“மூட நெய்பெய்து முழங்கை வழிவார…”
“அட, அப்படியே அக்கார அடிசிலில் மூட மூட நெய் பெய்தாலும், கையிலிருந்து வாய்க்குப் போவதற்குள் எப்படி வேகமாக முழங்கை வரை நெய் வழியும் என்பதற்கு ஒரு அழகான விளக்கம் படித்தேன். சீக்கிரம் அக்கார அடிசிலை உண்டுவிட்டால், கண்ணன் கிளம்பிவிடுவான் என்று நோன்புப் பெண்கள், சாப்பிடுவது போல் பாசாங்குக்காகக் கையிலெடுத்துவிட்டு, ஆனால் சாப்பிடாமல் அவனோடு பேசியே பொழுதை இழுத்தடித்துக் கழிப்பார்களாம். அதற்குள் கையிலிருக்கும் அக்கார அடிசிலிருந்து நெய் பிரிந்து முழங்கை வரை வந்து விடுமாம்.
ம்ம்ம்.. அப்ப ஒரு கோக் டின் வாங்கிகிட்டு கார்னர் டேபிளை occupy பண்ணிகிட்டு ஒருமணிநேரம் அல்லது சர்வரே விரட்டற வரைக்கும் டாக் பண்ணிகிட்டே இருக்கறதும், எப்பவோ ஒரு தடவை நினைவு வந்தமாதிரி வாயை அதுல வெச்சு இரண்டேஇரண்டு மில்லி உறிஞ்சறதும் கேட்டா Sweet Nothingsனு சொல்லிக்கறதும், அப்படி ஒன்னும் சமீபத்தைய trend இல்ல போல!! :))
யாராவது ஜெயிச்சா, தங்கப்பதக்கம் வாங்கினா, நெகிழ்ச்சில அழுவாங்க. அட, உலக அழகியாவே அறிவிச்சா கூட வாயை ஓ’ மாதிரி வெச்சுகிட்டு, சொல்லிவெச்ச மாதிரி உலகத்துல இருக்கற அவ்ளோ அழகிகளும் அழறாங்க.
ஆனாலும் நம்ப பார்ட்டிக்கு ஜெயிச்சப்பறம் இந்தத் தெனாவட்டு ஆகுமா? முப்பது நாளும் பணிவு பக்தின்னு இருந்த பொண்ணான்னு இருக்கு! ஆண்டாள் ஆண்டாள் தான்!!
-0-
நான் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றிருந்த போது, “பெரும்புதூர் மாமுனிக்கு பின்ஆனாள் வாழியே!” என்று வாழி திருநாமம் ஆண்டாள் பற்றி குறிப்பிடுவது ஏன் என்று சந்தேகம் கேட்டபோது அங்கிருந்தவர்கள் இராமானுஜருக்கு ஆண்டாள் எப்படித் தங்கையானாள் என்று ஒரு கதை சொன்னார்கள்.
ஆண்டாள் தன்பொருட்டு அழகருக்கு செய்துவைக்கிறேன் என்று பிரார்த்தித்துக்கொண்ட 100 தடா ‘அக்கார அடிசிலை’…
நாறு நறும்பொழில்மா
லிருஞ்சோலை நம்பிக்கு, நான்
நூறு தடாவில்வெண்ணெய்
வாய்நேர்ந்து பராவிவைத்தேன்,
நூறு தடாநிறைந்த
அக்கார வடிசில்சொன்னேன்,
ஏறு திருவுடையான்
இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ.
