சாட் வகை


கார மிக்ஸர் – 1

 
தேவையான பொருள்கள்:

அவல் – 3 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
பயத்தம் பருப்பு –  1 கப்
நிலக்கடலை – 1 கப்
பொட்டுக் கடலை – 1 கப்
முந்திரிப் பருப்பு – 1 கப்
கறிவேப்பிலை – 4 ஈர்க்கு
உப்பு – தேவையான அளவு
காரப் பொடி – தேவையான அளவு
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க
ஓமப்பொடி (அல்லது காராபூந்தி) – 1 1/2 கப்

 

செய்முறை:

  • கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து ஒரு துணியில் உலர்த்திக் காயவைக்கவும். (முழுவதும் காய்ந்திருக்கவேண்டியதில்லை.)
  • முந்திரிப்பருப்பை நாலைந்தாக உடைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும் துளைகளுள்ள ஒரு வடிகட்டி (பெரிய டீ வடிகட்டி, புளி வடிகட்டி) எடுத்து, அதில் கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, நிலக்கடலை, பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பை ஒவ்வொன்றாக, தனித்தனியாக போட்டு, பொரித்து, வடித்தட்டில் போட்டு எண்ணெயை வடிக்கவும்..
  • அவலை முதலிலேயே அந்த வடிகட்டியில் (மாவு, உடைந்த அவல் இல்லாமல்) சலித்துவைத்திருக்கவேண்டும்; கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, பொரித்து எடுக்கவும். சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
  • சிறிது கடலைமாவில் உப்பு, பெருங்காயம், மிளகாய்த் தூள் சேர்த்துக் கலந்து காராபூந்தி அல்லது ஓமப்பொடி அச்சில் பிழிந்துகொள்ளலாம். (மிக்ஸரில் கடலைமாவு சேர்த்த பொருள் இல்லாவிட்டால் சுவைகூடி வராது. அதனால் ஏதாவது ஒன்றாவது செய்து சேர்க்கலாம்; அல்லது அதைமட்டும் கடையில் வாங்கிச் சேர்த்துக்கொள்ளலாம்.)
  • எல்லாவற்றையும் ஒரு வாயகன்ற பெரிய பாத்திரத்தில் போட்டுக்கொண்டே வரவும்.
  • கடைசியில் கறிவேப்பிலையையும் பொரித்து, வடிகட்டவும்.
  • பொரித்த கறிவேப்பிலையுடன் தேவையான உப்புப் பொடி, மிளகாய்ப் பொடி, பெருங்காயம் சேர்த்து நன்கு கையால் நொறுக்கி, அந்தக் கலவையை நன்கு கலக்கவும்.

* எண்ணெயில் பொரிக்கும்போது தீ மிகக் குறைவாக இருந்தால் பருப்புகள், அவல் கடுக்’கென்று ஆகிவிடும். தீ அதிகமாக இருந்தால் கருகிவிடும். மிதமான தீயில் அடுப்பு எரியவேண்டும். அவல் போட்டதுமே பொரிந்துவிடவேண்டும்.

* விரும்புபவர்கள் வேறு மசாலாப் பொடிகளும் சேர்க்கலாம். ஆனால் இதுவே அதிகம் படுத்தாத வகை.

இந்த வடைக்கு என்று எதுவும் தனியாக யாரும் பெயர் வைக்கவில்லை போலிருக்கிறது. கார்த்திகையன்று (மட்டும்) செய்வதால் கார்த்திகை வடை என்றே நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

kaarththigai vadai 1

தேவையான பொருள்கள்: 

முழு உளுத்தம் பருப்பு – 2 கப் (கருப்புத் தோலுடன்)
கடலைப் பருப்பு – 1/2 கப்
பயத்தம் பருப்பு – 1/2 கப்
பச்சை மிளகாய் – 10, 12
இஞ்சி – பெரிய துண்டு
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
பெருங்காயம்
உப்பு
எண்ணெய்

kaarththigai vadai 2

செய்முறை:

  • தோல் உளுத்தம் பருப்பை அலசி தண்ணீர்ல் குறைந்தது 8 மணி நேரம் ஊறவைக்கவும். (தோல் தனியாகக் கழண்டு  வரும் அளவு ஊறவேண்டும்.)
  • கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊறவைத்து, நீரை ஒட்ட வடித்து, ஒரு துணியில் காயவிடவும்.
  • பாதி இஞ்சி, பாதி மிளகாயை மட்டும் பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையையும் பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • ஊறின தோல்பருப்பைக் களையவும். முக்கால்வாசித் தோல் மட்டும் நீங்கினால் போதும். கால்வாசி அல்லது விரும்பினால் அதைவிட சிறிது அதிகத் தோலை அப்படியே நீக்காமல் வைத்துக் கொள்ளவும்.
  • களைந்த பருப்புடன், தேவையான உப்பு, பெருங்காயம், மீதிப் பாதி இஞ்சி, பச்சை மிளகாயைச் சேர்த்து, அதிகம் நீர் விடாமல், அதிகம் மசியாமல் கெட்டியாக கரகரப்பாக அரைத்து எடுக்கவும். கிரைண்டரில் இப்படி அரைப்பது சுலபம்.
  • அரைத்த மாவுடன் உலர்த்தி வைத்திருக்கும் பருப்புகளை நன்கு கலந்து கொள்ளவும்.
  • நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து அழுத்தாமல் கலந்து கொள்ளவும். பச்சை மிளகாய்த் துண்டுகள் இடையில் அதிகம் இருந்தால் சுவையாக இருக்கும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கவும்.
  • வாழையிலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் தண்ணீர் துடைத்து, மாவை உருட்டி, வடையாகத் தட்டி, நடுவில் துளை போட்டு, நிதானமான சூட்டில், எண்ணெயில் போடவும்.
  • இருபுறமும் திருப்பிவிட்டு, முழுமையாகச் சத்தம் அடங்கி, மொறுமொறுப்பானதும்,  எடுக்கவும். இடையிடையே கரண்டிக் காம்பால் வடையில் குத்தினால் மேலும் கரகரப்பாகும்.

* இந்த வடை வேக சிறிது அதிக நேரம் எடுக்கும். இரண்டு மூன்று நாள்களுக்குக் கெடாது.

