அன்னிக்கு ரங்கமணி ஆபீசுக்கு ‘சும்மா’ லீவ். இந்த மாதிரி சந்தர்ப்பம் எல்லாம் எனக்கு அத்திப் பூத்த மாதிரி எப்பவோ கிடைக்கற வாய்ப்பு. விடலாமா? நேத்தி, நாம நாளைக்கு D’Mart shopping போகலாமான்னு கேட்ட அம்மணிகிட்டயே, “நோ நோ நாளைக்கு கோவிந்த் லீவ். (தரோவ வேலை வாங்கிக்கணும்) நான் வரலைனு சொல்லி வெச்சிருந்தேன்.
“SBOA ஸ்கூல்கிட்ட Reliance Fresh திறந்து பத்து நாளாச்சு. இப்ப போய் பாத்துட்டு வந்துரலாம். சண்டேன்னா கூட்டமாயிருக்கும்.”
“சான்ஸே இல்லை. இன்னிக்கு முழுக்க நான் ரிலாக்ஸ்டா இருக்கப் போறேன். டிவி பாக்கணும். நிறைய படிக்கணும். என் பொண்ணு வந்ததும் அவளோட விளையாடணும். உனக்கு குக்கர் கேஸ்கட் போடறது, தெச்ச ஜாக்கெட் வாங்கிட்டு வர்றது, பிஞ்ச செருப்பு தெச்சு வாங்கறதுக்கெல்லாம் என் லீவை வேஸ்ட் பண்ண முடியாது.”
ஆண்களால பெண்கள் மனசைப் படிக்க முடியாதுன்னு யார் சொன்னது? 🙂
“தேவை இல்லை. தாரளமா செய்ங்க. எனக்கென்ன? ஆனா ஃப்ரிட்ஜ்ல காய் சுத்தமா இல்லை. நாளைக்கு ஆபீசுலேருந்து வரும்போது நீங்களே ராத்திரி ஒம்போது மணிக்கு மேல ஒரு வாரத்துக்கான காய் வாங்கிட்டு வாங்க.”

வெச்ச குறி தப்பலை. காய்கறிங்கற வார்த்தை எப்படி ஆளை அசைக்கும்னு தான் இவ்ளோ வருஷமா பாத்துகிட்டிருக்கேனே. இந்தியாவின் கடைக்கோடிக்கே ஊர் சுத்தப் போனாலும் புஸ்தகங்களுக்கு அடுத்தபடியா அல்லது அதுக்குச் சரியா ஃப்ரெஷ் காய்கறிகளைப் பார்த்தா பரபரக்கும் ஜீவன்; எப்படியெல்லாம் பார்த்து பார்த்து வாங்கணும்னு பழக்கியிருக்கும் மாமியார்(வாழ்க!); ஆன காரணங்களால இத்தனை வருஷமாகியும் எனக்கு இன்னும் காய் வாங்கத் தெரியாமலே போச்சு. (தக்காளி மட்டும் வாங்குவேன். இதைச் சொன்னால் எங்கம்மாவே என்னடீ இப்படி இருக்கன்னு அதிர்ச்சியாறா.) நம்ப அவங்களோட கூடவே போய், சும்மா பையை வெச்சுகிட்டு பராக்கு பாக்க வேண்டியதுதான். அவங்களே வாங்கி வாங்கிப் போடுவாங்க. “கொஞ்சம் நீயும் வாங்கக் கத்துக்கலாமில்ல?”ன்னு சொல்றது காதுல கேட்காத தூரத்துல வாகா நிக்க வேண்டியது.
அதைவிட முக்கியமா பெரிய பெரிய வேலை எல்லாம் சலிக்காம செய்ற எனக்கு, சில சின்னச் சின்ன வீட்டு வேலைகள் செய்யப் பிடிக்காது. அதுல முக்கியமானது வாங்கிவந்த காயைப் பிரிச்சு ஃப்ரிட்ஜ்ல வைக்கறது, ராத்திரி பழம் நறுக்கரது… தலைவர் இருக்கும்போதே வாங்கிட்டா அவரே அதை கையோட பொறுப்பா செஞ்சுடுவாரு. அதனால சண்டேனா ரெண்டுல முக்கியமான ஒன்னு காய்கறி வாங்கறதுதான். இதுல இன்னொரு வசதி. தினம் தினம் கத்திரிக்காயா, முள்ளங்கியா மாதிரி குற்றச்சாட்டே எங்க வீட்டுல எழுந்ததில்லை. ஏன்னா, வாங்கறது நான் இல்லையே. 😉 ப்ரிட்ஜ்ல இருந்தா சட்டில வரும். அவ்ளோதான் பதில்.