(– நாச்சியார் திருமொழி)
…. கல்யாண குஷியில்:) மறந்திருக்கலாமோவென இராமானுஜர் சிரமப்பட்டு நிறைவேற்றி வைக்கிறார். அதனால், பின்னர் இராமானுஜர் ஸ்ரீவில்லிபுத்தூர் வரும்போது ஆண்டாள் அவரை “அண்ணா!” என்று நெகிழ்ந்து அழைத்துக்கொண்டே எட்டடி முன்னால் ஓடிவந்துவிட்டாளாம். (இப்போதும் மற்ற கோவில்களைப் போல் இல்லாமல் ஸ்ரீவில்லிபுத்தூரில் மூலவருக்கும் உத்ஸவருக்குமான இடைவெளி மிக அதிகமாக, உத்ஸவர் மற்ற கோவில் உத்ஸவர்களைவிட இன்னும் எட்டடி அதிக முன்னாலேயே இருப்பதால் பின்னால் இருக்கும் மூலவரை நன்றாக தரிசிப்பது சிரமமாகவே இருக்கும்.) இந்த உற்சவம் இப்பொழுதும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருடம் ஒருமுறை நடந்துவருகிறது என்று கேள்விப்பட்டேன்
இந்த நிகழ்வை ஸ்ரீரங்கம் கோயிலொழுகும் இவ்வாறு குறிப்பிட்டு உறுதிசெய்கிறது…
…. உடையவரும் பெரியபெருமாளுடைய அநுமதியுடனே திருவரங்கத்திலிருந்து புறப்பட்டு சுந்தரத் தோளுடையான் எழுந்தருளியிருக்கும் திருமாலிருஞ்சோலைக்குச் சென்று (இது அழகர் கோயில்) மங்களாசாஸனம் செய்தருளினார். அங்கு ஆண்டாள் விபவாவதாரத்திலே பாரித்தபடி, அக்குடியில் பிறந்த தாம் ஆண்டாளுடைய எண்ணத்தை நிறைவேற்றும்விதமாக 100 தடா வெண்ணெய், 100 தடா அக்காரஅடிசில் ஸமர்ப்பித்தருளினார்.
……………………………
…………………………….
அதன்பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றடைந்து……ஆண்டாளும் தாம் வாய்நேர்ந்த படியே அழகருக்கு 100 தடா அக்காரஅடிசிலைத் தம்பொருட்டு ஸமர்பித்த இராமானுசரை
‘எம் கோயில் அண்ணரே’ வாரும் என்று அழைத்தருளினாள்.
ஆண்டாள் குறித்து படித்த இன்னொரு சுவாரசியமான சுட்டி.
இந்தப் பகுதி மரத்தடி ஹரன்பிரசன்னாவிற்கு சமர்ப்பணம். 🙂
-o-
இனி அக்கார அடிசில்… இது மார்கழி மாதம் 27ஆம் நாள் செய்யும் இனிப்பு வகை…
தேவையான பொருள்கள்:
அரிசி – 1 கப்
பயத்தம் பருப்பு – 1/4 கப்
வெல்லம் – 2 1/2 கப்
ஏலப்பொடி – 2 டீஸ்பூன்
பச்சைக் கற்பூரம் – சிறிது
மற்றும்
பால் பால் பால் பால்…
நெய் நெய் நெய் நெய்…
செய்முறை:
- அரிசி மற்றும் பயத்தம் பருப்பைக் கழுவி, நன்கு நீரை வடித்துவிட்டு, வாணலியில் 2 டீஸ்பூன் நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
- பின் 5 கப் பால் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேக விட வேண்டும்.
- வாணலியில் வெல்லத்துடன் சிறிது நீர் சேர்த்து, கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.
- வாணலியில் குழைய வேகவைத்த அரிசிக் கலவை, வடிகட்டிய வெல்லக் கரைசலுடன் மேலும் 2 கப் பால் சேர்த்து சிறுதீயில் கிளற ஆரம்பிக்க வேண்டும்.
- இறுக இறுக மேலும் மேலும் பால் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
- சிறிது நேரம் சென்றபின் நெய்யைச் சேர்க்க ஆரம்பிக்க வேண்டும்.
- நெய், நெய், நெய் மேலும் நெய்…போதும் என்று [நாம்:-)] முடிவு செய்யும் போது ஏலப்பொடி, பச்சைக்கற்பூரம் சேர்த்துக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கலாம்.
* “நெய்யுண்ணோம்.. பாலுண்ணோம்” என்று மார்கழி 2ம் நாள் ஆரம்பித்த நோன்பை, “…அதன்பின்னே பால்சோறு, மூட நெய் பெய்து முழங்கை வழிவார..” என்று கூறி 25 நாள்களாகத் தவறவிட்ட நெய் பாலையெல்லாம் மார்கழி 27ம் நாள் கணக்கில் ஆண்டாள் எழுதிவிட்டாள். பாலிலேயே அரிசி சமைக்கப்பட வேண்டும். அதுவே மூடப்படும் அளவு அதன்மேல் நெய் ஊற்றப்பட வேண்டும். சமைத்தபின் அக்கார அடிசிலைக் கையில் எடுத்தால் நெய் முழங்கை வழிவார ஒழுக வேண்டும். இது ஆண்டாள் இந்தப் பாட்டில் தந்திருக்கும் ரெசிபி.
