செப்ரெம்பர் 2007


பஜ்ஜி குறித்த முந்தைய பதிவு

தேவையான பொருள்கள்:

கடலைப் பருப்பு – 1 கப்
பச்சரிசி – 1/3 கப்
துவரம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
காய்ந்த மிளகாய் – 5 அல்லது 6
பெருங்காயம்
எண்ணெய்
உப்பு – தேவையான அளவு.

பஜ்ஜி மிளகாய் (அதிகக் காரமில்லாத பெரிய சைஸ் மிளகாய்)

milagaai bajji 1

செய்முறை:

  • கடலைப் பருப்பு, துவரம் பருப்பு அரிசியைச் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • ஊறியதும் பெருங்காயம், காய்ந்த மிளகாய், சேர்த்து மிக மென்மையாக இட்லிமாவு பதத்திற்கு அரைக்கவும். கிரைண்டரில் அரைத்தால் நலம். மிக்ஸியும் பரவாயில்லை.
  • அரைத்து எடுப்பதற்கு முன் உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • மிளகாய்களை ஓர் ஊசியால் ஆங்காங்கே துளைகள் செய்து, நான்கு மணி நேரம் உப்புத் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடித்து எடுத்து வைக்கவும். இப்படிச் செய்வதால் மிளகாய் அதிகம் காராமல் இருக்கும்.
  • வழக்கமான முறையில் பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு, இரண்டு பக்கமும் பொரிந்து பஜ்ஜி உப்பி வந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும்.

* தோய்த்திருக்கும் மேல்மாவு அடர்த்தியாக இல்லாமல், மெலிதாக மூடியிருந்தால் பாதி வேகும்போதே வெளியே எடுத்துவிடவும். அடுத்த தவணை பஜ்ஜியை எண்ணெயில் போட்டுவிட்டு, இவை ஆறியதும் மீண்டும் மாவில் தோய்த்து எண்ணெயில் நன்றாகப் பொரித்து எடுக்கவும். இப்படிச் செய்வதால் கனமான பஜ்ஜி கிடைக்கும்.

ஸ்டஃப்ட் மிளகாய்:

milagaai bajji 2

பூரணம் செய்ய: (ஏதாவது ஒன்று)

1. புளி, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயம்
2. உருளைக் கிழங்கு, வெங்காயம், சீரகப் பொடி, கொத்தமல்லித் தழை, எலுமிச்சைச் சாறு
2. கொத்தமல்லிச் சட்னி (காரம் இல்லாமல்)
3. வெங்காயச் சட்னி (காரம் இல்லாமல்)
4. புதினாச் சட்னி (காரமில்லாமல்)

milagaai bajji 3

  • மிளகாய்களை ஜாக்கிரதையாக கத்தியால் காம்புக்குக் கீழிலிருந்து அடிக்கு முன்புவரை நடுவில் ஒரு கீறல் போடவும்.
  • உள்விதை, தண்டை நீக்கிவிடவும்.
  • நீர்த்த புளித் தண்ணீரைக் கொதிக்கவைத்து. அதில் மிளகாய்களைப் போட்டு மூடிவைக்கவும்.
  • ஒரு நிமிடம் கழித்து நீரை வடித்துவிட்டால் காரம் போயிருக்கும்.
  • சிறிது கடலை மாவில் உப்பு, ஓமம் அல்லது சீரகம் கலந்து உள்ளே அடைக்கலாம். அல்லது கடலை மாவிலேயே புளித் தண்ணீர், உப்பு, ஓமம் (அல்லது சீரகம்) சேர்த்துக் கலந்து உள்ளே அடைக்கலாம். உள்ளேயும் கடலை மாவு விரும்பாதவர்கள், வேகவைத்த உருளைக் கிழங்கை, மசித்து, மெலிதாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, சீரக்ப் பொடி, உப்பு கலந்து ஸ்டஃப் செய்யலாம். அல்லது காரம் இல்லாத/ குறைந்த காரமுள்ள வெங்காயச் சட்னி, கொத்தமல்லிச் சட்னி அல்லது புதினாச் சட்னியை உள்ளே சிறிது தடவியும் வைக்கலாம்.

பிரட்:

பிரட் ஸ்லைஸ்களை ஓரம் நீக்கி, அதன் அளவைப் பொருத்து நான்காக அல்லது இரண்டாக வெட்டிக் கொள்ளவும். ப்ரட்டில் செய்யும் போது கொத்தமல்லி அல்லது புதினா சட்னியை ஒரு பக்கத்தில் தடவி, இன்னொரு ப்ரட்டை வைத்து மூடி மாவில் தோய்த்து எண்ணையில் போடவும்.
 

குடமிளகாய்:
 
குடமிளகாயை ஒன்றரை அங்குலத் துண்டுகளாக நறுக்கி, அதன் உள்பகுதியில் ஏதாவது காரமில்லாத சட்னியைத் தடவி, மாவில் தோய்த்துப் போடலாம்.
 

அப்பளம்:

அப்பளங்களை 4 அல்லது 6 பாகமாக உடைத்துக் கொள்ளவும். மசாலா அப்பளமாக இருந்தால் அப்படியே இரண்டு துண்டுகளை சேர்த்து மாவில் தோய்த்துப் போடலாம். சாதா அப்பளமாக இருந்தால் ஏதாவது சட்னி அல்லது நெய்யில் இட்லி மிளகாய்ப் பொடியைக் குழைத்து, ஒரு அப்பளத் துண்டில் தடவி, மற்றொரு துண்டால் மூடி, மாவில் தோய்க்கவும். இது எங்கள் வீட்டில் அதிகம் பேர் வாங்கிய பஜ்ஜி.
 

பனீர்:

பனீர் துண்டுகளை கெட்டியான சட்னியில் பிரட்டி, மாவில் தோய்த்துப் போடலாம். என்னைப் பொருத்த வரை கொத்தமல்லிச் சட்னி அதிகம் பொருந்துகிறது.
 

பேபி கார்ன்:

பேபி கார்னை உப்புக் கலந்த கொதிக்கும் நீரில் பத்து நிமிடங்கள் போட்டு வைத்து நீரை வடிக்கவும். மேலாக பூரணம் செய்ய 1ல் சொல்லியிருப்பதை மெலிதாகத் தடவி, மாவில் தோய்த்துப் போடலாம். அல்லது எலுமிச்சை மூடியை மேலாகத் தேய்த்து, அதன்மேல் மிளகாய்த் தூள் தூவி, பின்னர் மாவில் தோய்த்துப் போடலாம்.பேபி கார்னிலும் மிகச் சிறிய அளவு இருப்பவை மட்டுமே ஏற்றதாக இருக்கிறது. அல்லது கொஞ்சம் பெரிதாக இருந்தால் நீளவாட்டில் குறுக்கே வெட்டி உபயோகிக்கலாம். 
 

கோஸ்:

கோஸ் இலைகளை தனித் தனியாகப் பிரித்து, தண்டுப் பகுதியை நீக்கி, அந்த இடத்தில் இலையை இரண்டாக்கி, ஒவ்வொன்றிலும் சிறிது கொத்தமல்லிச் சட்னியை தடவி மடித்து, மாவில் தோய்த்துப் போடலாம். இது உண்மையிலே எதிர்பாராத அளவு சுவையாக இருக்கிறது.
 

காளான்:

சிப்பிக் காளானை அப்படியே மாவில் தோய்த்து பஜ்ஜி போடலாம் என்று சொல்கிறார்கள். நான் செய்ததில்லை.
 

வாழைப்பழம்:

வாழைப்பழத்தை வட்ட வட்டமாக நறுக்கி பஜ்ஜி செய்கிறார்கள். நான் என்றுமே செய்வதாக இல்லை. விரும்புபவர்கள் முயற்சித்துப் பார்க்கவும்.
 

* மேலே சொல்லியிருப்பவைகளை, சின்னக் குழந்தைகளுக்கு எந்தச் சட்னியும் வைக்காமலும் செய்து கொடுக்கலாம். பஜ்ஜியின் காரமே அவர்களுக்கு அதிகமாக இருக்கும்.

-0-

காலிஃப்ளவர் பஜ்ஜி

தேவையான பொருள்கள்:

காலிஃப்ளவர் – 1
கடலை மாவு –  1/2 கப்
மைதா மாவு – 1/2 கப்
அரிசி மாவு – 1/4 கப்
டால்டா – 1 டீஸ்பூன்
ஓமம் –  1/2 டீஸ்பூன் (விரும்பினால்)
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்

cauliflower bajji

 செய்முறை:

  • காலிஃப்ளவர் பூவை காம்புடன் பெரிய பெரிய கிளையாக எடுத்துக் கொள்ளவும்.
  • நீரைக் கொதிக்க வைத்த உப்பு சேர்த்து பூக்களை அதில் போட்டு மேலும் 2 நிமிடன்கள் கொதிக்கவிட்டு 5 நிமிடங்களுக்கு மூடி வைத்து நீரை வடிகட்டவும்.
  • கடலை மாவு, மைதா, அரிசி மாவு, உப்பு, டால்டா, மிளகாய்த் தூள் கலந்து முதலில் கையால் நன்கு கலந்து பின்பு தேவையான நீர் விட்டு இட்லிமாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்துக் காய்ந்ததும், பூக்களை மாவில் தோய்த்து பொரித்தெடுக்கவும்.

