ஸ்ரீரங்கம் வடக்குவாசலில் சுண்டைக்காயோடு போட்டி போடும் சைஸில் மலை வடு கிடைக்கும். அப்படியே பச்சை மாவடுவை கதவிடுக்கில் நசுக்கினால், காக்காய்க் கடியாய் பகிர்ந்து கொள்ளலாம். பல் கூசும் புளிப்பாக இருக்கும். (பல் தானே கூசுகிறது. பின் கண்னை ஏன் மூடிக் கொள்கிறோம்?) வடுவின் பால் பட்டால் வாய்ப்புண் ஒரு நாள் முழுவதும் படுத்தும். மாவடு, கஸ்தூரி மஞ்சள், பயத்தம் பொடி, தஞ்சாவூர் குடமிளகாய், மோர்மிளகாய் என்று சில சாமான்கள் வருடா வருடம் அம்மா வீட்டிலிருந்து வருவதே தொடர்ந்து வருகிறது. ஆனாலும் இந்த மாவடு மட்டும் எந்த ஊரில் இருந்தாலும், கிடைப்பது சப்பை வடுவாக இருந்தாலும், நம் பங்குக்கும் ஒரு படியாவது போட்டால் தான், ஏதோ நாமும் பெரிய மனுஷி ஆகிவிட்டதுபோல் ஒரு தோரணையான ஃபீலிங் வருகிறது. 🙂
தேவையான பொருள்கள்:
மாவடு – 1 படி
கல் உப்பு – 1 கப்
காய்ந்த மிளகாய் – 1 கப்
கடுகு – 1/4 கப்
விரளி மஞ்சள் – 3
விளக்கெண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணை – 1/4 கப்
செய்முறை:
- மாவடுவை நன்கு கழுவி, நீரை வடியவைத்து, ஒரு துணியில் பரத்தி காய வைக்கவும்.
- காய்ந்த மிளகாயை வெயிலில் காயவைத்து, பொடித்துக் கொள்ளலாம் அல்லது 1/2 கப் மிளகாய்த் தூளாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
- விரளி மஞ்சளை வெயிலில் காயவைக்கவும் அல்லது வாணலியில் 5 நிமிடம் ஈரப் பசை இல்லாமல் வறுத்துக் கொண்டு, கடுகு, விரளி மஞ்சளை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- மாவடுவில் விளக்கெண்னை, கடுகு, மஞ்சள் பொடியைக் கலந்து பிசிறிக் கொள்ளவும்.
- ஊறுகாய் போடும் பாத்திரத்தில் முதலில் ஒரு டேபிள்ஸ்பூன் உப்பைப் போட்டு மேலே ஒரு பிடி மாவடு, அதன்மேலே ஒரு உப்பு, காரப் பொடி, மாவடு என்று மாற்றி மாற்றி எல்லாவற்றையும் போட்டு, மேலாக நல்லெண்ணையும் சேர்த்து மூடிவைக்கவும்.
- இரண்டாம் நாள் கலந்து எடுத்து உபயோகிக்க ஆரம்பிக்கலாம். அதன்பின் அடிக்கடி அடிவரை கிளறிவிட வேண்டும்.
* ஊறுகாய்க்கு எப்பொழுதும் கண்ணாடி, பீங்கான் ஜாடி அல்லது கல்சட்டியையே உபயோகிக்கவும்.
* மாவடு, மலை வடுவாக இருந்தால் புளிப்பு அதிகமாக இருக்கும். [சும்மா ஒன்றை எடுத்து சாப்பிட்டுப் பார்க்காமலா இருப்போம்? 🙂 இந்த முறையும் வடுவின் பால் பட்டு வாயில் புண். :(] இதற்கு ஒரு பிடி உப்பும், இரண்டு டேபிள்ஸ்பூன் காரப்பொடியும் அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.