அப்படியெல்லாம் பால், நெய்யைக் கொட்ட நாம் ஆயர்பாடியிலோ, ஸ்ரீவில்லிபுத்தூரிலோ இல்லை என்பது முதல் காரணமென்றாலும், நமது தேகம் தாங்காது என்பது அதைவிட முக்கியமான காரணம். உங்கள் வீட்டுக்காரர்களிட(மு)ம் நல்லநாளில் தயவுசெய்து எனக்குத் திட்டு வாங்கித் தராதீர்கள். அவ்வளவு பால் நெய் தேவையில்லை. அவரவர் விருப்பம் போல் சேர்த்துக் கொள்ளவும். அதனால்தான் தேவையான பொருள்களில் பால் மற்றும் நெய்யின் அளவைக் குறிப்பிடவில்லை.
* குக்கரில் வைக்கும் போது 5 கப் பாலிற்குப் பதிலாக 3 கப் பால் மற்றும் 2 கப் நீராகக் கலந்து வைக்கலாம். ஆனால் பின்னால் கிளறும் போது பால்தான் சேர்க்க வேண்டும்.
* வாணலியில் கிளற ஆரம்பிக்கும் முன்பே வெல்லக் கரைசல், வேக வைத்த சாதக்கலவை, பால் ஆகியவற்றைக் கட்டியில்லாமல் கரைத்துக் கொண்டுவிடுதல் நலம். இல்லாவிட்டால் பின்னால் சமாளிப்பது சிரமம்.
கிளறும்போது கடைபிடிக்கவேண்டிய அனுஷ்டானங்கள்:
வாயால் பாடும் கனகதாரா, ‘உதயா’ உளறல்களைத் தற்காலிகமாக நிறுத்திவிடுவது,
காதால் கேட்கும் தொலைபேசி அழைப்பெல்லாம் wrong call (அல்லது எனக்கில்லை) என்று திடமாக நம்புதல்,
யாதொரு சம்பந்தமுமில்லாமல் திடீரென இடையில் பெண் கேட்கும் ‘How come you loved appa? என்ற விடையே இல்லாத கேள்விகளுக்கு விடையை மனதால் சிந்திக்க முற்படாதிருத்தல்,
“அக்காரவடிசல்(வழக்குமொழியில்) எல்லாம் எங்கம்மா பண்ணனும், இன்னும் நாக்குலயே இருக்கு!” என்று பக்கவாட்டிலிருந்து நம்மைச் சீண்டப்பார்க்கும் பேச்சுகளுக்கு, “பாசுரம் ஒண்ணும் உருப்படியா நாக்குல நிக்காட்டாலும் இதுவாவது நிக்குதே!…. இவ்ளோ வாயாகாது!!” என்று திருப்பிச் சொல்ல நினைப்பதைச் சற்று நேரத்திற்கு ஒத்திப் போடுவது [அதற்காக சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் இருக்கக் கூடாது. கொஞ்சம் postpone செய்து சாப்பிட ஆரம்பிக்கும்முன் அவசியம் சொல்லிவிட வேண்டும். :)]
ஏன் இவ்வளவு புலனடக்கம் தேவை என்று புரியாதவர்களுக்கு இனி பதில்…
* பால் சேர்த்திருப்பதால் மிக விரைவில் வேகவேகமாக அடிப்பிடிக்க ஆரம்பிக்கும். அதற்கு வாய்ப்பே கொடுக்காமல் மிகச் சிறிய தீயில் விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின்னால் நிச்சயம் கையொடு தோள் வலிக்கும்.
* கொதிக்கும் வேகத்தில் ‘க்ளக் க்ளக்’ என்று வெளியில் தெறிக்கும்; நம் கையிலும். சமாளிக்க வேண்டியதுதான். வெளிப்புறத்தைத் துடைக்க வேண்டிய வேலை தனி.
