பட்சணங்கள்


அசோகா – 1 

[“அறுசுவை அரசு” நடராஜய்யர் சகோதரர் ஞானாம்பிகா ஜெயராமய்யர்]

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 100 கிராம்
சர்க்கரை இல்லாத கோவா – 100 கிராம்
சர்க்கரை – 400 கிராம்
சம்பா கோதுமை மாவு – 100 கிராம்
நெய் – 100 கிராம்
ஏலக்காய் – 5
முந்திரிப் பருப்பு – 10
கிஸ்மிஸ் – 10 கிராம்

 

செய்முறை:

  • பயத்தம் பருப்பை கடாயில் பொன்வறுவல் வறுத்து தண்ணீரில் ஊறவைக்கவும்.
  • சிறிதுநேரம் ஊறியபின் நன்றாகக் களைந்துவிட்டு, அதை கெட்டியாக வரும் அளவிற்கு தண்ணீர் வைத்து குக்கரில் வேகவைக்கவும்.
  • வேகவைத்த பருப்பில் சர்க்கரையைப் போட்டு, கடாயில் நன்றாக அல்வா மாதிரி கிளறவேண்டும்.
  • அல்வா நல்ல பதம் வந்ததும் இறக்கி, கோவாவைச் சேர்த்துக் கலந்துவைக்கவும்..
  • மற்றொரு கடாயில் நெய்யை வைத்து நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் போட்டு கொஞ்சம் சிவந்தவுடன் சம்பா கோதுமை மாவு சேர்த்து நன்கு வாசனை வரும் அளவிற்கு வறுத்து, அதனுடன் பருப்பு கோவாக் கலவை, ஆரஞ்சு கலர் சேர்த்துக் கிளறவும்.

இருபது வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூர், கும்பகோணம் போகும்போதெல்லாம் என் தந்தை வாங்கிவருவார். இப்பொழுது எல்லா இடங்களிலும் பிரபலம். முக்கியமாக திருமணம் மாதிரி விசேஷங்களில் மெனுவில் முக்கிய இடம் பெற்றுவிட்டது. 

 

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 1 கப்
பால் – 2 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 1 கப்
கேசரி பவுடர் (விரும்பினால்)
ஏலக்காய்
பச்சைக் கற்பூரம்
முந்திரி, பாதாம் வகைகள்

செய்முறை:

  • பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக்கொள்ளவும்.
  • பால் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேகவிடவும்.
  • குக்கர் திறக்கவந்ததும் சூட்டுடனே வெளியே எடுத்து,  நன்கு மசித்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் சர்க்கரை, மசித்த பயத்தம்பருப்பு கலந்து கிளறத் தொடங்கவும்.
  • முதலில் சர்க்கரையால் நெகிழ்ந்து, பின் கலவை இறுக ஆரம்பிக்கும்.
  • சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்து விடாமல் கிளறவும்.
  • நன்கு சேர்ந்து ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.
  • இறக்குவதற்கு சற்றுமுன் கலர் (நான் சேர்க்கவில்லை.), ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், உடைத்த அல்லது நொறுக்கிய கொட்டைப் பருப்புகள் சேர்க்கவேண்டும்.

* பல தளங்களில் கோதுமை மாவு ஒரு பங்கு சேர்ப்பதாக இருக்கிறது. இது எனக்குச் செய்தி. ஒருவேளை இப்பொழுது திருமணம் மாதிரி பெரிய விசேஷங்களிலும் செய்வதால் அளவிற்காக கோதுமை மாவு சேர்க்கிறார்களா என்று தெரியவில்லை. எதற்கும் சேர்க்காமல் ஒருமுறை செய்துபார்த்து அதன் ஒரிஜினல் சுவையை அனுபவித்துவிட்டு விரும்பினால் மாவு சேர்த்தும் செய்யலாம் என்பது என் அக்கறை கலந்த ஆலோசனை.

* எனக்கு இந்த முறையே வசதியாக இருப்பதாலும் பிடித்திருப்பதாலும் ஒவ்வொரு தீபாவளிக்கு முன்தினமும் (லக்ஷ்மி பூஜைக்கு பயத்தம்பருப்பு சேர்த்து செய்யநினைத்து) இருக்கிற பூஜை, கொண்டாட்ட நெருக்கடியில் விரைவாகச் செய்யமுடிவதாலும் இப்படியே செய்துவருகிறேன்.

* அறுசுவை நடராஜன் குறிப்பு ‘சம்பா‘ கோதுமை மாவு சேர்த்தது; பாலுக்கு பதில் கோவா. அடுத்து வருகிறது.

தேவையான பொருள்கள்:

மைதா – 2 கப்
வெண்ணெய் – 100 கிராம்
பேக்கிங் பவுடர் – 1/4 டீஸ்பூன்
சமையல் சோடா – 1 சிட்டிகை
தயிர் – 2 டீஸ்பூன்
சர்க்கரை – 4 கப்
தண்ணீர் – 2 கப்
எலுமிச்சைச் சாறு
ஏலக்காய் – 5 (அல்லது வேறு எசென்ஸ்)
கேசரிப் பவுடர் அல்லது வேறு கலர் – விரும்பினால்

 

செய்முறை:

  • ஒரு அகலமான பாத்திரத்தில் மைதாவுடன் பேக்கிங் பவுடர், சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்..
  • வெண்ணெய், (ஃப்ரிட்ஜில் இருந்தால் அறைச்சூட்டிற்குக் கொண்டுவரவும்.) தயிர் சேர்த்து நன்கு கையால் பிசிறவும்.
  • தேவைப்படும் அளவு மட்டும் (மிகக் குறைவாகவே தேவைப்படும்.) தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்திற்குப் பிசைந்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு நன்கு அடித்துப் பிசையவும். நல்ல பாடல் கேட்டுக்கொண்டே*** செய்தால் சிரமம் தெரியாது.
  • பிசைந்த மாவை அப்படியே பத்து நிமிடங்களுக்கு வைத்துவிட்டு அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஜீரா தயாரிக்கவும்.
  • சர்க்கரை கரைந்து கையில் ஒட்டும்பதம் வரும்போது (பாகுப் பதம் வந்துவிடக் கூடாது.) அடுப்பை அணைத்து, ஏலப்பொடி, எலுமிச்சைச் சாறு, விரும்பினால் நிறப்பொடி கலந்து ஆறவிடவும்.
  • (பாதுஷாவின் உருவம் அவரவர் விருப்பம்தான். எனவே நான் படத்தில் உள்ளபடி செய்திருப்பதை மட்டும் சொல்கிறேன்.) பிசைந்துவைத்துள்ள மாவில் பாதியை எடுத்து தடித்த சப்பாத்தியாக உருட்டிக்கொள்ளவும்.
  • ஒரு வட்ட மூடியை எடுத்து சப்பாத்தியில் வட்டங்களை வெட்டிக்கொள்ளவும். வட்டங்கள் தவிர்த்து பிற மாவை நீக்கிவிடவும்.
  • இன்னொரு உள்வட்ட மூடியால் அந்த வட்டங்களின் நடுவே லேசாக மேலாக அழுத்தவும். (அடிவரை அழுத்தி உடைத்துவிடக் கூடாது.) ஒரு பிளாஸ்டி ஃபோர்க்கால் வெளிப்பகுதியில் கோடுகளும், உள் வட்டத்தில் புள்ளிகளும் அதிகம் அழுத்தாமல் குத்திக்கொள்ளவும். இப்படியே மொத்த மாவையும் தயாரித்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும், ஒரு சிறு உருண்டையைப் போடவும். உருண்டை கொதித்து, பொரிப்பொரியாக மேலே வந்தால் அதுவே எண்ணெய்ச் சூட்டின் சரியான பதம்.
  • அடுப்பை அணைத்துவிட்டு ஒவ்வொரு பாதுஷாவாக- சுமார் ஏழு அல்லது எட்டு-  மெதுவாக எண்ணெயில் போடவும். போட்டவுடனே அடியில் போய், பின் ஒவ்வொன்றாக மேலே வர ஆரம்பிக்கும்.
  • எல்லா பாதுஷாவும் மேலே வந்துவிட்டதா என்று சரிபார்த்தபின்பே அடுப்பைத் திரும்ப எரியவிட்டு சிம்மில் வைக்கவும்.
  • பொறுமையாக அவ்வப்போது திருப்பிவிட்டு நிதானமாக  இரண்டு பக்கமும் பொன்னிறமாகும்வரை வேகவிட்டு எடுக்கவும். 
  • சில நொடிகள் வடிதட்டில் வைத்து எண்ணெயை வடித்துவிட்டு சூட்டுடனே, ஆறிய பாகில் மெதுவாகப் போடவும்.
  • பதினைந்து இருபது நிமிடங்கள் நன்கு ஊறி, பாதுஷா மிருதுவானவுடன் வேறு பாத்திரத்தில் எடுத்துவைக்கவும்.
  • 

* விரும்பினால் பாகின் பிசுபிசுப்பு ஆறுவதற்குள் பாதுஷாக்களின் மேல் பொடிப்பொடியாக உடைத்த முந்திரி, பாதாம், பிஸ்தா, வெள்ளரிவிதை, குங்குமப்பூ போன்றவற்றைத் தூவலாம்.

* மேல் அலங்காரங்கள் இல்லாமல் சாதாரண வட்ட பாதுஷாவேகூட செய்துகொள்ளலாம். அது அதிக அளவில் செய்யும்போது வேகமாகச் செய்யவும் உதவும். ஆனால் அவற்றிலும் டூத்பிக் அல்லது ஃபோர்க்கால்- அடிவரை அழுத்தாமல்- மேலாகப் புள்ளிகள் குத்திக்கொள்வது அவசியம். இது எண்ணெய், ஜீரா உள்ளேபோய் முறையே நன்குவேக, சுவையைக்கூட்ட உதவும்.

* மீதமிருக்கும் ஜீராவை பாதுஷாக்களின் மேலாக இன்னும் கொஞ்சம் விடலாம். ஆனால் மீதியிருக்கிறது என்பதற்காக மொத்த ஜீராவையும் அளவுக்கு அதிகமாக விட்டுவிடக் கூடாது. அப்படிச் செய்தால் ஆறியதும் பூத்தாற்போல் இருக்கும் பாதுஷாக்கள் மேலே பாளம் பாளமாக  வெள்ளையாக- அதிகமான ஜீரா தனியாக வந்து சுவையைக் கெடுக்கும். ஜீரா தேவையான அளவு மட்டும் விட்டால் சரியாக பாதுஷாமேல் வெள்ளையாகப் பூத்துக்கொண்டு அழகாகவும், உண்பவருக்கு ஓவர் சர்க்கரை என்ற பீதியில்லாமலும் இருக்கும். ஜீரா மீதமிருந்தால் பாயசம் செய்ய உபயோகிக்கலாம்.

*** இப்பொழுதெல்லாம் பாடல் கேட்கும்போது அதை ரசிக்கமுடியாமல், இளையராஜா, “நீ நல்லவளா கெட்டவளா?” என்று கேட்டுப் போகிறார். [“யாரோ உழைக்க யாரோ அனுபவிக்கறாங்க. ஓசியில டவுண்லோடு பண்ணி இதமா கேக்குறீங்களே… அதெல்லாம் யாரோட உழைப்பு? மனசாட்சியைக் கேளுங்க, பண்றது நியாயமான்னு?” – இளையராஜா, குங்குமம் 08/11/2010 😦 ]

தேவையான பொருள்கள்:

முந்திரிப் பருப்பு – 3/4 கப்
பாதாம் பருப்பு – 3/4 கப்
கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன்
பால் – 3/4 லிட்டர்
சர்க்கரை – 1 1/2 கப்
நெய் – 1 கப்
ஏலக்காய் – 5

munthiri badam cake

செய்முறை:

  • பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து தோல்நீக்கி, காயவைத்துக் கொள்ளவும்
  • முந்திரி, பாதாம் பருப்பை மிக்ஸியில் மென்மையாகப் பொடித்துக்கொள்ளவும்.
  • பாலை அடுப்பில் வைத்து சேர்ந்தாற்போல் திரிதிரியாய் வரும் பதத்திற்குக் காய்ச்சிக்கொள்ளவும். (முற்றிலும் இறுகவேண்டாம்.)
  • அதே நேரத்தில் இன்னொரு அடுப்பில் வாணலியில் சர்க்கரையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, (தேவைப்பட்டால் சர்க்கரை கரைந்ததும் சிறிது பால்சேர்த்து அழுக்கு நீக்கி) ஒற்றைக் கம்பிப் பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
  • பாகு வந்தவுடன் பருப்புப் பொடிகள், கடலைமாவை சிறிது சிறிதாகத் தூவிக் கிளறிக்கொண்டே இருக்கவும்.
  • எல்லாப் பொடியும் கலந்து, கலவை சேர்ந்தாற்போல் வரும்போது, பால்கோவாவையும் கலந்து கிளறவும்.
  • ஏலப்பொடி தூவி, நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்த்து, தொடர்ந்து கிளறவும்.
  • நெய் பிரிந்து, கலவை ஒட்டாமல் சேர்ந்துவரும்போது நெய்தடவிய தட்டில் கொட்டி, லேசான சூடு இருக்கும்போதே வில்லைகள் போட்டு, ஆறியதும் எடுத்துவைக்கவும்.

தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 1 கப்
சர்க்கரை – 1 கப்
உப்பு – 1 சிட்டிகை
டால்டா – பொரிக்க (அல்லது நெய்/எண்ணெய்)
முந்திரிப் பருப்பு – 10
கிஸ்மிஸ் – 20
டைமண்ட் கல்கண்டு – 1 டேபிள்ஸ்பூன்
கிராம்பு
ஏலக்காய் – 4
பச்சை கற்பூரம் – 1 சிட்டிகை
மஞ்சள் கலர்

பூந்தி லட்டு

 

செய்முறை:

  • கடலை மாவைக் கட்டிகளில்லாமல் நன்கு சலித்துக்கொள்ளவும்.
  • சிட்டிகை உப்பு சேர்த்து, தேவையான நீர் கலந்து தோசைமாவு பதத்திற்குக் கரைத்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் டால்டாவைக் (அல்லது நெய்யைக்) காயவைக்கவும்.
  • பூந்திக் கரண்டி அல்லது துளைகள் உள்ள வேறு ஏதாவது பாத்திரத்தின் உட்புறமாக சிறிது எண்ணெய் தடவிவிட்டு, காய்ந்த டால்டாவிற்கு நேராகப் பிடித்து, மாவை சிறிதுசிறிதாக விட்டால் முத்துமுத்தாக விழ ஆரம்பிக்கும். (விடும்போது டால்டா நன்கு காய்ந்து, தீ மிதமான சூட்டில் இருக்கவேண்டும். குறைவான சூடோ, தீயோ இருந்தால் பூந்தி ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும்.)
  • வாணலியில் டால்டா நிறைத்து பூந்தி விழுந்ததும் நிறுத்திவிட்டு, திருப்பிவிட்டு வேகவிடவும்.
  • காராபூந்திக்குச் செய்வதுபோல் மிகவும் கரகரப்பாக ஆகும்வரை காத்திருக்காமல், வெந்ததும் சிறிது முன்கூட்டியே மென்மையான பதத்தில் எடுத்து, வடிதட்டில் கொட்டி உபரி டால்டாவை வடிக்கவும்.
  • ஒரு கனமான வாணலி அல்லது உருளியில் சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். ஒற்றைக் கம்பிப் பாகுப் பதத்திற்கு சிறிது கூடவே கொதிக்கவிட்டு ஆனால் இரட்டைக் கம்பிப் பதம் அளவு கெட்டியாகாமல் இறக்கிவிடவும். இறக்குமுன், ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ், ஒன்றிரண்டாக உடைத்த கிராம்பு, மஞ்சள் நிறம் சேர்த்துவிடவும்.
  • பாகில் டைமண்ட் கல்கண்டு, பூந்தியைக் கலந்து, கலவையில் சிறிது சூடு இருக்குப்போதே கையில் நெய்யைத் தடவிக்கொண்டு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துவைக்கவும்.

* காய் (கூம்பு) பிடிக்க நினப்பவர்கள் இங்கே சொல்லியிருப்பதைப் போல் இந்தக் கலவையிலும் காய் பிடித்துக்கொள்ளலாம்.

* ரிஃபைண்ட் எண்ணெயிலும் பூந்தியைப் பொரிக்கலாம். ஆனால் இனிப்புகளுக்கு நெய் அல்லது டால்டாவே சுவையைக் கூட்டிக் கொடுக்கும். நெய், லட்டைக் கொஞ்சம் மென்மைப்படுத்திவிடும். டால்டாவில் பொரிப்பதால் கூடுதல் மொறுமொறுப்புடன் லட்டு சுவையாக இருக்கும்.

* பச்சைக் கற்பூரம் சேர்ப்பதுதான் வீட்டுத் தயாரிப்பு என்பதன் முக்கிய அடையாளம். கொஞ்சம் உம்மாச்சி வாசனையும்.

* கிராம்பு பிடிக்காதவர்கள், ஒற்றைக் கிராம்பை உச்சியில் செருகிவிட்டால் விரும்புபவர்கள் மட்டும் சாப்பிடலாம்; மற்றவர்கள் தவிர்க்கலாம். ஆனால் என்னைப் பொருத்தவரை கிராம்பு தவிர்க்கக் கூடாத, லட்டிற்கு மட்டுமே பிரத்யேகமான முக்கியச் சுவை/வாசனை.

ஆனால் விளம்பரத்தில் கொடுத்திருந்தபடி ஜெயமோகனார் எழுதியது எதுவும் இல்லை. அதனால் ஜெயஸ்ரீ கோவிந்தராஜனும் எழுதவில்லை(சமையல் மாமி அக்கா ). இவர்களை ஈடுகட்டுவதற்காக இன்னும் அதிகமான பேரை எழுதவைத்திருக்கிறார்கள். அப்படியும் முதல் இதழ் ஜெ’ஜெ’ன்னு இல்லை

— இட்லிவடை.

இணையத்தில் பொதுவாக எந்த நேர்மையையும் ஓரளவிற்குமேல் எதிர்பார்ப்பதில்லை என்றாலும், ஊர்ல சொல்றது சொலவடை, உண்மையைச் சொல்றது இட்லிவடை என்றெல்லாம் ‘பன்ச்லைன்’ வைப்பவர்கள் சம்பந்தப்பட்டவர்களையும் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு எழுதினால் வைத்த லைனுக்கு நீதியாக இருக்கும். மீண்டும் மீண்டும் இதைச்  சொல்ல வேண்டியிருப்பது கூட  எரிச்சலாக இருக்கிறது. 

