மார்ச் 2009


தேவையான பொருள்கள்:

ஜவ்வரிசி – 250 கிராம்
பச்சை மிளகாய் – 8
உப்பு
பெருங்காயம்
எலுமிச்சம் பழம் – 2

செய்முறை:

  • பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு அடிகனமான பாத்திரம் அல்லது குக்கரில் தண்ணீர் வைத்து, கொதித்ததும் ஜவ்வரிசியைச் சேர்த்து கட்டி தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
  • நிதானமான சூட்டில் அல்லது சிம்மிலேயே எரியவிட்டு, ஒரு கொதி வந்ததும் அரைத்த மிளகாய் விழுதைச் சேர்க்கவும்.
  • தண்ணீர் தேவையானால் சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • ஜவ்வரிசி பாதி வெந்ததும், மேல் பாகம் கண்ணாடிபோல் ஆகி, உள்ளே சிறிதுமட்டும் வெள்ளை தெரியும்போது மூடிவைத்து, அடுப்பை அணைத்துவிடவும்.
  • உள் சூட்டிலேயே இன்னும் சிறிது வெந்து கலவை ஆறியதும், எலுமிச்சைச் சாறு சேர்த்து சுவைத்துப் பார்த்து திருத்தலாம்.
  • கெட்டியான விழுதாக இருக்கும் இந்தக் கலவையை சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி, பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து, தண்ணீரைத் தொட்டுத் தொட்டு, கையால் பெரிதாக அப்பளமாகத் தட்டவும்.
  • இரண்டு பக்கமும் வெயிலில் காய்ந்ததும் எடுத்துவைத்து விரும்பும்போது எண்ணெயில் பொரிக்கலாம்.

* இந்த வகை அப்பளத்திற்கு ஜவ்வரிசிக்கு மொத்தமாக நீர்விட்டு கொதிக்கவிடக் கூடாது. சிறிது சிறிதாக குளிர்ந்த நீர் விட்டு கொதிக்கவிட்டால்தான் ஜவ்வரிசி ஒட்டாமல் வெந்து, கரையாமல் முத்து முத்தாக இருக்கும்.

தக்காளி ஜவ்வரிசி அப்பளம்:

கால்கிலோ ஜவ்வரிசிக்கு கால் கிலோ தக்காளி சேர்த்துக் கொள்ளவேண்டும். தக்காளியை லேசாக வெந்நீரில் கொதிக்கவிட்டு தோலை நீக்கி, மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொண்டு, மேலே சொன்னபடி தயாரிக்கலாம். கொதிக்கும் ஜவ்வரிசிக் கலவையில் பச்சைமிளகாய் விழுதைச் சேர்க்கும்போது தக்காளி விழுதையும் சேர்க்கவேண்டும். எலுமிச்சைச் சாறு இதற்குத் தேவை இல்லை.

தேவையான பொருள்கள்: 

ஜவ்வரிசி – 250 கிராம்
பச்சை மிளகாய் – 4
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சம் பழம் – 1
உப்பு
பெருங்காயம்

javvarisi appalam 1
 

செய்முறை:

  • ஜவ்வரிசியை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
  • குக்கரில் மேலும் ஒரு பங்கு தண்ணீர் வைத்து குழைய வேகவிடவும்.
  • மறுநாள் காலை வெந்த ஜவ்வரிசியுடன் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • எலுமிச்சைச் சாறு, சீரகம் சேர்த்து சுவையை சரிபார்த்துக் கொள்ளவும்.
  • பிளாஸ்டிக் பேப்பரில் ஒரு பெரிய கரண்டி மாவை விட்டு வட்டமாக அப்பள வடிவில் இழுக்கவும்.
  • மறுநாள் அடுத்தப் பக்கமும் திருப்பிப் போட்டு, இருபுறமும் காய்ந்ததும் எடுத்து வைத்து தேவைப்படும்போது பொரிக்கலாம்.

javvarisi appalam  1(fried)

* இது எக்ஸிபிஷன் அப்பளம் போன்ற சுவையுடன் இருக்கும். நமக்கு விருப்பப்பட்ட அளவில் செய்துகொள்ளலாம்.

* வடாம்களுக்குச் சேர்ப்பது போல் அப்பள வகைகளுக்கு புளிப்பு காரம் அதிகம் சேர்க்கத் தேவை இல்லை.

* பொதுவாக வடாம் அப்பளம் வகைகளுக்கு நைலான் ஜவ்வரிசியாக இல்லாமல் மாவு ஜவ்வரிசியாக இருந்தால் நல்லது.

* பொதுவாக ஜவ்வரிசி வடாம் அப்பளம் வகைகளில் அதிகமாக நீர் விட்டால் லேசாக இருக்கும். பொரித்தால் சிவந்து போவதுடன் பல்லிலும் ஒட்டிக்கொள்ளும். அதனால் நன்கு வேகவைத்து கனமாக இழுப்பதே சரியான முறை.

-0-

மைதா ஜவ்வரிசி அப்பளம்:

முதல்நாள் இரவே ஜவ்வரிசியை ஊறவைத்து வேகவைத்து, ஐந்து கப்புக்கு ஒரு கப் அளவு மைதாவை நீரில் கரைத்துச் சேர்த்துக்கிளறி மூடிவைத்துவிட வேண்டும். மறுநாள் காலை மேற்சொன்ன முறையில் பச்சை மிளகாய், உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து தயாரிக்கலாம்.

 

ஓமம் ஜவ்வரிசி அப்பளம் (குட்டீஸ் ஸ்பெஷல்):

பச்சை மிளகாயே சேர்க்காமல், சிறிது தயிர், உப்பு, ஓமம், சிலதுளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

ஜவ்வரிசி – 1கப்
தண்ணீர் – 3 கப்
பச்சை மிளகாய் – 6
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 2 சிட்டிகை
கசகசா – 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சம் பழம் – 1

javvarisi vadaam 1

செய்முறை:

  • இரவில் ஒரு கப் ஜவ்வரிசிக்கு இரண்டு கப் தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.
  • பச்சைமிளகாய், பெருங்காயம், உப்பு மூன்றையும் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • குக்கரில் உள்பாத்திரத்தில் மேலும் ஒரு பங்கு தண்ணீர் வைத்து அரைத்த விழுதைச் சேர்த்து சூடாக்கவும்.
  • தண்ணீர் காய்ந்ததும் ஊறவைத்த ஜவ்வரிசியை(அதன் தண்ணீருடன்) சேர்த்துக் கலந்து, குக்கரை மூடி, வெயிட் போட்டு மிதமான சூட்டில் மேலும் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்களுக்கு வைத்திருந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • மறுநாள் காலையில் கசகசாவை வெறும் வாணலியில் லேசாக வறுத்துச் சேர்க்கவும்.
  • எலுமிச்சைச் சாறு கலந்து சுவையைச் சரிபார்க்கவும். இந்தப் பக்குவத்தில் சிறிது மாவை சாப்பிட்டுப் பார்த்து, தேவையான திருத்தங்களைச் செய்துகொள்ளலாம்.
  • பிளாஸ்டிக் பேப்பரில் ஒரு சிறிய ஸ்பூனால் எடுத்து வரிசையாக விடவும். (வட்டமாக இருக்கத் தேவையில்லை. குழந்தைகள்கூட செய்யலாம்.)
  • வெயிலில் நன்கு காயவைத்து, தேவைப்படும்போது எண்ணெயில் பொரிக்கலாம்.
  • சாதாரண ஜவ்வரிசி வடாத்திற்கு சிறிது தயிர் சேர்த்துச் செய்தால் வெள்ளை வெளேரென்று இருக்கும்.

-0-

இந்த ஜவ்வரிசி வடாத்தை பலவிதமான உபரிமசாலாக்களுடன் செய்யலாம் என்றாலும் முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கே சொல்லியிருக்கிறேன்.

வெங்காய ஜவ்வரிசி வடாம்:

மேற்சொன்ன முறையிலேயே பச்சை மிளகாய் அரைக்கும்போது ஒரு பெரிய வெங்காயத்தையும், அதற்கு ஈடாக அதிகம் ஒரு பச்சை மிளகாயும் அரைத்துச் சேர்க்கவேண்டும்.

தக்காளி ஜவ்வரிசி வடாம்:

ஒரு கப்புக்கு இரண்டு பெரிய தக்காளி என்ற விகிதத்தில் பச்சை மிளகாயுடன் அரைத்துக் கலக்கலாம். அல்லது தக்காளியை தனியாக அரைத்து சாறை வடிகட்டி சேர்த்துக் கொள்ளலாம். சாறு சேர்ப்பதால் தண்ணீரைக் குறைத்து உபயோகிக்கவும். இந்த வகைக்கு, எலுமிச்சை சில துளிகள் சேர்த்தால் போதும்.

பூண்டு ஜவ்வரிசி வடாம்:

10 லிருந்து 15 பூண்டுப் பற்களை பச்சைமிளகாயுடன் சேர்த்து அரைக்கவேண்டும்.

பிரண்டை ஜவ்வரிசி வடாம்:

பிஞ்சு பிரண்டையாக எடுத்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி பச்சைமிளகாயுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

வேப்பம்பூ ஜவ்வரிசி வடாம்:

வேப்பம் பூக்களை மரத்திலிருந்து நேரடியாகப் பறித்து அரைக்காமல் அப்படியே கூழோடு கலந்துகொள்ளலாம்.

புதினா கொத்தமல்லி ஜவ்வரிசி வடாம்:

கொத்தமல்லி முக்கால் பங்கும் புதினா கால் பங்கும் இருக்குமாறு கால் கப் எடுத்து பச்சை மிளகாயோடு அரைத்துச் சேர்க்க வேண்டும்.

  •  மிக்ஸியில் இவைகளை விழுதாக அரைக்கமுடியவில்லை என்றால், அவற்றோடு 2 டீஸ்பூன் கூழையே சேர்த்து ஒரு ஓட்டு ஓடவிட்டால் விழுது நைசாக அரைந்துவிடும்.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி மாவு – 1 கப்
தண்ணீர் – 2 கப்
பச்சை மிளகாய் – 3
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு (சுமார் 1 டீஸ்பூன்)
தேங்காய்த் துருவல் – 1 டேபிள்டீஸ்பூன் (விரும்பினால்)
தேங்காயெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க: தேங்காயெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை.

ammani kozhukkattai
 

செய்முறை:

  • பச்சை மிளகாய், உப்பு பெருங்காயத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கப் பச்சரிசி மாவை இரண்டு கப் தண்ணீரில் கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
  • கரைசலுடன் 2 டேபிள்ஸ்பூன் தேங்காயெண்ணெய் விட்டு அடுப்பில் வாணலியில் அடிப்பிடிக்காமல் கைவிடாமல் கிளறவும். (நான்ஸ்டிக் வாணலியில் எளிதாகவும் விரைவாகவும் செய்யலாம்.)
  • மாவு இறுக ஆரம்பிக்கும்போது அரைத்த விழுதையும் சேர்த்துக் கிளறவும். சுமார் 10 நிமிடத்துக்குள் மாவு வெந்து இறுகி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
  • ஆறிய மாவை சுண்டைக்காய் அளவு சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • ஒரு குக்கர் பாத்திரம் அல்லது இட்லிதட்டில் எண்ணெய் தடவி, உருண்டைகளை வைத்து குக்கரில் இட்லிவேக வைப்பதுபோல் வெயிட் போடாமல் ஒரு ஐந்து நிமிடம் மட்டும் வேகவைத்து எடுக்கவும்.
  • அடுப்பை அணைத்த உடனே திறந்து மின்விசிறி அடியில் ஆறவிடவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் தாளித்து, மெதுவாக உருண்டைகளைச் சேர்த்து உடையாமல் நாசுக்காகக் கிளறிவிடவும்.
  • கொழுக்கட்டைகளைச் சேர்த்தபின் ஒரு நிமிடம் மட்டும் அடுப்பில் வைத்திருந்து கிளறி இறக்கிவிடவும்.

* சூடாகவோ ஆறியோ எப்படிச் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.

* கொழுக்கட்டை மாவு மிகுந்தாலும் இந்த மாதிரி செய்யலாம். தேவையான பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம் அரைத்த விழுதை மாவிலேயே நன்கு கலந்துப் பிசைந்து உருண்டைகள் பிடித்து குக்கரில் வேகவைத்து மேலே சொன்னபடி தாளித்துக் கிளறவும்.

என் சின்ன வயதில் இந்த ஏப்ரல், மே மாதங்கள் வந்தாலே வீட்டுக்கென்று சில நடவடிக்கைகள், வாசனைகள், பிரச்சினைகள் என்று களைகட்டும். 

