கறி/கூட்டு


மிகக் கொஞ்சமாய் காய், சுவை குறைந்த கடுமையான காய் அல்லது கீரை வகைகள், பருப்பு வேக வைக்க நேரமின்மை, தேங்காய் அதிகம் சேர்க்க விரும்பாமை இப்படி பல காரணங்களுக்காக, இந்தக் கூட்டில் சேர்த்திருக்கும் மசாலாவை உபயோகிப்பது நல்லது. எல்லாக் குறைகளையும் மறைத்து, அடர்த்தியான கிரேவியுடன் மிகுந்த மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

தேவையான பொருள்கள்:
குடமிளகாய் – 1/4 கிலோ
வெள்ளைக் கொத்துக்கடலை – 1/2 கப்
தக்காளி – 2, 3 (விரும்பினால்) **
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை

வறுத்து அரைக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3, 4
துவரம் பருப்பு – 1 1/2 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
மல்லி விதை – 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை.

kudamilagai koththukkadalai stew

செய்முறை:

  • வெள்ளைக் கொத்துக்கடலையை தண்ணீரில் குறைந்தது 10 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.
  • குடமிளகாயை, காம்பு, குடலை நீக்கி, துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • எண்ணெயில் காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மல்லி விதை என்ற வரிசையில் சேர்த்து, நன்கு சிவக்க வறுத்து, தேங்காயுடன் மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் தாளித்து, நறுக்கிய தக்காளி, குடமிளகாயைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  • வேகவைத்த கொத்துக் கடலை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மூடி, மிளகாயை முக்கால் பதம் வேகவைத்துக் கொள்ளவும். (சட்டென வெந்துவிடும். குடமிளகாய் அதிகம் வெந்தால் சுவையாக இருக்காது.)
  • அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து மேலும் ஒரு கப் அல்லது தேவைப்பட்டால் அதற்கும் மேல் தண்ணீர் சேர்க்கவும். இந்த விழுது, அதிகத் தண்ணீர் இழுக்கும்.
  • 3, 4 நிமிடங்கள் சிம்மில் வைத்து, கலவை கொதித்து கெட்டியாகி, அடர்த்தியான கிரேவியாக வந்ததும், இறக்கி, மல்லித் தழை கலந்து உபயோகிக்கலாம்.
  • * இந்தத் தயாரிப்பை குடமிளகாய் கொத்துக்கடலைக்கு மட்டும் இங்கே சொல்லியிருந்தாலும் பொதுவாக எந்த ஒரு தனி காயுடனும், விரும்பினால் அதனொத்த பயறுடனும் சேர்த்தோ சேர்க்கமலோ செய்யலாம். கீரை வகைகளுடனும்  மிகப் பொருந்தும்.

keerai stew

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இந்த முறையில் செய்யும் மற்ற காய்கறிகள், பொதுவான சாப்பாட்டுக்கு உபயோகிக்கலாம் என்றாலும் பிரத்யேகமாக இந்த குடமிளகாய், கொத்துக்கடலை ஸ்டூ, ஃப்ரைடு ரைஸ் போன்ற தக்காளி சாதம், புளியோதரை, எலுமிச்சை, தேங்காய் சாத வகைகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். அதே மாதிரி செய்யப்படும் அரிசி சேவை வகைகளுக்கும்.
 
** எலுமிச்சை, புளியோதரை போன்ற புளிப்பு சேர்ந்த சாத வகைக்களுக்குச் செய்யும்போது, இந்தக் கூட்டில் தக்காளி சேர்க்காமல் செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

வாழைத் தண்டு – 3 கப் (நறுக்கியது)
தேங்காய் – 1 மூடி
பச்சை மிளகாய் – 5, 6
கெட்டியான மோர் – 1 கப் (புளிக்காதது)
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு
பெருங்காயம்

தாளிக்க: தேங்காயெண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

vaazhiththaNdu (cut)vaazhaiththaNdu mOr koottu

செய்முறை:

  • வாழைத் தண்டை பட்டை, நார் நீக்கி, (கருக்காமல் இருக்க)மோர் கலந்த நீரில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிப் போடவும்.
  • தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் மோர் நீரிலிருந்து பிழிந்த வாழைத்தண்டு, மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேகவைக்கவும். அடிக்கடி திறந்து கிளறிவிடவும்.
  • முக்கால் பதம் வெந்ததும் (சீக்கீரம் வெந்துவிடும்.) அரைத்த விழுதைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்களுக்கு நிதானமான தீயில் வேகவைக்கவும்.
  • இறுதியில் கடைந்த மோர் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
  • தேங்காயெண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, மல்லித் தழை சேர்த்து உபயோகிக்கலாம். (அல்லது சிறிது சாதா எண்ணெயில் தாளித்துவிட்டு, மேலாக பச்சைத் தேங்காயெண்ணெய் சேர்க்கலாம்.)

* இதே போல் சௌசௌ, பூசணி, கோஸ் போன்ற காய்களிலும் தனித் தனியாகச் செய்யலாம். ஆனால் வாழைத் தண்டில் செய்யக் கூடிய மிகக் குறைந்த வகை தயாரிப்புகளில் இது முக்கியமானது.
 
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய், பருப்பு சாதம், எள் சாதம்…

எள் சாதம் தனியாகச் செய்திருக்கிறேன். வாழைத் தண்டு மோர்க் கூட்டும் தனியாகச் செய்திருக்கிறேன். எள் சாதத்திற்கு வாழைத்தண்டு மோர்க் கூட்டு என்பது எனக்குச் செய்தி. இந்த மேட்ச் ஃபிக்சிங் kallyanakamala அவர்கள் சொன்னது. இன்று செய்துபார்த்தேன். நன்றாக இருந்தது.

தேவையான பொருள்கள்:

தக்காளிக்காய் – 1/4 கிலோ
கத்தரிக்காய் – 1/4 கிலோ
நிலக்கடலை – ஒரு கைப்பிடி 
வேகவைத்த துவரம் பருப்பு – 1/4 கப்
பால் (அல்லது தேங்காய்ப் பால்) – அரை கப்
மஞ்சள் தூள்
உப்பு
கொத்தமல்லித் தழை 

வறுத்து அரைக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4, 5
தனியா – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 1/4 கப்

தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

thakkaalikkaai kaththarikkaai koottuthakkaalikkaai paagarkkaai koottu

செய்முறை:

  • துவரம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.
  • நிலக்கடலையை ஒரு மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும் அல்லது துவரம் பருப்போடு குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
  • தக்காளிக் காய், கத்தரிக்காயை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • சிறிது எண்ணெயில் காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா என்ற வரிசையில் சேர்த்து, சிவக்க வறுத்து தேங்காயோடு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • நறுக்கிய தக்காளிக் காய், ஊறவைத்த நிலக்கடலையைச் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
  • கத்தரிக்காய், தேவையான உப்பு, மஞ்சள் தூள், சிறிது நீர் சேர்த்துக் கலந்து, மூடி, வேகவைக்கவும்.
  • கத்தரிக்காய் முக்கால் பதம் வெந்ததும், அரைத்த விழுது சேர்த்து, அரை கப் பால் அல்லது தேங்காய்ப் பால், தேவைப்பட்டால் இன்னும் நீர் சேர்த்து மேலும் இரண்டு மூன்று நிமிடங்களுக்கு சிம்மில் வைத்துக் கொதிக்கவிடவும்.
  • வேகவைத்து மசித்த துவரம் பருப்பு கலந்து மேலும் ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
  • நறுக்கிய மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

* இதே முறையில் நாட்டுக் காய்கறிகளான பாகற்காய், புடலங்காய், கொத்தவரங்காய், அவரைக்காய், போன்ற காய்களிலும், பீன்ஸ், சௌசௌ, கோஸ் போன்ற காய்களிலும் விரும்பினால் பொருத்தமான பயறுகள் சேர்த்துச் செய்யலாம்.

* நிலக்கடலை தவிர வேறு பயறுகளாக இருந்தால் எட்டுமணி நேரம் ஊறவைத்து குக்கரில் பருப்போடு வேகவைத்துச் சேர்க்க வேண்டும். இந்த முறையில், அரைத்துவிடும் பொருள்களில் 7, 8 பச்சை நிலக்கடலையும் சேர்த்து அரைக்கலாம். சுவையாக இருக்கும்.