* வழக்கமான பஜ்ஜி மாவிலும் இதைச் செய்யலாம்.

* சின்னச் சின்ன பூக்களாக உதிர்த்து, மாவில் கலந்து பக்கோடா மாதிரி கொத்தாகவும் போடலாம். ஆனால் பக்கோடாவிற்கு இருப்பது போல் பஜ்ஜி மாவு இறுக்கமாக இல்லாமல் தளர்வாகத் தான் இருக்க வேண்டும்.

* பஜ்ஜிக்கு நறுக்கி வைத்து மிஞ்சிய கலவையான காய்களை அப்படியே இரவு, புளியைக் கரைத்து குழம்பு வைக்கும்போது காயாகப் போட்டு, மிஞ்சிய கடலை மாவுக் கலவையைக் குழம்பிலேயே கரைத்து விட்டதில் வந்த கதம்பப் புளிக் குழம்பு, எந்த சமையல் குறிப்புக்கும் அடங்காத அபார சுவை; அவரவர் சமையலறைக்கே பிரத்யேகமான, குறிப்பாகச் சொல்ல முடியாத சில சமையலில் இதுவும் அடங்கும்.

பஜ்ஜி கட்டுரைத் தொடரின் இன்னொரு பார்வை…

தமிழ்நாட்டில் பெண்பார்க்கச் செல்பவர்களுக்குக் கொடுக்கப் படும் முக்கிய உணவு. : ) எப்பொழுதிலிருந்து அந்த இடத்தை இது பிடித்தது, ஏன் அவர்களுக்கு பஜ்ஜியை தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை மக்கள் வந்ததும் வேகமாகத் தயாரிக்க முடிவதும், ஒரே வகையில் வெரைட்டி காண்பிக்க முடிவதும் காரணமாக இருக்கலாம். தமிழ்நாட்டின் நடைபாதைத் தள்ளுவண்டிகளில் அன்றாடம் அதிகம் விற்பனை ஆவதும் இதுவாகத் தான் இருக்கும்.

தேவையான பொருள்கள்:

கடலைப் பருப்பு – 1 கப்
பச்சரிசி – 1/3 கப்
துவரம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
காய்ந்த மிளகாய் – 4 அல்லது 5
பெருங்காயம்
எண்ணெய்
உப்பு – தேவையான அளவு.

கத்திரிக்காய், வாழைக்காய், வெங்காயம், உருளைக் கிழங்கு, சௌசௌ போன்ற காய்கறிகள்….

bajji 1

செய்முறை:

  • கடலைப் பருப்பு, துவரம் பருப்பு அரிசியைச் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • ஊறியதும் பெருங்காயம், காய்ந்த மிளகாய், சேர்த்து மிக மென்மையாக இட்லிமாவு பதத்திற்கு அரைக்கவும். கிரைண்டரில் அரைத்தால் நலம். மிக்ஸியும் பரவாயில்லை.
  • அரைத்து எடுப்பதற்கு முன் உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • காய்கறிகளை தயாராக நறுக்கிக் கொள்ளவும். கத்திரிக்காய், உருளைக் கிழங்கு, வெங்காயம், சௌசௌ போன்ற உருளையான காய்களை மெல்லிய வட்டமாக நறுக்கவும். வாழைக்காயை இரண்டாக வெட்டி, அகலமான இரண்டு பக்கங்களில் மட்டும் தோல்சீவி, நீளவாக்கில இரண்டு பக்கமும் தோலோடு மெலிதாக நறுக்கவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து நன்கு சூடாக்கவும். பஜ்ஜிக்கு எண்ணெய் குறைவாகக் காய்ந்திருந்தால் சரியாக வேகாமல் எண்ணெயைக் குடித்து சவசவவென்றிருக்கும். அதிகம் காய்ந்திருந்தால் மேலாகக் கருகி, உள்ளே காய் வேகாமல் இருந்துவிடும். சரியான பதத்தில் எண்ணெய் சுட்டதும் அடுப்பை நிதானமான சூட்டில் வைக்கவும்.
  • நறுக்கித் தயாராக வைத்திருக்கும் காய்கறிகளை ஒவ்வொன்றாக மாவில் தோய்த்து, எண்ணெயில் போடவும்.
  • இரண்டு பக்கமும் பொன்னிறமாகப் பொரிந்து பஜ்ஜி உப்பிவந்ததும் எண்ணெயை வடித்து வெளியே எடுக்கவும். 

bajji 2 

*  வெங்காயம், சௌசௌ போன்ற காய்கள் கொஞ்சம் இனிப்பாக இருப்பது பிடிக்கவில்லையென்றால் குடமிளகாயை வட்டமாக நறுக்கி, அதையும் அவைகளோடு சேர்த்து தோய்த்துப் போடலாம்.

* தோய்ந்திருக்கும் மாவு அடர்த்தியாக இல்லாமல், மெலிதாக மூடியிருந்தால் பாதி வேகும்போதே வெளியே எடுத்துவிடவும். அடுத்த தவணை பஜ்ஜியை எண்ணெயில் போட்டு எடுத்துவிட்டு, இவை ஆறியதும் மீண்டும் மாவில் தோய்த்து எண்ணெயில் நன்றாகப் பொரித்து எடுக்கவும். முக்கியமாக அப்பளம் போன்றவைகளுக்கு இந்தப் பிரச்சினை வரலாம்.

* வீட்டிலேயே பருப்புகளை ஊறவைத்து அரைப்பது மிகச் சிறந்த முறை. ஊறவைத்து செய்ய நேரமில்லை என்றால் கடலைப் பருப்பு, துவரம் பருப்பை வாணலியில் வறுத்து 5 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து, மிக்சியில் நைசாக அரைத்து, அரிசி மாவு கலந்து செய்யலாம்.

* பின்வருகிற அளவுகளில் மொத்தமாக மிஷினிலும் அரைத்துவைத்துக் கொள்ளலாம். அவ்வப்போது தேவையான அளவு மாவை உப்பு பெருங்காயம் சேர்த்துக் கரைத்துச் செய்யலாம்.

1. கடலைப் பருப்பு – 3 கப், பச்சரிசி – 1/2 கப், காய்ந்த மிளகாய் – 12

2. பச்சரிசி 1 1/2 கப், துவரம் பருப்பு – 1 கப், கடலைப் பருப்பு – 1 கப், உளுத்தம் பருப்பு – 1/2 கப், காய்ந்த மிளகாய் – 12

* சட்டென பஜ்ஜி தயாரிக்க கடலை மாவு ஒரு கப், அரிசி மாவு ஒரு டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கரைத்தும் செய்யலாம். அதிகம் பேர் அப்படித் தான் செய்கிறார்கள்.

* பஜ்ஜி கரகரப்பாக இருக்க சமையல் சோடா சேர்ப்பதை விட இரண்டு டீஸ்பூன் டால்டா அல்லது 1 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃளோர் சேர்த்துக் கொள்ளலாம்.

* கரகரப்பாக இல்லாமல் மெத்தென்று இருக்க மைதா மாவு 2 டேபிள்ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம். இது ஆறிய பின்னும் சுவையாக இருக்கும்.

* இட்லி அல்லது தோசை மாவு இருந்தாலும் ஒரு கரண்டி கலந்து கொள்ளலாம்.

* பஜ்ஜி கடையில் செய்வதைப் போல் நிறமாக இருக்க விரும்புபவர்கள் கலர் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது காஷ்மீர் மிளகாய்த் தூள் சேர்த்து உபயோகித்தாலும் அடர் சிவப்பாக இருக்கும். என்னுடையது அதுவே.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தேங்காய்ச் சட்னி…

நல்ல மழை…

சுடச் சுட செய்து தட்டில் எடுத்து வந்து கையில் கொடுக்க அம்மா அல்லது மாமியார் [ஒருவேளை அவர்களைக் கேட்டால் மருமகள் என்று சொல்லலாம். :)]…

“போரடிக்குதுன்னு நீ சொன்னியேன்னு தான் வேலையை எல்லாம் போட்டுட்டு சீக்கிரமே வந்தேன்” என்று (பொய்) சொல்லிக் கொண்டு எதிர்பாராத நாளில் மாலையிலேயே கிரிக்கெட் மேட்ச் பார்க்க வரும் கணவன்…

பேசுவதற்கு சூடான விஷயங்கள்..

“C6 block கட்டிடமே என்னமோ இடிஞ்சு விழுந்துடுச்சுன்றாங்க. காலனியே அங்க இருக்கு, நீ பஜ்ஜி போட்டுகிட்டிருக்க?”