* முழுமையாக தோல்பருப்புதான் சேர்க்கவேண்டுமென்பதில்லை. கால் அல்லது அதற்குக் கொஞ்சம் மேலே தோல் உளுத்தம் பருப்பும், மீதிக்கு தோல் நீக்கிய முழுப் பருப்பும் கூட சேர்த்து, கடைசியில் களையாமல் நீரை மட்டும்  வடித்து, அப்படியே அரைக்கலாம். இது அதிகம் ஊறத் தேவையில்லை. நான்கு மணி நேரத்தில் அரைக்கலாம்.

kooththanoor saraswathy amman

வெள்ளைக் கொத்துக்கடலை

தேவையான பொருள்கள்:

வெள்ளை கொத்துக் கடலை – 1 கிலோ (கருப்பு)
பச்சை மிளகாய் – 8 (அல்லது காய்ந்த மிளகாய்)
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
கசகசா – 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – சிறுதுண்டு (விரும்பினால்)
தேங்காய் – 1 
 

தாளிக்க: எண்ணெய், கடுகு, 1 காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

vellai koththukkadalai sundal

செய்முறை:

  • கொத்துக்கடலையை 15 மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். முடிந்தால் இடையில் ஒருமுறை நீரை மாற்றவும்.
  • குக்கரில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நான்கைந்து விசில் வரும்வரை நன்கு வேகவைக்கவும்.
  • கடலைப் பருப்பு, கசகசாவை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
  • ஊறவைத்த கடலைப்பருப்பு, கசகசா, இஞ்சி, தேங்காய், சிறிது மல்லித் தழை, பச்சை மிளகாயுடன் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • கொத்துக் கடலையுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்துப் பிசிறிவைக்கவும்.
  • அடுப்பில் வாணலியில் கொஞ்சம் அதிகமாகவே எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • பிசிறிவைத்துள்ள கடலைக் கலவையைக் கொட்டி, நன்கு மேலும் 10 நிமிடங்களுக்குக் கிளறி இறக்கவும்.

* இந்தச் சுண்டலையே தண்ணீர் அதிகம் சேர்த்து தளர்வாக பூரி பிரசாதத்திற்கு இங்கே கோயில்களில் தருகிறார்கள். கடலைப் பருப்பு சேர்ப்பதால் கிரேவி சேர்ந்தாற்போலும், மற்ற மசாலாக்கள் அதிகம் சேர்க்காவிட்டாலும் கசகசா சேர்ப்பதால் அதிக மணம், சுவையாகவும் இருக்கிறது. சுண்டல் மிஞ்சினால் நாமும் அப்படிச் செய்யலாம்.

-0-

கருப்புக் கொத்துக்கடலை

தேவையான பொருள்கள்:

கொத்துக் கடலை – 1 கிலோ (கருப்பு)
காய்ந்த மிளகாய் – 7, 8
கடலைப் பருப்பு – 1/4 கப்
எள் – 1 டீஸ்பூன்
மல்லிவிதை – 1/4 கப்
தேங்காய் – 1

தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

karuppu koththukkadalai sundal

செய்முறை:

  • கொத்துக்கடலையை 12லிருந்து 15 மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். சின்னக் கொத்துக்கடலையாக இருந்தால் 12 மணி நேரத்தில் நிச்சயம் ஊறியிருக்கும். முடிந்தால் இடையில் ஒருமுறை நீரை மாற்றவும்.
  • குக்கரில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நான்கைந்து விசில் வரும்வரை நன்கு வேகவைக்கவும்.
  • கடலைப் பருப்பு, எள்ளை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
  • ஊறவைத்த கடலைப்பருப்பு, எள், மல்லிவிதை, தேங்காய், காய்ந்த மிளகாயுடன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • கொத்துக் கடலையுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்துப் பிசிறிவைக்கவும்.
  • அடுப்பில் வாணலியில் கொஞ்சம் அதிகமாகவே எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • பிசிறிவைத்துள்ள கடலைக் கலவையைக் கொட்டி, நன்கு மேலும் 10 நிமிடங்களுக்குக் கிளறி இறக்கவும்.

* சுண்டல் மிஞ்சினால் கூட்டு, குழம்பில்(இந்த வகைக்  கொத்துக்  கடலை  புளிநீரில் சுவை சேர்க்கும்.) சேர்க்கலாம். அதிகம் மிஞ்சினால், தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து ஆனால் உலர் கறியாக, சப்பாத்தி வகைகளுக்கு பக்க உணவாக உபயோகிக்கலாம்..

-0-

* கொத்துக்கடலை பட்டாணிக்கு குக்கரில் வேகவைக்கும் வரை உப்பு சேர்த்துவிடக் கூடாது. தோல் தனியாக கழண்டுவிடும்.

* சிலர் சீக்கிரம் வேக, கொத்துக்கடலையுடன் சமையல் சோடா சேர்ப்பார்கள். உண்மையில் நன்றாக ஊறவைத்தாலே, நன்றாக வெந்துவிடும். சமையல் சோடா சேர்க்கவே தேவை இல்லை. நான் சேர்ப்பதில்லை. ஆனால் அப்படிச் சேர்ப்பவர்கள், ஊறவைக்கும்போதே சோடா உப்பைச் சேர்த்து, நீரை வடித்துவிட்டு வேக வைக்கலாம். இதனால் சீக்கிரம் வேகும்; சத்தும் வீணாகாது.

*  நவராத்திரி பிரசாதமாக இல்லாமல் சாட் உணவாகச் செய்யும் நாள்களில் இவற்றில் கொஞ்சம் மிளகாயைக் குறைத்துக் கொண்டு சன்னா மசாலா சேர்க்கலாம். 

* மேலே உள்ள இரு முறைகளிலும் பட்டாணிச் சுண்டலும் செய்யலாம்.

நவராத்திரி: ஆடலுடன் பாடலைக் கேட்டு… – சின்னக் கண்ணன்.

தேவையான பொருள்கள்:

நிலக்கடலை – 1 கிலோ
பச்சை மிளகாய் – 5
இஞ்சி – சிறிய துண்டு (விரும்பினால்)
தேங்காய் – 1 1/2 கப்
எள்- 1 டேபிள்ஸ்பூன்
கசகசா – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க: எண்ணெய், கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை.

nilakkadalai sundal

செய்முறை:

  • நிலக்கடலையை இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடிக்கவும்.
  • ஊறிய கடலையை ஒரு கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் 3 விசில் வரை வைத்து நன்கு வேகவைத்து, மீண்டும் நீரை வடிக்கவும்.
  • எள், கசகசாவை வறட்டு வாணலியில் நன்கு வறுத்து மிக்ஸியில் நைசாகப் பொடிக்கவும். (வறுக்காவிடில் கசகசா மசியாது.)
  • இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காயை உப்பு சேர்த்து, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • வேகவைத்த கடலை, அரைத்த விழுது சேர்த்து நன்கு நீர்ப்பசை இல்லாதவாறு வதக்கவும்.
  • இறக்கும் முன் அரைத்த பொடியைத் தூவி மேலும் இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

* மற்ற சுண்டல்களை விட நிலக்கடலை அதிகப் பித்தம் சேர்க்கும். இஞ்சி சேர்ப்பது நல்லது.