* ஊறவைத்த பயறு தயாராக இல்லாதபொழுது ஒரு கைப்பிடி கடலைப் பருப்பையே நேரடியாக காயோடு வேகவைத்துக் கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:

பாகற்காய் – 1/4 கிலோ
கொத்துக்கடலை – ஒரு கைப்பிடி
புளி – சிறிய எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு – 1/4 கப்
தேங்காய் – 1/2 கப்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – சிறு கட்டி (விரும்பினால்)  

வறுக்க:
எண்ணெய்
காய்ந்த மிளகாய் – 4
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
தனியா – 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க: நல்லெண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

paakaRkaai pitlai

செய்முறை:

  • வெள்ளைக் கொத்துக்கடலை அல்லது சிறிய அளவு கருப்புக் கொத்துக்கடலை உபயோகிக்கலாம். ஊறவைத்த கொத்துக்கடலை, துவரம் பருப்பை குக்கரில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.
  • பாகற்காயை முற்றலாக இருக்கும் குடல் பகுதிகளை நீக்கி, சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • புளியை நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.
  • 2 டீஸ்பூன் எண்ணெயில், காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வெந்தயம், மிளகு, தனியா என்ற வரிசையில் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தேங்காயுடன் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • நறுக்கிய பாகற்காயுடன் வேகவைத்த கொத்துக்கடலை, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நிதானமான சூட்டில் புளிநீரில் வேகவைக்கவும்.
  • காய் வெந்ததும், வேகவைத்த துவரம் பருப்பு, அரைத்த விழுதைச் சேர்த்து சிம்மில் ஐந்து நிமிடங்கள் கொதிக்கவைக்கவும்.
  • விரும்பினால் வெல்லம் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள்  வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்.
  • இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சூடான நெய்(நல்லெண்ணெய்), பருப்பு சாதம்…
 

இதனை கல்யாணக் கூட்டு என்றும் சொல்வார்கள். ஒருவேளை மொத்தமாக ஒன்றிரண்டு காயை வாங்கி, உடைத்து, நறுக்கிச் செய்வது சுலபமாக இருப்பதாலோ என்னவோ, இந்தக் கூட்டு இல்லாத கல்யாணம், பெரிய விசேஷங்களே இருக்காது.

தேவையான பொருள்கள்:

பூசணிக்காய் – 1/2 கிலோ
மஞ்சள் பட்டாணி – 1/4 கப்
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
துவரம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் – 1/2 கப்
உப்பு
மஞ்சள் தூள்
கொத்தமல்லித் தழை

வறுக்க:
எண்ணெய்
காய்ந்த மிளகாய் – 3, 4
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
தனியா – 1/2 டீஸ்பூன்

தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

poosaNikkaai  puLi(kalyaana) koottu

செய்முறை:

  • ஊறவைத்த பட்டாணியையும், துவரம் பருப்பையும் குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
  • பூசணிக்காயை, தோல், குடல் பகுதி நீக்கி, சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • புளியை நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு டீஸ்பூன் எண்ணெயில் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, தனியாவை பொன்னிறமாக வறுத்து, தேங்காயுடன் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, வேகவைத்த பட்டாணி, நறுக்கிய பூசணிக்காயைச் சேர்க்கவும்.
  • புளி நீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, நிதானமான தீயில் வேகவைக்கவும். அவ்வப்போது திறந்து கிளறிவிடவும். 
  • காய் வெந்ததும், அரைத்த விழுது, துவரம் பருப்பு சேர்த்து, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து, மேலும் 2, 3 நிமிடங்களுக்குக் கொதிக்கவிட்டு, சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
  • நறுக்கிய கொத்தமல்லித் தழை கலந்து பரிமாறலாம்.

* கத்தரிக்காய், அவரைக்காய் போன்ற நாட்டுக் காய்களிலும் இந்தக் கூட்டை செய்யலாம்.

* இதில் பட்டாணி இல்லாமல் வெள்ளைக் கொத்துக்கடலை, தட்டைப் பயறு வகைகளும் அந்தந்த காய்களுக்கு ஏற்றமாதிரி உபயோகிக்கலாம். எந்தப் பயறுமே ஊறவைத்து தயாராக இல்லையென்றாலும் கடலைப்பருப்பை அரைமணி நேரம் ஊறவைத்து, காயோடு சேர்த்து வேகவிடலாம்.

* புளி மிகக் குறைவாகவே சேர்க்கவேண்டும். குழம்பு ரசத்திற்கு கரைத்து வைத்திருப்பதில் தெளிந்து மேலாக இருப்பதை எடுத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டாலும் மெனக்கெடத் தேவை இல்லை. பக்கத்தில் செய்துவைத்திருக்கும் ரசத்தின் தெளிவை மேலாக இரண்டு கரண்டி எடுத்துவிட்டுக் கொள்ளலாம். இது உண்மையிலேயே சுவையாக இருக்கும். யாராவது, “எப்டி இப்படி நீர்ப்புளியா விட்டு திட்டமா செஞ்சிருக்க?” என்று கேட்டால், ரகசியத்தைச் சொல்லாமல், ‘நானெல்லாம் பொறவிலயே அப்படித்தான்’ மாதிரி கெத்தாக இருந்துவிடவேண்டியது. 🙂
 
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் பருப்பு சாதம், ரசம், தயிர், பொடி, துவையல் சாதம்…

தேவையான பொருள்கள்:

முள்ளங்கி – 1/2 கிலோ
பயத்தம் பருப்பு – 1/4 கப்
காய்ந்த மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள்
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)

தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம்.

mullangi curry

செய்முறை:

  • பயத்தம் பருப்பைக் கழுவி, நீரில் பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  • அந்த நேரத்தில் முள்ளங்கியை (தேவைப்பட்டால்) தோலைச் சீவிக் கொண்டு, கேரட் துருவியில் பெரிய அளவாகத் துருவிக் கொள்ளவும்.
  • துருவிய முள்ளங்கியுடன் நீரை வடித்த பயத்தம் பருப்பு, உப்பு(கவனம்: முள்ளங்கி சுண்டி, அளவில் குறையும்.) சேர்த்துப் பிசிறி பத்து நிமிடங்கள் வைக்கவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு,காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம் தாளிக்கவும்.
  • கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து, அடுப்பை நிதானமான சூட்டில் வைத்து, முள்ளங்கிக் கலவையையும் சேர்த்துக் கிளறி, மூடிவைக்கவும். தண்ணீர் சேர்க்கவேண்டாம்.
  • ஒன்றிரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை திறந்து கிளறிவிட்டு, முள்ளங்கி வெந்து நீர்வற்றியதும் தேங்காய்த் துருவல், நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும். (சுமார் 5, 6 நிமிடங்களிலேயே முடிந்துவிடும்.)

* முள்ளங்கி தவிர, கேரட், கோஸ் போன்ற காய்களிலும் இந்த முறையில் கறி செய்யலாம். ஆனால் இங்கே முக்கியமாக முள்ளங்கியைச் சொல்லியிருப்பதற்குக் காரணம்– சாம்பார், ரொட்டி தவிர முள்ளங்கியை கறி, கூட்டாக செய்வதில் பலருக்கு அதன் மணம் பொருட்டு, ஆட்சேபம் இருக்கிறது. இந்த முறையில் முள்ளங்கியின் மணம் அறவே வராது.

* சின்னச் சின்ன இளமுள்ளங்கியாகத்தான் இருக்கவேண்டுமென்றில்லாமல் எவ்வளவு பெரிய, முற்றல் முள்ளங்கியில் இதைச் செய்தாலும் நன்றாக இருக்கும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

குழம்பு, ரசம் சாதம் என்றெல்லாம் அடுக்குவதற்கு முன், அப்படியே சூடாக கறியை மட்டும் தனியாகச் சாப்பிடலாம். சுவையாக இருக்கும். அதிகம் மசாலா சேர்க்காமல், அதிகம் அடுப்பில் வேகவைக்காமல், முள்ளங்கியின் மண்மணம் வராமல் செய்யக்கூடிய ஆகச் சிறந்த முறை.