—-

‘எனிஇந்தியன்’ பதிப்பகத்தின் ‘வார்த்தை’ மாத இதழுக்கு அனுப்பி, பிரசுரிக்கப்படாத உணவுக் குறிப்பு.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1/2 கப்
புழுங்கல் அரிசி – 1/2 கப்
பாசிப் பருப்பு – 1/4 கப்
பச்சைப் பயறு – 1/4 கப் (தோலுடன்)
கடலைப் பருப்பு – 1/2 கப்
கோதுமை – 1/4 கப்
வெல்லம் – 2 1/2 கப்
தேங்காய்த் துண்டுகள் – 1/4 கப்
சுக்குப் பொடி – 1/2 டீஸ்பூன்
ஏலப் பொடி – 1 டீஸ்பூன்
நெய் – 1 டேபிள்ஸ்பூன்

poruL viLangaa uruNdai

செய்முறை:

  • பச்சரிசி, புழுங்கல் அரிசி, பாசிப் பருப்பு, பச்சைப் பயறு, கடலைப் பருப்பு, கோதுமை இவற்றை தனித் தனியாக வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
  • எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அல்லது மிஷினில் நைசான மாவாக அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயை மிகச் சிறுசிறு துண்டுகளாக்கி சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.
  • வெல்லத்தை ஒரு கப் தண்ணீர் சேர்த்து கம்பிப் பாகாகக் காய்ச்சிக் கொள்ளவும்.
  • இறக்கும் முன் சுக்குப் பொடி, ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கொள்ளவும்.
  • பாகில் மாவைக் கொட்டி, கட்டிகளில்லாமல் கலந்துகொள்ளவும். 
  • கையில் நெய்யைத் துடைத்துக் கொண்டு, சூட்டோடு வேகமாக உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • 4, 5 உருண்டைகளாக இடையிடையே ஒரு சுளகில் அல்லது முறத்தில் இட்டுச் சுழற்றினால் ஒன்றோடு ஒன்று இடித்து, நன்றாக உள்ளே இறுகிக் கொள்ளும்.
  • பாதி செய்துகொண்டிருக்கும்போதே கலவை இறுகி எடுக்கவரவில்லை என்றால், மீண்டும் அடுப்பில் சிம்’மில் (மட்டும்) வைத்தால் பாகு இளகி எடுக்க வரும். தொடர்ந்து மிச்ச உருண்டைகளையும் பிடிக்கலாம்.
  • ஆறியதும் ஒரு காற்றுப் புகாத டப்பாவில் எடுத்துவைத்து உபயோகிக்கவும். பதினைந்து நாள்களுக்குக் கெடாது. சாப்பிட்டால் நீண்டநேரம் பசிக்காது.

* உடல்வலிமைக்கு, விரதங்களுக்கு, பிரயாணங்களுக்கு ஏற்றது.

—-

பின்நவீனத்துவ கவிதைக்கும் பொருள்விளங்கா உருண்டைக்குமான ஒரு ‘அடுப்படி‘ வாசகியின் புரிதல்கள்….

பொவிஉ – முப்பாட்டிக்கும் மூத்த தமிழ்ப்பாட்டிகள் செய்துவந்த உருண்டை.
பிநக – இன்னமும் எழுத்தாளர்களே இன்னதென்று விளங்க முடியாத சண்டை.

பொவி – எங்குமே அதிகம் காணக் கிடைப்பதில்லை.
பிநக – சிறுபத்திரிகைகளில் மட்டும் விலைபோகும்.

பொவிஉ – உடல்நலத்திற்கு ஏற்றது.
பிநக – மனநலத்தைக் கெடுப்பது.

பொவிஉ – செய்தவன் தவிர ருசிப்பவனுக்கு உள்ளிருக்கும் பொருளைச் சொல்ல முடியாது.
பிநக – எழுதியவன் தவிர படிப்பவனுக்கு உள்ளிருக்கும் பொருளைச் சொல்ல முடியாது.

பொவிஉ – கடிப்பதில் தேங்காய் ஒன்று மட்டுமே புரியும்.
பிநக – படிப்பது தமிழ் என்று மட்டுமே புரியும்.

பொவிஉ – வழமையாக உபயோகிக்கும் தானியங்களில் வகைக்குக் கொஞ்சமாக அள்ளிப் போட்டுக்கொள்ள வேண்டியது.
பிநக – வழமையிலேயே இல்லாத வார்த்தைகளாக வகைவகையாக அகராதியிலிருந்து அள்ளிப் போட்டுக்கொள்ள வேண்டியது.

பொவிஉ – தானியங்கள் சிவக்க வறுக்கப்பட்டிருக்க வேண்டும்.
பிநக – எண்ணம், பொருள், ஏவல் எல்லாமே சிவப்புச் சாயம்தான். (காதல் கவிதைகள் பரீட்சார்த்த தோல்வி என்று கேள்வி.)

பொவிஉ – அரிசி, பருப்பு, கோதுமை அடிப்படையில்  முக்கியம்.
பிநக – அல்குல், யோனி, முலை, குறி அதிமுக்கியம்.

பொவிஉ – பாகு முற்றும்முன் துரிதமாக உருண்டைகளைப் பிடித்து முடித்துவிட வேண்டும்.
பிநக – மனநிலை முற்றியபின் மிகத் துரிதமாக எழுத ஆரம்பித்து முடித்தும் விட வேண்டும்.

பொவிஉ – தாமதமாக்கினால் பாகு மாவுடன் பிடித்துக்கொண்டு உருண்டை பிடிக்கவராது.
பிநக – தாமதமாக்கினால் எழுத்தாளனே தன் அபத்தத்தைப் புரிந்துகொண்டு எழுதவராது.

பொவிஉ – கடப்பாரையால் உடைத்தல் அவசியம்.
பிநக – கட்டுடைத்தல் அதன் குணாதிசயம்.

பொவிஉ – உருட்ட முடிந்தால் மட்டுமே அது பொருள்விளங்கா உருண்டை
பிநக – படிக்க முடியாவிட்டால் அது பொருள்விளங்கா மரமண்டை. (இந்த வாசகி மாதிரி!)

