மார்ச் 2007


கவிஞரும் எழுத்தாளருமான தற்போது பெங்களூரில் வசித்து வந்த சதாரா மாலதி நேற்று இரவு இயற்கை எய்தினார்.

satara-malathi.jpg 

குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

ரா.கா.கிளப்பில் அருமையாக திருப்பாவைக்கு விளக்கம் எழுதியவர். இரா.முருகனால் எனக்கு தனிப்பட அறிமுகப்படுத்தப் பட்டவர்.

===
Murugan told me you had lots of interest in Thiruppaavai. I am very happy about that.Because very few take interest in it. My face is different as far as modern literature is concerned.I am much rational but Thiruppaavai enchanted me like a magic.Pl let me know your criticisms also It is not that I am always sensitive to attacks. I hate only illogical attacks with pre decided ideas.

Ys Malathi.
====

மாலதி சதாரா என்ற பெயரில் மரத்தடிக்கு வந்து போட்டிக் கதை, கவிதை எழுதி கவிதையில் இரண்டாம் பரிசு பெற்றவர். பெண் கவிஞர்கள் பற்றிய விமர்சனம் ஓடிக்கொண்டிருந்த போது திடீரென ஒரு புயல் மாதிரி வந்து தன் கவிதைகளையும் கருத்துகளையும் கனல் மாதிரி கொட்டிவிட்டுக் காணாமல் போனவர்.  

===================
ஆபாச வார்த்தைகளைக் கவிதையில் போடும் பெண் கவிஞர்களைப் பற்றி அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அவர்கள் பிறர் கவனம் பெற அப்படி எழுதுவதாகவும் அவர்கள் அதீத உணர்வுக்கு ஆளாகி அப்படி எழுதுவதாகவும் சிலர் சொல்லியிருக்கிறார்கள். கவனம் பெறவென்று எழுதுகிறார்கள். சரி. அந்த கவனத்தை ஏன் கொடுக்கிறார்கள்? அக்கறையினால் அல்ல. பேசப்பட்ட விஷயத்தின் கனத்தால் பாதிக்கப்பட்டு அல்ல. விளம்பரத்துக்காக. பரபரப்புக்காக. உண்மை தானே? சில சுயலாபங்களுக்காக சில பத்திரிகைகளும் சில குழுக்களும் சேர்ந்து சில பெண் கவிஞர்களை மட்டும் உலக மகா கவிஞர்களாக எடுத்துச்செல்கிறார்கள். [முன் எப்போதும் பெண்கள் எழுதியதே யில்லை என்பது போன்ற பாவனைகளுடன். தஸ்லீமா நஸ்ரீன், கிஸ்வர் நஹ்ஹீத் போன்ற பிறமொழிக் கவிஞர்கள் தாம் வழிகாட்டிகள் என்பது அப்பட்டமாகத் தெரிந்திருந்தும்] அந்தப் பெண் கவிஞர்களும் அவர்களுக்காகவே இயங்கிவரும் அந்தப் பத்திரிகைகளில் எல்லாரையும் தூக்கியெறிந்து தாம் எழுதுவது மட்டுமே இலக்கியம் என்று பேசிவருகிறார்கள். கவனமாக உள்ளூர்க் கவிஞர் பட்டியலைத் தவிர்க்கிறார்கள். ஆண் கவிஞர்கள் எதுவுமே எழுதவில்லை என்று சொல்வதுடன் பிடித்த பெண் கவிஞர்களாக பிறமொழிப் பேர்களையே எடுத்து வைக்கிறார்கள். அது, ஒத்த முனைப்புள்ள போட்டி வணிகர்களுக்குப் பிடிக்காத போது ஆபாச வார்த்தைகளைக் கண்டுபிடித்து அவற்றுக்காக அவர்களைக் கடிந்து தூற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் மேலான குறுகிய காலத்து அதீத கவனத்தைத் தாங்க முடியாமல் தான் இந்த எதிர்ப்பு அலையே ஏற்பட்டிருக்கிறது.. ஆக மொத்தம் எல்லாமே விளம்பர சாகஸம் தான். அதிகக் கவனமும் மேலதிகமான எதிர்க்கவனமும் சம்பந்தப் பட்டவர்களை இன்னமும் நிலை தவறச் செய்கிறது. எதிர்ப்பு செய்தே கவனம் பெற இன்னும் ஒரு கோஷ்டி தயாராகிவிட்டது தேவையில்லாத வாத விவாதங்களுடன். இது ஒரு புறம்.

அதீத உணர்வுக்கு ஆளாகி அப்படி எழுதுகிறார்கள் என்று சொல்கிறார்கள். அப்துல் ரஹ்மான் சொன்னார். அவர்கள் எழுதுவது ‘அழைப்பதை’ப் போல் இருக்கிறது என்பதாக. என்னைப் பொறுத்தவரை ஆபாச வார்த்தையோ ஆபாச விஷயமோ என்று முத்திரை குத்திக்கொண்டு எதுவும் உட்கார்ந்திருக்கவில்லை. உண்மைகளைப் பட்டவர்த்தனமாகச் சொல்லவரும்போது சிலருக்கு தர்ம சங்கடமாயிருக்கலாம். ஆனால் உண்மை உண்மை தானே? கூடத்தில் குளிக்க முடியுமா என்று கேட்பவர்கள் குற்றாலத்துக்கு ஏன் போகிறார்கள்? குளிப்பது ஆபாசமா?

இந்தியா டுடே வாசகி ஒருத்தி எழுதியிருந்தார்’ ஆடை அணியாமல் நாம் போகிறபோது மட்டுமே இந்த வகையான கவிதைகளை நாம் உரத்துப் படிக்கவும் பகிரவும் முடியும்’என்று. உண்மை தான். சந்தேகமேயில்லை. ஆனால் இந்த வகை எழுத்து இயங்குவது சிறு பத்திரிகைகளில். அது nudist colony. அங்கு ஆடை தான் ஆபாசம். யாரும் யாருடைய நிர்வாணத்தையும் அரிப்புடன் பார்ப்பதில்லை. நிர்வாணம் சிற்பத்தில் அழகு. ஓவியத்தில் அழகு. கவிதையில் மட்டும் அசிங்கமா? சினிமாவில் கட்டிப்புரள்வது போன்றதா?

மாலதி போராடிக் காப்பாற்றும் நிலையில் சம்பந்தப்பட்ட யாரும் இல்லை என்றாலும் இது தான் சாக்கு என்று மேலும் மேலும் எதிர்த்துப் பேசுபவர்களுக்கு அவர்களுடைய நோக்கத்தில் இருக்கும் பெரிய தவற்றைச் சுட்டிக் காட்டவே இதை எழுதுகிறேன். எந்தக் கருத்துக்கும் வெளிப்பாட்டுக்கும் தடை விதிப்பது ஜனநாயக விரோதம். தணிக்கை என்பதே அடக்குமுறையின் வடிவம். இதில் மிக நுட்பமான பெண் எதிர்ப்பும் ‘சும்மா பேனாவை ஒடித்துப் போட்டு உள்ளே கிட’ என்ற அச்சுறுத்தலும் இருக்கிற விஷயம் மேலோட்டமாகத் தெரிந்து விடாது. குற்றம் சாட்டப்பட்ட கவிதைகளும் மிக நல்ல கவிதைகள் அவைகளை முன்னுதாரணமாகக்கொண்டு மேலெழுந்த அடுத்த வரிசைப் போலிக் கவிதைகளைத் தவிர. மீண்டும் சாய்வின்றி படித்துப் பாருங்கள். பிடிக்காவிட்டால் புறக்கணித்துப் போய்க்கொண்டே இருங்கள்.

நான் ஏற்கனவே [ஒரு பேட்டியில்] குறிப்பிட்டது போல மரணமும் காதலும் அவரவருக்குப் பிரத்யேக அனுபவம். அப்படியே கவிதையும். ஒருவர் கவிதையை இன்னொருவர் எழுத முடியாது. இன்னொரு உதாரணமும் எழுதியிருந்தேன். வெவ்வேறு பெண்ணுக்குப் பிரத்யேகமாக வரும் தீட்டு போல என்றும். கவிதையை இந்த வார்த்தையைப் போட்டு எழுது என்றோ போடாமல் விடு என்றோ யாரும் யாருக்கும் ஆணையிடமுடியாது. ஏனெனில் கவிதை நாளத்திலிருந்து வருவது. விரல்களிலிருந்து அல்ல.

அக்கறையுள்ள படைப்பாளிகளே புரிதலில்லாமல் மேலோட்டமாக ஒழுக்கவியல் ஆண்டைகள் போலப் பேசி வருவது மிகவும் வருத்தம் தருகிறது. மீதி எத்தனையோ விஷயங்களிருக்க இது ஏன் என்று குறிப்பிடுவது தவறு. சமூகக் குற்றங்களுக்கும் வன்முறைகளுக்கும் முக்கியமான காரணங்களில் ஒன்று பாலியம் சம்பந்தமான பாசாங்குகள்.

இப்போது நான் மிக ஆபாசமான ஒரு இணைப்பைத் தரப் போகிறேன். என் கவிதைகள் சில. இவை ஒரு நாளும் உங்களை வந்து சேரப்போவதில்லை. ஏனெனில் ஒரு புத்தகம் விற்றுத் தீர்ந்துவிட்டது. இன்னொரு பதிப்பை என் வாழ்நாளில் போடும் உத்தேசமில்லை. அடுத்து இரு தொகுப்புகளை நான் யாருக்கும் கொண்டு சேர்க்கவில்லை. கொண்டு சேர்த்து என்ன ஆகப்போகிறது என்ற நினைப்பு தான். இப்போது நான் சொன்ன ஆபாசம் நான் இணைத்துள்ள கவிதைகளில் இல்லை. நான் இவற்றை முன் வைக்க வேண்டி வந்த முனைப்பில் மிகப் பெரிய ஆபாசம் இருப்பதாக சத்தியமாக நம்புகிறேன். [தன்னைத் தான் முன்னெடுப்பதைவிடக் கொடுமையான விஷயம் உலகில் இல்லை.என்ன தான் விளம்பர யுகம் என்றாலும்] பூச்சிமருந்து தெளிக்க விரும்பவில்லை என் பூத்த பூக்களுக்கு.
 
திரும்பவும் ஞாபகப்படுத்திக் கொண்டு பார்க்கிறேன். கவிதை எழுத வேண்டும் என்று தோன்றுவதே என்னைப் பொறுத்தவரை அடாத செயல் தான்.தாங்க முடியாமல் போன போது தான் எழுத வேண்டி உந்தல் பிடரியைப்பிடித்துத் தள்ளுகிறது.

உதாரணமாக இத்துடன் இணைத்திருக்கும் ‘சாபம்’ என்ற கவிதை பெங்களூர் சுப்ரமண்யநகர் வீட்டு மூன்றாம் கட்டடத்துப் பெண் தீயில் கருகின வலது பக்கத்துடன் பிறந்தவீடு வந்தாள் என்ற செய்தி கேட்டதும் எழுதப்பட்டது. அது அசிங்கமாக வந்திருக்கிறது. குடிசைப் பையன் கையாலாகாத நிலையில் பெருந்தனக்காரன் அடக்குமுறைக்கு வரும்போது சீற்றத்துடன் ‘…த்தா’ என்று உரத்து சப்தமிடுவது போல.

பெண் வெளிப்பாட்டில் ஒரே ஒரு பெண் இல்லை. பல பெண்களுக்காக ஒரு குரல் மெல்ல ஒலிக்கிறது. ஒலிக்கிற பெண் குரல் முக்காலும் வேசியின் குரலாகவே அடையாளப்படுகிறது. ஏனெனில் பெண் கிழவியாகவோ பைத்தியமாகவோ அறியாச் சிறுமியாகவோ இருக்கும்போது மட்டும் தான் குரலெழுப்ப முடிகிறது. அந்த மூன்று நிலைகளுக்குட் படாமலே ஒரு பெண் பேசி விட்டால் அவள் வேசியாகத் தானிருக்க வேண்டுமென்ற சமூக விதி எழுதப் படாமல் இயங்குகிறது.

யாரையும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்க வேண்டும்.

அன்புடன்
மாலதி

பி.கு.
உண்மைகளைத் தெரிந்தவரை எழுத வேண்டும் என்பது தான் என் நோக்கமே ஒழிய சக கவிஞர்கள் மேல் காழ்ப்போ அல்லது சுய பரிதாபமோ என்னில் ஒலிப்பதாக இட்டுக் கட்டி நினைக்கவேண்டாம். எனக்கு ஆதாயம் தருகிற நல்ல [முதலீடில்லாத]சில தொழில்கள் கைவசம் உள்ளன. கணக்கெழுதுவது, சமையல் செய்வது,பற்று தேய்ப்பது, முதியோர் பராமரிப்பு இன்னும் பல. இவைகளைச் செய்து சாப்பிடுவேன்.

===

திண்ணையை மறந்து விட்டேன். திண்ணையில் இலக்கியக் கட்டுரைகள் எழுதுவதும் அடியேன் தான். நாச்சியார் திருமொழி, மறுவாசிப்பில் திருப்புகழ், பிரும்மராஜன் கவிதைகள் [திறனாய்வு], அ.முத்துலிங்கம் கதைகள் [திறனாய்வு], அம்மா வந்தாள் பற்றி தி. ஜானகிராமனின் பெண்கள் ஆண்கள் கிழவர்கள் [முழு ரிவ்யூ]மற்றும் சில. கால்வினோ கதைகள் பதினைந்தை அறிமுகம் செய்திருக்கிறேன் என் புரிதலின் படி.[பிரும்மராஜன் வழி].

