ரசம்/சூப்


புளி சேர்க்காமல் தயாரிக்கும் ரசம். புளி ஆகாத ஏதாவது நாட்டு மருந்து சாப்பிடும் நாளில் அல்லது அதிகப் புளி சேர்த்து வேறு குழம்பு, கூட்டு வகைகள் செய்யும்போது ரசத்தை இந்த முறையில் தயாரித்துக் கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:

தக்காளி – 4
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை
பருப்புத் தண்ணீர் – 2 கப்

வறுத்து அரைக்க:

எண்ணெய் – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
மிளகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1/2 டீஸ்பூன் (விரும்பினால்)
தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்

தாளிக்க:  எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

poriththa rasam

செய்முறை:

  • எண்ணெயில் காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகை சிவக்க வறுத்து, தேங்காய்த் துருவல், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒன்றரை கப் தண்ணீரில் இரண்டு தக்காளிப் பழங்களை நன்கு மசித்துக் கொள்ளவும்.
  • மீதமிருக்கும் தக்காளிகளை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூளையும் தக்காளிக் கரைசலுடன் சேர்த்து அடுப்பில் வேகவைக்கவும்.
  • தக்காளி வெந்ததும், பருப்பு வேகவைத்த தண்ணீர், அரைத்த விழுது சேர்த்து பொங்கி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  • சிறிது எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.

விழுது சேர்த்ததும் ரசத்தை அதிகம் கொதிக்கவைக்கக் கூடாது. பொங்கிவந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும். இப்படிச் செய்தால் மண்டி தங்காமல் பரிமாறும்போது அடிவரை கலந்தே பரிமாறலாம். இதனால் அரைத்துவிட்ட பொருள் வீணாகாமல், சுவையும் குறையாமல் இருக்கும்.

தேவையான பொருள்கள்:

தக்காளி – 4 (பெரியது)
பச்சை மிளகாய் – 2, 3
இஞ்சி – சிறு துண்டு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
ரசப் பொடி – 1/2 டீஸ்பூன்
பருப்பு வேகவைத்த நீர் – 2 கப்
தேங்காய்ப் பால் – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
கொத்தமல்லித் தழை
எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க: நெய் (எண்ணெய்), கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

elumichchai rasam

செய்முறை:

  • துவரம் பருப்பு வேகவைத்த நீர் இரண்டு கப் எடுத்துவைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து தக்காளிகளை முழுதாகப் போட்டு, 5 நிமிடங்களுக்கு மூடிவைக்கவும்.
  • தக்காளிகளை மேல்தோலை நீக்கி, அந்தத் தண்ணீரிலேயே கையால் நன்கு மசித்துக் கொள்ளவும்.
  • மேலும் ஒரு கப் தண்ணீர், துண்டாக நறுக்கிய(அல்லது நசுக்கிய) இஞ்சி, குறுக்கே கீறிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து அடுப்பில் கொதிக்கவைக்கவும்.
  • தக்காளி பச்சை வாசனை போனதும் ரசப் பொடி சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் மட்டும் கொதிக்கவைத்து பருப்பு நீரையும் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.
  • ரசம் நுரைக்கக் கொதித்து, பொங்கி மேலே வரும்போது கெட்டியான தேங்காய்ப் பால் சேர்த்து, அடுப்பை அணைக்கவும்.
  • கொத்தமல்லித் தழை சேர்த்து, நெய் அல்லது எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். .
  • பரிமாறும் நேரம் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

* இந்த ரசம் வண்டல் இல்லாமல் அடிவரை கலந்து பரிமாறலாம். வீணாக்காமல் முழுமையாக உபயோகிக்கலாம்.

* பச்சை மிளகாய், எலுமிச்சை, பருப்பு நீரின் மணம் அதிகமாக இருந்தால் சுவைக்கும். நன்கு வேகவைத்த துவரம்பருப்பையும் சிறிது எடுத்து, நன்றாக மசித்து, கொதிக்கும் ரசத்தில் கலந்துகொள்ளலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இந்த ரசம் சாதத்திற்கு, சாதா கறி வகைகள், அப்பளம், வடாம் தவிர உருளை, வாழை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்ற ஏதாவது ஒன்றில் செய்த பொடிமாஸ் அல்லது ரோஸ்ட் கறி வகைகள் நன்றாக இருக்கும்.

கடுப்பு வலியைப் போக்கும் கண்டத்திப்பிலி என்பது வழக்கு. மழை அல்லது சீதோஷ்ண மாற்றங்கள், மிகுதியான வேலை போன்ற காரணங்களால் வரும் உடல் வலி, காய்ச்சல், தொண்டைக் கட்டு போன்ற அறிகுறிகளுக்கு இந்த ரசம் மிகவும் சிறந்த மருந்து.

