நவம்பர் 2010


 

கைசிக ஏகாதசி குறித்து இங்கே கொஞ்சமாய் குறிப்பிட்டிருக்கிறேன்“ஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி” என்று இணையத்தில் தேடினால் மேலும் விபரங்கள் கிடைக்கும்.

இந்த வருடச் செய்திக்கான சுட்டி: பிரம்ம ரத மரியாதை ரத்து பிரச்னையில் சுமுக தீர்வு

கோயில் ‘ஸ்ரீபாதந்தாங்கிகள்’ என்கிற பெருமாளைச் சுமந்துசெல்பவர்கள் மறுத்தாலும் பிற சீடர்கள் விரும்பிச் செய்யத் தயாராக இருந்தும் ம.க.இ.க போராட்டத்திற்கு பயந்து இராமானுஜர் காலத்திலிருந்து தொடர்ந்து நடக்கும் பிரம்ம ரதம் இந்த வருடம் நடக்காமல் ‘சுமுக’மாக முடிந்தது. இதுகுறித்து பட்டர் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் போட்ட வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது என்கிறது சன் செய்திகள்.

போராட்டத்தின் நோக்கம்: மனிதனை மனிதம் சுமக்கும் அவலத்தை எதிர்த்து.

எனவே இந்த வருடம் ஏகாதசி இரவில் விடிய விடிய கைசிக புராணம் படித்த பட்டரய்யங்கார், முடித்த நொடியே (அதிகாலை) கோயிலின் பிற மரியாதைகளான சந்தனம், மாலை, மேளம் உள்பட அனைத்தையும்கூட மறுத்துவிட்டு (“நான் அரங்கனுக்கு கைங்கர்யம் செய்யவந்தேன்; செய்துவிட்டேன். இவை எதுவும் தேவையில்லை”) வீட்டுக்குச் சென்றுவிட்டார். ம.க.இ.க உடனே தன் வெற்றியை, மகிழ்ச்சியை 10,000 வாலா வெடித்துக் கொண்டாடியும்  இன்று ஊரெங்கும்  பிரம்ம  ரதத்தைப் புறக்கணித்து ஒத்துழைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியிருப்பதாகவும் செவிவழிச் செய்தி.

அடுத்த மாதம் மார்கழியில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து இராப்பத்து ‘அரையர் சேவை’ முடிந்து கடைசியில் 4000 பாசுரங்களும் பாடிய அரையருக்கும் இந்த பிரம்மரத மரியாதை வழக்கமாக உண்டு. தமிழ்ப்பெயர் வைத்தாலே வரிவிலக்கு தரும் அரசாங்கத்தின்கீழ் இருக்கும் ‘இந்து’ அறநிலையத் துறையும் அறங்காவலர்களும் இந்த ஆண்டு என்னசெய்வார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தொடர்புடைய பதிவுகள்:

 வினவு

திருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா – அரங்கனுகே சவால் விடும் அறநிலையதுறை

“எவஞ்சொன்னது, கமல் மரபைக் கட்டுடைப்பவர்ன்னு?” என்று நான் கேட்கமுடியவில்லை.

வழக்கம்போல் “நான் மரபைப் கட்டுடைப்பவனாக்கும்” என்று மீசைமுறுக்கியிருக்கிறார்.  😦

தீபாவளியன்று விஜய் டிவி “காஃபி வித் அனு”வில் கமல் எழுதி வாசித்தது…

கம்பரே வெண்பா கடினம் என்றுதான் விருத்தம் கையாண்டதான முன்னுரையுடன் “கல்லும் சொல்லாதோ கதை” என்ற ஈற்றடி எடுத்துக் கொடுத்தவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்கள்.

 

மகதலினா கல்பட்டும் தேறினளாம் அவளக்காள்
அகலிகையும் கால்பட்டு மீண்டனளாம் – இகமிதிலே
அல்லலுறும் நவயுகத்து நாயகியர் அகமகிழக்
கல்லும்சொல் லாதோ கதை.