அப்புறம் எதாவது ஞாபகம் வந்தால் சொல்கிறேன். மங்கையர் மலர் கட்டுரைகளில் முக்கியமாக நிறைய மனிதவள மேம்பாடு, பிறகு நகைச்சுவை அப்புறம் சில முக்கிய பெண்ணிய கட்டுரைகள் இப்படி. சேலம் பெங்களூர் ரயில் பாதை, மாவின்குருவே[பெண் கரு அழிப்பு பற்றி நக்கலோடு உக்கிரமாகச் சொல்லப்பட்ட கதை. தலைப்பு மறந்து விட்டேன்.] ஆண்களைப் பற்றின நகைச்சுவைக் கட்டுரை அதெல்லாம் யாருக்காவது ஞாபகம் வரலாம். அப்புறம் நீத்தார் வழிபாடு குறித்து திருநாவாய் பற்றி கட்டுரை எழுதினேன். திருவனந்தபுரம் ஆட்டுக்கால் பகவதி கோயில் கண்ணகி சம்பந்தப்பட்டது என்பதை எழுதினேன். மன்னிக்கவும் இனிமேல் எழுத நிறைய இருக்கிறது. இனிமேல் தான் எழுத வேண்டும்.

பி.கு. கருத்தரங்கக்கட்டுரைகளும் சில உண்டு.
கு.ப.ரா. பற்றி சேலத்தில் காலச்சுவடு நடத்திய கருத்தரங்கில்.
பெண் காதல் கற்பு… பாண்டிச்சேரி கருத்தரங்கில்
மற்றும் சில.
உபரித் தகவல். நான் தான் கடைசி நபர் இலக்கிய வட்டாரத்தில். காரணம் எல்லாரும் வெறுக்கக் கூடிய எல்லா அடையாளங்களும் என்னிடம் உண்டு. நான் BSNLநிறுவனத்தின் Chief Accounts Officerம் கூட. சாப்பாடு போடுவது கணக்கெழுதும் உத்தியோகம் தான். மீதியில் எல்லாம் பொருள் இழக்கிறேன். அப்படியே எனக்கு சின்னத்திரை ஜனரஞ்சகப் பத்திரிகைகளை விட இலக்கியப் பத்திரிகைகளில் பைத்தியம் அதிகம். யாரும் கவனிக்காவிட்டாலும் அதில் தான் உயிர் தீவிரம் பெறுகிறது. அதில் திருப்தி வருகிறது. அவற்றில் எழுதுவதே ஆனந்தம். பன்முகம், புதிய கோடாங்கி, கனவு, கணையாழி, விருட்சம் இதிலெல்லாம் தொடர்ந்து எழுதுகிறேன். ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கும் விரைவில் எழுத வேண்டும். நான் தான் சோம்பேறியாக இருக்கிறேன். அவர்கள் மறுப்பதில்லை. ‘பெண்ணே நீ’ யில் சில கட்டுரைகள் எழுதினேன். [தினமணி.காம்-ல் கிடைக்கும்.]

அப்பா! எனக்கே போரடித்து விட்டது. இன்னும் ஒரு வருடத்துக்கு என்னைப் பற்றி ஒன்றும் சொல்ல மாட்டேன்.

அன்புள்ள மாலதி.

மறந்தே போச், திருப்பாவை பிரவசனம் பண்ணுவதுண்டு. அது என் ஆன்மா.

=====

சாபம்

எரிந்து எரிந்து
சாம்பலானான்
ஒரே ஒரு ஆண்.
அவன் சொன்னான்
நான் போதும்
ஆண் இனத்துக்கே
இனி எரிவது எப்போதும்
பெண்ணாகவே இருக்கட்டும்.
சொன்னவன் மன்மதன்.
இவளுக்கோ
ஒரு நேர உபயோகத்துக்கு
வகுத்த அவயவங்கள்
ஆயுள் தண்டனை.
சில மாதத் தேவைக்காக
சிலுவையாய்ச் சுமக்கின்ற
வசீகரப் பால் பண்ணை.
எரிந்து எரிந்து வாழ்வாள்.
வகிடிட்ட இணைமேட்டில்
மடிப்பிட்ட உள் துடையில்
உணர்வெரிக்கும்.
விடுபடல் இல்லாமல்
இடுக்குகள் சிக்கலிடும்.
இன்னமும் போதாமல்
சாபம்.
பின் எப்போதும்
தீவிபத்து எல்லாமே
பெண்ணுக்கே நேர்வானேன்?
வரிக்குதிரை[1999]

0


சிறகு முளைத்த சுமைதாங்கிகள்

காரியாலயம் போகும்
காரிகையர் நாங்கள்
கரியர் விமன்
கஞ்சிக்கும் துணிக்கும்
கணவனை எதிர்பார்க்காத
கவிதைப்பெண்கள்
காப்பு கட்டளை கப்பம்
கணவன் வீட்டில்
கண்டவர்க்கும் சீர்
கடன் வாங்கிச்செய்வோம்
நார்நாராய்க்கிழிக்கும்
நார்களுண்டு எங்களுக்கு
மாமனார் நாத்தனார்
மனம் குன்றி மக்கள்
பிறந்ததுண்டு எங்களுக்கு
எங்களுக்கும் சுகர் வரும்
பி.பி. வரும் நோய்கள் வரும்
கரியர் விமன் என்று
எது விட்டது எங்களை?
பையன் பெயிலானால்
டிப்ரஷன் எங்களுக்கு.
பெண் புறம் போனால்
டிப்ரஷன் எங்களுக்கு
கரியர் மென்னுக்கு
அதெல்லாம் கிடையாது.
ஒரு வாக்கியம் சொல்லி
விட்டு விடலாம்
‘நீ வீட்டில் இருக்கலாமே!’
என்று.
கரியர் விமன் என்றால்
கைப்பை கண்ணில் ஒளி
கைவீசும் சுதந்திரம்
அவற்றின் விலை?
காதல் உண்டா வீட்டுக்குள்
என்றா கேட்டீர்கள்?
காதலா? அது என்ன?
ஓ! அந்தக் கசங்கலா?
கால்களிடைப் பிசுக்கா?
உண்டு.
அது கொண்டு தரும்
கடல் போல வேதனை
கண் கீழ் கருவளையம்
கை கால் நடுக்கம்
கர்ப்பம் கலைப்பு
தன்னைத் தொலைத்துக்கொண்ட
அவமானம்
அத்தனையும் உண்டு.
காதலென்று ஏதோ
நெஞ்சில் விழுமாமே!
அது எங்களுக்குத்
தெரியாது.
அன்றாடம் எங்கள் தேவை
கால் கப் காப்பி
கடும்பசிக்குக் கவளம் சாதம்
சரியான நேரத்தில், சூட்டில்.
கிடைக்காதே!

அத்தனையும் மீறிப்
பளிச்சிட்டால்
தேடிவரும் பட்டங்கள்
‘ஒருமாதிரி’யாய்.
புத்திசாலி என்ற பேர்
எந்நாளும் கிடைக்காது.
அதற்கு நாங்கள்
ஆணாய்ப் பிறக்கவில்லை.

புத்திரர்க்கு எங்கள் மேல்
கொள்ளை ஆசை
புதினாத் துவையல்
அம்மா கைப்பாகம்
பிரம்மாதம் என்பார்கள்.
பெண்களுக்கோ எங்கள்
நகை மேல் மோகம்
இந்த மூக்குத்தியில்
அம்மா! நீ எத்தனை அழகு
என்பார்கள்.

கடைசிச்செலவுக்கும்
எங்கள் கைப்பையில்
காசிருக்கும்.
கைப்பை கிடைக்காமல்
கண நேரம் போனாலும்
கடுகி வருவாள் கைகொடுக்க
ஒரு தோழி அவளும்
ஒரு கரியர் உமன்.

ஒன்று மட்டும் நடக்காது.
காரியம் செய்ய வரும்
கணவனின் கைக்கொள்ளி
பிடுங்கி
செத்தபிறகாவது
இவளைச்சுடாதே
என்று சொல்ல
தோழிக்கு முடியாது
முடியவே முடியாது.
வரிக்குதிரை[1999]

0

மெல்லியது

துடைக்கிடை துளைத்த
தோட்டாவும்
அடைபட்ட பேருந்து பயணத்தில்
மேவாடை மறுக்கின்ற
உள்நசிவின் முடிச்சிறுக்கின்
ஊவாமுள் பூனைக்காஞ்சி உறுத்தலும்
உள்மீட்டும் நெருக்க வாசமும்
பள்ளம் பொளியும் எண்ணச்சிற்றுளியும்
கண்விரிய எழுதிவிட்ட
கவிதைக்கிறக்கமும்
எல்லாமுமாகி வருத்துது.
மலரினும் மெல்லியது.
தணல் கொடிப்பூக்கள்[2001]

0

நிலம் என்னும் பொல்லாள்

யோநி குண்டம் பிளந்துவைத்தாள்
பாவியாள் பார்க்கத்தரமல்லாள்.
காலக்கணவன் அவளைக்
கால் மாற்றி உதைத்தான்.
கர்ப்பிணியை வதைத்தான்
கன்று பிரித்தான்.
கான்கிரீட் கனத்தாலே
கடுப்புற்றாள் பால் காம்பில்.
கர்ப்பப்பைப் புற்றாலே
நித்தியமாய் இரத்தவிடாய்.
ஊசியால் விந்தேற்றி அவளில்
உலர்ந்த கருத்தரிப்பு.
பேணுதல்களில்லாமல்
பேறுகள் பலகோடி
உடல் மரத்துப்போகவிட்டான்
உற்றதுணவன் அவளை.
முலைவருடாமல் முகவாய் பிடிக்காமல்
இதழ் சுவைக்காமல்
உடல் மரத்துப்போகவிட்டான்.
ஈரத்தினவுக்கு ஈடு கிடைக்காமல்
சோரத்தில் நின்றுவிட்டாள்.
பகிரங்க வேசியாய்
பால்மாறி நின்றாள்.
பெண்மை மறந்தாள்.
கணவன் மேல் கோபமென்றால்
குழந்தைகள் மேல் குற்றங்கள்.
ஆடையணியட்டும் அவள்.
ஆசை மறக்கட்டும்.
பெண்காமம் பெரிதென்று
காட்டிவிட்டாள். மாற்றட்டும்.
கோள்கள் மேல் ஏறிக்கொண்டு
கொக்கரித்தான் அவள் கணவன்.
புத்தி வரப்போவதில்லை
பதிகளுக்கு எந்நாளும்.
பித்தாட்டம் பத்தினிக்குப்
போதும் நிறுத்தட்டும்.
தணல் கொடிப்பூக்கள் 2001

இந்தக் கவிதை எழுதியபின்பு கொஞ்சம் வளர்ந்திருக்கிறேன். இதில் பத்தினி
வேசி என்று பெண்நிலைப் பாட்டுக்கு விரோதமான சொற்களை உபயோகப்படுத்தி விட்டேன் தெரியாமல். ஆனாலும் பண்ணிய தப்பை மறைக்க விரும்பவில்லை.

0

உறுப்பிலக்கணம்

பெண் போலணிந்த உடை
இரு பாலிலி நான்.
கைவழிப்புணர்ச்சி தான்
கட்டிவரும் எனக்கு.
உடல்மொழி தெரியாது
மதம் உதற வராது.
அன்புண்டு ஆண்டவன் தானில்லையென
அநியாயப்புளுகுக்குப் பயிற்சியெடுக்கவில்லை.
ஒன்றிரண்டு மூன்றுமில்லைநான்காவது
ஐந்தாவது மதங்கள் தேவலாம்
என்று சிறுபான்மையில் ஒளிய
நாட்டம் எதுவுமில்லை.
சட்டமும் சத்தியமும்
சம்பளமும் பேணும்
சாணாத்தி பிழைப்பெனக்கு.
சாதி எதிலுமில்லைஎன்
பிறப்புக்கு, ஏழைப்பிராய
இளமை தந்த சொத்தது.
படிகளில் ஏறிவிட
வடிகால் அமைத்துத்தர
சேக்காளி குழு துருப்புச்சீட்டு
கோட்டைப் பொய் சேராமலே
எனக்கும் அடையாளமுண்டு
அது என் தனிக்கவிதை.
மரமல்லிகைகள்[2003]

0

கூர்வாளைப் படித்தபோது கருத்தில் ஒத்துப்போன இன்னொரு கவிதை ஞாபகம் வந்தது.

என் பிசாசு

ரகசியமாய் ஒரு பிசாசு
சைகை செய்தும் கழுத்தை இறுக்கியும்
என்னை பயமுறுத்துகிறது.
எப்போதும் பிறர் மேல் பார்வை
அதற்கு. எவரும்
கூசிப்போகும்படி கெட்ட
நடவடிக்கை அதற்கு.
என்னை அதிர வைக்கிறது.
திருடத்தூண்டுகிறது.
யாரிடமும் சொல்லிவிட்டால்
அவ்வளவுதான்! என்று
அச்சுறுத்துகிறது.
இதனிடம் தப்பித்து
வெளிவரவே முடிவதில்லை.
பிசாசு இருப்பதை
வெளியே சொல்லிக்கொள்வது
அவ்வளவு சுலபமில்லை.
பிசாசும் நானும் வேறு வேறு
என்பதை நிரூபித்தாக
வேண்டியிருக்கிறது சமயங்களில்.
பிசாசைப்போல சிலநேரம்
நானும் ஆகி வருவது
அந்தரங்க சந்தோஷமாகவும்
அதிர்ச்சிக்குரிய உண்மையாகவும்
ஆகிவிடுகிறது.
நான் தான் பிசாசு என்று
சிலர் குற்றம் சாட்டும்போது
கோபம் பொத்துக்கொண்டு
வருகிறது.
நானாகச் சொல்லிக்கொள்ளும்போது
பிசாசும் நானும் சேர்ந்து
இளித்துக்கொள்ளுகிறோம்.