ஏற்கனவே சொல்லியிருக்கும்  பாகு செலுத்திச் செய்யும் அப்பம் தான் கார்த்திகைக்கும் செய்வார்கள். ஒரு மாறுதலுக்காக இதையும் நான் அடிக்கடி செய்வேன்.

paal appam 1

தேவையான பொருள்கள்:

ரவை – 1 கப்
மைதா – 1 கப்
சர்க்கரை – 1 கப்
பால் – 1 கப்
தேங்காய் – 2 பத்தை
ஏலப்பொடி
எண்ணெய்

செய்முறை:

  • ரவை, மைதா, சர்க்கரை, பால், ஏலப்பொடி எல்லாவற்றையும் சொல்லியிருக்கும் அளவு மட்டும் கலந்து, கையால் கட்டியில்லாமல் கரைத்து, (சர்க்கரையைக் கரைக்க வேண்டாம், அதுவே கரைந்துவிடும்.) அப்படியே 4 மணி நேரம் வைக்கவும்.
  • இரண்டு பத்தை தேங்காயை மெலிதாக, பொடிப் பொடியாகக் கீறிக் கொள்ளவும்.
  • நான்கு மணி நேரம் கழித்து தேங்காயையும் கலவையில் கலந்து, தேவைப்பட்டால் இன்னும் சிறிது பால் கலந்து கெட்டியான அப்ப மாவுப் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, ஒரு கரண்டியால் சிறிது சிறிதாக மாவை எடுத்துவிட்டு, நிதானமான குறைந்த தீயில் இருபுறமும் பொன்னிறமாகச் சிவந்ததும் எடுக்கவும்.

paal appam 2

* சனிக்கிழமை போன்ற நாள்களில் ஒரு டீஸ்பூன் வறுத்த எள்ளும் சேர்த்துக் கொள்ளலாம்.

* அப்பத்திற்கு கொஞ்சம் அதிக எண்ணெயும் அதிகப் பொறுமையும் குறைந்த தீயும் தேவை. எண்ணெயை அதிகம் குடிக்காது. ஆனால் அதிக எண்ணெய் இருந்தால் நன்றாக அசைந்து மூழ்கி, வேகும்.

* புதிதாகச் செய்பவர்கள், பாகு, பதம் என்றெல்லாம் குழம்புபவர்கள், ஆண்கள் கூட இதைச் சுலபமாகச் செய்யலாம். மேலே மொறுமொறுப்பாகவும், உள்ளே மென்மையாகவும் சுவையாக இருக்கும். திகட்டாது.

* அப்பக்குழியிலும் செய்யலாம்.

முன்பெல்லாம் பாட்டி காலத்தில் எங்கள் வீட்டில் நெல்லை மணலோடு சேர்த்து வறுத்து, மணல் சூட்டோடு நெல் பொரிந்ததும் மணலைச் சலித்து, நெல் உமியை சுளகில் புடைத்து நீக்கி, அப்புறம் இருக்கும் பொரியையும் நாங்களெல்லாம் உட்கார்ந்து நெல் இருந்தால் பொறுக்க வேண்டும். வீட்டிலேயே செய்வது மிக மிக அதிக நேரம் எடுக்கும் வேலையாக இருந்தது. இதில் பாட்டியின் ஆசார கெடுபிடி வேறு. இப்போது கடைகளில் கிடைக்கும் பொரியை வாங்கிச் செய்தேன். அதிலும் ஓரளவு நம் திருப்திக்கு, நெல் கலந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டியிருக்கிறது. அவ்வளவுதான்.

தேவையான பொருள்கள்:

நெல் பொரி – 3 கப்
வெல்லம் – 1 கப்
சுக்குப் பொடி – 1/2 டீஸ்பூன்
கொப்பரை அல்லது தேங்காய்
ஏலத்தூள்
நெய்

nelpori urundai (thirukkaarththigai)

செய்முறை:

  • நெல் பொரியை நெல், உமி இல்லாமல் சுத்தமாக்கிக் கொள்ளவும்.
  • கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை சிறிது சிறிதாக மிக மெலிதாகக் கீறி ஒரு டீஸ்பூன் நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் ஒரு பெரிய வாணலியில் வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து வைத்து, நன்கு முற்றிய கெட்டிப் பாகாக வைத்துக் கொள்ளவும். (தண்ணீரில் போட்டு வெளியே எடுத்து தட்டினால் ‘ணங்’ என்று சத்தம் கேட்க வேண்டும்.)
  • பாகு வருவதற்கு முன் ஏலப்பொடி, சுக்குப் பொடி சேர்க்கவும்.
  • பாகு வந்ததும், தேங்காய்த் துண்டுகளைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • நெல் பொரியை வேகமாக பாகில் முழுமையாகக் கலக்கவும்.
  • கையில் நெய் துடைத்துக் கொண்டு, வேண்டிய அளவில் உருண்டைகளாகப் பிடிக்கவும். அதிகம் அழுத்தி, பொரியை உடைக்காமல், மென்மையாக ஆனால் நன்றாக அழுத்தமாகப் பிடித்தால் சேர்ந்தாற்போல் வரும்.
  • 4, 5 உருண்டைகளாக இடையிடையே ஒரு சுளகில் அல்லது முறத்தில் இட்டுச் சுழற்றினால் ஒன்றோடு ஒன்று இடித்து, நன்றாக உள்ளே இறுகிக் கொள்ளும். (பாட்டி காலத்தில் இந்த வேலை எல்லாம் எனக்குத் தான் வரும். சுளகு சுத்தவே இல்லை, உன் உடம்பு தான் சுத்துது என்று கிண்டல் செய்வார்கள்.)
  • பாதி செய்துகொண்டிருக்கும்போதே கலவை இறுகி எடுக்கவரவில்லை என்றால், மீண்டும் அடுப்பில் சிம்’மில் (மட்டும்) வைத்தால் பாகு இளகி எடுக்க வரும். தொடர்ந்து மிச்ச உருண்டைகளையும் பிடிக்கலாம்.
  • ஆறியதும் ஒரு காற்றுப் புகாத டப்பாவில் எடுத்துவைத்து உபயோகிக்கவும்.

கூம்பு:

என் பாட்டியெல்லாம் கையாலேயே முதலில் சாஸ்திரத்திற்கு இரண்டு கூம்பைப் பிடித்துவிடுவார்கள். எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லாததால் கூம்பில் தான் செய்தேன்.