* எளிமையாக எதுவுமே அரைத்துவிடாமல், காய்ந்த மிளகாய் தாளித்து, தேங்காய்த் துருவல் மட்டும் சேர்த்தும் செய்யலாம்.

* சுண்டல் மிஞ்சினால் அரைத்துவிட்ட  கூட்டு, குழம்பில் சேர்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

பட்டாணி – 1 கிலோ
தேங்காய்த் துருவல் – 1 கப்
பச்சை மிளகாய் – 8
கசகசா – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மாங்காய்த் துருவல் – 1/2 கப்
கேரட் துருவல் – 1/2 கப் (விரும்பினால்)
கொத்தமல்லித் தழை

தாளிக்க: எண்ணெய், கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

pattaani sundal

செய்முறை:

  • பட்டாணியை 12 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடித்து மீண்டும் கழுவவும்.
  • புதிதாக ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்து மீண்டும் நீரை ஒட்ட வடிக்கவும்.
  • கசகசாவை மூழ்கும் அளவு தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
  • தேங்காய், 6 பச்சை மிளகாய், ஊறவைத்த கசகசா, உப்பு இவற்றை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். அல்லது கசகசா ஊறியதில் மிஞ்சியிருக்கும் தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம்.
  • அடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், இரண்டு பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கியது, கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • வேகவைத்த பட்டாணி, அரைத்த விழுது சேர்த்து நீர்ப்பசை இல்லாமல் வதக்கவும்.
  • கேரட், மாங்காயை சன்னமாகத் துருவி வைத்துக் கொண்டு, பரிமாறும் போது மட்டுமே சிறிது சிறிதாகக் கலந்து தரவும். 

* எக்காரணம் கொண்டும் சுண்டல்களுக்கு, முக்கியமாக பட்டாணி, கொத்துக் கடலைக்கு உப்பைச் சேர்த்து வேக வைக்கக் கூடாது. தோல் தனியாகக் கழண்டு விடும்.

* கேரட், மாங்காயை முன்னமே சுண்டலில் கலந்து வைத்தால் உப்புடன் சேர்த்து நொசநொசவென்று ஆகிவிடும். அவ்வப்போது கொஞ்சமாக சேர்த்துக் கொள்வதே நல்லது. புளிப்பான மாங்காயாக இருந்தால் மிகக் குறைவாக உபயோகிக்கவும்.

* தேங்காயையும் துருவலாக இல்லாமல் பொடிப் பொடியாகக் கீறிவைத்துக் கொண்டு கலக்கலாம். பீச் சுண்டல் எஃபக்ட் கிடைக்கும்.
 
* அரைத்த விழுதை, பட்டாணியில் பத்து நிமிடங்கள் பிசிறிவைத்தும், தாளித்துச் செய்யலாம். 

* இந்த முறையில் பச்சைப் பயறு, பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பிலும் சுண்டல் செய்யலாம்.

நாங்கள் கிராமத்திற்குப் போகும்போது பஸ் ஸ்டாண்ட்(டில் காத்திருக்கும் நேரத்தில்) புளியமரத்திலிருந்து கொழுந்தைப் பறித்துவந்து குழம்பு, துவையல், ரசம், பச்சடி எல்லாமே செய்திருக்கிறோம். இந்த ஆந்திரச் சுண்டல் புதுமையாக இருந்தது.

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 1/2 கிலோ
பச்சை மிளகாய் – 3, 4
புளியங்கொழுந்து – 1 கப்
எண்ணெய்
உப்பு
கொத்தமல்லித் தழை

செய்முறை:

  • பயத்தம் பருப்பை உப்பு சேர்த்து அரை வேக்காடாக சுண்டல் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், கடுகு, காயம், உளுத்தம் பருப்பு தாளித்து, பச்சை மிளகாய், புளியங்கொழுந்து சேர்த்து வதக்கவும்.
  • அத்துடன் வேகவைத்த பயத்தம் பருப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
  • நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.

* இத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கி சப்பாத்தி வகைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

பயத்தம் பருப்பு/ கடலைப் பருப்பு சுண்டலை இந்த முறையிலும் செய்யலாம். ஆனால் இப்போது சொல்வது, செய்வதற்கும் உண்பதற்கும் எளிமையான சுண்டல். முன்னேற்பாடுகள் எதுவும் இல்லாமலே செய்துவிடலாம்.

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு(அல்லது கடலைப் பருப்பு) – 1 கிலோ
தேங்காய்த் துருவல் – 1 கப்
கேரட் துருவல் – 1/4 கப் (விரும்பினால்)
கொத்தமல்லித் தழை
உப்பு

தாளிக்க: எண்ணெய், கடுகு,  இரண்டு காய்ந்த மிளகாய், பெருங்காயம், 2 பச்சை மிளகாய், கறிவேப்பிலை.

payaththam paruppu sundal

செய்முறை:

  • பருப்பை நன்கு கழுவி, ஒன்றரைப் பங்கு தண்ணீர், உப்பு சேர்த்து, குக்கரில் 5 நிமிடம் வெயிட் போடாமல் வேகவிடவும்.
  • திறந்து பார்த்து, பருப்பு அரைப்பதம் மட்டும் வெந்ததும் (கையால் நசுக்கினால் நசுங்க வேண்டும், அவ்வளவே.) நீரை வடித்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில், எண்ணெய் வைத்து கடுகு, இரண்டாகக் கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • வேகவைத்த பருப்பைக் கொட்டி மேலும் ஐந்து நிமிடங்கள் கிளறவும்.
  • தேங்காய்த் துருவல், கேரட் துருவல், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலந்து உபயோகிக்கலாம்.

kadalai paruppu sundal

* பயத்தம் பருப்பு வேகவைக்கும் போது குழைந்துவிடும் என்று அஞ்சுபவர்கள்:

ஒன்றிரண்டு மணி நேரங்கள் பருப்பைத் தன்ணீரில் ஊறவிடவும். ஒரு பாத்திரத்தில் ஒரு பங்கு தண்ணீரைக் கொதிக்க வைத்து, உப்புச் சேர்த்து, பருப்பையும் அதில் கொட்டி, அடுப்பை அணைத்து மூடிவைத்துவிடவும். பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்துத் திறந்தால் சரியான பதத்தில் இருக்கும். கடலைப் பருப்பாக இருந்தால் கொதிக்கிற தண்ணீரில் போட்டு மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்கவைத்து அடுப்பை அணைக்கவும். மிச்ச நீரை வடித்து விடவும்.