தேவையான பொருள்கள்:


காலிஃப்ளவர் – அரைக்கிலோ
உருளைக் கிழங்கு – 2 (பெரியது)
பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி (விரும்பினால்)
வெங்காயம் – 1 (பெரியது)
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறுதுண்டு
பூண்டு – 4 பல்
தனியாத் தூள் – 2 டீஸ்பூன்
சீரகத் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
கசுரி மேத்தி – 1 டீஸ்பூன் (कसुरी मेथी, Kasuri Methi –விரும்பினால்)
எலுமிச்சைச் சாறு – சில துளிகள் (விரும்பினால்)
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை

தாளிக்க: எண்ணெய், சீரகம்.

Aloo Gobhi (dry)

செய்முறை:

  • உருளைக் கிழங்கை வேகவைத்து தோலுரித்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • காலிஃப்ளவரை சற்றே பெரிய துண்டுகளாகப் பிரித்துக் கொள்ளவும்.
  • இஞ்சி பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம் தாளிக்கவும்.
  • பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி, இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து சிறிது வதக்கவும்.
  • வெங்காயம் சேர்த்து, பொன்னிறமானதும், தக்காளி, காலிஃப்ளவர் துண்டுகள், வேகவைத்த உருளைக்கிழங்குத் துண்டுகளைச் சேர்க்கவும்.
  • மேலே தனியாத் தூள், சீரகத் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கால் கப் தண்ணீர் விட்டு மூடி வேகவைக்கவும்.
  • காலிஃப்ளவர் வெந்து நீர் வற்றும்வரை அவ்வப்போது திறந்து, கிளறிவிடவும்.
  • விரும்பினால் இறக்குமுன் கரம்மசாலா, கசுரி மேத்தி(कसुरी मेथी, Kasuri Methi) சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  • எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித் தழை நறுக்கிக் கலந்து பரிமாறவும்.

* கரம் மசாலா சேர்க்க விரும்பாதவர்கள் அதற்குப் பதில் மிளகாய் அல்லது மிளகாய்த் தூள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தேங்காய் சாதம், சீரக சாதம் போன்ற சாதம் வகைகளுக்கு உபயோகிக்கலாம்.

சப்பாத்தி வகைகளுக்கு மிகவும் பொருந்தும்.

தேவையான பொருள்கள்:

பச்சைப் பயறு  – 1 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 2
மஞ்சள் தூள் –  1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன் (விரும்பினால்)
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம்
எலுமிச்சைச் சாறு – சில துளிகள்
கொத்தமல்லித் தழை 

Moong dal (sprouted)
 

அரைக்க:
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறு துண்டு
தனியா = 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)

தாளிக்க: எண்ணெய், சீரகம், கறிவேப்பிலை.

moong masala (dry)

செய்முறை:

  • பச்சைப் பயறை குறைந்தது 12 மணி நேரம் நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
  • இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய், தனியா, சீரகத்தை நன்கு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு டீஸ்பூன் எண்ணெயில் சீரகம், கறிவேப்பிலை தாளித்துக் கலந்துகொள்ளவும்.
  • மேலே, அரைத்த விழுது, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைப் பயறு என்ற வரிசையில் ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.
  • தேவையான உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்து அரை கப் நீர் சேர்த்து மூடிவைத்து நிதானமான தீயில் வேவைக்கவும்.
  • அடிக்கடி திறந்து கிளறிவிட்டு, தேவைப்பட்டால் மேலும் நீர் சேர்க்கலாம்.
  • நீர் வற்றி, பயறு நன்கு வெந்து ஆனால் உடைந்து/மசிந்து விடாமல் இருக்க வேண்டும்.
  • தக்காளி சேர்த்திருப்பதால் சில துளிகள் மட்டும் எலுமிச்சைச் சாறு சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லித் தழையும் தூவிப் பரிமாறலாம்.

* முளைகட்டிய பயறாக இருந்தால் நலம். நான் அதில்தான் செய்திருக்கிறேன்.

* கரம் மசாலா சுவை விரும்பாதவர்கள், காரத்திற்கு மிளகாய்த் தூள் அல்லது பச்சை மிளகாயை அதிகமாக உபயோகித்துக் கொள்ளலாம்.

* பயறை மட்டும் தனியாக குக்கரில் வேகவிட்டு வைத்துக்கொண்டும், நீரை வடித்து, இதில் சேர்த்து வதக்கலாம்.

* இஞ்சிக்குப் பதில் சுக்குப் பொடி இருந்தாலும் உபயோகிக்கலாம். எனக்குப் பிடிப்பதில்லை.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சப்பாத்தி, ரொட்டி வகைகள், நெய் சாதம்…

தேவையான பொருள்கள்:

பச்சைப் பட்டாணி – 200 கிராம் (அல்லது முக்கால் கப் காய்ந்த பட்டாணி)
பனீர் – 200 கிராம் (அல்லது ஒரு லிட்டர் பால்)
வெங்காயம் – 3 (பெரியது)
தக்காளி – 3 (பெரியது)
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 6 பல்
முந்திரிப்பருப்பு – 6, 7
தனியா – 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலாத் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
நெய் அல்லது வெண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை
எலுமிச்சைச் சாறு – சில துளிகள்

muttar paneer

செய்முறை:

  • பச்சைப் பட்டாணியை (காய்ந்த பச்சைப் பட்டாணியாக இருந்தால் 10 மணிநேரம் நீரில் ஊறவைத்து), குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
  • ஒரு லிட்டர் பாலில் பனீர் தயாரித்துக் கொள்ளவும். (அல்லது கடைகளில் வாங்கலாம்.)
  • 2 வெங்காயம்(மட்டும்), தக்காளியை பெரிய துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வெங்காயத்தை மிகப் பொடியாக அரிந்துகொள்ளவும்.
  • இஞ்சி, உரித்த பூண்டு, முந்திரிப் பருப்பு, தனியா, 1 டீஸ்பூன் மட்டும் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து மிக நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து சீரகம் தாளித்து, வெங்காயத்தைச் சேர்க்கவும்.
  • வெங்காயம் நன்கு பொன்னிறமாகும்வரை வதக்கியவுடன், பனீர் துண்டங்களைச் சேர்த்து வதக்கவும்.
  • அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் தக்காளி விழுது இரண்டும் சேர்த்து மேலும் 2, 3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  • மேலே உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • கொதிக்க ஆரம்பித்ததும் வேகவைத்த பட்டாணியும் சேர்த்து மேலும் 5 நிமிடங்களுக்குக் கொதிக்கவிடவும்.
  • சேர்ந்தாற்போல் வரும் சமயம் இறக்கி, வெண்ணெய் அல்லது நெய் சேர்க்கவும். (ஹோட்டல்களில் சேர்க்கும் அளவு தாளிக்கும் சமயம் வெண்ணெய், எண்ணெய் சேர்க்காமல் ஆனால் மணமாக இருக்க, கடைசியில் இதைச் சேர்க்கிறோம்.)
  • பரிமாறும் சமயம் சில துளிகள் எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லித் தழை கலந்துகொள்ளவும். (ஹோட்டல்களில் உண்ணும்போதும் சில துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்த்துக்கொள்வது, புதிதாகச் செய்த உணர்வையும் சுவையையும் தரும்; அப்படி அல்ல என்பது நமக்குத் தெரியும் என்றாலும். :)]

* இஞ்சி பூண்டு விழுது, தனியாத் தூள், சீரகத் தூள் என்று தயாராக இருந்தால் அதையே உபயோகிக்கலாம். பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பை மட்டும் அரைத்துக் கொள்ளலாம். (ஆனால் பொதுவாக, அவ்வப்போது பொருள்களைச் சேர்த்து அரைப்பது அதிக மணத்தைத் தரும்.)