[*முதல் வார்த்தை இன்னதென்று விளங்கவில்லை. என்  சிற்றறிவை  வைத்துக்கொண்டு அனுமானிக்கவும் முடியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும். (இரா.முருகன் அருளால் கிடைத்துவிட்டது.. நன்றி.) தனிச்சொல் ‘இகமிதிலே’ பேராசிரியரால் பாராட்டப்பட்டது.]

 

ஆத்தமா னார்(அ)யலார் பள்ளிப் பறித்தெடுத்து
மூத்தவர்யா மெனக்கூறி அமர்ந்திருக்கும் சூத்திரத்தைச்
சொல்லின்றிக் கூறிவிடும் பழங்கோயில் கேட்டுப்பார்
கல்லும்சொல் லாதோ கதை.

[“ஆத்தமானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்..” என்ற திருவாசக அடியிலிருந்து தான் எடுத்தாண்டதாக கமல் கூறினார்.]

 

ம்ம்ம்.. நல்ல முயற்சி. வெண்பா அதிகம் தெரியாமல் ஆனால் ஓசைநயத்திலேயே சரியாக எழுதுபவர் என்று கமலை பேராசிரியர்  அறிமுகப்படுத்தினார். அப்படிப்பட்ட கமல் கொஞ்சம் மோனையிலும் கவனம் செலுத்தியிருக்கலாமோ… (இப்ப ரொம்ப முக்கியம்!)

 

எத்தனை இடங்களில் பிரிக்கமுடியுமோ பிரித்துவிட்டேன்; அத்தனையும் மீறி இத்தனை இடங்களில் தளைதட்டிய ஒன்றை வெண்பா என்று பேராசிரியர் பாராட்டித் தள்ளினார். இவர்கள்தான் கமலின் வளர்ச்சிக்குப் பிரச்சினை.

 

* சமீபமாக புகழ்ச்சிகளில் நெகிழ்கிற கமலைப் பார்க்கக் கவலையாக இருக்கிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் பாராட்டப்படும் சிறுவர்கள்போல் நடந்துகொள்கிறார்.

* தொ.பரமசிவன் என்கிற தொ.ப எழுதிய ‘மனிதர்களின் தெய்வங்கள்’ குறித்து சிலாகித்தார். வாங்கிப் படிக்கவேண்டும்.

* கடவுளை மொத்தமாக மறுக்கும் நாத்திகர்- வெங்கடாஜலபதியிலிருந்து வெக்காளி, இசக்கிவரை- என்று நான் நினைத்துக்கொண்டிருக்க, ‘அவனோட’ சாமியை ‘அவனை’க் கும்பிட அனுமதிக்கவேண்டும் என்றார். பெருந்தெய்வங்களையும் (தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்னு சொல்வாங்க.. ஆனா அவரைப் பார்க்க திருப்பதிக்குதான் வரச்சொல்வாங்க) பெருவழிபாடுகளையும் (தொப்பையில் காலணாவை வைத்து வீட்டுக் கிணற்றிலேயே தூக்கிப்போட்டுவந்த பிள்ளையாருக்கு பிரமாண்டப் பெருவிழா எடுக்கக் கிளம்பியிருப்பது) மட்டுமே புறக்கணித்தார். டிபிகல் இணைய நாத்திகவாதம். ஏமாற்றம்.

* மதம் அவரவர் படுக்கையறைச் சமாசாரம் மாதிரி; அவரவரோடு அந்தரங்கமாக முடிந்துவிட வேண்டியது என்று சொன்னவர், தான் மட்டும் எப்பொழுதும் பொதுவில் அவருக்குகந்த உடையை படுக்கையறையிலேயே  நிறுத்திக்கொள்ளாமல் (கருப்பு; அதுவும் இந்தமுறை படுகேவலமான டிசைனில் இருந்தது.) ஏன் வரவேண்டும்; இவரும் நாத்திகத்தை மனதுக்குள் அந்தரங்கமாக வைத்துக்கொண்டு, வெளியே பொதுவில் வண்ணமயமான ஆடைகளில் வரலாமே என்ற என் ஆதங்கத்திலிருந்து இன்னும் கேட்க/சொல்ல நினைக்கும் பல விஷயங்களைச் சொல்லாமல் விடுவதற்கு என் கமலபிமானம் மட்டுமே காரணம் என்று யாரும் (சரியாகக்) கணக்குப் போடவேண்டாம். தயவுசெய்து என் வழமையான சோம்பேறித்தனம் மட்டுமே காரணம் எனக் கொள்ளவும்.