அல்லது

தண்ணீரில் ஊறவைக்காமல், குக்கரிலும் வைக்காமல், நேரடியாக ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றரைப் பங்கு தண்ணீர் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும், சிம்மில் வைத்து, அதில் பருப்புடன் உப்புச் சேர்த்து வேகவிடவும். அடிக்கடி திறந்து பார்த்து, அரைப்பதம் வெந்ததும், (பத்தே நிமிடங்களில் ஆகிவிடும்.) இறக்கி நீரை வடியவிடவும். நம் கை மீறி எதுவும் நடக்காது.

சரி, எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தும் பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மட்டுமல்ல, தட்டப் பயறு, பச்சைப் பயறு போன்ற மென்மையான பயறுகள் கூட குக்கரில் வைத்ததில் லேசாகக் குழைந்து விட்டது. இனிமேலும் வாணலியில் போட்டு வதக்கினால் மேலும் நிலைமை மோசமாகும் என்றால் என்ன செய்வது? சிம்ப்பிள்! இறக்கிய உடனே, வெந்த பயறிலிருந்து நீரை வடித்துவிட்டு  நேராக குளிர்ந்த நீர்க் குழாயடியில் நீட்டவும் அல்லது குளிர்ந்த நீரை நிறைய சேர்த்து வடிகட்டவும். பயறு ஒன்றோடென்று ஒட்டாமல் கொஞ்சம் கடினத் தன்மை அடையும். பின்னர் சமாளிப்பது சுலபம். எதற்கும் பயறுகளை குக்கர் அடங்கியதும் உடனே திறந்துபார்த்துவிடுவது நல்லது.

-0-

வெல்லச் சுண்டல்:

* பயத்தம் பருப்பை வாணலியில் வறுத்து, தண்ணீர் சேர்த்து முக்கால் பதம் வேகவைக்கவும். ஒரு கப் பயத்தம் பருப்பிற்கு ஒரு கப் வெல்லம் சேர்த்துக் கிளறி, நீர் வற்றியதும் தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, நெய் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

* ஒரு கப் பயத்தம் பருப்போடு ஒரு கப் கேரட் துருவலும் சேர்த்துச் செய்தால் ஒன்றரை கப் வெல்லம் போட்டுக் கிளறலாம்.

* கால் கிலோ கடலைப் பருப்பை வாணலியில் வறுத்து, நீர் விட்டு முக்கால் பதம் வேகவைத்து, 200 கிராம் சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறுகியதும் ஏலப்பொடி, சிறிது நெய் சேர்த்துக் கிளறி இறக்கலாம்.

தேவையான பொருள்கள்:

பச்சைப் பயறு – 1 கிலோ
பச்சை மிளகாய் – 6, 7
இஞ்சி – சிறிய துண்டு
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சைச் சாறு (விரும்பினால்)
 
தாளிக்க: எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

pachchai payaru sundal

செய்முறை:

  • பச்சைப் பயறை தண்ணீரில் ஊறவைக்கவும்.
  • நீரை வடித்து, புதிதாக அரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்து மீண்டும் நீரை ஒட்ட வடிக்கவும்.
  • தேங்காய், 4 பச்சை மிளகாய், இஞ்சுத் துண்டு, உப்பை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்.
  • அடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், மிச்சமிருக்கும் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கியது, கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • வேகவைத்த பயறு, அரைத்த விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • விரும்பினால் இறக்கியதும் சில துளிகள் மட்டும் எலுமிச்சைச் சாறு பிழியலாம். இது நாம் தவறுதலாக அதிக உப்போ, காரமோ சேர்த்திருந்தால் சரிசெய்யும். மேலும் மேலும் சாப்பிடும் ஆசையைத் தூண்டும்.

* இந்த முறையில் பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பிலும் செய்யலாம்.

* அரைத்த விழுதை, பயறில் பத்து நிமிடங்கள் பிசிறிவைத்து, தாளித்தும் செய்யலாம். இதில் நன்றாக சுவை உள்ளே ஊறியிருக்கும். சீக்கிரம் வதக்கி இறக்கிவிடலாம்.

-0-

வெல்லச் சுண்டல்:

பச்சைப் பயறை வறட்டு வாணலியில் வறுத்து, குக்கரில் நன்றாக வேகவைக்கவும். கால் கிலோ பருப்பிற்கு 300 கிராம் வெல்லம் கெட்டிப் பாகாக வைத்து, வேக வைத்த பயறு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி, இறுகியதும் ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்.

வறுத்து அரைக்காமல் கொஞ்சம் சுலபமாகச் செய்யக் கூடிய முறை.

தேவையான பொருள்கள்:

தட்டப் பயறு – 1 கிலோ
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
தேங்காய் – 1 மூடி
சாம்பார்ப் பொடி – 3, 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், ஒரு பச்சை மிளகாய், கறிவேப்பிலை.

thatta payaru sundal

செய்முறை:

  • தட்டப் பயறை சுமார் எட்டிலிருந்து பன்னிரண்டு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.
  • மீண்டும் கழுவி, குக்கரில் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிட்டு, நீரை வடிக்கவும்.
  • புளியை நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • புளி நீர், வேகவைத்த பயறு, தேவையான அளவு உப்பு, சாம்பார்ப் பொடி சேர்த்து மேலும் 10 நிமிடங்களுக்குக் கிளறவும். நீர் வற்றி, புளி வாசனை போக வேண்டும்.
  • இறக்கும் முன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும்.

* இந்த முறையில் மொச்சைப் பயறு, பச்சைப் பயறிலும் செய்யலாம்.

* சுண்டல் மிஞ்சினால் அடுத்த வேளை கறியில், கூட்டில் அல்லது குழம்பில் சேர்த்துக் கொள்ளலாம். இதிலும் புளி, உப்பு, காரம் சேர்த்திருக்கிறோம் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* 2 தக்காளி, இஞ்சி, கரம் மசாலா, நீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, சப்பாத்தி வகைகளுக்கும் உபயோகிக்கலாம்.