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சப்பாத்தி, பரோட்டா, நான் வகைகள்…

தேவையான பொருள்கள்:

கத்தரிக்காய் – 1/2 கிலோ
பயறு – 3 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
வேகவைத்த துவரம் பருப்பு – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை

வறுத்து அரைக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3, 4
தனியா – 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் – 1/2 மூடி

தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை

kaththarikkai koottu

செய்முறை:

  • துவரம்பருப்பை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
  • விரும்பினால் தட்டப்பயறை ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும். (கத்தரிக்காய்க்கு கொத்துக்கடலையும் நன்றாக இருக்கும். பயறு வகை எதுவும் சேர்க்காமலும் செய்யலாம்.)
  • கத்திரிக்காயை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • சிறிது எண்ணெயில் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, தனியா என்ற வரிசையில் சேர்த்து, சிவக்க வறுத்து தேங்காயோடு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • நறுக்கிய கத்தரிக்காயை தேவையான உப்பு, மஞ்சள் தூள், சிறிது நீர் சேர்த்துக் கலந்து, மூடி, வேகவைக்கவும்.
  • முக்கால் பதம் வெந்ததும், அரைத்த விழுது, வேகவைத்த பயறு சேர்த்து, தேவைப்பட்டால் இன்னும் நீர் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு கொதிவிடவும்.
  • வேகவைத்து மசித்த துவரம் பருப்பு கலந்து மேலும் ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
  • நறுக்கிய மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

* இதே முறையில் நாட்டுக் காய்கறிகளான கொத்தவரங்காய், அவரைக்காய், புடலங்காய் போன்றவற்றிலும் விரும்பினால் காய்க்குப் பொருத்தமான பயறு சேர்த்தோ, சேர்க்காமலோ செய்யலாம்.

நன்றி: எழுத்தாளர் நாஞ்சில்நாடன் சொன்னதாக எழுத்தாளர் ஜெயமோகன்.

”அரைக்கீரை ரொம்ப நல்லதுண்ணு சொல்லுகா ஜெயமோகன். அரைக்கீரையை நல்லா ஆய்ஞ்சு மண்ணுகிண்ணு போக சுத்தம் பண்ணி வாணலிய அடுப்பில ஏத்தி ஒரு கரண்டி தேங்காயெண்ணைய விட்டு அதில போட்டு கொஞ்சம் உப்பு தெளிச்சு நல்லா சுண்டவச்சு அப்டியே ஒரு பாத்திரத்தில கொட்டிட்டு இன்னொரு வாணலிய அடுப்பில வச்சு கொஞ்சம் எண்ணைய விட்டு கடுகு கறிவேப்பில உள்ளி போட்டு தாளிச்சு எடுத்தா சோத்துக்கு தொட்டுகிட நல்லா இருக்கும். மோருக்கு முன்னால ரசத்துக்கு பொருத்தம்….சோத்திலக்கூட போட்டுப் பிசைஞ்சி திங்கலாம்…”

அரைக்கீரை குறித்து இங்கே சொல்லியிருக்கிறேன். எனக்குத் தெரிந்து அரைக்கீரை மதுரை அளவு அதிகமாகவும் விலை மலிவாகவும் ஸ்ரீரங்கத்தில் கூட பார்த்ததில்லை. நினைவுதெரிந்து சின்ன வயதில் விடுமுறைக்கு மதுரைக்குப் போகும்போது, ஜெய்ஹிந்துபுரம் முதல் மெயின் தெருவில் 10 பைசாவுக்கு ஒரு பெரிய பை நிறைய அடைத்துக் கொடுப்பார்கள்.

முளைக்கீரை மாதிரி இதில் வேர் இருந்து படுத்தாது என்றாலும் கொஞ்சம் கட்டை எல்லாம் நீக்க வேண்டியிருக்கும். அநேகமாக பெருமளவு தண்டுப்பகுதியை நான் சேர்த்துக் கொண்டுவிடுவேன். வெறும் இலைப்பகுதியைவிட தண்டும் சேர்ந்தால்தான் கறி/கூட்டு சுவையாக இருக்கும். அதற்கும் தடிமனான தண்டுப்பகுதியையும் தனியாக எடுத்து குழப்பில் போட்டுவிடுவேன். நான் தூக்கி எறியும் பகுதி மிகமிகக் குறைவாகத் தான் இருக்கும்.

இது ஒரு பத்திய உணவு என்று தெரிகிறது. நாஞ்சில் நாடன் ஐயா, இன்னமொரு நூற்றாண்டிரும்!

தேவையான பொருள்கள்:

அரைக்கீரை
பூண்டு
உப்பு

தாளிக்க: எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை

செய்முறை:

  • அரைக்கீரையை பெரிய தண்டுப்பகுதிகளை நீக்கி, தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, உரித்த பூண்டு தாளிக்கவும்.
  • நறுக்கிய அரைக்கீரையைச் சேர்த்து நீர் விடாமல், பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
  • சுண்டியதும் இறக்கி உபயோகிக்கலாம்.

* ஒரு காய்ந்த மிளகாய், சின்னவெங்காயம் 4 உரித்துச் சேர்த்து வதக்கினாலும் சுவையாக இருக்கும். உடலுக்கு நல்லது.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் சாதம், ரசம் சாதம்.
 

வாழைத்தண்டை பாட்டியோ அம்மாவோ நறுக்குவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். அலுக்காது. வட்ட வட்டமாக நறுக்கி, ஒவ்வொருமுறையும் அரிவாள்மணையில் இழுத்துக்கொண்டு வரும் நாரை ஆள்காட்டிவிரலில் சுற்றிக் கொண்டே, அடுத்த வட்டம், அடுத்த நார்ச் சுற்று…. என்று ஓரளவு வந்ததும், கையில் இருக்கும் நாரை நீக்கிவிட்டு தொடர்ந்து…. வட்டங்களை ஐந்தாறாக அடுக்கிக்கொண்டு, சரக் சரக்கென்று குறுக்காக பொடிப்பொடியாக நறுக்கி, மோர் கலந்த நீர் உள்ள குண்டானில் போட்டுக்கொண்டே… வாழைத்தண்டு நாரை விளக்குக்கு திரி போட்டுப் பார்த்திருக்கிறேன்.

அரிவாள்மணையே தேவை இல்லாமல் கத்தியையே நம்பியிருக்கும் எனக்கும் ஒருநாள் அதன் தேவை வருகிறது என்றால் அது வாழைத்தண்டு நறுக்கத்தான். இல்லாததால் கஷ்டப்பட்டு கத்தியிலேயே நறுக்கினேன். ஒன்றும் சுகமில்லை.

தேவையான பொருள்கள்:

வாழைத்தண்டு
பயத்தம் பருப்பு – 1/4 கப்
உப்பு
மஞ்சள் தூள்
கொத்தமல்லித் தழை

தாளிக்க: எண்ணெய், காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

vaazhaiththandu curry

செய்முறை:

  • பயத்தம் பருப்பை தண்ணீரில் அரைமணிநேரம் ஊறவைக்கவும்.
  • வாழைத்தண்டை, வெளிப்பக்கம் இன்னும் பட்டை இருந்தால் நீக்கிவிட்டு, வட்டவட்டமாக நறுக்கி, இடையில் வரும் நாரை எல்லாம் நீக்கி, பின் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • நறுக்கிய காயை சிறிதளவு மோர் கலந்த நீரில் நனைத்துவைக்கவும். (கருக்காமல் இருக்க இது உதவும்.)
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • மோர்நீரிலிருக்கும் நறுக்கிய வாழைத்தண்டைச் சேர்க்கவும்.
  • ஊறவைத்த பயத்தம்பருப்பை நீரை வடித்துச் சேர்க்கவும்.
  • உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது நீர் தெளித்து மூடிவைத்து, அவ்வப்போது திறந்து கிளறிவிடவும்.
  • வாழைத்தண்டு வெந்து, நீர் ஒட்ட சுண்டியதும் இறக்கி, கொத்தமல்லித் தழை தூவி உபயோகிக்கலாம்.

* இவ்வளவு எளிமையாக சமைத்தும் ஒரு காய் இவ்வளவு சுவையாக இருக்கமுடியுமா என்று ஆச்சரியப்படுத்துவதில் வாழைத்தண்டை அடித்துக்கொள்ள வேறு காயில்லை.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

என்னைக் கேட்டால் ஹார்லிக்ஸ் மாதிரி அப்படியே சும்மா சாப்பிடலாம் என்றுதான் சொல்வேன். 🙂

நெய்சாதத்தில் பிடித்துச் சாப்பிடலாம்.

ரசத்திற்கு சுமாராகச் சேரும்.

