சுட்டிகள்


 

கைசிக ஏகாதசி குறித்து இங்கே கொஞ்சமாய் குறிப்பிட்டிருக்கிறேன்“ஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி” என்று இணையத்தில் தேடினால் மேலும் விபரங்கள் கிடைக்கும்.

இந்த வருடச் செய்திக்கான சுட்டி: பிரம்ம ரத மரியாதை ரத்து பிரச்னையில் சுமுக தீர்வு

கோயில் ‘ஸ்ரீபாதந்தாங்கிகள்’ என்கிற பெருமாளைச் சுமந்துசெல்பவர்கள் மறுத்தாலும் பிற சீடர்கள் விரும்பிச் செய்யத் தயாராக இருந்தும் ம.க.இ.க போராட்டத்திற்கு பயந்து இராமானுஜர் காலத்திலிருந்து தொடர்ந்து நடக்கும் பிரம்ம ரதம் இந்த வருடம் நடக்காமல் ‘சுமுக’மாக முடிந்தது. இதுகுறித்து பட்டர் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் போட்ட வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது என்கிறது சன் செய்திகள்.

போராட்டத்தின் நோக்கம்: மனிதனை மனிதம் சுமக்கும் அவலத்தை எதிர்த்து.

எனவே இந்த வருடம் ஏகாதசி இரவில் விடிய விடிய கைசிக புராணம் படித்த பட்டரய்யங்கார், முடித்த நொடியே (அதிகாலை) கோயிலின் பிற மரியாதைகளான சந்தனம், மாலை, மேளம் உள்பட அனைத்தையும்கூட மறுத்துவிட்டு (“நான் அரங்கனுக்கு கைங்கர்யம் செய்யவந்தேன்; செய்துவிட்டேன். இவை எதுவும் தேவையில்லை”) வீட்டுக்குச் சென்றுவிட்டார். ம.க.இ.க உடனே தன் வெற்றியை, மகிழ்ச்சியை 10,000 வாலா வெடித்துக் கொண்டாடியும்  இன்று ஊரெங்கும்  பிரம்ம  ரதத்தைப் புறக்கணித்து ஒத்துழைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியிருப்பதாகவும் செவிவழிச் செய்தி.

அடுத்த மாதம் மார்கழியில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து இராப்பத்து ‘அரையர் சேவை’ முடிந்து கடைசியில் 4000 பாசுரங்களும் பாடிய அரையருக்கும் இந்த பிரம்மரத மரியாதை வழக்கமாக உண்டு. தமிழ்ப்பெயர் வைத்தாலே வரிவிலக்கு தரும் அரசாங்கத்தின்கீழ் இருக்கும் ‘இந்து’ அறநிலையத் துறையும் அறங்காவலர்களும் இந்த ஆண்டு என்னசெய்வார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தொடர்புடைய பதிவுகள்:

 வினவு

திருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா – அரங்கனுகே சவால் விடும் அறநிலையதுறை

BF by Sreeja

நெருங்கும்போதும் அகப்படாமல் பறந்துபோகிறாய்…
நிழலைப் போல தொடரும் என்னை மறந்துபோகிறாய்…
உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே…
எனக்கும் கூட அடிமைக்கோலம் பிடிப்பதில்லையே…

 

“எல்லாரும் குளிச்சுப் பொறப்பட்டா கோதை தெளிச்சுப் புறப்பட்டாளாம்”னு எங்க ஊர்ல ஒரு சொலவடை உண்டு. ஒருவழியா நானும் எனக்குக் கொடுத்த பட்டர்ஃபிளை அவார்டை என் பதிவுல போட்டுட்டேன். பொதுவா இந்தத் தொடர் சுற்று விஷயங்கள் எப்பவுமே எனக்கு ஒத்துவராது. ஆனாலும் கல்யாணக்கமலா மேல நான் வெச்சிருக்கற மரியாதை இந்த விருதை விட அதிகம். அதனால மகிழ்ச்சியோடவே ஏத்துக்கறேன். அவார்டோட பேர் அதிகம் பிடிச்சிருந்ததுங்கற காரணத்தையும் மறுக்கமுடியாது. 🙂

