ஊறுகாய்


வலைப்பதிவுகள் தாண்டிய நண்பர் ஒருவர், இந்தக் குறிப்பில்   தேடு வசதி, பதிவின் பக்கவாட்டில் இருப்பதாக நான் எழுதியபின், முதன்முறையாக அதை அப்போதுதான் பார்த்து, உணர்ச்சிவசப்பட்டு, தமிழில் தட்டத் தெரியாததால் அங்கே இங்கே என்று எழுத்துகளைப் பிடித்து ஒட்டுப்போட்டு ‘நெல்லிக்காய்’ என்ற ஒரு வார்த்தையை உருவாக்கி (தமிழில் வேறு வார்த்தையே கிடைக்கவில்லையா? அல்லது தமிழ்நாட்டில் நெல்லிக்காய் இப்போது சீசனா?) என் பதிவில் தேடியதில் சடசடவென 20 பதிவுகள் வந்ததாகவும், ஆர்வமாக உள்ளே ஒவ்வொன்றாகப் படித்துப் பார்த்தால் (வாழ்க நின் பொறுமை!), ஒரு குறிப்பு கூட நெல்லிக்காயில் செய்தது இல்லை என்ற பேருண்மை புரிந்து வருத்தப்பட்டார். (உண்மைல கொலைவெறியானார். நாந்தான் கொஞ்சம் நாசுக்காச் சொல்லியிருக்கேன்.)  ஆனால், ‘தேவையான பொருள்களி’ல் புளி – நெல்லிக்காய் அளவு என்று எல்லாப் பதிவிலும் எழுதியிருந்தால் அவை வராமல் என்ன செய்யும்? இப்படி எல்லாம் பிரச்சினை வரும் என்று எதிர்பார்க்காத என் பேதைமை நான் கேட்காமலே மன்னிக்கப்பட்டு விட்டாலும் பரிகாரமாக  சடசடவென்று  இரண்டு  நெல்லிக்காய் குறிப்புகள். நெல்லிக்காயைத்  தேடி  வாங்குவது தான் கஷ்டமான காரியமாக இருந்தது. [நெல்லிக்காய் நெருக்கியதில் வாழைத் தண்டு ஊறுகாயை இரண்டு வாரம் கழித்து செய்ய ஒத்திப் போட்டுவிட்டேன்.] 

குறிப்பு (தெரியாதவர்களுக்கு மட்டும்): தேடுபவர்கள் ஆங்கிலத்தில் அதே வார்த்தையைத் தட்டித் தேடினால் (nellikkaai) இந்தப் பிரச்சினை அதிகம் வராது. அந்தப் பொருளை அந்த உணவில் முக்கியமாக உபயோகித்திருந்தால்  மட்டுமே அது பதிவின் தலைப்பில்,  சுட்டியில்  இருக்கும். (இதெல்லாம் ரொம்ப ஓவர்னு எனக்கே தெரியுது. ஆனாலும் என்ன செய்ய?)

தேவையான பொருள்கள்:

நெல்லிக்காய் – 8 (பெரியது)
நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – 2 டீஸ்பூன்
காயம் – 1/4 டீஸ்பூன்
வெந்தயப் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

nellikkaai thokku

செய்முறை:

  • நெல்லிக்காய்களை குக்கரில் 5 நிமிடம் ஆவியில் வேகவைத்து, உதிர்த்து, கொட்டையை நீக்கிக் கொள்ளவும்.
  • மிக்ஸியில் சிறிது நீர் சேர்த்து மிக நைசாக அரைத்துக் கொள்ளவும். அல்லது துருவியும் உபயோகிக்கலாம்.
  • அடுப்பில் வாணலியில் நண்லெண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.
  • நெல்லிக்காயை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, நன்கு வதக்கவும்.
  • தொக்கு மாதிரி சேர்ந்து வரும்போது மிளகாய்த் தூள், வெந்தயப் பொடி சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை கிளறவும்.

* நெல்லிக்காயின் புளிப்பைப் பொருத்து காரம், உப்பை கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கவும். குறைந்த அளவு செய்வதால் எண்ணெய் அதிகம் தேவை இல்லை.

* தனியாக வெந்தயப்பொடி, மிளகாய்த் தூள் சேர்க்காமல், ஊறுகாய்ப் பொடி உபயோகித்தும் செய்யலாம். நான் அப்படித் தான் செய்திருக்கிறேன்.

* அருநெல்லிக்காயிலும் இந்தத் தொக்கு சுவையாக இருக்கும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தயிர்சாதம் தவிர, நல்லெண்ணெய் கலந்த சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

அதிகம் போரடித்தால் சப்பாத்தி, தோசை, உப்புமா வகைகளுக்கும் உபயோகிக்கலாம். 