14.4.2003 கவிதைக் கணத்தில் வாசிக்கப்பட்டது. மரமல்லிகைகள் தொகுப்பில் இருக்கிறது.

0

கருத்தளவில் ஒத்துப்போனது மேற்சொன்னது என்றால் சொல் அளவில் ஒத்ததாக இதைப் போடுகிறேன்.

வீம்பு

கத்தியைத் தூக்கிப்போட்டு
கவனமாய் நுழைந்தாய் நீ
என் ஊர்களில்

நான் காத்திருந்த விண்ணாகி
நிலவைப் பரிசளித்தேன்.
என்றும் குறையாத நிலவை.

இடைவெளியில்
என் பூவனங்கள் காயாமல்
நினைவுகளின் பாசனம்.
ஓரிருமுறை என்னை
மீட்டிச்சென்ற உன்
நினைவுகள்.

எல்லாம் இன்று சரியானது.
திருப்தி தான்
ஆனாலும் ஒரு கேள்வி.
இருபது வருடங்களுக்குக்
கத்தியை ஏன் சுமந்தாய்?

இந்தக் கவிதை குறித்து அவ்வை மண்ணில் பெண் எழுத்தாளர்கள் என்ற தொகுப்பில் க. மோகனரங்கன் சிலாகித்திருந்தார் அது மாலதிமைத்ரியால் எழுதப்பட்டது என்று நினைத்து. அது என்னுடைய தணல்கொடிப்பூக்கள் தொகுப்பில்[2001] உள்ளது.

0

நிஜமாகவே இது சானிட்டரி நாப்கின் கவிதை.

காதோடு வந்த ரகசியம்
கரும்பாலே ஒரு நியமனம்.
வலிமின்னல் வாட்டங்களில்
தான் பெரியவள் என்ற பலம்
தனக்குத்தானே
ஒரு ஹோலி
பிரத்யேகமாக ஒட்டும்
வண்ணப்பண்டிகை
கள்ளமில்லாமலே கறை
ஒளிக்கின்ற
பிள்ளைத்தனத்தில் துவளல்.
அவசிய அதிகப்படி
தற்காப்பில் கவன மழை.
இடைநாபி ஒசிந்து
உள்வாங்கும் மயில் நளினம்.
ஆசைப்பேரருவி கொட்டல்
நாடி நரம்பு தமனிகளில்
நசையேற்றித்
தாமிறங்கும்
சிவப்பு இரத்தப் பொட்டலங்கள்.
மேனியிலே வந்து
ஈஷிக்கொள்ளும் காமம்
சதிர் ஆட்டுவிக்கும்
மோகம் மயக்கம்
காதலனைப் பூசிக்கொள்ளப்
பேருவகை
அத்தனையும் அந்த நாளில்.
காட்டாற்று வெள்ளம் நின்று
மடு வெளிறி கூந்தலாற்றி
நிற்கிற
ஐந்தாவது நாள்
அழகு! ஐயோ!அற்புதம்
அசௌகரியம் அங்கு ஏது?

கவிஞர் சுகுமாரன் ஷவர சுகம் குறித்து எழுதிய inspiration இது. வரிக்குதிரை தொகுப்பில் உள்ளது. இன்னமும் கருத்திலேயே வில்லங்கம் வைத்த கவிதைகள் நிறைய எழுதியிருக்கிறேன். இப்போதைக்கு இது போதாது?

===========================================

எங்களுக்குள் மிகச் சில கடிதத் தொடர்புகளுக்குப் பிறகு தன் பெண்ணைப் பார்க்க US செல்வதாக ஒரு கடிதம் எழுதியதோடு எங்கள் தொடர்பு நின்றிருக்கிறது. 😦 மீண்டும் இன்று திருப்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

மாலதி கவிதைகள் குறித்த கட்டுரை திண்ணையில்.. 

திண்ணையில் மாலதி

  

கேரள மாநில உணவு. ஆனால் நாகர்கோயில் கன்யாகுமரி பக்க சைவ வேளாளர் அல்லது சைவப் பிள்ளைமார் உணவு என்று இங்கே சொல்கிறார்கள். தெரியவில்லை.

vaazai_senai_eriseri1.JPG

தேவையான பொருள்கள்:

வாழைக்காய் – 2
சேனைக் கிழங்கு – 250 கிராம்
நேந்திரங்காய் – 1 (விரும்பினால்)
தேங்காய் – 1
புளி – சிறிய எலுமிச்சை அளவு
மிளகு – 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணை – தேவையான அளவு
கறிவேப்பிலை- சிறிது
பச்சரிசி – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

vaazai_senai_eriseri2.JPG

செய்முறை:

  • சேனைக் கிழங்கையும் வாழைக்காயையும் தோல்சீவி, சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். (கை கறையாகி இருக்கும். எண்ணை தடவி, பின் சோப் போட்டுத் தேய்த்தால் கறை போய்விடும்.)
  • தேங்காயத் துருவிக் கொள்ளவும்.
  • முதலில் சேனையை நன்கு இருமுறை கழுவி, ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் அரை வேக்காடு(மட்டும்) வேகவைத்து, நீரை வடித்துக் கொள்ளவும்.
  • புளியைக் நீர்க்க கரைத்து அடுப்பில் வாணலியில் அல்லது அடி கனமான பாத்திரத்தில் கொதிக்க ஆரம்பித்ததும், வாழைக்காய், பாதி வேகவைத்த சேனை, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள்,  உப்பு சேர்த்து மேலும் கொதிக்க வைக்கவும்.
  • மிளகை மிக மென்மையாக அரைத்து அத்துடன் சேர்க்கவும். [இப்போது கை அரிக்க ஆரம்பிக்கிறதா? 🙂 சொல்ல மறந்துவிட்டேன். சேனையின் உபயம். கையை சோப்புப் போட்டு கழுவியபின் மீண்டும் கைகளுக்கு தேங்காய் எண்ணை தடவிக் கொண்டு, பின் தொடர்ந்து வேலை செய்ய ஆரம்பிக்கவும்.]
  • மிளகின் பச்சை நெடி அடங்கியதும், தேங்காய்த் துருவலில் பாதி, பச்சரிசி சேர்த்து நன்றாக அரைத்து, எரிசேரியில் சேர்க்கவும்.
  • மீதிப் பாதி தேங்காய்த் துருவலை 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணையில் நன்கு சிவக்க வறுத்து, சேர்த்துக் கொதிக்கவிட்டு, தளர்வான கூட்டு பதத்தில் இறக்கவும்.
  • இறுதியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணணயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துப் பரிமாறவும்.

* வாழை, சேனை, நேந்திரங்காய் மூன்றும் சம அளவில் எடுத்துச் செய்யலாம். அல்லது ஏதாவது இரண்டில் மட்டும் செய்யலாம்.

* சிலர் ஒரு காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பும் சேர்த்துத் தாளிப்பார்கள்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் சாதம், தயிர் சாதம்.

சப்பாத்தி, இட்லி, தோசை என்றெல்லாம் யாராவது அடுக்கினால் நம்ப வேண்டாம். படு அபத்தமாக இருக்கும். 🙂

சக்ரவர்த்தி திருமகனின் பிறந்தநாளை முன்னிட்டு…

தேவையான பொருள்கள்:

வெள்ளரிக் காய் – 2
பயத்தம் பருப்பு – 1/4 கப்
மாங்காய் – ஒரு சிறு துண்டு
கறிவேப்பிலை –  சிறிது
கொத்தமல்லித் தழை – சிறிது
உப்பு –  தேவையான அளவு
பெருங்காயம் – 1 சிட்டிகை
எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன் (விரும்பினால்)

vadaiparuppu.JPG 

செய்முறை:

  • பயத்தம் பருப்பை அரை மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடிய வைக்கவும்.
  • வெள்ளரிக் காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அத்துடன் ஊறவைத்த பயத்தம் பருப்பு, மிகப் பொடியாகக் கீறிய மாங்காய்த் துண்டுகள், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லித் தழை, இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • விரும்பினால் இறுதியில் எலுமிச்சம் பழச் சாறையும் கலக்கவும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பானகம் | நீர்மோர்

சக்ரவர்த்தி திருமகனின் பிறந்தநாளை முன்னிட்டு… 

தேவையான பொருள்கள்:

தயிர் – ஒரு கப்
தண்ணீர் – 3 கப்
இஞ்சி – சிறு துண்டு
கறிவேப்பிலை – 4,5 இலை
கொத்தமல்லி – சிறிது
பச்சை மிளகாய் – 1/2
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 1 சிட்டிகை

விரும்பினால்..
வெள்ளரி – 1 துண்டு
கேரட் – 1 துண்டு
மாங்காய் – 1 துண்டு

neermor.JPG

செய்முறை:

  • புளிக்காத தயிரை நன்கு கடைந்து, 2 கப் தண்னீர் சேர்த்துக் கொள்ளவும்.
  • இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், வெள்ளரி, கேரட், மாங்காய் எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைத்து அத்துடன் மீதம் இருக்கும் ஒரு கப் தண்ணீரைச் சேர்த்து நன்கு டீ வடிகட்டியில் வடிகட்டவும்.
  • வடிகட்டிய நீரையும் மோரோடு சேர்த்துக் கொள்ளவும்.
  • மேலே உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கலக்கவும்.
  • மாங்காய் இல்லாவிடில், தேவைப் பட்டால் சிறிது எலுமிச்சம் பழச் சாறும் சேர்த்துக் கொள்ளலாம்.

* பொதுவாக எல்லா வேலைகளுக்கும் அம்மி ஆட்டுரல் என்று பழைய பொருள்களை நாடினாலும், தயிர் கடைவதில் மட்டும் மத்தை விட மிக்ஸி மிக மிகச் சுவையான மோரைக் கொடுக்கும்.

* வெயில் காலத்தில் இதைத் தயாரித்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் மதிய வேளைகளில் தேவைப்படும் பொழுதெல்லாம் எடுத்துக் குடிக்கலாம். ஆடை நீக்கிய தயிர் அல்லது வெண்னை எடுத்த மோர் என்றால் நலம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பானகம் | வடைபருப்பு

ram.JPG

ஸ்ரீரங்கத்தில் சித்திரை மாதம் வரும் புனர்பூசம்/நவமி திதிக்குத் தான் ஸ்ரீராம நவமி கொண்டாடுவோம். இருந்தாலும் ஊரோடு ஒத்து வாழும் பொருட்டும், மெனக்கெட்டு மஹாராஷ்டிரா அரசு பள்ளி அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்திருப்பதாலும், இன்று.

சக்ரவர்த்தி திருமகனின் பிறந்தநாளை முன்னிட்டு…

sriramanavami.JPG

பானகம் 

தேவையான பொருள்கள்:

வெல்லம் – 250 கிராம்
தண்ணீர் – 4 கப்
ஏலப்பொடி – 2 சிட்டிகை
சுக்கு – 1 சிட்டிகை
எலுமிச்சம் பழம் – 1

paanagam.JPG

செய்முறை:

  • வெல்லத்தை நீரில் நன்கு கரைத்து, தேவைப்பட்டால் வடிகட்டிக் கொள்ளவும்.
  • ஏலப்பொடி, சுக்குப் பொடி சேர்த்துக் கலக்கவும்.
  • இறுதியில் எலுமிச்சம் பழச் சாறையும் சேர்க்கவும்.
  • இரண்டு மூன்று ஐஸ் க்யூப் சேர்த்துக்கொண்டால் கலக்கலாக இருக்கும் என்றாலும் என்ன சொல்வார் என்று தெரியவில்லையே…..

“Ram! would you mind…? ”

“ஆமாண்டீ, பெரிய பெரிய அட்டூழியம் செய்யுற போது எல்லாம் என் நினைப்பே வர்றதில்லை. ரொம்ப பயந்த மாதிரி, ரெண்டு ஐஸ் க்யூபுக்குத் தான் பர்மிஷன்! திருந்தவே மாட்டியா?”

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நீர்மோர் | வடைபருப்பு

பானக நரசிம்ம ஸ்வாமி ஆலயம்:

mangalagiri.jpg 

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் இருக்கிறது மங்களகிரி.. இங்கு மலைமீது இருக்கும் பானக நரசிம்மர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவக் கோயில் மற்றும் ஸ்ரீரங்கம், திருப்பதி, பத்ரிநாத், நைமிசாரண்யத்திற்கு ஈடான புனிதமானது என்று கூறப்படுகிறது. கீழேயிருந்து மலைக்கு 20 ரூ. ஆட்டோவில் போய் வரலாம்.

சுயம்புவான நரசிம்மரின் திருமார்பு வரை மட்டுமே தரிசனம் கிடைக்கும். மீதிப் பாகம் பூமியினடியில் இருப்பதாக ஐதீகம். வாயைத் திறந்தபடி இருக்கும் நரசிம்மரின் வாயில் கோயிலிலேயே விலைக்குக் கிடைக்கும் (கல்கண்டு அல்லது வெல்லப்)பானகத்தை வாங்கிக் கொடுக்கலாம். எத்தனை பானகம் கொண்டு சென்றாலும் எடுத்துச் செல்வதில் பாதியை மட்டுமே ஏற்றுக் கொள்வதாகவும், ‘கடக்’ என்ற விழுங்கும் சப்தத்தைக் கேட்கமுடிவதாகவும், பாதிக்கு மேல் மீதி ஏற்றுக்கொள்ளப் படாமல் வழிந்துவிடுவதாகவும் சொல்கிறார்கள். மீதியை பக்தர்கள் பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாம். இஞ்சி, மிளகு போன்றவையும் இந்தப் பானகத்தில் சேர்க்கப் படுகின்றன. ஒரு எறும்பைக் கூட அருகே பார்க்க முடியாது என்ற கூடுதல் செய்தியைச் சொல்கிறார்கள்.