எச்சரிக்கை: இந்தப் பதிவிற்கு, “உங்காளை முதல்ல அடுத்தவனுக்குப் புரியற மாதிரி பேசச்சொல்லு”, “I am not surprised. கமலுக்கு உளறிக்கிட்டே இருக்கணும்” மாதிரி மறுமொழிகள் [என்மீதான  :))] தனிநபர் தாக்குதலாகக் கருதப்பட்டு கடுமையாக மட்டுறுத்தப்படும். ஏற்கனவே வீட்டில் கேட்டுக்கேட்டு கோபத்தில் கொலைவெறியில் இருக்கிறேன். எரிச்சலில் எக்குத்தப்பாக எங்காவது யந்திரன் படத்திற்கு ஏடாகூட விமர்சனம் எழுதிவிடும் அபாயம் இருப்பதால்…

கார மிக்ஸர் – 1

 
தேவையான பொருள்கள்:

அவல் – 3 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
பயத்தம் பருப்பு –  1 கப்
நிலக்கடலை – 1 கப்
பொட்டுக் கடலை – 1 கப்
முந்திரிப் பருப்பு – 1 கப்
கறிவேப்பிலை – 4 ஈர்க்கு
உப்பு – தேவையான அளவு
காரப் பொடி – தேவையான அளவு
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க
ஓமப்பொடி (அல்லது காராபூந்தி) – 1 1/2 கப்

 

செய்முறை:

  • கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து ஒரு துணியில் உலர்த்திக் காயவைக்கவும். (முழுவதும் காய்ந்திருக்கவேண்டியதில்லை.)
  • முந்திரிப்பருப்பை நாலைந்தாக உடைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும் துளைகளுள்ள ஒரு வடிகட்டி (பெரிய டீ வடிகட்டி, புளி வடிகட்டி) எடுத்து, அதில் கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, நிலக்கடலை, பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பை ஒவ்வொன்றாக, தனித்தனியாக போட்டு, பொரித்து, வடித்தட்டில் போட்டு எண்ணெயை வடிக்கவும்..
  • அவலை முதலிலேயே அந்த வடிகட்டியில் (மாவு, உடைந்த அவல் இல்லாமல்) சலித்துவைத்திருக்கவேண்டும்; கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, பொரித்து எடுக்கவும். சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
  • சிறிது கடலைமாவில் உப்பு, பெருங்காயம், மிளகாய்த் தூள் சேர்த்துக் கலந்து காராபூந்தி அல்லது ஓமப்பொடி அச்சில் பிழிந்துகொள்ளலாம். (மிக்ஸரில் கடலைமாவு சேர்த்த பொருள் இல்லாவிட்டால் சுவைகூடி வராது. அதனால் ஏதாவது ஒன்றாவது செய்து சேர்க்கலாம்; அல்லது அதைமட்டும் கடையில் வாங்கிச் சேர்த்துக்கொள்ளலாம்.)
  • எல்லாவற்றையும் ஒரு வாயகன்ற பெரிய பாத்திரத்தில் போட்டுக்கொண்டே வரவும்.
  • கடைசியில் கறிவேப்பிலையையும் பொரித்து, வடிகட்டவும்.
  • பொரித்த கறிவேப்பிலையுடன் தேவையான உப்புப் பொடி, மிளகாய்ப் பொடி, பெருங்காயம் சேர்த்து நன்கு கையால் நொறுக்கி, அந்தக் கலவையை நன்கு கலக்கவும்.