“காய்தானே. அதுக்கு ரிலயன்ஸ் எல்லாம் வேண்டாம். காயெல்லாம் ஏசில சுருங்கி இருக்கும். நம்ப மார்க்கெட்லயே ஃப்ரெஷ்ஷா வாங்கலாம்.” ப்ரோக்ராம்ல ட்விஸ்ட். 😦 மார்க்கெட்ல அததுக்குன்னு தனித்தனி கடைகள் வைச்சிருக்கோம். கீரை, பயறுகள், இங்லீஷ் காய்கறிகள், கிராமத்திலேருந்து வர நாட்டுக் காய்கறிகள், பழங்கள் இப்படி. ஒருவாரம் போகலைன்னாலும் வாடிக்கை மறந்ததும் ஏனோன்னு விசாரிப்பாங்க.
“இல்லை, சும்மா எட்டிப்பார்த்துட்டு மார்க்கெட்டுக்கே போயிடலாம்.”
ஒருவழியாக அடம்பிடிச்சு கிளம்பிப் (அடுத்த திருப்பம் தான்.) போனா, வாசல்ல கும்பல் கும்பலா மக்கள் நின்னுகிட்டிருந்தாங்க. கடை சரியாப் பத்து மணிக்குத் தான் திறப்பாங்களாம். இன்னும் 5 நிமிஷம் இருந்தது. என்ன மக்களோ! நான் பிசினஸ் செஞ்சா காலைல எழுந்ததும் எதுக்கும் கடையைத் திறந்துட்டுதான் பல்லையே தேய்ப்பேன். இத்தனை நேரத்தில் மார்க்கெட்ல பாதி வாங்கி முடிச்சிருக்கலாம். ரங்கமணி உச்’ கொட்ட ஆரம்பிச்சாச்சு. கொஞ்சம் தள்ளி ஒரு கும்பல் தமிழ்ல பேசறது விட்டு விட்டுக் கேட்டுது. திடீர்னு ஒரு வண்டி வந்து நிஜமாகவே ஃப்ரெஷ்ஷா காய்கறிகள் இறங்க ஆரம்பிச்சதும் பக்கத்து முகத்துல பல்பு. மீ ரிலாக்ஸ்.
கடை திறந்ததும் சொல்லி வைச்சது மாதிரி எல்லோருமே காய்கறிகள் பக்கம் தான் போனாங்க. காய்கறிகள் உண்மையிலேயே நன்னா இருந்தது. எனக்குத் தான் மார்க்கெட் மாதிரி சும்மா நிக்க முடியாம பிளாஸ்டிக் பைகளைக் கிழிச்சுக் கிழிச்சுக் (ஏதோ என்னாலான ஹெல்ப்பீஸ்) கொடுக்க வேண்டியதாகிப் போச்சு. பரவாயில்லை.
வந்திருந்தவங்கள்ல பெரும்பாலானவங்க தமிழர்களா மட்டுமே இருந்ததோட காரணம் எனக்குப் புரியலை. அலுவலக நாளா இருந்ததால பலர் ஹவுஸ்வைஃப், ரிட்டயர்ட் இந்த வகையறாவில் தான் இருந்திருப்பாங்க. இரண்டு மாமிகளும் ஒரு மாமாவுமா வந்த ஒரு குடும்பம் அநியாயத்துக்கு குறுக்கும் நெடுக்குமாக ஓடி, கத்திக் கலக்கிண்டிருந்தாங்க.
“இந்த நாமக் கத்திரிக்காய் அரைக் கிலோ வாங்கலாமோடீ?” பொறுக்கி எடுத்துண்டு எதிர்ப்பக்கம் நின்ன மனைவியைக் கேட்டார். பெண்கள் ரெண்டுபேரும் பீன்ஸ் பொறுக்கிண்டிருந்தாங்க.
“ஐயோ சமத்தே, உங்களை யார் அந்த வேலையெல்லாம் சொன்னது? (பக்கத்திலிருந்த பெண்ணிடம்) வீட்லயே விட்டுட்டு வரலாம்னு சொன்னேனே கேட்டியா? (திரும்ப மாமாகிட்ட) நாமம் போட்ட கத்திரிக்காய் காரலா இருக்கும். நீளக் கத்திரிக்காய் தான் வாங்கணும், நீங்க சித்த சும்மா இருங்கோளேன், நான் பாத்துக்கறேன்”, மாமி கத்திச் சொன்னதுக்கு அந்தப்பக்கம் தமிழ் தெரிஞ்ச அத்தனை பேரும் திரும்பிப் பார்த்தாங்க. அதாவது அத்தனை பேருக்குத் தமிழ் தெரிஞ்சிருக்குன்னு எனக்குத் தெரிஞ்சுது. தவிர்க்கவே முடியாம நானும் ரங்கமணியும் ஒருத்தரையொருத்தர் பார்த்து சிரிச்சுண்டோம். பொதுஇடத்துல புருஷனை ஒரு போடு போடறதெல்லாம் எவ்ளோ சுகமான விஷயம். நாகரிகம்ங்கற பேர்ல நாம இழந்ததுதான் எவ்வளவு? 🙂 இப்பல்லாம் ஸ்ரீரங்கத்துலயே இந்த சீன் எல்லாம் ரொம்பக் குறைஞ்சுடுச்சு. மாமாவைப் பாத்து அலுத்துண்டே மாமிகள் தாலிச்சரட்டுல தாயர் மஞ்சள் காப்பைத் தேய்ச்சுக்கறதெல்லாம்…. சரி விடுங்க. அவர் கொஞ்சம் தயங்கி திரும்ப தான் எடுத்ததை எல்லாம் மொத்தக் காய்கறியில சேர்த்தார்.