* அநேகமாக மாவடுவின் காம்பை அதிகம் வெட்டாமல் வைத்திருப்பார்கள். தராசிலோ, படியிலோ அளக்கும்போது இது அதிக இடத்தை அடைத்துக் கொள்ளும்; வியாபாரிக்கு லாபம். வாங்கும்போது ஒடித்துவிட்டு வாங்குவது நமது சாமர்த்தியம். முடியாவிட்டால் மார்க்கெட் விலையே அவ்வளவுதான் என்று தேற்றிக்கொள்ள வேண்டியதுதான். 😦 வேறு யாராவது(?!) வாங்கி வந்திருந்தால், “ஏமார்ற மூஞ்சி எப்ப வரும்னு காத்துண்டிருந்து தள்ளிவிடுவாங்க போல இருக்கு; சாமர்த்தியம் பத்தாதுன்னு எப்படித்தான் நிமிஷத்துல கண்டுபிடிக்கறானோ? இவங்களைத் தான் மாப்பிள்ளை பாக்க அழைச்சுகிட்டுப் போகணும்… ” என்று சொல்லிக்கொண்டே (நாம் கடைக்காரனைத்தானே திட்டுகிறோம்) ஈரம் உலரவைக்கும் நேரத்தில் ஒரு இன்ச் நீளம் மட்டும் விட்டு, மிச்சக் காம்பை வெட்டிவிடவும்.
* எக்காரணம் கொண்டும் மாவடுவில், வரும் நாள்களில், ஈரக் கரண்டியை உபயோகிக்கக் கூடாது. ஆனால் 2 மாதங்களுக்கு ஒரு முறை ஐஸ் க்யூப்களை இரண்டு மூன்று போட்டு வந்தால் ஒரு வருடத்திற்கு கெடாமல் இருக்கும்.
* நல்லெண்ணை விடுவது அவரவர் விருப்பம் தான். ஆனால் விடுவதால் அதிகம் சுருங்காமல் வாசனையாக இருக்கும்.
* மாவடு போட்டு பத்து பதினைந்து நாள்கள் கழித்து அதிலிருக்கும் நீரை இறுத்து, 2/3 பாகமாக ஆகும்வரை அடுப்பில் வைத்துக் காய்ச்சி ஆறவைத்து, பின் மாவடுவில் மீண்டும் விட்டால், வருடம் முழுவதும் கெட்டுப் போகாது. ஆனால் பொதுவாக நான் போடுவது, அப்படி எல்லலம் செய்யாமலே நன்றாகத் தான் இருக்கிறது.
* “மாப்பிள்ளையில் கிழவனும், மாவடுவில் அழுகலும் கிடையாது!” என்பார்கள். நம்பவேண்டாம். அழுகிய மாவடுவை எப்பொழுதும் சாப்பிடாதீர்கள்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
தயிர் சாதம் வரை காத்திருக்க வேண்டாம். குழம்பு சாதத்திற்கே மாவடு சூப்பராகப் பொருந்திப் போகும்.
துவையல்: காய்ந்த மிளகாய் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காயம் வறுத்து, அவற்றோடு சிறிது புளி, உப்பு, தேங்காய், வடுமாங்காய் சேர்த்து துவையல் அரைக்கலாம்.
பச்சடி: மாவடுவோடு ஒரு டீஸ்பூன் தேங்காய், சிறிது மல்லித் தழை, ஒரு பச்சை மிளகாய் வைத்து அரைத்து தயிரில் கலந்து கடுகு தாளித்து பச்சடி செய்யலாம்.
மாவடுச் சாறு: சென்ற வருட மாவடுச் சாறு கட்டாயம் மீந்திருக்கும். இதில் ஆலிவ் வாங்கி ஊற வைத்து இரண்டாம் நாளிலிருந்து சாப்பிடலாம். இதன் முழு காப்பிரைட்டும் எனக்கே சொந்தம்.
மேல்ச் சாறாக நீக்கிவிட்டு, அடியில் தங்கும் கெட்டியான சாறை சாதத்தில் எண்ணை அல்லது நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். தோசைக்குத் தொட்டுக் கொள்ளலாம்.
சுண்டைக்காய் வத்தல், வேப்பம் பூ, மினுக்கு வத்தல் ஆகியவற்றை சாற்றில் நனைத்து, ஊறியதும் வெயிலில் உலர்த்தி, எண்ணையில் பொரித்து, தயிர்சாதத்திற்குத் தொட்டுக் கொள்ளலாம்.