* எண்ணெயில் பொரிக்கும்போது தீ மிகக் குறைவாக இருந்தால் பருப்புகள், அவல் கடுக்’கென்று ஆகிவிடும். தீ அதிகமாக இருந்தால் கருகிவிடும். மிதமான தீயில் அடுப்பு எரியவேண்டும். அவல் போட்டதுமே பொரிந்துவிடவேண்டும்.

* விரும்புபவர்கள் வேறு மசாலாப் பொடிகளும் சேர்க்கலாம். ஆனால் இதுவே அதிகம் படுத்தாத வகை.

தேவையான பொருள்கள்:

பனைவெல்லம் (கருப்பட்டி) – 500 கிராம்
நெய் – 300 கிராம்
நல்லெண்ணெய் – 200 கிராம்
தேன் – 100 கிராம்

வறுத்துப் பொடிக்க:

அரிசித் திப்பிலி – 100 கிராம்
கண்டத்திப்பிலி – 100 கிராம்
சுக்கு – 100 கிராம்
மிளகு – 100 கிராம்
சீரகம் – 100 கிராம்
பரங்கிச் சக்கை – 50 கிராம்
சித்தரத்தை – 50 கிராம்
கசகசா – 50 கிராம்
கிஸ்மிஸ் – 50 கிராம்
இலவங்கம் – 10 கிராம்
ஓமம் – 10 கிராம்
ஜாதிபத்திரி – 10 கிராம்
எள் – 10 கிராம்
ஏலக்காய் – 10
கிராம்பு – 5
விரளி மஞ்சள் – 2

செய்முறை:

  • வறுத்துப் பொடிக்கச் சொல்லியிருக்கும் எல்லாப் பொருள்களையும்- நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்- தனித்தனியாக, குறைந்த தீயில், நிதானமாக, பக்குவமாக (திப்பிலியை வறுத்தபிறகு, அதைக் கையில் எடுத்து ஒடித்தால் ஒடியவேண்டும். இதுவே எல்லாப் பொருளுக்கும் பதம்.) வறுக்கவும்.
  • எல்லாவற்றையும் மிக்ஸியில் மிக மென்மையாகப் பொடித்து சல்லடையில் சலிக்கவும்.
  • அடுப்பில் வாயகன்ற வாணலியில் பனைவெல்லத்தைப் போட்டு, நெய், நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்ச வேண்டும்.
  • வெல்லம் கரைந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
  • சலித்துவைத்துள்ள பொடி, தேன் இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • ஆறியதும் காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்துவைத்தால் சுமார் பத்துமாதங்கள் வரை கெடாது.

* மருந்து பக்குவமாக வர, வெல்லம் அதிகநேரம் அடுப்பில் காயக்கூடாது. ஒருமுறை அடுப்பிலிருந்து இறக்கியபின் மீண்டும் வெல்லத்தை அடுப்பில்வைத்துக் காய்ச்சக் கூடாது.

* மருந்து கையில் ஒட்டாமல் வரும். இதுவே சரியான பதம்.

** எச்சரிக்கை: கர்ப்பகாலத்தின் ஆரம்ப மாதங்களில் இருக்கும் பெண்கள் இதுபோன்ற நாட்டுமருந்து, கிளறின லேகியங்களை (மருத்துவரின் ஆலோசனை இல்லாமல்) உண்பது கூடாது.

அசோகா – 1 

[“அறுசுவை அரசு” நடராஜய்யர் சகோதரர் ஞானாம்பிகா ஜெயராமய்யர்]

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 100 கிராம்
சர்க்கரை இல்லாத கோவா – 100 கிராம்
சர்க்கரை – 400 கிராம்
சம்பா கோதுமை மாவு – 100 கிராம்
நெய் – 100 கிராம்
ஏலக்காய் – 5
முந்திரிப் பருப்பு – 10
கிஸ்மிஸ் – 10 கிராம்

 

செய்முறை:

  • பயத்தம் பருப்பை கடாயில் பொன்வறுவல் வறுத்து தண்ணீரில் ஊறவைக்கவும்.
  • சிறிதுநேரம் ஊறியபின் நன்றாகக் களைந்துவிட்டு, அதை கெட்டியாக வரும் அளவிற்கு தண்ணீர் வைத்து குக்கரில் வேகவைக்கவும்.
  • வேகவைத்த பருப்பில் சர்க்கரையைப் போட்டு, கடாயில் நன்றாக அல்வா மாதிரி கிளறவேண்டும்.
  • அல்வா நல்ல பதம் வந்ததும் இறக்கி, கோவாவைச் சேர்த்துக் கலந்துவைக்கவும்..
  • மற்றொரு கடாயில் நெய்யை வைத்து நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் போட்டு கொஞ்சம் சிவந்தவுடன் சம்பா கோதுமை மாவு சேர்த்து நன்கு வாசனை வரும் அளவிற்கு வறுத்து, அதனுடன் பருப்பு கோவாக் கலவை, ஆரஞ்சு கலர் சேர்த்துக் கிளறவும்.

இருபது வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூர், கும்பகோணம் போகும்போதெல்லாம் என் தந்தை வாங்கிவருவார். இப்பொழுது எல்லா இடங்களிலும் பிரபலம். முக்கியமாக திருமணம் மாதிரி விசேஷங்களில் மெனுவில் முக்கிய இடம் பெற்றுவிட்டது. 

 

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 1 கப்
பால் – 2 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 1 கப்
கேசரி பவுடர் (விரும்பினால்)
ஏலக்காய்
பச்சைக் கற்பூரம்
முந்திரி, பாதாம் வகைகள்

செய்முறை:

  • பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக்கொள்ளவும்.
  • பால் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேகவிடவும்.
  • குக்கர் திறக்கவந்ததும் சூட்டுடனே வெளியே எடுத்து,  நன்கு மசித்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் சர்க்கரை, மசித்த பயத்தம்பருப்பு கலந்து கிளறத் தொடங்கவும்.
  • முதலில் சர்க்கரையால் நெகிழ்ந்து, பின் கலவை இறுக ஆரம்பிக்கும்.
  • சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்து விடாமல் கிளறவும்.
  • நன்கு சேர்ந்து ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.
  • இறக்குவதற்கு சற்றுமுன் கலர் (நான் சேர்க்கவில்லை.), ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், உடைத்த அல்லது நொறுக்கிய கொட்டைப் பருப்புகள் சேர்க்கவேண்டும்.

* பல தளங்களில் கோதுமை மாவு ஒரு பங்கு சேர்ப்பதாக இருக்கிறது. இது எனக்குச் செய்தி. ஒருவேளை இப்பொழுது திருமணம் மாதிரி பெரிய விசேஷங்களிலும் செய்வதால் அளவிற்காக கோதுமை மாவு சேர்க்கிறார்களா என்று தெரியவில்லை. எதற்கும் சேர்க்காமல் ஒருமுறை செய்துபார்த்து அதன் ஒரிஜினல் சுவையை அனுபவித்துவிட்டு விரும்பினால் மாவு சேர்த்தும் செய்யலாம் என்பது என் அக்கறை கலந்த ஆலோசனை.

* எனக்கு இந்த முறையே வசதியாக இருப்பதாலும் பிடித்திருப்பதாலும் ஒவ்வொரு தீபாவளிக்கு முன்தினமும் (லக்ஷ்மி பூஜைக்கு பயத்தம்பருப்பு சேர்த்து செய்யநினைத்து) இருக்கிற பூஜை, கொண்டாட்ட நெருக்கடியில் விரைவாகச் செய்யமுடிவதாலும் இப்படியே செய்துவருகிறேன்.

* அறுசுவை நடராஜன் குறிப்பு ‘சம்பா‘ கோதுமை மாவு சேர்த்தது; பாலுக்கு பதில் கோவா. அடுத்து வருகிறது.

