இது விஜயதசமியன்று ஹயக்ரீவருக்காகச் செய்யப்படும் உணவு. மற்றும் பள்ளிக்கு புதிதாக குழந்தைகளை அனுப்பும்(வித்யாரம்பம்) நாளன்றும் செய்து ஹயக்ரீவரை வழிபடலாம்.

தேவையான பொருள்கள்:

கடலைப் பருப்பு – 1 கப்
பால் – 2 கப்
தேங்காய் – 1 மூடி
வெல்லம் – 1 கப்
நெய் – 1/4 கப்
முந்திரிப் பருப்பு
கிஸ்மிஸ்
ஏலப்பொடி
பச்சைக் கற்பூரம்

hayagreeva

செய்முறை:

  • கடலைப் பருப்பை சிறிது வறுத்து விட்டு குக்கரில் குழைவாக வேகவைத்து, மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் பாலை வைத்து சுண்டக் காய்ச்சி, வெல்லம், தேங்காய்ப் பால், மசித்த கடலைப் பருப்பு, பாதி நெய் விட்டு மிதமான தீயில் கிளறவும்.
  • கலவை இறுகி அல்வா பதம் வந்ததும் மேலும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
  • மீதி நெய்யில் ஒடித்த முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பொரித்துச் சேர்க்கவும்.

* ஒரு கப் கடலைப் பருப்பிற்கு ஒன்றிலிருந்து ஒன்னேகால் கப் சர்க்கரை என்ற அளவில் சர்க்கரையிலும் செய்யலாம்.

-0-
 
திருவஹீந்திரபுரம்:

கடலூரிலிருந்து மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தலம். தேவநாதப் பெருமாள், ஹேமாம்புஜவல்லித் தாயார்; கோயில் 108 திவ்ய க்ஷேத்திரங்களில்(நடுநாட்டுத் திருப்பதி) ஒன்று; கருடநதி, சேஷ தீர்த்தம் என்ற நீர்நிலைகளால் புகழ்பெற்றவை என்றாலும் அதைவிட இங்கிருக்கும் ஆஷாட மலை (ஆஞ்சநேயர் யுத்த நேரத்தில் சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கிச் செல்கையில் கீழே விழுந்த ஒரு துண்டு மலையாதலால், இந்த மலைக்கு மருத்துவ குணம் உள்ளதாகச் சொல்கிறார்கள்.) ஹயக்ரீவரும், நிகமாந்த மஹா தேசிகர் சன்னதியும் மேலும் சிறப்புப் பெற்றவை.

இங்கே தனது இளம்வயதில் கருட மந்திரத்தை ஜபித்து, கருடரை தரிசித்த தேசிகர், அவராலேயே ஹயக்ரீவ மந்திரம் உபதேசிக்கப்பட்டு, விஷ்ணுவை இங்கே ஹயக்ரீவராகக் (ஞானத்திற்கான தெய்வம், சரஸ்வதிக்கே ஞானம் தந்தவர்) கண்டு அருளப்பெற்றவர். தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் பாண்டித்யம் பெற்ற தேசிகர் தன் வாழ்வில் முக்கியமான நாள்களை இங்கே தங்கியும், முக்கிய பாசுரங்களை இங்கே இயற்றவும் செய்தவர். அவர் வாழ்ந்த வீடு இன்றும் தேசிகன் திருமாளிகையாகவும், கட்டிய கிணறும் இன்னும் இங்கே இருக்கிறது.

hayagriva

தேசிகர் புரட்டாசி திருவோணத்தன்று ரத்னாங்கியில் ஒவ்வொரு படியாக மலையேறி ஹயக்ரீவரை தரிசிக்கச் செல்கிறார். ஹயக்ரீவருக்கு ஸ்ரவண பௌர்ணமியும்(அவதார தினம்), நவராத்திரி ஒன்பதாம் நாள் மஹாநவமியும் விசேஷம். விஜயதசமி அன்று அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் தங்கள் மற்றும் தங்கள் குழந்தைகளின் வித்யாரம்பத்தை இங்கே மலையேறி ஹயக்ரீவரை வழிபட்டே துவங்குகின்றனர்.

இவர்களை வணங்கி நாமும் நமது நல்ல செயல்களைத் துவங்கலாம்!

வடகலை தென்கலை பேதங்களா, அதெல்லாம் நான் பார்த்ததேயில்லையே என்று சொல்லும் இளையவர்கள், அதெல்லாம் முந்தி, இப்ப போயே போச்! போயிந்தே, Its gone என்று சொல்லிக் கொண்டிருக்கும் முதியவர்கள் இங்கே சென்றுவரவும். :Lol: :(((

நம்பெருமாள்:

ஸ்ரீரங்கத்தில் அயலாரின் படையெடுப்புக்கு(அப்போது தில்லி சுல்தான்) பயந்து ஒளித்து எடுத்துப்போன அரங்கன் சிலையை 60 வருடங்கள் கழித்தே மீட்டு எடுத்து வந்தார்கள். அதுவரை வேறு ஒரு அரங்கனை பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடந்துவந்தன.

ஆனால் யாருமே காணமல் போன அரங்கனை அறிந்தவர்கள் உயிருடன் அப்போது இல்லாமல் போக, மீட்கப்பட்ட விக்கிரகத்தை சந்தேகத்தின் பேரில் கோவிலுக்குள் அனுமதிக்காமல் ஆரியபடாள் வாசலிலேயே (மூன்றாம் பிரகாரம்) வைத்துவிடுகிறார்கள். அப்பொழுதுதான் வில்வமரத்தினடியில் மறைத்துவைக்கப்பட்டு இருந்த தாயார் கனவில் வந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். [இதனால ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் இரண்டு மூலவர்கள்.]

இதைக் கேள்விப்பட்ட மக்களுக்கு ஒருவேளை மீட்கப்பட்டது ஒரிஜினல் அரங்கன்தானோ, அதனால் தான் காணாமல் போனதும் மறைந்த தாயார், திரும்ப பெருமாள் வந்ததும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுவிட்டாளோ என்று சந்தேகம் வந்து அதை அப்போதைய மன்னனிடம் தெரிவிக்கிறார்கள்.

நடந்த அனைத்தையும் கேட்ட மன்னன் அந்தக் காலத்தவர் யாரேனும் இருக்கிறார்களா என தேடச்சொல்ல, அரங்கனின் ஆடைகளை சலவைசெய்து கோவில் கைங்கர்யம் செய்துவந்த ஒரு 93 வயது வண்ணான், கண்பார்வை இழந்தவராக இருப்பது தெரிகிறது. அவரை அழைத்து விசாரித்ததில், அவர் கூறிய அங்க அடையாளங்கள் ஒத்துப் போகிறது. மேலும் அவர் தன்னால் அபிஷேக (திருமஞ்சன) தீர்த்தத்தை ருசித்து இனம் காணமுடியும் என்று சொல்ல, இரண்டு தெய்வங்களுக்குமான அபிஷேக தீர்த்தம் அவருக்கு அளிக்கப் படுகிறது. மீட்கப்பட்ட அரங்கனின் தீர்த்தத்தை அருந்திய சலவை செய்பவர், ‘ இவரே நம் பெருமாள்!’, இவரே நம் பெருமாள்’ என மகிழ்ச்சியில் கத்த, அவரே அசல் அரங்கன் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு, பின் அதனாலேயே இன்று அவர் பெயரை ‘நம்பெருமாள்’ என்று சொல்கிறோம்.

=0=

நம்பெருமாளுக்கு “பன்னிரு நாச்சியார் பரவும் பெருமாள்..” என்று அரையர் பாடுவதைப் போல் நாயகியர் பன்னிருவர். எனக்குத் தெரிந்தவரை… 

  

renganayaki thaayaar

1. மஹாலஷ்மி:

கோயில் மூலவரின் திருமார்பில் இருக்கும் மஹாலஷ்மி. இவர் அரங்கனுக்கு கழுத்தில் சங்கிலியுடன் கூடிய ஒரு தங்க டாலர் மாதிரி தரிசிப்பவர்களுக்குத் தெரியலாம். ஆனால் உண்மையிலேயே உள்ளே அரங்கனின் திருமார்பில் இருக்கும் மஹாலஷ்மிக்குத் தான் அந்தக் கவசம். இவருக்கு வெள்ளிக் கிழமைகளில் மட்டும் பட்டரால் ஏகாந்த திருமஞ்சனம் செய்யப் படுகிறது. அப்போது கோயில் ஜீயர், பட்டருக்கு சாமரம் வீசுவது இன்றும் நடந்து வருகிறது.

2, 3 உபயநாச்சிமார்- ஸ்ரீதேவி, பூதேவி:

இவர்கள் உற்சவ மூர்த்திகள். தை மாதப் புறப்பாடுகளில் வீதி பெருமாளுடன் வீதி உலாவும் வருவார்கள். ஸ்ரீரங்கத்தில் மட்டுமே உபயநாச்சிமாரிலிருந்து ஆண்டாள் வரை பன்னிரெண்டு தாயாரும் அமர்ந்த திருக்கோலம்.

4. கருவூல நாச்சியார்:

பிரகாரத்தில் கோயில் கருவூலத்தை ஒட்டி இருக்கும் சன்னதி. கருவூலம், நகைகள் பண்ட பாத்திரங்கள்  மற்றும் கணக்கு வழக்குகளைக் காவல் காக்கும் நாயகி. திருக்கார்த்திகை அன்று எங்கள் பக்கத்துவீட்டு உத்தமநம்பி பெரிய சன்னதியிலிருந்து விளக்கு எடுத்துப் போய் இங்கும் ஏற்றுவதைப் பார்த்திருக்கிறேன்.

5. சேரகுலவல்லித் தாயார்:

அர்ச்சுன மண்டபத்தில் (பகல் பத்து உற்சவ மண்டபம்) துலுக்க நாச்சியாருக்கு வலப்பக்கம் இருக்கும் சன்னதி. இவர் குலசேகரத்தாழ்வாரின் பெண். ஸ்ரீராமநவமி அன்று இவருடன் பெருமாளுக்குத் திருமண உற்சவம் நடக்கும்.

6. துலுக்கநாச்சியார்: (ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேன், என்றாலும் இங்கும்…)

ஆட்சி பல கைகளுக்கு மாறி முகலாயர்களுக்குப் போனபின், டில்லிப் பேரரசரின் மகள் சுரதாணியிடம் அரங்கன் சிலை இருக்கிறது. அரங்கன்மேல் காதலால் அவள் தன் அறையில் தன்னுடனேயே வைத்திருக்கிறாள்.

அதை மீட்க எண்ணி தலைமை பட்டருடன் ‘பின்சென்ற வல்லி’ என்ற நாட்டியப் பெண்ணும் அவளது இசை நாட்டிய குழுவுமாக ஒரு அறுபது பேர் டில்லி சென்று அரசரை இசையில் மகிழ்வித்து அரங்கனைத் திருப்பித் தரக் கேட்கிறார்கள். தன் மகளிடம் இருப்பவர்தான் அழகிய மணவாளன் என்பதை அறிந்த மன்னர் அனுமதி தருகிறார்.

ஆனால் இளவரசியிடமிருந்து பெறுவது சுலபமாயில்லை. அதனால் இசைக்குழு இளவரசியை, பாடல்கள் பாடி ஏமாற்றித் தூங்கவைத்து, அரங்கனை எடுத்துவந்து விடுகிறார்கள். இளவரசி கண்விழித்து, தன் அறையில் அரங்கனைக் காணாமல், தொலைந்ததறிந்து, பதறி நோய்வாய்ப் படுகிறாள். மன்னன் கவலையுற்று தன் படையுடன் அவளை ஸ்ரீரங்கம் அனுப்பி அரங்கனையும் எடுத்துவரப் பணிக்கிறார்.

தலைமை பட்டரோடு சிலர், தாயார் சிலைக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து வில்வ மரத்தினடியில் தாயாரைப் புதைத்துவிட்டு, அரங்கனோடு தலைமறைவாகி விடுகின்றனர். (பார்க்க, இந்தக் கட்டுரையின் முதல் பத்தி)

ஸ்ரீரங்கம் கோவிலிலும் அரங்கன் இல்லாமல், கோவில் மூடியிருப்பதைக் கண்டு அங்கேயே மயக்கமடைந்து இறந்தும் போகிறாள் இளவரசி. அவள் உடலிலிருந்து ஒரு ஒளி மட்டும் கோவிலுக்குள் செல்வதைச் சுற்றி இருந்தவர்கள் பார்க்கிறார்கள்.