அன்றாடம் மாவடு, வேப்பம் பூ, கஸ்தூரி மஞ்சள், வற்றல் வடாம், வடகம், அப்பளம் இவற்றில் ஏதாவது ஒன்றாவது வீட்டில் பெரியவர்களுக்கு வேலை எடுக்கும். இதோடு வருஷசாமான் என்று அப்பொழுதெல்லாம்– புளி, துவரம் பருப்பு, கடுகு, மிளகு, சீரகம், மிளகாய் வற்றல் என்று மொத்தமாக ஒரு வருடத்திற்கான சாமான்களை வாங்கி, சுத்தம் செய்து வெயிலில் உலர்த்தி எடுத்துவைப்பார்கள். ஒரு துணியைக் கீழே விரித்து, பலகையை மடியில் சாய்த்துவைத்துக் கொண்டு கடுகை கொஞ்சம் கொஞ்சமாக சரியவிட்டு சுத்தம் செய்வதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். முழுஆண்டுத் தேர்வு, [இதைத்தான் பிரச்சினை என்று சொன்னேன். :)], மொட்டை மாடி அரசாட்சி, புளியங்கொட்டை கலக்ஷன், லீவுக்கு ஊருக்குப் போவது என்று ஒரே களேபரமான மாதங்கள் இவை இரண்டும்.

இப்பொழுதெல்லாம் வெளியே சாமான்களை காயவைக்கக் கூடிய அளவுக்கு சுற்றுப்புறம் தூய்மையாக இருக்கிறதா என்றே பயமாக இருக்கிறது. சாம்பார் பொடி, ரசப்பொடி சாமான்களைக் கூட நான் வெயிலில் வைப்பதில்லை. வாணலியில் லேசாக வறுத்து அரைத்துவிடுகிறேன்.

வடாத்திற்கு மாவு கிளறியதும் சுடச் சுட மாவை வாயில் போட்டால் லேசாக ஒட்டிக்கொண்டு விர்ரென்று காரம் காதில் ஏறும். மாவு ஆறினாலும் சுகம் தான். பிழிந்த பிறகு ஓஹோ. “வடாம் பிழிஞ்சதை சாப்பிடாத. மாவாவே எவ்வளவு வேணுமோ சாப்பிட்டுட்டு இடத்தைக் காலி பண்ணு; எங்களுக்குப் பிழியற வேலையாவது மிச்சமாகும்” என்று அம்மா திட்டி (பாட்டி அதெல்லாம் எதுவும் சொல்வதில்லை.) தட்டுநிறைய பச்சை மாவை நீட்டினாலும், அது ஓரளவுக்கு மேல இறங்குவதில்லை. பிழிந்தவடிவம் வேறு சுவை என்பதால் இதற்கெல்லாம் அடிபணிய அவசியமுமில்லை. எனக்கென்னவோ அதே மாவில் பிழிந்தாலும் ரிப்பனும், ஓமப்பொடியும், முள்ளு முறுக்கும் தனித்தனிச் சுவையாக இருப்பதாகத் தோன்றும்.

பெரியவர்கள் இரண்டுபேரும் பாலுக்கு பூனையை காவல் வைத்துவிட்டு காலி அண்டா குண்டா உழக்கு எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு கீழே போய்விடுவார்கள். அப்புறம்தான் நம் வேலையே(பரிட்சைக்குப் படிப்பதுதான்) ஆரம்பிக்கும். மலர்ந்தும் மலராத பாதி மலர்போல காய்ந்தும் காயாத கால் காய்ச்சல், அரைக் காய்ச்சல் வடாம், முக்கால் காய்ச்சல் வடாம்களை அந்த நாளில் இழந்துவிட்டால் இனி அடுத்த வருடம் உச்சிவெயிலில்தான் கிடைக்கும். சும்மா நச் நச் என்று லாகிரியாக இருக்கும். இதில் நம்வீட்டு வடாத்தைவிட அக்கம்பக்க மொட்டைமாடி வடாம்கள்தான் மேலும் சுவையாக இருப்பதோடு அந்த சீசன் முழுமைக்கும் குறையாமல் கிடைக்க அதுவே வழி. திருட்டு வடாம்தான் என்றாலும் அந்தந்த வீட்டு வாரிசோடு சேர்ந்து எடுக்கும்போது அதில் இருக்கும் திருட்டுக் கறை அழிந்து அது ஒரு உடன்படிக்கை என்ற அளவில் ஆகிவிடும். 🙂

இப்பொழுதெல்லாம் இந்த வடாம் மாவு, அப்பள மாவு, இலைவடாம் இவையெல்லாம் தயாரிக்க இல்லாவிட்டாலும் பச்சையாக சாப்பிடவாவது செய்தால் பரவாயில்லை என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை. காயவைக்கப் போவதில்லை என்றால் சீசனே தேவையில்லை. கொட்டும் மழையிலும் செய்துகொள்ளலாம்.

-0-

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கிலோ
ஜவ்வரிசி – 200 கிராம்
பச்சை மிளகாய் – 100 கிராம்
எலுமிச்சம் பழம் – 3 (பெரியது)
உப்பு – தேவையான அளவு (சுமார் ஒரு கைப்பிடி)
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்

 arisi vadaam 1
 

செய்முறை:

  • பச்சரிசி, ஜவ்வரிசி இரண்டையும் நன்கு சுத்தம் செய்து மிஷினில் நைசாக அரைத்து வாங்கவும்.
  • அடி கனமான குண்டான் அல்லது பிரஷர் குக்கரில் 12 கப் தண்ணீர்விட்டு கொதிக்கவிட வேண்டும்.
  • கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்த மாவை மொத்தமாகக் கொட்டி, கைவிடாமல் கிளறவேண்டும்.
  • சுமார் பத்து நிமிடங்களுக்குள் மாவு வெந்து நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து இறுக மூடிவைக்கவும்.
  • காம்பில்லாத பச்சை மிளகாயுடன் உப்பு சேர்த்து நைசாக அரைத்து, சிறிதளவு தண்ணீரில் கரைத்து பெரிய சக்கை இல்லாமல் வடிகட்டிக் கொள்ளவும்.
  • மிளகாய்க் கரைசல், எலுமிச்சைச் சாறு இரண்டையும் கிளறிய மாவில் கொட்டி நன்கு கலக்கவேண்டும். [இந்த நிலையில் சுவையை சோதித்து தேவைப்பட்டால் திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.]
  • சுத்தமான(?!) மொட்டைமாடித் தளத்தில் துணி அல்லது பிளாஸ்டிக் பேப்பரை விரித்து காற்றில் பறக்காமலிருக்க நான்கு பக்கமும் கற்களை வைக்கவும்.
  • கை ஒட்டாமலிருக்க, ஒரு பாத்திரத்தில் மோர்கலந்த தண்ணீரைத் தொட்டுக்கொண்டு உழக்கில் மாவை அடைத்து, ஓமப்பொடி, ரிப்பன், முள்ளுமுறுக்கு என்று விரும்பிய வடிவத்தில் வடகம் இடலாம்.
  • வெயிலில் 3, 4 நாள் காயவைத்து (ஒடித்தால் டக்கென்று ஒடியவேண்டும்.) காற்றுப் புகாத டப்பாவில் எடுத்துவைக்கவும்.
  • தேவைப்படும்போது எண்ணெயை நன்கு சுடவைத்து, மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
  • 2 டீஸ்பூன் கசகசாவையும் பொடித்துக் கலந்துகொண்டால் நல்ல மணமும் சுவையும் இருக்கும்.
  • எல்லா மாவையும் உப்பும் காரமும் கலந்து செய்யாமல் குழந்தைகளுக்காக கொஞ்சம் மாவில் சர்க்கரை, பழ எசன்ஸ், கலர் சேர்த்துச் செய்யலாம்.

* பொதுவாக மாவை முதல்நாள் இரவின் கடைசிவேலையாக கிளறிவைத்துவிட்டு, மறுநாள் அதிகாலையில், பச்சைமிளகாய்க் கரைசல், எலுமிச்சைச் சாறைக் கலந்து வெயில் ஏறுவதற்கு முன்பே பிழிந்துவிடுவது சரியானது. இந்த முறையில் வடாம் சீக்கிரம் காய்ந்து பிரிக்கவரும். காலையிலே எழுந்துதான் கிளறினால் வேலையும் அதிகம். சூட்டில் பிழிவதும் சிரமம்; பிளாஸ்டிக் பேப்பரில் சூடோடு பிழிவது நல்லதுமில்லை.

 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

கலவை சாதங்கள், சாம்பார்/குழம்பு சாதம், ரசம் சாதம், புலவு, பிரியாணி வகைகள்… இப்படி எல்லாம் அடுக்கத் தேவையில்லை. சும்மாவே சாப்பிடலாம். 🙂

தேவையான பொருள்கள்:

மாங்காய் – 1 (சிறியது)
வெல்லம் – 1 கப்
புளி – நெல்லிக்காய் அளவு
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துண்டுகள் – 2 டேபிள்ஸ்பூன்
ஏலப்பொடி – 1 சிட்டிகை
உப்பு – 1 சிட்டிகை
மிளகாய்த் தூள் – 1 சிட்டிகை
கார்ன் ஃப்ளோர் = 1/2 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்

தாளிக்க: நெய், கடுகு, வேப்பம்பூ.

maangaai pachchadi (veppam poo, ugadhi)

செய்முறை:

  • மாங்காய், தேங்காயை சிறிசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • புளியை நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு, கடலைப் பருப்பு, தேங்காய்த் துண்டுகளை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
  • கரைத்து வைத்துள்ள புளி, மாங்காய்த் துண்டுகளைச் சேர்த்து 5 நிமிடத்திற்கு கொதிக்கவிடவும்.
  • மாங்காய் வெந்ததும் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து நிதானமான தீயில் வெல்லத்தைக் கரையவிடவும்.
  • வெல்லம் கரைந்ததும் சிறிது நீரில் கார்ன் ஃப்ளோரைக் கலந்து சேர்க்கவும்.
  • சேர்ந்தாற்போல் வந்ததும் ஏலப்பொடி, உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
  • நெய்யில் கடுகு, வேப்பம்பூ தாளித்துச் சேர்க்கவும்.

[எனக்கு ஜனவரி மாசம் அவங்கள்லாம் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து சொல்லாட்டாலும்கூட [:)] அதையெல்லாம் மனசுல வெச்சுக்காம– நம்ப முதல்வர் மாதிரி பெருந்தன்மையாக்கும் நான்– ஆந்திர நண்பர்களுக்கு உகாதி வாழ்த்துச் சொன்னேன். பச்சடி என் ரெசிபியும் கேட்டதால் சொன்னேன். “Good. ஆனா வாழைப்பழம் போடமாட்டியா”ன்னு கேட்டாங்க. “செல்லாது செல்லாது” மாதிரி ஒரு லுக் வேற. ஐயய்யோ, வேலையிருக்குன்னு தலைதெறிக்க ஓடிவந்துட்டேன். ஏதோ ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கொண்டாடறாரேன்னு நாமளும் உகாதி கொண்டாடினா ரொம்ம்பப் படுத்தாறாய்ங்க…]

* விரும்புபவர்கள் வாழைப்பழம், பலாப்பழத் துண்டுகளும் சேர்த்து, அறுசுவையும் முக்கனியும் சேர்ந்த உணவு என்று அல்டாப்பு விட்டுக் கொள்ளலாம். [முடியலை..]

அனைவருக்கும் உகாதி, குடிபாட்வா (गुढीपाडवा) வாழ்த்துகள்.

தேவையான பொருள்கள்:

புளிக்காத தயிர் – 1 கப்
கடலை மாவு – 1/2 கப்
வெங்காயம் – 1
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க
கொத்தமல்லித் தழை

தாளிக்க: எண்ணெய், காய்ந்த மிளகாய், கடுகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை

onion pakodas (for kadi)
செய்முறை:

  • கடலை மாவில், தேவையான உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து தண்ணீர் கலந்து பஜ்ஜிமாவு பதத்திற்கு நன்கு கலந்துகொள்ளவும். விரல்களால் நன்கு குழைந்துபோகுமாறு கலக்கவேண்டும்.
  • வெங்காயத்தை சற்றே அகல நீளத்தில் நறுக்கிக் கொள்ளவும்.
  • தயிரை ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கடைந்து வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை கடலை மாவில் தோய்த்து எண்ணெயில் பஜ்ஜி மாதிரி பொரித்து எடுக்கவும்.
  • மிச்சமுள்ள கடலைமாவை(4 டீஸ்பூன் கரைத்த மாவு இருந்தால் போதுமானது.) தயிரில் சேர்க்கவும். கரைத்த மாவு தீர்ந்திருந்தால் தனியாக இரண்டு டீஸ்பூன் கடலை மாவை தயிரில்ல் சேர்த்து நன்கு கட்டிகளில்லாமல் கலந்துகொள்ளவும்.
  • தயிர்க் கலவையில் தேவையான உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து, நன்கு கலந்து அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்கவைக்கவும். மிகவும் இறுகிவிட்டால் இன்னும் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம்.
  • கடலைமாவு வெந்து குழம்பு சேர்ந்தாற்போல் வந்ததும் பொரித்து வைத்துள்ள பக்கோடாவைச் சேர்த்து சிம்மில் மேலும் இரண்டு நிமிடம் கொதிக்கவைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • சிறிது எண்ணெயில் கடுகு, சீரகம், 4, 5 காய்ந்த மிளகாய், உரித்த பூண்டு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.
  • நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.

kadi pakoda (punjab)

 

* மிக அதிக அளவில் ஆறியதும் இறுகும்; பகோடாவும் குழம்பின் நீரை இழுத்துக்கொள்ளும் என்பதால் தயாரிக்கும்போதே சிறிது நீர்க்க இருந்தால் நல்லது.

* வாணலியில் முதலில் தாளித்து, அதில் தயிர்கலவையைச் சேர்த்தும் குழம்பைக் கொதிக்கவைக்கலாம்.

* வெங்காயத்துடன் விரும்பினால் உருளை போன்ற காய்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

* மசாலா வாசனை விரும்பினால் கரம் மசாலாத் தூள் ஒரு டீஸ்பூன் பகோடா மாவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சாதம், புலவு, தேங்காய்ச் சாதம், இடியாப்பம், சப்பாத்தி, பூரி….

நாமளே ஏதோ அள்ளித் தெளிச்ச கோலம். காலை அவசரம் என்றால் என்னவென்று மும்பைக்காரர்களுக்குத்தான் தெரியும். ஆறரை மணிக்கு இரண்டுபேரையும் வெளியில் தள்ளுவது சாதாரண விஷயமில்லை. வீட்டுக்குள்ளேயே எதிரில் ஒருவரை ஒருவர் பார்த்தால்கூட பேசிக்கொள்ள மாட்டோம். ஃபோன் வந்தால் ஒருவரை ஒருவர் முறைத்துக்கொள்வோம். வலைப்பதிவுக்காக எந்த தொழில்நுட்பக் குறிப்பும் தெரியாமல், கோணம், வெளிச்சம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கோணல்மாணலாக ஒரு க்ளிக் எடுக்கவே அடித்துப் பிடித்து மூன்று முழு நிமிடங்கள் செலவழித்து (கேமிராவை வெளியே எடுக்க, புகைப்படம் எடுக்க, திரும்ப அதனிடதில் வைக்க) பேருக்கு படம் என்று ஒன்று (bsubra மாதிரி நேயர்களுக்காக) எடுத்துப் போட்டுவருகிறேன். உண்மையில் அந்த மூன்று நிமிடம் கூட பல நேரங்களில் கிடைக்காமல்தான் பல படங்களும், அதனால் பல பதிவுகளும் ஏற்றமுடியாமல் நின்றுபோகிறது. எல்லாப் படங்களுக்கும் பின்னால் உற்றுக்கேட்டால்,

“இன்னிக்கு 6:40 டிரெயின் மிஸ் பண்ணப்போறேன்”
“என் வாட்டர் பாட்டில் இன்னும் வைக்கலை”
“எல்லார் வீட்டுலயும் சாமிக்கு நைவேத்தியம் பண்ணுவாங்க; நம்ப வீட்டுல கேமராவுக்கு”
“அவனவன் படம் பாக்கறதோட தப்பிச்சுடறாங்க. நமக்குத் தான் கொடுமை”

மாதிரி முணுமுணுப்பு, சிணுங்கல், சண்டை என்று வகைவகையாகக் கேட்கலாம். சரி, நம்ப பிரச்சினை நமக்கு.

-0-

சென்ற முறை ஸ்ரீரங்கம் போயிருந்தபோது யதேச்சையாக அம்மா அடுக்கியிருந்த புத்தகங்களிலிருது மெலிதாக ஒன்றை– பெண்கள் மலர் என்று போட்டிருந்தது, நானும் பெண்தானே– எந்த சுவாரசியமும் இல்லாமல் எடுத்துப் புரட்டினேன். ஏதோ தினசரியின் இணைப்புப் புத்தகம். சமையல் குறிப்பு பக்கத்தில் படம்.. ரொம்ப பரிச்சயமானதாக… அட என் இந்த வலைப்பதிவிலிருந்து எடுத்தது. கொஞ்சம் ஆர்வமாக அதே பெயரில் இருக்கும் இன்னும் சில புத்தகங்களைப் புரட்டினால் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இந்த வலைப்பதிவுப் படங்கள். மாதிரிக்கு ஒரு பக்கத்தை மட்டும் புகைபடம் எடுத்துக்கொண்டு வந்தாலும், வந்தபின் கணினி பழுதானதில் இங்கே பதியும் அளவுக்கு அந்த விஷயம் பின்பு தீவிரம் குறைந்துவிட்டது.

peNgaL malar

இதிலிருக்கும் படங்களுக்கான இந்த வலைப்பதிவின் சுட்டிகள்…
 

 https://mykitchenpitch.wordpress.com/2007/09/11/inippu-kozhukkattai-vinaayagar-chathurthi/

https://mykitchenpitch.wordpress.com/2007/10/17/payaththam-paruppu-kadalai-paruppu-sundal-navaraaththiri/