வண்ணத்துப் பூச்சி, பட்டாம் பூச்சிங்கற மாதிரி தமிழ்ப் பேர்களைவிட பட்டர்ஃபிளைல ஜில்ப்பு அதிகமா இருக்க எஸ்பிபி, ஆஷாவோட குரல்ல மீரா பாடலும் (கேட்கலாம் / பார்க்கலாம்) ஒரு காரணம். முதல்தடவை கிட்டத்தட்ட 15, 16 வருஷங்களுக்கு முன்னால பார்க்கும்போது எப்படி இருந்ததோ அப்படியே இந்தப் பாடல் இப்பவும் பரவசமா, உற்சாகமா இருக்கு. 🙂

bf

 

நான் சீன்லயே இல்லாதபோதும் என்னை நினைவுவெச்சிருந்ததுக்கு நன்றி கல்யாணக்கமலா.  🙂

நான் தினம் கூகிள் ரீடர்ல படிக்கற பதிவுகளோட எண்ணிக்கை எனக்கே மலைப்பா இருக்கு. தவிர்க்கவே முடியாம நாளும் ஏறிக்கிட்டே போகுது பதிவுகளோட எண்ணிக்கை. அதிகமா பதிவுகளைப் படிக்கறதே சொந்த வலைப்பதிவை கவனிக்க முடியாம போகிற முக்கிய காரணமோன்னு கூட தோணுது. சிலதை மட்டுமாவது எடுத்துடலாம்னு நினைச்சு ஒரு ஓட்டு கண்ணை ஓட்டினா எதையும் எடுக்க மனசுவரலை. எல்லாமே விரும்பிப் படிக்கற பதிவுகளாத்தான் இருக்கு.

இத்தனை பதிவுகள்லேருந்து ஏதாவது 3 பதிவைச் சொல்றது சாத்தியமே இல்லை. ஆனாலும் coolest என்ற வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து பின்னூட்டத்துல கூட மாற்றுக்கருத்துகள்(சண்டைங்கறதோட polite form), காழ்ப்பு அரசியல்கள் இல்லாத பதிவுகளாச் சொல்லலாம்னு நினைக்கறேன். (ஹூம், என் இந்த சமையல்குறிப்பு பதிவுகூட அப்படித்தான் இருக்கணும்னு ஆசைப்பட்டேன். எங்க விடறாய்ங்க? 😛 )

துளசி:  சூரியனுக்கு டார்ச் அடிக்காம நேரா விஷயத்துக்கு வரேன். இவங்க எழுதாத விஷயமே கிடையாதுங்கற அளவுக்கு வெரைட்டி. இவங்க அன்றாடம் வாழறதை எல்லாம் பதியறாங்களா அல்லது பதியறதுக்காக வாழறாங்களான்னு இனம்பிரிக்க முடியாத அளவுக்கு அவங்க வீட்டு பெர்சனல் விஷயங்கள்லேருந்து, நியூசிலாந்து விசேஷங்கள் வரைக்கும் எதையும் மிஸ்பண்ண முடியாது. எனக்குத் தெரிஞ்சு பேச்சுத் தமிழ்லயே சக்கைபோடு போடமுடியும்னு முதன்முதலா இணையத்துல நிரூபிச்சவங்க. எல்லாருக்கும் நல்லவங்கன்னு பாராட்டா பலரும் மாற்றா சிலரும் சொன்னாலும், அது எவ்வளவு சிரமம்னு அனுபவிச்சா தெரியும். 

டுபுக்கு: “ஏதாவது ப்ளாக் இருந்தா சொல்லேன், ஆபீஸ்ல ஆணிபிடிங்கி நொந்துட்டேன்”, “மேனேஜர் சொட்டைத் தலையன் லீவு. இல்லாதபோது ஆணி பிடுங்கினா இன்னிக்கி சம்பளம் செரிக்காது. ஏதாவது lighter side blog இருந்தா சொல்லு’, “எண்டர்டெயினிங்கா எனக்கு ஏதாவது ஸ்டஃப் படிக்க அனுப்பு அல்லது மெசஞ்சர் ஓப்பன் பண்ணி சாட்’ட வா” மாதிரி வேண்டுகோள்கள், மிரட்டல்கள் விடற என்னோட ‘சுற்றமும் நட்பும்’ கூட்டத்தில் யாரும் இலக்கியத் தாகமோ, அறிவுப்பசியோ, இந்த உலகத்தை இப்பவே பொரட்டிப் போடணுங்கற செயல்வேகமோ இல்லாதவங்க. அவங்களுக்கு உடனடியா நான் கைகாட்டிவிடறது இவரோட பதிவுகளைத்தான். அதைவிட முக்கியம், முதல் பார்வையிலேயே பதிவுகள்னா ஏதோ குடுமிப்பிடி சண்டைங்கற எண்ணம் வந்து அவங்க வெளியேறிடக் கூடாதுக்கறதுல ரொம்ப கவனமா இருப்பேன். (கொஞ்சம் பழகிட்டா அப்புறம் அவங்களே வந்து ஐக்கியமாயிடுவாங்கன்னு வைங்க.) ‘the think tank’ ன்னு போட்டிருக்கு.  அவ்ளோ dense எல்லாம் வேணாம்னு முதல்ல மிரளுவாங்க எல்லாரும். முன்ன எல்லேராம் பதிவைச் சுட்டிகிட்டிருந்தேன். ஆனா அங்க சண்டை கட்டாயம் உண்டு. 🙂