தேவையான பொருள்கள்:

மைதா – 2 கப்
வெண்ணெய் – 100 கிராம்
பேக்கிங் பவுடர் – 1/4 டீஸ்பூன்
சமையல் சோடா – 1 சிட்டிகை
தயிர் – 2 டீஸ்பூன்
சர்க்கரை – 4 கப்
தண்ணீர் – 2 கப்
எலுமிச்சைச் சாறு
ஏலக்காய் – 5 (அல்லது வேறு எசென்ஸ்)
கேசரிப் பவுடர் அல்லது வேறு கலர் – விரும்பினால்

 

செய்முறை:

  • ஒரு அகலமான பாத்திரத்தில் மைதாவுடன் பேக்கிங் பவுடர், சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்..
  • வெண்ணெய், (ஃப்ரிட்ஜில் இருந்தால் அறைச்சூட்டிற்குக் கொண்டுவரவும்.) தயிர் சேர்த்து நன்கு கையால் பிசிறவும்.
  • தேவைப்படும் அளவு மட்டும் (மிகக் குறைவாகவே தேவைப்படும்.) தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்திற்குப் பிசைந்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு நன்கு அடித்துப் பிசையவும். நல்ல பாடல் கேட்டுக்கொண்டே*** செய்தால் சிரமம் தெரியாது.
  • பிசைந்த மாவை அப்படியே பத்து நிமிடங்களுக்கு வைத்துவிட்டு அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஜீரா தயாரிக்கவும்.
  • சர்க்கரை கரைந்து கையில் ஒட்டும்பதம் வரும்போது (பாகுப் பதம் வந்துவிடக் கூடாது.) அடுப்பை அணைத்து, ஏலப்பொடி, எலுமிச்சைச் சாறு, விரும்பினால் நிறப்பொடி கலந்து ஆறவிடவும்.
  • (பாதுஷாவின் உருவம் அவரவர் விருப்பம்தான். எனவே நான் படத்தில் உள்ளபடி செய்திருப்பதை மட்டும் சொல்கிறேன்.) பிசைந்துவைத்துள்ள மாவில் பாதியை எடுத்து தடித்த சப்பாத்தியாக உருட்டிக்கொள்ளவும்.
  • ஒரு வட்ட மூடியை எடுத்து சப்பாத்தியில் வட்டங்களை வெட்டிக்கொள்ளவும். வட்டங்கள் தவிர்த்து பிற மாவை நீக்கிவிடவும்.
  • இன்னொரு உள்வட்ட மூடியால் அந்த வட்டங்களின் நடுவே லேசாக மேலாக அழுத்தவும். (அடிவரை அழுத்தி உடைத்துவிடக் கூடாது.) ஒரு பிளாஸ்டி ஃபோர்க்கால் வெளிப்பகுதியில் கோடுகளும், உள் வட்டத்தில் புள்ளிகளும் அதிகம் அழுத்தாமல் குத்திக்கொள்ளவும். இப்படியே மொத்த மாவையும் தயாரித்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும், ஒரு சிறு உருண்டையைப் போடவும். உருண்டை கொதித்து, பொரிப்பொரியாக மேலே வந்தால் அதுவே எண்ணெய்ச் சூட்டின் சரியான பதம்.
  • அடுப்பை அணைத்துவிட்டு ஒவ்வொரு பாதுஷாவாக- சுமார் ஏழு அல்லது எட்டு-  மெதுவாக எண்ணெயில் போடவும். போட்டவுடனே அடியில் போய், பின் ஒவ்வொன்றாக மேலே வர ஆரம்பிக்கும்.
  • எல்லா பாதுஷாவும் மேலே வந்துவிட்டதா என்று சரிபார்த்தபின்பே அடுப்பைத் திரும்ப எரியவிட்டு சிம்மில் வைக்கவும்.
  • பொறுமையாக அவ்வப்போது திருப்பிவிட்டு நிதானமாக  இரண்டு பக்கமும் பொன்னிறமாகும்வரை வேகவிட்டு எடுக்கவும். 
  • சில நொடிகள் வடிதட்டில் வைத்து எண்ணெயை வடித்துவிட்டு சூட்டுடனே, ஆறிய பாகில் மெதுவாகப் போடவும்.
  • பதினைந்து இருபது நிமிடங்கள் நன்கு ஊறி, பாதுஷா மிருதுவானவுடன் வேறு பாத்திரத்தில் எடுத்துவைக்கவும்.
  • 