ஸ்ரீகாந்த், மேலதிகத் தகவல்கள், குறிப்பில் மாற்றங்கள் இருந்தால் உங்கள் அம்மாவிடம் கேட்டு இங்கே சொல்லவும்.

தேவையான பொருள்கள்:

புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள்
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
நெய்

kandaththippili

வறுத்து அரைக்க:
கண்டத்திப்பிலி – 8, 10 குச்சிகள்
சதகுப்பை – 2 டீஸ்பூன் (விரும்பினால்)
பூண்டு – 4 பல் (விரும்பினால்)
காய்ந்த மிளகாய் – 2
துவரம் பருப்பு – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
 

தாளிக்க: கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

kandaththippili rasam

செய்முறை:

  • திப்பிலி, சதகுப்பை, மிளகாய், துவரம் பருப்பு, மிளகு, சீரகத்தை தனித் தனியாக, நன்கு சிவக்க நெய்யில் வறுத்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • புளியை நீர்க்கக் கரைத்து உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், லேசாக நசுக்கிய பூண்டுப் பல் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
  • புளி வாசனை போனதும், அரைத்த விழுதைப் போட்டு, கொதித்ததும்(இந்த நேரத்தில் நல்ல வாசனை வரும்.), தேவையான தண்ணீர் மேலும் சேர்த்து விளாவவும்.
  • நிதானமான தீயில் பொங்கிவரும்போது இறக்கவும்.
  • ஒரு டீஸ்பூன் நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.

* மற்ற ரசம் மாதிரி தெளிவாக இல்லாமல் கொஞ்சம் கலங்கி கெட்டியாகத் தான் இருக்கும்.

* திப்பிலி என்று பொதுவாகக் குறிப்பதைவிட கண்டத்திப்பிலி என்று சொல்வதே வசதி. ஏனென்றால் அரிசித் திப்பிலி என்றும் ஒரு மருந்துப் பொருள் (கருப்பாக மிளகுவகை மாதிரி) இருக்கிறது.

* சதகுப்பைக்குப் பதில் 10 அரிசித் திப்பிலியும் சேர்த்துக் கொள்ளலாம்.

* பொதுவாக இதில் தக்காளி சேர்ப்பதில்லை. நான் சேர்க்கவில்லை. விரும்புபவர்கள் இரண்டு தக்காளி சேர்த்துக் கொள்ளலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சூடான சாதத்தில், சுடச் சுட இந்த ரசத்தை விட்டுச் சாப்பிடலாம். தொட்டுக் கொள்ள பருப்புத் துவையல். இத்துடன் வேறு உணவுகள், தயிர் சாதம் போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

நான் சமைக்க ஆரம்பிச்சு முதல்முதல்ல செஞ்ச ரசம் இதுதான். ஐயோ, முதல்லயே கஷ்டமானதா எதுக்கு செஞ்ச? சிம்பிளா எதாவது வறுக்காம அரைக்காம செய்யற சாத்துமதா செஞ்சிருக்கலாமேன்னு அம்மா பயந்தாங்க. இது கஷ்டம், இது சுலபம்னெல்லாம் கண்டுபிடிக்கற அளவுக்குக் கூட சமையல் அறிவு இல்லாதவ, எதைச் செஞ்சாலும் டைரியைப் படிச்சுதான் செய்யணுங்கற நிலைமைல இருக்கறவளுக்கு கஷ்டம் என்ன, சுலபம் என்ன? நல்லா இருந்ததும்மான்னு வேற தன்னடக்கத்தோட சொல்லிப் பார்த்தேன். இது யார் செஞ்சாலும் நல்லாத் தான் இருக்கும்னு சொல்லிட்டாங்க. (Grrr…)

தேவையான பொருள்கள்:

புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
தக்காளி – 2, 3
துவரம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் (வேகவைத்து மசித்தது)
மஞ்சள் தூள்
உப்பு – தேவையான அளவு

mysore rasam 1

வறுத்துப் பொடிக்க:
காய்ந்த மிளகாய் – 3
மல்லி விதை – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு – 1 டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காயம்
கொப்பரைத் தேங்காய் – 1 டேபிள்ஸ்பூன்(துருவியது)

தாளிக்க: எண்ணெய், கடுகு, சீரகம், , கறிவேப்பிலை.

mysore rasam 2

செய்முறை:

  • புளியை நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் வைத்து, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, மிளகு, மல்லி விதை, சீரகம், பெருங்காயம், கொப்பரைத் தேங்காய்த் துருவல் என்ற வரிசையில் வறுத்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
  • புளி நீரில் தக்காளியை கையால் நன்றாக நசுக்கிவிட்டு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
  • புளி வாசனை அடங்கியதும், வேக வைத்த துவரம் பருப்பும் அடுத்து அரைத்து வைத்துள்ள பொடியையும் போட்டு மேலும் கொதிக்க விடவும்.
  • தேவையான தண்ணீர் சேர்த்து விளாவி, நிதானமான தீயில், பொங்கி வரும் சமயம் இறக்கவும்.
  • எண்ணெயில் கடுகு, சீரகம் கறிவேப்பிலை தாளித்து, கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறலாம்.