முகமதியருக்கு உருவ வழிபாடு கிடையாதென்பதால் அரங்கன் சன்னதியிலேயே பிரகாரத்தில் கிளிமண்டபத்திற்கெதிராக அவளை ஒரு சித்திரமாக மட்டும் வரைந்து ஒரு சன்னதியில் வைத்து ‘துலுக்க நாச்சியார்’ என்ற பெயரில் வழிபடுகிறார்கள்(கிறோம்.) அதன்பிறகு அவளின் தந்தை ஏராளமான செல்வத்தைக் கோவிலுக்கு எழுதிவைத்தார்.

மதம் கடந்த அந்தக் காதலின் அங்கீகாரமாக இன்றும் அரங்கனுக்கு காலையில் லுங்கி போன்ற வஸ்திரம் அணிவித்து, அவர்கள் உணவாக ரொட்டி வெண்ணை நைவேத்தியம் செய்கிறார்கள். இந்த ரொட்டி நம்முடையது போல் இல்லாமல் லேசாக வெல்லம் கலந்து இனிப்பாக இருக்கும். மிக மிக மெல்லியதாக சுவையானதாக இருக்கும். தொட்டுக் கொள்ள வெண்ணை. திருமஞ்சன காலங்களில் வேட்டிக்குப் பதில் லுங்கி வஸ்திரம். (மற்ற கோயில்களுக்கு இல்லாத இன்னொரு சிறப்பு, அரங்கனுக்கு வெந்நீரில் மட்டுமே திருமஞ்சனம். இதன் சூட்டை மணியக்காரர் கையில் வாங்கி சரியான பதம் என்று ஆமோதித்தபின் தான் செய்ய வேண்டும். இடையில் 4, 5 தடவை கைலி மாற்றி கைலியைக் கட்டுவார்கள். சில குறிப்பிட்ட திருமஞ்சனங்களின் இறுதியில் அரையர் அந்த கைலி வஸ்திரங்களைப் பிழிவார். அந்தத் தீர்த்தத்தை எல்லோருக்கும் கொடுப்பார்கள். ஈரவாடைத் தீர்த்தம் என்று பெயர்.) வெற்றிலைக்கு எப்பொழுதுமே இஸ்லாமியர்கள் போல் வெற்றிலையின் மேல்ப்பக்கம் சுண்ணாம்பு தடவுவார்கள். மார்கழி மாத பகல்பத்து உற்சவம் பத்து நாள்களும் துலுக்க நாச்சியாரைத் தரிசிக்க(அல்லது அவர் இவரை தரிசிக்க?) அந்த சன்னதியின் முன்பான படிவழியாக ஏறித்தான் ‘அருச்சுனன் மண்டபம்’ செல்வார். அரையர், ‘ஏழைகளுக்கிரங்கும் பெருமாள்… ஆபரணங்களுக்கு அழகுசேர்க்கும் பெருமாள்… பன்னிரு நாச்சியார் பரவும் பெருமாள்…’ என்று இழுத்து இழுத்துப் பாட மெதுவாக ஆடி ஆடி அந்தப் படியில் ஏறும் அழகைக் காண கண்கோடி வேண்டும். அரங்கனது நடை ஒவ்வொரு இடத்துக்கும், நேரத்துக்கும் ஒவ்வொரு மாதிரி வித்தியாசமானது. ‘திருப்பதி வடை, காஞ்சி குடை, அரங்கர் நடை’ என்றே ஒரு சொலவடை உண்டு. எல்லாவற்றிலும் துலுக்கநாச்சியார் படியேற்றம் விசேஷமானது. ‘படியேற்ற ஸேவை’ என்றே இதற்குப் பெயர்.

7. செங்கமலவல்லித் தாயார் (தான்யலஷ்மி):

ஆர்யபடாள் வாயில் வழியாக வெளிவந்து, தாயார் சன்னதிக்குச் செல்லும் வழியில் இருக்கும் சன்னதி. இந்தத் தாயார் தான்யங்கள், கோயில் மாடு, யானை, கால்நடைகளுக்குக் காவல் நாயகி. கோயிலின் தான்யக் கிடங்கு இங்குதான் இருக்கிறது.

8. ஸ்ரீரங்க நாச்சியார்:

ஸ்ரீரங்கநாதரின் அதிகாரபூர்வ பட்டமகிஷி. கோயில் வாயில் தாண்டாதவர். பங்குனி உத்திரம் அன்று திருமண உற்சவமும் சேர்த்தி சேவையும். எதிரில் இருக்கும் கம்ப மண்டபத்தில் தான் கம்பராமாயணம் அரங்கேறியது.

9. ஆண்டாள்:

நம்பெருமாள் சம்மதம் சொல்ல பெரியாழ்வார் ஆண்டாளை அழைத்துக் கொண்டு வந்து தங்கியிருந்த இடம் தான் இன்றைய வெளி ஆண்டாள் சன்னதி. அதன் வாயிலே அப்போதெல்லாம் காவிரிக் கரையாக இருந்திருக்கிறது. பின்னர் திருட்டு பயம் காரணமாக உற்சவர் மட்டும் ரெங்கவிலாச மண்டபத்தில் இருக்கும் ராமர் சன்னதிக்கு மாற்றப்பட அது இப்போது உள்ஆண்டாள் சன்னதி என்றழைக்கப்படுகிறது.

10. உறையூர் கமலவல்லி:

அரங்கநாயகி தவிர்த்தும், உறையூரில் கமலவல்லி என்பவரையும் அரங்கன் மணக்கிறார். உறையூர் செங்கமலவல்லி அல்லது வாசவல்லித் தாயார் என்பவர் உறையூரை ஆண்ட சோழனின் மகள். குழந்தையில்லாத நந்த சோழனுக்கு ஒரு தாமரைத் தடாகத்தில் கிடைத்த குழந்தையை எடுத்து ‘கமலவல்லி’ என்று பெயரிட்டு வளர்த்துவந்தான். விளையாடும் போது குதிரையில் சென்ற அரங்கனைக் கண்டு கமலவல்லி காதல்கொள்கிறாள். அவளிடம் காணப்படும் வருந்தத்தக்க(?!) மாற்றங்களை அறிந்த மன்னன், விசாரித்து அறிந்து, பிறகு விமரிசையாகத் திருமணம் செய்து வைக்கிறான். ஆனால் பின்னர் அவள் அரங்கனின் சன்னதியில் கலந்து மறைந்துவிட, மனம் மாறிய மன்னன் தன் செல்வம் அனைத்தையும் கொண்டு அவ்விருவருக்கும் உறையூரில் ஒரு கோவிலைக் கட்டினான்.

ஆனால் அரங்கன் சிலை அங்கு கிடையாது. பங்குனி உத்திரத்திற்கு முன்னால் ஆறாம் திருநாள் ஸ்ரீரங்கத்திலிருந்து அரங்கன் உறையூர் சென்று அங்கு திருமணம் நடக்கும். அங்கு மோதிரத்தைக் கமலவல்லிக்குக் கொடுத்துவிட்டு வந்து, இங்கு தொலைந்துவிட்டதாக ரெங்கநாயகியிடம் பொய்சொல்லி, காவிரிக்கரையில் தீவட்டிகளைக் கொண்டு (அன்று ஒருநாள் மட்டும் தீவட்டிகள்(தீவர்த்திகள்) தலைகீழாக பூமியை நோக்கிக் காண்பித்தவாறு எடுத்துச் செல்லப்படும்.) தேடுவதுபோல் பாசாங்கு செய்வது வருடா வருடம் இன்னமும் நடக்கிறது.  🙂

உறையூரிலிருந்து திரும்பி வரும் வழியில் வெளிஆண்டாள் சன்னதியில் ஆண்டாளுடன் மாலை மாற்றும் வைபவம் மட்டும் நடைபெறும். திருமண உற்சவம் இவருக்குக் கிடையாது.

11. காவிரித் தாயார்:

சொல்லத் தேவையே இல்லை. ஆடிப் பெருக்கு(இது சில வருடங்களில் ஆடி 18ம் தேதியும் சில வருடங்களில் ஆடி 28ம் தேதியும் வரும்.) அன்று அம்மாமண்டபத்தில் எழுந்தருளுவது விசேஷம்.

12. பராங்குச நாயகி (நம்மாழ்வார்):

தன்னை பராங்குச நாயகியாக பாவித்து பெருமாளை நாயகனாகப் பாவித்து,

‘கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்
கண்ணநீர் கைகளால் இறைக்கும்..”
    [ரொம்பத்தான்!..:)]  

என்று தாய்ப் பாசுரமாக அரங்கனைப் பாடிய நம்மாழ்வார்; மார்கழி 7ம் திருநாள் பராங்குச நாயகியாக பெண்வேடத்தில் வரும் நம்மாழ்வாரை கைத்தல சேவையில் ஆட்கொள்ளும் ஆழ்வார் மோட்சம் காரணமாக இவரும் நாயகியாகிறார்.

உலகில் அனைத்து உயிருமே ஜீவாத்மா (நாயகி), இறைவன் மட்டுமே பரமாத்மா (நாயகன்) என்பதன் குறியீடு பராங்குச நாயகி. இதை நம்புபவர்கள் எந்த நிலையிலும் விதவைக் கோலம் பூணத் தேவை இல்லை(மாட்டார்கள்.) இதை நம்புபவர்கள் பெண்களில் வித்தியாசம் காண மாட்டார்கள். பெண்கள் முதலில் இப்படி பேதம் பார்க்காமல் இருக்க ஆரம்பிக்கவேண்டும், முக்கியமாக இது போன்ற பண்டிகை நாள்களில்.

kooththanoor saraswathy amman

வெள்ளைக் கொத்துக்கடலை

தேவையான பொருள்கள்:

வெள்ளை கொத்துக் கடலை – 1 கிலோ (கருப்பு)
பச்சை மிளகாய் – 8 (அல்லது காய்ந்த மிளகாய்)
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
கசகசா – 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – சிறுதுண்டு (விரும்பினால்)
தேங்காய் – 1 
 

தாளிக்க: எண்ணெய், கடுகு, 1 காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

vellai koththukkadalai sundal

செய்முறை:

  • கொத்துக்கடலையை 15 மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். முடிந்தால் இடையில் ஒருமுறை நீரை மாற்றவும்.
  • குக்கரில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நான்கைந்து விசில் வரும்வரை நன்கு வேகவைக்கவும்.
  • கடலைப் பருப்பு, கசகசாவை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
  • ஊறவைத்த கடலைப்பருப்பு, கசகசா, இஞ்சி, தேங்காய், சிறிது மல்லித் தழை, பச்சை மிளகாயுடன் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • கொத்துக் கடலையுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்துப் பிசிறிவைக்கவும்.
  • அடுப்பில் வாணலியில் கொஞ்சம் அதிகமாகவே எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • பிசிறிவைத்துள்ள கடலைக் கலவையைக் கொட்டி, நன்கு மேலும் 10 நிமிடங்களுக்குக் கிளறி இறக்கவும்.

* இந்தச் சுண்டலையே தண்ணீர் அதிகம் சேர்த்து தளர்வாக பூரி பிரசாதத்திற்கு இங்கே கோயில்களில் தருகிறார்கள். கடலைப் பருப்பு சேர்ப்பதால் கிரேவி சேர்ந்தாற்போலும், மற்ற மசாலாக்கள் அதிகம் சேர்க்காவிட்டாலும் கசகசா சேர்ப்பதால் அதிக மணம், சுவையாகவும் இருக்கிறது. சுண்டல் மிஞ்சினால் நாமும் அப்படிச் செய்யலாம்.