-0-

தட்ஸ்தமிழ்.காம் feederல் வைத்துப் படிப்பது அதன் உடனடி செய்திகளுக்காக. எப்பொழுதாவது தலைப்பு ஆர்வம் எடுத்து உள்ளே சொடுக்கினால் படுகேவலமான பின்னூட்டங்களால் நிரம்பிவழியும். கொஞ்சம் இழப்பாக இருந்தாலும் அவர்கள் மறுமொழி மட்டுறுத்தல் வைக்காமல் இனி திறப்பதில்லை என்று பிடிவாதமாக படிப்பதை நிறுத்திவிட்டேன். அப்போது திடீரெனக் கிடைத்தது அதற்கு இணையாக அல்லது அதைவிட அருமையாக tamilvanan.com  லேனாவின் ஒருபக்கக் கட்டுரைகளை விரும்பிப் படிப்பேன். ஒரு சமயம் என் மாமா சிரத்தையாக அவைகளைத் தொகுத்து எடுத்துவைத்து எனக்குக் கொடுத்திருக்கிறார். இணையத்திலேயே கிடைப்பதற்காக சென்றவாரம் மிகவும் மகிழ்ந்துபோனேன். அப்புறம்தான் வரிசையில் சமையல்குறிப்பும்வர அதில் நான் எடுத்தபடம். சந்தேகப்பட்டு கீழே இருக்கும் வேறு சில பழைய குறிப்புகளையும் சுட்டிப் பார்த்தால் பல இடங்களில் இந்த வலைப்பதிவிலிருந்து எடுத்த படங்கள். இரண்டை மட்டும் மாதிரிக்கு கீழே இந்த வலைப்பதிவின் சுட்டிகளுடன் கொடுத்திருக்கிறேன்.

tv_vatralkuzhambu tv_chettinadu

http://www.tamilvanan.com/content/2009/02/27/samayal-6/
https://mykitchenpitch.wordpress.com/2007/04/18/vatral-kuzambu-2-manaththakkaali-vaththak-kuzambu/

http://www.tamilvanan.com/content/2008/11/07/20081107-chettinadu-samayal/
https://mykitchenpitch.wordpress.com/2007/08/08/paagarkkaai-curry/

-0-

‘அம்மாவின் சமையல்’ என்ற பெயரில் ஒரு வேர்ட்பிரஸ் பதிவு (எனக்குப்)புதிது. டேஷ்போர்டில் பார்த்துவிட்டு ஆர்வமாக உள்ளே போனால் முதல் பக்கத்திலேயே என் படங்கள் முகத்தில் அறைகின்றன.

top10_paavakkai kuzhambu top10_vaazhaiththandu

http://top10samayal.wordpress.com/2009/02/12/bitter-guard-kuzhambu/
https://mykitchenpitch.wordpress.com/2007/08/08/uppuchchaar-1/

http://top10samayal.wordpress.com/2009/02/17/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/

https://mykitchenpitch.wordpress.com/2008/03/29/vaazhaiththandu-mor-koottu/

 

இப்போதெல்லாம் படங்களில் top10samaiyal என்ற லேபிளுடனேனே வருகின்றன என்பது கூடுதல் ……

top10_morkuzhambu

http://top10samayal.wordpress.com/2009/03/06/morkuzhambu/
https://mykitchenpitch.wordpress.com/2008/04/01/mor-kuzhambu/

 

இன்றைக்குப் பார்த்த பதிவில் கொஞ்சம் பெரியதாகவே லேபிள்….

top10_potato fry

http://top10samayal.wordpress.com/2009/03/20/potato-fry/
https://mykitchenpitch.wordpress.com/2007/02/07/chinna-urulai-kizangu-roast/

வாழ்க!

பி.கு: பல ஆங்கிலப் பதிவுகளில் அறிவிக்காமலே என் படங்களைப் பார்த்ததால் தான் வலப்பக்கம் நிரந்தரக் குறிப்பு 1 சேர்த்தேன். அப்புறமும் தமிழ் (படிக்கத்) தெரியாதவர்கள் எடுத்துப் போட்டுக்கொள்கிறார்கள் என்று விட்டுவிடுவேன்.

ஃபீலிங்ஸ் என்று ஒரு புது ‘வகை’  ஆரம்பித்து இந்தப் பதிவைச் சேர்த்திருக்கிறேன். ஆனாலும் என் ஃபீலிங்ஸ் என்ன என்று எனக்கே தெரியவில்லை. 😦

தேவையான பொருள்கள்:

வெந்தயக் கீரை – 2 கப்
வெங்காயம் – 1
பயத்தம் பருப்பு – 3/4 கப் *
தக்காளி – 2 (பெரியது)
பச்சை மிளகாய் – 3
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
உப்பு
மஞ்சள் தூள்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்

தாளிக்க: எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

Methi_daal Missi_roti_(punjab)2

செய்முறை:

  • வெந்தயக் கீரையை தனித் தனி இலையாக உதிர்த்து, தண்ணீரில் அலசி, நீரை வடியவைத்துக் கொள்ளவும்.
  • பயத்தம் பருப்பை முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், இஞ்சியை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் தாளிக்கவும்.
  • அலசிய கீரையைச் சேர்த்து வதக்கினால் ஒரே நிமிடத்தில் சுண்டிவிடும்.
  • நறுக்கிய தக்காளி, அரைத்த விழுது சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.
  • உப்பு, மஞ்சள்தூள், அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி, நிதானமான தீயில் வேக வைக்கவும்.
  • தக்காளி வெந்ததும், வேக வைத்த பயத்தம் பருப்பு, கரம் மசாலா, அரை கப் தண்ணீர் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு, சேர்ந்தாற்போல் வந்ததும் இறக்கவும்.
  • சில துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து சூடாகப் பரிமாறலாம்.

* பயத்தம் பருப்பு அல்லது துவரம் பருப்பு அல்லது இரண்டும் சம அளவில் கலந்தும் உபயோகிக்கலாம்.

* எலுமிச்சைச் சாறுக்குப் பதில் வதக்கியதும் சிறிது புளித்தண்ணீர் சேர்த்தும் கொதிக்கவிடலாம் அல்லது 2 டீஸ்பூன் மாங்காய்த் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சாதம், சப்பாத்தி வகைகள்..

மல்லிகை மகள் மே 2008ல் பிரசுரமானது.