பாடும் நிலா பாலு:  டிவி பார்க்கறதே குறைவு. அதுலயும் குடும்பம் மொத்தமும் சேர்ந்து பார்க்கற டிவி நிகழ்ச்சிகள் செய்திகள் தவிர்த்து ரொம்பவே குறைவு. தொடர்ந்து விடாம நாங்க பார்த்த நிகழ்ச்சி ஜெயா டிவி ‘என்னோடு பாட்டுப் பாடுங்கள்’ மட்டுமே. மற்ற டிவிக்களோட போட்டி நிகழ்ச்சிகள்ல இருக்கற செயற்கைத் தனங்கள், வலிஞ்சு அழறது, சண்டை போடறது மாதிரி பில்டப்புகள் இல்லாம அநியாய அடக்கத்தோட, அளவுக்கதிகமான தகவல்களோட, தவறுகளைச் சுட்டிக்காட்டும் தன்மைல கூட ஒருவருக்கும் மற்றவருக்கும் இடைல வித்தியாசம்பார்க்க முடியாத அளவுக்கு நடுநிலைமையோட எஸ்பிபி இந்த நிகழ்ச்சியைக் கொண்டுபோனவிதம் அருமையோ அருமை. கோவிந்துக்கு மாறாத மயக்கம் பிபிஸ்ரீநிவாஸ் மேல மட்டும்தான். இந்த முறை சென்னை புத்தகக் கண்காட்சிக்கு நான் போயிட, கோவிந்த் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் பொண்ணைக் கூட்டிகிட்டு பிபிஸ்ரீநிவாஸ் வீடுவரைக்கும்போய் (அவர் இல்லைன்னாலும் பரவாயில்லை) திரும்பிவந்தார். அப்படிப்பட்டவர்கூட சனிக்கிழமை எங்க போனாலும் இரவு 8 மணிக்குள்ள வீட்டுக்குள்ள திரும்பி வந்துடற மாதிரியோ அல்லது 9 மணிக்கு மேலதான் வெளிய கிளம்பற மாதிரியோதான் தன்/எங்க நிகழ்ச்சிகளை அமைச்சிருக்கோம். இப்ப இந்த நிகழ்ச்சில மாற்றம் வந்தது பெரிய இழப்பு. அந்த அளவுக்கு பாலுவோட தனி ஆளுமை எங்களைப் பாதிச்சிருக்கு. இவருடைய பாடல்களை சுந்தர் வலைப்பதிய ஆரம்பிச்சபோதுகூட இவ்வளவுதூரம் தொடர்ந்து வரும்னு எதிர்பார்க்கலை. 🙂 கோவை ரவியும், வற்றாயிருப்பு சுந்தரும் விடாம இந்தப் பதிவை உயிர்ப்போட, அரிய பாடல்களைக் கண்டுபிடிச்சு எடுத்துப் போடவும் ஒரு பாடகரா பாலு கொடுத்துவெச்சிருக்கார். புதுப்பதிவு வரும்போதெல்லாம் என்ன பாடல்னு முதல்ல திறந்துபார்க்கற ஆவலை இன்னும்கூட கட்டுப்படுத்த முடியலை.
===

இவர்கள் பட்டாம்பூச்சி பரிசு வாங்கியதன் அடையாளமாக‌ பட்டாம்பூச்சி லோகோவை தங்கள் வலைத்தளத்தில் போட்டுக்கொள்ளலாம்.

இவர்களும் பட்டாம்பூச்சி பட்டம் வாங்கியவர்கள் என்றமுறையில் சில விதிகளைக் கடைபிடிக்க வேண்டும்.

1. இந்த பட்டாம்பூச்சி லோகோ உங்கள் பதிவுப் பக்கத்தில் இருக்க வேண்டும்.