-0-

கருப்புக் கொத்துக்கடலை

தேவையான பொருள்கள்:

கொத்துக் கடலை – 1 கிலோ (கருப்பு)
காய்ந்த மிளகாய் – 7, 8
கடலைப் பருப்பு – 1/4 கப்
எள் – 1 டீஸ்பூன்
மல்லிவிதை – 1/4 கப்
தேங்காய் – 1

தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

karuppu koththukkadalai sundal

செய்முறை:

  • கொத்துக்கடலையை 12லிருந்து 15 மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். சின்னக் கொத்துக்கடலையாக இருந்தால் 12 மணி நேரத்தில் நிச்சயம் ஊறியிருக்கும். முடிந்தால் இடையில் ஒருமுறை நீரை மாற்றவும்.
  • குக்கரில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நான்கைந்து விசில் வரும்வரை நன்கு வேகவைக்கவும்.
  • கடலைப் பருப்பு, எள்ளை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
  • ஊறவைத்த கடலைப்பருப்பு, எள், மல்லிவிதை, தேங்காய், காய்ந்த மிளகாயுடன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • கொத்துக் கடலையுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்துப் பிசிறிவைக்கவும்.
  • அடுப்பில் வாணலியில் கொஞ்சம் அதிகமாகவே எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • பிசிறிவைத்துள்ள கடலைக் கலவையைக் கொட்டி, நன்கு மேலும் 10 நிமிடங்களுக்குக் கிளறி இறக்கவும்.

* சுண்டல் மிஞ்சினால் கூட்டு, குழம்பில்(இந்த வகைக்  கொத்துக்  கடலை  புளிநீரில் சுவை சேர்க்கும்.) சேர்க்கலாம். அதிகம் மிஞ்சினால், தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து ஆனால் உலர் கறியாக, சப்பாத்தி வகைகளுக்கு பக்க உணவாக உபயோகிக்கலாம்..

-0-

* கொத்துக்கடலை பட்டாணிக்கு குக்கரில் வேகவைக்கும் வரை உப்பு சேர்த்துவிடக் கூடாது. தோல் தனியாக கழண்டுவிடும்.

* சிலர் சீக்கிரம் வேக, கொத்துக்கடலையுடன் சமையல் சோடா சேர்ப்பார்கள். உண்மையில் நன்றாக ஊறவைத்தாலே, நன்றாக வெந்துவிடும். சமையல் சோடா சேர்க்கவே தேவை இல்லை. நான் சேர்ப்பதில்லை. ஆனால் அப்படிச் சேர்ப்பவர்கள், ஊறவைக்கும்போதே சோடா உப்பைச் சேர்த்து, நீரை வடித்துவிட்டு வேக வைக்கலாம். இதனால் சீக்கிரம் வேகும்; சத்தும் வீணாகாது.

*  நவராத்திரி பிரசாதமாக இல்லாமல் சாட் உணவாகச் செய்யும் நாள்களில் இவற்றில் கொஞ்சம் மிளகாயைக் குறைத்துக் கொண்டு சன்னா மசாலா சேர்க்கலாம். 

* மேலே உள்ள இரு முறைகளிலும் பட்டாணிச் சுண்டலும் செய்யலாம்.

நவராத்திரி: ஆடலுடன் பாடலைக் கேட்டு… – சின்னக் கண்ணன்.

நவராத்திரி வெள்ளிகிழமை, பெண் வயதுக்கு வருவது, சீமந்தம் போன்ற விசேஷங்களுக்குச் செய்யும் இனிப்பு வகை உணவு.

arisi puttu (salladai for premalatha)arisi puttu (maavu)

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்
வெல்லம் – 2 கப்
நெய் – 1/2 கப்
முந்திரிப் பருப்பு – 100 கிராம்
கொப்பரைத் தேங்காய் – 1/2 மூடி
ஏலப்பொடி

arisi puttu

செய்முறை:

  • பச்சரிசியை நன்றாக நீரில் களைந்து, நீரை வடியவைக்கவும்.
  • மிக்ஸியில் பொடித்து நைஸ் மாவாக அரைத்து, மாவு அல்லது மைதாச் சல்லடையில் சலித்துக் கொள்ளவும். (மேலே தங்கியிருப்பதை மீண்டும் மீண்டும் மிக்ஸியில் போட்டு அரைத்தால் ஒரு டீஸ்பூனுக்கு மேல் அரிசி ரவை மிஞ்சாது.)
  • அடுப்பில் வாணலியில் சிறிது சிறிதாக சலித்த மாவைப் போட்டு நல்ல சிவப்பாக வறுத்து ஒரு தாம்பாளத்தில் ஆறவிட வேண்டும்.
  • ஆறியதை மீண்டும் நைஸ் சல்லடையில் சலித்து கட்டிகளை உடைத்துக் கொள்ளவும்.
  • நல்ல கொதிக்கும் வெந்நீராக வைத்து, அதை மாவில் சிறிது சிறிதாகத் தெளித்துப் பிசிறவும்.(கை சுடும்!) தண்ணீர் அதிகம் சேர்த்துவிடக் கூடாது. மாவு, பிடித்தால் பிடிபடவும், உதிர்த்தால் உதிரவும் வேண்டும். இப்படித் தண்ணீர் சேர்க்கும்போதே ஓரளவு மாவு பொரிந்து பெரிதாகும். இதை அப்படியே ஒரு பாத்திரத்தில் அழுத்தி வைத்து முக்கால் மணி நேரம் வைக்கவும்.
  • மறுபடியும் கொஞ்சம் பெரிய ரவைச் சல்லடையில் (இப்போது மாவு அளவில் பெரிதாகி இருப்பதால்) சலித்து, கட்டிகளை நீக்கி, மாவை ஒரு துணியில் முடிச்சிட்டு ஒரு பாத்திரத்தில் வைத்து, குக்கரில் வெயிட் போடாமல் இட்லி மாதிரி அல்லது இட்லி வாணலியில் ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். (முடிச்சிடாமல் ஒரு அகலமான பாத்திரத்தில் துணியை விரித்து மாவைக் கொட்டி, நாலு பக்கமும் வெளித் தெரியாமல் மூடினாலும் போதும்.)
  • குக்கர் அணைத்த அடுத்த விநாடியே மூடியைத் திறந்து,  பாத்திரத்தை (உள்ளிருக்கும் மாவோடு) வெளியே எடுத்துவிடவும். (குக்கர் மூடியை உடனே திறக்காமல் வைத்தால் மூடியில் இருக்கும் நீர் துணிமீது விழுந்து, ஆங்கே மாவுக்கும் பொசிந்து, கட்டி தட்டிவிடும். 😦
  • துணியைப் பிரித்து, வெந்த மாவை ஒரு தாம்பாளத்தில் கொட்டி, பாதி நெய்யையும் உருக்கிச் சேர்த்து கையால் உதிர்த்துக் கொள்ளவும். அதிக யத்தனமுமில்லாமல் மாவு தானே உதிரும்.
  • தேங்காயை மிக மெலிதாகக் கீறிக் கொள்ளவும். முந்திரியை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
  • ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரி தேங்காய்த் துண்டுகளைப் பொரித்துவைத்துக் கொள்ளவும்.
  • நல்ல பாகு வெல்லத்தை அரை கப் தண்ணீர் சேர்த்து முற்றிய கெட்டிப் பாகாகக் காய்ச்சவும். இறுதியில் ஏலப் பொடி சேர்க்கவும்.
  • பாகு காய்ந்ததும் இறக்கி, பொரித்த முந்திரி தேங்காய்த் துண்டுகளும், வேகவைத்து உதிர்த்து வைத்திருக்கும் மாவையும் கொட்டி நன்றாகக் கிளறவும்.
  • மீதி இருக்கும் நெய்யையும் உருக்கிச் சேர்க்கவும். 

* 2 கப் அரிசிக்கு சுமார் 6 கப் புட்டு கிடைக்கும்.

* பச்சரிசியை வறட்டு மாவாக மிஷினில் அரைத்து வந்து, வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு நல்ல சிவப்பாக வறுத்து, தொடர்ந்து மேலே சொல்லியுள்ளபடியும் செய்யலாம்.

 நவராத்திரி நாயகி: ஸ்ரீரங்கநாயகி ஷைலஜா

இதை நான் தான் எழுதினேனான்னு எனக்கே இப்ப படிச்சா சந்தேகமா இருக்கு. ஆனா, ஆமாம்னு மரத்தடி சொல்லுது. 😦

இலக்கியப் பயணத்துல இதெல்லாமும் சகஜம் தான் போலிருக்கு! 🙂

-0-

எல்லா வாசனையும் வேற ஏதாவது நினைவையும் கூட்டிவரும் அல்லது எல்லா நினைவுகளுக்கும் ஏதாவது வாசனையும் உண்டுன்னு நான் நிச்சயம் நம்பறேன். இன்னிக்கு நவராத்திரி வெள்ளிக்கிழமைல எங்க வீடு முழுக்க அடிக்கற உக்காரை வாசனைல கிளம்பின நினைவுகள்….

எனக்கு 6, 7 வயசு இருக்குமான்னு சரியாத் தெரியலை. நவராத்திரி வெள்ளிக்கிழமைன்னா எங்க பாட்டி காலைலேருந்து உக்காரையும் சீயாளமும் செஞ்சுட்டு மத்யானம் ஒரு ஒருமணிவாக்குல வந்து கூடத்துல உக்காருவா. எனக்கு நல்லா வயிறு ரொம்ப சாதம் ஊட்டிவிட்டுட்டு, (செமத்தியா சாப்பிடுவேன், வஞ்சனையே இல்லாம.) அன்னிக்கு அலங்காரம் ஆரம்பிக்கும்.

எப்பவுமே நவராத்திரி வெள்ளிக்கிழமைக்கு ஆண்டாள் வேஷம்தான்.

அம்மா ஓரளவு ஏற்கனவே சௌரி, குஞ்சலம், ராக்குடி, ஜடைபில்லை (இதை எடுக்கும் போதேல்லாம் பாட்டி, ‘அவ்வளவும் அந்தக் காலத்து கெம்புக்கல்லு, கடைல போட்டுடாத மதிப்பு தெரியாம’ன்னு சொல்வா. அம்மாவும் ஒவ்வொரு தடவையும் சலிக்காம சரின்னு சொல்வா) இன்னும் நிறைய அலங்கார சாமானெல்லாம் எடுத்து கொண்டு வந்து ரெடியா வைப்பா. அதெல்லாம் வெச்சிருக்கற டப்பா என்னவோ சொல்லத் தெரியலை, பிரத்யேகமா நல்ல வாசனையா இருக்கும்.

ஆண்டாளுக்கு இடக்கொண்டையா வலக்கொண்டையான்னு வருஷா வருஷம் இந்தக் கேள்வியைக் காத்துல விடாம, பாட்டி, அலங்காரம் ஆரம்பிச்சதே இல்லை. அப்புறம் மீனாட்சிக்குத்தான் வலக்கொண்டை, ஆண்டாளுக்கு இடக்கொண்டைதான்னு முடிவுசெஞ்சு, முதல்ல ஒரு சின்ன- பிறந்த குழந்தை வளையல்ல கருப்பு ரிப்பனால சுத்தி ஏற்கனவே தயாரா செஞ்சுவெச்சிருக்கற- வளையத்தை இடப்பக்கம் வகிடுக்குப் பக்கத்துல வெச்சு, சைட் கொண்டைலேருந்து தலை அலங்காரம் ஆரம்பிப்பா. அம்மா உதவிக்கு எல்லாம் எடுத்துக் கொடுப்பா.

ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திலயே தூங்க ஆரம்பிப்பேன். தூங்கித் தூங்கி சரியும் போதெல்லாம் அண்ணன் பிடிச்சுக்குவான். தம்பி பக்கத்துலயே உக்கார்ந்து எல்லாத்தையும் வேடிக்கை பாத்துகிட்டு இருப்பான். எதுக்குன்னு தெரியலை, அப்பப்ப அடக்கமுடியாம ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து சிரிச்சுக்குவோம். எதையாவது எடுக்க எடுக்க கை நீட்டுவான். அம்மா தொடக்கூடாதுன்னு திரும்பத் திரும்ப கையை எடுத்து விடுவா.