திடீர்னு கோவிந்த், “ஏன் இவ்ளோ கொஞ்சமா தக்காளி வாங்கியிருக்க, போதுமா?ன்னு ஆச்சரியமா (வாங்கத் தெரிந்த ஒரே காய்ங்கறதால வஞ்சனை இல்லாம குறைஞ்சது 2 கிலோவாவது வாங்குவேன்.) கேட்டதுக்கு அதைவிட ஆச்சரியப்பட்டேன். நான் எதுவுமே இதுவரைக்கும் கறிவேப்பிலை தவிர எங்க கார்ட்ல எடுத்துப் போடலை. அப்போலேருந்து சும்மா வேடிக்கைதான் பாத்துகிட்டிருந்தேன். அப்பத்தான் ரெண்டுபேரும் கவனிச்சோம், நடுவுல இருக்கற எங்க கார்ட்ல அந்த மாமி வேகவேகமா காய்களைக் குவிச்சுகிட்டிருக்கறதை. “இது எங்களொடதுங்க” ன்னு ரங்கமணி அரைக்காலே முக்கால் டெசிபள்ல மாமிகிட்ட சொன்னது எனக்கே பாவமா இருந்தது. அதைக் கூட பாத்துக்காம என்ன செஞ்சுகிட்டிருக்க அப்டீங்கற மாதிரி திரும்பி என்னைப் பாத்ததை நான் பாக்கலை. 🙂
“நான் இங்க இருக்கேன்டீ!” மாமா எங்கோ தள்ளி அவங்களோட கார்ட்டைப் பிடிச்சுண்டு, நெஞ்சை நிமிர்த்திண்டு (அல்லது அப்படி நினைச்சுண்டு ) சொன்னதும், மாமி (தன் தவறை மறைக்க) அவரை முறைச்சதும், என்னால சிரிப்பை அடக்கவே முடியலை. என்னோட தலையாயப் பிரச்சினை பொது இடத்தில் இப்படி அடக்க முடியாம சிரிப்பு வர்றதுதான். தலையை வேற எங்கயாவது பருப்புகள் ஷெல்ஃபுல புதைச்சுக்கலாம், பாவம் அவங்க தப்பா நினைக்கப் போறாங்கன்னு நினைச்சு அங்கேருந்து ஓடிப் போய், அப்றம் தனியாச் சிரிச்சா வேற யாராவது வேற மாதிரி நினைக்கப் போறாங்களேன்னு திரும்ப ரங்கமணியோட வந்து ஒட்டி நின்னுகிட்டேன்.
மாமி தானே தன் பக்கம் கார்ட்டை வெச்சுகிட்டாங்க. மாமா சிரமப்பட்டு ஒரு 5 கிலோ எண்ணெய் டின்னைக் கொண்டுவந்து தங்களோடதுல வெச்சுட்டு தள்ளிப் போய் நின்னார். ஐயோ, எதுக்கு எண்ணெய் எல்லாம் எடுக்கறேள், அதுவும் இவ்ளோ பெருசு, சித்த சும்மாத் தான் இருங்கோளேன்” ன்னு மாமி திரும்ப கத்த, கனஜோரா, “அது உனக்கு வண்டி அடையாளத்துக்கு வெச்சிருகேன். எல்லாம் வாங்கி முடிச்சதும் அதை இங்கயே வெச்சுட்டு பாக்கிக்கு மட்டும் பில் போடலாம்” மாமா சொல்ல, “புத்திசாலி!!” ங்கற மாதிரி மாமி ஒரு பார்வை. இல்லையா பின்ன? 🙂

இப்படி வேடிக்கை பார்த்ததுல நம்ப ஆளு பூசணிக்காய், பீட்ரூட் எல்லாம் அடுக்கறதை கவனிக்கலை. திடீர்னு பாத்து, இதெல்லாம் இருக்கு, வேண்டாம்னு சொன்னதுல செம காண்டு.
“இருக்கா? பின்ன காய்கறியே இல்லைன்னு சொன்னியே?”
“ப்ரிட்ஜ்ல காய்கறியே இல்லைன்னா சொன்னேன்? காய்கறியே சுத்தமா இல்லைன்னு தான் சொன்னென். சமைக்கும்போது அலம்பிட்டு சமைக்கணும்.” இவ்ளோ கேவலமான ஜோக்கை எல்லாம் சொல்லி பொது இடத்துலதான் சின்ன முறைப்போட தப்ப முடியும். “காய்கறின்னு சொல்லாம சும்மா கடையைப் பாக்க கூப்டா வருவீங்களா? அதான்.”