* அடியில் வண்டலாக இருக்கும். மேலாக நன்றாகக் கலக்கிப் பரிமாறினால் தான் சுவையாக இருக்கும். அப்படியும் வண்டல் மிஞ்சியிருந்தால் அதை அடுத்த வேளைக்குச் செய்யும் கூட்டில் அல்லது குழம்பில் விடலாம். : ) சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

ஏனோ தக்காளி ரசம், மிளகு ரசம், எலுமிச்சை ரசம் என்றெல்லாம் சொல்வதுபோல் மோர் ரசம் என்று சொல்ல வரவில்லை. அதனால் மோர்ச் சாத்தமுது என்றே இருக்கட்டும்.

தேவையான பொருள்கள்:

தயிர் – 1 கப் (அதிகம் புளிக்காதது)
தண்ணீர் – 1 கப்
காய்ந்த மிளகாய் – 1
மிளகு – 10
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
தாளிக்க –  எண்ணை, கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், பெருங்காயம்.
உப்பு –  தேவையான அளவு
கொத்தமல்லித் தழை.

mor saaththamuthu

செய்முறை:

  • தயிரை தண்ணீருடன் கலந்து நன்கு கடைந்து, [அட, மோர் தாங்க! :)] தேவையான உப்பு சேர்க்கவும்.
  • வாணலியில் 1/2 டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்த மிளகாய், மிளகு, வெந்தயம், உளுத்தம்பருப்பை வறுத்து மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து, மோரில் கலக்கவும்.
  • எண்ணையில் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் தாளித்து, நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறலாம்.

* விரும்பினால், பரிமாறும் சமயத்தில் எண்ணையில் 1 டீஸ்பூன் வேப்பம்பூவை வறுத்துச் சேர்க்கலாம். முன்னாலேயே சேர்த்தால் கசந்துவிடும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பொரித்த அப்பளம், வடாம், கறிகள் (கூட்டு அல்ல).

என்னைப் பொருத்த வரை எதோடு சமைப்பது என்பதைவிட எந்த நாளில் சமைப்பது என்பதுதான் முக்கியம். பெண்ணுக்குப் பிடிக்கும் என்பதால் அநேகமாக விரத நாளில் செய்துகொடுப்பேன். விரத நாள் –  எனக்குப் பிடிக்காத மெனு. 🙂 சிம்ப்பிள்!

“எனக்கு சாப்பாட்டில் கட்டாயம் சாத்தமுது இருந்தாகணும்…”
— கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

 “எனக்கு சாத்தமுது மட்டும் இருந்தாலே போதும்; முழுச் சாப்பாடாய் நினைத்து திருப்தியடைவேன்.”
— நாந்தான். 🙂
 

thakkaali rasam

தேவையான பொருள்கள்:

புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
தக்காளி – 2 பெரிது
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
ரசப் பொடி – 1  1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பருப்பு வேக வைத்த தண்ணீர் – 2 கப்
கொத்தமல்லித் தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு
தாளிக்க –  எண்ணை அல்லது நெய், கடுகு, சீரகம்.

 

செய்முறை:

  • புளியை நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.
  • தக்காளிகளை நான்காக நறுக்கி, நன்கு கையால் மசித்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் கரைத்துவைத்துள்ள புளி, மசித்த தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு கொதிக்க விடவும்.
  • தக்காளித் துணுக்குகள் வெந்து, புளி பச்சை வாசனை போனபின், ரசப் பொடி சேர்க்கவும்.
  • மேலும் 2 நிமிடம் மட்டும் கொதிக்க விட்டு, பருப்புத் தண்ணீர் சேர்க்கவும்.
  • பருப்புத் தண்ணீர் குறைவாக இருந்தால் தேவைப் படும் அளவு தண்ணீர் சேர்த்து, அடுப்பை சிம்மில் வைக்கவும்.
  • இப்போது மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக மேலே நுரை சேர்ந்து ரசம் கொதிக்க மேலே பொங்கி வரும்.
  • இந்த நேரத்தில் அடுப்பை அணைத்து விடவும்.
  • அதன்மேல் சிறிது எண்ணை அல்லது நெய்யில் ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் சீரகம் தாளித்து, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

* எந்த ரசத்திற்கும் நாட்டுத் தக்காளியாக இருந்தால் நலம். புளியைக் குறைத்து உபயோகிக்கலாம். கிடைக்காவிட்டால் மட்டுமே சீமைத் தக்காளி உபயோகிக்கவும்.