பின்பக்கமும் பின்னி, குஞ்சலம் வெச்சு, கருப்புக் கயிறால கட்டி முடிச்சிருக்கும்போது நான் நல்லாவே தூங்கியிருப்பேன். முகத்தைத் துடைச்சி, மை, பவுடர், நெத்தில ஆண்டாள் வெச்சுக்கற மாதிரி ஒத்தை ஸ்ரீசூர்ணம் எல்லாம் அம்மாதான் செய்வா. அப்புறம் இன்னும் கொஞ்சம் தலை அலங்காரம்- நெத்திசுட்டி, முன்பக்க தலைசாமான் எல்லாம் திரும்ப பாட்டி..

அப்புறம் அம்மாவோட பூச்சூட்டலுக்கு, பாட்டி வாங்கின தாமரைப்பூ கலர்ல அடர்பச்சை பார்டர் நிறைய ஜரிகை போட்ட பட்டுப் புடவையை அம்மா எடுத்துண்டு வருவா. அதை அம்மா கட்டிண்டு ரொம்ப நான் பார்த்ததேயில்லை. அந்தப் புடவைல ஒரு வாசனை வரும்பாருங்க, யாரோட அம்மா புடவையும் அப்படி வராதுன்னு நிச்சயம் நம்பறேன். சும்மா ஜம்முனு இருக்கும்.

அப்படியே வழவழன்னு ஆனா ரொம்ப கனமா இருக்கும். அந்தக் காலப் பட்டுப்புடவை எல்லாமே ரொம்ப உறுதியா இருக்கும். பாட்டி பத்து வருஷம் முன்னாடியே 26 ரூபாய்க்கு வாங்கினதுன்னு ரொம்பப் பெருமையா சொல்வா. அதை அப்படியே அகலத்தைப் பாதியா மடிச்சு எனக்குக் கட்டிவிட ஆரம்பிப்பா. ரொம்ப கஷ்டமான வேலை.

எல்லாம் முடிய மூணு மணி ஆயிடும். அன்னிக்கி எனக்கு என்ன பிடிக்கும்னா அம்மா என்னை ரிக்ஷா வெச்சு ரெண்டு மூணு சொந்தக்காரங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவா. கீழச்சித்திரை வீதி, அம்மாமண்டபம் ரோடுன்னு சவாரில தூக்கம் போயிடும். இல்லைன்னா ஜுரம் வந்தாதான் ரிக்ஷா சவாரியெல்லாம் கிடைக்கும்.

அன்னிக்கி ஒருநாள்தான் அம்மா ரொம்ப முக்கியமான சொந்தக்காரங்க வீட்டுக்கு மட்டும் கொலுவுக்குப் போவா. மீதிநாள் எல்லாம் வீட்டுலயே இருந்து வரவங்களைக் கவனிக்கவே நேரம் சரியா இருக்கும். அன்னிக்கும் சீக்கிரமா போயிட்டு நாலு நாலரைக்குள்ள முடிச்சுண்டு திரும்பிடுவோம். அஞ்சு மணிலேருந்து எங்க வீட்டுக்கே எல்லாரும் வர ஆரம்பிச்சுடுவாங்க.

திரும்ப வீட்டுக்கு வந்ததும் எனக்கு சீயாளம் சாப்பிடக் கொடுப்பா. ஸ்வீட் பிடிக்காது, அதனால. சாப்பிட்டுட்டு, என்னோட கொலுவேட்டை ஆரம்பிக்கும். எங்கவீதி மட்டும்தான் அப்ப எனக்குப் போகத் தெரியும். எங்க வீதி இருக்கே, அது ஸ்ரீரங்கத்து மத்த வீதிகள் மாதிரி அடைசலா ரெண்டு பக்கமெல்லாம் வீடு இருக்காது. கோவில்மதிலை ஒட்டின முதல்சுற்று உத்தரவீதி முழுக்க, ஒருபக்கம்தான் வீடு.

அதுலயும், ‘இந்தப்பக்கம் 10 வீடு, அந்தப்பக்கம் 10 வீட்டுக்கு மட்டும் தான் போயிட்டு வரணும், சீக்கிரம் வந்துடணும் சரியா?’னு எப்பவும் சொல்லித்தான் அனுப்புவா. (ஆக்சுவலா இந்தப்பக்கம் ‘பெரியாத்து நாராயணன்’ வீடு, அந்தப் பக்கம் ‘SKR பட்டர்’ ஆத்துவரைக்கும்னு தான் சொல்வா. நாந்தான் உங்களுக்குப் புரியாதேன்னு பத்துவீடுன்னு கணக்கு சொன்னேன்.) ரொம்ப சமத்தா ‘சரி’ன்னு சொல்லிக் கிளம்புவேன். உண்மையிலேயே முகம் அப்பாவி மாதிரி எனக்குப் பால்வடியும். பார்க்கறவங்க எல்லாம், ‘ஐயோ பாவம்! எவ்ளோ சமத்தா இருக்கு’ன்னு தான் நினைப்பாங்க.

வாசல்வரைக்கும் வந்து அம்மா வழியனுப்பி திரும்ப உள்ள போறவரைக்கும் காத்துண்டிருப்பேன். அம்மா போனாளோ இல்லையோ, வாசல்ல விளையாடிண்டிருக்கற பசங்களை வரயான்னு கூப்பிட்டுப்பேன். ‘நச்சா’ அப்புறம் இன்னும்கொஞசம் பசங்களோட கிளம்புவேன். எல்லாரும் ஆர்வமா வருவாங்க. ஆனா என்ன பிரச்சனைன்னா, பெண்குழந்தைன்னு என்னை உள்ளவரச்சொல்லி ஒக்காரவெச்சு மரியாதை செய்யறவங்க, அவங்களை மட்டும் ரேழிலயே- சிலபேர்வீட்டுல வாசல்லயேகூட- நிறுத்திடுவாங்க. அவங்க அதெல்லாம் கண்டுக்கமாட்டாங்க. எனக்கும் ஒண்ணும் வித்தியாசமாத் தெரியாது அப்பல்லாம். ஆனா இப்ப நினைச்சா அதெல்லாம் வருத்தமா இருக்கு.

ஃப்ரெண்ட்ஸ் இருக்கற தைரியத்துல அம்மா சொன்ன எல்லையை எல்லாம் தாண்டிடுவேன். அப்பல்லாம் தெருவுல செருப்புப் போடாமத்தான் கொலுவுக்குப் போனதா நினைக்கிறேன். அந்த அளவுக்கு வீதியும் அப்பல்லாம் ரொம்ப குப்பை, ட்ரா·பிக் எல்லாம் இல்லாம நல்லா இருந்திருக்கணும். எங்கவீதில இன்னொன்னு என்னன்னா, எல்லாமே வீடுகள் கிடையாது. நடுநடுவுல சில கோமுட்டிச் செட்டியார்கள் பெரிய பெரிய வீடுகள் கட்டி, கோவில்ல உற்சவம்னா மட்டும் வந்து தங்கி, பெருமாள் சேவிச்சுட்டுப் போவாங்க மத்த நாள்லகூட சும்மா யாராவது விருந்தா வந்து தங்கிட்டுப் போவாங்க. நான் அங்கயெல்லாம் கூடப் போய் எல்லார்கிட்டயும் என் வீட்டுக்கு அடையாளம் சொல்லி அவசியம் எங்கம்மா வரச்சொன்னாங்கன்னு சொல்லிட்டு வந்துடுவேன். அவங்களும் நிஜம்னு எல்லாரும் வந்து என் வீட்டு ஜாதகத்தையே சொல்லி எங்க பாட்டியை முழிக்கவெச்சிருக்காங்க.

இதுல முக்கியமா __________ வீட்டுக்குப் போனது மட்டும் ஏனோ மறக்கவே இல்லை. நான் அவங்க வீட்டுக்குப் போனபோது ஒரு பாட்டியும், ஒரு மாமியும் (மாட்டுப்பொண்ணும்) மட்டும் இருந்தாங்க.

அந்த மாமி, போனவருஷம் இதே ஆண்டாள் வேஷம் போட்டுண்டு போனபோது, ‘ஆண்டாளைத் தெரியுமா உனக்கு?’ன்னு கேட்டதுக்கு, ‘தெரியும், என்னை மாதிரியேதான் ஆண்டாள் இருப்பா’ன்னு நான் பெரியமனுஷி மாதிரி சொன்னதை ஞாபகமா சொல்லிச் சிரிச்சுண்டே ஆசையா அந்தப் பாட்டிகிட்டக் கூட்டிண்டுபோய் காமிச்சா. பாட்டி லைட்டப் போடச்சொல்லிப் பார்த்துட்டு, ‘ஏண்டி இவ்ளோ அலங்காரமும் உங்க பாட்டி பண்ணினாளா, இந்த வயசுக்கும் உடம்பு அடடான்னு வரது அவளுக்கு.. என்னைப் பாரு எதுக்கும் துப்பில்லாம போயாச்சு… துப்பு இருந்துட்டாலும் இந்த வீட்டுல…. ‘ அப்புறம் ஏதேதோ சொல்லிண்டே போனா.

“என்ன அச்சானியமா இடக்கொண்டை போட்டிருக்கா, கூறுகெட்டுப் போயிட்டாளா உங்கபாட்டி?”ன்னும் கேட்டா. அந்த மாமி எவ்வளவோ சொல்லியும் நம்பாம போகவும், அந்த மாமி உள்ளேயிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஸ்நானப் பவுடர் (இது தீபாவளிக்கு தலைக்கு உபயோகிப்போம்) பாக்கெட் எடுத்து அதுல ஆண்டாளுக்கு இடக்கொண்டைன்னு காமிச்சு அவங்களை ஏதோ கண்டிக்க, பாட்டி அப்பவும் நிறுத்தாம, எங்க பாட்டி, தன் மாட்டுப்பெண் எல்லாம் மானாவாரியா சத்தமா பேசிகிட்டே இருந்தாங்க. ரெண்டு பேரும் எனக்கே தெரியாத, சொன்னாலும் புரியாத என்வீட்டு மேட்டர் எல்லாம் பேசி சண்டைபோட ஆரம்பிச்சுட்டாங்க. அவங்க வீட்டுல விளையாட பாப்பா வேற எதுவும் இல்லை. கொலுவும் வைக்கலை. நான் போணும், போணும்னு பூனைக்குட்டி குரல்ல சொன்னதை காதுலயே வாங்கலை. ரேழில நிக்கற பசங்க கால்மாத்தி கால்மாத்தி நிக்க ஆரம்பிச்சுட்டாங்க. நான் திரும்பித் திரும்பி அவங்களையே பாக்கறேன்.

ஒருவழியா அந்த மாமி நினைவுவந்து ‘திருப்பாவை சொல்வியா ஆண்டாள்?’னு கேட்டா. நான் ‘நீளாதுங்கஸ்..’னு தனியன்லேருந்து ஆரம்பிச்சேன். மார்கழித்திங்கள்- லேருந்துதான் ஆண்டாள் பாடினதுன்னு அப்ப எனக்குத் தெரியாது. சொல்லச்சொன்னா சுவிட்ச் போட்ட மாதிரி தனியன்லேருந்து தான் அதுவும் கொஞ்சம்தான் சொல்லத் தெரியும்.

[வருஷா வருஷம் இந்த மாதிரி கேள்விகள் மாறிண்டே போகும். அடுத்த வருஷம் ‘உங்க பாட்டிக்கு நீ செல்லமா, உங்கண்ணனா?’, அதுக்கும் அடுத்த வருஷம் ‘உங்கப்பா- அம்மா சொல்றதக் கேப்பாளா, பாட்டி சொல்றதையா?’ இப்படி…

எந்த வருஷம் ‘உங்கம்மா உனக்கு (வைரத்)தோடு கட்டிட்டாளா?’ன்னு கேக்கறாங்களோ அந்த வருஷத்தோட நவராத்திரிக்கு அழைக்கப் போறத நிறுத்திடணும். அழைக்கப் போற வயசத் தாண்டிட்டோம்னு அர்த்தம். :P]

‘எந்த ஊர்லடீ ஆண்டாள் நீளாதுங்கஸ் பாடியிருக்கா?’ன்னு திரும்ப அந்தப் பாட்டி என்னைச் சீண்ட, அந்த மாமி, ‘நீ கிளம்பு’ன்னு எனக்கு வெத்தலைபாக்கு, குங்குமம் கொடுத்து அனுப்பினா. அப்ப ஏன்னே தெரியலை, அந்த மாமி முகமெல்லாம் அழுது அழுது சிவந்திருந்தது.