நெல்லிக்காய் எல்லாவிதச் சத்துகளும் நிறைந்தது. ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. பச்சையாகவோ, தேனில் ஊறவைத்தோ சாப்பிடுவது அதைவிட நல்லது. இரும்புச் சத்து, எக்கச்சக்கமாக வைட்டமின் C, அதோடு வைட்டமின் D, வைட்டமின் E நிறைந்தது. தலைமுடி, நகம் இவற்றுக்கு வலுவூட்டும். உடலுக்கு, முக்கியமாக கண்களுக்குக் குளிர்ச்சி, இன்னும்……

மேற்கூறிய காரணங்கள் எதுவுமே இல்லாவிட்டாலும் புளிப்பாய் ஒரு காய் கையில் கிடைத்தால் தமிழன் அதை ஊறுகாய் போடாமல் விட முடியுமா?

சரி, முக்கியமாய் அவசரமாய் நெல்லிகாயை பற்றி நான் பேசக் காரணம், 😦  (இதெல்லாம் ஒரு காரணமா என்று யாரும் அடிக்க வராமல் இருக்கவேண்டும்.), நாளை சொல்கிறேன்….

nellikkaai urugaai

தேவையான பொருள்கள்:

நெல்லிக்காய் – 8 (பெரியது)
ஊறுகாய்ப் பொடி – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணய் – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு
பெருங்காயம்

செய்முறை:

  • நெல்லிக்காய்களை கொதிக்கிற வெந்நீரில் போட்டு பத்து நிமிடங்கள் மூடிவைத்து நீரை வடிக்கவும். (ஊறுகாய் சீக்கிரம் ஊற இது உதவும்.)
  • நறுக்க நறுக்க, கொட்டையை ஒட்டி வில்லைகளாக, தானே சுலபமாகக் கழண்டு வரும். அப்படியே துண்டுகளாக எல்லா காய்களையும் நறுக்கிக் கொள்ளவும்.
  • உப்பு, மஞ்சள் தூள், ஊறுகாய்ப் பொடி சேர்த்துக் கலக்கவும்.
  • நல்லெண்ணையில் கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டி, கலந்து, காற்றுப் புகாத கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் எடுத்துவைக்கவும்.

* மறுநாளிலிருந்தே உபயோகிக்கலாம். ஒரு வாரத்துக்கு மேலும் வைத்திருந்து உபயோகிப்பதாயிருந்தால் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.

* நெல்லிக்காயின் புளிப்பைப் பொருத்து காரம், உப்பை கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கவும்.

* பொதுவாக அதிக அளவில்(கிலோ கணக்கில்) நெல்லிக்காய் ஊறுகாய் தயாரிக்கும்போது நறுக்கிய காயின் அளவு எட்டுக்கு ஒன்று என்ற அளவில் மிளகாய்த் தூளும், உப்பும், காரத்தின் அளவுக்கு முக்கால் பாகம் அல்லது அதற்கு மேலும்கூட எண்ணெயும் தேவை. 

* அருநெல்லிக்காயிலும் இந்த ஊறுகாயைத் தயாரிக்கலாம்.

திருமணம், ஹோட்டல் போன்ற இடங்களில் பரிமாறப்படும் ஊறுகாய்கள் சுவையாக இருக்கும். ஆனால் அதிக நாள் வைத்துக் கொள்ள முடியாது. அதிகம் அடுப்பில் கொதிக்க வைக்காமல், அதிகம் எண்ணெய் விடாமல் தயாரிப்பதால் சீக்கிரம் கெட்டுவிடலாம். ஆனால் மொத்தமாகச் செய்து அதிக நாள்களுக்கு வைத்துக் கொள்ளும்போது சேர்க்க வேண்டிய அதிக எண்ணெய், அதன்பொருட்டு நாம் சேர்க்கும் அதிக உப்பு, காரம் இவை இல்லாததாலேயே உடலுக்கு இவை அவ்வளவு மோசமில்லை. 🙂 புதிதாகத் தயாரித்ததைத் தான் உபயோகிக்கிறோம் என்ற மனத் திருப்தி.

ஆவக்காய், வடுமாங்காய் போன்ற வருடாந்திரத்துக்கான பிரத்யேகங்கள் ஒருபுறம் இருக்கட்டும். மாற்றாக இன்னொரு ஊறுகாயை  அதுபோல் நாமும் அவ்வப்போது ஒருவாரம் பத்து நாள்களுக்கு மட்டும் வருமளவு கொஞ்சமாகத் தயாரித்து உபயோகிப்பது நல்லது. இரண்டே இரண்டு எலுமிச்சம் பழம் இருந்தால்கூட அதை உடனடி ஊறுகாய் போடுகிற வகை நான். இதனால் அடிப்படைக் காயை விதவிதமாக மாற்றி, போரடிக்காமல் செய்யலாம். விரும்புபவர்கள் இந்தப் பொடியை தயாரித்துவைத்துக் கொண்டால், ஐந்து நிமிடத்தில் எந்த ஊறுகாயும் செய்துவிடலாம்.