* அதிக நேரம் கிளற முடியாது என்று நினைப்பவர்கள் சர்க்கரை சேர்க்காத condensed milk மற்றும் சிறிதளவு பால் மட்டும் கலந்து விரைவில் முடித்து விடலாம். ஆனால் சர்க்கரை கலக்காத condensed milk என்பது மிக முக்கியம். சுவையிலும் கொஞ்சம் compromise செய்த கணக்குதான் இந்த முறை.
இறக்கும் முன்:
* எக்காரணம் கொண்டும் நமது பவிஷைக் காட்ட முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் போன்ற தூவல்களைச் சேர்த்துக் கேவலப்படுத்தக் கூடாது. இது சர்க்கரைப் பொங்கல் இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். சாப்பிடும் போது வாயில் இது போன்ற எந்த உப தொந்தரவுகளும் ஏற்பட விடக்கூடாது.
* பச்சைக்கற்பூரம் மிகமிகச் சிறிதளவே சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கசந்து மொத்தமும் பாழாகிவிடும்.
* வெல்லம் சிறிது கருப்பாக இருந்தால், சிட்டிகை கேசரிப்பவுடர் சேர்த்து பொய் make-up செய்யலாம்.
* சர்க்கரைப் பொங்கல் போல் இறுக்கமாகவும் இல்லாமல், பாயசம் போல் நீர்த்தும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட consistencyல் இருக்க வேண்டும். எடுக்கவோ குடிக்கவோ என்று கேட்பதற்கு இடமளிக்க முடியாமல் கையால் எடுக்கவும் முடியாமல், பாயசம் போல குடிக்கவும் முடியாமல் ஸ்பூனால் மட்டுமே எடுத்து சாப்பிட வேண்டிய திடத்தில் அவசியம் இருக்க வேண்டும்.
* எவ்வளவுக்கெவ்வளவு நெய் சேர்க்கிறோமோ அவ்வளவு சுவையாக இருக்கும் என்பதில் இரண்டாம் கருத்தே இல்லை. ஆனால் அப்படிச் சேர்க்கவில்லையென்றாலும், சாப்பிடும் முன், ஒரு கப்பில் போட்டு மைக்ரோவேவ் அவனில் சில நொடிகள் வைக்க, ஜிகுஜிகுவென்று வாசனையுடன், விட்டிருக்கும் சொல்ப நெய்யும் உருகி மேலே வர…. பார்ப்பதற்கு மூட நெய்பெய்தது போன்ற தோற்றத்தையும் சுவையையும் நிச்சயம் தரும்.
* ‘ஏன் கிளற அவ்வளவு கஷ்டப்பட வேண்டும், Non-stick ல் சுலபமாகச் செய்யலாமே?’ என்று கேட்கலாம். ஆமாம் மிகமிகச் சுலபமாகச் செய்யலாம். ஆனால்.. ஸ்ரீரங்கம் கோவிலில் உணவு சமைக்க எல்லாவற்றிற்கும் தங்கம், வெள்ளி அல்லது புதுப்புது மண் பாத்திரங்கள் மட்டுமே உபயோகிப்பார்கள். அதனால் கொஞ்சம் எல்லாவற்றிலும் லேசாக(மிக மிக லேசாக) ‘அடிப்பிடித்த’ வாசனை வரும். அது வந்தால்தான் எனக்கெல்லாம் திருப்தியாக இருக்கும். ஒருமுறை நான்-ஸ்டிக்கில் செய்து பார்த்து அளவுகளும் சுவையும் சரியாக இருந்தும் என்னால் திருப்தியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே non-stick ல் சமைப்பது சுகம். ‘மற்றவை’ ஸ்ரீரங்க சுகம்!!
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
இந்த உணவுக்கு மேட்ச் ஃபிக்ஸ் செய்யத் தேவை எதுவும் இல்லை. (உள்ளிருக்கும் பட்சத்தில் பக்தி தானே சேர்ந்துகொள்ளும்.) ஆனால் உண்பவர்களுக்கு துணைக்கு ஒருவரல்ல, நிறையப் பேர் தேவை. தான் மட்டும் தனித்தோ, மிச்சமிருப்பதை ஃபிர்ட்ஜில் வைத்தோ உண்ணாது, எல்லோருடனும் பகிர்ந்து உண்ண வேண்டும்.