அப்படியே தொடர்ந்து அந்தப்பக்கம் சக்கிலியன் கோட்டை வாசல் வரைக்கும் போவோம். அதாவது வீதில சரிபாதில ஒரு இடைவெளிவிட்டு கோட்டைவாசல் வரும். சாயங்காலத்துக்கு மேல அந்தப் பக்கம் போனா கோட்டைவாசல் காவல் தெய்வம் லேடீஸப்(!) பிடிச்சுக்கும்னு நாராயணன் சொல்லியிருக்கான். (இந்த நாராயணனப் பத்தி வேற எப்பவாவது சொல்றேன். இவன் இல்லைன்னா என் குழந்தைக்கால நாள்களுக்கு வண்ணமே இல்லை.) அதனால ‘கதர்க்கடை நாராயணன்’ குண்டு அஷோக் வீட்டோட திரும்பிடுவோம்.

அங்கங்க உட்கார்ந்து எழுந்து புடவை அவுந்துபோறது, நெத்திச்சுட்டி நகரரதெல்லாம் அந்தந்த வீட்டு மாமிதான் சரிசெஞ்சு விடுவா. எல்லாரும் ஏனோ எங்க பாட்டின்னா கொஞ்சம் மரியாதையோ பயமோ வெச்சிருப்பா. எல்லா வீட்டுலயும் பாட்டி பத்தித்தான் பேசுவா. என்னை யாரும் ரொம்ப கண்டுக்க மாட்டா.

சொல்ல மறந்துட்டேனே.. சிலபேர் வீட்டுல என்கூட வர boys-க்கு வெறும் பொரிதான் கொடுப்பா. அதனால அவங்க அவங்க வீட்டு வாசல்லயே உக்கார்ந்து எனக்குக் கொடுத்த புட்டு, சுண்டல் எல்லாம் பிரிச்சு அவங்களுக்குக் கொடுப்பேன். எப்படியும் எங்க வீட்டுல அதை யாரும் கண்டுக்கமாட்டா. எங்களுக்கு சின்னக்கையா இருக்கறதால பிடிக்கமுடியாம அப்படியே என் புடவைத் தலைப்புல கொட்டிப் பிரிச்சுப்போம்.

அப்புறம் எங்கவீட்டுக்கு வலப்பக்கம் இருக்கற வீடுகளுக்குப் போக, திரும்ப, எங்கவீட்டைத் தாண்டித்தான் போகணும். தாண்டும்போது நைசா பாத்தா எங்கவீட்டுக் கூடம் ஜேஜேன்னு கூட்டமா இருக்கும். எல்லாம் நான் அழைச்சுட்டு வந்த மக்கள். ரொம்பப் பெருமையா இருக்கும்.

அப்படியே கண்டுக்காம அந்தப் பக்கம் போக ஆரம்பிப்போம். அந்தப் பக்கம் கோவிலுக்கு முன்னாடி தேர்முட்டி வீடுவரைக்கும் போவோம். ‘ரன்’ படத்துல ‘தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ..’ பாட்டுல ஒரு தேரடி வருதே அதுதான் எங்கவீட்டுக்கிட்ட இருக்கற தேரடி. அதுல தெரியற முதல்வீடு (இப்ப) சுந்தர்பட்டர் வீடு வரைக்கும் போய்த் திரும்பிடுவோம்.

அன்னிக்கி திரும்பும்போது பாக்கறோம், கொஞ்சநேரம் முன்னாடி அழுத மாமி அந்தப் பாட்டியைக் கையைப் பிடிச்சு கோவிலுக்கு கூட்டிப் போறா. ரெண்டுபேரும் சிரிச்சு பேசிகிட்டே வேற போறாங்க. என்னால நம்பவே முடியலை.

“என்னடா இது, அந்த மாமி லூசா, என்னை யாராவது அழவிட்டா நான் அவாளோட ஒரு மாசமாவது டூ விடுவேன்”ன்னு சொன்னேன். ஒருத்தன், “நான் பத்து மாசம் டூ விடுவேன்”ன்னான். ‘கொட்டு’ மட்டும், “நான் ஒரு வருஷம்”னான். 10 மாசத்தைவிட ஒருவருஷம் பெருசான்னு அப்ப சரியாத் தெரியலை. ஏதோ ஒண்ணு. ஆக எங்க யாருக்குமே அவங்க ரெண்டு பேரும் சிரிச்சுப்பேசறது பிடிக்கலை. அதிர்ச்சிதான்.

ஆனா ‘கொட்டு’ கொஞ்சம் சூட்டிகை. நிறைய ஊர் ஊரா மாத்தலாகி படிச்சு வந்தவன். எங்க க்ரூப்லயே அவன் மட்டும் கொஞ்சம் பெரியவங்க தமிழ்ல பேசறதெல்லாமும் புரிஞ்சுப்பான். அவந்தான் அவங்க என் பாட்டியைப் பத்தி அவங்க வீட்டுக்கு நாங்க போயிருந்தபோது என்ன பேசிண்டாங்கன்னு இப்ப சொன்னான். எனக்கு அதிர்ச்சியா இருந்தது. கைல வெத்தலைப்பாக்கு சுண்டல் எல்லாம் போட்டு கனமா ஒரு பை. புடவை முன்கொசுவம் வேற லூசாகி அதைவேற தூக்கிகிட்டே தடுக்கி தடுக்கி நடக்கறேன், நடக்கவே முடியாம. அவன் சொன்னது வேற சரியாப் புரியலையா, என்னவோ கொஞ்சம் வாடிப்போயிட்டேன்.

அப்ப பார்த்தா தூரத்துல எங்கப்பா ஓடிவராரு என்னப் பார்த்துட்டு. ஆஃபீஸுலேருந்து வந்தவரு, வாசல்லயே நான் வரேனான்னு பாத்துகிட்டிருந்திருக்காரு. தூரக்க எங்க கோஷ்டியைப் பாத்ததும் ஓடிவந்து, என் கைல இருக்கற பையெல்லாம் வாங்கிக்காம அப்படியே மொத்தமா என்னைத் தூக்கிக்கறார். கூட வந்தவங்களை அப்படியே விடலாமான்னெல்லாம் அப்ப ஒண்ணும் மரியாதை எல்லாம் தெரியாது. “ஹை, அப்பா!”ன்னு நானும் ஓடிட்டேன்.

“ஆருடா அது, பெரிய மனுஷங்களா இருக்காங்க.. அப்பாக்கே ஆருன்னு தெர்லயே..” குரலை மழலையா மாத்தி, கொஞ்சிண்டே அப்பா என் மூஞ்சியோட மூஞ்சி வெச்சுத் தேக்கறாரு. வெள்ளிக்கிழமை எப்பவும் ஷேவ் பண்ணமாட்டார் அப்பா. ‘ஐயோ மீசை.. மீசை..’ன்னு (கன்னப்பரப்பும் மீசைதான் அப்ப) சிரிச்சுகிட்டே இருக்கேன். ‘குத்துது’ன்னு மேல சொல்லமுடியாம ஒரே கிச்சுக்கிச்சா இருக்கு. தடுக்க முடியாம ஒருகைல பை, இன்னொன்னுல குங்குமச்சொப்பு. நெளிய நெளிய தூக்கிகிட்டுப் போய் எங்கவீட்டு நடுக்கூடத்துல இறக்கிவிட்டார். பாட்டிதான் ஓடிவந்து கட்டிப் பிடிச்சுண்டா. அம்மா லேட்டானதுக்கு திட்டவேயில்லை. கொலுக்கு வந்தவங்க கூத்துல என்ன மறந்துட்டாளோ என்னவோ.

பாட்டி உக்காரவெச்சு திரும்ப எல்லாத்தையும் மெதுவா அவிழ்த்து, தலைசாமான் எல்லாம் பத்திரமா எடுத்துவெச்சுண்டே அப்பாவை சீண்டறா. ‘எப்படிடா இருக்கா என் பேத்தி? சேத்து வெச்சுக்கோ கல்யாணத்துக்கு இப்போலேருந்தே..’.

அப்பா சிரிச்சுண்டே, ‘வாட், நான் எதுக்கு சேக்கணும், என் பொண்ணை எவனாவது பணம் கொடுத்து, கல்யாணம் செஞ்சுண்டு போவான்’னு சொல்லி முடிக்கறதுக்குள்ள அம்மா ஒரு சின்ன சண்டை போட தயாரா வந்தா. ‘ஆமா, நீங்க அப்படித்தான் என்னை செஞ்சுண்டேளா, எவனாவது பகல் கொள்ளைக்காரன் வந்து உங்களை மொத்தமா சுரண்டனும்.(நாக்குல சனி!) நான் கண்குளிரப் பாக்கணும்.”

மேல கூட அம்மா பேசியிருப்பா நிறைய. ஆனா அதுக்குள்ள அந்தப் பட்டுப்புடவையோட நிலைமையைப் பாத்து பதறிட்டா. எல்லா இடத்துலயும் சந்தனம், குங்குமம், எண்ணைக் கறை, பார்டர் எல்லாம் ரோட்டுல புரண்டு மண். அலறிட்டா. “சின்னக் குழந்தைக்கு யாராவது இந்தப் புடவை எல்லாம் கட்டலாமா, சொன்னா கேக்கமாட்டேங்றேளே”ன்னு பாட்டியை நொந்துண்டா. “உனக்கு இப்படி எத்தனை புடவை வேணும்?” பாட்டி அமைதியா திரும்பக் கேக்கறா. இப்படி பேசிண்டிருக்கும்போதே பாட்டி என்னை அலங்காரத்துலேருந்து மொத்தமா ரிலீஸ் செஞ்சு, தலையை அலுங்காம திரும்பப் பின்னிட்டா.

‘இனிமே இது எங்க சாப்பாடு சாப்பிடப் போறது, ஒரு டம்ளர் பால் கொண்டா’- அம்மாவுக்கு சொல்லிட்டு, ‘நீ போய் அவளோட கவுனைக் கொண்டாடா’- அண்ணனுக்கும் சொல்லிட்டு தான்போய் திருஷ்டி சுத்திப்போட உப்புமிளகாய் எடுக்க உள்ள போனா.

மூணுபேரும் பொருளோட திரும்ப வரதுக்குள்ளயே எந்த கண்ணனோட காதல் தொந்தரவும் இல்லாததால அன்றைய ஆண்டாள் அப்பா மடிலயே நிம்மதியா தூங்கிடுச்சு.

லாலி!

-0-

இவ்ளோ சந்தோஷமான வீட்டுல, மறுநாள் பாட்டி எனக்கு பல்விளக்கி விடும்போது, “ஏன் பாட்டி உனக்கு குழந்தையே இல்லையாமே, அப்பாவ நீ ஓசியடிச்சியாமே?,” ‘கொட்டு’ சொன்னதோட அர்த்தம் சரியாப் புரியாம நான் கேட்டுவைக்க, அதுவரைக்கும் ஒரு தைரியமான, திமிர்பிடிச்ச, சமுதாயம் பார்த்து மரியாதை தர ஒரு ஆளாவே நான் பாத்துவந்த என் பாட்டி கதறி அழுததும், எங்கவீடே அன்னிக்கி சோகமானதும் இப்ப நினைச்சாலும் கலக்கமா இருக்கு.

அதுக்கு அப்புறமும் பாட்டி என்கிட்ட சாதாரணமா, ரொம்ப ரொம்பப் பாசமா, பிரியமா, உயிராத்தான் இருந்தான்னாலும் எனக்கு என்னவோ சின்ன இடைவெளி விழுந்துடுச்சோன்னு தோணிகிட்டே இருந்தது. நவராத்திரி வெள்ளிக்கிழமைன்னாலே இந்த உறுத்தல் இன்னும் அதிகமாயிடுது.

பேசிமுடிச்ச வார்த்தைகளை திரும்ப எடுக்கமுடியும்னா எவ்ளோ நல்லா இருக்கும்!
 