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்புக் கொடுக்க வேண்டும்.

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்புத் தரவேண்டும்.

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியைத் தெரிவிக்க வேண்டும்.

அவ்ளோதான்! 🙂

kolam

* நண்பர் ஸ்ரீகாந்த் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடல்கள் குறித்து எழுத இருக்கிறார் என்று தெரிகிறது. ஆர்வமுள்ளவர்கள் இங்கு சென்று படிக்கலாம். http://bhakthi.wordpress.com/

* நண்பர் மதுரபாரதி திருவெம்பாவை பாடல்களுக்கு விளக்கம் அளிக்க இருக்கிறார். ஆர்வமுள்ளவர்கள் இங்கு சென்று படிக்கலாம்.  http://mozhi.blogspot.com/

-0- 

எழுத்தாளர் மாலதி சதாரா— ஏராளமான எழுத்துத் தகுதிகளுக்கும் அப்பால் முக்கியமாக “திருப்பாவை பிரவசனம் பண்ணுவதுண்டு. அது என் ஆன்மா” என்று சொல்லிக்கொண்டவர் இரண்டு வருடங்கள் முன்பு ராயர் காப்பி கிளப்பில் தொடர்ந்து 30 நாள்களும் திருப்பாவைப் பாடல்களுக்கான அக, புற ஆழ்ந்த அர்த்தங்களை எளிமையான நடையில் அழகாக எடுத்துவைத்தார். இரா.முருகன் அவர்களால் குழுமத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட அம்மடல்கள் குழுமத்துக்குள்ளேயே கண்டுபிடிக்க முடியாமல் போய்விடக் கூடாதென்பதற்காக தனியாக எடுத்துவைத்துக் கொள்ள நினைத்தேன். அவற்றை இங்கேயும் கொடுத்திருக்கிறேன். ஆர்வம் இருப்பவர்கள், நேரமும் இல்லாவிட்டாலும் முடிந்தபோதோ அல்லது தேவையான பொழுதோ சுலபமாக சுட்டியைப் பிடித்து, படித்துக்கொள்ள வசதியாக பாடலும் சுட்டிகளும் தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

நன்றி: மாலதி, ராகாகி.

எழுத்தாளர் இரா.முருகன் அறிமுகத்தோடு
முன்னுரை (1)–> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10407
முன்னுரை (2) –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10408

01. மார்கழித் திங்கள் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10409
02. வையத்து வாழ்வீர்கள் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10410
03. ஓங்கி யுலகளந்த –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10411
04. ஆழிமழைக் கண்ணா –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10413
05. மாயனை மன்னு –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10415
06. புள்ளும் சிலம்பின –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10425
07. கீசுகீசென் றெங்கும் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10433
08. கீழ்வானம் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10436
09. தூமணி மாடத்துச் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10439
10. நோற்றுச் சுவர்க்கம் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10443
11. கற்றுக்கறவை –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10449
12. கனைத்திளங் கற்று –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10471
13. புள்ளின்வாய் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10485
14. உங்கள் புழைக்கடை –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10489
15. எல்லே! இளங்கிளியே! –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10509
16. நாயகனாய் நின்ற –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10523
17. அம்பரமே தண்ணீரே –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10536
18, உந்துமதகளிற்றன் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10549
19. குத்துவிளக்கெரிய –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10559
20. முப்பத்து மூவர் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10567
21. ஏற்றக்கலங்கள் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10575
22. அங்கண்மா ஞாலத்து –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10577
23. மாரிமலை –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10578
24. அன்றுஇவ் வுலகம் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10587
25. ஒருத்திமகனாய் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10600
26. மாலே! மணிவண்ணா! –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10628
27. கூடாரைவெல்லும் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10638
28. கறவைகள் பின்சென்று –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10643
29, சிற்றஞ்சிறுகாலே  –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10661
30. வங்கக்கடல் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10661

# ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது என்று சொல்கிறார். பொதுவில் நகைச்சுவைக்காகவோ அன்றி வீம்புக்காகவோ பலர் எதிர்க்கும்மி அடித்தாலும் உண்மையில் ஆண்களில் பலர் இன்றைய காலகட்டத்தில் சமையலில் ஆர்வமுடன் பங்கேற்கவே செய்கிறார்கள். இணையத்திலும் வெளியிலும் சமையல் குறித்த தகவல்கள் அவர்களுக்கும் அதிக அளவில் தெரிவதும், அம்மாவிற்கு உதவாதவர்கள்கூட மனைவிக்கு உதவ முன்வருவதும் மிகவேகமாக வளர்ந்துவரும் வரவேற்கத் தக்க முன்னேற்றம். எனக்குத் தெரிந்தவரை அவர்களை சமையலுக்குப் பின்னான துப்புரவு வேலைகளே மலைக்க வைக்கின்றன.

