  மிகப் பொருந்தும்.

keerai stew

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இந்த முறையில் செய்யும் மற்ற காய்கறிகள், பொதுவான சாப்பாட்டுக்கு உபயோகிக்கலாம் என்றாலும் பிரத்யேகமாக இந்த குடமிளகாய், கொத்துக்கடலை ஸ்டூ, ஃப்ரைடு ரைஸ் போன்ற தக்காளி சாதம், புளியோதரை, எலுமிச்சை, தேங்காய் சாத வகைகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். அதே மாதிரி செய்யப்படும் அரிசி சேவை வகைகளுக்கும்.
 
** எலுமிச்சை, புளியோதரை போன்ற புளிப்பு சேர்ந்த சாத வகைக்களுக்குச் செய்யும்போது, இந்தக் கூட்டில் தக்காளி சேர்க்காமல் செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

கெட்டித் தயிர் – 2 கப் (லேசாகப் புளித்தது)
தேங்காய்த் துருவல் – 1 கப்
பச்சை மிளகாய் – 5, 6
துவரம் பருப்பு – 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
மல்லி விதை – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
பெருங்காயம்
மஞ்சள் தூள்
உப்பு
கொத்தமல்லித் தழை

காய்கறி: முருங்கை, பூசணி, வெண்டை, சேம்பு, கத்தரிக்காய், பரங்கிக்காய்…. இவற்றில் ஏதாவது ஒன்று.

தாளிக்க: தேங்காயெண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

mOr kuzhambu [3]

செய்முறை:

  • துவரம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
  • எடுத்துக் கொண்டிருக்கும் காயை முக்கால் பதம் வேகவைத்துக் கொள்ளவும்.
  • ஊறவைத்த பருப்புகள், தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம், மல்லி விதை, சீரகம் எல்லாவற்றையும் சிறிது நீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • தயிரை நன்கு கட்டியில்லாமல் கடைந்து, தேவையான உப்பு, மஞ்சள் தூள், அரைத்த விழுது, வேகவைத்த காய் சேர்த்து நிதானமான தீயில் அடுப்பில் சூடாக்கவும். ஒன்றிரண்டு முறை மட்டும் கிளறி விடவும்.
  • பொங்கி வரும்போது தாமதிக்காமல் அடுப்பிலிருந்து இறக்கி, மல்லித் தழை சேர்க்கவும்.
  • தேங்காயெண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய், பருப்பு சாதம், அரிசி சேவை…