நவராத்திரி: நடமாடும் கொலு – எம்.கே.குமார்

தேவையான பொருள்கள்:

நிலக்கடலை – 1 கிலோ
பச்சை மிளகாய் – 5
இஞ்சி – சிறிய துண்டு (விரும்பினால்)
தேங்காய் – 1 1/2 கப்
எள்- 1 டேபிள்ஸ்பூன்
கசகசா – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க: எண்ணெய், கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை.

nilakkadalai sundal

செய்முறை:

  • நிலக்கடலையை இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடிக்கவும்.
  • ஊறிய கடலையை ஒரு கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் 3 விசில் வரை வைத்து நன்கு வேகவைத்து, மீண்டும் நீரை வடிக்கவும்.
  • எள், கசகசாவை வறட்டு வாணலியில் நன்கு வறுத்து மிக்ஸியில் நைசாகப் பொடிக்கவும். (வறுக்காவிடில் கசகசா மசியாது.)
  • இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காயை உப்பு சேர்த்து, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • வேகவைத்த கடலை, அரைத்த விழுது சேர்த்து நன்கு நீர்ப்பசை இல்லாதவாறு வதக்கவும்.
  • இறக்கும் முன் அரைத்த பொடியைத் தூவி மேலும் இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

* மற்ற சுண்டல்களை விட நிலக்கடலை அதிகப் பித்தம் சேர்க்கும். இஞ்சி சேர்ப்பது நல்லது.

* எளிமையாக எதுவுமே அரைத்துவிடாமல், காய்ந்த மிளகாய் தாளித்து, தேங்காய்த் துருவல் மட்டும் சேர்த்தும் செய்யலாம்.

* சுண்டல் மிஞ்சினால் அரைத்துவிட்ட  கூட்டு, குழம்பில் சேர்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

பட்டாணி – 1 கிலோ
தேங்காய்த் துருவல் – 1 கப்
பச்சை மிளகாய் – 8
கசகசா – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மாங்காய்த் துருவல் – 1/2 கப்
கேரட் துருவல் – 1/2 கப் (விரும்பினால்)
கொத்தமல்லித் தழை

தாளிக்க: எண்ணெய், கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

pattaani sundal

செய்முறை:

  • பட்டாணியை 12 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடித்து மீண்டும் கழுவவும்.
  • புதிதாக ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்து மீண்டும் நீரை ஒட்ட வடிக்கவும்.
  • கசகசாவை மூழ்கும் அளவு தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
  • தேங்காய், 6 பச்சை மிளகாய், ஊறவைத்த கசகசா, உப்பு இவற்றை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். அல்லது கசகசா ஊறியதில் மிஞ்சியிருக்கும் தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம்.
  • அடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், இரண்டு பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கியது, கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • வேகவைத்த பட்டாணி, அரைத்த விழுது சேர்த்து நீர்ப்பசை இல்லாமல் வதக்கவும்.
  • கேரட், மாங்காயை சன்னமாகத் துருவி வைத்துக் கொண்டு, பரிமாறும் போது மட்டுமே சிறிது சிறிதாகக் கலந்து தரவும். 

* எக்காரணம் கொண்டும் சுண்டல்களுக்கு, முக்கியமாக பட்டாணி, கொத்துக் கடலைக்கு உப்பைச் சேர்த்து வேக வைக்கக் கூடாது. தோல் தனியாகக் கழண்டு விடும்.

* கேரட், மாங்காயை முன்னமே சுண்டலில் கலந்து வைத்தால் உப்புடன் சேர்த்து நொசநொசவென்று ஆகிவிடும். அவ்வப்போது கொஞ்சமாக சேர்த்துக் கொள்வதே நல்லது. புளிப்பான மாங்காயாக இருந்தால் மிகக் குறைவாக உபயோகிக்கவும்.

* தேங்காயையும் துருவலாக இல்லாமல் பொடிப் பொடியாகக் கீறிவைத்துக் கொண்டு கலக்கலாம். பீச் சுண்டல் எஃபக்ட் கிடைக்கும்.
 
* அரைத்த விழுதை, பட்டாணியில் பத்து நிமிடங்கள் பிசிறிவைத்தும், தாளித்துச் செய்யலாம். 

* இந்த முறையில் பச்சைப் பயறு, பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பிலும் சுண்டல் செய்யலாம்.

நாங்கள் கிராமத்திற்குப் போகும்போது பஸ் ஸ்டாண்ட்(டில் காத்திருக்கும் நேரத்தில்) புளியமரத்திலிருந்து கொழுந்தைப் பறித்துவந்து குழம்பு, துவையல், ரசம், பச்சடி எல்லாமே செய்திருக்கிறோம். இந்த ஆந்திரச் சுண்டல் புதுமையாக இருந்தது.

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 1/2 கிலோ
பச்சை மிளகாய் – 3, 4
புளியங்கொழுந்து – 1 கப்
எண்ணெய்
உப்பு
கொத்தமல்லித் தழை

செய்முறை:

  • பயத்தம் பருப்பை உப்பு சேர்த்து அரை வேக்காடாக சுண்டல் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், கடுகு, காயம், உளுத்தம் பருப்பு தாளித்து, பச்சை மிளகாய், புளியங்கொழுந்து சேர்த்து வதக்கவும்.
  • அத்துடன் வேகவைத்த பயத்தம் பருப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
  • நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.

* இத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கி சப்பாத்தி வகைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

பயத்தம் பருப்பு/ கடலைப் பருப்பு சுண்டலை இந்த முறையிலும் செய்யலாம். ஆனால் இப்போது சொல்வது, செய்வதற்கும் உண்பதற்கும் எளிமையான சுண்டல். முன்னேற்பாடுகள் எதுவும் இல்லாமலே செய்துவிடலாம்.

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு(அல்லது கடலைப் பருப்பு) – 1 கிலோ
தேங்காய்த் துருவல் – 1 கப்
கேரட் துருவல் – 1/4 கப் (விரும்பினால்)
கொத்தமல்லித் தழை
உப்பு

தாளிக்க: எண்ணெய், கடுகு,  இரண்டு காய்ந்த மிளகாய், பெருங்காயம், 2 பச்சை மிளகாய், கறிவேப்பிலை.

payaththam paruppu sundal

செய்முறை:

  • பருப்பை நன்கு கழுவி, ஒன்றரைப் பங்கு தண்ணீர், உப்பு சேர்த்து, குக்கரில் 5 நிமிடம் வெயிட் போடாமல் வேகவிடவும்.
  • திறந்து பார்த்து, பருப்பு அரைப்பதம் மட்டும் வெந்ததும் (கையால் நசுக்கினால் நசுங்க வேண்டும், அவ்வளவே.) நீரை வடித்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில், எண்ணெய் வைத்து கடுகு, இரண்டாகக் கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • வேகவைத்த பருப்பைக் கொட்டி மேலும் ஐந்து நிமிடங்கள் கிளறவும்.
  • தேங்காய்த் துருவல், கேரட் துருவல், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலந்து உபயோகிக்கலாம்.

kadalai paruppu sundal

* பயத்தம் பருப்பு வேகவைக்கும் போது குழைந்துவிடும் என்று அஞ்சுபவர்கள்:

ஒன்றிரண்டு மணி நேரங்கள் பருப்பைத் தன்ணீரில் ஊறவிடவும். ஒரு பாத்திரத்தில் ஒரு பங்கு தண்ணீரைக் கொதிக்க வைத்து, உப்புச் சேர்த்து, பருப்பையும் அதில் கொட்டி, அடுப்பை அணைத்து மூடிவைத்துவிடவும். பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்துத் திறந்தால் சரியான பதத்தில் இருக்கும். கடலைப் பருப்பாக இருந்தால் கொதிக்கிற தண்ணீரில் போட்டு மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்கவைத்து அடுப்பை அணைக்கவும். மிச்ச நீரை வடித்து விடவும்.

அல்லது

தண்ணீரில் ஊறவைக்காமல், குக்கரிலும் வைக்காமல், நேரடியாக ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றரைப் பங்கு தண்ணீர் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும், சிம்மில் வைத்து, அதில் பருப்புடன் உப்புச் சேர்த்து வேகவிடவும். அடிக்கடி திறந்து பார்த்து, அரைப்பதம் வெந்ததும், (பத்தே நிமிடங்களில் ஆகிவிடும்.) இறக்கி நீரை வடியவிடவும். நம் கை மீறி எதுவும் நடக்காது.

சரி, எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தும் பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மட்டுமல்ல, தட்டப் பயறு, பச்சைப் பயறு போன்ற மென்மையான பயறுகள் கூட குக்கரில் வைத்ததில் லேசாகக் குழைந்து விட்டது. இனிமேலும் வாணலியில் போட்டு வதக்கினால் மேலும் நிலைமை மோசமாகும் என்றால் என்ன செய்வது? சிம்ப்பிள்! இறக்கிய உடனே, வெந்த பயறிலிருந்து நீரை வடித்துவிட்டு  நேராக குளிர்ந்த நீர்க் குழாயடியில் நீட்டவும் அல்லது குளிர்ந்த நீரை நிறைய சேர்த்து வடிகட்டவும். பயறு ஒன்றோடென்று ஒட்டாமல் கொஞ்சம் கடினத் தன்மை அடையும். பின்னர் சமாளிப்பது சுலபம். எதற்கும் பயறுகளை குக்கர் அடங்கியதும் உடனே திறந்துபார்த்துவிடுவது நல்லது.

-0-

வெல்லச் சுண்டல்:

* பயத்தம் பருப்பை வாணலியில் வறுத்து, தண்ணீர் சேர்த்து முக்கால் பதம் வேகவைக்கவும். ஒரு கப் பயத்தம் பருப்பிற்கு ஒரு கப் வெல்லம் சேர்த்துக் கிளறி, நீர் வற்றியதும் தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, நெய் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

* ஒரு கப் பயத்தம் பருப்போடு ஒரு கப் கேரட் துருவலும் சேர்த்துச் செய்தால் ஒன்றரை கப் வெல்லம் போட்டுக் கிளறலாம்.

* கால் கிலோ கடலைப் பருப்பை வாணலியில் வறுத்து, நீர் விட்டு முக்கால் பதம் வேகவைத்து, 200 கிராம் சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறுகியதும் ஏலப்பொடி, சிறிது நெய் சேர்த்துக் கிளறி இறக்கலாம்.

தேவையான பொருள்கள்:

பச்சைப் பயறு – 1 கிலோ
பச்சை மிளகாய் – 6, 7
இஞ்சி – சிறிய துண்டு
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சைச் சாறு (விரும்பினால்)
 
தாளிக்க: எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

pachchai payaru sundal

செய்முறை:

  • பச்சைப் பயறை தண்ணீரில் ஊறவைக்கவும்.
  • நீரை வடித்து, புதிதாக அரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்து மீண்டும் நீரை ஒட்ட வடிக்கவும்.
  • தேங்காய், 4 பச்சை மிளகாய், இஞ்சுத் துண்டு, உப்பை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்.
  • அடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், மிச்சமிருக்கும் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கியது, கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • வேகவைத்த பயறு, அரைத்த விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • விரும்பினால் இறக்கியதும் சில துளிகள் மட்டும் எலுமிச்சைச் சாறு பிழியலாம். இது நாம் தவறுதலாக அதிக உப்போ, காரமோ சேர்த்திருந்தால் சரிசெய்யும். மேலும் மேலும் சாப்பிடும் ஆசையைத் தூண்டும்.

* இந்த முறையில் பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பிலும் செய்யலாம்.

* அரைத்த விழுதை, பயறில் பத்து நிமிடங்கள் பிசிறிவைத்து, தாளித்தும் செய்யலாம். இதில் நன்றாக சுவை உள்ளே ஊறியிருக்கும். சீக்கிரம் வதக்கி இறக்கிவிடலாம்.

-0-

வெல்லச் சுண்டல்:

பச்சைப் பயறை வறட்டு வாணலியில் வறுத்து, குக்கரில் நன்றாக வேகவைக்கவும். கால் கிலோ பருப்பிற்கு 300 கிராம் வெல்லம் கெட்டிப் பாகாக வைத்து, வேக வைத்த பயறு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி, இறுகியதும் ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்.