# என்னை மிகவும் சஞ்சலப்படுத்துவது உணவுப் பொருளை வீணாக்கும் இந்த மாதிரி செயல்கள் தான். மற்றபடி அது ஐஸ்வர்யாவிற்கா, அம்பாளுக்கா என்பது அவரவர் இஷ்டம் தான். அதிலெல்லாம் பிரச்சினன இல்லை. மேலும் சுட்டிகள்.. சுட்டி 1 | சுட்டி 2.

# அரிசி பழசுதான். ஆனால் நடை புதிது. நிறைய விஷயங்கள் புதிது. சுவாரசியமாக எழுதியிருக்கிறார்.  சுட்டி 1 | சுட்டி 2 | சுட்டி 3.

# ஓட்ஸ் சாப்பிட்டால் சுகர் அதிகமாகும் என்பது தவறான கருத்தாக இருக்க வேண்டும். ஆனால் அதிகமாக ஜவ்வரிசி, பார்லி, ஓட்ஸ் போன்றவை சிறுநீரைப் பெருக்குவதால் நீரிழிவு நோயாளிகள் உடலில் மிக அதிக நீரிழிவுக்கு ஆளாவார்கள். அவர்கள் உடல் நலத்திற்குக் கேடு. முடிந்தவரை இவைகளை அவர்கள் தவிர்ப்பது நல்லது. 

# உணவு சம்பந்தப்பட்டதில்லை என்றாலும் எனக்குக் கவலையைக் கொடுத்த பதிவு. பொதுவாக யாராவது சரியாக நடந்துகொள்ளவில்லை என்றால் அதது அவரவர் தனிப்பட்ட குணம் என்று போய்விடுவேன். ஆசிரியர்களை அப்படி விட முடிவதில்லை. :((

# தனிப்பட்ட முறையில் எனக்கு எந்நாளிலாவது தேவை இருக்கும் என்பதாலும், எனக்குத் தெரிந்த வெளி நண்பர்களுக்குக் கொடுக்கலாம் என்றும் இந்தச் சுட்டிகளை இங்கே சேமிக்க நினைக்கிறேன். 

0. கணினியும் இசையும்
1. குறுவட்டிலிருந்து MP3 க்கு மாற்றுதல்
2. ஒலிநாடாவிலிருந்து கணினிக்கு மாற்றுதல்
3. ஒலிநாடா பாடல்களைத் தனித்தனி எம்பி3 கோப்புகளாக்குதல்
…..
…..

# தம் பிரியாணி என்பது கரிப் புகையை பாத்திரத்தில் பிடித்துவிட்டு அதில் சமைப்பது. பிரியாணியில் அந்தப் புகை மணம்(?) இருந்துகொண்டே இருக்கும். பலருக்குப் பிடித்த அந்த மணம் எனக்கு ஏனோ பிடிக்கவில்லை. 😦 ஒரேமுறையோடு மறந்துவிட்டேன். இன்னொரு சுட்டி.

# தவச தானியம் என்றால் என்ன?

# சேவியரின் பதிவுகள் எல்லாமே தவறவிடாமல் படிக்க வேண்டியது. இந்த வாரத்திற்கு.. சுட்டி 1 | சுட்டி 2 | சுட்டி 3.

# இருக்கற அவசரத்துல கீரையைப் பத்தி எனக்குத் தெரிஞ்ச தகவல்கள் கொஞ்சம், இங்கே….

# கடைசியா கண்ணுக்கு விருந்து.. விருந்து 1 | விருந்து 2

கவிஞரும் எழுத்தாளருமான தற்போது பெங்களூரில் வசித்து வந்த சதாரா மாலதி நேற்று இரவு இயற்கை எய்தினார்.

satara-malathi.jpg 

குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

ரா.கா.கிளப்பில் அருமையாக திருப்பாவைக்கு விளக்கம் எழுதியவர். இரா.முருகனால் எனக்கு தனிப்பட அறிமுகப்படுத்தப் பட்டவர்.

===
Murugan told me you had lots of interest in Thiruppaavai. I am very happy about that.Because very few take interest in it. My face is different as far as modern literature is concerned.I am much rational but Thiruppaavai enchanted me like a magic.Pl let me know your criticisms also It is not that I am always sensitive to attacks. I hate only illogical attacks with pre decided ideas.