அப்படியும் கணிசமா தேத்தி எடை போடற இடத்துல எக்கச்சக்க நேரம். அதுக்கு இருந்ததே 2 பேர். அதுலயும் ஒருத்தங்க ரொம்பப் புதுசு போல.(கடை திறந்தே 10 நாள் தான் ஆகுது. அதுலயும் பழசு புதுசு.) “தீதீ!” ன்னு இன்னோரு பெண்ணை எல்லாத்துக்கும் கூப்டு சந்தேகம் கேட்டுக் கேட்டு எடை போட்டதுல ரங்கமணி கடுப்பாகி, சந்தேக நிவர்த்திப் பெண்ணோட க்யூலயே கொஞ்சம் பெருசா இருந்தாலும் பரவாயில்லைன்னு திரும்ப நின்னாரு. குழந்தை ஸ்கூல்லேருந்து வந்துடப் போகுதேன்னு முகத்துல கவலையான கவலை. அவங்க ஆனாலும் அநியாயத்துக்கு, வாங்கின எலுமிச்சை, பூண்டு, இஞ்சிக்கெல்லாம் தனித்தனியா பைபோட்டு, பில் ஒட்டி.. “எப்படி திரும்ப பிளாஸ்டிக் பை டாமினேட் செய்ய ஆரம்பிச்சிடுச்சு பாம்பேல, சை!”
அப்படியே மற்ற செக்ஷனையும் பாக்கலாம்னு ஒரு சின்ன ரவுண்ட். வழக்கமா இந்த மாதிரி டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள்ல இருக்கற அதே எவர்சில்வர் பாத்திரங்கள், crockery, பிளாஸ்டிக்.. குழந்தை ஸ்கூல்லேருந்து வந்துடும்னு பிண்ணனி இசை ஒலிச்சு(விரட்டிக்)கிட்டே இருந்தது. வேகமா பாத்துட்டு பில்போடற இடத்துக்கு வந்தா 4, 5 மெஷின் இருந்தாலும் ரெண்டு மிஷின் தான் வேலைல இருந்தது. எல்லாரும் பரபரத்துகிட்டே இருந்தாங்க கடைக்காரங்களை. எல்லா மெஷின்லயும் பில் போட்டா என்னன்னு எல்லாரும் கேக்கற கேள்விக்கு என்ன காரணமோ அவங்ககிட்ட பதில் இல்லை. பாவம்.
புதுசா யாராவது தொழில் தொடங்கினா அவங்களை உற்சாகப் படுத்தணும்னு உடனே அங்க ஆஜராகிற நம்ப ரங்கமணிகூட அன்னிக்கு பொருந்தாம படுத்தினதுதான் ஆச்சரியம். ஹோட்டல்ல சரியா பரிமாறலைன்னாலே, ‘பாவம், புது ஹோட்டல், புது ஸ்டாஃப், வேலை கிடைச்ச சந்தோஷத்துல இருக்காங்க. கொஞ்ச நாள்ல செர்வ் பண்ண பழகிடுவாங்க, நாமதான் என்கரேஜ் செய்யணும், விட்டுப் பிடிக்கணும்னு எனக்கே கீதோபதேசம் செய்ற ஆள், ரிலையன்ஸ்ங்கரதாலயோ (அப்படி இருந்தாலும் அந்தப் பணியாளர்கள் புதுசுதானே பாவம்) அல்லது பொண்ணு நினைப்புலயோ அன்னிக்கு நெருப்பு மேல டான்ஸ். உலகத்துல எங்கயும் காய் வாங்கினா இவ்ளோ நேரம் ஆகாது, நீ இரு நான் போறேன்னு ஒரே பொலம்பல். தொணப்பு தாங்காம ரங்கமணியை வெளில நிக்கச் சொல்லி, பணத்தை வாங்கிண்டு, நானே பில்போட்டு வாங்கிவரதா சொல்லிட்டேன்.
பக்கத்து லைன்ல ஒரு பொண்ணு ரங்கமணியையே மிஞ்சற அளவுல என் குழந்தை ஸ்கூல் பஸ் வந்துடும்னு குதிச்சுகிட்டிருந்தாங்க. வாங்கின சாமான்களைப் பாத்தா நறுக்கி பேக் செஞ்சிருந்த பாகற்காய், முருங்கைக்காய் வகையறா. அட அம்மணிகளா? என்னதான் அவசர யுகம்னாலும் பாகற்காய் முருங்கை எல்லாம் நறுக்க முடியாத அளவு அல்லது நறுக்க நேரம் எடுக்கற அளவு கஷ்டமான காய்களா? என்னிக்கி நறுக்கி என்னிக்கி பேக் செஞ்சதோ.