ஆனால் மோர் சாதத்துடன் (தயிர்சாதம் இல்லை) சேர்க்கும்போது பிறந்த பயனை அடையும்.

-0-

“வாழைத்தண்டுக்கும் மோட்சம் இல்லை. அதை நல்லெண்ணை போட்டு வதக்க வேண்டும். வெள்ளரிப்பிஞ்சை நெய்யில் வதக்கி சாப்பிடுவாரா என கேட்க நினைத்து அடக்கிக் கொண்டேன். அதைக் கேட்கப்போய் புதிய ‘ரெசிப்பி’ஆகிவிடும் அபாயம் உண்டு.”

எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்.

பின்னால் சேர்த்த முன்குறிப்புசாட்

_______________________________________________________________________________

me: ஹாய் கவிஞர், There?
haranprasanna is online.

haranprasanna: (வந்துட்டாங்கப்பா. இன்விசிபிள் மோட் இல்லாத ஜிசாட் ஒழிக!) வணக்கம் ஜெயஸ்ரீ.

me: என்ன செஞ்சுகிட்டிருக்கீங்க? 🙂

haranprasanna: வண்டி துடைத்துக்கொண்டிருக்கிறேன், பார்த்தால் தெரியவில்லையா? கணினி முன்னால் அமர்ந்து ஒரு கவிஞன் என்னசெய்துகொண்டிருப்பான்? இதெல்லாம் ஒரு கேள்வியா? இன்னும் சமுதாயத்தில் எழுப்பவேண்டிய  கேள்விகளும்,  தீர்க்கவேண்டிய  பிரச்சினைகளும்  எவ்வளவோ இருக்க, இப்படிப்பட்ட கேடுகெட்ட கேள்விகளால் தான் தமிழன் இன்னும் முன்னேறாமல் இருக்கிறான். (இன்னும் சாப்பாட்டுக் கூடைக்காரரு வராம அவனவன் பசில தள்ளாடறான்.)

me: கோபமா இருக்கீங்க போலருக்கு? சாப்பிடப் போகலையா? நான் அப்றம் வரேன்.

haranprasanna: நான் என்றைக்கு சாப்பிட்டிருக்கிறேன்? கவிதைகளை சுவாசித்து கவிதைகளையே உண்டு செரிப்பவன் நான். சாப்பிடச் செல்பவர்கள் சாதாரணர்கள். நான் கவிஞன்.

me: (ஏலே, நீ மட்டும் அடுத்தவன் செரிக்கவே முடியாத கவிதையா எழுதித் தள்றியே இதையெல்லாம் கேக்க ஆளில்லையா?) அப்ப எந்நேரமும் கணினி முன்னால உக்காந்து சாப்பிட்டுகிட்டே இருக்கீங்கன்னு சொல்லுங்க. :))

haranprasanna: சமைக்கவே கருக்கலில் கண்விழித்து, சாப்பாட்டுக் குறிப்புகளுக்காக வலைப்பதிந்து, சாப்பிட்டுத் தூங்கும் உங்களுக்கு இவை புரியப் போவதில்லை. (சாப்பிடாம எனக்கு கண் இருட்டுது.)

me: எவ்வளவு பசிச்சாலும் உங்க கவிதை வேண்டாம்னு பிகேஎஸ் சொல்லியிருக்காரே, ஏன்? 🙂

haranprasanna: ஒரு வாசகராக அவர் பரந்துபட்டவராக இருக்கலாம். ஆனால் ரசிகராக அவர் இன்னும் வளரவில்லை என்பதைத்தான் அது காட்டுகிறது. இலக்கியவாதியின் கடமை சிறந்த இலக்கியங்களைப் படைப்பதோடேயே நின்றுபோகிறது. ரசிகன்தான் நாளும் வளர்பவனாக இருக்கவேண்டும். உண்மையான பசியும் உண்மையான தேடலும் வரும்போது அவருக்கு அது சாத்தியமாகலாம். காத்திருக்க வேண்டியதுதான்.

me: ஏன் இப்படி உரைநடைத் தமிழ்ல பேசறீங்க? சகஜமா என்னை மாதிரி பேசினா எனக்கும் பேச இயல்பா இருக்குமில்ல?

haranprasanna: (மவளே, உங்கிட்டேயிருந்து வெட்டிக்க இந்தத் தமிழைத்தானே நம்பியிருக்கேன். உன் உளுத்துப் போன ஸ்ரீரங்கம் தமிழ்ல என் பரணித் தமிழ் தாமிரபரணியைப் போல மாசுபடாம இருக்கவே தமிழன்னைக்கு தினம் நான் அர்ச்சனை செய்றேன்.) என் இயல்பான நடையே அப்படி இருக்க, என்னால் சாதாரணர்களைப் போல் மாற்றிப் பேச இயலாதே. அவரவர் அவரவர் இயல்பிலேயே பேசுவோம். இன்றைக்கு உங்கள் பதிவில் புதிதாக குறிப்பு எதுவும் எழுதவில்லை போலிருக்கிறதே.

me: ஆமாம். 😦 என் பதிவெல்லாம் கூட பார்ப்பீங்களா என்ன? 😉

haranprasanna: தவறாகச் சுட்டியதில் உங்கள் பக்கம் திறந்துவிட்டது. ஒரே நொடியில் மூடிவிட்டேன். நான் அங்கெல்லாம் வந்ததுமில்லை, வரப்போவதுமில்லை.

me: (ம்க்கும். இந்த பந்தால குறைச்சலில்லை.) ரொம்ப போரடிக்குது. இன்னிக்கி உங்களுக்கு என்ன பிடிக்கும்னு சொல்லுங்க. அதையே குறிப்பா போட்டுடலாம்.

haranprasanna: எனக்கு மார்த்தாண்டன், சேரன், கல்யாண்ஜி,…

me: ஐயோ நான் சமையல்ல கேக்கறேன். நீங்க சாப்பிடறதுல கேக்கலை.

haranprasanna: எனில் கவிதை சமையுங்கள் ஜெயஸ்ரீ.

me: அதெல்லாம் கடுமையான ஜுரம் வந்தாத்தான் என்னால முடியும். விளையாடாதீங்க.

haranprasanna: எத்தனை நாள் தான் இந்தப் பாழும்பெண்கள் சமையலறையைக் கட்டிக் கொண்டு அழப்போகிறார்களோ. (இவ வேற வீட்டுல இன்னிக்கு சமைச்சாளா இல்லையான்னே தெரியலையே. கார்த்தால கோபத்தை அப்படியே எக்ஸ்டெண்ட் பண்ணி பழிவாங்கிட்டாளோ?! இன்னிக்கு மதியச் சாப்பாடு வருமா வராதா?)

me: சமையல் செஞ்சா தப்பா? வீட்டுவேலையை யாராவது ஒருத்தர் செஞ்சுதானே ஆகணும்.

haranprasanna: தாராளமாகச் செய்யலாம். ஆனால் எனக்கு அவர்களிடமோ அவர்கள் பதிவுகளிலோ சொல்ல ஒன்றுமில்லை. அவ்வளவுதான். அப்புறம் நானே சொல்ல நினனத்தேன், உங்கள் பதிவில் குறிப்புகளின் பெயர்களையும் வலதுபக்கம் வரிசையாகக் கொடுக்கலாமே. தேர்ந்தெடுக்க எனக்கு வசதியாக இருக்கும்.

me: என்னென்ன கேடகரில குறிப்புகள் இருக்குன்னு, சைட்ல இருக்கே.

haranprasanna: நான் இன்னும் ஆழமான தேடலைச் சொன்னேன். புளிசேரியின் குறிப்பு எழுதிவிட்டீர்களா என்று பார்த்தேன். இல்லையே.

me: ஓ அதுவா. கறி/கூட்டு இடத்துல க்ளிக்கினா அதுல இருந்தா வரும்.

haranprasanna: இத்தனை தொழில்நுட்பத்தையும்கூட பெண்கள் கேடுகெட்ட சமையல்குறிப்புக்கு உபயோகித்துக் கொள்வதை என்னவென்று சொல்வது? உங்கள் பக்கத்தில் “தேடு” வசதியும் இருந்தால் இன்னும் சுலபமாக இருக்குமே.