“கூடியிருந்து குளிர்ந்து.. “
நன்றி: மரத்தடி.காம்
சனி, ஓகஸ்ட் 18, 2007 at 2:21 பிப
testing
சனி, ஓகஸ்ட் 18, 2007 at 3:38 பிப
இங்க பாருங்க, அட மோகன் தாஸ் தம்பீ, (சே சே என் முகத்தைப் பாத்தா பயந்த மாதிரி தெரியுதா?) வாங்கோ வாங்கோ.
இங்க பாருங்க, “நான் விடுமுறையில் இருக்கிறேன் நண்பர்களே. 2008ன் தொடக்கத்தில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்…”
அப்படீன்னு சொல்லிட்டு போயிட்டு இங்க வந்திருக்கீங்களே, அப்ப நான் என்ன உங்க எதிரியா? 🙂
இங்க பாருங்க, நாமும் நடுக்கமில்லாம ரெண்டு பெண்ணியப் பதிவு போடலாம்னு இப்பத் தான் நினைச்சேன். வந்தாய் நூறு வயது! 🙂 எதுக்கு இப்ப இங்க இந்த testing?
இங்க பாருங்க, நான் ஜகா. ஆணாதிக்கம் ஓங்குக! அல்லது மோகன் தாஸ் சொல்லும் பெண்ணியம் ஓங்குக!(வேறென்னத்தைச் சொல்ல?) :(( :))
புதன், ஜனவரி 7, 2009 at 5:51 பிப
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அரிசி பச்சரிசியா அல்லது புழுங்கள் அரிசியா 😕
வியாழன், ஜனவரி 8, 2009 at 10:09 பிப
மன்னிக்கனும்..இப்பதான் குறிச்சொற்களில் பச்சரிசியை பார்த்தேன்..:)
புதன், நவம்பர் 3, 2010 at 7:16 பிப
hi jeyashree madam
your blog is really interesting and it inspires me a lot to learn and try new stuffs.. I really like ur pasuram and other stuffs.. i was tempering akkaradisil with dried nuts before and now i learnt from ur post that it should not.. thank u for that.. keep up the gud work and hats off to u..
romba nanna irukku unga recipes laam.. authentic iyengar samayal recipes ku enaku un site periya vara prasadham.. nan kandippa ungala follow pannuven.. thanks..
செவ்வாய், ஒக்ரோபர் 11, 2011 at 7:57 பிப
// யாதொரு சம்பந்தமுமில்லாமல் திடீரென இடையில் பெண் கேட்கும் ‘How come you loved appa? என்ற விடையே இல்லாத கேள்விகளுக்கு விடையை மனதால் சிந்திக்க முற்படாதிருத்தல்,//
:-))
வெள்ளி, ஜனவரி 13, 2012 at 1:14 முப
செய்து பார்க்கத் தோன்றுகிறது.. அதைவிட யாராவது செய்து கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது 🙂
வெள்ளி, ஜனவரி 13, 2012 at 11:21 முப
நன்றி ஜெயஸ்ரீ,
ஜெ மோ குழுமத்திலிருந்து உங்களைக் கண்டு கொள்ள முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி…
தாளிக்கும் ஓசை வெறும் தாளிப்பாக மட்டுமல்லாமல் இலக்கியத்தையும் சேர்த்துத் தாளித்து மெய் மறக்க வைக்கிறது.
சமையல் குறிப்புக்களை இவ்வளவு க்ரியேடிவாக எழுதும் உங்களுக்கு என் நன்றி கலந்த பாராட்டுக்கள்.குறிப்பாக என் மனம் கவர்ந்த ஆண்டாளின் ’மூட நெய் பெய்து முழங்கை வழி வார வைக்கும் ரெஸிபி’உங்களால் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி.அதற்கு நீங்கள் அளித்திருக்கும் விளக்கமும் அற்புதம்.ஆனாலும் அந்தக் கால மார்கழி பஜனைகளில்…முழங்கையில் நெய் ஒழுக ஒழுக சூடான பொங்கலை வேக வேகமாக விழுங்கியதும் உண்டு. உங்கள் ரெஸிபிகளை என் பேரன் பேத்திகளுக்கும் இனி கையாளுவேன்…
திங்கள், ஜனவரி 12, 2015 at 9:45 முப
[…] https://mykitchenpitch.wordpress.com/2007/01/11/akkaara-adisil-maargazi-27/ […]