அதுக்குள்ள என் க்யூல இருந்த மாமாவுக்கு 300 ரூபாய்க்கு இறுநூத்து சொச்சம் போக பாக்கி சில்லறை கொடுக்க அவங்ககிட்ட இல்லை. கொஞ்சம் சில்லறை வெச்சுகிட்டு கல்லா திறக்க மாட்டாங்களா? எனக்கு ஆச்சரியமா இருந்தது. அவரோட ரூபாய் நோட்டை வெச்சுகிட்டு அந்தப் ஆள்(பையன்?) பேய் முழி முழுச்சிகிட்டிருந்தாரு. இவங்க எல்லாம் எப்ப செட்டில் பண்ணி என் முறை வருமோன்னு யோசிக்கும்போதே என் கைல இருந்த 500 ரூபாய் பல்லிளிச்சுது. கட்டினவன் கூட வர தைரியத்துல கைப்பை(கிரெடிட் கார்ட்) எடுத்துவராம இருந்திட்டேன். உங்க கார்டுல வாங்கிடலாம்னு சைகை செஞ்சு ரங்கமணியை திரும்ப உள்ள கூப்பிட்டேன்.
உள்ள வந்து, உச்சு கொட்டி, எப்படித்தான் குழந்தையைப் பத்தி கவலைப்படாம இருக்கியோங்கற புலம்பல் என் காதுக்குள்ள விழறதுக்குள்ள பக்கத்து க்யூலேருந்து வீல்’னு ஒரு சத்தம். தொடர்ந்து அந்தப் பொண்ணு மராத்தில மானாவாரியாகத் திட்டிண்டிருந்தாங்க. அந்த மெஷினும் எந்தக் காரணத்தாலோ பாதியிலேயே இயக்கத்தை நிறுத்தியிருக்கு. அந்த ஆள் அதோட சைடுல எல்லாம் தட்டிக்கிட்டிருந்தாரு. ஸ்கூட்டரைப் போல பிளேனையும் லேசா சாய்ச்சு ஸ்டார்ட் செய்யலாம்னு சொல்ற ஜோக் தான் ஞாபகத்துக்கு வந்தது. என் குழந்தை வந்திருக்கும்னு அழற நிலைக்கு அந்தப் பெண் போயிட்டாங்க.
“பரவாயில்லை, இன்னும் தாய்மை சாகலை நாட்டுல” ரங்கமணியோட முணுமுணுத்த கமெண்ட்டுல என் ஈகோ இடறிவிழுந்தது. எனக்கு என் பொண்ணு ஸ்கூல்லேருந்து வர நேரம் தெரியும். இன்னும் அரை மணி நேரம் இருக்கு. ஒரே ஒருநாள் வீட்டுல இருக்கறவங்க எல்லாம் இவ்ளோ அலப்பறது கொஞ்சம் அதிகம்.
“அவங்க குழந்தை எல்கேஜியா இருக்கும். உங்க பொண்ணு சீனியர் பசங்களையே அடிச்சு, கீழ தள்ளிட்டு, ஊர்வம்பை விலைக்கு வாங்கிகிட்டு வரா. ஒருநாள் வரும்போது கதவு பூட்டியிருந்தா எப்படி பிஹேவ் பண்ணனும்னு இந்த சிச்சுவேஷனும் தான் கத்துக்கட்டுமே, இப்ப என்ன போச்சு? இந்த ப்ரொகிராம் நான் போட்டதால தானே இவ்ளோ ஆர்பாட்டம். இதே நீங்க கூப்பிட்ட இடத்துல இப்படி லேட்டாகியிருந்தா பேசியிருப்பீங்களா? உங்களுக்கும் மத்தவங்க மாதிரி நறுக்கின காயும், நாளுநாள் பழசுல குழம்பும் ஊத்தினாத்தான் சரியாவீங்க. ஐயோ பாவம்னு வாழைப்பூ வாங்கி, மடல் மடலா எடுத்து, கை கறையானாலும் பரவாயில்லைன்னு ஒவ்வொண்ணுக்கா கள்ளன் ஆய்ஞ்சு, மணிக் கணக்கா திருத்தி, பருப்பு ஊறவெச்சு அரைச்சு, வேகவெச்சு, உதுத்து, வாழைப்பூ பருப்புசிலி செஞ்சு போடணும்னு நினைக்கறேனில்ல, எனக்கு இதெல்லாம் தேவைதான்…. .”
என்னாலயே என் ஃப்ளோவை நிறுத்தவும் முடியலை; தங்குதடையில்லாத என் தமிழ்ல ஆச்சரியப்படாம இருக்கவும் முடியலை. நிறுத்தினபோது (“ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி:”) எனக்கு முன்னால இருந்தவங்க பில். இன்னொரு லைனும் எங்களுக்குப் பின்னாலயே திட்டிண்டே வந்து நின்னாங்க.