me: இருக்கே. Search பெட்டில வேணுங்கற பெயரைத் தட்டி க்ளிக்கினா, இருந்தா வந்துடும். இல்லைன்னா இன்னும் எழுதலைன்னு அர்த்தம். 🙂

haranprasanna: எத்தனை யுகங்கள் ஆனாலும் நீங்களெல்லாம் எழுதித் தீர்க்கப் போவதில்லை.

me: குறிப்பு எழுதினா கேவலமா? எனக்குத் தெரிஞ்சதைத் தானே நான் செய்யமுடியும்.

haranprasanna: தெரிந்ததற்காக அதையே செய்வதும், அதிலிருந்து மீள நினைக்காமல் இருப்பதும் பேதைமை இல்லாமல் வேறு என்ன? உப்பேரிக்கும் புளிசேரிக்கும் கூட குறிப்புகள் எழுதுங்கள். (கேவலமாப் போனாலும் பரவாயில்லைன்னு காலைல கிளம்பும்போதே இனிமே வீட்டுல சண்டையைத் தீர்த்துட்டு தான் கிளம்பணும்.)

me: நீங்க இப்பத்தான் சமையல் குறிப்பு எழுதறேன்னு திட்டறீங்க. நீங்களே இன்னும் சில குறிப்புகளை எழுதச் சொல்றீங்க. என்ன சொல்லவரீங்கன்னே சரியாப் புரியலை.

haranprasanna: என் பேச்சே கவிதை மாதிரி இருப்பதாகச் சொல்கிறீர்களா? :)) 

me: (இது வேறயா? நெனப்புதான பொழப்பக் கெடுக்குது.) உங்களுக்கு நகைச்சுவை நன்னாவே வரது.  

haranprasanna: ஒரு இலக்கியவாதியாக நீங்கள் இலக்கியங்களைப் படைக்கவேண்டும் என்று கூறுகிறேன். ஒரு நண்பனாக நீங்கள் எழுதும் (துப்புக்கெட்ட) பதிவாவது முழுமையாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். அவ்வளவுதான்.

me: சமையல்குறிப்பு எழுதறவளை இலக்கியம் படைன்னா எப்படி முடியும்?

haranprasanna: அக்கார அடிசிலுக்குக் கூட குறிப்பு எழுதிய கவிதை ஒன்று இருக்கிறது. காலையில்தான் படித்தேன். யுகயுகமாய் பெண்களுக்கான பாட்டை அந்தப் பெண் கவிஞர் சொல்கிறார்.

me: அப்டியா? எனக்கும் அனுப்புங்களேன். உங்கள் ஆதர்ச கவிஞர்கள் பேர்ல ஒன்னுகூட பெண்பெயரே இல்லையே. உங்களுக்கு பெண்கவிஞர்களைப் பிடிக்காதோன்னு நினைச்சுட்டேன்.

haranprasanna: பெண்கள் விடுதலை என்ற பெயரில் உடல்மொழி தவிர பிற விஷயங்களைத் தொடுவதில்லை என்ற சலிப்பு எனக்கு இருப்பது உண்மைதான். (ஒரு ஜெயமோகன பில்டப்புக்கு இது உதவும்.) ஆனால் சேமித்து வைத்திருக்கும் கவிதையின் கருப்பொருள் என்னை பிறவெதுவும் யோசிக்கவொட்டாமல் செய்கிறது. (அதைப் படிச்சதிலிருந்து இன்னும் பசியைக் கிளப்பிவிட்டுடுச்சு. இன்னும் சாப்பாட்டைக் காணோமே. பேசாம வீட்டுக்கு ஃபோன் பண்ணி ஒரு சரண்டர் சிக்னல் கொடுத்துடலாமா?)

me: சரி அனுப்புங்க. எனக்கும் புரியுதான்னு பாக்கறேன்.

haranprasanna: சமையல் குறிப்புதானே; அதனால் புரியும். ஆனால் அது சொல்லவரும் விஷயம் உங்களுக்குப் புரிய வாய்ப்பில்லை. இருந்தாலும் தேடி அனுப்புகிறேன். கொஞ்சம் பொறுங்கள். (வயிறு பொறுக்குதில்லையே. அம்மா காலைல பாகற்காய் நறுக்கிண்டிருந்தாளே, பிட்லையா இருக்குமோ?)
Sent at 13:55 PM on Tuesday

=================

தேவையான பொருள்கள்:

தக்காளிக் காய் – 1/2 கிலோ
பச்சை மிளகாய் – 5, 6
தேங்காய் – 1 மூடி
சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்
உப்பு
கொத்தமல்லித் தழை

======================

me: ஐயய்ய, இது என் பதிவிலிருந்து எடுத்த தக்காளிக்காய் கூட்டு இல்லையோ.  ஒண்ணுக்குக் கீழ ஒண்ணா இருக்கவும் கவிதைன்னு நினைச்சுட்டேளா? :))))

haranprasanna: (அடச்சே. பசில இந்தத் தப்பை வேற செஞ்சுட்டேனா! இவ இதைச் சொல்லியே பலநாளுக்கு ஓட்டிக் கொல்வாளே!) சகிக்கவில்லை உங்கள் ஜோக். ஏதோ தவறாகிவிட்டது. சரியாகத் தருகிறேன். காத்திருங்கள். (அந்தக் கூடைக்காரர் இப்படி காக்கவெச்சுட்டாரே. மட்டம் போட்டு கழுத்தறுத்துட்டாரா? வீட்லேருந்து அதை போன் செஞ்சாவது சொல்லலாமில்ல.)
Sent at 14:01 PM on Tuesday

==================
அக்கார அடிசில் கவிதை

ஒருகப் அரிசியுடன்
கால்கப் பயத்தம்பருப்பையும் களைந்து
நீரைவடித்து
நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

இரண்டு லிட்டர்
கூழான கெட்டிப் பாலில்
குழைவாக வேகவைக்கவும்.

இரண்டும் இன்னும் அரைகப்புமாய் வெல்லத்தை
வாணலியில் நீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டி
வேகவைத்த அரிசிக்கலவையும்
இரண்டு லிட்டர் பாலும்
இரண்டு லிட்டர் நெய்யும்
ஏலக்காய்ப் பொடியும்
இரு சிட்டிகை பச்சைக் கற்பூரமும்
சேர்த்துக் கலந்து கொதிக்கவிடுங்கள்

இப்போது நீங்கள்
அக்கார அடிசில் தயாரிப்பதில்
நிபுணராகி இருக்கிறீர்கள்

வாணலியில் கொதிக்கும் பண்டத்தில்
நெய்யும் பாலும் மேலெடுக்கும் வாசத்தில்
மாமியாரின் சர்க்கரை வியாதி
மாமனாரின் இரத்த அழுத்தம்
கணவன் அவ்வப்போது சொல்லும் நெஞ்சுவலி
மகனுக்கு இந்த வயதிலேயே வைக்கும் தொப்பை
மளிகைக்காரனின் நாலுமாதக் கடன்பாக்கியென
பிரச்சினைகளில் நீங்கள் உங்களைத் தொலைக்காதிருந்தால்
வருத்தப்பட்டுக் கொள்ளுங்கள்
நீங்கள் தேர்ந்த சமையல்காரர்.
========================
Sent at 14:05 PM on Tuesday

haranprasanna: என்ன பேச்சையே காணம்?

me: படிச்சுகிட்டிருக்கேன்..

haranprasanna: எப்படி கவிதை? பெண்கள் இன்றைக்கு எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள் பார்த்தீர்களா?

me: ம்

haranprasanna: எத்தனை கவிதை படித்தால் தான் நீங்களெல்லாம் திருந்தப் போகிறீர்கள்?

me: எதுக்கு என்னைத் திட்டறீங்க? நான் யோசிச்சுகிட்டிருக்கேன்.

haranprasanna: தேர்ந்த சமையல்காரர் என்றால் பெருமைதானே படவேண்டும், நாம் வெட்டியாய் படுசுமாராய் சமைப்பதற்கே பெருமையாய் பதிவெல்லாம் வைத்திருக்கிறோமே, ஏன் கவிதையில் வருத்தப்படச் சொல்லியிருக்கிறார்கள் என்றெல்லாம் யோசிக்கிறீர்களா? 

me: இல்லை…. 

