[வீடு மறுசீரமைப்புப் பணிகள் துரிதமாக நடப்பதால் கணினியில், இணையத்தில் இயங்கமுடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். இந்தப் பதிவு பின்னர் மீளேற்றப்படலாம். :)]
ஏப்ரல் 2009
புதன், ஏப்ரல் 22, 2009
பிறந்தநாள் வாழ்த்துகள்
Posted by Jayashree Govindarajan under சமகால இலக்கியம் :), சொந்தக் கதை, தமிழ்ப்பதிவுகள், பொதுவானவை | குறிச்சொற்கள்: பிறந்தநாள், வாழ்த்து |[17] Comments
வியாழன், ஏப்ரல் 2, 2009
கொள்ளுப் பொடி [கானாப் பொடி]
Posted by Jayashree Govindarajan under ஆயத்தப் பொடி, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பக்க உணவு, பொடிகள் | குறிச்சொற்கள்: காய்ந்த மிளகாய், கொள்ளு, துவரம் பருப்பு |[23] Comments
உடலில் இருக்கும் கொழுப்பு, ஊளைச் சதையைக் குறைக்க, மூட்டுவலி போன்ற பல பிரச்சினைகளுக்கு கொள்ளு மிகவும் நல்லது. அடிக்கடி உணவில் சேர்ப்பது, உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது. இந்தப் பொடியில் சாதம் கலந்து கேதுவுக்கு வேண்டுதல் செய்வார்கள். இதற்கு கானாப் பொடி என்றும் பெயர்.
தேவையான பொருள்கள்:
கொள்ளு – 1/2 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 3
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பூண்டு – 4 பல் (விரும்பினால்)
பெருங்காயம்
உப்பு
செய்முறை:
- துவரம் பருப்பு, கொள்ளு இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாத வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
- காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், நசுக்கிய பூண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.
- நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து, காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்துவைக்கவும்.
பெருங்காயம் கட்டிக் காயமாக இருந்தால் (மணம் நன்றாக இருக்கும்) முதலிலேயே சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.
வியாழன், ஏப்ரல் 2, 2009
பருப்புப் பொடி [1]
Posted by Jayashree Govindarajan under ஆயத்தப் பொடி, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பக்க உணவு, பொடிகள் | குறிச்சொற்கள்: காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு |[6] Comments
பொடிகள் அளவு அவசரத்துக்கு ஆபத்பாந்தவன் யாருமில்லை. அதிகம் எண்ணெய், காரம், மசாலா இல்லாத எளிமையான உணவும். கூட. நமக்குத் தேவையான மருத்துவ குணங்களுடைய பொருள்களையும் மானாவாரியாக இணைத்துக் கொள்ளலாம் என்பது கூடுதல் நன்மை. இனி, அவ்வப்போது சில பொடிவகைகளும் செய்துபார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு – 1 கப்
காய்ந்த மிளகாய் – 2
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 /2 டீஸ்பூன்
பெருங்காயம்
உப்பு
செய்முறை:
- துவரம் பருப்பை எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும். (பருப்பு எதுவும் கருகிவிடாமல் கைவிடாமல் வறுக்கவும்.)
- காய்ந்த மிளகாய், மிளகு, சீரகத்தையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.
- ஆறியதும் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு, உப்பு, பெருங்காயம் சேர்த்து சற்றே கரகரப்பாக அரைத்து காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்துவைக்கவும்.
கூட்டு, கறி செய்யும்போது வேகவைத்த பருப்பு இல்லையென்றால் மாற்றாக ஒன்றிரண்டு டீஸ்பூன் இந்தப் பருப்புப் பொடி சேர்த்து உபயோகிக்கலாம்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
நெய் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். கூட்டு, அப்பள, வடாம் வகைகள் சேரும்.
வியாழன், ஏப்ரல் 2, 2009
பொரித்த ரசம்
Posted by Jayashree Govindarajan under சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பக்க உணவு, ரசம்/சூப் | குறிச்சொற்கள்: காய்ந்த மிளகாய், தக்காளி, தேங்காய், மிளகு |[8] Comments
புளி சேர்க்காமல் தயாரிக்கும் ரசம். புளி ஆகாத ஏதாவது நாட்டு மருந்து சாப்பிடும் நாளில் அல்லது அதிகப் புளி சேர்த்து வேறு குழம்பு, கூட்டு வகைகள் செய்யும்போது ரசத்தை இந்த முறையில் தயாரித்துக் கொள்ளலாம்.
தேவையான பொருள்கள்:
தக்காளி – 4
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை
பருப்புத் தண்ணீர் – 2 கப்
வறுத்து அரைக்க:
எண்ணெய் – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
மிளகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1/2 டீஸ்பூன் (விரும்பினால்)
தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்
தாளிக்க: எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை.
செய்முறை:
- எண்ணெயில் காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகை சிவக்க வறுத்து, தேங்காய்த் துருவல், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- ஒன்றரை கப் தண்ணீரில் இரண்டு தக்காளிப் பழங்களை நன்கு மசித்துக் கொள்ளவும்.