  • கூம்பில் உள்ளே நன்றாக நெய்யைத் தடவிக் கொள்ளவும்.
  • சிறிது கலவையை உள்ளே போட்டு, ஒரு குழிவான(வட்டமான) கரண்டியால் நன்கு அழுத்திவிட்டு, பிறகு இன்னும் கொஞ்சம் கலவையைச் சேர்த்து, மீண்டும் அழுத்த வேண்டும். இதேபோல் சிறிதுசிறிதாக கலவையைச் சேர்த்து அழுத்திக் கொண்டே வரவேண்டும்.
  • கூம்பு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் நமக்கு வேண்டிய உயரம்(அளவிற்கு) அடைத்து விட்டு நிறுத்திக் கொள்ளலாம். அடைத்து முடித்ததும் அப்படியே படுத்தவாக்கில் வைக்கலாம், அல்லது அதில் இருக்கும் வளையத்தை ஒரு ஆணியில் மாட்டலாம். எப்படியும் ஆறும்வரை அதன் வாய்ப்பகுதி திறந்துதான் இருக்க வேண்டும்.
  • இரண்டு மூன்று மணி நேரம் கழித்து, நன்கு ஆறியதும் ஒரு செய்தித்தாளில் கவிழ்த்து வைத்து, ‘டங்’ என்று தட்டினால் ஒன்றிரண்டு தட்டலிலேயே கூம்பு பிரிந்து கீழே விழுந்துவிடும்.

மைசூர்பா செய்ததன் பரிகாரமாக கால் ஸ்பூன் நெய்யில் தேங்காய் பர்பி.

தேவையான பொருள்கள்:

தேங்காய்த் துருவல் – 1 கப்
சர்க்கரை – 1 கப்
பால் – 2 டேபிள்ஸ்பூன்
கோவா – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
ஏலப்பொடி
முந்திரி, பாதாம், பிஸ்தா –  தலா 4
குங்குமப்பூ

thengaai barfi

செய்முறை:

  • தேங்காயை அதன் அடிப்பாகம்(தோல்) இல்லாமல் வெண்மையான பாகத்தை மட்டும் துருவிக் கொள்ளவும்.
  • துருவிய தேங்காயை 2 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். (பொதுவாக துருவிய தேங்காயை அப்படியே பர்பி செய்தால் சாப்பிடும் போது முதலில் சர்க்கரை வாயில் கரைந்து, கடைசியில் தேங்காயைத் தனியாக சக்கையாய் சாப்பிட வேண்டியிருக்கும். அரைத்தால் அந்தப் பிரச்சினை இல்லை.)
  • அடுப்பில் வாணலியில், அரைத்த தேங்காய் விழுது, சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளற ஆரம்பிக்கவும்.
  • கிளறக் கிளற இறுகி வர ஆரம்பிக்கும்போது கோவா சேர்த்து மேலும் கிளறவும். பர்பி, மிகவும் தூளாக கரகரப்பாக இல்லாமல் இருப்பதற்கு இப்படி சிறிது கோவா சேர்த்தால் மென்மையாக வரும்.
  • வாணலியில் ஒட்டாமல் வரும்போது ஏலப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி அழுத்தாமல் பரத்தவும்.
  • மிகச் சிறிய துண்டுகளாக முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகளை நறுக்கி, குங்குமப்பூவும் சேர்த்து மேலே தூவி, கொஞ்சம் ஆறியதும் வில்லைகள் போடலாம்.

* விரும்பினால் திருமணம், இதர விசேஷங்களுக்கு விதவிதமான கலர் சேர்த்துக் கொள்ளலாம். விதவிதமான டிசைன்களிலும் வெட்டலாம். எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுக்கும்.

இது விஜயதசமியன்று ஹயக்ரீவருக்காகச் செய்யப்படும் உணவு. மற்றும் பள்ளிக்கு புதிதாக குழந்தைகளை அனுப்பும்(வித்யாரம்பம்) நாளன்றும் செய்து ஹயக்ரீவரை வழிபடலாம்.

தேவையான பொருள்கள்:

கடலைப் பருப்பு – 1 கப்
பால் – 2 கப்
தேங்காய் – 1 மூடி
வெல்லம் – 1 கப்
நெய் – 1/4 கப்
முந்திரிப் பருப்பு
கிஸ்மிஸ்
ஏலப்பொடி
பச்சைக் கற்பூரம்

hayagreeva

செய்முறை:

  • கடலைப் பருப்பை சிறிது வறுத்து விட்டு குக்கரில் குழைவாக வேகவைத்து, மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் பாலை வைத்து சுண்டக் காய்ச்சி, வெல்லம், தேங்காய்ப் பால், மசித்த கடலைப் பருப்பு, பாதி நெய் விட்டு மிதமான தீயில் கிளறவும்.
  • கலவை இறுகி அல்வா பதம் வந்ததும் மேலும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
  • மீதி நெய்யில் ஒடித்த முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பொரித்துச் சேர்க்கவும்.

* ஒரு கப் கடலைப் பருப்பிற்கு ஒன்றிலிருந்து ஒன்னேகால் கப் சர்க்கரை என்ற அளவில் சர்க்கரையிலும் செய்யலாம்.

-0-
 
திருவஹீந்திரபுரம்:

கடலூரிலிருந்து மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தலம். தேவநாதப் பெருமாள், ஹேமாம்புஜவல்லித் தாயார்; கோயில் 108 திவ்ய க்ஷேத்திரங்களில்(நடுநாட்டுத் திருப்பதி) ஒன்று; கருடநதி, சேஷ தீர்த்தம் என்ற நீர்நிலைகளால் புகழ்பெற்றவை என்றாலும் அதைவிட இங்கிருக்கும் ஆஷாட மலை (ஆஞ்சநேயர் யுத்த நேரத்தில் சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கிச் செல்கையில் கீழே விழுந்த ஒரு துண்டு மலையாதலால், இந்த மலைக்கு மருத்துவ குணம் உள்ளதாகச் சொல்கிறார்கள்.) ஹயக்ரீவரும், நிகமாந்த மஹா தேசிகர் சன்னதியும் மேலும் சிறப்புப் பெற்றவை.

இங்கே தனது இளம்வயதில் கருட மந்திரத்தை ஜபித்து, கருடரை தரிசித்த தேசிகர், அவராலேயே ஹயக்ரீவ மந்திரம் உபதேசிக்கப்பட்டு, விஷ்ணுவை இங்கே ஹயக்ரீவராகக் (ஞானத்திற்கான தெய்வம், சரஸ்வதிக்கே ஞானம் தந்தவர்) கண்டு அருளப்பெற்றவர். தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் பாண்டித்யம் பெற்ற தேசிகர் தன் வாழ்வில் முக்கியமான நாள்களை இங்கே தங்கியும், முக்கிய பாசுரங்களை இங்கே இயற்றவும் செய்தவர். அவர் வாழ்ந்த வீடு இன்றும் தேசிகன் திருமாளிகையாகவும், கட்டிய கிணறும் இன்னும் இங்கே இருக்கிறது.

hayagriva

தேசிகர் புரட்டாசி திருவோணத்தன்று ரத்னாங்கியில் ஒவ்வொரு படியாக மலையேறி ஹயக்ரீவரை தரிசிக்கச் செல்கிறார். ஹயக்ரீவருக்கு ஸ்ரவண பௌர்ணமியும்(அவதார தினம்), நவராத்திரி ஒன்பதாம் நாள் மஹாநவமியும் விசேஷம். விஜயதசமி அன்று அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் தங்கள் மற்றும் தங்கள் குழந்தைகளின் வித்யாரம்பத்தை இங்கே மலையேறி ஹயக்ரீவரை வழிபட்டே துவங்குகின்றனர்.

