வெள்ளைக் கொத்துக்கடலை
தேவையான பொருள்கள்:
வெள்ளை கொத்துக் கடலை – 1 கிலோ (கருப்பு)
பச்சை மிளகாய் – 8 (அல்லது காய்ந்த மிளகாய்)
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
கசகசா – 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – சிறுதுண்டு (விரும்பினால்)
தேங்காய் – 1
தாளிக்க: எண்ணெய், கடுகு, 1 காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.
செய்முறை:
- கொத்துக்கடலையை 15 மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். முடிந்தால் இடையில் ஒருமுறை நீரை மாற்றவும்.
- குக்கரில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நான்கைந்து விசில் வரும்வரை நன்கு வேகவைக்கவும்.
- கடலைப் பருப்பு, கசகசாவை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
- ஊறவைத்த கடலைப்பருப்பு, கசகசா, இஞ்சி, தேங்காய், சிறிது மல்லித் தழை, பச்சை மிளகாயுடன் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- கொத்துக் கடலையுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்துப் பிசிறிவைக்கவும்.
- அடுப்பில் வாணலியில் கொஞ்சம் அதிகமாகவே எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
- பிசிறிவைத்துள்ள கடலைக் கலவையைக் கொட்டி, நன்கு மேலும் 10 நிமிடங்களுக்குக் கிளறி இறக்கவும்.
* இந்தச் சுண்டலையே தண்ணீர் அதிகம் சேர்த்து தளர்வாக பூரி பிரசாதத்திற்கு இங்கே கோயில்களில் தருகிறார்கள். கடலைப் பருப்பு சேர்ப்பதால் கிரேவி சேர்ந்தாற்போலும், மற்ற மசாலாக்கள் அதிகம் சேர்க்காவிட்டாலும் கசகசா சேர்ப்பதால் அதிக மணம், சுவையாகவும் இருக்கிறது. சுண்டல் மிஞ்சினால் நாமும் அப்படிச் செய்யலாம்.
-0-
கருப்புக் கொத்துக்கடலை
தேவையான பொருள்கள்:
கொத்துக் கடலை – 1 கிலோ (கருப்பு)
காய்ந்த மிளகாய் – 7, 8
கடலைப் பருப்பு – 1/4 கப்
எள் – 1 டீஸ்பூன்
மல்லிவிதை – 1/4 கப்
தேங்காய் – 1
தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.
செய்முறை:
- கொத்துக்கடலையை 12லிருந்து 15 மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். சின்னக் கொத்துக்கடலையாக இருந்தால் 12 மணி நேரத்தில் நிச்சயம் ஊறியிருக்கும். முடிந்தால் இடையில் ஒருமுறை நீரை மாற்றவும்.
- குக்கரில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நான்கைந்து விசில் வரும்வரை நன்கு வேகவைக்கவும்.
- கடலைப் பருப்பு, எள்ளை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
- ஊறவைத்த கடலைப்பருப்பு, எள், மல்லிவிதை, தேங்காய், காய்ந்த மிளகாயுடன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- கொத்துக் கடலையுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்துப் பிசிறிவைக்கவும்.
- அடுப்பில் வாணலியில் கொஞ்சம் அதிகமாகவே எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
- பிசிறிவைத்துள்ள கடலைக் கலவையைக் கொட்டி, நன்கு மேலும் 10 நிமிடங்களுக்குக் கிளறி இறக்கவும்.
* சுண்டல் மிஞ்சினால் கூட்டு, குழம்பில்(இந்த வகைக் கொத்துக் கடலை புளிநீரில் சுவை சேர்க்கும்.) சேர்க்கலாம். அதிகம் மிஞ்சினால், தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து ஆனால் உலர் கறியாக, சப்பாத்தி வகைகளுக்கு பக்க உணவாக உபயோகிக்கலாம்..
-0-
* கொத்துக்கடலை பட்டாணிக்கு குக்கரில் வேகவைக்கும் வரை உப்பு சேர்த்துவிடக் கூடாது. தோல் தனியாக கழண்டுவிடும்.
* சிலர் சீக்கிரம் வேக, கொத்துக்கடலையுடன் சமையல் சோடா சேர்ப்பார்கள். உண்மையில் நன்றாக ஊறவைத்தாலே, நன்றாக வெந்துவிடும். சமையல் சோடா சேர்க்கவே தேவை இல்லை. நான் சேர்ப்பதில்லை. ஆனால் அப்படிச் சேர்ப்பவர்கள், ஊறவைக்கும்போதே சோடா உப்பைச் சேர்த்து, நீரை வடித்துவிட்டு வேக வைக்கலாம். இதனால் சீக்கிரம் வேகும்; சத்தும் வீணாகாது.
* நவராத்திரி பிரசாதமாக இல்லாமல் சாட் உணவாகச் செய்யும் நாள்களில் இவற்றில் கொஞ்சம் மிளகாயைக் குறைத்துக் கொண்டு சன்னா மசாலா சேர்க்கலாம்.
* மேலே உள்ள இரு முறைகளிலும் பட்டாணிச் சுண்டலும் செய்யலாம்.
நவராத்திரி: ஆடலுடன் பாடலைக் கேட்டு… – சின்னக் கண்ணன்.
ஞாயிறு, ஒக்ரோபர் 21, 2007 at 12:12 முப
Hi Jayashree,
I made this today. It came out very well. normally I don’t grind the stuffs you had said to and make it more plain, with just the seasoning. But this one tastes very good.
செவ்வாய், ஒக்ரோபர் 23, 2007 at 12:07 பிப
Thanks Ramya.
எந்தச் சுண்டலுமே சும்மா தாளித்தால் எனக்கு இறங்காது. நிறைய மாற்றி மாற்றி செய்துகொண்டே இருப்பேன்.
புதன், ஒக்ரோபர் 24, 2007 at 11:09 முப
சரஸ்வதி பூஜை குறித்த நான் ரசித்த அருமையான கட்டுரை..