தேவையான பொருள்கள்:

காய்ந்த மிளகாய் – 100 கிராம்
கடுகு – 25 கிராம்
வெந்தயம் – 25 கிராம்

செய்முறை:

  • காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயத்தை நன்கு வெயிலில் காயவைத்து அல்லது அப்படிச் செய்ய வசதியில்லாதவர்கள் லேசாக வாணலியில் வறுத்து, நைசாகப் பொடித்துவைத்துக் கொள்ளவும். ஃப்ரிட்ஜில் வைத்தும் தேவையான போது எடுத்து உபயோகிக்கலாம்.

*விரும்பினால் விரளி மஞ்சளையும் இதனுடனேயே சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.

ஸ்ரீரங்கம் வடக்குவாசலில் சுண்டைக்காயோடு போட்டி போடும் சைஸில் மலை வடு கிடைக்கும். அப்படியே பச்சை மாவடுவை கதவிடுக்கில் நசுக்கினால், காக்காய்க் கடியாய் பகிர்ந்து கொள்ளலாம். பல் கூசும் புளிப்பாக இருக்கும். (பல் தானே கூசுகிறது. பின் கண்னை ஏன் மூடிக் கொள்கிறோம்?) வடுவின் பால் பட்டால் வாய்ப்புண் ஒரு நாள் முழுவதும் படுத்தும். மாவடு, கஸ்தூரி மஞ்சள், பயத்தம் பொடி, தஞ்சாவூர் குடமிளகாய், மோர்மிளகாய் என்று சில சாமான்கள் வருடா வருடம் அம்மா வீட்டிலிருந்து வருவதே தொடர்ந்து வருகிறது. ஆனாலும் இந்த மாவடு மட்டும் எந்த ஊரில் இருந்தாலும், கிடைப்பது சப்பை வடுவாக இருந்தாலும், நம் பங்குக்கும் ஒரு படியாவது போட்டால் தான், ஏதோ நாமும் பெரிய மனுஷி ஆகிவிட்டதுபோல் ஒரு தோரணையான ஃபீலிங் வருகிறது. 🙂

தேவையான பொருள்கள்:

மாவடு – 1 படி
கல் உப்பு – 1 கப்
காய்ந்த மிளகாய் – 1 கப்
கடுகு – 1/4 கப்
விரளி மஞ்சள் – 3
விளக்கெண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணை – 1/4 கப்

maavadu_new.JPG

செய்முறை:

  • மாவடுவை நன்கு கழுவி, நீரை வடியவைத்து, ஒரு துணியில் பரத்தி காய வைக்கவும்.
  • காய்ந்த மிளகாயை வெயிலில் காயவைத்து, பொடித்துக் கொள்ளலாம் அல்லது 1/2 கப் மிளகாய்த் தூளாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
  • விரளி மஞ்சளை வெயிலில் காயவைக்கவும் அல்லது வாணலியில் 5 நிமிடம் ஈரப் பசை இல்லாமல் வறுத்துக் கொண்டு, கடுகு, விரளி மஞ்சளை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • மாவடுவில் விளக்கெண்னை, கடுகு, மஞ்சள் பொடியைக் கலந்து பிசிறிக் கொள்ளவும்.
  • ஊறுகாய் போடும் பாத்திரத்தில் முதலில் ஒரு டேபிள்ஸ்பூன் உப்பைப் போட்டு மேலே ஒரு பிடி மாவடு, அதன்மேலே ஒரு உப்பு, காரப் பொடி, மாவடு என்று மாற்றி மாற்றி எல்லாவற்றையும் போட்டு, மேலாக நல்லெண்ணையும் சேர்த்து மூடிவைக்கவும்.
  • இரண்டாம் நாள் கலந்து எடுத்து உபயோகிக்க ஆரம்பிக்கலாம். அதன்பின் அடிக்கடி அடிவரை கிளறிவிட வேண்டும்.

* ஊறுகாய்க்கு எப்பொழுதும் கண்ணாடி, பீங்கான் ஜாடி அல்லது கல்சட்டியையே உபயோகிக்கவும்.

* மாவடு, மலை வடுவாக இருந்தால் புளிப்பு அதிகமாக இருக்கும். [சும்மா ஒன்றை எடுத்து சாப்பிட்டுப் பார்க்காமலா இருப்போம்? 🙂 இந்த முறையும் வடுவின் பால் பட்டு வாயில் புண். :(] இதற்கு ஒரு பிடி உப்பும், இரண்டு டேபிள்ஸ்பூன் காரப்பொடியும் அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.