“எதுக்கு இவ்ளோ அதிர்ச்சி? ரெண்டு வருஷமா அதைத் தானே நான் அலறிகிட்டிருக்கேன். கன்ஸ்ட்ரக்ஷன் படு கேவலம். எல்லாரும் சாப்பிட்டுட்டாங்கன்னு நான் சொல்லும்போதெல்லாம் ஆளாளுக்கு வானமாமலை ஜீயரைச் சுத்தி நிக்கிற அடிப்பொடிகள் மாதிரி உஸ் உஸ்னு என் வாயை அடைச்சாங்க. இன்னிக்கு என்னவோ நடக்க முடியாதது நடந்த மாதிரி…. எனக்கு அதிர்ச்சியெல்லாம் இல்லை. நல்லவேளை, யாருக்கும் ஒன்னும் ஆகலை, வீட்டுக்குள்ள இருந்திருக்காங்க. இதுக்கு மேல இதுக்கெல்லாம் என்னால ரியாக்ஷனும் காமிக்க முடியாது! நான் அங்க ஒன்னும் சொல்லாம வந்ததுக்கே எனக்கு நன்றி சொல்லுங்க. தேவை இல்லைன்னு தான் உங்களுக்கும் ஃபோன்ல சொல்லலை.”

“நீ போய்ப் பாக்கலையா?”

“பின்ன பார்க்காம? ஃபர்ஸ்ட் ஃப்ளோர் வாசல் கதவுலேருந்து மாடிப்படி வரைக்கும் முழுக் காரிடரும் மொத்தமா விழுந்திருக்கு. லட்சக்கணக்குல காலனில திருட்டுப் போனப்ப ஒரு FIR ஃபைல் பண்ண என்ன பிகு செஞ்சாங்க போலீஸ் ஸ்டேஷன்ல, இப்ப ஊருக்கு முன்னாடி வந்து நிக்கறாங்க. நான் போறதுக்குள்ளயே Fire Brigades, Police, Media… எல்லாரும் வந்தாச்சு. ஒரு மாசத்துக்குள்ள காலி செய்யணுமாம். இல்லைன்னா சீல் வெப்போம்னு ஆர்டர்..”

“உனக்கு பயமா இல்லையா இந்த பில்டிங்ல இருக்க? கூலா பஜ்ஜி சாப்பிடற, அலட்டிக்காம கம்ப்யூட்டர்ல வேற வந்து உக்கார்ற?”

“இல்லையே சூடாத் தான் பஜ்ஜி சாப்பிடறேன். உங்களுக்கு பயமா இருந்தா ப்ளாட்ஃபார்ம்ல போய்ப் படுங்க. நானெல்லாம் தமிழச்சி. உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்…” ஐயோ!! மேற்குப் பதிப்பகம் கிட்டேயிருந்து பின்னூட்டம் வந்திருக்கா?? தலை சுத்துதே..!!!

மிளகாய் பஜ்ஜி இன்னபிற….

பஜ்ஜி குறித்த சுவாரசியமான கட்டுரைத் தொடர்…

ஜவ்வரிசி, ஒரு வகை பனைமரத் தண்டின் உட்புறத்திலிருந்து தயாரிக்கப் படும் பொருள். உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் நல்லது. எயிட்ஸ் நோயாளிகளுக்கு வற்புறுத்தப் படும் உணவாகும். நாவிற்கு ருசியாகவும் உடலுக்குக் குளிர்ச்சியையும் தரும் இது நீரிழிவு, இரத்த அழுத்தம் உள்ள முதியோருக்கும் ஏற்ற சத்துணவு என்றும் சொல்கிறார்கள். ஆனால் ஜவ்வரிசிக்கு உடலிலிருந்து நீரைப் பிரிக்கும் தன்மை அதிகம் உள்ளதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல என்ற மாறுபட்ட கருத்தும் உலவுகிறது. எனக்குச் சரியாகத் தெரியவில்லை.

javvarisi (sabudhana)

கடைகளில் இரண்டு வகை ஜவ்வரிசி கிடைக்கும்; மாவு ஜவ்வரிசி, நைலான் ஜவ்வரிசி. இவை வெவ்வேறு அளவுகளிலும் கிடைக்கும். மிகச் சிறிய அல்லது மிகப் பெரிய ஜவ்வரிசியை விட மீடியம் சைஸ் ஜவ்வரிசியே உப்புமா செய்ய சரியான அளவாக இருக்கும்.

-0-

1.
தேவையான பொருள்கள்:

ஜவ்வரிசி (சுமாரான அளவு) – 1 கப்
தண்ணீர் – 1 கப்
நிலக்கடலை – 1/4 கப்
பச்சை மிளகாய் – 3 அல்லது 4
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்

தாளிக்க – கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

javvarisi (sabudhana) uppumaa

செய்முறை:

  • ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் மட்டும் தண்ணீரில் ஊறவைக்கவும்.
  • நிலக்கடலையை தோல்நீக்கி, ரவையை விட பெரிய அளவில் உடைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் டீஸ்பூன் எண்ணெய் வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து உடைத்து வைத்திருக்கும் நிலக்கடலையைச் சேர்த்து வதக்கவும்.
  • ஊறவைத்த ஜவ்வரிசியும் உப்பும் சேர்த்து அடிப் பிடிக்காமல் ஐந்து நிமிடங்களுக்கு வதக்கி, அடுப்பை அணைத்து மேலும் ஐந்து நிமிடங்களுக்கு நன்கு மூடி வைக்கவும்.
  • திறந்ததும், எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறலாம்.

*  இது முன்பொரு காலத்தில் நடிகர் குமரிமுத்து தொலைக்காட்சியில் ‘நட்சத்திர சமையல்’ நிகழ்ச்சியில் செய்து காண்பித்தது.

* இந்த முறையில் செய்வதால் உப்புமா வாணலியில் ஒட்டாமல் வரும்; நாம் விட்ட சிறிதளவு எண்ணெயையும் வெளியேற்றி பார்ப்பதற்கு அதிக எண்ணெய் விட்டது போல் தோன்றும். ஆனால் தன்னளவில் உதிர் உதிராக இல்லாமல் கொஞ்சம் சேர்ந்தாற்போல் தான் இருக்கும். விரும்பினால் நான் -ஸ்டிக் வாணலியில் அதிக எண்ணை விட்டு நிதானமாக ஜவ்வரிசி translucent ஆகும்வரை வதக்கினால் ஒட்டாத உப்புமா கிடைக்கும். ஆனால் பிரிந்துவிட்ட எண்ணெயை சகிக்கவே முடியாது. [“கொலையும் செய்வாள் பத்தினின்னு இதைத் தான் சொல்லியிருப்பாங்களோ” –  கோவிந்த் :-(]

* பொதுவாக பெரிய சைஸ் ஜவ்வரிசியை வடாம் வற்றல் வகைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். சுமாரான, அல்லது சிறிய மெல்லிய ஜவ்வரிசியே உப்புமாவிற்கு ஏற்றது.

* ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீரைக் குறைத்துக் கொண்டு அதைத் தயிராகச் சேர்த்து ஊறவைத்தால் அதிகம் ஒட்டாமலும் சுவையாகவும் இருக்கும். இதற்கு எலுமிச்சச் சாறு பிழியத் தேவை இல்லை. ஆனால் அநேகமாக இந்த உப்புமாவை வட இந்தியர்கள் விரத நாள்களுக்கே உண்பதால் தயிர் சேர்த்துக் கொள்வதில்லை.

* வறுத்த வேர்க்கடலையாக இருந்தால் இறுதியில் சேர்த்து வதக்கினால் போதுமானது; தாளிக்கும்போது சேர்க்கத் தேவை இல்லை.

2.
தேவையான பொருள்கள்:

ஜவ்வரிசி (சுமாரான அளவு) – 1 கப்
தண்ணீர் – 1 கப்
கடலை மாவு –  2 டீஸ்பூன்
நிலக்கடலை – 1/4 கப்
உருளைக் கிழங்கு – 1
பச்சை மிளகாய் – 4
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்

தாளிக்க – கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

javvarisi (sabudhana) aaloo  uppumaa

செய்முறை:

  • ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் மட்டும் தண்ணீரில் ஊறவைக்கவும்.
  • நிலக்கடலையை தோல்நீக்கி, ரவையை விட பெரிய அளவில் உடைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் டீஸ்பூன் எண்ணெய் வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளிக்கவும். விரும்பினால் குடமிளகாயும் சேர்த்துக் கொள்ளலாம். மணமாக இருக்கும். நான் சேர்த்திருக்கிறேன்.
  • உருளைக் கிழங்கை வேக வைத்து துண்டுகளாக நறுக்கியோ, அல்லது வேக வைக்காமல் (தோலோடு அல்லது தோல் நீக்கி) பொடிப் பொடியாக நறுக்கியோ சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.
  • அந்த இரண்டு நிமிடங்களுக்கு இடையில் ஊறவைத்த ஜவ்வரிசியில் தண்ணீர் இருந்தால் ஒட்ட வடித்து விட்டு, கடலை மாவும் உப்பும் சேர்த்துப் பிசிறி, வாணலியில் சேர்த்து, கைவிடாமல் அடிப் பிடிக்காமல் ஐந்து நிமிடங்களுக்கு வதக்கவும்.
  • இறக்கும் முன் உடைத்து வைத்திருக்கும் நிலக்கடலையைச் சேர்த்து வதக்கவும்.
  • அடுப்பை அணைத்து மேலும் ஐந்து நிமிடங்களுக்கு நன்கு மூடி வைக்கவும்.
  • திறந்ததும், எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறலாம்.