கோயில் குறித்து மேல் விபரங்கள்….

ஸ்ரீரங்கம் வடக்குவாசலில் சுண்டைக்காயோடு போட்டி போடும் சைஸில் மலை வடு கிடைக்கும். அப்படியே பச்சை மாவடுவை கதவிடுக்கில் நசுக்கினால், காக்காய்க் கடியாய் பகிர்ந்து கொள்ளலாம். பல் கூசும் புளிப்பாக இருக்கும். (பல் தானே கூசுகிறது. பின் கண்னை ஏன் மூடிக் கொள்கிறோம்?) வடுவின் பால் பட்டால் வாய்ப்புண் ஒரு நாள் முழுவதும் படுத்தும். மாவடு, கஸ்தூரி மஞ்சள், பயத்தம் பொடி, தஞ்சாவூர் குடமிளகாய், மோர்மிளகாய் என்று சில சாமான்கள் வருடா வருடம் அம்மா வீட்டிலிருந்து வருவதே தொடர்ந்து வருகிறது. ஆனாலும் இந்த மாவடு மட்டும் எந்த ஊரில் இருந்தாலும், கிடைப்பது சப்பை வடுவாக இருந்தாலும், நம் பங்குக்கும் ஒரு படியாவது போட்டால் தான், ஏதோ நாமும் பெரிய மனுஷி ஆகிவிட்டதுபோல் ஒரு தோரணையான ஃபீலிங் வருகிறது. 🙂

தேவையான பொருள்கள்:

மாவடு – 1 படி
கல் உப்பு – 1 கப்
காய்ந்த மிளகாய் – 1 கப்
கடுகு – 1/4 கப்
விரளி மஞ்சள் – 3
விளக்கெண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணை – 1/4 கப்

maavadu_new.JPG

செய்முறை:

  • மாவடுவை நன்கு கழுவி, நீரை வடியவைத்து, ஒரு துணியில் பரத்தி காய வைக்கவும்.
  • காய்ந்த மிளகாயை வெயிலில் காயவைத்து, பொடித்துக் கொள்ளலாம் அல்லது 1/2 கப் மிளகாய்த் தூளாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
  • விரளி மஞ்சளை வெயிலில் காயவைக்கவும் அல்லது வாணலியில் 5 நிமிடம் ஈரப் பசை இல்லாமல் வறுத்துக் கொண்டு, கடுகு, விரளி மஞ்சளை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • மாவடுவில் விளக்கெண்னை, கடுகு, மஞ்சள் பொடியைக் கலந்து பிசிறிக் கொள்ளவும்.
  • ஊறுகாய் போடும் பாத்திரத்தில் முதலில் ஒரு டேபிள்ஸ்பூன் உப்பைப் போட்டு மேலே ஒரு பிடி மாவடு, அதன்மேலே ஒரு உப்பு, காரப் பொடி, மாவடு என்று மாற்றி மாற்றி எல்லாவற்றையும் போட்டு, மேலாக நல்லெண்ணையும் சேர்த்து மூடிவைக்கவும்.
  • இரண்டாம் நாள் கலந்து எடுத்து உபயோகிக்க ஆரம்பிக்கலாம். அதன்பின் அடிக்கடி அடிவரை கிளறிவிட வேண்டும்.

* ஊறுகாய்க்கு எப்பொழுதும் கண்ணாடி, பீங்கான் ஜாடி அல்லது கல்சட்டியையே உபயோகிக்கவும்.

* மாவடு, மலை வடுவாக இருந்தால் புளிப்பு அதிகமாக இருக்கும். [சும்மா ஒன்றை எடுத்து சாப்பிட்டுப் பார்க்காமலா இருப்போம்? 🙂 இந்த முறையும் வடுவின் பால் பட்டு வாயில் புண். :(] இதற்கு ஒரு பிடி உப்பும், இரண்டு டேபிள்ஸ்பூன் காரப்பொடியும் அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.

* அநேகமாக மாவடுவின் காம்பை அதிகம் வெட்டாமல் வைத்திருப்பார்கள். தராசிலோ, படியிலோ அளக்கும்போது இது அதிக இடத்தை அடைத்துக் கொள்ளும்; வியாபாரிக்கு லாபம். வாங்கும்போது ஒடித்துவிட்டு வாங்குவது நமது சாமர்த்தியம். முடியாவிட்டால் மார்க்கெட் விலையே அவ்வளவுதான் என்று தேற்றிக்கொள்ள வேண்டியதுதான். 😦 வேறு யாராவது(?!) வாங்கி வந்திருந்தால், “ஏமார்ற மூஞ்சி எப்ப வரும்னு காத்துண்டிருந்து தள்ளிவிடுவாங்க போல இருக்கு; சாமர்த்தியம் பத்தாதுன்னு எப்படித்தான் நிமிஷத்துல கண்டுபிடிக்கறானோ? இவங்களைத் தான் மாப்பிள்ளை பாக்க அழைச்சுகிட்டுப் போகணும்… ” என்று சொல்லிக்கொண்டே (நாம் கடைக்காரனைத்தானே திட்டுகிறோம்) ஈரம் உலரவைக்கும் நேரத்தில் ஒரு இன்ச் நீளம் மட்டும் விட்டு, மிச்சக் காம்பை வெட்டிவிடவும்.

* எக்காரணம் கொண்டும் மாவடுவில், வரும் நாள்களில், ஈரக் கரண்டியை உபயோகிக்கக் கூடாது. ஆனால் 2 மாதங்களுக்கு ஒரு முறை ஐஸ் க்யூப்களை இரண்டு மூன்று போட்டு வந்தால் ஒரு வருடத்திற்கு கெடாமல் இருக்கும்.

* நல்லெண்ணை விடுவது அவரவர் விருப்பம் தான். ஆனால் விடுவதால் அதிகம் சுருங்காமல் வாசனையாக இருக்கும்.

* மாவடு போட்டு பத்து பதினைந்து நாள்கள் கழித்து அதிலிருக்கும் நீரை இறுத்து, 2/3 பாகமாக ஆகும்வரை அடுப்பில் வைத்துக் காய்ச்சி ஆறவைத்து, பின் மாவடுவில் மீண்டும் விட்டால், வருடம் முழுவதும் கெட்டுப் போகாது. ஆனால் பொதுவாக நான் போடுவது, அப்படி எல்லலம் செய்யாமலே நன்றாகத் தான் இருக்கிறது.

* “மாப்பிள்ளையில் கிழவனும், மாவடுவில் அழுகலும் கிடையாது!” என்பார்கள். நம்பவேண்டாம். அழுகிய மாவடுவை எப்பொழுதும் சாப்பிடாதீர்கள்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

maavaduold.JPG

தயிர் சாதம் வரை காத்திருக்க வேண்டாம். குழம்பு சாதத்திற்கே மாவடு சூப்பராகப் பொருந்திப் போகும்.

துவையல்: காய்ந்த மிளகாய் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காயம் வறுத்து, அவற்றோடு சிறிது புளி, உப்பு, தேங்காய், வடுமாங்காய் சேர்த்து துவையல் அரைக்கலாம்.

பச்சடி: மாவடுவோடு ஒரு டீஸ்பூன் தேங்காய், சிறிது மல்லித் தழை, ஒரு பச்சை மிளகாய் வைத்து அரைத்து தயிரில் கலந்து கடுகு தாளித்து பச்சடி செய்யலாம்.

மாவடுச் சாறு: சென்ற வருட மாவடுச் சாறு கட்டாயம் மீந்திருக்கும். இதில் ஆலிவ் வாங்கி ஊற வைத்து இரண்டாம் நாளிலிருந்து சாப்பிடலாம். இதன் முழு காப்பிரைட்டும் எனக்கே சொந்தம்.

மேல்ச் சாறாக நீக்கிவிட்டு, அடியில் தங்கும் கெட்டியான சாறை சாதத்தில் எண்ணை அல்லது நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். தோசைக்குத் தொட்டுக் கொள்ளலாம்.

சுண்டைக்காய் வத்தல், வேப்பம் பூ, மினுக்கு வத்தல் ஆகியவற்றை சாற்றில் நனைத்து, ஊறியதும் வெயிலில் உலர்த்தி, எண்ணையில் பொரித்து, தயிர்சாதத்திற்குத் தொட்டுக் கொள்ளலாம்.

ஆனால் இந்தக் குறிப்பும் இனியும் இந்தப் பகுதியில் வரப்போகிற குறிப்புகளையும்ப் படிக்கிறவர்களுக்கு– அதிகமான ஊறுகாயும், சாறும் உடலுக்குக் கெடுதல் என்று எச்சரிக்க வேண்டிய கடமையும் எனக்கு இருக்கிறது. 🙂

babies.jpg

இந்த வாரம் கிட்டிய சுட்டிகள்…

மும்பையில் மாடுயுலர் கிச்சன் சம்பந்தப் பட்ட ஒரு கடைக்குப் போய் படம் எடுத்துப் போடவேண்டும் என்பது நீண்ட நாள் பெண்டிங் வேலை. ஒரு intro வாக இங்கே. ஹூம்ம்… நாங்களெல்லாம் இப்பொழுதைக்கு படம்தான் பார்க்க முடியும். வங்கியாகப் பார்த்து விதவிதமாய்.. வித்யாசமாய்.. அழுக்கழுக்காய்.. அபத்தமாய்… ‘எப்படிக் கொடுத்தாலும் செய்யத் தெரியும் என் வைஃப்க்கு’ மாதிரி சான்றிதழ்களோடு போய்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

எங்க வீட்டு oven’க்கு வாய் இருந்தா அழும்னு சொல்லுவேன்.  ஆனா இங்க ஒரு oven அழாம சமத்தா தான் பிறந்து வளர்ந்த கதையைச் சொல்ல ஆரம்பிச்சிருக்கு. சாக்லேட் எல்லாம் பிசிபிசுன்னு கைல ஒட்டி, படபடன்னு சோளமாப் பொரிஞ்சு.. முட்டை வெடிச்சு… அப்றம் ஜாலிதான்!
பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 |…. 

ஒரு நாளைக்கு ஒருத்தருக்கு 6 கிராம் தான் தேவையாம். அப்ப மூணு பேருக்கு ஒரு மாசத்துக்கு.. 3*6*30 = 540 கிராம். 😦 நாம் எவ்வளவு வாங்குகிறோம்? அதைத் தவிர வெளியில் எவ்வளவு உணவு வாங்கிச் சாப்பிடுகிறோம்? தலையைச் சுத்துது! (சுத்தாம என்ன செய்யும்?)

எது கூடாதுன்னு படிச்சு நொந்து போன கையோட, எதெது நல்லதுன்னு படிச்சுக்கலாம்…

வனப்பைக் கூட்டும் தேங்காய்

150 ரூ பீஸ் + 100ரூ மருந்தும் செலவழிப்பது ஏன்?

என்ன, எப்போது, எங்கே, எவ்வளவு உண்ண வேண்டும்.

தென்மாநிலங்களைத் தாண்டி இருக்கும் பலருக்கு நமது ஸ்பெஷல் உணவாக இட்லி, தோசை தெரியும் அளவுக்கு அடை பற்றித் தெரிவதில்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கும். (அவர்களாகவே நம் ஊர்ப் பக்கம் வரும்போது ஹோட்டலில் வாங்கிச் சாப்பிட்டாலும், அங்கே அவ்வளவு சுவையான மொறுமொறுப்பான அடைகள் கிடைப்பதில்லை என்பது என் எண்ணம்.) தயாரிக்கும்போது எடுக்கும் அதீத நேரம் காரணமாக அதை நாம் பலர் அவர்களுக்கு அறிமுகப் படுத்தவே இல்லையோ என்று நினைப்பேன். 4 பேர் வந்திருக்கிறார்கள் என்கிற பொழுது அவர்களை உட்காரவைத்து நிதானமாக அடை செய்துகொண்டிருப்பது கொஞ்சம் அபத்தமாக இருக்கும். பெரிய விருந்துகளில் அடைக்கு இடமே இல்லை. ஆனால் என் தனிப்பட்ட நாள்களில் அடை என் விருப்பமான தேர்வாகவே என்றும் இருந்திருக்கிறது. டிஃபனுக்கு என்ன செய்வது என்று யோசிக்கவே போரடிக்கும் நேரங்களிலோ, தொடர்ந்து வேறுவேலைகள் இருக்கும்போதோ, ஐந்தே நிமிடத்தில் அடைக்கு ஊறவைத்து விட்டு வேறு வேலைகளைப் பார்க்கப் போகலாம். தயாரிப்பதற்கு 10 நிமிடங்கள் முன்னால் மிக்ஸியில் அரைத்தால் போதும். பெரிய முன்னேற்பாடுகளோ, தயாரிப்பில் பெரிய நுட்பங்களோ, தவறுகளுக்கோ இடமே இல்லாதது. அடுப்பில் கல்லில் வேகக் காத்திருக்கும் நேரத்தில் கையில் புத்தகத்தோடு இருக்கலாம்; இடை இடையே சமையலறையில் வேறு சின்னச் சின்ன வேலைகளை கவனிக்கலாம்; அலட்டிக்கொள்ளாமல் டிவி பார்க்கலாம், நிதானமாக சண்டை போடலாம்… லாம்.. லாம்..

தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி – 1 கப்
பச்சை அரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 2 கப்
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 10
பெருங்காயம் – சிறிது
உப்பு, எண்ணை – தேவையான அளவு
 

விரும்பினால்..
தேங்காய்த் துருவல் – 1/4 கப்
கொத்தமல்லிக் கட்டு – 1
வெங்காயம் – 2
கறிவேப்பிலை – சிறிது
 

adai1.JPG

செய்முறை:

  • அரிசி, பருப்புகளை தனித்தனியாக ஊறவைக்கவும்.
  • அரிசியோடு மிளகாய், காயம், உப்பு சேர்த்து கரகரப்பாக ரவை பதத்திற்கு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
  • பருப்புகளை ரவை பதத்தை விடப் பெரிதாகவே இருக்குமாறு அரைத்து, அரிசிக் கலவையோடு கலந்துகொள்ளவும்.
  • தேங்காய்த் துருவல், மெலிதாக அரிந்த வெங்காயம், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லியைச் சேர்த்து, மெதுவாக அழுத்தாமல் கலந்துகொள்ளவும். (பொதுவாக காய்கறிகளை, ஏதாவது கலவைகளில் சேர்க்கும்போது கையாலோ, கரண்டியாலோ அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது. நறுக்கப்பட்ட காய்களிலிருந்து அதன் சாறு வெளியேறி, மாவில் கலந்து சுவையைப் பெருமளவில் கெடுத்துவிடும்.)
  • கெட்டியாக அரைத்த மாவைக் கையால் உருட்டி, அடுப்பில், தோசைக் கல்லில் தட்டவேண்டும்.
  • சுற்றிலும் எண்ணை விட்டு, நடுவிலும் துளை செய்து எண்ணை விடவேண்டும்.
  • நிதானமான சூட்டில், நன்கு சிவப்பாக வேகும்வரை காத்திருந்து திருப்பிப் போடவும்.
  • மீண்டும் சுற்றிலும், நடுவிலும் எண்ணை விட்டு இந்தப் பக்கமும் சிவக்கும் வரை காத்திருக்கவும்.
  • பின் மொறுமொறுப்பாக மாற இரண்டு பக்கமும் இன்னும் ஒரு முறை திருப்பிப் போட்டு சுடவைத்து எடுக்கவும்.

* அரிசிக்கு புழுங்கலரிசி நனைத்தால் மெத்தென்று இருக்கும். பச்சரிசியில் மொறுமொறுவென்று வரும். எது தேவையோ அந்த அரிசியை அதிகம் சேர்க்கவும்.

* அடை கரகரப்பாக இருக்க துவரம்பருப்பு அதிகமாகவும், விள்ளல் விள்ளலாக இருக்க கடலைப் பருப்பு அதிகமாகவும், மென்மையாக இருக்க உளுத்தம் பருப்பு அதிகமாகவும் எடுத்துக் கொள்ளவும்.

* ரிஃபைண்ட் ஆயில், நெய், தேங்காய் எண்ணை சம அளவில் கலந்துகொண்டு அடைக்கு உபயோகிப்பது, வேறு உலகத்திற்கு நம்மைக் கொண்டு செல்லும்.

* அடையை நான்- ஸ்டிக்கில் செய்வதோ, எண்னை குறைவாக விடுவதோ, அடைக்கும், அது பயணிக்கும் நாவிற்கும் நான் செய்யும் உச்சபட்சத் துரோகம். அப்படி எல்லாம் 4 அடை சாப்பிடுவதை விட, ஒரே அடை உருப்படியாக சாப்பிட்டுவிட்டு அந்த திருப்தியிலேயே கொஞ்சம் பட்டினி இருக்கலாம் என்பது என் கோட்பாடு. (அதற்காக ஒரே அடையோடு எழுந்திருக்க முடியுமா? 🙂 சும்மா ஒரு வேகத்துக்காக வசனம் பேசறதுதான்.)

* அடை மாவை சற்று மசிய, தளர அரைத்தும் கரண்டியால் நடுவில் வைத்து சுற்றிலும் இழுத்து சுலபமாக வார்க்கலாம்.

* அரை கப் தேங்காய்ப்பாலோ, 4 டீஸ்பூன் நல்லெண்ணணயோ மாவில் சேர்த்துப் பார்க்கவும். 

* எப்பொழுதும் இரண்டு கேரட் சேர்த்து அரைத்துவிடுவேன். நல்ல நிறத்தையும் சுவையையும் கொடுக்கும். (ஆனாலும் கேரட்டின் வாசனை வராது.)

* இளம் முளைக் கீரை அல்லது பாலக், கோஸ், உருளை, சௌசௌ இருந்தால் மெலிதாக அரிந்து சேர்க்கலாம். ஆனால் காய்கறிகள் சேர்ப்பது கொஞ்சம் மொறுமொறுப்பிற்கான சாத்தியங்களைக் குறைக்கும்.

* வாழைப்பூவின் உள்பகுதியோ, முருங்கைக் கீரையோ கிடைத்தால் உடனே அவசியம் அடைக்கு ஊறவைக்கவும்.

adai2.JPG

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

அடைக்கு அவியல் என்று கண்டுபிடித்தது யார் என்று தெரியவில்லை. அதுவாகவே அமைந்தால் ஒழிய நான் அப்படி மெனக்கெட்டதில்லை. அதன் பங்காளிகளான மோர்க்குழம்பு ஃபாமிலி கூட ஓக்கேதான்.

குழம்பு, சட்னி வகைகளை ஒரு பழக்கதோஷத்தில் சும்மா சொல்லிக் கொள்ளலாம்.

என்னைக் கேட்டால் எதுவும் தொட்டுக்கொள்ளாமலே சாப்பிடலாம் அல்லது மிளகாய்ப் பொடி.

கடைசி அடையின்போது அதன்மேல் தயிரும் விட்டு சாப்பிடலாம்; அதை அடுத்து ஒரு காப்பி சாப்பிடப் போவதில்லை என்ற நிலை இருந்தால்.

என் மாமனார் அடையில் ரச மண்டியை விட்டுச் சாப்பிடுவாராம். என் பெண்ணும் இப்போது அப்படியே ஊறவைத்து சாப்பிடுகிறாள். இதெல்லாம் கூடவா ஜீனிலிருந்து வரும்?? 😦

“சே, இப்படி தயிரும் ரச மண்டியும் விட்டுச் சாப்பிடுவீங்கன்னா நான் ஏன் மெனக்கெட்டு அடையை மொறுமொறுப்பாக எடுக்கணும்? பேருக்கு வேகவைச்சுப் போடறேன்!” என்று முனகிக் கொண்டே ஆனால் அடுத்த அடையை அதைவிட சூப்பர் மொறுமொறுப்பாக எடுத்துப் போடுவேன். 🙂

இந்தச் சமையல் குறிப்பு இகாரஸ் பிரகாஷுக்கு… 🙂 பெண்ணியவாதிகள் ஏதாவது இதற்கு சன்மானம் கொடுக்க நினைத்தால் அதை பிரகாசருக்கே அனுப்பிவைக்கவும். :))

முதலில் சாம்பார் குறித்த என் தனிப்பட்ட கருத்து மற்றும் முன்னுரை…  சொதி போன்ற குழம்பு வகைகள் அல்லது சாம்பாருக்காக ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் காய் இருப்பின் அளவில் குறைபாடு போன்ற பிரத்யேகக் காரணங்கள் தவிர்த்து, பொதுவாக ஏதாவது ஒரு காய்கறியில் சாம்பார் வைக்க நினைத்தால், அந்தக் காயை மட்டுமே உபயோகிப்பது தான் நல்ல சுவையைத் தரும். அப்போதுதான் அந்தக் காயின் முழுமையான குணத்தை அனுபவிக்க முடியும். இரண்டு அல்லது மேற்பட்ட காய்களை (கத்திரி, முருங்கை, முள்ளங்கி, வெங்காயம் இப்படி கலவையாக) சேர்த்துச் செய்வதால் ஒரு கலவையான வாசனை மற்றும் சுவையுமே கிடைத்து கொஞ்சம் அபத்தமாக, அனுபவிக்க முடியாமல் போய்விடும். ஒரே நேரத்தில் ஒரு நிமிடத்திற்கு மட்டுமே மேடையில் எல்லா அழகிகளும் தோன்றினால் எப்படி? ஒவ்வொருவராக, தனித் தனியாக, adamantஆ நடைபோட்டு வரவேண்டும் என்று எதிர்பார்ப்போம் தானே? 🙂 அதே மாதிரி, ‘என்ன அவசரம், இன்னொரு காயில் நாளைக்கு சாம்பார் செய்தால் போயிற்று!’ என்பதே என் கோட்பாடு. 🙂

ஆனால் எந்தச் சாம்பாரிலும் தக்காளியை நறுக்கிப் போடுவதும், சின்ன வெங்காயம் கொத்தமல்லித் தழையை அரைத்துவிடுவதும் தவறு இல்லை. பார்க்கப் போனால், தக்காளி, மேடையில் அழகிகளின் கூடவே நடந்துவரும் வரும் ஆண் மாதிரி, மேடைக்கே சே!.. சாம்பாருக்கே கம்பீரம். மற்றும் சாம்பாரில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் வெங்காயம், கொத்தமல்லித் தழையின் குணம், மென்மையாக ஆனால் தாளலயத்துடன் அரட்டும் பிண்ணனி இசை போன்றது. இவை இரண்டும் இல்லாவிட்டால் தான், எத்தனை வெளி(ச்ச) அலங்காரம் செய்தாலும் சாம்பார் சோபிக்காது. பஸ் ஸ்டாண்டில் சாதாரணமாகப் பார்க்கும் பெண்ணின் எபஃக்ட் தான் இதற்கு இருக்கும். இனி…

முருங்கைக் காய்ச் சாம்பார்

murungakkai-sambar1.jpg

தேவையான பொருள்கள்:

முருங்கைக் காய் – 2
புளி – எலுமிச்சை அளவு
தக்காளி – 2
துவரம் பருப்பு – 1/2 கப்
சாம்பார்ப் பொடி – 1  1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் –  1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை –  சிறிது

மசாலா அரைக்க:
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 1
தனியா – 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிது

தாளிக்க –  எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

murungaikkaai-sambar2.JPG

செய்முறை:

  • புளியை நீர்க்க இரண்டு மூன்று முறைகளாகக் கரைத்துவைத்துக் கொள்ளவும்.
  • துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
  • முருங்கைக் காயை 3 அங்குலத் துண்டுகளாகவும் தக்காளியை மெல்லிதாக நீளவாக்கிலும் நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • அதில் நறுக்கிய முருங்கைத் துண்டுகளைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் அரை கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, வாணலியை மூடிவைக்கவும்.
  • ஐந்து அல்லது எட்டு நிமிடங்களில் முருங்கை பாதி வெந்திருக்கும்; இப்போது புளித் தண்ணீர் சேர்க்கவும்.
  • மேலே உப்பு, மஞ்சள்தூள், தக்காளி, அரைத்த மசாலா, சாம்பார்ப் பொடி சேர்த்துக் கொதிக்க விடவும்.
  • புளிவாசனை போனபின், வேகவைத்த துவரம் பருப்பைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்களுக்குக் கொதிக்கவைத்து இறக்கவும்.
  • கொத்தமல்லித் தழை நறுக்கித் தூவி, பரிமாறவும்.

mullangi-sambar.JPG

 * முருங்கைக் காயை ஒரேயடியாகப் பிளந்து தனித் தனியாவது மாதிரி வேகவைத்துவிடக் கூடாது. கத்தரி போன்றவைகளுக்கும் இதுவே நியதி.
 
* முள்ளங்கி போன்ற காய்களை குக்கரில் நன்கு வேகவைத்துக் கொள்ளலாம்.

* பொதுவாக சாம்பாருக்கு மொத்த மசாலாவையுமே அவ்வப்போது வறுத்து அரைத்துக் கொள்வது சுவையாக இருக்கும் என்றாலும் அன்றாடம் அது நேரத்தை இழுக்கும் மற்றும் எத்தனைப் புளிக்கு எத்தனை சாம்பார்ப்பொடி என்ற கணக்கு நமக்கு வழக்கத்தில் தெரிந்திருப்பதால் கொஞ்சம் யோசிக்காமல் குழம்பாமல் இந்த முறையில் சாம்பார்ப் பொடியையே உபயோகித்து, மேல் மசாலாவை மட்டும் அரைத்துச் சேர்த்து செய்யலாம். இது சுலபம்.

* கதம்பச் சாம்பார் முதல் முருங்கைச் சாம்பார் வரை காய் சேர்த்த எந்தவிதமான சாம்பாரிலும் சாதம் கலக்கும்போது, கவனிக்க வேண்டியது.. ..

அவரவரே தனித்தனியாக சாதத்தில் கலந்து சாப்பிடுவதை விட இரண்டு பங்கு சாம்பார், சாம்பார் சாதமாகக் கலக்கத் தேவைப்படும். (வைத்த சாம்பார் அதிகமாக இருந்தால் தீர்ப்பதற்காகவே அதை சாம்பார் சாதமாகக் கலந்துவிடுவேன்.) சாதாரணமான சாம்பாரைவிட கலப்பதற்கான சாம்பார் இன்னும் நீர்த்து இருக்க வேண்டும். சுடும் சாதத்தில் சேர்க்கச் சேர்க்க இறுகும். (இப்படி அதிகமாக சாம்பாரைக் கொட்டி, சாதம் கலந்து அடிக்கடி சாப்பிடுவது வயிற்றில் அசிடிடியை ஏற்படுத்தும் என்பதையும் நினைவில் வைக்கவேண்டும். நாம்தான் அநியாயத்திற்கு இவ்வளவு புளி, காரம் சமையலில் சேர்த்துக் கொள்கிறோம்.)