தட்டப் பயறு இரண்டு மூன்று அளவுகளில் கிடைக்கும். நான் அநேகமாக பெரிய அளவான பயறில் காரச் சுண்டலும், சிறிய அளவிலான பயறில் இனிப்பு சுண்டலும் செய்கிறேன். எந்த அளவிலும் மற்ற சாமான்கள் சேர்க்க வேண்டிய அளவு ஒன்றுதான்.

thatta payaru

தேவையான பொருள்கள்:

தட்டப் பயறு – 1 கப்
வெல்லம் – 1 கப்
தேங்காய்த் துருவல் – 1/2 மூடி
ஏலப்பொடி
நெய் – 2 டீஸ்பூன்

thatta payaru vella sundal

செய்முறை:

  • தட்டப் பயறை 12 மணி நேரம் நன்கு ஊறவைத்து, குக்கரில் வேகவைத்து நீரை வடித்துக் கொள்ளவும்.
  • வெல்லத்தை சிறிது நீர் விட்டு முற்றிய பாகாகக் காய்ச்சிக் கொள்ளவும்.
  • பாகு தயாரானதும், வெந்த பயறு, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி சேர்த்துக் கிளறவும்.
  • இறக்கும் முன் 2 டீஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

* இந்தச் சுண்டல் சீக்கிரம் கெடாது. இரண்டு நாள்களுக்கு வைத்திருக்கலாம்.

* எல்லா வெல்லச் சுண்டல்களுக்கும் இறுதியில் சிறிது நெய் சேர்த்துக் கிளறுவது அதிக மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

நவராத்திரி: துர்கா பூஜா (கல்கத்தா) – நிர்மலா
 

வறுத்து அரைக்காமல் கொஞ்சம் சுலபமாகச் செய்யக் கூடிய முறை.

தேவையான பொருள்கள்:

தட்டப் பயறு – 1 கிலோ
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
தேங்காய் – 1 மூடி
சாம்பார்ப் பொடி – 3, 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், ஒரு பச்சை மிளகாய், கறிவேப்பிலை.

thatta payaru sundal

செய்முறை:

  • தட்டப் பயறை சுமார் எட்டிலிருந்து பன்னிரண்டு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.
  • மீண்டும் கழுவி, குக்கரில் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிட்டு, நீரை வடிக்கவும்.
  • புளியை நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • புளி நீர், வேகவைத்த பயறு, தேவையான அளவு உப்பு, சாம்பார்ப் பொடி சேர்த்து மேலும் 10 நிமிடங்களுக்குக் கிளறவும். நீர் வற்றி, புளி வாசனை போக வேண்டும்.
  • இறக்கும் முன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும்.

* இந்த முறையில் மொச்சைப் பயறு, பச்சைப் பயறிலும் செய்யலாம்.

* சுண்டல் மிஞ்சினால் அடுத்த வேளை கறியில், கூட்டில் அல்லது குழம்பில் சேர்த்துக் கொள்ளலாம். இதிலும் புளி, உப்பு, காரம் சேர்த்திருக்கிறோம் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* 2 தக்காளி, இஞ்சி, கரம் மசாலா, நீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, சப்பாத்தி வகைகளுக்கும் உபயோகிக்கலாம்.

நவராத்திரி நாயகி: ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி (மலேசியா) – ரங்கமீனா

தாயார் சன்னதியில் பட்டர் தவிர காலையில் ஆண்களை அங்கே பார்க்கவே முடியாது. அதுவும் அந்தப் பத்து நாள்கள் பெண்கள் காலையில் பிரதட்சணம் செய்ய அவசியம் அங்கே வந்துவிடுவார்கள். அந்த நாள்களில் மட்டும் 12 பிரதட்சணம் செய்வது நல்ல விஷயம்தான். நானும்கூட செய்திருக்கிறேன்.

ஆனால் பிரதட்சணங்களை கைவிரலில் எண்ணாமல், நிறையபேர், கோயிலில் கொடுத்த மஞ்சள்காப்பில் கோயில் சுவற்றில் தனக்கென்று ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அங்கே ஒவ்வொரு பிரதட்சணத்துக்கும் ஒரு மஞ்சள் புள்ளி அடையாளம் வைப்பது, கட்டியிருக்கும் புதுப்புடவையிலிருந்து ஒரு நூல் இழையை உருவி, வில்வமரத்தில் சுற்றுவது எல்லாம் அநியாயம்.

சின்ன வயதில் நாரயணன் (என்னைவிட 5 வயது பெரியவன்) தாயார் கோயில் கொலு பற்றிச் சொல்லியிருக்கிறான், “ஐய, உங்காத்து கொலுவெல்லாம் ஒரு கொலுவா? சும்மா உங்காத்து உயரத்துக்கு தானே வெக்கறீங்க, தாயார் கோயில்ல வெப்பாங்க பாரு கொலு, ஐயோ! கோயில் எவ்வளவு உயரமோ, அவ்ளோ உயரம் வெப்பாங்க! எவ்வளவு படின்னு எண்ணிப் பாக்கவே முடியாது! நான் ஒவ்வொரு தடவையும் எண்ணப்பாப்பேன்; நடுவுல விட்டுப் போயிடும் (என்று கையை உதறுவான்). அப்புறம் யானை சூப்பரா நொண்டி அடிக்கும்.. ‘ரெங்கா’ன்னு மூணுதடவை கத்தும்..”

இந்த நாராயணன் கதைகளை நான் என்றிலிருந்து கேட்க ஆரம்பித்தேன் என்று சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் என் குழந்தை நாள்களை சுவாரசியமாக்கியவன். எப்பொழுதும் ஒரு 4 பேரையாவது நிறுத்திவைத்து தான் படித்த காமிக்ஸ்களை இன்னும் மசாலா சேர்த்து கையை ஆட்டி ஆட்டிக் கதை சொல்லுவான். இரும்புக்கை மாயாவியும் விக்கிரமாதித்தன் வேதாளமும், டோக்கியோவில் தமிழ்வாணனும் எப்படி என்று அவன் வர்ணனைப்படி தான் எனக்குத் தெரியும். நிச்சயம் ஒரிஜினலைவிடப் பிரமாதமாகத்தான் சொல்லியிருப்பான் என்று நம்புகிறேன்.

எங்கு அவன் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தாலும் போட்டது போட்டபடி ஓடுவேன். முக்கால்வாசி யார்வீட்டுக் காரிலோ, சுவற்றிலோ சாய்ந்துகொண்டு எங்களை எதிரில் நிற்கவைத்துத்தான் சொல்வான். அவனுக்காகத்தான் கூட்டம் கூடியிருக்கிறது என்பதை அவன் தெளிவுப்படுத்துவதுபோல் தலைமையாகத்தான் நிற்பான்.

வீட்டிற்குத் தெரியாமல், பத்மா டாக்டர் வீட்டு வாசலில் சரித்து வைத்திருக்கும் மாட்டு வண்டியில் சறுக்குமரம் விளையாட, பையன்கள் படையுடன் போய்க்கொண்டிருக்கிறேன். குண்டு அஷோக் வீட்டு வாசலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நாராயணன், ‘ஐயோ சாயங்காலம் ஆச்சு. இனிமே சக்கிலியன் கோட்டை வாசல் தாண்டிப் போகாத! போனா, அங்க இருக்கு பாரு ரெண்டு சிலை, அது உன்னைப் பிடிச்சுக்கும். அதுக்கு லேடீஸ்னாலே பிடிக்காது.”

நான் என்னளவுக்கு புத்திசாலித்தனத்தோடு, “எல்லாக் கோட்டை வாசல்லயும்தான் பொம்மை இருக்கு. எல்லாருமா பிடிச்சுக்கறாங்க. அங்கெல்லாம் நான் போயிருக்கேனே..”

“அங்கல்லாம் கோயில் நுழைவாசல் இருக்கும். பெருமாள் காப்பாத்துவார். மேலவாசல்ல மட்டும் நுழைய வாசல் இல்லையோன்னோடி. அதான் உன்னை யாரும் காப்பாத்த முடியாது. அப்புறம் நான் சொல்லலைன்னு சொல்லாத. அவ்ளோதான்.” முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு நான் மட்டும் திரும்பிவிடுவேன்.

சொல்லும் கதையை எல்லோரும் நம்புவதுபோல் கொஞ்சம் கூட எங்குமே லாஜிக் உதைக்காமல் எதிர்கேள்வியால் மடக்கவே முடியாமல் சொல்வான்.

அப்படிப்பட்ட நாராயணன் சொன்னதை வைத்து தாயார்கோயில் கொலு பற்றிய என் கற்பனைகள் எவ்வளவு விரிந்தது என்று சொல்லத் தெரியவில்லை. மிகப் பெரிய (நாராயணனாலேயே) எண்ணமுடியாத அளவு படிகளை உடைய கொலுவையும், யானை நொண்டி அடிப்பதையும், ரெங்கா என்று கத்துவதையும், அதன்குரல் அப்போது எவ்வளவு பெரிதாகக் கேட்கும் என்பதையும் என்னால் கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை. ஏனென்றால் ஆடு மாடு பறவைகளின் குரல்களைக் கேட்டிருப்பது போல் யானையின் குரலை நான் வேறு எப்போதும் கேட்டதேயில்லை.

வேட்டுச்சத்தம் கேட்டதும் ஊரே, கோயில் கொலுவிற்கு ஓடும். என்வீட்டில் கூட்டிப் போனதே இல்லை. எப்பொழுதும் வீட்டு கொலுவிற்கு வருபவர்களைக் கவனிக்கவே அம்மா, பாட்டிக்கு நேரம் சரியாக இருக்கும். வேறு யாரும் அக்கம் பக்கத்தவர்கள் அந்தக் கூட்டத்தில் ரிஸ்க் எடுத்து சிறு பெண்ணான என்னைக் கூட்டிப் போகத் தயாரில்லை.

தாங்கமுடியாத ஒரு நாளில் அழுதுபுரண்டதில் மறுநாள் ஆபீஸிலிருந்து அப்பா சீக்கிரம் வந்து என்னைக் கூட்டிப் போவதாகக் கூறினார். அந்த 24 மணிநேரத்தை எப்படிக் கழித்தேன் என்று சொல்லத் தெரியவில்லை. அவ்வளவு பெரிய கொலுவில் எல்லா பொம்மைகளும் பெரிதாக இருக்குமா, சிறிதாக இருக்குமா, என்னென்ன பொம்மைகள் இருக்கும்.. பலமுறை யானை ‘சப்பை’ வைக்காமல் நொண்டி அடித்து, ‘ரெங்கா’ என்று கத்திவிட்டுப் போனது கற்பனையில்.

மறுநாள் போனபோது நான் எதிர்பார்த்ததைவிட அதிகக் கூட்டம். (இப்போதெல்லாம் அதைவிட அதிகம். ஆனால் அப்போதைக்கு அதுவே எனக்கு அதிகம்.) கூட்டம் அருகே போனதும் அப்பா என்னைத் தூக்கி வைத்துக் கொண்டார். கொஞ்சம் (கொஞ்சமென்ன கொஞ்சம், அதிகமாகவே அப்போது) குண்டுக் குழந்தை. அப்பா ‘தம்’ கட்டிக் கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கிறேன். பார்த்தால் ஒரு மண்டபத்தில் தாயார் மட்டும் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தார். எனக்கு எதுவும் சுவாரசியமாக இல்லை. ‘கொலு பார்க்கப் போகலாம்பா!’ என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தேன். அப்பா கவனிக்கவே இல்லை. ஒரு சிணுங்கலாக அடம்பிடிக்கவும், “இன்னும் என்ன கொலும்மா, இதுதான் கொலு!” என்றார்.

“இல்லப்பா நிறைய மா(வா)னத்லேருந்து படிவெச்சு கோயில்ல பொம்மைக் கொலு வெச்சிருப்பாளே.. அது பாக்கப் போகலாம்.”

அப்பாவிற்குப் புரியவில்லை.

“அப்படியெல்லாம் எங்கயும் வெக்கலை. இதுதான் கொலு. பாரு, யானை இப்ப நொண்டி அடிக்கும்; ரெங்கான்னு கத்தப் போறது.”

“சரி, அதெல்லாம் முடிஞ்சதும் கொலு பாக்கப் போகலாம்பா.” அப்பா அப்புறமும் கவனிக்கவேயில்லை. நாதஸ்வரமும் கொட்டுச்சத்தமும் என் மென்மையான காதுகளுக்கு அதிகமாக இருந்தது. கூட்டம் வேறு ஒரே பேச்சுச் சத்தம். எல்லாவற்றையும் கொஞ்சம் நேரம் நிறுத்தினால் போதும் என்றாகிவிட்டது.