* தக்காளியை விரும்பிச் சாப்பிடுபவர்கள் இருந்தால் துண்டங்களாகப் போடலாம். அல்லாதவர்கள் வீட்டில் மசித்து விட்டால் ரசம் முழுவதும் தக்காளி நிரவி இருக்கும். வீணாகாது. சுவையும் இந்த முறையில் தான் நன்றாக இருக்கும்.

* ரசப் பொடி சேர்த்ததும் அதிக நேரம் கொதிக்க வைக்கக் கூடாது. இதனால் ரச மண்டி உருவாகி விடும். ஓரிரு நிமிடங்களிலேயே கொதிக்க விடாமல் பருப்புத் தண்ணீர் சேர்த்து விட்டால், அடிவரை ரசத்தைக் கலந்தே முழுவதும் உபயோகிக்கலாம்.

* பருப்புத் தண்ணீர் சேர்த்ததும், அடுப்பை மிகக் குறைந்த தீயிலேயே வைக்க வேண்டும். அவசரம் என்று சீக்கிரம் கொதிக்க வைத்தால், நுரை உருவாகாமல் சுவை கெட்டுவிடும்.

* ரசம் பொங்கி மேலே வரும்போது வழிந்துவிடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். ரசத்தின் சுவையே அந்த மேல்ப்பகுதியில் தான் இருக்கிறது. 🙂

* எல்லாவகை ரசத்திற்கும் பெருங்காயம் மற்றும் கொத்தமல்லித் தழையின் வாசம் கூடுதலாக இருந்தால் நன்றாக இருக்கும்.

* பொதுவாக ரசம் ஈயப் பாத்திரத்தில் செய்தால் சுவையாக இருக்கும். ஆனால்….

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

அப்படியே சூப் மாதிரி குடிக்கலாம். சாதத்தில் கலந்து சாப்பிடுவதே வழமையான பாணி; இன்னும்….

தேவையான பொருள்கள்:

காய்ந்த மிளகாய் –  200 கிராம்
தனியா – 4 கப்
துவரம் பருப்பு – 1  1/2கப்
கடலைப் பருப்பு –  1/4 கப்
மிளகு – 1 1/2 கப்
சீரகம் – 1/2 கப்
வெந்தயம் –  1 டீஸ்பூன்
கடுகு – 2 டீஸ்பூன்
பெருங்காயம் –  50 கிராம் கட்டி
விரளி மஞ்சள் – 10

rasam podi

செய்முறை:

  • விரளி மஞ்சளை சிறு சிறு துண்டுகளாக்கி வெயிலில் காயவைத்துக் கொள்ளவும். வெயில் இல்லாத காலங்களில்/இடங்களில் லேசாக வாணலியில் வறுத்துக் கொள்ளலாம். ஈரப்பதம் இருந்தால் மிக்ஸியில் அரைக்க வராது; பொடி சீக்கிரம் கெட்டுவிடும்.
  • தனியா, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு இவற்றை தனித் தனியாக எண்ணை விடாமல் வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  • கட்டிப் பெருங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு ஸ்பூன் எண்ணையில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • கடைசியில் மிளகாயை சிட்டிகை உப்பு(வறுக்கும்போது கமறாமல் இருக்க) சேர்த்து வறுக்கவும்.
  • எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைத்து, காற்றுப் புகாத பாட்டிலில்/டப்பாவில் எடுத்துவைக்கவும்.

“என்ன சமைச்சடா இன்னிக்கி?”

“என்ன சமைச்சன்னு கேக்காதம்மா. எவ்ளோ சமைச்சன்னு கேளு. ரசம் செஞ்சா அதுபாட்டுக்கு 3 நாளைக்கு வரது!”

“கொஞ்சமா செய்யணும். ரெண்டு பேருக்கு எவ்ளோடா வேண்டியிருக்கும். சீ! ரசத்தை யாராவது 3 நாளைக்கு சேர்த்து செய்வாளா?”

“நீ எழுதியிருக்கற மாதிரி ஈயச் சொம்புலதான் செய்றேன். அதுல செஞ்சா ஏம்மா அவ்ளோ இருக்கு!”

“ஐயய்ய, அதுல செய்னு தான் எழுதியிருக்கேன். அது நிறைய செய்னா எழுதியிருக்கேன். 4 பேர் வந்தாலும் இருக்கட்டும்னு பெருசா வாங்கிக் கொடுத்திருக்கேன். அதுல பாதிக்கும் கீழ செய், போதும் உங்க ரெண்டு பேருக்கு!”