haranprasanna: வீட்டில் இருக்கிறவர்களுக்கெல்லாம் உடல்நிலை சரியில்லை, கடன்பாக்கிக்காக வெல்லாம் வருத்தப்படச் சொல்லியிருப்பார்களோ என்று யோசிக்கிறீர்களா?

me: இல்லை…

haranprasanna: உங்களைப் போன்ற பேதைகளுக்கு அப்படியெல்லாம்தான் யோசனை போகும். உண்மையில் கவிதையின் முடிச்சு அங்குதான் இருக்கிறது.

me: ஹை, ப்ரசன்னா, I got it! இந்தக் கவிதை உங்களுக்கு அடையாளம் தெரியலையா?

haranprasanna: தான் வாழும் வாழ்க்கையில் ஒரு பெருமையான அங்கீகாரம் இருக்கும் சூழ்நிலையில் ஒரு பெண்ணிற்கு மேலே இருக்கும் குடும்பம் சார்ந்த பிரச்சினைகள் எல்லாம் கவனத்தில் வந்திருக்கவேண்டும்…

me: இது யார் எழுதினதுன்னு சொல்லுங்க பார்க்கலாம்…

haranprasanna: சாமானை அள்ளிக்கொட்டி சமையல்காரராக மட்டும் இருக்கிறார் என்பது அந்தக் குடும்பத்தில் அவளது பிடிப்பு விட்டுப்போன மனநிலைக்கான குறியீடு. வாழ்ந்து உணர்ந்து, அதை வார்த்தைகளிலும் சொல்லத் தெரிவதால்தான் அது வன்மையான கவிதையாக வந்திருக்கிறது.

me: ஐயய்ய, சும்மா கீழ குனிஞ்சு தட்டிகிட்டு நீங்க சொல்றதையே சொல்லிகிட்டிருக்காம, கொஞ்சம் நான் தட்டறதையும் படிங்க..

haranprasanna: சுஜாதா சொல்வது சரி. கவிதைக்கு கோபமும் சோகமும் தேவை.

me: (அடடா அடங்கமாட்டாங்க போல இருக்கே…)

haranprasanna: உங்களைப் போல் திமிராகவும் வெட்டியாகவும் நேரத்தைத் தேய்ப்பவர்களுக்கு கவிதையும் வேறெந்த இலக்கியமும் கூட கைவராது.

me: ப்ரசன்னாஆஆஅ…. இது நிஜமாவே நேரத்தை தேய்க்கறவங்க எழுதின கவிதைதான். 🙂

haranprasanna: அப்படியா? எப்படித் தெரியும்? யார் எழுதியது? (வரவர என்னைவிட இவளெல்லாம் இலக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களை விரல்நுனில வெச்சிருக்காளே… இவளை நம்பக் கூடாது… உதாரை ஏத்த வேண்டியதுதான்.) மேலும் ஜெயஸ்ரீ, நீங்கள் என்னை பெயர் சொல்லி அழைப்பதைவிட கவிஞர் என்று அழைப்பதையே விரும்புகிறேன்.

me: நாசமாப் போச்சு. தான் எழுதின கவிதையும் அதன் வடிவமும் மறந்து போனவங்களெல்லாம் கவிஞரா? (யோவ், பீடத்துலேருந்து இறங்கவே மாட்டியாலே நீ?)

haranprasanna: புரியவில்லை!!

me: இந்த கெத்துல எல்லாம் குறைச்சலில்லை. மேட்டர்ல கோட்டை விட்டுட்டீங்க. இந்த அக்கார அடிசில் கவிதை நான் எழுதினது. உங்க கவிதையை ஃபார்மட்டா வெச்சு.

haranprasanna: என் கவிதையின் வடிவமா? எப்போது எழுதினேன்? (இவ்ளோ மோசமா எழுதித் தொலைச்சிருக்கேனா?)

me: உங்க CuSO4 கவிதை.

haranprasanna: தலைப்பே சகிக்கவில்லையே. என்னுடையதாக இருக்க முடியாது. (இவகிட்ட என் பழைய ட்ரங்க்பெட்டில போட்ட கவிதை எல்லாம் இருக்கு. எதையெதை எப்ப எடுத்து வெளில விடுவாளோ!)

me: நீங்க பூர்வாசிரமத்துல துப்பாய்ல கெமிஸ்டா வேலைபாத்து குப்பை கொட்டின காலத்துல எழுதினது. இருங்க நானும் எடுத்துத் தரேன்.
Sent at 14:16 PM on Tuesday

======================
CuSO4 கவிதை

தாதுகள் நீக்கப்பட்ட
மீத்தூய் நீரால் நன்கு கழுவி
நன்கு உலர்த்தப்பட்ட
ஒரு கண்ணாடிக் குடுவையை எடுத்துக்கொள்ளுங்கள்

10 கிராம் தாமிரசல்பேட்டை
துல்லியமாக நிறையிட்டு
குடுவைக்குள் இடுங்கள்.

1000 மில்லி லிட்டர் மீத்தூய்நீரைச் சேர்த்து
தூய கண்ணாடிக்குச்சியால் கலக்குங்கள்

இப்போது நீங்கள்
1% தாமிரசல்பேட் கரைசல் தயாரிப்பதில்
நிபுணனாகி இருக்கிறீர்கள்

ஊடுருவிச் செல்லும் ஒளியில்
நீல நிறத்தடம் மனதைக் கொள்ளை கொள்ளும் நேரத்தில்
குடுவைக்குள் செயற்கை கடல்
துள்ளும் மீன்கள், உயிருடன் சிப்பி
நீல மேற்பரப்பில் சூரிய எதிரொளி, அதில்
தரையிறங்கும் இறக்கை விரித்த கரும்பறவையென
பிணை நினைவுகளில் உங்களைத் தொலைக்காதிருந்தால்
பெருமை பட்டுக்கொள்ளுங்கள்…
நீங்கள் வேதியியல் உலகக்காரர்
========================
Sent at 14:19 PM on Tuesday

என்ன அந்தப் பக்கமும் பேச்சையே காணோம்? 🙂

haranprasanna: (கீழ சைக்கிள் மணிச்சத்தம் கேக்குதே. நம்பாள் தானோ? அதானே பாத்தேன். எவ்ளோ சண்டைன்னாலும் வீட்டுல நமக்கு சாப்பாடெல்லாம் குறை வெச்சதில்லையே. நல்லவேளை கிறுக்குத்தனமா அவசரப்பட்டு ·போன்பண்ணி மன்னிப்பெல்லாம் கேட்காம இருந்தேன். இனி இந்தக் கழுத்தறுப்பைக் கழட்டிவிட வேண்டியதுதான் பாக்கி.) உங்களுக்கு வீட்டில் வேலையே இருக்காதா? இங்கே உட்கார்ந்து என்னுடன் செலவழித்துக் கொண்டிருக்கிறீர்களே, பாவம்.

me: நான் சமைச்சு முடிச்சிட்டேன். வேலைகளை முடிச்சுட்டு வெட்டி நேரத்தைத் தான் உங்களோட செலவழிக்கறது.

haranprasanna: என்ன சமையல்? சொல்ல மறந்துவிட்டேன். உங்கள் தக்காளிக்காய் கூட்டை எங்கள் வீட்டில் தக்காளிப் பழத்தில் செய்வார்கள். உண்மையாகவே சுவையாக இருக்கும். அந்தப் பதிவில் ramakannan என்பவர் கேட்டிருக்கும் சந்தேகம் சரியே.

me: ஆ, என் வலைப்பதிவை ஒரே ஒரு நொடி மட்டும் திறந்துபார்த்து¢ட்டு நீங்க அள்ளிவிடற விஷயங்கள், கேட்கற சந்தேகங்கள் எல்லாம் என்னை ஆச்சரியப்படுத்றது. (மணிக்கணக்கா பதிவை பிரிச்சு மேய்ஞ்சுட்டு பீலாவா விடற?)

haranprasanna: இலக்கியவாதியும் கவிஞனுமானவன் தன்னைச் சுற்றி நடப்பவைகளை சில நொடித் துளிகளில் துல்லியமாக அவதானித்து, கிரகித்து, தேவையான நேரத்தில் சரியான கோணத்தில் எடுத்துவைக்கத் தெரிந்தவனாக இருக்கவேண்டும். (ஆஹா, இன்னிக்கு நாம நினைச்சமாதிரியே பாகற்காய் பிட்லைதான்.)