* இந்த முறையில் எந்த வகை ஜவ்வரிசியிலும் உப்புமா நிச்சயம் உதிர் உதிராக இருக்கும். முதல் முறை செய்யத் தயங்குபவர்கள் நான்-ஸ்டிக் வாணலியில் செய்யலாம்.

* விரத உணவாக இல்லை என்றால் வெங்காயமும் சேர்த்துக் கொள்ளலாம்.

3. (பருப்பு சேர்த்து)

தேவையான பொருள்கள்:

ஜவ்வரிசி – 1 கப்
தண்ணீர் – 1 கப்
அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு – 1/3 கப்
நிலக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – 1 (விரும்பினால்)
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 5 அல்லது 5
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க – கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:

  • ஜவ்வரிசியை 2 மணி நேரத்துக்கு மிகாமல்  தண்ணீரில்  ஊறவைக்கவும்.
  • ஊறிய ஜவ்வரிசியை நீரை வடித்து, சிறிதளவு எண்ணெயும், அரிசி மாவும் கலந்து உதிர்த்துவிடவும்.
  • பாசிப்பருப்பை அரை வேக்காடு மட்டும் வேகவைத்து, நீரை ஒட்ட வடித்துக் கொள்ளவும்.
  • நிலக்கடலையை தோல்நீக்கி, வறுத்து, ரவையை விட பெரிய அளவில் உடைத்துக் கொள்ளவும்.
  • அடிப்பில் வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து, நறுக்கிய வெங்காயம், சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
  • உதிர்த்த ஜவ்வரிசியை சேர்த்து குறைந்த தீயில் கைவிடாமல் ஆனால் மென்மையாக, ஜவ்வரிசி கண்ணாடி மாதிரி ஆகும்வரை கிளறவும்.
  • இறுதியில் உப்பு, பயத்தம் பருப்பைச் சேர்த்து சிறிது வதக்கி, நிலக்கடலைத் துருவலையும் தூவி இறக்கவும்.
  • எலுமிச்சைச் சாறு பிழிந்து, தேங்காய்த் துருவல், கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.

* இதில் பாசிப்பருப்புக்கு பதில் முளைகட்டிய பச்சைப் பயறு சேர்த்தும் செய்யலாம்.

4. (காய்கறி சேர்த்து ‘கிச்சடி’ வகை)

தேவையான பொருள்கள்:

ஜவ்வரிசி – 1 கப்
கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய்
உப்பு
கொத்தமல்லித் தழை

காய்கறி:
இஞ்சி
பச்சை மிளகாய்
வெங்காயம் (விரும்பினால்)
கேரட்
பீன்ஸ்
பச்சைப் பட்டாணி
கோஸ்
காலிஃப்ளவர்
குடமிளகாய்

தாளிக்க –  எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை.

javvarisi (sabudhana)  vegetable uppumaa

செய்முறை:

  • நன்றாகக் கொதிக்கும் நீரை, ஜவ்வரிசி மூழ்கும்வரை ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
  • ஊறிய ஜவ்வரிசியை ஒட்டப் பிழிந்து, கடலை மாவு, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். ஜவ்வரிசியை அடுப்பில் இடுவதற்கும் முன் மட்டுமே பிழிந்து கடலைமாவு, உப்போடு சேர்க்க வேண்டும்.
  • அடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் பொன்னிறமானதும், நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை அதிகமான தீயில் கைவிடாமல் வதக்கவும். (அல்லது சிறிய தீயில் சிறிது தண்ணீர் தெளித்து, மூடிவைத்தும் வேக வைக்கலாம்.)
  • காய்கறிகள் 2 நிமிடம் வதங்கியதும், ஜவ்வரிசிக் கலவையைச் சேர்த்து, ஒட்டாமல் கிளறி இறக்கவும்.
  • எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்து, சூடாகச் சாப்பிடவும்.

* இந்த வகை உப்புமாவும் நிச்சயம் உதிர் உதிராக வரும். ஆறினாலும் சுவையாக இருக்கும்.

*

javvarisi (sabudhana) vegetable kichchadi

இத்துடன் இரண்டு தக்காளிகளும், ஒரு பச்சை மிளகாய், கால் கப் தண்ணீர் சேர்த்துக் கிளறினால் சுவையான கிச்சடி கிடைக்கும். இதில் எலுமிச்சைச் சாறு தேவை இல்லை. பச்சைப் பட்டாணிக்குப் பதில் கொத்துக்கடலை அல்லது பச்சைப் பயறும் உபயோகிக்கலாம். இது ஏனோ ஓரளவு முழுமையான உணவு மாதிரி எனக்கு எண்ணம். அநேகமாக இந்த முறையிலேயே செய்கிறேன். இதில் ஜவ்வரிசி தனித் தனியாக இருக்கும். ஆனால் உப்புமா உதிராக இல்லாமல் கிச்சடி மாதிரி சேர்ந்தாற்போல் தான் இருக்கும். காய்கறிகளோடு அல்லது காய் இல்லாமல் தனியாக நறுக்கிய கீரை சேர்த்தும் செய்யலாம். விரும்புபவர்கள் ஏதாவது மசாலாப் பவுடர் சேர்த்துக் கொள்ளலாம். நான் சேர்ப்பதில்லை.

==

* மைக்ரோவேவ் அவனில் இந்த உப்புமாவை சுலபமாகச் செய்யலாம். ஹையில் ஒரு நிமிடம் வைத்து, வெளியே எடுத்து இரண்டு நிமிடம் கழித்துக் கிளறி மீண்டும் ஒரு நிமிடம் வைத்தால் வெந்துவிடும். ஆனால் அதற்கும் தண்ணீர் மற்றும் ஊறும் நேரம் குறித்த கவனம் தேவை.

* உப்புமா குழைந்து போவதற்கு அதிலிருக்கும் அதிக அளவு தண்ணீரே காரணம். நடுவான அளவு இருந்தால் ஒரு கப் ஜவ்வரிசிக்கு ஒரு கப் தண்ணீரும், பெரிய அளவிலான ஜவ்வரிசிக்கு ஒரு கப்பிற்கு ஒன்றரை கப் தண்ணீரும் சரியாக இருக்கும். சில சமயம் தரத்தைப் பொருத்து இது மாறலாம். குழைந்தால் அடுத்த முறை இன்னும் கொஞ்சம் தண்ணீரைக் குறைவாக எடுத்து ஊறவைக்கவும்.

* பொதுவாக சின்ன ஜவ்வரிசியை அலசியதும் நீரை வடித்து உடனே உபயோகிக்கலாம். சுமாரான அளவுள்ள ஜவ்வரிசிக்கு ஒரு மணி நேரம் மட்டும் ஊறவைத்தும், பெரிய அளவு ஜவ்வரிசிக்கு குறைந்தது இரண்டு மணி நேரம் ஊறவைத்தும் செய்ய வேண்டும். நைலான் ஜவ்வரிசியாக இருந்தால் அதைவிட அதிகத் தண்ணீர், அதிக நேரம் ஊறுவது குறித்து கவலைப்படாமால் செய்யலாம். இது எப்படிச் செய்தாலும் ஒட்டாமல் உதிராகத் தான் இருக்கும். தயங்குபவர்கள் நைலான் ஜவ்வரிசியே முதலில் உபயோகித்துச் செய்து பார்க்கவும்.

* எப்படி இருந்தாலும் ஊறிய ஜவ்வரிசியை நீர் இருந்தால் ஒட்ட வடிகட்டி(அநேகமாக இருக்காது), சமைப்பதற்கு முன் சில துளிகள் எண்ணெய் கலந்தால் ஒட்டாமல் வந்துவிடும். கடலை மாவு அல்லது அரிசி மாவு சேர்த்து உதிர்த்துக் கொள்வது மேலும் சுலபமாக்கும்.

* இவ்வளவு மெனக்கெட்டும் உப்புமா, குழைந்து போகக் காரணம், மாவு ஜவ்வரிசி சில பல சமயம் பாக்கெட்டிலேயே உடைந்து தூளாகி, அந்த ஜவ்வரிசி மாவும் கலந்திருக்க வேண்டும். எனவே ஊறவைப்பதற்கு முன் சலித்து, முழு ஜவ்வரிசியாக மட்டும் எடுத்துக் கொள்வது நல்லது. (சலித்துக் கிடைத்த மாவை வீணாக்க வேண்டாம். காலையில் ஓட்ஸ் கஞ்சி போடும்போது சேர்த்துக் கொள்வேன். வடை, போண்டா மாதிரி மாவுகளிலும் சேர்க்கலாம். எண்ணெயில் பொரித்து சூப்பில் சேர்க்கலாம்.) நைலான் ஜவ்வரிசியில் இந்தப் பிரச்சினை இல்லை.