ஆனால் இந்தக் குறிப்பும் இனியும் இந்தப் பகுதியில் வரப்போகிற குறிப்புகளையும்ப் படிக்கிறவர்களுக்கு– அதிகமான ஊறுகாயும், சாறும் உடலுக்குக் கெடுதல் என்று எச்சரிக்க வேண்டிய கடமையும் எனக்கு இருக்கிறது. 🙂
திங்கள், மார்ச் 26, 2007 at 7:07 பிப
இதெல்லாம் நல்லா இல்லே, படம் வேற போட்டு.. 😦
கண்ணைத்துடைத்துக் கொண்டே,
மாவடு பிரியை
புதன், ஏப்ரல் 13, 2011 at 3:59 பிப
kilo RS 100m kanavula mavadu sappidamudiyum
செவ்வாய், மார்ச் 27, 2007 at 9:48 பிப
ஹ்ம்ம்! படத்த கண்ணால பாத்தே திருப்திப்பட்டுக்க வேண்டியதுதான்.
சரி, இது என்ன – மினுக்கு வத்தல் ?
புதன், மார்ச் 28, 2007 at 8:13 முப
உஷா, மாவடுவைப் பார்த்தா நாக்குலதான் தண்ணி ஊறும். உங்களுக்கு என்ன புதுசா கண்ணுல? அதான் ஊருக்கு வந்துட்டீங்களே… அசத்துங்க.
சொக்காயி, இராமநாதபுரம் ஊர்க்காரங்களுக்கு சரியாத் தெரிஞ்சிருக்கும். அந்தப் பக்கம் ‘தும்டி காய்’னு ஒன்னு கிடைக்கும். கீழ அகலமா மேல குறுகி கிரீடம் மாதிரி இருக்கும். அதைத்தான் பொதுவா மோர்மிளகாய் மாதிரி தயிர்ல ஊறவெச்சு… வெயில்ல காயவெச்சு… எண்ணைல பொரிச்சு… ‘மினுக்கு வத்தல்’னு சொல்வோம். இந்த வருஷ ஸ்டாக் கொண்டுவந்தது தீர்ந்துடுச்சு. 🙂 இன்னும் ஒரு மாசத்துல அடுத்த வருஷத்தது வந்ததும் படம் காட்றேன். 🙂
திங்கள், மே 14, 2007 at 1:00 பிப
pls change to english………….
வியாழன், மே 24, 2007 at 6:34 முப
//இன்னும் ஒரு மாசத்துல அடுத்த வருஷத்தது வந்ததும் படம் காட்றேன்.//
அடுத்த ஆண்டின் மினுக்கு வத்தல் அம்மா வீட்டிலிருந்து வந்துள்ளதா ? வந்(திருந்)தால் தயவு செய்து படம் பிடித்துக் காட்டவும். 🙂
வியாழன், மே 24, 2007 at 10:01 முப
அட அதெல்லாம் வந்து குழம்பு வெச்சுக் கூட சாப்பிட்டாச்சே!. படம் இங்க காட்டியிருக்கேனே.
மும்பை கடைக்காரர் கூட சொன்னமாதிரியே வரவழைச்சுத் தந்தாரு. 100 கிராம் ரூ.13.50
நான்தான் இன்னும் அம்மா வீட்டுக்கு வரலை. 😦
வியாழன், மார்ச் 26, 2009 at 11:02 முப
minukku vaththal mithukka vatral little bitterness will be there. ella maligaikadaiyilum kidaikkum. kilo 80 rs. vatral vangi ooravaiththu kazhuvi uppu more serthu kayavaiththu use pannalam.
வெள்ளி, மார்ச் 27, 2009 at 3:42 முப
எங்கூருக்கு பக்கத்துலெ திருமூர்ததி மலைண்ணு ஒரு மலெ இருக்கு. நாங்க அங்கெ இருந்து தான் மணுவு கணக்குலெ (1 மணுவு = 10 கிலோ) இந்த மங்காய வாங்கிட்டு வருவோம். எங்கம்மா அதுலெ ஊறுகா போட்டாங்கண்ணா அவங்க கைப் பக்குவதுக்கு வருஷக் கணக்குலெ கெடாமெ இருக்கும்.
இப்போ எங்கம்மாவும் இல்லெ, நாங்களும் சென்னைலெ செட்டில் ஆயிட்டோம். இப்போ பழய ஞாபகம் மட்டுந்தான் ….
வெள்ளி, மார்ச் 27, 2009 at 4:15 முப
சொல்ல மறந்துட்டேன். இந்த மாங்காய எங்கூருலெ கன்னி மாங்கான்னு சொல்லுவோம்.