* விரும்பினால் பாகின் பிசுபிசுப்பு ஆறுவதற்குள் பாதுஷாக்களின் மேல் பொடிப்பொடியாக உடைத்த முந்திரி, பாதாம், பிஸ்தா, வெள்ளரிவிதை, குங்குமப்பூ போன்றவற்றைத் தூவலாம்.

* மேல் அலங்காரங்கள் இல்லாமல் சாதாரண வட்ட பாதுஷாவேகூட செய்துகொள்ளலாம். அது அதிக அளவில் செய்யும்போது வேகமாகச் செய்யவும் உதவும். ஆனால் அவற்றிலும் டூத்பிக் அல்லது ஃபோர்க்கால்- அடிவரை அழுத்தாமல்- மேலாகப் புள்ளிகள் குத்திக்கொள்வது அவசியம். இது எண்ணெய், ஜீரா உள்ளேபோய் முறையே நன்குவேக, சுவையைக்கூட்ட உதவும்.

* மீதமிருக்கும் ஜீராவை பாதுஷாக்களின் மேலாக இன்னும் கொஞ்சம் விடலாம். ஆனால் மீதியிருக்கிறது என்பதற்காக மொத்த ஜீராவையும் அளவுக்கு அதிகமாக விட்டுவிடக் கூடாது. அப்படிச் செய்தால் ஆறியதும் பூத்தாற்போல் இருக்கும் பாதுஷாக்கள் மேலே பாளம் பாளமாக  வெள்ளையாக- அதிகமான ஜீரா தனியாக வந்து சுவையைக் கெடுக்கும். ஜீரா தேவையான அளவு மட்டும் விட்டால் சரியாக பாதுஷாமேல் வெள்ளையாகப் பூத்துக்கொண்டு அழகாகவும், உண்பவருக்கு ஓவர் சர்க்கரை என்ற பீதியில்லாமலும் இருக்கும். ஜீரா மீதமிருந்தால் பாயசம் செய்ய உபயோகிக்கலாம்.

*** இப்பொழுதெல்லாம் பாடல் கேட்கும்போது அதை ரசிக்கமுடியாமல், இளையராஜா, “நீ நல்லவளா கெட்டவளா?” என்று கேட்டுப் போகிறார். [“யாரோ உழைக்க யாரோ அனுபவிக்கறாங்க. ஓசியில டவுண்லோடு பண்ணி இதமா கேக்குறீங்களே… அதெல்லாம் யாரோட உழைப்பு? மனசாட்சியைக் கேளுங்க, பண்றது நியாயமான்னு?” – இளையராஜா, குங்குமம் 08/11/2010 😦 ]

தேவையான பொருள்கள்:

முந்திரிப் பருப்பு – 3/4 கப்
பாதாம் பருப்பு – 3/4 கப்
கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன்
பால் – 3/4 லிட்டர்
சர்க்கரை – 1 1/2 கப்
நெய் – 1 கப்
ஏலக்காய் – 5

munthiri badam cake

செய்முறை:

  • பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து தோல்நீக்கி, காயவைத்துக் கொள்ளவும்
  • முந்திரி, பாதாம் பருப்பை மிக்ஸியில் மென்மையாகப் பொடித்துக்கொள்ளவும்.
  • பாலை அடுப்பில் வைத்து சேர்ந்தாற்போல் திரிதிரியாய் வரும் பதத்திற்குக் காய்ச்சிக்கொள்ளவும். (முற்றிலும் இறுகவேண்டாம்.)
  • அதே நேரத்தில் இன்னொரு அடுப்பில் வாணலியில் சர்க்கரையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, (தேவைப்பட்டால் சர்க்கரை கரைந்ததும் சிறிது பால்சேர்த்து அழுக்கு நீக்கி) ஒற்றைக் கம்பிப் பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
  • பாகு வந்தவுடன் பருப்புப் பொடிகள், கடலைமாவை சிறிது சிறிதாகத் தூவிக் கிளறிக்கொண்டே இருக்கவும்.
  • எல்லாப் பொடியும் கலந்து, கலவை சேர்ந்தாற்போல் வரும்போது, பால்கோவாவையும் கலந்து கிளறவும்.
  • ஏலப்பொடி தூவி, நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்த்து, தொடர்ந்து கிளறவும்.
  • நெய் பிரிந்து, கலவை ஒட்டாமல் சேர்ந்துவரும்போது நெய்தடவிய தட்டில் கொட்டி, லேசான சூடு இருக்கும்போதே வில்லைகள் போட்டு, ஆறியதும் எடுத்துவைக்கவும்.

தேவையான பொருள்கள்:

பாதாம் பருப்பு – 1 கப்
முந்திரிப் பருப்பு – 10
சர்க்கரை – 1 கப்
நெய் – 1/2 கப்
ஏலக்காய் – 3
ஜாதிக்காய்ப் பொடி
குங்குமப் பூ
கேசரி கலர்
வெள்ளரி விதை – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

  • பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து தோலுரித்துக் கொள்ளவும்.
  • முந்திரிப்பருப்பை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
  • இரண்டு பருப்புகளையும் சிறிது தண்ணீர் சேர்த்து மிகமிக அதிக மென்மையான விழுதாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் சர்க்கரையுடன் அரைகப் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சவும்.
  • சர்க்கரை கரைந்ததும், அரைத்த விழுதையும் சேர்த்து, கைவிடாமல் கிளற ஆரம்பிக்கவும். [சர்க்கரை கரைந்ததும், தேவைப்பட்டால் 2 டீஸ்பூன் பால் சேர்த்து, மேலே வரும் அழுக்கை நீக்கிவிடவும்.]
  • சேர்ந்தாற்போல் வரும்போது 1 டேபிள்ஸ்பூன் பாலில் குங்குமப்பூ, கேசரி கலர், ஏலப்பொடி, ஜாதிக்காய்ப் பொடி, பச்சைக் கற்பூரம் கரைத்து, கலவையில் சேர்க்கவும்.
  • கலவை இறுக ஆரம்பித்ததும் சிறிது சிறிதாக நெய் சேர்த்துக் கிளறவும்.
  • நெய் வெளிவந்து ஒட்டாமல் கலவை வரும்போது, அடுப்பிலிருந்து இறக்கி, வெள்ளரி விதை கலக்கவும். 
  • 

* பொதுவாக பாதாம் அல்வா திகட்டும் இனிப்பாக இல்லாமல் இருக்கவேண்டும். விரும்புபவர்கள் இன்னும் 1/4 கப் சர்க்கரை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அது பாதாமை உணரமுடியாமல் செய்துவிடும். 

* இந்த அல்வாவுக்கு முந்திரி, பாதாம் கொண்டு அலங்கரிப்பது பிள்ளையாரைக் கிள்ளி பிள்ளையாருகே நைவேத்தியம் செய்வதுபோல். அதனால் வெள்ளரி விதை மட்டும் போதும்.

* கிராண்ட் ஸ்வீட்ஸ் பாதாம் அல்வா— பாதாம் பருப்பு 200 கிராம், சர்க்கரை 400 கிராம், நெய் 200 கிராம், முந்திரிப் பருப்பு தேவையில்லை ; ரவைப் பதத்திற்கு அரைக்கவேண்டும்.

* ஆயிரம்தான் பாதாம் பருப்பிலேயே அல்வா செய்தாலும் சுவையில் கோதுமை அல்வாவை அடித்துக்கொள்ள ஆளில்லை. அல்வாக்களில் ராணி கோதுமை அல்வா. எனக்கு பாதாம் பருப்பு, அப்படியே சாப்பிடுவதே சுவையாக இருக்கிறது.