நவராத்திரி நாயகி: ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி (மலேசியா) – ரங்கமீனா

சுண்டல் புராணம் – என்.சுவாமிநாதன்

தேவையான பொருள்கள்:

மொச்சைப் பயறு – 1 கிலோ
தேங்காய் – 1 மூடி
உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைக்க:
மல்லி விதை – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 15
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க: எண்ணெய், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை.

mochchai payaru sundal

செய்முறை:

  • மொச்சைப் பயறை சுமார் எட்டிலிருந்து பன்னிரண்டு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.
  • மீண்டும் கழுவி, குக்கரில் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிட்டு, நீரை வடிக்கவும்.
  • அடுப்பில் வாணலியில் சிறிதளவு எண்ணெயில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், மல்லி விதையை வறுத்து நைசாகப் பொடிக்கவும்.
  • வாணலியில் எண்ணையில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, துருவிய தேங்காயைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வேகவைத்த பயறு, தேவையான அளவு உப்பு, அரைத்த பொடி சேர்த்து மேலும் 5 நிமிடங்களுக்கு கிளறி இறக்கி உபயோகிக்கவும்.

பெண்களே! கீழே இருக்கும் ஆணிய (அழுகைக்) கட்டுரைத் தொடரை அவசியம் படியுங்கள். நவராத்திரியைக் கொண்டாடுங்கள்!!

 நவராத்திரி சிறப்பு நகைச்சுவைக் கட்டுரை: அவ(¡)ளோட ராவுகள்
பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்.

தேவையான பொருள்கள்:

கோதுமை – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
பச்சை மிளகாய் – 4, 5
தேங்காய் – 1 மூடி
உப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
எண்ணெய்

செய்முறை:

  • கோதுமை, உளுத்தம் பருப்பு இரண்டையும் தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து, நீரை வடிக்கவும்.
  • இவற்றுடன் பச்சை மிளகாய், தேங்காய், பெருங்காயம், தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து, நன்கு அரைத்து இட்லி மாவுப் பதத்தில் எடுக்கவும்.
  • பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும், ஒரு கரண்டியால் மாவை எடுத்து விட்டு, இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

* அப்பக் குழியிலும் செய்யலாம்.

* உளுத்தம் பருப்பு சேர்ப்பதால் மென்மையாக இருக்கும்.

* தண்ணீரைக் குறைத்துக் கொண்டு இரண்டு கரண்டி தயிர் சேர்த்து அரைத்தால் சுவையாகவும், உள்ளே குழலாகவும் இருக்கும்.

* ஒன்றிரண்டு பச்சை மிளகாய்களை பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்தால் சாப்பிடும்போது மேலும் சுவையாக இருக்கும். குழந்தைகள் கவனம்.

நவராத்திரி நாயகி: ஆட்கொண்ட தாய் மீனாட்சி – மீனாட்சிசங்கர் (மீனாக்ஸ்)

பஜ்ஜி குறித்த முந்தைய பதிவு

தேவையான பொருள்கள்:

கடலைப் பருப்பு – 1 கப்
பச்சரிசி – 1/3 கப்
துவரம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
காய்ந்த மிளகாய் – 5 அல்லது 6
பெருங்காயம்
எண்ணெய்
உப்பு – தேவையான அளவு.

பஜ்ஜி மிளகாய் (அதிகக் காரமில்லாத பெரிய சைஸ் மிளகாய்)

milagaai bajji 1

செய்முறை:

  • கடலைப் பருப்பு, துவரம் பருப்பு அரிசியைச் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • ஊறியதும் பெருங்காயம், காய்ந்த மிளகாய், சேர்த்து மிக மென்மையாக இட்லிமாவு பதத்திற்கு அரைக்கவும். கிரைண்டரில் அரைத்தால் நலம். மிக்ஸியும் பரவாயில்லை.
  • அரைத்து எடுப்பதற்கு முன் உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • மிளகாய்களை ஓர் ஊசியால் ஆங்காங்கே துளைகள் செய்து, நான்கு மணி நேரம் உப்புத் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடித்து எடுத்து வைக்கவும். இப்படிச் செய்வதால் மிளகாய் அதிகம் காராமல் இருக்கும்.
  • வழக்கமான முறையில் பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு, இரண்டு பக்கமும் பொரிந்து பஜ்ஜி உப்பி வந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும்.

* தோய்த்திருக்கும் மேல்மாவு அடர்த்தியாக இல்லாமல், மெலிதாக மூடியிருந்தால் பாதி வேகும்போதே வெளியே எடுத்துவிடவும். அடுத்த தவணை பஜ்ஜியை எண்ணெயில் போட்டுவிட்டு, இவை ஆறியதும் மீண்டும் மாவில் தோய்த்து எண்ணெயில் நன்றாகப் பொரித்து எடுக்கவும். இப்படிச் செய்வதால் கனமான பஜ்ஜி கிடைக்கும்.

ஸ்டஃப்ட் மிளகாய்:

milagaai bajji 2

பூரணம் செய்ய: (ஏதாவது ஒன்று)

1. புளி, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயம்
2. உருளைக் கிழங்கு, வெங்காயம், சீரகப் பொடி, கொத்தமல்லித் தழை, எலுமிச்சைச் சாறு
2. கொத்தமல்லிச் சட்னி (காரம் இல்லாமல்)
3. வெங்காயச் சட்னி (காரம் இல்லாமல்)
4. புதினாச் சட்னி (காரமில்லாமல்)

milagaai bajji 3

  • மிளகாய்களை ஜாக்கிரதையாக கத்தியால் காம்புக்குக் கீழிலிருந்து அடிக்கு முன்புவரை நடுவில் ஒரு கீறல் போடவும்.
  • உள்விதை, தண்டை நீக்கிவிடவும்.
  • நீர்த்த புளித் தண்ணீரைக் கொதிக்கவைத்து. அதில் மிளகாய்களைப் போட்டு மூடிவைக்கவும்.
  • ஒரு நிமிடம் கழித்து நீரை வடித்துவிட்டால் காரம் போயிருக்கும்.
  • சிறிது கடலை மாவில் உப்பு, ஓமம் அல்லது சீரகம் கலந்து உள்ளே அடைக்கலாம். அல்லது கடலை மாவிலேயே புளித் தண்ணீர், உப்பு, ஓமம் (அல்லது சீரகம்) சேர்த்துக் கலந்து உள்ளே அடைக்கலாம். உள்ளேயும் கடலை மாவு விரும்பாதவர்கள், வேகவைத்த உருளைக் கிழங்கை, மசித்து, மெலிதாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, சீரக்ப் பொடி, உப்பு கலந்து ஸ்டஃப் செய்யலாம். அல்லது காரம் இல்லாத/ குறைந்த காரமுள்ள வெங்காயச் சட்னி, கொத்தமல்லிச் சட்னி அல்லது புதினாச் சட்னியை உள்ளே சிறிது தடவியும் வைக்கலாம்.