* இந்தப் படங்களில் இருப்பவை மாவு ஜவ்வரிசியில் செய்தவையே. உருளைக் கிழங்கு சேர்த்துச் செய்த உப்புமா மட்டும் என்னிடம் இன்று இருப்பு தீர்ந்து போனதால்- இதற்காக, கடைக்குப் போக சோம்பியதால்- பெரிய சைஸ் ஜவ்வரிசியில் செய்தது.

தேவையான பொருள்கள்:

சொப்பு செய்ய:
பச்சரிசி – 1 கப்
தண்ணீர் – 2 1/2 கப்
உப்பு – 1 சிட்டிகை
நல்லெண்ணெய் (அல்லது தேங்காயெண்ணெய்)

பூரணம் செய்ய:
உளுத்தம் பருப்பு – 1 கப்
துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை (விரும்பினால்)
காய்ந்த மிளகாய் – 4
பச்சை மிளகாய் – 2
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி
கறிவேப்பிலை
பெருங்காயம்
உப்பு

செய்முறை:

சொப்பு:

  • முதலில் பச்சரிசியை நன்கு கழுவி, 2 1/2 கப் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • அதே தண்ணீரையே விட்டு அரிசியை நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். நனைத்து வைத்த தண்ணீர் மீதமிருந்தால் அதையும் மாவுக் கரைசலிலேயே நீர்க்கக் கலந்து கொள்ளவும். (சொல்ல வருவது, மொத்தம் 1 கப் அரிசிக்கு 2 1/2 கப் தண்ணீர் சேர்ந்திருக்கவேண்டும்.)
  • வாணலியில் மாவுக் கரைசலை விட்டு, இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய், சிட்டிகை உப்பு சேர்த்து நிதானமான தீயில் அடிப்பிடிக்காமல் கிளறவும்.
  • மாவு சேர்ந்து இறுகிவரும் வரை விடாமல் கிளறி (இப்போது பாதி வெந்து நிறம் மாறி இருக்கும்.) இறக்கி, ஒரு துணியில் சுற்றியோ அல்லது பாத்திரத்தில் மூடியோ ஆற வைக்கவும். மாவை திறந்துவைத்து, காயவிடக் கூடாது.

பூரணம்:

uppu kozhukkattai_1 (vinaayagar chathurthi)

  • உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு இவற்றைக் கழுவி, தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.
  • காய்ந்தமிளகாய், இஞ்சி, காயம், உப்பு சேர்த்து அதிகம் நீர் விடாமல் கெட்டியாக, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த விழுதை எண்ணெய் தடவிய இட்லித் தட்டுகளில் வைத்து வெயிட் போடாமல் இட்லிகளாக (பருப்பு உசிலிக்குச் செய்வதுபோல்) 12லிருந்து 15 நிமிடங்களுக்கு குக்கரில் வேகவைத்து இறக்கவும்.
  • வெளியே எடுத்து, இட்லிகள் ஆறியதும் லேசாக உதிர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி, பொடித்துக் கொள்ளவும். (மிக்ஸியில் சுற்றுவதற்கு முன் நன்றாக ஆறியிருக்க வேண்டும் என்பது முக்கியம்.)
  • அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து சிறிது வதக்கி உதிர்த்த பூரணத்தில் சேர்க்கவும். (பச்சை மிளகாய் வாயில் அகப்படக் கூடாதென நினைப்பவர்கள் ஒரு பச்சை மிளகாயை, மாவு அரைக்கும்போதே சேர்த்து அரைத்துச் கொள்ளலாம். ஆனால் அகப்பட்டால் சுவையாக இருக்கும்.)

கொழுக்கட்டை:

uppu kozhukkattai_2 (vinaayagar chathurthi)

  • ஆறிய அரிசி மாவை நன்றாகப் பிசைந்து, பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • சிறிது நல்லெண்ணெய் தொட்டுக் கொண்டு, பலகையில் கையால் உள்ளங்கை அளவு வட்டங்களாகச் செய்யவும்.
  • 2 டீஸ்பூன் பூரணத்தை உள்ளே வைத்து அரை வட்டமாக மூடி, ஓரங்களைக் கையால் அழுத்தி ஒட்டவும். இனிப்புக் கொழுக்கட்டையில் பிளந்தால், பாகு உருகி வெளியே வந்துவிடுவது போல் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை என்பதால் இதில் அதிகம் மெனக்கெடத் தேவை இல்லை.
  • செய்துவைத்த கொழுக்கட்டைகளை எண்ணெய் தடவிய இட்லித் தட்டில் வைத்து, குக்கரில் (இட்லி மாதிரி வெயிட் போடாமல்) பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும்.

பந்து மாதிரி வந்துவிடும். இந்த முறையில் மாவுக்கு கொஞ்சம் இழுவைத் தன்மையும் வந்துவிடும். அதனால் கொழுக்கட்டை செய்யும் போது அதிகம் பிளக்காது. பிளந்தாலும் அந்த இடத்தில் இன்னும் சிறிது மாவு வைத்தாலும் சுலபமாகச் சேர்ந்து கொள்ளும்.

uppu kozhukkattai_3 (vinaayagar chathurthi)

* அரிசிமாவை நான்ஸ்டிக்கில் வைத்துக் கிளறினால் சுலபமாக இருக்கும். மாவு நன்றாக சேர்ந்து வந்தபின்பும் மேலும் 2, 3 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருந்தால்(இது சாதா வாணலியில் அடிப்பிடிக்கும்; கருகும்.) மாவு நன்றாக,

* சிலர் ஊறவைத்து உலர்த்திய அரிசியை மிஷினிலோ மிக்ஸியிலோ வறட்டு மாவாக அரைத்துவைத்துக் கொண்டு, 2 பங்கு தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் மாவைக் கொட்டிக் கிளறுவார்கள். ஆனால் அதில் இருக்கும் கட்டிதட்டிவிடக் கூடிய சாத்தியங்கள் மேற்சொன்ன முறையில் அறவே இல்லை.

* மிஷின் இல்லாமல், மிக்ஸியிலும் சரியாக அரைக்க முடியாதவர்கள், சல்லடையை ம்யூசியத்தில் தேடுபவர்கள் :), அதைவிட முக்கியமாக மேல்மாவு சரியாக கொழுக்கட்டை செய்ய வரவேண்டுமே என்று கவலைப்படுபவர்களுக்கெல்லாம் மேலே சொன்னதே ஆகச் சுலபமான முறை. தைரியமாகச் செய்து பார்க்கவும்.

* தயாரித்த பூரணம் தீர்ந்து, சொப்பு மாவு மிஞ்சினால் அதில் மணிக் கொழுக்கட்டை செய்யலாம். பூரணம் மிஞ்சினால், சின்ன உருண்டைகளாக்கி, கரைத்த பஜ்ஜிமாவில் தோய்த்து, போண்டோ மாதிரி எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்.

* அரிசி மாவினால் தான் கொழுக்கட்டைக்குச் சொப்பு செய்யவேண்டும் என்பதில்லை. மைதா மாவையும் தண்ணீரில் கரைத்து வேகவைத்துச் செய்யலாம். இன்னும் நன்றாக வரும்.

இனிப்புக் கொழுக்கட்டை

vinaayagar chathurthi_2006

தேவையான பொருள்கள்:

சொப்பு செய்ய:
பச்சரிசி – 1 கப்
தண்ணீர் – 2 1/2 கப்
உப்பு – 1 சிட்டிகை
நல்லெண்ணெய்
 
பூரணம் செய்ய:
தேங்காய்த் துருவல் – 1 கப்
வெல்லம் – 1 கப்
ஏலப்பொடி

செய்முறை:

சொப்பு:

inippu kozhukkattai_1 (vinaayagar chathurthi)

  • முதலில் பச்சரிசியை நன்கு கழுவி, 2 1/2 கப் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • அதே தண்ணீரையே விட்டு அரிசியை நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். நனைத்து வைத்த தண்ணீர் மீதமிருந்தால் அதையும் மாவுக் கரைசலிலேயே நீர்க்கக் கலந்து கொள்ளவும். (சொல்ல வருவது, மொத்தம் 1 கப் அரிசிக்கு 2 1/2 கப் தண்ணீர் சேர்ந்திருக்கவேண்டும்)
  • வாணலியில் மாவுக் கரைசலை விட்டு, இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய், சிட்டிகை உப்பு சேர்த்து நிதானமான தீயில் அடிப்பிடிக்காமல் கிளறவும்.
  • மாவு சேர்ந்து இறுகிவரும் வரை விடாமல் கிளறி (இப்போது பாதி வெந்து நிறம் மாறி இருக்கும்.) இறக்கி, ஒரு துணியில் சுற்றியோ அல்லது பாத்திரத்தில் மூடியோ ஆற வைக்கவும். மாவை திறந்துவைத்து காயவிடக் கூடாது.