Ys Malathi.
====

மாலதி சதாரா என்ற பெயரில் மரத்தடிக்கு வந்து போட்டிக் கதை, கவிதை எழுதி கவிதையில் இரண்டாம் பரிசு பெற்றவர். பெண் கவிஞர்கள் பற்றிய விமர்சனம் ஓடிக்கொண்டிருந்த போது திடீரென ஒரு புயல் மாதிரி வந்து தன் கவிதைகளையும் கருத்துகளையும் கனல் மாதிரி கொட்டிவிட்டுக் காணாமல் போனவர்.  

===================
ஆபாச வார்த்தைகளைக் கவிதையில் போடும் பெண் கவிஞர்களைப் பற்றி அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அவர்கள் பிறர் கவனம் பெற அப்படி எழுதுவதாகவும் அவர்கள் அதீத உணர்வுக்கு ஆளாகி அப்படி எழுதுவதாகவும் சிலர் சொல்லியிருக்கிறார்கள். கவனம் பெறவென்று எழுதுகிறார்கள். சரி. அந்த கவனத்தை ஏன் கொடுக்கிறார்கள்? அக்கறையினால் அல்ல. பேசப்பட்ட விஷயத்தின் கனத்தால் பாதிக்கப்பட்டு அல்ல. விளம்பரத்துக்காக. பரபரப்புக்காக. உண்மை தானே? சில சுயலாபங்களுக்காக சில பத்திரிகைகளும் சில குழுக்களும் சேர்ந்து சில பெண் கவிஞர்களை மட்டும் உலக மகா கவிஞர்களாக எடுத்துச்செல்கிறார்கள். [முன் எப்போதும் பெண்கள் எழுதியதே யில்லை என்பது போன்ற பாவனைகளுடன். தஸ்லீமா நஸ்ரீன், கிஸ்வர் நஹ்ஹீத் போன்ற பிறமொழிக் கவிஞர்கள் தாம் வழிகாட்டிகள் என்பது அப்பட்டமாகத் தெரிந்திருந்தும்] அந்தப் பெண் கவிஞர்களும் அவர்களுக்காகவே இயங்கிவரும் அந்தப் பத்திரிகைகளில் எல்லாரையும் தூக்கியெறிந்து தாம் எழுதுவது மட்டுமே இலக்கியம் என்று பேசிவருகிறார்கள். கவனமாக உள்ளூர்க் கவிஞர் பட்டியலைத் தவிர்க்கிறார்கள். ஆண் கவிஞர்கள் எதுவுமே எழுதவில்லை என்று சொல்வதுடன் பிடித்த பெண் கவிஞர்களாக பிறமொழிப் பேர்களையே எடுத்து வைக்கிறார்கள். அது, ஒத்த முனைப்புள்ள போட்டி வணிகர்களுக்குப் பிடிக்காத போது ஆபாச வார்த்தைகளைக் கண்டுபிடித்து அவற்றுக்காக அவர்களைக் கடிந்து தூற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் மேலான குறுகிய காலத்து அதீத கவனத்தைத் தாங்க முடியாமல் தான் இந்த எதிர்ப்பு அலையே ஏற்பட்டிருக்கிறது.. ஆக மொத்தம் எல்லாமே விளம்பர சாகஸம் தான். அதிகக் கவனமும் மேலதிகமான எதிர்க்கவனமும் சம்பந்தப் பட்டவர்களை இன்னமும் நிலை தவறச் செய்கிறது. எதிர்ப்பு செய்தே கவனம் பெற இன்னும் ஒரு கோஷ்டி தயாராகிவிட்டது தேவையில்லாத வாத விவாதங்களுடன். இது ஒரு புறம்.

அதீத உணர்வுக்கு ஆளாகி அப்படி எழுதுகிறார்கள் என்று சொல்கிறார்கள். அப்துல் ரஹ்மான் சொன்னார். அவர்கள் எழுதுவது ‘அழைப்பதை’ப் போல் இருக்கிறது என்பதாக. என்னைப் பொறுத்தவரை ஆபாச வார்த்தையோ ஆபாச விஷயமோ என்று முத்திரை குத்திக்கொண்டு எதுவும் உட்கார்ந்திருக்கவில்லை. உண்மைகளைப் பட்டவர்த்தனமாகச் சொல்லவரும்போது சிலருக்கு தர்ம சங்கடமாயிருக்கலாம். ஆனால் உண்மை உண்மை தானே? கூடத்தில் குளிக்க முடியுமா என்று கேட்பவர்கள் குற்றாலத்துக்கு ஏன் போகிறார்கள்? குளிப்பது ஆபாசமா?