“தப்பு உன்பேர்லதான். பாவம் குழந்தை. ‘ஈயச் சொம்புல செய்’னு எழுதினயே, ‘அன்னன்னிக்கு தேவையான அளவு மட்டும் செய்!’ அப்படீன்னு தெளிவா எழுதினியா?” – அப்பா

“உன் பொண்ணுக்கு கம்ப்யூட்டர் மூளைன்னு நீ அடிக்கடி சொல்லும் போதே நினைச்சேன், பாரு என்ன instruction இருக்கோ, அதை மட்டும் தான் செய்யத் தெரியும். சொந்தமா மூளைன்னு ஒன்னு கிடையாது! என்னம்மா பொண்ணு வளர்த்திருக்க?” – அண்ணா.

“மூனு நாளைக்கு ஒரே ரசமா? உவ்வே..!” – தம்பி.

“நீ சும்மா இருடா, க்ராஸ் டாக்! அம்மா, அப்றம் நீ வாங்கிக் கொடுத்த ஈயப் பாத்திரம் ரொம்ப மெலிசா இருக்கும்மா. அதுக்குள்ள நசுங்கிப் போச்சு! இன்னும் கனமா ஒன்னு வாங்கி வை. அடுத்த தடவை எடுத்துண்டு வரேன், இல்லை யாராவது வந்தா கொடுத்து விடு!”

“அதுக்குள்ள நசுங்கிடுத்தா? கீழ போட்டுட்டியா?”

“நான் ஒன்னும் கீழ போடலை. ஆனா கன்னாபின்னான்னு திடீர்னு நசுங்கியிருக்கு. என்னன்னே தெரியலை. அதுக்கு தான் முக்கியமா ஃபோன் பண்றேன் இப்ப..”

“நல்ல கும்பகோணம் பாத்திரம்டா கண்ணா. அங்கயே போய் ஸ்பெஷலா சொல்லி செஞ்சது. நல்ல கனமா இருந்ததே!”

“அப்ப நான் பொய் சொல்றேனா?”

“பரவாயில்லை விடு, வேற வாங்கிக்கலாம். நசுங்கித் தானே போச்சு. உருகிடலையே? வெறும் பாத்திரத்தை அடுப்புல வெச்சுடாத. உருகிடும். பர்னர் மேல உருகி விழுந்துட்டா, அப்றம அடுப்பும் கெட்டுப் போயிடும்.”

[மேற்படி வசனம் கல்யாணம் ஆகி சமைக்க(?!) ஆரம்பித்து ஒரே மாசத்தில் புலம்பியது. அடுத்தடுத்து மிக மோசமாக இண்டு இடுக்கு விடாமல் எல்லாப் பக்கமும் சொம்பு நசுங்கியது. அடுத்த தடவை அம்மா நேரில் வந்தபோது காரணம் தெரிந்தது.]

eeyam1.JPG

“ஐயய்யோ, ஈயச் சொம்பை கிடுக்கியால எடுப்பியா? துணி use பண்ண மாட்டியா?”

“ஏன்? எனக்கு கிடுக்கி தான் வசதி. இல்லைன்னா கீழ போட்டுடுவேன்.”

“அதான் இப்படி நசுங்கியிருக்கு! ஏம்மா, அடுப்புலேருந்து சூட்டோட எறக்கும்போது ஈயம் இளகியிருக்காதா? நீ கிடுக்கியால பிடிச்சு இறக்கி இறக்கி, அதோட தடம் பதிஞ்சு இப்படி நசுங்கியிருக்கு எல்லாப் பக்கமும், டிசைன் போட்டாப்ல.”

“இதெல்லாம் நீ முதல்லயே தெளிவா சொல்றதில்லையா?”

“ஆமாம் எல்லாம் சொல்லுவா உனக்கு. படிச்ச பொண்ணுக்கு இது தெரியாது?”

“ஆவூன்னா இது ஒன்னு சொல்லிடுங்க. நான் பாடத்துல படிச்ச திருக்குறள், English Grammer- noun, pronoun, Indus Valley Civilization, Akbar Empire, Geography of India, Law of Returns, Bank Reconcilation Statement, Real Analysis ஹிந்தி சாகித்ய கா இதிகாஸ் வரைக்கும் எதுலயும் பொண்ணுங்க ஈயத்தை அடுப்புலேருந்து கிடுக்கியால இறக்கக் கூடாதுன்னு போட்டிருக்கலை.”

“அதுல எல்லாம் போட்டிருக்கலைங்கறதை நானும் ஒத்துக்கறேன். ஆனா அதெல்லாம் நீ படிச்சிருக்கேங்கறயே அதான் என்னால செரிக்கவேஏஏ முடியலை.” – அண்ணன்.

“நீ வாயை மூடு! எங்க, அந்த அடுப்பை சிம்’ல வெச்சுட்டு வா, தெரியுதான்னு உன் தகுதியையும் பாத்துடுவோம்!”