வெயில் காலங்களில் பயத்தம் பருப்பு, வெங்காயம், கீரைகளை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது. ரொட்டி, தால் வகையாக இவற்றைச் செய்து பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு – 3 கப்
கடலை மாவு – 1 கப்
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
ஓமம் – 1 டீஸ்பூன்
எள் – 2 டீஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 2 (பெரியது)
கொத்தமல்லித் தழை – 1 கப் (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் 
நெய் அல்லது வெண்ணெய்

Missi_roti_(punjab)1

செய்முறை:

  • இஞ்சி பச்சை மிளகாயை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம் கொத்தமல்லித் தழையை மிகப் பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • கோதுமை மாவு, கடலை மாவு, ஓமம், எள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு, பச்சை மிளகாய் அரைத்த விழுது, தயிர், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் எல்லாவற்றையும் நன்கு கலந்து கையால் அழுந்தப் பிசைந்து கொள்ளவும்.
  • தேவைப் பட்டால் மட்டும் இன்னும் சிறிது நீர் சேர்த்து கெட்டியான மாவாக அடித்துப் பிசைந்து ஒரு மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.
  • ஊறிய மாவை எடுத்து மீண்டும் அழுத்திப் பிசைந்து, எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • உருண்டைகளை மைதா மாவு தோய்த்து, சிறிய சப்பாத்திகளாக இட்டு, நடுவில் சிறிது நெய் அல்லது எண்ணெய் தடவி நான்காக மடித்து, முக்கோண வடிவில் வைத்துக் கொள்ளவும்.
  • மடித்து வைத்துள்ள சப்பாத்திகளை மேலும் மைதா மாவு தோய்த்து சப்பாத்திகளாக இட்டு அடுப்பில் தோசைக்கல்லில் போடவும்.
  • அடிப்பாகம் சிறிது காய்ந்து மேலே சிறிய சிறிய கொப்புளங்கள் வர ஆரம்பிக்கும்போது திருப்பிப் போடவும்.
  • மீண்டும் கொப்புளங்கள் வரும்போது ஃபுல்கா செய்வது மாதிரி ஒரு துணியால் அழுத்தி அழுத்தித் திருப்பிவிடலாம். விரும்புபவர்கள் இந்த நிலையில் மட்டும் சிறிது எண்ணெய் அல்லது நெய் விட்டு கரண்டியால் அழுத்திக் கொடுத்து சாதாரண சப்பாத்தி மாதிரியும் வேகவைக்கலாம்.
  • இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும். எண்ணெய் சேர்க்காமல் ஃபுல்காவாகச் செய்திருந்தால், கல்லிலிருந்து எடுத்ததும் மேல்புறம் சிறிது நெய் அல்லது வெண்ணெய் தடவிப் பரிமாறலாம்.

* மடித்து இடாமல் ஒற்றையாகவும் இட்டு எடுக்கலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

ஊறுகாய், தயிர்ப் பச்சடி, தால் வகைகள் இவற்றில் ஏதாவது ஒன்றோடு சாப்பிட சுவையாக இருக்கும். பிரயாணங்களுக்கு எடுத்துச் செல்ல ஏற்றது. சீக்கிரம் கெட்டுப் போகாது.

 

BF by Sreeja

நெருங்கும்போதும் அகப்படாமல் பறந்துபோகிறாய்…
நிழலைப் போல தொடரும் என்னை மறந்துபோகிறாய்…
உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே…
எனக்கும் கூட அடிமைக்கோலம் பிடிப்பதில்லையே…

 

“எல்லாரும் குளிச்சுப் பொறப்பட்டா கோதை தெளிச்சுப் புறப்பட்டாளாம்”னு எங்க ஊர்ல ஒரு சொலவடை உண்டு. ஒருவழியா நானும் எனக்குக் கொடுத்த பட்டர்ஃபிளை அவார்டை என் பதிவுல போட்டுட்டேன். பொதுவா இந்தத் தொடர் சுற்று விஷயங்கள் எப்பவுமே எனக்கு ஒத்துவராது. ஆனாலும் கல்யாணக்கமலா மேல நான் வெச்சிருக்கற மரியாதை இந்த விருதை விட அதிகம். அதனால மகிழ்ச்சியோடவே ஏத்துக்கறேன். அவார்டோட பேர் அதிகம் பிடிச்சிருந்ததுங்கற காரணத்தையும் மறுக்கமுடியாது. 🙂

வண்ணத்துப் பூச்சி, பட்டாம் பூச்சிங்கற மாதிரி தமிழ்ப் பேர்களைவிட பட்டர்ஃபிளைல ஜில்ப்பு அதிகமா இருக்க எஸ்பிபி, ஆஷாவோட குரல்ல மீரா பாடலும் (கேட்கலாம் / பார்க்கலாம்) ஒரு காரணம். முதல்தடவை கிட்டத்தட்ட 15, 16 வருஷங்களுக்கு முன்னால பார்க்கும்போது எப்படி இருந்ததோ அப்படியே இந்தப் பாடல் இப்பவும் பரவசமா, உற்சாகமா இருக்கு. 🙂

bf

 

நான் சீன்லயே இல்லாதபோதும் என்னை நினைவுவெச்சிருந்ததுக்கு நன்றி கல்யாணக்கமலா.  🙂

நான் தினம் கூகிள் ரீடர்ல படிக்கற பதிவுகளோட எண்ணிக்கை எனக்கே மலைப்பா இருக்கு. தவிர்க்கவே முடியாம நாளும் ஏறிக்கிட்டே போகுது பதிவுகளோட எண்ணிக்கை. அதிகமா பதிவுகளைப் படிக்கறதே சொந்த வலைப்பதிவை கவனிக்க முடியாம போகிற முக்கிய காரணமோன்னு கூட தோணுது. சிலதை மட்டுமாவது எடுத்துடலாம்னு நினைச்சு ஒரு ஓட்டு கண்ணை ஓட்டினா எதையும் எடுக்க மனசுவரலை. எல்லாமே விரும்பிப் படிக்கற பதிவுகளாத்தான் இருக்கு.

இத்தனை பதிவுகள்லேருந்து ஏதாவது 3 பதிவைச் சொல்றது சாத்தியமே இல்லை. ஆனாலும் coolest என்ற வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து பின்னூட்டத்துல கூட மாற்றுக்கருத்துகள்(சண்டைங்கறதோட polite form), காழ்ப்பு அரசியல்கள் இல்லாத பதிவுகளாச் சொல்லலாம்னு நினைக்கறேன். (ஹூம், என் இந்த சமையல்குறிப்பு பதிவுகூட அப்படித்தான் இருக்கணும்னு ஆசைப்பட்டேன். எங்க விடறாய்ங்க? 😛 )

துளசி:  சூரியனுக்கு டார்ச் அடிக்காம நேரா விஷயத்துக்கு வரேன். இவங்க எழுதாத விஷயமே கிடையாதுங்கற அளவுக்கு வெரைட்டி. இவங்க அன்றாடம் வாழறதை எல்லாம் பதியறாங்களா அல்லது பதியறதுக்காக வாழறாங்களான்னு இனம்பிரிக்க முடியாத அளவுக்கு அவங்க வீட்டு பெர்சனல் விஷயங்கள்லேருந்து, நியூசிலாந்து விசேஷங்கள் வரைக்கும் எதையும் மிஸ்பண்ண முடியாது. எனக்குத் தெரிஞ்சு பேச்சுத் தமிழ்லயே சக்கைபோடு போடமுடியும்னு முதன்முதலா இணையத்துல நிரூபிச்சவங்க. எல்லாருக்கும் நல்லவங்கன்னு பாராட்டா பலரும் மாற்றா சிலரும் சொன்னாலும், அது எவ்வளவு சிரமம்னு அனுபவிச்சா தெரியும். 