எனக்கு முன்னால பில் போட்டவங்க 3 ஃப்ளேவர்ல ஃபாமிலி பேக் ஐஸ்கிரீம் வாங்கியிருந்தாங்க. பாத்தா, ஒவ்வொண்ணுக்கா மிஷின்ல காமிச்சு விலை மட்டும் கேட்டு (170, 180, 175) எது இருக்கறதுக்குள்ள விலை குறைவா இருக்கோ அதை பில் போடச் சொல்லி, மீதி ரெண்டையும் வைக்க உள்ள போனபோது எனக்கே வாழ்க்கை வெறுத்தது. வீட்டுக்குப் போய்ச்சேருவோமான்னு இருந்தது. பின்னால நின்னவங்க எல்லாம் அவங்களை சத்தம் போட்டாங்க. அட ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிடறவங்க பிடிச்ச ஃப்ளேவர வாங்காம அஞ்சு பத்துக்கு கணக்குப் பாக்கற மனவியல் எனக்குப் புரியலை. (இதை எழுதும்போது Mint ங்கற business newspaperல பெரிய பெரிய பிஸ்தாக்கள் எல்லாம் எப்படி எல்லா இடத்துலயும் பேரம்பேசி மட்டுமே வாங்கறாங்கன்னு 4 நாள் முன்னால வந்த கட்டுரை (When MRP equals minimum retail price) நியாபகம் வருது. டயானாவுக்கு Dodi Fayed பாரிஸ்ல வாங்கின so called engagement மோதிரம் ( “Tell me yes” ring) பேரம் பேசி வாங்கினாருன்னா, அப்புறம் இதெல்லாம் என்ன தப்பு? And you and I end up paying full price ன்னு கட்டுரையாளர் புலம்பியிருந்தாரு.
ஒருவழியா அவங்க பணம் கொடுத்து, இவங்க மிச்சம் எப்படியோ திரட்டிக் கொடுத்து, ஹை ஜாலி, எங்க முறை. காய்கறிக்கு கார்டு யூஸ் பண்றதெல்லாம் ரொம்ப ஓவர்னு சொன்னதை காதுல வாங்காம வேகமா சாமான்களை எடுத்துவெச்சேன். பருப்பு, வேற சில சாமான்களும் வாங்கியிருந்தேன். பில் வந்ததும், கார்டை மிஷின்ல தேய்ச்சு,(கடவுளே, அந்த மிஷினும் வேலை செய்யணும்) பில்லுல கையெழுத்து வாங்க… பேனா… இல்லை.
உங்ககிட்ட பேனா இருக்கான்னு எங்களையே திருப்பிக் கேட்டாங்க. அப்புறம் அவங்களுக்குள்ளயே ஒருத்தரையொருத்தர் கேட்டு இல்லைன்னு சொல்லிண்டாங்க. ரங்கமணி என்னைப் பாத்த போது நான் அந்தப் பக்கம் ஒரு குழந்தையை மும்மரமா கொஞ்சிண்டிருந்தேன். குழந்தைகளைப் பாத்தா கொஞ்சாம இருக்க முடியுமா சொல்லுங்க? 🙂
எப்படியோ கடைக்குள்ள சாமான் எடுத்துகிட்டிருந்த ஒருத்தர் கிட்ட இருந்த பேனாவை வாங்கிக்கிட்டு வந்து கடைப் பணியாளர் கொடுக்க (அவர் பயந்து பின்னாலயே வந்து கையெழுத்துப் போட்டதும் கையோட வாங்கிப் போயிட்டாரு.) ஒருவழியா கிளம்பும்போது அவங்க கைகொடுத்து, மெம்பர்ஷிப் கார்டுக்கு ஒரு ஃபாரமும், ஒரு அரைக்கிலோ சர்க்கரை இலவசமாயும் கொடுத்தாங்க. வாங்கிக்கிட்டு வீடுவந்து சேர்ந்த போது ஸ்கூல் பஸ் வந்து நின்னுது. சுபம்.

* காய்கறிகள் காலைல பத்துமணிக்கே போனா ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கு. D’Mart ல எப்பவுமே ஏசில சுருங்கின காய்கள்தான். அதனால காய்கறி மார்க்கெட்ல தான் வாங்குவோம். ஆனா மார்க்கெட்ல கிடைக்காத பல காய்கள் (வாழைப்பூ வெறும் ரூ.5.44 க்கு.), ஒரே காய்ல பல வெரைட்டி (கத்திரிக்காய், தக்காளி, அவரை…) எல்லாம் கிடைக்குது. (வாழைத்தண்டுக்கும் ஏற்பாடு பண்ணுங்கப்பா. ரொம்ப மிஸ் பண்றேன்.) முக்கியமா எடை நிச்சயமா மார்க்கெட்ல வாங்கறதை விட நிறைய வித்யாசம்.