திடீரென்று யானை ஒரு எக்கி எக்கியது. அப்பா தூக்கி வைத்திருந்தும் எனக்கு ஓரளவுதான் தெரிந்தது. ஆனால் பின்னாளில் ஜெமினி சர்க்கஸ் யானை செய்ததில் ஆயிரத்தில் ஒருபங்கு கூட இல்லை. நான் பாண்டி விளையாடும்போது அடிக்கும் அளவுக்கு நொண்டியை எதிர்பார்த்த எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பிறகு ஓங்கி ஒரு சத்தம் கொடுத்தது. அதை எப்படி எழுத்தில் எழுதுவது என்று தெரியவில்லை. எனக்கு வயிறுவரை அதிர்ந்தது. அப்படித் தொடர்ந்து மூன்றுமுறை செய்தது. உடனே எல்லோரும் ‘ஓ’ என்று சந்தோஷத்தில் கத்தினார்கள்.

அப்பாவும் சிரித்துக்கொண்டே, தன் பெண்ணின் ஆசையை நிறைவேற்றி வைத்த திருப்தியோடு, “எப்படி யானை ரெங்கான்னு கத்தித்து?!” என்றார். தூக்கிவாரிப் போட்டது எனக்கு. அப்படி எங்கே கத்தியது? புரியாத வகையில் ஏதோ சத்தம் தான் படுபயங்கரமாக எழுப்பியது. இதை எப்படி ரெங்கா என்று கத்துவதாகச் சொல்கிறார்கள்? கூட்டம் கலையத் தொடங்குகிறது.

அவ்வளவுதானா??!!

என்னை யானை ஏமாற்றிவிட்டதை என்னால் நம்பவே முடியவில்லை. ஏன் பெரியவர்கள் எல்லாம் இவ்வளவு மண்டுவாக இருக்கிறார்கள்?

என்னைத் தூக்கிக்கொண்டே எதிரிலிருந்த கம்ப மண்டபம் வரை வந்த அப்பா, இறக்கிவிடப் பார்க்கிறார்.

“கொலு பாக்கப் போகலாம்பா..”

“இதுதாம்மா கோயில் கொலு. நம்பாத்துலதான் நிறைய வெச்சிருக்கோமே. இன்னும்கூட நிறைய பொம்மை வாங்கித்தரேன்…”

“இல்லப்பா, கோயில்ல கொலு இருக்குன்னு நாராயணன் சொன்னான்; உங்களுக்குத்தான் தெரியலை..”

இப்போது அப்பாவிற்குப் புரிந்திருக்கும் விஷயம். நாராயணன் என்ற பெயர் என்வீட்டுப் பெரியவர்களுக்கு ஒரு அலர்ஜி. ஏதோ தட்டிவிட்டிருக்கிறான் என்று தெரிந்துகொண்டு, “சரி, நாளைக்கு அவனையும் கூட்டிண்டு போகலாம்..”

நான் நகர மறுக்கிறேன். மீண்டும் வாசல்வரை தூக்கிக்கொண்டு வருகிறார்.

“அப்படி எதுவும் இல்லைடி செல்லம். இருந்தா அப்பா காமிக்க மாட்டேனா?” கோயில் வாசலில் மீண்டும் கீழே இறக்கிவிடப் பார்க்கிறார்.

உடம்பை விறைப்பாக்கிக் கொண்டு இறக்கிவிடமுடியாமல் வைத்துக்கொள்கிறேன். ஒருவார்த்தை கூட என்னால் பேசமுடியவில்லை. தொண்டையை எதுவோ பேச முடியாமல் அடைத்துவிட்டது. என்னால் இந்த ஏமாற்றத்தைத் தாங்கவே முடியவில்லை. இறங்கி நடக்கவே தெம்பில்லை போல் இருந்தது.

அப்பாவும் ஒன்றும் செய்யமுடியாமல் தூக்கிக்கொண்டே வீடுவரைக்கும் வருகிறார். அவருக்கு மூச்சுவாங்குகிறது. நன்றாகவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

அப்பா என்று இல்லை, எல்லோரையுமே பழிவாங்கவேண்டும் போல் இருக்கிறது. எப்படி என்றுதான் தெரியவில்லை.

வீட்டுக்குப் போனதும் பாட்டியிடம் என்னை விட்டுவிட்டு அப்பா சாப்பிடப் போய்விட்டார். ஒன்றும் பேசாமல் பாட்டிமேல் சாய்ந்துகொண்டேன். ஏமாற்றத்தில் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது.

“உன்பேத்திய இன்னிக்கி தூக்கிண்டு வீதிபிரதட்சணம் வரேன்னு வேண்டுதல் போல இருக்கு எனக்கு.” பெண்ணை சந்தோஷப்படுத்தப் போகிறோம் என்று நினைத்து ஏமாந்ததில் அப்பா பொரிந்து தள்ளுகிறார்.

பாட்டிமேல சாய்ந்திருக்கும்போது அம்மா, நான் கோயிலுக்கென்று போட்டுக்கொண்டு போன புதுகவுனை மாற்ற வந்தாள். குப்புறப் படுத்துக்கொண்டு அவிழ்க்கவே முடியாமல் கையால் இறுகப் பிடித்துக்கொண்டேன். யார் என்ன சொன்னாலும் கேட்கக்கூடாது, எதிர்க்க வேண்டும் என்று ஒரு பிடிவாதம்; வெறுப்பு.

சாப்பிட்டுக் கொண்டே நடந்த எல்லாவற்றையும் பாட்டியிடம் சொல்கிறார் அப்பா. ‘அந்த நாரயணனோட சேர விடாதீங்க இனிமே’ என்ற முடிவுரையோடு தன் சிற்றுரையை முடிக்கிறார்.

வெளியே யாராவது போய்விட்டு வந்தால் என்தம்பி அவர்கள்மேல் ஓடிவந்து சாய்ந்துகொள்வான். அவ்வளவு நேரமாக என்னை விளையாடத் தேடியிருப்பான் போல் இருக்கிறது; அவ்வளவாக அப்போது அவனுக்கு வார்த்தைகளும் சேர்த்து பேசவராது. பாட்டி மடியில் நான் படுத்திருந்ததால் அவன் வந்து ஆசையாக என் கால்மேல் தலைவைத்துப் படுத்துக்கொண்டான். ஒரு எத்து எத்திவிட்டேன். இப்போது நினைத்தாலும் மனம் பதறுகிறது. அவன் தலை ‘டங்’கென்ற சத்தத்தோடு கீழே விழுந்தது. இதற்குமட்டும் அம்மா கடுப்பாகி என்னை அடிக்க வந்தாள். பாட்டி, ‘அது தன் நிலைல இல்லை, விட்டுடு’ என்று சொல்லித் தடுத்துவிட்டாள்.

உடனே அப்பா பாதியில் எழுந்துவந்து, தம்பியைத் தூக்கித் தன் மடியில் வைத்துக்கொண்டு தொடர்ந்து சாப்பிட ஆரம்பித்தார். அது இன்னும் தாங்கமுடியாததாக இருந்தது. அதற்குப் பதில் அப்பா என்னைத் திட்டியிருக்கலாம் என்று தோன்றியது.

‘கோயில்ல கொலுன்னா, தாயார் அலங்காரமா உட்கார்ந்திருக்கா இல்லை, பட்டமகிஷியா அதுதாண்டி. தனியா பொம்மை எல்லாம் வெப்பாளா?.. அவ்ளோ பெரிய உடம்பை வெச்சுண்டு யானைக்கு நொண்டி அதுக்குமேல அடிக்க முடியுமா.. அதுக்கு ரெங்கான்னு உன்னை மாதிரி சொல்ல பேச்சுதான் வருமா?.. ஆனா அப்படி அது சொல்றதுன்னுதான் நினைச்சுக்கணும்… நாரயணன் ரொம்ப துஷ்டை. சேராத அவன்கூட..”

பாட்டி விட்டு விட்டு சொல்லிக்கொண்டே தலையைத் தடவித் தூங்கவைக்கப் பார்க்கிறாள். இதெல்லாம் எதுவுமே நான் நினைத்ததுபோல் நடக்கமுடியாது என்பதும், நாராயணன் துஷ்டை என்பதும் என்னால் தாங்கவே முடியவில்லை. அவ்வளவு நேரம் அடக்கிக்கொண்டிருந்த என் கண்ணிலிருந்து கண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது.

எனக்கு நினைவு தெரிந்து வந்த முதல் ஏமாற்றம், கோபம். எப்பொழுதும்போல் காரியம் சாதித்துக்கொள்வதற்காக வருவித்துக் கொண்ட அழுகையாக இல்லாமல் என் யத்தனமில்லாமல் வந்த முதல் அழுகை.

குழந்தைகளின் கற்பனைகள் நொறுங்குவதும், குழந்தைமை தொலைவதும் இன்னொரு மரித்து எழும் வலி.

[இன்னமும் நவராத்திரி சமயத்தில் ஸ்ரீரங்கத்தில், ‘தாயார் கோயிலில் கொலு!’ என்றும், ‘யானை நொண்டி அடிக்கிறது!’ என்றும் “ரெங்கா என்று மூன்று முறை கத்துகிறது!’ என்றும்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.]

நன்றி: மரத்தடி.காம்

நவராத்திரி: நினைவலைகள் –  சுந்தர்.

சுண்டல் புராணம் – என்.சுவாமிநாதன்

தேவையான பொருள்கள்:

மொச்சைப் பயறு – 1 கிலோ
தேங்காய் – 1 மூடி
உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைக்க:
மல்லி விதை – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 15
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க: எண்ணெய், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை.

mochchai payaru sundal

செய்முறை:

  • மொச்சைப் பயறை சுமார் எட்டிலிருந்து பன்னிரண்டு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.
  • மீண்டும் கழுவி, குக்கரில் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிட்டு, நீரை வடிக்கவும்.
  • அடுப்பில் வாணலியில் சிறிதளவு எண்ணெயில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், மல்லி விதையை வறுத்து நைசாகப் பொடிக்கவும்.
  • வாணலியில் எண்ணையில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, துருவிய தேங்காயைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வேகவைத்த பயறு, தேவையான அளவு உப்பு, அரைத்த பொடி சேர்த்து மேலும் 5 நிமிடங்களுக்கு கிளறி இறக்கி உபயோகிக்கவும்.

பெண்களே! கீழே இருக்கும் ஆணிய (அழுகைக்) கட்டுரைத் தொடரை அவசியம் படியுங்கள். நவராத்திரியைக் கொண்டாடுங்கள்!!

 நவராத்திரி சிறப்பு நகைச்சுவைக் கட்டுரை: அவ(¡)ளோட ராவுகள்
பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்.

தேவையான பொருள்கள்:

கோதுமை – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
பச்சை மிளகாய் – 4, 5
தேங்காய் – 1 மூடி
உப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
எண்ணெய்

செய்முறை:

  • கோதுமை, உளுத்தம் பருப்பு இரண்டையும் தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து, நீரை வடிக்கவும்.
  • இவற்றுடன் பச்சை மிளகாய், தேங்காய், பெருங்காயம், தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து, நன்கு அரைத்து இட்லி மாவுப் பதத்தில் எடுக்கவும்.
  • பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும், ஒரு கரண்டியால் மாவை எடுத்து விட்டு, இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

* அப்பக் குழியிலும் செய்யலாம்.

* உளுத்தம் பருப்பு சேர்ப்பதால் மென்மையாக இருக்கும்.

* தண்ணீரைக் குறைத்துக் கொண்டு இரண்டு கரண்டி தயிர் சேர்த்து அரைத்தால் சுவையாகவும், உள்ளே குழலாகவும் இருக்கும்.

* ஒன்றிரண்டு பச்சை மிளகாய்களை பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்தால் சாப்பிடும்போது மேலும் சுவையாக இருக்கும். குழந்தைகள் கவனம்.

நவராத்திரி நாயகி: ஆட்கொண்ட தாய் மீனாட்சி – மீனாட்சிசங்கர் (மீனாக்ஸ்)