பூரணம்:

inippu kozhukkattai_2 (vinaayagar chathurthi)

  • வெல்லத்தை கால் கப் தண்ணீருடன் அடுப்பில் வைத்து, நல்ல கம்பிப் பாகாக வைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய், ஏலப்பொடி சேர்த்து நன்கு சேர்ந்தாற்போல் வரும்வரை கிளறி இறக்கவும்.

கொழுக்கட்டை:

inippu kozhukkattai_3 (vinaayagar chathurthi)

  • ஆறிய அரிசி மாவை நன்றாகப் பிசைந்து, பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • நல்லெண்ணெய் தொட்டுக் கொண்டு கையில் மாவை வட்டமாகத் தட்டி, நடுவில் குழித்து, தேங்காய் பூரணத்தை ஒரு டீஸ்பூன் உள்ளே வைத்து நாலுபக்கமும் சேர்த்து மூடவும். மேலே கிரீடம் போல் இழுத்துவிடவும். அதிக அரிசிமாவு உச்சியில் இருந்தால் அதை எடுத்து விடலாம்.
  • எல்லாப் பக்கமும் ஒரே மாதிரி நன்றாக மூடியிருக்கவேண்டியது முக்கியம்.
  • செய்துவைத்த கொழுக்கட்டைகளை எண்ணெய் தடவிய இட்லித் தட்டில் வைத்து, குக்கரில் (இட்லி மாதிரி வெயிட் போடாமல்) பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும்.

inippu kozhukkattai_4 (vinaayagar chathurthi)

* அரிசிமாவை நான்ஸ்டிக்கில் வைத்துக் கிளறினால் சுலபமாக இருக்கும். மாவு நன்றாக சேர்ந்து வந்தபின்பும் மேலும் 2, 3 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருந்தால்(இது சாதா வாணலியில் அடிப்பிடிக்கும்; கருகும்.) மாவு நன்றாக, பந்து மாதிரி வந்துவிடும். இந்த முறையில் மாவுக்கு கொஞ்சம் இழுவைத் தன்மையும் வந்துவிடும். அதனால் கொழுக்கட்டை செய்யும் போது பிளக்காது. பிளந்தாலும் அந்த இடத்தில் இன்னும் சிறிது மாவு வைத்தாலும் சுலபமாகச் சேர்ந்து கொள்ளும்.

* சிலர் ஊறவைத்து உலர்த்திய அரிசியை மிஷினிலோ மிக்ஸியிலோ வறட்டு மாவாக அரைத்துவைத்துக் கொண்டு, 2 பங்கு தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் மாவைக் கொட்டிக் கிளறுவார்கள். ஆனால் அதில் இருக்கும் கட்டிதட்டிவிடக் கூடிய சாத்தியங்கள் மேற்சொன்ன முறையில் அறவே இல்லை.

* மிஷின் இல்லாமல், மிக்ஸியிலும் சரியாக அரைக்க முடியாதவர்கள், சல்லடையை ம்யூசியத்தில் தேடுபவர்கள், அதைவிட முக்கியமாக மேல்மாவு சரியாக கொழுக்கட்டை செய்ய வரவேண்டுமே என்று கவலைப்படுபவர்களுக்கெல்லாம் மேலே சொன்னதே ஆகச் சுலபமான முறை. தைரியமாகச் செய்து பார்க்கவும்.

* சிலர் பூரணத்திற்கு வெல்லம் குறைவாகச் சேர்ப்பார்கள். ஆனால் வெளியே இருக்கும் மேல்மாவு சப்பையாக இருப்பதால் பூரணம் நிறைந்த இனிப்புடன் இருப்பதே சாப்பிடும்போது சரியாக இருக்கும்.

* மேலே சொன்ன அளவில் சுமார் 50 கொழுக்கட்டைகள் வந்தன.

* பூரணத்தில் ஏலப்பொடி தவிர நம் விருப்பம் போல் முந்திரி, அரைத்த கடலைப்பருப்பு, கிஸ்மிஸ் என்றெல்லாம் சேர்த்துக் கொள்ளலாம். சனிதசைக்காக விநாயகருக்கு கொழுக்கட்டை செய்பவர்கள், இரண்டு டீஸ்பூன் எள் வறுத்தும் சேர்ப்பார்கள்.

* தேங்காய்ப் பூரணத்திற்குப் பதில் வறுத்த அரைத்த எள் ஒரு கப், வெல்லம் அரையிலிருந்து முக்கால் கப் சேர்த்து எள் கொழுக்கட்டையும் செய்யலாம்.

* தயாரித்த பூரணம் தீர்ந்து, சொப்பு மாவு மிஞ்சினால் அதில் மணிக் கொழுக்கட்டை செய்யலாம். பூரணம் மிஞ்சினால், சின்ன உருண்டைகளாக்கி, கரைத்த உளுத்த மாவில் தோய்த்து சுகியன் மாதிரி எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்.

* அரிசி மாவினால் தான் கொழுக்கட்டைக்கு சொப்பு செய்யவேண்டும் என்பதில்லை. மைதா மாவையும் தண்ணீரில் கரைத்து வேகவைத்துச் செய்யலாம். இன்னும் நன்றாக வரும்.

உப்புக் கொழுக்கட்டை

“இன்னிக்கு ஆத்திலே என்ன தளிகை?”“பொன்னா தளிகையை கேக்கணுமா? பருப்பு, உப்புச்சார், தக்காளி சாத்தமுது நிறைய கொத்துமல்லி போட்டு, வாழைக்காய் கறியமுது, அவியல், பொரிச்ச அப்பளம்.”— புலிநகக் கொன்றை (பி.ஏ. கிருஷ்ணன்)

பொன்னா நாங்குநேரி இல்லையா? நெல்லை மாவட்டத்துல உப்புச்சார் என்பது நீங்க சொன்ன மோர்ச் சாத்துமது மாதிரியேதான். கொஞ்சம் வித்தியாசம்.– நன்றி: ஜெயஸ்ரீ சூர்யநாராயணன்.

 

தேவையான பொருள்கள்:

தயிர் – 1 கப்
அப்பக்கொடி (அல்லது அதளக்காய் வற்றல் அல்லது மணத்தக்காளி வற்றல்)

வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 3
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்

அரைக்க:
தேங்காய்த் துருவல் – அரை கப்
சீரகம் – 1 டீஸ்பூன்

தாளிக்க – கடுகு, கறிவேப்பிலை.

uppuchchaar 3 - mOr kuzambu [2]

செய்முறை:

  • தயிரை நன்கு தண்ணீர் விடாமல் கடைந்து கொள்ளவும்.
  • காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, வெந்தயத்தை வாணலியில் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய் சீரகத்தை பச்சையாக அரைத்துக் கொள்ளவும்.
  • கடைந்த தயிரில் உப்பு, மஞ்சள் தூள், அரைத்த மசாலாக்களைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு, பொங்கிவரும்போது இறக்கவும்.
  • எண்ணையில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அப்பக்கொடியையும் கருக வறுத்துச் சேர்க்கவும்.

* அப்பக் கொடி – இது நெல்லை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கும் ஒரு கொடி வகை. அப்பக் கொடி சேர்ப்பது தான் முக்கியம். கிடைக்காத பட்சத்தில் மணத்தக்காளி வற்றல் வறுத்துச் சேர்க்கலாம்.

ஜெயஸ்ரீ, மிகவும் சுவையாக இருந்தது. அன்புத் தோழி வெந்தயம் சேர்க்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். ஆனால் வெந்தயம் தான் மேலும் சுவை சேர்த்தது. விழுங்கியதும் நாக்கினடியில் அதன் மணமும் கசப்பும் அருமை. மணத்தக்காளி வற்றல், வற்றல் குழம்பை விட இதில் தான் சுவையாக இருந்தது.

என் பக்கத்து இரண்டு கேள்விகள்:

இதில் காய் சேர்க்கக் கூடாதா? (என் பெண்)

தாமரைக் கொடி வற்றலைத் தான் அப்பக்கொடின்னு சொல்லுதாங்களோ? (எங்க கடைக்கார அண்ணாச்சி)

தொடர்புடைய இன்னொரு சுட்டி: அன்புத்தோழி

இதுவும் ஒரு திருநெல்வேலி பக்கக் குழம்பு. நன்றி: ச.திருமலை

தேவையான பொருள்கள்:

புளி – எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை
உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 5
மிளகு – 1 டீஸ்பூன்.

அரைக்க:
தேங்காய் – 1/4 மூடி
மிளகாய் வற்றல் – 2
சீரகம் – 1 டீஸ்பூன்.

தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயம்.
 

thengaai seeraga kuzambu

செய்முறை:

  • புளியைக் கரைத்துக் கொள்ளவும்.
  • காய்ந்த மிளகாய் மிளகை சிறிது எண்ணையில் வறுத்து, பொடிக்கவும்.
  • தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், சீரகத்தை அப்படியே விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணை வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, காயை சேர்த்து வதக்கவும்.
  • அதில் சிறிது தண்ணீர் விட்டு, உப்பு, மஞ்சள் தூள், அரைத்த பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
  • சிறிது கொதித்ததும், புளித் தண்ணீர் சேர்க்கவும்,
  • புளி கொதித்ததும், அரைத்த விழுதையும் போட்டு, மேலும் ஒரு கொதி விட்டு இறக்கவும்.

* தண்ணீர் அதிகமாக இருந்தால், சிறிது அரிசி மாவை கரைத்துச் சேர்க்கலாம்.
 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இந்தக் குழம்புடன் பருப்பு உசிலி நல்ல காம்பினேஷனாக இருக்கும்.

மோர் சாதத்துக்கு இந்தக் குழம்பு அமிர்தமாக இருக்கும். [இருந்தது. :)]

 1.
தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்
பயத்தம் பருப்பு – 3/4 கப்
கடலைப் பருப்பு – 1/4 கப்
எள் – 1 டீஸ்பூன்
உப்பு

mullu murukku_sreejayanthi

செய்முறை:

  • அரிசியைக் களைந்து, நிழலில் உலர்த்தி, மிக்ஸியில் அரைத்து, சலித்துக் கொள்ளவும்.
  • பருப்புகளை சிவக்க வறுத்து, நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • 2 கப் அரிசிமாவிற்கு, ஒரு கப் பருப்பு மாவு, உப்பு, எள், வெண்ணை சேர்த்து, நீர்விட்டுப் பிசைந்து கொள்ளவும்.
  • முள்ளு முறுக்கு அச்சில் சின்னச் சின்ன ஒற்றை இழை முறுக்குகளாக 2 அல்லது 3 ஆகவோ, இரண்டு மூன்று இழை கொண்ட பெரிய முறுக்குகளாகவோ பிழிந்து, நிதானமான சூட்டில், திருப்பிப் போட்டு, இருபுறமும் பொன்னிறமாகப் பொரித்து, ஓசை அடங்கியது எடுக்கவும்.

* அதிகமாகச் செய்வதாக இருந்தால் தவணை முறையில் மாவைக் கலந்து செய்யவும்.

2.
3 கப் அரிசியையும்(ஊறவைக்காதது), 1 கப் உளுத்தப் பருப்பையும், 1 கப் பயத்தம் பருப்பையும் தனித் தனியாக வறுத்துக் கொண்டு, நைசாக அரைத்து, சிறிது சூடுபடுத்திய எண்ணெய், உப்பு, சீரகம், காரப் பொடி சேர்த்து முள்ளு முறுக்கு செய்யலாம்.

3.
அரிசி மாவு ஒரு கப், பொட்டுக் கடலை மாவு 4 கப் சேர்த்து, உப்பு, எள் கலந்து முள்ளு முறுக்கு செய்தால் கரகரப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.

4.
4 கப் அரிசி, 3/4 கப் பயத்தம் பருப்பு, 3/4 கப் கடலைப் பருப்பை தனித் தனியாக லேசாக வறுத்து, மிஷினில் அல்லது மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொண்டால் முள்ளு முறுக்கு, ரிப்பன், தட்டை, பஜ்ஜி கூட செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
சீரகம் – 2 டீஸ்பூன்
பெருங்காயம்
உப்பு
வெண்ணை
தேங்காய் எண்ணெய்

செய்முறை:

  • அரிசியைச் சூடு வர சற்று வறுத்துக் கொண்டு, சூடு ஆறியபின் நன்றாகக் களைந்து, நீரை வடியவைத்து பொடித்து, நைசான சல்லடையில் சலித்துக் கொள்ளவும். (வறுத்த அரிசி அதிகமாக ஊறக் கூடாது.)
  • உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து நைசாக மாவாக்கிக் கொள்ளவும்.
  • காயம், உப்பு, இவைகளைக் கரைத்துவிட்டு, வெண்ணை, சீரகத்தையும் சேர்த்து, சிறிது தண்ணீர்விட்டுப் பிசையவும்.
  • கையில் சிறு உருண்டையாக எடுத்து மெதுவாக முறுக்குகளாகச் சுற்றி(ஞே!), எண்ணெயில் நிதானமான சூட்டில், இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து, ஓசை அடங்கியது எடுக்கவும்.

* தண்ணீர் விட்டுப் பிசைந்த மாவு அதிக நேரம் இருந்தால் மாவு புளித்து, முறுக்கு சிவக்க ஆரம்பித்துவிடும். எனவே 2 கப் மாவிற்கு மேல் முறுக்கு தேவைப்பட்டால் 2, 3 தடவையாகப் பிசைந்து கொள்ளவும்.

* சீரகத்திற்குப் பதில் கருப்பு எள்ளைத் தேய்த்தோ அல்லது வெள்ளை எள்ளோ சேர்க்கலாம்.

* பச்சரிசிக்குப் பதில் புழுங்கல் அரிசி ஊறவைத்து, நீரை வடித்து, அதிகம் தண்ணீர் விடாமல் கிரைண்டரில் கெட்டியாக ஆனால் நைசாக அரைத்து, அத்துடன் உளுத்தம் மாவு, சீரகம் எள், வெண்ணை சேர்த்துப் பிசைந்தும் முறுக்குச் சுற்றலாம்.

* வேறு எண்ணெயில் பொரித்தாலும் பிசையும்போது 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டுப் பிசைந்தால், தேங்காய் எண்ணெயில் செய்தது போலவே மணமாக இருக்கும்.

1.
தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி – 2 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
பொட்டுக் கடலை – 4 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு –  4 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 4 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
எள் – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை
காரப் பொடி
பெருங்காயம்
உப்பு
வெண்ணை
எண்ணெய்

thattai1_sreejayanthi

செய்முறை:

  • புழுங்கல் அரிசியை நன்கு களைந்து, நீரில் ஊறவைத்து, கெட்டியாக ஆனால் நைசாக கிரைண்டரில் அரைக்கவும்.
  • இத்துடன் உளுத்தம் மாவு(வறுத்து அரைத்தது), உப்பு, பெருங்காயப் பொடி, பயத்தம் பருப்பு கடலைப் பருப்பு, பொட்டுக் கடலை, தேங்காய்த் துருவல், வெண்ணை சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
  • பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து அழுத்தாமல் லேசாகக் கலந்துகொள்ளவும்.
  • பிளாஸ்டிக் பேப்பர் அல்லது வெள்ளைத் துணியில் மெல்லிய வட்டமாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

2.
புழுங்கல் அரிசியோடு பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம், ஒரு துண்டு இஞ்சி, இவைகளை நைசாக அரைத்து, உளுத்தம் மாவு, வெண்ணை சேர்த்து மெலிதாகத் தட்டினால் கரகரப்பாக இருக்கும். கறிவேப்பிலை மல்லித் தழையும் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம்.

thattai2_sreejayanthi

3.
புழுங்கல் அரிசி மாவுடன், உளுத்தம் மாவு, வெண்ணை, உப்பு, எள், பெருங்காயத் தூள், காரத் தூள் சேர்க்கும்போது ஊறவைத்து நீரை ஒட்ட வடித்த பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நறுக்கிய நிலக்கடலை, முந்திரிப் பருப்பு, வெள்ளரி விதை, பரங்கிவிதை, பெரிய ஜவ்வரிசி இவைகளில் சிலவற்றையோ, எல்லாவற்றையுமோ சேர்த்தும் தட்டலாம்.

4.
புழுங்கல் அரிசிக்குப் பதில் பச்சரிசியைக் களைந்து அரை மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்தி, மிக்ஸியில் அரைத்துச் சலித்த மாவையும் உபயோகிக்கலாம்.

* தேன்குழல், ரிப்பன், தட்டை போன்றவை நமுத்துப் போகாமல் மொறுமொறுவென்று இருக்க, மாவை வெந்நீர் ஊற்றிப் பிசைந்து செய்யலாம்.

* தட்டைகளை வேகமாகத் தட்ட, பிளாஸ்டிக் ஷீட்டில் அடியில் எண்ணெய் தடவி, உருண்டையை வைத்து, மேலேயும் ஒரு எண்ணெய் தடவிய ஷீட்டை வைத்து, டபராவால் தேய்த்தால் வேகமாகச் செய்துவிடலாம்.

1.
ஒரு கப் பயத்தம் பருப்பை ஒரு கப் தண்ணீரில் குக்கரில் வேகவைத்து, நன்றாக மசித்து, அத்துடம் 4 கப் பச்சரிசி மாவு கலந்து, தேவையான உப்புத் தூள், எள் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து தேன்குழல் செய்யலாம்.