* பழங்கள் மார்க்கெட்டைவிடவே குறைவோன்னு எனக்கு ஒரு எண்ணம். பைனாப்பிள்(எனக்குப் பிடிச்ச பழங்கள்ல இரண்டாது இடம்) வாரா வாரம் நான் பொறுக்கிக் கொடுத்தா தோல்சீவி, பேக்பண்ணி ரூ.25க்கு ஒரு கிழவர் கொடுப்பாரு. அதைவிடவே கொஞ்சம் பெரிய பழம் 16 ரூபாய்க்கு. கத்தியால பேராவூரணித் தேங்காயே உடைக்கறவ நான். நானே தோல்சீவ ஆரம்பிச்சா வாரம் 9 ரூபாய் மிச்சம்.
* துவரம் பருப்பு இதுவரைக்கும் நான் வாங்கின எல்லா இடங்களையும் விட ரொம்ப சிறப்பா இருந்தது. உளுந்து ஏகப் போடுவான். பொதுவா எல்லா மளிகைச் சாமான்களுமே D’mart க்கு சமமா அல்லது அதைவிட சிறப்பாவே இருந்தது. சாம்பார், ரசப் பொடி செய்ய எல்லாம் ஸ்பெஷலா சாமான் வாங்கிண்டு வந்தேன். விலையை இனிமேதான் பொருத்திப் பாக்கணும். ஆனா தரமான சுவையான சாமான்களுக்காக எனக்கு மாச பட்ஜட்ல சில நூறுகள் அதிகமான பரவாயில்லை.
* இலவசமா கொடுத்த சர்க்கரை நல்லா இல்லை. அண்ணாச்சி கடை சர்க்கரையும். ஆனா காசு கொடுத்து வாங்கினது, D’Mart சர்க்கரை மாதிரி கல்கண்டா இருந்தது.
* ட்ரை ஃப்ரூட்ஸ் வகைல பிற கடைகள்ல கிடைக்காத சில டூட்டி ஃப்ரூட்டி, தர்பூஸ், கர்பூஸ் விதை எல்லாம் கூட கிடைச்சது. அல்வா செய்ய வெள்ளரி விதை கிடைக்கலை. (ஸ்ரீரங்கத்துல செட்டியார்கள் வீட்டுல, பெண்கள் சும்மா இருக்கும்போதெல்லாம் இந்த விதையை உரிச்சுகிட்டிருப்பாங்க. ஆனா எங்க கிடைக்கும்னு தெரியலை.)
0
# முக்கியமா அரிசியும் டீயும் இவங்க தயாரிப்பு இன்னும் வாங்கி உபயோகிக்கலை. அரிசியை ரங்கமணியும் (என்னதான் குழம்பு ரசம், காய் எல்லாம் நல்லா சமைச்சாலும் அடிப்படைல சாதம் நல்லா இருந்தாதான் சமையல் ருசிக்கும்னு பெரிய நம்பிக்கை), டீ பரவாயில்லைன்னாவது எங்கவீட்டுல வேலை செய்ற அம்மணியும் சொன்னாங்கன்னா தான் இன்னும் நம்பிக்கை கூடும். இது ரெண்டும் நடக்கறது கொஞ்சம் கஷ்டம்.
# காய்கறிகளைப் பொறுக்கி, அதுக்கு எடை போட அதிக நேரம் எடுக்கறது, பில் போடற மிஷின் மக்கர், பாக்கி சில்லறை இல்லாதது, பேனா இல்லாதது (இந்த முறை நான் போனபோதும் பேனா இல்லை, நான் கொண்டு போயிருந்தேன்.) எல்லாம் என்னை மாதிரி நாலுபேர் திரும்பத் திரும்பச் சொன்னா சரி செஞ்சுடுவாங்க. இந்த ஞாயிற்றுக் கிழமை (கொஞ்சமே) கொஞ்சம் வேகம் அதிகம் தான்.
# மெயின் கடைத்தெருவுலயோ அல்லது குடியிருப்புகள் பக்கத்துலயோ இல்லாம ஸ்கூல், லேடீஸ் ஹாஸ்டல் கிட்ட இருக்கறது கொஞ்சம் அபத்தமா இருக்கு. அதுக்குப் பக்கத்துல எந்த ஷாப்பிங்கும் செய்ய முடியாம திரும்ப வேண்டியிருக்கு.