“சரி நிறுத்துங்க போரை! இப்ப வாங்கிண்டு வந்திருக்கறதையாவது பத்ரமா வெச்சுக்கோ. இடுக்கியால பிடிக்காத!”

“ம் பாக்கலாம், ஆனா எனக்கு துணியால இறக்கி பழக்கமில்லையே.. கையைச் சுடாதா?”

“நல்லா இருக்குடீ மாய்மாலம். எங்க காலத்துல மாமியாருக்கு நேர துணியால வெங்கலப் பானையையோ, தோசைக் கல்லையோ பிடிச்சு இறக்கினாலே சிரிப்பா! ஆள் பக்கத்துல இருக்கான்னா, வெறும் கையாலயே சட்டுனு இறக்கிடுவோம். எங்க கையெல்லாம் வெந்தா போச்சு? மன உறுதி கிடையாது இந்தக் காலத்து பொண்ணுகளுக்கு. அம்மாவும் சப்போர்ட்.” – பாட்டி

“ஐயோ, முதல்லயே தெரிஞ்சிருந்தா அந்தக் குடும்பத்துலயே ஒரு பையனுக்கு இவளைத் தள்ளிவிட்டிருக்கலாமே பாட்டி. இவ்ளோ லேட்டா சொல்றியே! உலை வெங்கலப் பானையை வெறும் கையால இவ இறக்கணுமா? கேக்கவே நல்லா இருக்கே. சொக்கா! சொக்கா!! நான் பாக்க கொடுத்து வைக்கலை…” – தம்பி

[அதற்குப்பின் பொன்னைப் போல் பூவைப் போல பாதுகாக்கப் பட்டது புது ஈயச் சொம்பு. கனமான டர்க்கி துண்டால் சுற்றி அரவணைக்கப் பட்டே இறக்கப்பட்டது. ஆனாலும்….]

“…..”

“……”

“வந்திருந்த விருந்தாளிகள் எல்லாம் போயாச்சா?”

“போயாச்சு! நல்லாத்தான் இருந்தது நாலு நாள். நான் தான் கொஞ்சம் டென்ஷனா பேசிட்டேன்.”

“ஐயய்யோ ஏன்டா?”

“என்னம்மா பின்ன, நான் பத்திரமா பாத்துண்டாலும் வரவங்க எல்லாம் ஹெல்ப் பண்றேன்னு ஆளாளுக்கு ரசப் பாத்திரத்தை கிடுக்கியால எடுத்து இதுவும் டிசைனா போச்சு!”

“அதுக்காக வார்த்தையைக் கொட்டுவயா? நல்லா கவனிச்சுட்டு, கடைசில ஒரு வார்த்தை சொன்னதுதான் நிக்கும்! உனக்கும் கொஞ்சம் பொறுமை கிடையாது.”

“விட்டா சர்டிஃபிகேட் கொடுக்க ஆரம்பிப்பியா? நான் ஒன்னும் வார்த்தையை எல்லாம் கொட்டலை. வர விருந்தாளிகள் எல்லாம் ஆளுக்கு ஒரு தடம் வெச்சுட்டுப் போறாங்க என் ரசப் பாத்திரத்துல”ன்னு சிரிச்சுகிட்டே தான் சொன்னேன்.

“ஆங், இது போதுமே. மோப்பக் குழையும் அனிச்சம்…” – தம்பி

“ஆஹா வந்துட்டாரு வள்ளுவரு. எங்க தில் இருந்தா முழுக்குறளும் விடு, பார்ப்போம் உன் தமிழ் அறிவை!”

“சரி விடு. இன்னும் அவனோட சரிக்குச் சரி சண்டை. நசுங்கினா என்ன வேற வாங்கிக்கக் கூடாதா? மங்கள் மெட்டல்லயாவது கூலி சேதாரம் உண்டு. நம்ப காரைக்குடியான் கடைல எடைக்கு எடை அப்படியே ஈயம் தரான். கொண்டுவா, அடுத்த தடவை மாத்திக்கலாம். அன்னிக்கி கூட பாப்பா நல்லா இருக்கான்னு விசாரிச்சான்.”

“‘பாப்பாவால தான் நான் நல்லா இருக்கேன்’னும் சொன்னான். Btw, இது எத்தனாவது ஈயச் சொம்போ?!” –  தம்பி.

-0-

“……”

“……”

“சொல்லவந்ததை முக்கியமா சொல்லிடறேன். ஈயப் பாத்திரம் சமையலுக்கு உபயோகிச்சா ரொம்பக் கெடுதலாம். இனிமே செய்யாத!”

“மங்கையர் மலரா?”

“எதுல வந்தா என்ன, சொன்னா சரின்னு கேளேன்! அப்பாவாட்டம் மங்கையர் மலர்னா மட்டம்னு நினைக்காத!”