இந்தியா டுடே வாசகி ஒருத்தி எழுதியிருந்தார்’ ஆடை அணியாமல் நாம் போகிறபோது மட்டுமே இந்த வகையான கவிதைகளை நாம் உரத்துப் படிக்கவும் பகிரவும் முடியும்’என்று. உண்மை தான். சந்தேகமேயில்லை. ஆனால் இந்த வகை எழுத்து இயங்குவது சிறு பத்திரிகைகளில். அது nudist colony. அங்கு ஆடை தான் ஆபாசம். யாரும் யாருடைய நிர்வாணத்தையும் அரிப்புடன் பார்ப்பதில்லை. நிர்வாணம் சிற்பத்தில் அழகு. ஓவியத்தில் அழகு. கவிதையில் மட்டும் அசிங்கமா? சினிமாவில் கட்டிப்புரள்வது போன்றதா?

மாலதி போராடிக் காப்பாற்றும் நிலையில் சம்பந்தப்பட்ட யாரும் இல்லை என்றாலும் இது தான் சாக்கு என்று மேலும் மேலும் எதிர்த்துப் பேசுபவர்களுக்கு அவர்களுடைய நோக்கத்தில் இருக்கும் பெரிய தவற்றைச் சுட்டிக் காட்டவே இதை எழுதுகிறேன். எந்தக் கருத்துக்கும் வெளிப்பாட்டுக்கும் தடை விதிப்பது ஜனநாயக விரோதம். தணிக்கை என்பதே அடக்குமுறையின் வடிவம். இதில் மிக நுட்பமான பெண் எதிர்ப்பும் ‘சும்மா பேனாவை ஒடித்துப் போட்டு உள்ளே கிட’ என்ற அச்சுறுத்தலும் இருக்கிற விஷயம் மேலோட்டமாகத் தெரிந்து விடாது. குற்றம் சாட்டப்பட்ட கவிதைகளும் மிக நல்ல கவிதைகள் அவைகளை முன்னுதாரணமாகக்கொண்டு மேலெழுந்த அடுத்த வரிசைப் போலிக் கவிதைகளைத் தவிர. மீண்டும் சாய்வின்றி படித்துப் பாருங்கள். பிடிக்காவிட்டால் புறக்கணித்துப் போய்க்கொண்டே இருங்கள்.

நான் ஏற்கனவே [ஒரு பேட்டியில்] குறிப்பிட்டது போல மரணமும் காதலும் அவரவருக்குப் பிரத்யேக அனுபவம். அப்படியே கவிதையும். ஒருவர் கவிதையை இன்னொருவர் எழுத முடியாது. இன்னொரு உதாரணமும் எழுதியிருந்தேன். வெவ்வேறு பெண்ணுக்குப் பிரத்யேகமாக வரும் தீட்டு போல என்றும். கவிதையை இந்த வார்த்தையைப் போட்டு எழுது என்றோ போடாமல் விடு என்றோ யாரும் யாருக்கும் ஆணையிடமுடியாது. ஏனெனில் கவிதை நாளத்திலிருந்து வருவது. விரல்களிலிருந்து அல்ல.

அக்கறையுள்ள படைப்பாளிகளே புரிதலில்லாமல் மேலோட்டமாக ஒழுக்கவியல் ஆண்டைகள் போலப் பேசி வருவது மிகவும் வருத்தம் தருகிறது. மீதி எத்தனையோ விஷயங்களிருக்க இது ஏன் என்று குறிப்பிடுவது தவறு. சமூகக் குற்றங்களுக்கும் வன்முறைகளுக்கும் முக்கியமான காரணங்களில் ஒன்று பாலியம் சம்பந்தமான பாசாங்குகள்.