me: ஆனா தக்காளிப்பழத்துல கூட்டு செஞ்சா அது தக்காளி கொத்சு, இல்லை டால் ஃப்ரை மாதிரி தானே? 

haranprasanna: எது சொன்னாலும் எதிர்த்து எல்லாம் தெரிந்த மாதிரி பேசுவதை நிறுத்துங்கள் ஜெயஸ்ரீ. உங்களுக்கு இலக்கியத்தில் ஒன்றரையணா பரிச்சயம் இருப்பது போல் எனக்கு சமையலிலும் அனுபவம் உண்டு. துபாயில் நான் கவிதை உண்டு வாழ்ந்த காலத்தும் என் அறைத் தோழனாக இருந்த ஒரு அஞ்ஞானிக்கு மட்டும் சமைத்துப் போட்டிருக்கிறேன். நீங்கள் தக்காளிக்காய் சேர்த்து செய்த அதே உணவுக்குறிப்பை தக்காளிப் பழம் உபயோகித்துச் செய்துபாருங்கள். பயத்தம்பருப்பு இலையிலையாக முக்கால் பதம் மட்டும் வெந்து குழையாமல் இருக்கவேண்டும் என்பதை மட்டும் நினைவுவைத்துக் கொள்ளுங்கள்.

me: உங்கண்ணி கூட நல்லா சமைப்பாங்கன்னு சொல்வீங்களே. இதெல்லாம் அவங்ககிட்ட கத்துகிட்டீங்களா?

haranprasanna: அதெல்லாம் முன்காலத்தில். என் கல்யாணத்திற்குப் பிறகு அண்ணி சுமாராகத் தான் சமைக்கிறார்.

me: ப்ரசன்னா, நிஜமாவே நான் எழுதியிருக்கற கவிதை நல்லாவா இருக்கு? சும்மா தோணித்து. கிறுக்கினேன்.

haranprasanna: (இவ எழுதினதுன்னு தெரியாம புகழ்ந்து தொலைச்சுட்டேன். சே, பசி எல்லாத்தையும் மறக்கடிச்சிடுச்சு!) கவிதை வெகுசுமார் தான். கவிதையே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு அத்தைப்பாட்டித்தனம் தான் எழுத்தில் இருக்கிறது. அதன் (என் கவிதையின்) வடிவத்தால் மட்டுமே வன்மை பெறுகிறது.

me: (அதானே பாத்தேன். இந்தத் திமிர் இல்லைன்னா எப்படி?) துபாயிலும் கவிதை உண்டே வாழ்ந்தேன்னு நீங்க சொன்னதும் நியாபகம் வருது. காலைல ஒரு அருமையான கவிதை படிச்சேன். படிச்சபோதே உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கணும்னு நினைச்……..

haranprasanna: (சாப்பாட்டுக் கூடையே ட்ராஃபிக் ஜாம்ல மாட்டி இப்பத்தான் ஒருவழியா வந்திருக்கு. தின்ன முடியுதா பார் நிம்மதியா.) பிறகு பேசலாம் ஜெயஸ்ரீ. ஒரு கஸ்டமர் வந்திருக்கிறார். எனக்கு கடமை கவிதையைவிட முக்கியம் என்பதும் நீங்கள் அறிந்ததே. அவசியம் தக்காளிப்பழக் கூட்டு செய்துபார்த்துச் சொல்லுங்கள். வணக்கம்.
Sent at 14:36 PM on Tuesday

haranprasanna is offline. You can still send this person messages and they will receive them the next time they are online.
_____________________________________________________________

செய்துபார்த்து தனியில் சொல்வதற்குப் பதில், நன்றாக இருப்பதாக வீட்டினர் சொன்னதில் உணர்ச்சிவசப்பட்டும், பழக்க தோஷத்திலும் பதிவில் போட்டுவிட்டேன். இதனால் கவிஞர் இமேஜிற்கு ஏதாவது பங்கம் வந்துவிடுமா? 😦 இப்போது என்ன செய்வது, எடுக்கவா, இருக்கவா?

நன்றி: கவிஞர் ஹரன்பிரசன்னா.

தேவையான பொருள்கள்:

தக்காளி – 1/2 கிலோ
பச்சை மிளகாய் – 5, 6
தேங்காய் – 1 மூடி
சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்
உப்பு
கொத்தமல்லித் தழை

தாளிக்க – எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

thakkaali koottu

செய்முறை:

  • பயத்தம் பருப்பை முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும்.
  • தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது நீர்விட்டு மூடி வேகவைக்கவும்.
  • முக்கால் பதம் வெந்ததும் அரைத்த விழுது, வேகவைத்த பயத்தம் பருப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
  • கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

* நீரைக் குறைத்து கால் கப் பால் அல்லது தேங்காய்ப் பால் சேர்ப்பதால் காரல் இருந்தால் மறைந்து சுவையும் மணமும் அதிகரிக்கும். நான் சேர்த்திருக்கிறேன்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் சாதம், சப்பாத்தி வகைகள்…

முதலில் இந்தச் சாதாரண கூட்டுகளை எழுத வேண்டுமா என்று நினைத்து கொஞ்சம் சோம்பேறித்தனத்தால் எழுதாமல் இருந்தேன். திடீரென்று எதையுமே விடாமல் எழுதித் தள்ளிவிடவேண்டும் என்று தீவிரம் வந்திருப்பதால் :)) இதுவும்…

இனி இதைவிட சப்பைக் குறிப்புகளும் வரலாம்.

இது அதிக மசாலா சேர்க்காத கூட்டு.

kos koottu

தேவையான பொருள்கள்:

புடலங்காய் – 1/2 கிலோ 
பச்சை மிளகாய் – 1 (விரும்பினால்)
உப்பு
கொத்தமல்லித் தழை

வறுத்து அரைக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2, 3
உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம்
தேங்காய் – 1/2 மூடி

தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை

pudalangaai koottu

செய்முறை:

  • புடலங்காயை உள்ளே விதை முற்றலாக இருந்தால் நீக்கி, சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • சிறிது எண்ணெயில் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தை சிவக்க வறுத்து தேங்காயோடு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, விரும்பினால் வாசனைக்கு ஒரு பச்சை மிளகாய் தாளிக்கவும்.
  • நறுக்கிய புடலங்காயை, தேவையான உப்பு, மஞ்சள் தூள், சிறிது நீர் சேர்த்துக் கலந்து, மூடிவைத்து வேகவைக்கவும்.
  • நன்றாக வெந்ததும், அரைத்த விழுது சேர்த்து, தேவைப்பட்டால் மேலும் நீர் சேர்த்து ஒரு கொதிவிட்டு சேர்ந்தாற்ப்போல் இருக்குமாறு இறக்கவும்.
  • நறுக்கிய மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

* இதே முறையில் கோஸ், பீன்ஸ், பீட்ரூட், கொத்தவரங்காய், அவரைக்காய் போன்ற காய்களிலும் செய்யலாம். எல்லாவற்றையும் விட கீரையில் செய்தால்(எந்தக் கீரையும்) மிகுந்த சுவையாக இருக்கும்.

thakkaalikkaai

தேவையான பொருள்கள்:

தக்காளிக் காய் – 1/2 கிலோ
பச்சை மிளகாய் – 5, 6
தேங்காய் – 1 மூடி
சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்
உப்பு
கொத்தமல்லித் தழை

தாளிக்க – எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

thakkaalikkaai koottu

செய்முறை:

  • பயத்தம் பருப்பை முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும்.
  • தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது நீர்விட்டு மூடி வேகவைக்கவும்.
  • முக்கால் பதம் வெந்ததும் அரைத்த விழுது, வேகவைத்த பயத்தம் பருப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
  • கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

* நீரைக் குறைத்து கால் கப் பால் அல்லது தேங்காய்ப் பால் சேர்ப்பதால் காரல் இருந்தால் மறைந்து சுவையும் மணமும் அதிகரிக்கும். நான் சேர்த்திருக்கிறேன்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் சாதம், சப்பாத்தி வகைகள்…
 

அடுத்த பக்கம் »