இவர்களை வணங்கி நாமும் நமது நல்ல செயல்களைத் துவங்கலாம்!

வடகலை தென்கலை பேதங்களா, அதெல்லாம் நான் பார்த்ததேயில்லையே என்று சொல்லும் இளையவர்கள், அதெல்லாம் முந்தி, இப்ப போயே போச்! போயிந்தே, Its gone என்று சொல்லிக் கொண்டிருக்கும் முதியவர்கள் இங்கே சென்றுவரவும். :Lol: :(((

நவராத்திரி வெள்ளிகிழமை, பெண் வயதுக்கு வருவது, சீமந்தம் போன்ற விசேஷங்களுக்குச் செய்யும் இனிப்பு வகை உணவு.

arisi puttu (salladai for premalatha)arisi puttu (maavu)

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்
வெல்லம் – 2 கப்
நெய் – 1/2 கப்
முந்திரிப் பருப்பு – 100 கிராம்
கொப்பரைத் தேங்காய் – 1/2 மூடி
ஏலப்பொடி

arisi puttu

செய்முறை:

  • பச்சரிசியை நன்றாக நீரில் களைந்து, நீரை வடியவைக்கவும்.
  • மிக்ஸியில் பொடித்து நைஸ் மாவாக அரைத்து, மாவு அல்லது மைதாச் சல்லடையில் சலித்துக் கொள்ளவும். (மேலே தங்கியிருப்பதை மீண்டும் மீண்டும் மிக்ஸியில் போட்டு அரைத்தால் ஒரு டீஸ்பூனுக்கு மேல் அரிசி ரவை மிஞ்சாது.)
  • அடுப்பில் வாணலியில் சிறிது சிறிதாக சலித்த மாவைப் போட்டு நல்ல சிவப்பாக வறுத்து ஒரு தாம்பாளத்தில் ஆறவிட வேண்டும்.
  • ஆறியதை மீண்டும் நைஸ் சல்லடையில் சலித்து கட்டிகளை உடைத்துக் கொள்ளவும்.
  • நல்ல கொதிக்கும் வெந்நீராக வைத்து, அதை மாவில் சிறிது சிறிதாகத் தெளித்துப் பிசிறவும்.(கை சுடும்!) தண்ணீர் அதிகம் சேர்த்துவிடக் கூடாது. மாவு, பிடித்தால் பிடிபடவும், உதிர்த்தால் உதிரவும் வேண்டும். இப்படித் தண்ணீர் சேர்க்கும்போதே ஓரளவு மாவு பொரிந்து பெரிதாகும். இதை அப்படியே ஒரு பாத்திரத்தில் அழுத்தி வைத்து முக்கால் மணி நேரம் வைக்கவும்.
  • மறுபடியும் கொஞ்சம் பெரிய ரவைச் சல்லடையில் (இப்போது மாவு அளவில் பெரிதாகி இருப்பதால்) சலித்து, கட்டிகளை நீக்கி, மாவை ஒரு துணியில் முடிச்சிட்டு ஒரு பாத்திரத்தில் வைத்து, குக்கரில் வெயிட் போடாமல் இட்லி மாதிரி அல்லது இட்லி வாணலியில் ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். (முடிச்சிடாமல் ஒரு அகலமான பாத்திரத்தில் துணியை விரித்து மாவைக் கொட்டி, நாலு பக்கமும் வெளித் தெரியாமல் மூடினாலும் போதும்.)
  • குக்கர் அணைத்த அடுத்த விநாடியே மூடியைத் திறந்து,  பாத்திரத்தை (உள்ளிருக்கும் மாவோடு) வெளியே எடுத்துவிடவும். (குக்கர் மூடியை உடனே திறக்காமல் வைத்தால் மூடியில் இருக்கும் நீர் துணிமீது விழுந்து, ஆங்கே மாவுக்கும் பொசிந்து, கட்டி தட்டிவிடும். 😦
  • துணியைப் பிரித்து, வெந்த மாவை ஒரு தாம்பாளத்தில் கொட்டி, பாதி நெய்யையும் உருக்கிச் சேர்த்து கையால் உதிர்த்துக் கொள்ளவும். அதிக யத்தனமுமில்லாமல் மாவு தானே உதிரும்.
  • தேங்காயை மிக மெலிதாகக் கீறிக் கொள்ளவும். முந்திரியை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
  • ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரி தேங்காய்த் துண்டுகளைப் பொரித்துவைத்துக் கொள்ளவும்.
  • நல்ல பாகு வெல்லத்தை அரை கப் தண்ணீர் சேர்த்து முற்றிய கெட்டிப் பாகாகக் காய்ச்சவும். இறுதியில் ஏலப் பொடி சேர்க்கவும்.
  • பாகு காய்ந்ததும் இறக்கி, பொரித்த முந்திரி தேங்காய்த் துண்டுகளும், வேகவைத்து உதிர்த்து வைத்திருக்கும் மாவையும் கொட்டி நன்றாகக் கிளறவும்.
  • மீதி இருக்கும் நெய்யையும் உருக்கிச் சேர்க்கவும். 

* 2 கப் அரிசிக்கு சுமார் 6 கப் புட்டு கிடைக்கும்.

* பச்சரிசியை வறட்டு மாவாக மிஷினில் அரைத்து வந்து, வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு நல்ல சிவப்பாக வறுத்து, தொடர்ந்து மேலே சொல்லியுள்ளபடியும் செய்யலாம்.