செவ்வாய், மார்ச் 31, 2009 at 4:58 முப
[…] எப்டி ஊறுகா போட்றதுன்னு ஒரு அக்கா இங்க […]
புதன், ஏப்ரல் 1, 2009 at 10:51 முப
ராஜா: நீங்க சொல்றது சரி. உருண்டையான மலை வடு அதிகம் புளிப்பில்லாததாவும் கிளிமூக்கு கல்லாமணி மாங்காய்தான் அதிகப் புளிப்பாவும் இருக்கும். நான் சொன்னது சாதாரணமா அந்தச் சின்ன வயசுல அதோட இயல்பான சுவைல இருக்கற புளிப்பை.
நாங்க அநேகமா அந்த நாள்கள்ல மதுரை அழகர் மலையிலயும் வாங்கிப் போடுவோம். கன்னிமாங்கா பேர் புதுசா இருக்கு. வடுமாங்கான்னே கேள்விப்பட்டிருக்கேன்.
//அவங்க கைப் பக்குவதுக்கு வருஷக் கணக்குலெ கெடாமெ இருக்கும்.//
கெடாம இருக்கும். ஆனா நாங்க எல்லாம் இருந்தா தீராம இருக்குமா? உங்கள் அம்மாகிட்டயும் கைப்பக்குவம் கேட்டு தனிமடலிலோ இங்கே மறுமொழியிலோ உங்க பதிவுலயோ சொல்லுங்களேன்.
வியாழன், ஏப்ரல் 2, 2009 at 6:08 முப
Jayashree Govindarajan: அதான் சொன்னேனே. இப்போ அவங்க ஞாபகம் மட்டுந்தான் இருக்குன்னு. எங்க அம்மா 2002-இலேயே காலமாயிட்டாங்க. எங்க அக்காவுக்கு அந்த கைப்பக்குவம் இருந்தது. அவங்களும் போன வருஷம் காலமாயிட்டாங்க.
எனக்கு தெரிந்து உப்பு போட்டு 15 நாள் முதல் 20 நாள் வரை ஊற வைப்பார்கள். அந்த நாட்களில தினமும் 3 வேளை அதை எடுத்து குலுக்கி வைப்பார்கள். ஓரளவுக்கு காயெல்லாம் வற்றி விடும். அப்புறம் எடுத்து அதிலிருக்கும் நீருடனேயே தாளிப்பார்கள்.
வியாழன், ஏப்ரல் 2, 2009 at 7:57 முப
ராஜா: Sorry. இன்னும் கைப்பக்குவம் பத்தி பேசறதால யார்கிட்டயாவது குறிப்பு இருக்கும்னுதான் கேட்டேன். Sorry again.
புதன், ஜூன் 3, 2009 at 7:49 பிப
super aaa irukku
வெள்ளி, மார்ச் 19, 2010 at 7:55 பிப
எங்க அம்மா அழுகல் மாங்காய் பச்சடி என ஒன்று செய்வார்கள். அழுகின மாவடு, தயிர் எல்லாம் போட்டு. சூப்பரா இருக்கும். அதனால் உடல்நலக் குறைவு எதுவும் வந்ததில்லை! 🙂
ஞாயிறு, மார்ச் 13, 2011 at 10:09 பிப
dEAR RAJA CAN YOU PLS INFORM VADU MANGAI AVAILABLE ADDRESS IN UDUMALI, I AM TIRUPUR I WANT TO BUY THIS 5 KG PLS ADVISE
RGDS
S.GNANAM
GNK888@GMAIL.COM
ஞாயிறு, மார்ச் 13, 2011 at 10:10 பிப
gnk888@gmail.com
வியாழன், ஏப்ரல் 19, 2012 at 9:17 பிப
ஜெ… நானும் சம்சார சாகரத்துல தைரியமா நீஞ்ச ஆரம்பிச்சுட்டேன்.. ஐ மீன்.. உங்க குறிப்புபடி இந்த வருஷம் மாவடு போட்டாச்சு… டேங்கீஸ்…
புதன், மார்ச் 20, 2013 at 9:50 முப
அருமையான விவரிப்பு.
– ராஜேஷ், பாண்டிச்சேரி.
சனி, ஏப்ரல் 18, 2015 at 11:35 முப
More than the vadumangai the narration itself is very interesting,I enjoyed.