நன்கு வெந்த சாதத்தை (வழக்கமான நமது சாதத்தைவிட கொஞ்சம் குழைந்திருந்தாலும் இன்னும் நன்றாக இருக்கும்.) ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான நெய் (விரும்பினால் கொஞ்சம் நல்லெண்ணையும் சேர்த்துக் கொள்ளலாம். கலக்கலாக இருக்கும்.) சேர்த்து வைக்க வேண்டும். சாம்பாரைச் சேர்ப்பதற்கு முன் அதிலுள்ள காயை(முருங்கை, முள்ளங்கி) தனியாக எடுத்துவைத்துக் கொள்ளவேண்டும். வெறும் சாம்பாரை மட்டும் சேர்த்து நன்கு குழைய கலந்துவிட்டு, கடைசியில் எடுத்துவைத்திருக்கும் காயைக் கலவையில் கொட்டி மென்மையாக, காய் நசுங்கி உடைந்துவிடாமல் கலந்துவைக்க வேண்டும். மொத்தமாக எல்லாச் சாம்பாரையும் காயோடு சாதத்தில் கொட்டிக் கலந்தால் காய் காணாமல் போய்விடும். 🙂   

மேலும் சில சுவையான சாம்பார்ச் சுட்டிகள்..

சாம்பாரி சந்திரமதி

பலநாட்கள் தனியாக புளிக்குழம்பு வைத்து, அதில் பருப்புச் சட்டியை உடைத்துக் கலக்கி சாம்பார் செய்யப்பட்டது. சட்டி விலை உயர்ந்ததும், சட்டியை உடைக்க வேண்டாம், பருப்பை மட்டும் கொட்டினால் போதும் என்ற முடிவுக்கு வந்தார்கள்.

“சாம்பார் பிறந்த கதை” என். சுவாமிநாதன் :))))
 
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சாதம், இட்லி, தோசை, மெதுவடை, வெண்பொங்கல், பிற பொங்கல் வகைகள், உப்புமா… 

காரடையான் நோன்பு அன்று இனிப்புக் கொழுக்கட்டை செய்வார்கள் என்றாலும் அத்துடன் சேர்த்து இதையும் செய்து பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

அரிசி மாவு – 1 கப்
தண்ணீர் – 1 1/2கப்
துவரை அல்லது தட்டப் பயறு – 1 பிடி
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – தேங்காயெண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

kaaradaiyaan-nonbu-kozukkattaikaaram.JPG

செய்முறை:

  • முதலில் அரிசி மாவை, நிதானமான சூட்டில், சிவக்க வறுத்துக் கொள்ளவும். (அரிசியை சிவக்க வறுத்தும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம். நைசாக அரைத்தால் கொழுக்கட்டை மொழுக்’கென்று இருக்கும். கொஞ்சம் கரகரப்பாக அரைத்தால் சுவையாக இருக்கும்.)
  • அடுப்பில் வாணலியில், எண்ணை விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, சிறு துண்டுகளாக நறுக்கிய பச்சை மிளகாய், தாளிக்கவும்.
  • அத்துடன் தட்டப் பயறைச் சேர்த்து வறுத்து, தண்ணீர் சேர்த்து, பாதிப் பதத்திற்கு வேக வைக்கவும்.
  • அதன்பின் வாணலியில் இருக்கும் தண்ணீர் ஒன்றரை கப் இருக்குமாறு- தேவைப் பட்டால் மேலும் சேர்த்துக் கொள்ளவும். 
  • அதில் தேவையான உப்பு சேர்த்து, மாவைக் கொட்டிக் கிளறி, இறுகியதும் இறக்கவும். (வெல்லத்தோடு மாவைக் கிளறும்போது, அடுப்பில் வெல்லப் பாகு உருகிய நிலையிலேயே இருப்பதால், மாவு நன்றாக இறுகிக் கிளற வரும். ஆனால் இதில் தண்ணீர் சில நேரம் இன்னும் அதிகம் தேவைப் படலாம். தயாராக ஒரு கப் சூடான தண்ணீர் வைத்திருப்பது நல்லது. தேவைப் பட்டால் உபயோகித்துக் கொள்ளலாம்.
  • இட்லித் தட்டில் நெய் அல்லது தேங்காய் எண்ணை தடவி, கொழுக்கட்டையாகவோ, அடைகளாகவோ தட்டி வேக வைத்து எடுக்கவும்.

* நோன்பு தினம் என்பதால் மிகவும் சுத்தமாகச் செய்ய நினைப்பவர்கள், நேரடியாக வாணலியில் தட்டப் பயறை வறுத்து பாதிவரை வேகவைப்பார்கள். இப்படிச் செய்வது மிகுந்த மணமாக இருக்கும். அல்லாமல் ஒரு நான்கு மணி நேரம் முன்னாலேயே பயறை தண்ணீரில் ஊறவைத்தும் செய்யலாம். இது செய்வது சுலபம். 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நோன்பு தினம் என்பதால் தேங்காய்ச் சட்னி. மற்றபடி உப்புமாவிற்குத் தொட்டுக் கொள்ளும் எதுவும், இதற்கும் சரியே.

காரடையான் நோன்பு குறித்து…. சுட்டி 1| சுட்டி 2

தேவையான பொருள்கள்:

அரிசி மாவு – 1 கப்
தண்ணீர் – 1 கப்
வெல்லம் – 1 கப்
துவரை அல்லது தட்டப் பயறு – 1 பிடி
தேங்காய் – சிறிது
ஏலப் பொடி – 1/2 டீஸ்பூன்
நெய் – தேவையான அளவு

செய்முறை:

kaaradaiyaan-nonbu-kozukkattaiinippu.JPG

 

  • முதலில் அரிசி மாவை, நிதானமான சூட்டில், சிவக்க வறுத்துக் கொள்ளவும். (அரிசியை சிவக்க வறுத்தும், மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம். நைசாக அரைத்தால் கொழுக்கட்டை மொழுக்’கென்று இருக்கும். கொஞ்சம் கரகரப்பாக அரைத்தால் சுவையாக இருக்கும்.)
  • தேங்காயை, சிறுசிறு துண்டுகளாகக் கீறிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில், தட்டப் பயறை வறுத்து, தண்ணீர் சேர்த்து, கொதித்கவைத்து, பயறு பாதிவரை வேக வைக்கவும்.
  • அதன்பின் வாணலியில் இருக்கும் தண்ணீர் ஒரு கப் இருக்குமாறு- தேவைப் பட்டால் மேலும் சேர்த்துக் கொள்ளவும்.
  • அத்துடன் வெல்லம் சேர்த்து, கரைந்ததும், தேங்காய்த் துண்டுகள், ஏலப்பொடி சேர்த்து, மாவைக் கொட்டிக் கிளறி இறக்கவும்.
  • இட்லித் தட்டில் நெய் தடவி, கொழுக்கட்டையாகவோ, அடை மாதிரி தட்டியோ வேகவைத்து எடுக்கவும்.

* நோன்பு தினம் என்பதால் மிகவும் சுத்தமாகச் செய்ய நினைப்பவர்கள், நேரடியாக வாணலியில் தட்டப் பயறை வறுத்து பாதிவரை வேகவைப்பார்கள். இப்படிச் செய்வது மிகுந்த மணமாக இருக்கும். அல்லாமல் ஒரு நான்கு மணி நேரம் முன்னாலேயே பயறை தண்ணீரில் ஊறவைத்தும் செய்யலாம். இது செய்வது சுலபம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சுடச் சுட இதைச் சாப்பிட, இதற்குத் தொட்டுக் கொள்ள வெண்ணை என்று கண்டுபிடித்தவருக்கு அபார ரசனை இருந்திருக்க வேண்டும். சூப்பர் காம்பினேஷன்.

நன்றாக இருக்கிறதே, இன்னும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னால், ஒவ்வொரு தடவையும் பாட்டி, “அவ்ளோதானே, இதென்ன பிரமாதமா, திரும்ப இன்னொரு நாள் செஞ்சுட்டா போச்சு!” என்று சொல்வார். ஆனால் சில உணவுகள் அந்தந்தப் பண்டிகை தவிர வேறு நாள்களில் செய்யக் கைவருவதே இல்லை. நமக்கும் கேட்கத் தோன்றுவதில்லை. அதுபோல் இந்த நோன்புக் கொழுக்கட்டைக்கும் இன்னொரு நாள் என்பது இனி அடுத்த வருட மாசி மாதக் கடைசி நாள் தான்.

இதில் எனக்குப் பிடித்த இன்னொரு மிக முக்கிய விஷயம், அண்ணன் தம்பியை எல்லாம் அப்படி ஓரமாக உட்காரவைத்துவிட்டு நமக்கு வீட்டில் முதல் மரியாதை நடக்கும். வேண்டுமென்றே, செய்தவை ஆறிப் போகும்வரை, நேரத்தை இழுத்தடித்து சாப்பிடுவேன். 🙂

காரடையான் நோன்புக் கொழுக்கட்டை (காரம்)

கர்நாடக மாநில உணவு. பொதுவாக விருந்து போன்ற நேரங்களில் ஏராளமான சாதம் சாம்பார் என்றெல்லாம் தனித் தனியாக இழுத்துவிட்டுக் கொண்டு கஷ்டப்படுவதை விட இப்படி ஒரே ஐட்டமாகச் செய்வதால் நேரம், இடம், சிரமம் குறைவு. எழுத்தாளர் உஷா, இதைச் செய்துபோட்டு பெரிய இலக்கியவாதிகளை எல்லாம் வாயடைக்க வைத்திருக்கிறார் என்பது உபரித் தகவல். 🙂
 
தேவையான பொருள்கள்:

அரிசி – 1 1/2 கப்
துவரம்பருப்பு – 1 கப்
கொப்பரைத் தேங்காய் – ஒரு மூடி
கசகசா – 1 டேபிள்ஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயம்
எண்ணை – 1/4 கப்
நெய் – 1 டீஸ்பூன்

வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 50 கிராம்
தனியா – 1 கப்
கடலைப் பருப்பு – 3/4 கப்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
வெந்தயம் – 2 டீஸ்பூன்

bizibhelaa-bhaath.JPG

செய்முறை:

  • காய்ந்த மிளகாய், தனியா, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் இவைகளைப் பொன்னிறமாக வறுத்து நைசாக பொடித்துக் கொள்ளவும்.
  • கசகசாவை தனியாக வறுத்துக் கொள்ளவும்.
  • கொப்பரைத் தேங்காயை, துருவி, சிவக்க வறுத்து, வறுத்துவைத்துள்ள கசகசாவோடு பொடித்துக் கொள்ளவும்.
  • புளியை நீர்க்கக் கரைத்துவைத்துக் கொள்ளவும்.
  • குக்கரில் அரிசி, பருப்பை கழுவி, சேர்த்து வைத்து, மஞ்சள் தூள், 3 பங்கு தண்ணீர் வைத்து குழைய வேகவிடவும்.
  • அடுப்பில் வாணலியில் அரிசி, பருப்புக் கலவையோடு புளித் தண்ணீர், உப்பு சேர்த்து கிளற ஆரம்பிக்கவும். புளி வாசனை அடங்கும்வரை கிளற வேண்டும். அதனால் தேவைப்பட்டால் இன்னும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
  • அத்தோடு பொடித்துவைத்துள்ள தேங்காய் கசகசாப் பொடி சேர்க்கவும். தேவையான அளவு மட்டும் (சுமார் 3 அல்லது 4 டீஸ்பூன்) பொடித்துவைத்துள்ள மசாலாப் பொடி சேர்த்து, கிளறி இறக்கவும்.
  • எண்ணையில், கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

* கடைசியாக எப்பொழுதும் சொல்லும் ‘நறுக்கிய கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்’ என்ற வாசகம் இதற்குக் கிடையாது. பச்சைக் கொத்தமல்லி சேர்ப்பது, குழம்பு உலகத்திற்கு நம்மைக் கொண்டுபோய் விடும். வறுத்த தனியா, கொப்பரை, கசகசாவின் வாசமும் பருப்பின் குணமுமே இதில் மேலோங்கி இருக்கவேண்டும்.

* அடுப்பிலிருந்து இறக்கியபின் நேரம் ஆக ஆக மிக அதிகமாக இறுகும். எனவே இறக்கும் சமயத்திலேயே மிக மிகத் தளர்வாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

* குக்கர் உள்பாத்திரத்தில் அரிசி, பருப்பை வேகவைப்பதை விட ப்ரஷர்பேனில் நேரடியாக வேகவைத்து, பின் திறந்ததும் அதிலேயே புளித்தண்ணீர், மசாலாவைக் கலந்து கிளறுவது சுலபமாக இருக்கும்.

* கோஸ், கேரட், நூல்கோல், பச்சைப் பட்டாணி, சௌசௌ போன்ற காய்கறிகள், ஏதாவது ஒன்றோ அல்லது எல்லாமேயோ மிக மிக மெல்லிய துண்டுகளாக அரிந்து, அரிசி பருப்போடு சேர்த்து வேகவைக்கலாம். மாறுபட்ட சுவையோடு நன்றாக இருக்கும். (நான் எப்பொழுதும் இப்படியே செய்கிறேன்.)