# நாங்க முந்தி இருந்த வீட்டுக்கு அடுத்த காம்பவுண்டே D’mart. 3 மாடிக் கட்டிடமா மிகப் பிரம்மாண்டமா வந்து, கிடைக்காத பொருளே இல்லைன்னு நிலைமை. அங்க எந்தப் பொருளும் கண்ணை மூடிகிட்டு இருக்கற இடம் தெரிஞ்சு எடுக்கற அளவுக்கு பழகிட்டேன். ஆனா ரிலையன்ஸ் என்னவோ ரொம்பச் சின்ன இடமா இருக்கு. இனி, மேல மாடி கட்டினாத்தான் அதிகமா வைக்க முடியுங்கற நிலைமைல இப்பவே பல வீட்டுபயோகப் பொருள்கள், நான் தொடர்ந்து வாங்கற Lizol (citrrs fragrance), fabric conditioner எல்லாம் இல்லவே இல்லை. அதனால இது முழுமையா ஷாப்பிங் செய்ய ஏத்த இடம் இல்லை. இப்போதைக்கு பெரிய அளவுல வளர முடியும்னும் தோணலை. Nerul மக்கள் D’Mart தான் அந்த வகைல தேர்ந்தெடுப்பாங்க.
# இன்னமும் பச்சரிசி, இட்லி அரிசிலேருந்து, வெத்தலை, வாழையிலை, கனுவுக்கு மஞ்சள் கொத்து, இதோ வரப்போற கார்த்திகைக்கு பொரி வரைக்கும் நம்பளோட வழமையான பல தேவைகளுக்கும்,
சொக்காயிக்கு படம் காட்ட மினுக்கு வத்தலா, வரவழைச்சுடுவோம், அதென்ன திருநெல்வேலில அப்பக் கொடி, அதளக்காய் வத்தலா, தாமரைத்தண்டான்னு கேட்டுப் பாக்கறேன்னு பத்து ரூபாய் சாமானுக்கெல்லாம் மெனக்கெடத் தயாரா இருக்கவும்,
பஞ்சாப் கோதுமையைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தா (தேவைப்பட்டா சோயாவும் நாமே சொல்ற அளவு சேர்த்து) மிஷின்ல அரைச்சுக் கொண்டுவந்து கொடுக்கவும், (ஒருதடவை மிஷின்ல அரைச்சு உபயோகிச்சவங்க, கம்பெனி கோதுமை மாவு எப்பவும் வாங்க மாட்டாங்க.)
“சாம்பார்ப்பொடிக்கு விரளி மஞ்சள் வாங்க மறந்திட்டீங்களா, ஏன் வெயில்ல அலையறீங்கக்கா, தலைவலி வரும், தம்பிகிட்ட இப்பவே கொடுத்தனுப்பறேன்”
“இல்லை, எதிர்ல ஐயப்பன் கோவில் வாசல்ல பூவும் வாங்கணும், நானே வரேன்”
“அட, என்ன பூ, எவ்வளவுக்குன்னு சொல்லுங்க, கையோட வாங்கிவாரச் சொல்லுதேன், வேற என்ன வேணுங்க்கா”
போன்ற பேங்க் ஆஃப் இந்தியா [சேவையைக் கடந்த நேசமிகு உறவுகள் :)] மாதிரி விஷயங்களுக்காகவும் இன்னும் அண்ணாச்சிகளையும் சார்ந்தே இருக்க வேண்டியிருக்கு.
பிற்சேர்க்கை:
வாழைத் தண்டும் கிடைக்குது. 🙂 அதுவும் வெறும் ரூ.5.38 க்கு.
கருப்பு உளுத்தம் பருப்பு(தோல் பருப்பு) ஊறவெச்சு 24 மணி நேரம் ஆகியும் தோல் பிரியலை; நனைச்ச தண்ணில கருப்புச் சாயம்.


பேக் செஞ்ச எல்லா மளிகைச் சாமான்களுமே Reliance Value, Reliance Select -ன்னு இரண்டு தரத்துல இருக்கு. முன்னது RV பாக்கெட்ல தமிழும் சேர்த்து 8 மொழிகள்ல அச்சிடப்பட்டு கொஞ்சம் விலை தரம் இரண்டுலயுமே குறைவாவும், பின்னது RSelect 4 மொழிகள்ல மட்டும்(தமிழ் இல்லை) அச்சிடப்பட்டு மிகக் குறைந்த விலை வித்யாசத்துல ஆனா மிகச் சிறந்த தரத்தோட இருக்கு. காரணம் தெரியலை. (உதாரணம் கடலைப் பருப்பு RV – கிலோ ரூ.58, RSelect – கிலோ ரூ. 60. தரத்துல பெரிய வித்யாசம்.)
-0-
Nerul Times: இந்த ஞாயித்துக்கிழமை, வீட்டுக்கிட்ட இருக்கற ATM போய் அப்படியே எதிர்ல இருந்த பிரபல நெருள் சனீஸ்வரன் கோயிலுக்குப் போனா அங்க நோட்டீஸ் போர்டுல சனிக்கிழமை உபயதாரர் பேர் அழிக்காம இருந்தது. இந்தக் கோயில் ரொம்பப் பிரபலம். சனிக்கிழமை பூஜை எல்லாம் பெரிய அளவுலயும், அதிகக் கூட்டமாவும் இருக்கும். போர்டுல இருந்த உபயதாரர் சச்சின் டெண்டுல்கர்!
Like this:
Like ஏற்றப்படுகின்றது...