“நான் அப்படி எல்லாம் நினைக்கலை.  ஆனா அதுக்காக மாத்தி மாத்தி புக்ல போடறதை எல்லாம் படிச்சுட்டு நம்பளை மாத்திகிட்டே இருக்க முடியாது.”

“அதுக்கில்லைமா..”

“அறுக்காம வேற பேசலாம்!”

“……”

“……”

-0-

“…..”

“ஈயப் பாத்திரத்துல செஞ்சா எவ்வளவோ கெடுதல்னு சொல்றாங்க. வேற try பண்ணேன்டா”

“அப்பா, யூ டூ?!”

“இல்லை, நீயே ஒரு தடவை அதைப் படிச்சுட்டாவது செய்றதை நிறுத்தலாமே…”

“காஃபி கெடுதல்னு எல்லா புக்லயும் போடறான். என்னிக்காவது நிறுத்தியிருக்கோமா? காலைல நாலரை மணிக்கு என்னை எழுப்பி ஸ்பெஷல் காஃபி கிடைக்கும்னு ஸ்ரீரங்கம் பஸ் ஸ்டாண்டுக்கு வாக்கிங் கூட்டுகிட்டுப் போய் வாங்கித் தரீங்க. மாமியாராத்துல பொண்ணுக்கு காலைல ரெண்டாவது காஃபி கொடுக்கறாளான்னு கவலைப்பட்டு இங்க நீங்க சாப்பிடாம இருக்கீங்கன்னு வீட்டுல எல்லாரும் கிண்டல் பண்றாங்க. நல்லதாப் போச்சுன்னு விட வேண்டியது தானே? அன்றாட வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா!”

“சரி, பார்த்துக்க, உனக்குத் தெரியாதது இல்ல”

-0-

“எப்படி இருக்க?”

“உன்போல அண்ணன் ஒரு கோயில் இருக்க, நான் பரம சௌக்கியம் வழக்கம் போல.”

“உன் ரசச் சொம்பும் சௌக்கியமா?”

“என் சொம்பு… :))) அது எப்பவுமே விருந்தினர் வருகைப் பதிவேடு தான், வழக்கம் போல!”

“:)))))))))))”

“:)))))))))))”

“அப்ப இந்த தடவையும் மாத்திடுவன்னு சொல்லு!”

“பின்ன?”

“பாவம் அம்மா தான் பொலம்பிண்டே இருக்கா. நீ நிறுத்தினா என்ன? இல்லை அதுல செய்யறதில்லைன்னு பொய்யாவது சொல்லேன்.”

“உனக்கு விஷயமே தெரியாதா? எனக்கெல்லாம் சரி சரின்னு அடங்கிப் போனா வாழ்க்கை ரொம்ப போரடிக்கும். சும்மாவானும் யாரையாவது எதிர்த்துகிட்டோ அடங்காமலோ இருக்கணும்.”

“:))))… திருந்த மாட்ட நீ!”

-0-

“….”

“Again அம்மா, இந்த வாரப் பத்திரிகைல வர மேட்டருக்கெல்லாம் அதிர்ச்சியாகி, என்னால என்னை தடால் தடால்னு மாத்திக்க முடியாது!”

“ஏன் முடியாது?”

“ஏம்மா, எனக்கு நினைவு தெரிஞ்சே கடலை எண்ணைல சமைச்சுகிட்டிருந்தீங்க. அதுபாட்டுக்கு எண்ணை பொங்கும். பாட்டி வாழை மட்டையை எல்லாம் போட்டு அடக்குவா. அப்றம் பாமாயில் தான் நல்லதுன்னு போட்டிருக்குன்னு அதுல சமைச்சுப் போட்டு கொன்னீங்க. அப்றம் எவனோ சொன்னான்னு ரிஃபைண்ட் சன் ஃப்ளவர். இப்ப இதயம் நல்லெண்ணை. லேட்டஸ்டா, எண்ணையை விதம் விதமா மாத்தி மாத்தி உபயோகிக்கணுமாம். ஒரே எண்னையை தொடர்ந்து உபயோகிக்கக் கூடாதாம். அப்ப இதுக்கு முன்னாடி உங்க லாஜிக்படி தப்பா சாப்டவங்கள்ல்லாம் செத்தா போயிட்டாங்க?”

“விதண்டாவாதம் செஞ்சா பதிலே இல்லை”

“சரி விடு. பாட்டி எல்லாம்  முழுக்க முழுக்க ஈயப் பாத்திரம் அல்லது உள்ள ஈயம் பூசின பித்தளைப் பாத்திரத்துல தானே செஞ்சா? கடைசி வரைக்கும் கண்ணாடி கூட போடாம, பல்லு விழாம பட்டையக் கிளப்பலை? ஒரு ஜூரம் காய்ச்சல்னு வந்திருக்குமா? இதை இத்தோட விடு!”