* மசாலா வாசனை விரும்புபவர்கள், வறுத்து அரைக்கும் பொருள்களோடு இலவங்கப் பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வறுத்து அரைக்கலாம். அநேக ஹோட்டல்களில் இப்படியே பரிமாறுகிறார்கள். (எனக்கு மசாலா வாசனை பிடிக்கும் என்றாலும் இந்த உணவில் அதைச் சேர்ப்பது பிடிக்காது.)

* தேங்காய் கொப்பரையாகக் கிடைக்காவிடில், முற்றிய தேங்காயை உபயோகித்துக் கொள்ளலாம். அல்லது அதை உடைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு வாரத்தில் கொப்பரையாகிவிடும். (கொப்பரையாகி விட்ட தேங்காயை ஃப்ரிட்ஜில் வைத்தால் மீண்டும் தேங்காய் மாதிரி சுலபமாகத் துருவ வரும் என்பது இன்னொரு, ஆனால் இந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லாத குறிப்பு.)

* விருந்து போன்ற சமயங்களில் செய்வதானால் நெய்யில் சிறிது முந்திரிப் பருப்பு  வறுத்தும் போடலாம்.

* கடைசியாக ஆனால் முக்கியமாக, கர்நாடக மக்கள் பொதுவாக எல்லா உணவுகளிலும் கடைசியில் சிறு கட்டி வெல்லம் சேர்ப்பார்கள். விரும்புபவர்கள் சேர்த்துக் கொள்ளலாம். (எனக்குப் பிடிக்காது.)

சுலப முறை: (என் முறை என்றே படிக்கவும்.)

ஒவ்வொரு முறையும் இவ்வளவு மெனக்கெடத் நேரமில்லாதவர்கள்–

காய்ந்த மிளகாய் – 50 கிராம்
தனியா – 1 கப்
கடலைப் பருப்பு – 3/4 கப்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
கொப்பரைத் தேங்காய் – 1 (துருவியது)
கசகசா – 2 டேபிள்ஸ்பூன்

விரும்பினால்…
இலவங்கப் பட்டை – 4 துண்டு
ஏலக்காய் – 4
கிராம்பு – 4
மராட்டி மொக்கு – 10

  • இவைகளை வறுத்துப் பொடித்து, தயாராக வைத்துக் கொண்டால், அரிசி, பருப்பை வேகவைத்து, புளித்தண்ணீர், தேவையான அளவு மசாலாப் பொடி கலந்து, கிளறி இறக்குவது சுலபம். பொடியில் தேங்காய் சேர்த்திருப்பதால், ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் எந்த ஊர் தட்பவெப்பத்திற்கும் கவலை இல்லாமல் இருக்கலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

உருளைக் கிழங்கு, வாழை, சேனை போன்ற ஏதாவது காய்கறி ரோஸ்ட், பிசிபேளாவில் சேர்க்காத காய்கறியில்(like வெள்ளரி) செய்த தயிர்ப் பச்சடிகள், அப்பளம், வடாம், சிப்ஸ் வகை.

என் தேர்வு எப்பொழுதும், சுடச் சுட பாதி ஈரத்துடன் சீறிப் பொரியும் மலையாளப் பப்படம்.

நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க. இதை எல்லாம் செய்ய எனக்கு ஒரு முழு மாசம் நெட் பிச்சுக்கணும்.

இந்த வரிகளை இந்தப் பதிவில் சிரித்துக் கொண்டே நான் தட்டியபோது, விதியும் என்னோடு சேர்ந்து சிரித்திருக்க வேண்டும். பதிவை ஏற்றிவிட்டு, இரவு தூங்கி காலையில் ஆறரை மணிக்கு, பெட்டியைத் திறந்தால், எதுவுமே வரவில்லை. “No operting system found..” என்ற ஒரே வரிதான், திரும்பத் திரும்ப. எனது வானளாவிய கணினி அறிவுக்கு இதன் பொருள் புரியாததால், வலைப்பதிவு நண்பர் ஒருவருக்கு அந்த அதிகாலையில் தொலைப்பேசினால், இந்த நேரத்துக்கு இவளா என்று வியந்தார் என்றாலும் செய்திகேட்டு மகிழ்ச்சியாகி விட்டார்.

“ஆஹா, பொட்டி புட்டுகிச்சு!”

“அப்டீன்னா?”

“அப்டீன்னா, harddisc corrupted. மாத்தற வரைக்கும் எதுவும் செய்ய முடியாது. என்சாய்!”

கடந்த 5 வருடங்களில் இப்படி எல்லாம் நடந்ததே இல்லை. அதெல்லாம் இருக்காது என்று திடமாக நம்பினேன். சாட்சிக்காரனை விட சண்டைக்காரனே மேல் என்று என் வீட்டு ரங்கமணிக்கு ஃபோனினால், லேசான அதிர்ச்சிக்குப் பின் தெளிவாக பதில் வந்தது, “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. மூடிவெச்சுட்டு மிச்ச தூக்கத்தை தொடர்ந்து செய்! நான் நேரம் கிடைக்கும்போது ஆளைப் பிடிச்சு ஏதாவது செய்றேன்.”

மனம் ஆறாமல் மீண்டும் நண்பருக்கே பேசினால், உள்ளே இருக்கும் கோப்புகள் எதுவும் திரும்பக் கிடைக்க சாத்தியம் குறைச்சல் என்று சொல்லிவிட்டார். அப்படியென்றால் நெட் கனெக்ஷன் போகாமல், எனக்கு ஒரு மாதம் வேலை வைக்காமலே எல்லாம் துடைத்து துப்புரவாகிவிட்டதா?”

கோப்புகள்… முதலில் என்னென்ன வைத்திருக்கிறேன் என்று சரியாக உடனே நினைவுக்கு வரவில்லை. ஆனால் ஐயோ… நினைக்க நினைக்க அன்று முழுவதும் நான் அடைந்த மனச்சோர்வு வாழ்நாளில் அடைந்ததில்லை. எக்கச்சக்கமான(ஆயிரத்திற்கும் மேற்பட்ட) புகைப்படங்கள், இதுவரை படித்த புத்தகங்கள், இணையத்திலிருந்து எடுத்த ரசித்த குறிப்புகள், பக்கங்கள், ரொம்பப் பிடித்ததென்று சேமித்த பக்கங்கள், மிக அதிக அளவிலான இசைக் குறிப்புகள், பாடல்கள், ஹரிமொழி.காம்-ற்காக சேமித்த ஆவணங்கள், மக்கள் முகவரிகள், சுஜாதாவோடு பேசி சேமித்த அம்பல அரட்டைகள், அப்புறம் படிக்கவென்று சேமித்த சுவாரசியச் சுட்டிகள், லூசுத்தனமாய் நான் எழுதி ஆனால் உலக நன்மைக்காக நான் வெளியிடாமல் வைத்திருந்த சில படைப்புகள்(!), பின்னூட்டங்கள், இதுவரை இணையத்தில் மற்றவர்கள் படித்து சிபாரிசு செய்திருக்கும் மிக நீளமான புத்தக விருப்பப் பட்டியல், இன்னும் சொல்ல விரும்பாத பெரிய்ய லிஸ்ட், இன்னும் என்னவெல்லாம் இப்பொழுதைக்கு மறந்து பின்னர் தேடுவேனோ….. எல்லாவற்றிற்கும் மேல் இத்தனை வருடங்கள் உறவினர்கள், நண்பர்கள், மரத்தடி நண்பர்களுடன் செய்த யாஹூ சாட்.. இணையத்தில் எல்லாவற்றிலிருந்தும் என்றாவது ஒரு நாள் விலகநேர்ந்தாலும், பின்னர் நினைவுகூற, ஆசையாய் அசைபோட இருக்கட்டும் என்று வைத்திருந்த எல்லாமே போச்!

பெண் ஸ்கூலிலிருந்து வந்து, கணினி மூடியிருப்பதைப் பார்த்து ‘கரண்ட் கட்டா? இருக்கே, ஃபேன் ஓடுதே?” என்று வியந்தாள். நடந்ததைச் சொன்னால், “C E L E B R A A A A T E!!” என்று ஒரே குதி. :((

வைத்திருந்த ஒவ்வொன்றாய் நினைவுக்கு வரவர திகிலோடு ஒரு பத்துமுறையாவது அன்று ஃபோன் செய்து புலம்பியதில் ரங்கமணி வரும்போது ஆளோடு வந்தார். வந்த சிகாமணி பார்த்துவிட்டு, ஆபரேஷன் முடிந்து வெளியே வரும் டாக்டரைப் போல் கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக் கொண்டார். Booting sector மட்டும் போயிருக்கலாம், டேட்டா ஏதாவது தேறுமா என்று எடுத்துப் போய் பார்த்து எதுவும் ஒரு 24 மணிநேரம் ஆனால் தான் சொல்ல முடியும் என்று சொல்லி செர்வரைத் திறந்துபார்த்தார். திறப்பதற்கான அத்தனை உபகரணங்களும் ஓடோடி எடுத்துக் கொடுத்தேன். நாங்களும் முதல்முறையாக இப்போது தான் உள்ளே பார்க்கிறோம். ‘ஐயா, செம குட்டி ஃபேன் உள்ள இருக்கு’ என்று பெண் குறுக்கே விழுந்து ஓடியது. “சாய் பீதே ஹைங் க்யா?” என்று வந்தவரை விசாரித்த ரங்கமணியை முறைத்தேன். அப்பொழுதைக்கு அந்த இடத்தை விட்டு எந்தக் காரணத்திற்காகவும் நகரும் உத்தேசமில்லை. 

ஏதாவது data வெச்சிருந்தீங்களா என்று ரங்கமணியைக் கேட்டதற்கு எனக்கு மேலும் இரண்டு கோபங்கள். பொதுவாக கணினி என்றால் அது ஆணுடையதாகத் தான் இருக்க வேண்டும், வீட்டில் டூல்ஸ் தேவை என்றால் மட்டும் எடுத்துத் தர பெண்கள் என்ற மக்களின் பொதுவான கண்ணோட்டம். அதைவிட, இதற்கு பதில் சொல்லாமல் ஒரு பெரிய யோகியைப் போல் முகத்தை தினசரிக்குள் வைத்திருந்த நம்மாளின் ரியாக்ஷன். ‘ஏதாவது data’ என்று சொல்வதற்கு கொஞ்சமாகவா உள்ளே இருக்கிறது? சே! 

“பதில் சொன்னா என்ன?”

“என்னிக்காவது அடுத்தவனுக்கும் கொஞ்சமாவது அந்த நாற்காலியை விட்டுக் கொடுத்திருந்தா, நானும் கிறுக்கனாட்டம் எதையாவது உள்ள சேத்து வெச்சிருந்திருப்பேன். அப்படி ஒரு ஆக்ஸிடென்ட் இதுவரைக்கும் இந்த வீட்டுல நடந்திருக்கா? அக்கிரமம் அதிகமாகும்போது கடவுள் இப்படித்தான் உள்ள பூந்து அழிப்பாரு. டேய் கோவிந்தா, எதை வைத்திருந்தாய், அதை நீ இழப்பதற்கு? நீ ஜாலியா இருடா!! அண்ணே, எது அழிந்ததோ, அது அங்கிருந்தே கொடுக்கப்பட்டது. நீங்க அங்கயே கேளுங்க விபரமெல்லாம்!” என்று என்பக்கம் கைகாட்டப் பட்டது.

சொல்ல வார்த்தையே வராமல் துக்கம் தொண்டையை அடைப்பதை அன்றுதான் அனுபவத்தில் கண்டேன். என்னுடைய கலக்கம் நிச்சயம் என்னையும் சேர்த்து, யாரும் எதிர்பாராதது. வீடு சீரியஸானது.

வந்தவரை முடுக்கியதில் தன்னால் 25 சதம் டேட்டாவிற்கு மட்டுமே கியாரண்டி தரமுடியும் என்று சொன்னார். ஆனால் ஆபரேட்டிங் சிஸ்டம் தன்னிடம் இல்லை என்ற குண்டைத் தூக்கிப் போட்டார். IBM வழியாகவே அதை மீண்டும் செய்ய முடியும் என்று சொன்னதில், விட்டால் போதும் என்று அவருக்கான தட்சிணையைக் கொடுத்து அனுப்பிவைத்து மறுநாள் IBM agency வழியாக…

பொதுவாக யாருக்கு தொடர்புகொண்டாலும், சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா மாதிரி, கம்பெனி வழியாக வரட்டுமா, பிரைவேட்டாக வரட்டுமா என்று கேட்கிறார்கள். ரிஸ்க் எதற்கு, வரியோடு பில்லும் வேண்டும் என்று சொல்லியே வரவழைத்தோம்.

“நான் ஆபரேடிங் சிஸ்டம் இப்ப இதுல ஏத்திடுவேன். ஆனா ஏற்கனவே ஏதாவது(?!) உள்ள டேட்டா வெச்சிருந்தீங்கன்னா, அதெல்லாம் போயிடுமே, பரவாயில்லையா?” கூலாகக் கேட்டார்.