* அநேகமாக மாவடுவின் காம்பை அதிகம் வெட்டாமல் வைத்திருப்பார்கள். தராசிலோ, படியிலோ அளக்கும்போது இது அதிக இடத்தை அடைத்துக் கொள்ளும்; வியாபாரிக்கு லாபம். வாங்கும்போது ஒடித்துவிட்டு வாங்குவது நமது சாமர்த்தியம். முடியாவிட்டால் மார்க்கெட் விலையே அவ்வளவுதான் என்று தேற்றிக்கொள்ள வேண்டியதுதான். 😦 வேறு யாராவது(?!) வாங்கி வந்திருந்தால், “ஏமார்ற மூஞ்சி எப்ப வரும்னு காத்துண்டிருந்து தள்ளிவிடுவாங்க போல இருக்கு; சாமர்த்தியம் பத்தாதுன்னு எப்படித்தான் நிமிஷத்துல கண்டுபிடிக்கறானோ? இவங்களைத் தான் மாப்பிள்ளை பாக்க அழைச்சுகிட்டுப் போகணும்… ” என்று சொல்லிக்கொண்டே (நாம் கடைக்காரனைத்தானே திட்டுகிறோம்) ஈரம் உலரவைக்கும் நேரத்தில் ஒரு இன்ச் நீளம் மட்டும் விட்டு, மிச்சக் காம்பை வெட்டிவிடவும்.

* எக்காரணம் கொண்டும் மாவடுவில், வரும் நாள்களில், ஈரக் கரண்டியை உபயோகிக்கக் கூடாது. ஆனால் 2 மாதங்களுக்கு ஒரு முறை ஐஸ் க்யூப்களை இரண்டு மூன்று போட்டு வந்தால் ஒரு வருடத்திற்கு கெடாமல் இருக்கும்.

* நல்லெண்ணை விடுவது அவரவர் விருப்பம் தான். ஆனால் விடுவதால் அதிகம் சுருங்காமல் வாசனையாக இருக்கும்.

* மாவடு போட்டு பத்து பதினைந்து நாள்கள் கழித்து அதிலிருக்கும் நீரை இறுத்து, 2/3 பாகமாக ஆகும்வரை அடுப்பில் வைத்துக் காய்ச்சி ஆறவைத்து, பின் மாவடுவில் மீண்டும் விட்டால், வருடம் முழுவதும் கெட்டுப் போகாது. ஆனால் பொதுவாக நான் போடுவது, அப்படி எல்லலம் செய்யாமலே நன்றாகத் தான் இருக்கிறது.

* “மாப்பிள்ளையில் கிழவனும், மாவடுவில் அழுகலும் கிடையாது!” என்பார்கள். நம்பவேண்டாம். அழுகிய மாவடுவை எப்பொழுதும் சாப்பிடாதீர்கள்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

maavaduold.JPG

தயிர் சாதம் வரை காத்திருக்க வேண்டாம். குழம்பு சாதத்திற்கே மாவடு சூப்பராகப் பொருந்திப் போகும்.

துவையல்: காய்ந்த மிளகாய் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காயம் வறுத்து, அவற்றோடு சிறிது புளி, உப்பு, தேங்காய், வடுமாங்காய் சேர்த்து துவையல் அரைக்கலாம்.

பச்சடி: மாவடுவோடு ஒரு டீஸ்பூன் தேங்காய், சிறிது மல்லித் தழை, ஒரு பச்சை மிளகாய் வைத்து அரைத்து தயிரில் கலந்து கடுகு தாளித்து பச்சடி செய்யலாம்.

மாவடுச் சாறு: சென்ற வருட மாவடுச் சாறு கட்டாயம் மீந்திருக்கும். இதில் ஆலிவ் வாங்கி ஊற வைத்து இரண்டாம் நாளிலிருந்து சாப்பிடலாம். இதன் முழு காப்பிரைட்டும் எனக்கே சொந்தம்.

மேல்ச் சாறாக நீக்கிவிட்டு, அடியில் தங்கும் கெட்டியான சாறை சாதத்தில் எண்ணை அல்லது நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். தோசைக்குத் தொட்டுக் கொள்ளலாம்.

சுண்டைக்காய் வத்தல், வேப்பம் பூ, மினுக்கு வத்தல் ஆகியவற்றை சாற்றில் நனைத்து, ஊறியதும் வெயிலில் உலர்த்தி, எண்ணையில் பொரித்து, தயிர்சாதத்திற்குத் தொட்டுக் கொள்ளலாம்.

ஆனால் இந்தக் குறிப்பும் இனியும் இந்தப் பகுதியில் வரப்போகிற குறிப்புகளையும்ப் படிக்கிறவர்களுக்கு– அதிகமான ஊறுகாயும், சாறும் உடலுக்குக் கெடுதல் என்று எச்சரிக்க வேண்டிய கடமையும் எனக்கு இருக்கிறது. 🙂