“அதான் தெரியுமே, நான் சொன்ன பேச்சு நீ என்னிக்கி கேட்டிருக்க?”

“நான் கேப்பேன். ஆனா என் நாக்கு கேக்காது. வேற பாத்திரத்துல ரசம் செஞ்சா எனக்குப் பிடிக்கலை. புளித் தண்ணியாட்டாம் இருக்கு. புரிஞ்சுக்க. மேட்டர் ஓவர்.”

“….”

“இதுக்கெல்லாம் பேசாம இருந்தா எப்படி தாயீ? கொஞ்சம் சிரிங்க… இப்ப Smoking is injurious to healthன்னு பிரிண்ட் போட்ட பாக்கெட்டையே மக்கள் பிரிச்சு ஊதறதில்லையா? அந்த மாதிரி தான். வேணும்னா அடுத்த பாத்திரம் வாங்கும்போது பேர் வெட்டற மாதிரி நீயும் Poisonousனு பாத்திரத்துல வெட்டிக் கொடுத்துடு. நான் அதை வெச்சு சமைச்சுக்கறேன்.”

“செய்ய மாட்டயான்ன நீ? எப்படியோ போ! பாலாஜி மெட்டல்ஸ்ல நிறைய புது ஸ்டாக் ஈயப் பாத்திரம் வந்திருக்காம். பார்த்து வெச்சிருக்கேன். இருக்கட்டும்; பொண்ணே வந்து அவளுக்கு வேணுங்கற டிசைன், அளவுல வாங்கிக்கட்டும்னு சொல்லிவெச்சிருக்கேன். எல்லாமே புதுப்புது டிசைனா வரவழைச்சிருக்கான். நன்னா இருக்கு, வெள்ளிப் பாத்திரமாட்டம்!”

“ச்சோ ச்வீட். இப்பத்தான் ஒரு பொறுப்புள்ள அம்மாவா behave பண்ற.. :))”

“….”
 
 

-0-

“ஊருக்கு வர டிக்கெட் ரிசர்வ் பண்ணியாச்சா? குழந்தையை எப்ப பார்போம்னு இருக்கு”

“எனக்கு எப்படா யார் தலைலயாவது கட்டிட்டு இருப்போம்னு இருக்கு”

“ஏன் பாவம் அப்படி சொல்ற? கொண்டுவந்து விடு. நாங்க வெச்சுக்கறோம். உன்னையெல்லாமே நாங்க சமாளிச்சிருக்கோம். ஆண்ட்றவுக்கு(ஆண்டு நிறைவு) பட்டுப் பாவாடை வாங்கியாச்சு. நீங்க வந்ததும் தான் குழந்தையை அளவெடுத்து தைக்கணும்.”

“சரி”

“அதைவிட உனக்கு சந்தோஷமான ந்யூஸ். மங்கள் மெட்டல்ல இப்ப புதுசா, ஈயப் பாத்திரம் வாங்கினா அடில காப்பர் பாட்டம் போட்டுத் தரான்… சூடு வேகமா பரவுமாம்… மறந்து அடுப்புல வெச்சாலும் சூட்டை எல்லாம் காப்பர் வாங்கிக்குமாம்… பாத்திரம் உருகாதாம்… நீ வந்ததும் போய் பாக்கலாம்…”

“ஐயோ, நானே சொல்ல நினைச்சேன். என் பாத்திரங்களையும் நீயே எடுத்துக்க. நான் இப்பல்லாம் அதுல சமைக்கறதில்ல”

“ஏன்???!!!!”

eeyam2.JPG

“டாக்டர், குழந்தைக்கு ஒரு வயசு ஆகப் போறது. சாதம் எல்லாம் கொடுக்க ஆரம்பிக்கலாம்னு சொல்லியிருக்கார். 4 நாளா ரசம் சாதம் கொடுக்க ஆரம்பிச்சிருக்கேன் என் பொண்ணுக்கு. எல்லா ரசப் பாத்திரத்தையும் கொண்டுவந்து உங்கிட்ட போட்டுடப் போறென். எனக்கு வீட்டுலயே வேண்டாம் இனிமே இந்தப் பாத்திரமெல்லாம்!!”

[இதுக்கெல்லாம் ‘சிறுகதை’னு லேபிள் ஒட்டினா, சிறுகதை இலக்கிய உம்மாச்சி கண்ணைக் குத்திடுமா? :(]

Health Effects | Lead Poisoning

முன்னால் சொல்லவிட்டுப் போன பின்குறிப்பு: ஆமாங்கய்யா, ஆமாம், இது அக்மார்க் உள்குத்துப் பதிவு! (சே, ஒரு பொறவி இலக்கியவாதியை இப்படி கேவலப்படுத்தறாய்ங்களே!..)