- மீதமிருக்கும் தக்காளிகளை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூளையும் தக்காளிக் கரைசலுடன் சேர்த்து அடுப்பில் வேகவைக்கவும்.
- தக்காளி வெந்ததும், பருப்பு வேகவைத்த தண்ணீர், அரைத்த விழுது சேர்த்து பொங்கி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- சிறிது எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.
விழுது சேர்த்ததும் ரசத்தை அதிகம் கொதிக்கவைக்கக் கூடாது. பொங்கிவந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும். இப்படிச் செய்தால் மண்டி தங்காமல் பரிமாறும்போது அடிவரை கலந்தே பரிமாறலாம். இதனால் அரைத்துவிட்ட பொருள் வீணாகாமல், சுவையும் குறையாமல் இருக்கும்.
புதன், ஏப்ரல் 1, 2009
அரிசி வடாம் [3]
Posted by Jayashree Govindarajan under சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பக்க உணவு, வற்றல்/ வடாம்/ வடகம்/ அப்பளம் | குறிச்சொற்கள்: எலுமிச்சை, ஜவ்வரிசி, பச்சரிசி, பச்சை மிளகாய், வடாம் |[6] Comments
மிஷினில் அரைக்கும் வசதி இல்லாதவர்களும் சுலபமாக இந்த முறையில் அரிசி வடாம் செய்யலாம்.
தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 4 கப்
ஜவ்வரிசி – 1 கப்
பச்சை மிளகாய் – 10
உப்பு
பெருங்காயம்
எலுமிச்சைச் சாறு
செய்முறை:
- முதல்நாள் இரவே அரிசி, ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம், இரண்டு பங்கு தண்ணீரில் ஊறவைக்கவும்.
- அத்துடன் மேலும் ஒரு பங்கு தண்ணீர், பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் மிக மிக நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் அடிக்கனமான பாத்திரத்தில் மேலும் 3 பங்கு தண்ணீர் வைத்து, சுட ஆரம்பித்ததும், அரைத்த அரிசிக் கலவையைக் கொட்டி, கைவிடாமல் கிளற ஆரம்பிக்கவும்.
- கட்டிகளாகச் சேர்ந்து வரும். பயப்படத் தேவையில்லை. மேலும் கிளறிக்கொண்டே இருந்தால் நன்கு வெந்து நிறம் மாறி சேர்ந்தாற்போல் கெட்டியாக வந்தபின் மூடிவைத்து, அடுப்பை அணைக்கவும்.
- மறுநாள் காலை எலுமிச்சைச் சாறு கலந்து, தண்ணீரில் மோர் கலந்து தொட்டுக்கொண்டு ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் தேவைப்படும் வடாம்களைப் பிழிந்துகொள்ளவும்.
- நன்கு காயவைத்து எடுத்துவைத்து தேவைப்படும்போது பொரித்துக் கொள்ளவும்.
* மிச்சமுள்ள நீர்மோரைக் கலந்தே கலவையை லேசாக மட்டும் நெகிழ்த்தி, ஒரு ஸ்பூனால் வில்லைகளாகவும் செய்துகொள்ளலாம்.
புதன், ஏப்ரல் 1, 2009
அரிசி வடாம் [2]
Posted by Jayashree Govindarajan under சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பக்க உணவு, வற்றல்/ வடாம்/ வடகம்/ அப்பளம் | குறிச்சொற்கள்: எலுமிச்சை, ஜவ்வரிசி, பச்சரிசி, பச்சை மிளகாய், வடாம் |1 பின்னூட்டம்
தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 4 கப்
ஜவ்வரிசி – 1 கப்
பச்சை மிளகாய் – 4
உப்பு
பெருங்காயம்
எலுமிச்சைச் சாறு
செய்முறை:
- பச்சரிசியைத் தண்ணீரில் களைந்து நிழலில் உலர்த்தி, முக்கால் பதம் காய்ந்ததும் (பிடித்தால் பிடிக்கவரும், உதிர்த்தால் உதிர்க்க வரும்) ஜவ்வரிசியைச் சேர்த்து மிஷினில் அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த மாவில் ஒரு கப் மாவிற்கு 6 கப் தண்ணீர் என்ற அளவில் அடிகனமான பாத்திரத்தில் போட்டு கட்டிகளில்லாமல் கலக்கிக் கொள்ளவும்.
- அரைத்த விழுதையும் சேர்த்து அடுப்பில் வைத்து நிதானமான தீயில் நன்றாக மாவு வெந்து நிறம் மாறி, குழம்பாகச் சேர்ந்து வரும் வரை கிளறி இறக்கவும்.
- விரும்பினால் எள் அல்லது சீரகம் சேர்த்துக் கொள்ளலாம்.
- இறக்கியபின் எலுமிச்சைச் சாறு பிழிந்து கலக்கவும்.
- பிளாஸ்டிக் பேப்பரில் ஒவ்வொரு கரண்டியாக மாவை வைத்து அப்பளம்போல் பெரிய வட்டங்களாக இழுத்துக் கொள்ளவும்.
- வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துப் பொரிக்கவும்.
- அரிசி அப்பளம் போல் இருக்கும்.