ஐயய்யோ, இருக்கிற டேட்டாவெல்லாம் retrieve செய்தபின் ஏற்றவும் என்று சொன்னால், IBM உள்பட எந்தப் பெரிய கம்பெனியும் அந்த வேலைக்கு மட்டும் பொறுப்பு எடுத்துக் கொள்வதில்லை என்று திடமாக மறுத்தார். இதன் காரணம் எனக்குப் புரியவில்லை. இதற்கென்று கஸ்டமர் தனியாக ஒருவரை நாட முடியுமா? வந்தவரையே ப்ரைவேட் வேலையாக எடுத்து செய்யச் சொன்னால், ஏதோ ஒரு படத்தில் திருமணத்திற்காக கவுண்டமணி ஒருநாள் மட்டும் லஞ்சம் வாங்காத போலீஸ் மாதிரி, அந்த வார்த்தையைக் கேட்டதுமே ஓடுவாரே, அப்படி ஒரு அதிர்ச்சி காட்டி மறுத்தார். மூனு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்லை என்று எவ்வளவோ நான் சொல்லிப் பார்த்தும் கேட்கவில்லை. இடையில் “ஜாப் எதிக்ஸ்னா என்னன்னு உனக்குத் தெரியுமா? அடுத்தவங்களை தொல்லை பண்ற, உனக்கு வேலை ஆகணும்னு?” என்று பக்கவாட்டிலிருந்து வந்த முறைப்பிற்கு, “ஆமாமா, நாங்களெல்லாம் எதிக்ஸ் பார்க்க ஆரம்பிச்சா குப்பை கொட்ட முடியும் மாமியார் வீட்டுல,” என்று சொல்லவந்ததை இன்னொரு நாள் மறக்காமல் சொல்லிவிட வேண்டும். இப்பொழுதைக்கு நமக்கு வேலை ஆக வேண்டுமே. (ஆனால் உண்மையிலேயே தெரியாமல் தான் கேட்கிறேன். நமக்கு ஒரு தொழில்நுட்பம் தெரிந்திருக்கிறது. நம் கம்பெனி ஏற்காத அந்த வேலையை, கம்பெனியை பாதிக்காத பட்சத்தில் வேறு ஒருவருக்கு பகுதி நேரத்தில் செய்துகொடுத்து பணம் சம்பாதித்தால் என்ன தவறு?)

சரி, நாங்கள் எல்லா டேட்டாவும் மீட்டபின் உங்களைக் கூப்பிடுகிறோம், அப்போது வந்தால் போதும், ஆனால் திரும்ப ஒருமுறை இதற்கு பணம் தரமுடியாது என்று அத்தனை கவலையிலும் மறக்காமல் கறாராகச் சொல்லி அனுப்பிவிட்டு,… பழைய மீட்பரின் நம்பரைத் தேடினேன். (எதற்கும் இருக்கட்டும் என்று வாங்கிவைத்திருந்தேன்.) இரண்டு நாள் கழித்து வருவதாக உத்தரவாதம் கிடைத்தது.

அதற்குள் ஒரு 25 சதமாவது கிடைக்கும் என்று சொன்னாரே, நம்முடையதில் எந்த 25 சதம் கிடைத்தால் பரவாயில்லை என்று மனம் கணக்குப் போட்டு சபலப்பட ஆரம்பித்தது. நாம் முக்கியமாக நினைப்பதெல்லாம் மட்டும் கிடைத்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ‘வேண்டாத தெய்வமில்லை, நீதானே பாக்கி!” என்றே எல்லாத் தெய்வத்திடமும் சொல்லி வேண்டிக் கொள்ள ஆரம்பித்தேன். (பகுத்தறிவாவது, மண்ணாங்கட்டியாவது!)

“25 பெர்சண்ட்ங்கரது system files, temporary files, cookies, favorites, visit history இதெல்லாமா இருக்கும்!” என்று போகிற போக்கில் சொன்னவரை பசிக்காத, பொழுதுபோகாத கிழப் புலிதான் தின்ன வேண்டும். Grrr…

0

“பத்து நாளா ஒரே டார்ச்சர்பா. எப்பப் பாரு படி படின்னு. தனக்கு போர் அடிக்குதுன்னு என்னைப் படிக்க வெக்கறா. விளையாடவே விட மாட்டேங்கறா. ஃப்ரெண்ட்ஸ் விளையாட வந்தாலும் அவ படிக்கணும்னு சொல்லி அனுப்பிட்டா. ஒரு கார்ட்டூனும் பாக்க முடியலை. தானே ரிமோட் கைல வெச்சுக்கறா. டிவி பாக்கவும் தெரியலை. ஒன்னும் நல்லால்லைன்னு சொல்லிண்டே half minuteக்கு ஒரு சேனல் மாத்திண்டே இருக்கா. சீக்கிரம் கம்ப்யூட்டர் சரி செஞ்சு கொடுத்திடுங்க. நாம ஜாலியா இருக்கலாம்,” ஆபீசிலிருந்து வந்த அப்பாவைக் கொஞ்சிக் கொண்டே உள்ளே குட்டி பதினாறு அடி பாய்ந்துகொண்டிருந்தது. பெண் இவ்வளவு நாள் போட்டுக் கொடுத்ததிலேயே இதுதான் சாதகமான போட்டுக்கொடுத்தல்.

“நாளைக்கு காலைல அந்த அங்கிள் வந்து எடுத்துப் போயிடுவாரு. ரெண்டு மூணு நாள்ல எல்லாம் சரியாயிடும். இரு, அதுவரைக்கும் என் லாப்டாப்பை இறக்கலாம். சும்மா browse பண்ணிகிட்டு இருக்கட்டும், பாவம்.”

அட, இது ஏன் எனக்கு இவ்வளவு நாள் தோன்றாமல் போயிற்று. அந்த அளவு கூட யோசிக்க விடாமல் இழப்பு என்னை பாதித்திருக்கிறது. 😦

“எனக்கு எதுக்கு மத்தவங்களோடதெல்லாம். என்னோடது சரியாகட்டும். அதுலயே பாத்துக்கறேன்.”

“அட ரொம்பத்தான்! பரவாயில்லை பரவாயில்லை, எனக்கு இண்டர்வியூ வருது. கொஞ்சம் நெட் வேணும். இப்ப நைட் 8 மணி. ரொம்ப லேட்டாச்சு. நாளைக்கு காலைல சிஃபியைக் கூப்பிட்டு கனெக்ஷன் கொடுத்துவை!.. ஆனா சிஃபி போன் நம்பரெல்லாம் கம்ப்யூட்டர்ல இல்ல வெச்சிருப்ப? எப்படி பேசுவ?”

“அதெல்லாம் மனசுலயே இருக்கு. கூப்பிடறேன், இப்பவே வருவாங்க” நம்பாமல் பார்த்தார்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஆள் ஆஜர். வந்தவர் 5 நிமிடம் என்னை துக்கம் விசாரித்தார். :((( 15 நிமிடம் இணைப்பு கொடுக்கவே முடியவில்லை. யாருக்கோ திரும்பத் திரும்ப ஃபோன் செய்து காத்திருந்து, கொடுத்துவிட்டுப் போனார். அங்கே அலுவலகத்தில் இருப்பவர் வீட்டுக்குக் கிளம்பி Belahpur வரை போய்விட்டதாகவும், மொபைலில் திரும்ப அவரை அலுவலகத்திற்குக் கூப்பிட்டு இணைப்புக் கொடுத்ததாகவும் சொன்னார். பக்கவாட்டிலிருந்து இதற்கும் ஒரு முறைப்பு.

“எதுக்கு முறைக்கணும்? அதெல்லாம் எனக்குன்னா சிஃபில செய்வாங்க. எத்தனை தடவை டப்பா ஹிந்தில சண்டை போட்டிருக்கேன் அவங்களோட!”

“அதானே பாத்தேன். எல்லாம் சண்டைபோட்டு சேர்த்த ஃப்ரெண்ட்ஸ். நல்லது செஞ்சு வந்தவங்க இல்லை.”

“ஏதோ பாவம், இண்டர்வ்யூன்னு சொன்னீங்களேன்னு தான். நான் ஏன் அதைத் தொடப் போறேன்?”

0

harddisc.JPG

காலையில் வந்த மீட்பர் செர்வரைத் திறந்து, ஒரு வீடியோகேசட் சைஸ் வஸ்துவை மட்டும் உருவி எடுத்துக் கொண்டு மீண்டும் மூடிவைத்தார். காப்பி செய்ய 5 காலி டிவிடி வாங்கிக் கொண்டார். நான் எதற்காகவோ எப்பொழுதோ வாங்கியது, இப்பொழுது உபயோகம். என்னைப் பார்த்து மிகவும் பரிதாபப் பட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

“நான் இன்னிக்கி லீவ் எடுத்துட்டேங்க. இதுதான் எனக்கு முதல் வேலை. உங்களுக்கு முடிஞ்சவரைக்கும் 100% எடுத்துத் தர முயற்சி செய்றேன். கவலைப்படாம இருங்க.” சொன்னதோடு என்ன விதமான கோப்புகள் என்றும் நிதானமாக விசாரித்து எழுதிக் கொண்டார்.

உண்மையைச் சொன்னால் எனக்கு இப்பொழுது கவலை அதிகம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. இந்தச் சின்ன பெட்டியா நம்மை 15 நாள்களாக அலைக்கழித்து இவ்வளவு மன உளைச்சலைக் கொடுத்தது? பதிந்து வைத்தவை தானே போயிருக்கிறது. இணையம், நண்பர்கள், இசை, புத்தகங்கள், குழந்தை, குடும்பம் எல்லாம் அப்படியே தானே இருக்கிறார்கள். எதை இழந்தாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. அங்கிருந்தே மீண்டும் மீட்க முடியாதா என்ன? ஆனாலும் நான் எதிர்பார்த்த 25% மீண்டும் கிடைத்தால் மிக மிக மகிழ்வேன் என்பதையும் சொல்ல வேண்டும்.

நிதானமாக, மன அமைதியுடன் லாப்டாப்பைத் திறந்தேன். உடனேயே சொல்லிவைத்தாற் போல் ஃபோன்.

“வருதா சரியா?”

“யாருக்குத் தெரியும்?”

“சும்மா விடாதடா. எடுத்து browse பண்ணிக்க.”

“எனக்குப் பிடிக்கலை. விரலால cursor movements எனக்குப் பழக்கமில்லை. எனக்கு வேண்டாம். என்னோடதே வரட்டும்!”

“பட்டிக்காடு, அந்த bagல ஒரு மௌஸ் இருக்கு. எடுத்துப் போட்டுக்க. அப்றம் சொல்ல மறந்துட்டேன், 🙂 Happy Browsing! :))”

“தேவை இல்லை!”

லாப்டாப் பையைத் திறந்து பார்த்தால் அநியாயத்துக்கு குட்டியாக ஒரு எலிக்குட்டி, பாக்கிங் பிரிக்காமல். எடுத்து தொடர்புகொடுத்ததும், புதுப் புருஷன் மாதிரி இழுத்த இழுப்புக்கு வந்தது. வசதியாக இருந்தாலும் இன்னும் என்னவோ புது இடம் மாதிரி மனதிற்கு ஒட்டாமல் இருந்தது. விடுவிடுவென்று என் பெயரில் இன்னொரு user account ஆரம்பித்து, என்னை administrator ஆக்கிக் கொண்டு, ரங்கமணியை limitedக்கு இறக்கி… musicindiaonline திறந்து, பட்டையைக் கிளப்பும் இரண்டு பாட்டு கேட்டதும் பொட்டி நம்மாளு மாதிரி ஓர் உணர்வு வந்துவிட்டது. yahoo, g-talk எல்லாம் இறக்கி, googleல் தமிழில் தேட பழக்க தோஷத்தில் Alt 3 அழுத்தி, வார்த்தைகளைத் தட்டினால்… அட இதற்கு தமிழே தெரியவில்லை. நான் வீட்டு வாசல் டோர்மேட்டில் வந்து படுத்துக் கொள்ளும் மும்பை தெரு நாய்க்கே மதுரை வீரன் என்று பெயர்வைத்து, ‘வீஈரஅஅன்..!’ என்று கூப்பிட்டு, தமிழில் பேசினால், சொன்ன பேச்சு கேட்க வைத்திருக்கிறேன். ஈகலப்பையை இறக்கி, Keyman configurationல் Alt -2 TSCII, Alt-3 UNICODE என்று மாற்றும்போது 3 வருடம் முன்பு இதை என் பெட்டியில் என்னைச் செய்யவைக்க மரத்தடி நண்பர் யாஹூ சாட்டில் தலையால் தண்ணீர் குடித்தது நினைவு வந்து படுத்தியது. :(( தமிழ்மணமும் தேன்கூடும் திறந்தால், புதிதுபுதிதாக பதிவுகள் ஓடிக்கொண்டிருந்தன. சரி நிதானமாக அப்புறம் வரலாம், நம் பதிவை எதற்கும் ஒருதடவை பார்க்கலாம் என்று திறந்தால், எழுத்தாளர் உஷா வந்திருக்கிறார்.. சரி, அவருக்கு ஒரு ஸ்பெஷல் ரெசிபி போடலாம், அதற்கு முன் நம் சொந்த, நொந்த கதை தட்டலாம் என்று இந்தப் பதிவை பாதி தட்டிக் கொண்டிருக்கையில்…. call from ரங்கமணி. சே, இது ஒரு கெட்ட பழக்கம் இந்தப் பத்து நாள்களாக..தொண தொணவென்று ஃபோனில் கூப்பிட்டுப் பேசுவது…. இனிமேல் ரொம்ப பிசி, சும்மா சும்மா ஃபோன் செய்யக்கூடாதென்று சொல்லிவைக்க வேண்டும்.

“கிளம்பற அவசரத்துல முக்கியமானதை சொல்ல மறந்துட்டேன். என் லாப்டாப்ல என்ன வேணாலும் திறந்து படி. ஆனா no messenger downloads, அதைவிட முக்கியமா a strict ‘NO’ to your Tamil fonts and other tamil stuff, I mean it!!”

ஹா ஹா, ஐயோ பாவம், I already கருவாடு it. :)) என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்கப்பா!… நம்ப மக்கள் சொல்றது சரிதான் – “உலகம் கோயிஞ்சாமிகளால் ஆனது!!” 🙂