பிரட்:

பிரட் ஸ்லைஸ்களை ஓரம் நீக்கி, அதன் அளவைப் பொருத்து நான்காக அல்லது இரண்டாக வெட்டிக் கொள்ளவும். ப்ரட்டில் செய்யும் போது கொத்தமல்லி அல்லது புதினா சட்னியை ஒரு பக்கத்தில் தடவி, இன்னொரு ப்ரட்டை வைத்து மூடி மாவில் தோய்த்து எண்ணையில் போடவும்.
 

குடமிளகாய்:
 
குடமிளகாயை ஒன்றரை அங்குலத் துண்டுகளாக நறுக்கி, அதன் உள்பகுதியில் ஏதாவது காரமில்லாத சட்னியைத் தடவி, மாவில் தோய்த்துப் போடலாம்.
 

அப்பளம்:

அப்பளங்களை 4 அல்லது 6 பாகமாக உடைத்துக் கொள்ளவும். மசாலா அப்பளமாக இருந்தால் அப்படியே இரண்டு துண்டுகளை சேர்த்து மாவில் தோய்த்துப் போடலாம். சாதா அப்பளமாக இருந்தால் ஏதாவது சட்னி அல்லது நெய்யில் இட்லி மிளகாய்ப் பொடியைக் குழைத்து, ஒரு அப்பளத் துண்டில் தடவி, மற்றொரு துண்டால் மூடி, மாவில் தோய்க்கவும். இது எங்கள் வீட்டில் அதிகம் பேர் வாங்கிய பஜ்ஜி.
 

பனீர்:

பனீர் துண்டுகளை கெட்டியான சட்னியில் பிரட்டி, மாவில் தோய்த்துப் போடலாம். என்னைப் பொருத்த வரை கொத்தமல்லிச் சட்னி அதிகம் பொருந்துகிறது.
 

பேபி கார்ன்:

பேபி கார்னை உப்புக் கலந்த கொதிக்கும் நீரில் பத்து நிமிடங்கள் போட்டு வைத்து நீரை வடிக்கவும். மேலாக பூரணம் செய்ய 1ல் சொல்லியிருப்பதை மெலிதாகத் தடவி, மாவில் தோய்த்துப் போடலாம். அல்லது எலுமிச்சை மூடியை மேலாகத் தேய்த்து, அதன்மேல் மிளகாய்த் தூள் தூவி, பின்னர் மாவில் தோய்த்துப் போடலாம்.பேபி கார்னிலும் மிகச் சிறிய அளவு இருப்பவை மட்டுமே ஏற்றதாக இருக்கிறது. அல்லது கொஞ்சம் பெரிதாக இருந்தால் நீளவாட்டில் குறுக்கே வெட்டி உபயோகிக்கலாம். 
 

கோஸ்:

கோஸ் இலைகளை தனித் தனியாகப் பிரித்து, தண்டுப் பகுதியை நீக்கி, அந்த இடத்தில் இலையை இரண்டாக்கி, ஒவ்வொன்றிலும் சிறிது கொத்தமல்லிச் சட்னியை தடவி மடித்து, மாவில் தோய்த்துப் போடலாம். இது உண்மையிலே எதிர்பாராத அளவு சுவையாக இருக்கிறது.
 

காளான்:

சிப்பிக் காளானை அப்படியே மாவில் தோய்த்து பஜ்ஜி போடலாம் என்று சொல்கிறார்கள். நான் செய்ததில்லை.
 

வாழைப்பழம்:

வாழைப்பழத்தை வட்ட வட்டமாக நறுக்கி பஜ்ஜி செய்கிறார்கள். நான் என்றுமே செய்வதாக இல்லை. விரும்புபவர்கள் முயற்சித்துப் பார்க்கவும்.
 

* மேலே சொல்லியிருப்பவைகளை, சின்னக் குழந்தைகளுக்கு எந்தச் சட்னியும் வைக்காமலும் செய்து கொடுக்கலாம். பஜ்ஜியின் காரமே அவர்களுக்கு அதிகமாக இருக்கும்.

-0-

காலிஃப்ளவர் பஜ்ஜி

தேவையான பொருள்கள்:

காலிஃப்ளவர் – 1
கடலை மாவு –  1/2 கப்
மைதா மாவு – 1/2 கப்
அரிசி மாவு – 1/4 கப்
டால்டா – 1 டீஸ்பூன்
ஓமம் –  1/2 டீஸ்பூன் (விரும்பினால்)
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்

cauliflower bajji

 செய்முறை:

  • காலிஃப்ளவர் பூவை காம்புடன் பெரிய பெரிய கிளையாக எடுத்துக் கொள்ளவும்.
  • நீரைக் கொதிக்க வைத்த உப்பு சேர்த்து பூக்களை அதில் போட்டு மேலும் 2 நிமிடன்கள் கொதிக்கவிட்டு 5 நிமிடங்களுக்கு மூடி வைத்து நீரை வடிகட்டவும்.
  • கடலை மாவு, மைதா, அரிசி மாவு, உப்பு, டால்டா, மிளகாய்த் தூள் கலந்து முதலில் கையால் நன்கு கலந்து பின்பு தேவையான நீர் விட்டு இட்லிமாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்துக் காய்ந்ததும், பூக்களை மாவில் தோய்த்து பொரித்தெடுக்கவும்.

* வழக்கமான பஜ்ஜி மாவிலும் இதைச் செய்யலாம்.

* சின்னச் சின்ன பூக்களாக உதிர்த்து, மாவில் கலந்து பக்கோடா மாதிரி கொத்தாகவும் போடலாம். ஆனால் பக்கோடாவிற்கு இருப்பது போல் பஜ்ஜி மாவு இறுக்கமாக இல்லாமல் தளர்வாகத் தான் இருக்க வேண்டும்.