 நவராத்திரி நாயகி: ஸ்ரீரங்கநாயகி ஷைலஜா

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு – 1 கப்
வெல்லம் – 1/2 கப்
ரவை – 1 டேபிள்ஸ்பூன்
மைதா – 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 1/4 கப்
ஏலப்பொடி
எண்ணெய்

செய்முறை:

  • கோதுமை மாவை நன்கு சலித்துக் கொள்ளவும்.
  • சிறிது தண்ணீர் விட்டு வெல்லத்தை அதில் கரைத்துக் கொள்ளவும்.
  • அதில் கோதுமை மாவு, ரவை, மைதா, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி சேர்த்து தேவைப்பட்டால் இன்னும் சிறிது நீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும், ஒரு கரண்டியால் மாவை எடுத்து விட்டு, இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

* அப்பக் குழியிலும் செய்யலாம்.

* விரும்புபவர்கள் நன்கு பழுத்த ஒரு வாழைப்பழத்தையும் நன்கு மசித்துக் கலந்து கொள்ளலாம். மிகுந்த மென்மையாக வரும்.

நவராத்திரி சிறப்புக் கட்டுரை: சக்தி வழிபாடு – சித்ரா ரமேஷ்.

தேவையான பொருள்கள்:

கோதுமை – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
வெல்லம் – 350 கிராம்
தேங்காய் – 1 மூடி
ஏலத்தூள்
எண்ணெய்
 

செய்முறை:

  • கோதுமை, உளுத்தம் பருப்பு இரண்டையும் தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து, நீரை வடிக்கவும்.
  • இவற்றுடன் வெல்லம், தேங்காய் சிறிது தண்ணீர் சேர்த்து, நன்கு அரைத்து இட்லி மாவுப் பதத்தில் எடுக்கவும்.
  • ஏலப்பொடி கலந்து கொள்ளவும். 
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும், ஒரு கரண்டியால் மாவை எடுத்து விட்டு, இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

* அப்பக் குழியிலும் செய்யலாம்.

* உளுத்தம் பருப்பு சேர்ப்பதால் மென்மையாக இருக்கும்.

நவராத்திரி நாயகி: கரூர் மாரியம்மன் – துளசி கோபால்.

சிலர் முழுமையாக எள்ளையே உபயோகித்து உருண்டை செய்து பிறருக்குக் கொடுக்கவோ, பிறர் அதை வாங்கவோ, வாங்கினாலும் அதன் கொழுப்புச் சத்து காரணமாக உண்ணவோ தயங்கலாம். அவர்கள் சுவையாக இந்த உருண்டையை, பெயரளவில் மட்டும் எள் சேர்த்துச் செய்யலாம். சுவை, குழந்தைகளுக்கும் பிடிக்கும்.

தேவையான பொருள்கள்:

நிலக்கடலை – 100 கிராம்
பொரி – அரை லிட்டர்
பொட்டுக் கடலை – 50 கிராம்
கொப்பரைத் துண்டுகள் – சிறிது
எள் – 2 டேபிள்ஸ்பூன்
கசகசா – 2 டேபிள்ஸ்பூன்
வெல்லம் – 1/2 கிலோ
ஏலப்பொடி
சுக்குப் பொடி (விரும்பினால்)

செய்முறை:

  • நிலக்கடலையைத் தோல் நீக்கி, இரண்டாக உடைத்து, வறுத்துக் கொள்ளவும்.
  • எள், கசகசாவையும் எண்ணெய் விடாமல் நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • கொப்பரையை மிகச் சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • நிலக்கடலை, பொரி, பொட்டுக் கடலை, கொப்பரைத் துண்டுகள், எள், கசகசா எல்லாவற்றையும் நன்கு கலந்து கொள்ளவும்.
  • வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து முற்றிய பாகு காய்ச்சி, ஏலப் பொடி, சுக்குப் பொடி சேர்க்கவும்.
  • பொரிக் கலவையை பாகில் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
  • சூட்டோடு கையில் அரிசி மாவு தோய்த்துக் கொண்டு சிறிது சிறிதாக எடுத்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

* பத்துப் பத்தாக உருண்டைகள் ஆனதும் ஒரு முறம் அல்லது தட்டில் போட்டு உருட்டினால் மேலும் இறுகி பிடித்துக் கொள்ளும்.

* உருண்டைகள் பிடித்துக் கொண்டிருக்கும்போதே கலவை எடுக்க வராமல் இறுகிவிட்டால் மீண்டும் லேசாக அடுப்பில் வைத்து இளக்கி, பின்னர் பிடிக்கலாம்.

* கொப்பரை இல்லாவிட்டால், தேங்காயை மிகச் சிறிய துண்டுகளாகக் கீறி சிறிது நெய்யில் பொரித்துச் சேர்க்கலாம்.

* முந்திரியை வறுத்து வைத்துக் கொண்டு, ஒவ்வொரு உருண்டை உருட்டும்போதும் ஒன்றை இடையில் வைத்தும் உருட்டலாம்.

நவராத்திரி நாயகி: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் – ஷக்திப்ரபா.

ஏற்கனவே எள் உருண்டை வெல்லத்தில் செய்வது இங்கே சொல்லியிருக்கிறேன். அதையும் செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

வெள்ளை எள் – 2 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய்
பச்சைக் கற்பூரம் (விரும்பினால்)
நெய் 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

  • வெள்ளை எள்ளை நன்கு சுத்தம் செய்து, தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • மீண்டும் தண்ணீரில் கழுவி, நீரை ஒட்ட வடித்து, வெயிலில் காயவிடவும்.
  • காய்ந்த எள்ளை மிக்ஸியில் பொடிக்கவும்.
  • சர்க்கரையையும் ஏலக்காய் சேர்த்துப் பொடித்துக் கொள்ளவும்.
  • இரண்டுடன் பச்சைக் கற்பூரமும் கலந்து, நெய்யைச் சூடாக்கி அதில்விட்டுப் பிசிறி உருண்டைகளாகப் பிடிக்கவும்.

* பொதுவாக சிலர் நவராத்திரி மாதிரி பண்டிகைகளில் முழு எள்ளை உருண்டையாகப் பிடிப்பதில்லை. அதனால் பொடியாக்கிக் கொள்ளலாம். சிலர் பொடியையும் உருண்டையாக்காமல் அப்படியே பொடியாகவே உபயோகிப்பர். அப்படியும் செய்யலாம்.

* இது அதிக நாள்கள் கெடாமல் இருக்கும். எந்த வயதினரும் தினம் ஒன்று சாப்பிட்டால் மிகுந்த பலத்தைக் கொடுக்கும்.

நவராத்திரி நாயகி: திருமீயச்சூர் லலிதாம்பிகை – ராமசந்திரன் உஷா.

அடுத்த பக்கம் »