டுபுக்கு: “ஏதாவது ப்ளாக் இருந்தா சொல்லேன், ஆபீஸ்ல ஆணிபிடிங்கி நொந்துட்டேன்”, “மேனேஜர் சொட்டைத் தலையன் லீவு. இல்லாதபோது ஆணி பிடுங்கினா இன்னிக்கி சம்பளம் செரிக்காது. ஏதாவது lighter side blog இருந்தா சொல்லு’, “எண்டர்டெயினிங்கா எனக்கு ஏதாவது ஸ்டஃப் படிக்க அனுப்பு அல்லது மெசஞ்சர் ஓப்பன் பண்ணி சாட்’ட வா” மாதிரி வேண்டுகோள்கள், மிரட்டல்கள் விடற என்னோட ‘சுற்றமும் நட்பும்’ கூட்டத்தில் யாரும் இலக்கியத் தாகமோ, அறிவுப்பசியோ, இந்த உலகத்தை இப்பவே பொரட்டிப் போடணுங்கற செயல்வேகமோ இல்லாதவங்க. அவங்களுக்கு உடனடியா நான் கைகாட்டிவிடறது இவரோட பதிவுகளைத்தான். அதைவிட முக்கியம், முதல் பார்வையிலேயே பதிவுகள்னா ஏதோ குடுமிப்பிடி சண்டைங்கற எண்ணம் வந்து அவங்க வெளியேறிடக் கூடாதுக்கறதுல ரொம்ப கவனமா இருப்பேன். (கொஞ்சம் பழகிட்டா அப்புறம் அவங்களே வந்து ஐக்கியமாயிடுவாங்கன்னு வைங்க.) ‘the think tank’ ன்னு போட்டிருக்கு.  அவ்ளோ dense எல்லாம் வேணாம்னு முதல்ல மிரளுவாங்க எல்லாரும். முன்ன எல்லேராம் பதிவைச் சுட்டிகிட்டிருந்தேன். ஆனா அங்க சண்டை கட்டாயம் உண்டு. 🙂

பாடும் நிலா பாலு:  டிவி பார்க்கறதே குறைவு. அதுலயும் குடும்பம் மொத்தமும் சேர்ந்து பார்க்கற டிவி நிகழ்ச்சிகள் செய்திகள் தவிர்த்து ரொம்பவே குறைவு. தொடர்ந்து விடாம நாங்க பார்த்த நிகழ்ச்சி ஜெயா டிவி ‘என்னோடு பாட்டுப் பாடுங்கள்’ மட்டுமே. மற்ற டிவிக்களோட போட்டி நிகழ்ச்சிகள்ல இருக்கற செயற்கைத் தனங்கள், வலிஞ்சு அழறது, சண்டை போடறது மாதிரி பில்டப்புகள் இல்லாம அநியாய அடக்கத்தோட, அளவுக்கதிகமான தகவல்களோட, தவறுகளைச் சுட்டிக்காட்டும் தன்மைல கூட ஒருவருக்கும் மற்றவருக்கும் இடைல வித்தியாசம்பார்க்க முடியாத அளவுக்கு நடுநிலைமையோட எஸ்பிபி இந்த நிகழ்ச்சியைக் கொண்டுபோனவிதம் அருமையோ அருமை. கோவிந்துக்கு மாறாத மயக்கம் பிபிஸ்ரீநிவாஸ் மேல மட்டும்தான். இந்த முறை சென்னை புத்தகக் கண்காட்சிக்கு நான் போயிட, கோவிந்த் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் பொண்ணைக் கூட்டிகிட்டு பிபிஸ்ரீநிவாஸ் வீடுவரைக்கும்போய் (அவர் இல்லைன்னாலும் பரவாயில்லை) திரும்பிவந்தார். அப்படிப்பட்டவர்கூட சனிக்கிழமை எங்க போனாலும் இரவு 8 மணிக்குள்ள வீட்டுக்குள்ள திரும்பி வந்துடற மாதிரியோ அல்லது 9 மணிக்கு மேலதான் வெளிய கிளம்பற மாதிரியோதான் தன்/எங்க நிகழ்ச்சிகளை அமைச்சிருக்கோம். இப்ப இந்த நிகழ்ச்சில மாற்றம் வந்தது பெரிய இழப்பு. அந்த அளவுக்கு பாலுவோட தனி ஆளுமை எங்களைப் பாதிச்சிருக்கு. இவருடைய பாடல்களை சுந்தர் வலைப்பதிய ஆரம்பிச்சபோதுகூட இவ்வளவுதூரம் தொடர்ந்து வரும்னு எதிர்பார்க்கலை. 🙂 கோவை ரவியும், வற்றாயிருப்பு சுந்தரும் விடாம இந்தப் பதிவை உயிர்ப்போட, அரிய பாடல்களைக் கண்டுபிடிச்சு எடுத்துப் போடவும் ஒரு பாடகரா பாலு கொடுத்துவெச்சிருக்கார். புதுப்பதிவு வரும்போதெல்லாம் என்ன பாடல்னு முதல்ல திறந்துபார்க்கற ஆவலை இன்னும்கூட கட்டுப்படுத்த முடியலை.
===

இவர்கள் பட்டாம்பூச்சி பரிசு வாங்கியதன் அடையாளமாக‌ பட்டாம்பூச்சி லோகோவை தங்கள் வலைத்தளத்தில் போட்டுக்கொள்ளலாம்.

இவர்களும் பட்டாம்பூச்சி பட்டம் வாங்கியவர்கள் என்றமுறையில் சில விதிகளைக் கடைபிடிக்க வேண்டும்.

1. இந்த பட்டாம்பூச்சி லோகோ உங்கள் பதிவுப் பக்கத்தில் இருக்க வேண்டும்.

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்புக் கொடுக்க வேண்டும்.

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்புத் தரவேண்டும்.

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியைத் தெரிவிக்க வேண்டும்.

அவ்ளோதான்! 🙂