* பஜ்ஜிக்கு நறுக்கி வைத்து மிஞ்சிய கலவையான காய்களை அப்படியே இரவு, புளியைக் கரைத்து குழம்பு வைக்கும்போது காயாகப் போட்டு, மிஞ்சிய கடலை மாவுக் கலவையைக் குழம்பிலேயே கரைத்து விட்டதில் வந்த கதம்பப் புளிக் குழம்பு, எந்த சமையல் குறிப்புக்கும் அடங்காத அபார சுவை; அவரவர் சமையலறைக்கே பிரத்யேகமான, குறிப்பாகச் சொல்ல முடியாத சில சமையலில் இதுவும் அடங்கும்.

பஜ்ஜி கட்டுரைத் தொடரின் இன்னொரு பார்வை…

தமிழ்நாட்டில் பெண்பார்க்கச் செல்பவர்களுக்குக் கொடுக்கப் படும் முக்கிய உணவு. : ) எப்பொழுதிலிருந்து அந்த இடத்தை இது பிடித்தது, ஏன் அவர்களுக்கு பஜ்ஜியை தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை மக்கள் வந்ததும் வேகமாகத் தயாரிக்க முடிவதும், ஒரே வகையில் வெரைட்டி காண்பிக்க முடிவதும் காரணமாக இருக்கலாம். தமிழ்நாட்டின் நடைபாதைத் தள்ளுவண்டிகளில் அன்றாடம் அதிகம் விற்பனை ஆவதும் இதுவாகத் தான் இருக்கும்.

தேவையான பொருள்கள்:

கடலைப் பருப்பு – 1 கப்
பச்சரிசி – 1/3 கப்
துவரம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
காய்ந்த மிளகாய் – 4 அல்லது 5
பெருங்காயம்
எண்ணெய்
உப்பு – தேவையான அளவு.

கத்திரிக்காய், வாழைக்காய், வெங்காயம், உருளைக் கிழங்கு, சௌசௌ போன்ற காய்கறிகள்….

bajji 1

செய்முறை:

  • கடலைப் பருப்பு, துவரம் பருப்பு அரிசியைச் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • ஊறியதும் பெருங்காயம், காய்ந்த மிளகாய், சேர்த்து மிக மென்மையாக இட்லிமாவு பதத்திற்கு அரைக்கவும். கிரைண்டரில் அரைத்தால் நலம். மிக்ஸியும் பரவாயில்லை.
  • அரைத்து எடுப்பதற்கு முன் உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • காய்கறிகளை தயாராக நறுக்கிக் கொள்ளவும். கத்திரிக்காய், உருளைக் கிழங்கு, வெங்காயம், சௌசௌ போன்ற உருளையான காய்களை மெல்லிய வட்டமாக நறுக்கவும். வாழைக்காயை இரண்டாக வெட்டி, அகலமான இரண்டு பக்கங்களில் மட்டும் தோல்சீவி, நீளவாக்கில இரண்டு பக்கமும் தோலோடு மெலிதாக நறுக்கவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து நன்கு சூடாக்கவும். பஜ்ஜிக்கு எண்ணெய் குறைவாகக் காய்ந்திருந்தால் சரியாக வேகாமல் எண்ணெயைக் குடித்து சவசவவென்றிருக்கும். அதிகம் காய்ந்திருந்தால் மேலாகக் கருகி, உள்ளே காய் வேகாமல் இருந்துவிடும். சரியான பதத்தில் எண்ணெய் சுட்டதும் அடுப்பை நிதானமான சூட்டில் வைக்கவும்.
  • நறுக்கித் தயாராக வைத்திருக்கும் காய்கறிகளை ஒவ்வொன்றாக மாவில் தோய்த்து, எண்ணெயில் போடவும்.
  • இரண்டு பக்கமும் பொன்னிறமாகப் பொரிந்து பஜ்ஜி உப்பிவந்ததும் எண்ணெயை வடித்து வெளியே எடுக்கவும். 

bajji 2 

*  வெங்காயம், சௌசௌ போன்ற காய்கள் கொஞ்சம் இனிப்பாக இருப்பது பிடிக்கவில்லையென்றால் குடமிளகாயை வட்டமாக நறுக்கி, அதையும் அவைகளோடு சேர்த்து தோய்த்துப் போடலாம்.

* தோய்ந்திருக்கும் மாவு அடர்த்தியாக இல்லாமல், மெலிதாக மூடியிருந்தால் பாதி வேகும்போதே வெளியே எடுத்துவிடவும். அடுத்த தவணை பஜ்ஜியை எண்ணெயில் போட்டு எடுத்துவிட்டு, இவை ஆறியதும் மீண்டும் மாவில் தோய்த்து எண்ணெயில் நன்றாகப் பொரித்து எடுக்கவும். முக்கியமாக அப்பளம் போன்றவைகளுக்கு இந்தப் பிரச்சினை வரலாம்.

* வீட்டிலேயே பருப்புகளை ஊறவைத்து அரைப்பது மிகச் சிறந்த முறை. ஊறவைத்து செய்ய நேரமில்லை என்றால் கடலைப் பருப்பு, துவரம் பருப்பை வாணலியில் வறுத்து 5 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து, மிக்சியில் நைசாக அரைத்து, அரிசி மாவு கலந்து செய்யலாம்.

* பின்வருகிற அளவுகளில் மொத்தமாக மிஷினிலும் அரைத்துவைத்துக் கொள்ளலாம். அவ்வப்போது தேவையான அளவு மாவை உப்பு பெருங்காயம் சேர்த்துக் கரைத்துச் செய்யலாம்.

1. கடலைப் பருப்பு – 3 கப், பச்சரிசி – 1/2 கப், காய்ந்த மிளகாய் – 12

2. பச்சரிசி 1 1/2 கப், துவரம் பருப்பு – 1 கப், கடலைப் பருப்பு – 1 கப், உளுத்தம் பருப்பு – 1/2 கப், காய்ந்த மிளகாய் – 12

* சட்டென பஜ்ஜி தயாரிக்க கடலை மாவு ஒரு கப், அரிசி மாவு ஒரு டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கரைத்தும் செய்யலாம். அதிகம் பேர் அப்படித் தான் செய்கிறார்கள்.

* பஜ்ஜி கரகரப்பாக இருக்க சமையல் சோடா சேர்ப்பதை விட இரண்டு டீஸ்பூன் டால்டா அல்லது 1 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃளோர் சேர்த்துக் கொள்ளலாம்.

* கரகரப்பாக இல்லாமல் மெத்தென்று இருக்க மைதா மாவு 2 டேபிள்ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம். இது ஆறிய பின்னும் சுவையாக இருக்கும்.

* இட்லி அல்லது தோசை மாவு இருந்தாலும் ஒரு கரண்டி கலந்து கொள்ளலாம்.