2.
ஒரு கப் பயத்தம் பருப்பு, ஒரு கப் கடலைப் பருப்பு, ஒரு கப் உளுத்தம் பருப்பை தனித்தனியாக வறுத்து, மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு கப் பருப்பு மாவிற்கு இரண்டு கப் அரிசி மாவு, 2 டேபிள்ஸ்பூன் வெண்ணை, ஓமம் அரைத்து வடிகட்டிய நீர், உப்பு சேர்த்து தேவையான நீர் விட்டுப் பிசைந்து தேன்குழல் அச்சில் பிழிந்து எண்ணெயில் பொரிக்கலாம்.

3.
3 கப் அரிசியையும்(ஊறவைக்காதது), 1 கப் உளுத்தப் பருப்பையும் தனித் தனியாக வறுத்துக் கொண்டு, நைசாக அரைத்து, சிறிது சூடுபடுத்திய எண்ணெய், உப்பு, சீரகம் சேர்த்து தேன்குழல் செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

அரிசி மாவு – 2 1/2 கப்
உளுத்தம் மாவு – 1/2 கப்
பச்சை மிளகாய் – 10
எள் – 1 டீஸ்பூன்
தேங்காய்ப் பால்
பெருங்காயம்
வெண்ணை
உப்பு
எண்ணெய்

செய்முறை:

  • பச்சை மிளகாய், உப்பு, காயம் இவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரிசி மாவையும் வறுத்து அரைத்த உளுத்தம் மாவையும் நைசாகச் சலித்துக் கொள்ளவும்.
  • அதில் அரைத்த விழுது, வெண்ணை சேர்த்து நன்றாக சீராகப் பிசிறிக் கொள்ளவும்.
  • அதோடு எள் சேர்த்து, சிறுகச் சிறுக தேங்காய்ப் பால் விட்டு சீடைகளாக உருட்டும் பதத்திற்கு மாவைப் பிசையவும்.
  • மாவை சீடை உருண்டைகளாக உருட்டி ஒன்றிரண்டு மணி நேரம் அப்படியே வைக்கவும்.
  • பின்னர் சூடான எண்ணெயில் வாணலி கொள்ளும் வரையில் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். எடுக்கும்போது சலசலவென சத்தம் கேட்க வேண்டும்.

1.
தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்
உளுத்தம் மாவு – 4 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
வெண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி
உப்பு
எண்ணெய்

uppu cheedai_sreejayanthi

செய்முறை:

  • அரிசியை லேசாக, சற்று சிவந்த நிறந்த்திற்கு வறுத்து, கரகரப்பாக அரைத்து சலித்துக் கொள்ளவும்.
  • உளுத்தம் பருப்பைச் சிவக்க வறுத்து, நைசாக அரைத்து, சலித்துக் கொள்ளவும்.
  • கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
  • சீரகம், மிளகை சுத்தம் செய்து, ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய், சில் இல்லாமல் நன்றாகத் துருவி லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  • எல்லாவற்றையும் ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, அத்துடன் உப்பு, பெருங்காயம் சிறிது நீரில் கரைத்துச் சேர்க்கவும்.
  • வெண்ணய் அல்லது நெய் விட்டு, சிறிது சிறிதாக நீர் சேர்த்துப் பிசையவும்.
  • பிளாஸ்டிக் பேப்பர் அல்லது தட்டில் சீடைகளாக உருட்டிப் போட்டு, வாணலியில் நிதானமான தீயில் பொன்னிறமாக ஓசை அடங்கும்வரை பொரித்து எடுக்கவும்.
     

2.
தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்
உளுத்தம் மாவு – 4 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
வெண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
எள் – 2 டீஸ்பூன்
காரப் பொடி
உப்புப் பொடி
பெருங்காயப் பொடி
உப்பு
எண்ணெய்

செய்முறை:

  • அரிசியைச் சுத்தம் செய்து, நீரில் கழுவி, அரை மணி நேரம் ஊறவைத்து, லேசாக துணியில் உலரவைத்து, மிக்ஸியில் அரைத்து, கட்டியில்லாமல் சலித்து, வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.
  • உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து மிக்ஸியில் அரைத்து நைஸ் சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.
  • மாவில் பத்திற்கு ஒன்று என்ற அளவில் உளுத்தம் மாவு சேர்த்தால் சரியாக இருக்கும்.)
  • எள்ளை கல், மண் தூசி இல்லாமல் சுத்தமாக்கிச் சேர்க்கவும்.
  • கடலைப் பருப்பை சுத்தம் செய்து, ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து மாவில் சேர்க்கவும்.
  • காரப் பொடி, உப்புப் பொடி, பெருங்காயப் பொடி, வெண்ணை சேர்த்து, நீர் விட்டுப் பிசையவும்.
  • பிளாஸ்டிக் பேப்பர் அல்லது தட்டில் சீடையை உருட்டிப் போட்டுக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெயில் 20, 25 சீடைகளாகப் போட்டு, நிதானமான தீயில் பொன்னிறமாகப் பொரித்து, ஓசை அடங்கியதும் எடுக்கவும்.

-0-

* அரிசியை கரகரப்பாக அரைத்து, நன்றாகச் சலிக்காவிடில், அதிலுள்ள கற்கள் மண்களாகி ஒவ்வொரு துகளுக்கும் வெடிக்கும்.

* உளுத்தம் மாவுக்கும் அஃதே.

* எள்ளை நன்றாக கல் சோதித்துவிடுவது நல்லது. இல்லாவிடில் கண்டுபிடிக்க முடியாது.

* கடலைப் பருப்பு, மிளகு, சீரகத்தையும் நன்றாக சுத்தம் செய்தபின்பே உபயோகிக்கவும்.

* தேங்காய்த் துருவல் சேர்ப்பதாக இருந்தால், அதில் பெரிய சில்லுகள் இல்லாமல் நன்றாகத் துருவிக் கொள்ளவும். வாணலியில் சிறிது வறுத்துக் கொள்வதும் நல்லது.

* உப்பு, பெருங்காயப் பொடி போன்றவைகளை நேரடியாகச் சேர்க்காமல், நீரில் கரைத்துச் சேர்த்தால் வெடிக்காது.

* சீடை உருட்டியதும், ஒரு குண்டூசியால் ஒவ்வொரு சீடையிலும் குத்தியபின், காய்ந்த எண்ணெயில் போட்டால், சீடை வெடிக்காது.

இதை அநேகமாக எங்கள் வீட்டில் குழந்தை பிறந்து தொட்டிலிட்டு, பெயர்வைக்கும் நாளிலும் முதல் ஆண்டுநிறைவன்று காதுகுத்தும் நாளிலும் செய்வார்கள்.

sreejayanthi

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்
வெல்லம் – 2 கப்
பொட்டுக் கடலை –  200 கிராம்
நிலக்கடலை – 200 கிராம்
வெள்ளை எள் – 50 கிராம்
கொப்பரைத் தேங்காய்
ஏலப்பொடி
நெய்

செய்முறை:

  • குருணை இல்லாத, முனை முறியாத பச்சரிசியை கால் மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து, நிழலில் உலர்த்திக் கொள்ளவும். (ஆற நேரமில்லை என்றால் லேசாக வாணலியில் வறுத்துக் கொள்ளலாம்.)
  • வறுத்துத் தோல் நீக்கிய நிலக்கடலையை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
  • கொப்பரைத் தேங்காயை சின்னஞ்சிறு துண்டுகளாகக் கீறிக் கொள்ளவும்.
  • எள், கொப்பரைத் துண்டுகளை சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.
  • வெல்லத்தை முற்றிய பாகாக வைத்து முதலில் முக்கால் பதம் உலர்ந்த அரிசியைச் சேர்க்கவும். பாகின் சூட்டிலேயே அரிசி பொரியும்,
  • பின், ஏலப்பொடி, பொட்டுக்கடலை, நிலக்கடலை, எள், தேங்காய்த் துண்டுகளைக் கலந்து கிளறி இறக்கவும். 
  • காப்பரிசி முதலில் இறுக்கமாக இருக்கும். ஆனால் ஆறியதும் உதிர்ந்துகொள்ளும்.

* பண்டிகைக்காக இல்லாமல் சாதா நாளில் செய்தால் சீரக மிட்டாய்களை அழகுக்காகக் கலந்து கொள்ளலாம்.

* சிலர் அரிசியை நன்றாக வறுத்தே, பின் பாகில் சேர்ப்பார்கள். அரிசி முனை முறிந்தோ உடைந்தோ விடலாம் என்பதால் நான் செய்வதில்லை.

தேவையான பொருள்கள்:

எள் – 2 கப்
வெல்லம் – 1/2 கப்
கொப்பரை
ஏலக்காய்
சுக்கு
நெய்

செய்முறை:

  • எள்ளைக் களைந்து, நீரை வடிகட்டி, வெறும் வாணலியில் நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
  • அத்துடன், வெல்லம், நறுக்கிய கொப்பரை, சுக்கு, ஏல அரிசி சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். (உரலில் இடித்தால் சரியாகவும் சுவையாகவும் இருக்கும்.)
  • உருக்கிய நெய் கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

அடுத்த பக்கம் »