* பஜ்ஜி கடையில் செய்வதைப் போல் நிறமாக இருக்க விரும்புபவர்கள் கலர் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது காஷ்மீர் மிளகாய்த் தூள் சேர்த்து உபயோகித்தாலும் அடர் சிவப்பாக இருக்கும். என்னுடையது அதுவே.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தேங்காய்ச் சட்னி…

நல்ல மழை…

சுடச் சுட செய்து தட்டில் எடுத்து வந்து கையில் கொடுக்க அம்மா அல்லது மாமியார் [ஒருவேளை அவர்களைக் கேட்டால் மருமகள் என்று சொல்லலாம். :)]…

“போரடிக்குதுன்னு நீ சொன்னியேன்னு தான் வேலையை எல்லாம் போட்டுட்டு சீக்கிரமே வந்தேன்” என்று (பொய்) சொல்லிக் கொண்டு எதிர்பாராத நாளில் மாலையிலேயே கிரிக்கெட் மேட்ச் பார்க்க வரும் கணவன்…

பேசுவதற்கு சூடான விஷயங்கள்..

“C6 block கட்டிடமே என்னமோ இடிஞ்சு விழுந்துடுச்சுன்றாங்க. காலனியே அங்க இருக்கு, நீ பஜ்ஜி போட்டுகிட்டிருக்க?”

“எதுக்கு இவ்ளோ அதிர்ச்சி? ரெண்டு வருஷமா அதைத் தானே நான் அலறிகிட்டிருக்கேன். கன்ஸ்ட்ரக்ஷன் படு கேவலம். எல்லாரும் சாப்பிட்டுட்டாங்கன்னு நான் சொல்லும்போதெல்லாம் ஆளாளுக்கு வானமாமலை ஜீயரைச் சுத்தி நிக்கிற அடிப்பொடிகள் மாதிரி உஸ் உஸ்னு என் வாயை அடைச்சாங்க. இன்னிக்கு என்னவோ நடக்க முடியாதது நடந்த மாதிரி…. எனக்கு அதிர்ச்சியெல்லாம் இல்லை. நல்லவேளை, யாருக்கும் ஒன்னும் ஆகலை, வீட்டுக்குள்ள இருந்திருக்காங்க. இதுக்கு மேல இதுக்கெல்லாம் என்னால ரியாக்ஷனும் காமிக்க முடியாது! நான் அங்க ஒன்னும் சொல்லாம வந்ததுக்கே எனக்கு நன்றி சொல்லுங்க. தேவை இல்லைன்னு தான் உங்களுக்கும் ஃபோன்ல சொல்லலை.”

“நீ போய்ப் பாக்கலையா?”

“பின்ன பார்க்காம? ஃபர்ஸ்ட் ஃப்ளோர் வாசல் கதவுலேருந்து மாடிப்படி வரைக்கும் முழுக் காரிடரும் மொத்தமா விழுந்திருக்கு. லட்சக்கணக்குல காலனில திருட்டுப் போனப்ப ஒரு FIR ஃபைல் பண்ண என்ன பிகு செஞ்சாங்க போலீஸ் ஸ்டேஷன்ல, இப்ப ஊருக்கு முன்னாடி வந்து நிக்கறாங்க. நான் போறதுக்குள்ளயே Fire Brigades, Police, Media… எல்லாரும் வந்தாச்சு. ஒரு மாசத்துக்குள்ள காலி செய்யணுமாம். இல்லைன்னா சீல் வெப்போம்னு ஆர்டர்..”

“உனக்கு பயமா இல்லையா இந்த பில்டிங்ல இருக்க? கூலா பஜ்ஜி சாப்பிடற, அலட்டிக்காம கம்ப்யூட்டர்ல வேற வந்து உக்கார்ற?”

“இல்லையே சூடாத் தான் பஜ்ஜி சாப்பிடறேன். உங்களுக்கு பயமா இருந்தா ப்ளாட்ஃபார்ம்ல போய்ப் படுங்க. நானெல்லாம் தமிழச்சி. உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்…” ஐயோ!! மேற்குப் பதிப்பகம் கிட்டேயிருந்து பின்னூட்டம் வந்திருக்கா?? தலை சுத்துதே..!!!

மிளகாய் பஜ்ஜி இன்னபிற….

பஜ்ஜி குறித்த சுவாரசியமான கட்டுரைத் தொடர்…

தேவையான பொருள்கள்:

முழு உளுந்து – 2 கப்
சீரகம் –  2 டீஸ்பூன்
மிளகு – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்.

செய்முறை:

  • மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
  • உளுந்தைக் நீரில் கழுவி, 15 அல்லது 20 நிமிடங்கள் மட்டும் ஊறவைக்கவும்.
  • தண்ணீர் சேர்க்காமல், சாதாரணமாக வடைக்கு அரைப்பதை விடவே அதிக நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • அதில் உடைத்த மிளகு, சீரகம், உப்பு சேர்த்துப் பிசையவும்..
  • வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, எண்ணை தடவிய இலை அல்லது ப்ளாஸ்டிக் பேப்பரில் தட்டையாகத் தட்டி, நடுவில் துளை இட்டு, காய்ந்துகொண்டிருக்கும் எண்ணெயில் நன்கு பொரித்தெடுக்கவும்.

* அரைத்து அதிக நேரம் வைத்திருந்தால் நிறம் மாறிவிடும். உடனே செய்துவிட வேண்டும்.

* சாப்பிட தட்டை மாதிரி கடினமாக இருக்கும். பலநாள்களுக்குக் கெடாது.

* துளை வழியாக நூலில் மாலையாகக் கட்டி அனுமாருக்குச் சாற்றலாம்.
 

தேவையான பொருள்கள்:

துவரம் பருப்பு – 1 கப்
கடலைப் பருப்பு – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
காய்ந்த மிளகாய் – 5
பெருங்காயம்
தேங்காய்
கறிவேப்பிலை
உப்பு – தேவையான அளவு

தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு.

செய்முறை:

  • பருப்புகளை ஊறவைத்து காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக இட்லிமாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
  • மெலிதாகக் கீறிய தேங்காய்த் துண்டுகள், நறுக்கிய கறிவேப்பிலை சேர்க்கவும்.
  • எண்ணையில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்துக் கலக்கவும்.
  • வாணலியில் நன்றாக எண்ணை காய்ந்ததும் சிறு கரண்டியால் எடுத்துவிட்டு மிதமான தீயில் இருபக்கமும் சிவந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

அடுத்த பக்கம் »