இப்போது நான் மிக ஆபாசமான ஒரு இணைப்பைத் தரப் போகிறேன். என் கவிதைகள் சில. இவை ஒரு நாளும் உங்களை வந்து சேரப்போவதில்லை. ஏனெனில் ஒரு புத்தகம் விற்றுத் தீர்ந்துவிட்டது. இன்னொரு பதிப்பை என் வாழ்நாளில் போடும் உத்தேசமில்லை. அடுத்து இரு தொகுப்புகளை நான் யாருக்கும் கொண்டு சேர்க்கவில்லை. கொண்டு சேர்த்து என்ன ஆகப்போகிறது என்ற நினைப்பு தான். இப்போது நான் சொன்ன ஆபாசம் நான் இணைத்துள்ள கவிதைகளில் இல்லை. நான் இவற்றை முன் வைக்க வேண்டி வந்த முனைப்பில் மிகப் பெரிய ஆபாசம் இருப்பதாக சத்தியமாக நம்புகிறேன். [தன்னைத் தான் முன்னெடுப்பதைவிடக் கொடுமையான விஷயம் உலகில் இல்லை.என்ன தான் விளம்பர யுகம் என்றாலும்] பூச்சிமருந்து தெளிக்க விரும்பவில்லை என் பூத்த பூக்களுக்கு.
 
திரும்பவும் ஞாபகப்படுத்திக் கொண்டு பார்க்கிறேன். கவிதை எழுத வேண்டும் என்று தோன்றுவதே என்னைப் பொறுத்தவரை அடாத செயல் தான்.தாங்க முடியாமல் போன போது தான் எழுத வேண்டி உந்தல் பிடரியைப்பிடித்துத் தள்ளுகிறது.

உதாரணமாக இத்துடன் இணைத்திருக்கும் ‘சாபம்’ என்ற கவிதை பெங்களூர் சுப்ரமண்யநகர் வீட்டு மூன்றாம் கட்டடத்துப் பெண் தீயில் கருகின வலது பக்கத்துடன் பிறந்தவீடு வந்தாள் என்ற செய்தி கேட்டதும் எழுதப்பட்டது. அது அசிங்கமாக வந்திருக்கிறது. குடிசைப் பையன் கையாலாகாத நிலையில் பெருந்தனக்காரன் அடக்குமுறைக்கு வரும்போது சீற்றத்துடன் ‘…த்தா’ என்று உரத்து சப்தமிடுவது போல.

பெண் வெளிப்பாட்டில் ஒரே ஒரு பெண் இல்லை. பல பெண்களுக்காக ஒரு குரல் மெல்ல ஒலிக்கிறது. ஒலிக்கிற பெண் குரல் முக்காலும் வேசியின் குரலாகவே அடையாளப்படுகிறது. ஏனெனில் பெண் கிழவியாகவோ பைத்தியமாகவோ அறியாச் சிறுமியாகவோ இருக்கும்போது மட்டும் தான் குரலெழுப்ப முடிகிறது. அந்த மூன்று நிலைகளுக்குட் படாமலே ஒரு பெண் பேசி விட்டால் அவள் வேசியாகத் தானிருக்க வேண்டுமென்ற சமூக விதி எழுதப் படாமல் இயங்குகிறது.

யாரையும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்க வேண்டும்.

அன்புடன்
மாலதி

பி.கு.
உண்மைகளைத் தெரிந்தவரை எழுத வேண்டும் என்பது தான் என் நோக்கமே ஒழிய சக கவிஞர்கள் மேல் காழ்ப்போ அல்லது சுய பரிதாபமோ என்னில் ஒலிப்பதாக இட்டுக் கட்டி நினைக்கவேண்டாம். எனக்கு ஆதாயம் தருகிற நல்ல [முதலீடில்லாத]சில தொழில்கள் கைவசம் உள்ளன. கணக்கெழுதுவது, சமையல் செய்வது,பற்று தேய்ப்பது, முதியோர் பராமரிப்பு இன்னும் பல. இவைகளைச் செய்து சாப்பிடுவேன்.

===

திண்ணையை மறந்து விட்டேன். திண்ணையில் இலக்கியக் கட்டுரைகள் எழுதுவதும் அடியேன் தான். நாச்சியார் திருமொழி, மறுவாசிப்பில் திருப்புகழ், பிரும்மராஜன் கவிதைகள் [திறனாய்வு], அ.முத்துலிங்கம் கதைகள் [திறனாய்வு], அம்மா வந்தாள் பற்றி தி. ஜானகிராமனின் பெண்கள் ஆண்கள் கிழவர்கள் [முழு ரிவ்யூ]மற்றும் சில. கால்வினோ கதைகள் பதினைந்தை அறிமுகம் செய்திருக்கிறேன் என் புரிதலின் படி.[பிரும்மராஜன் வழி].

அப்புறம் எதாவது ஞாபகம் வந்தால் சொல்கிறேன். மங்கையர் மலர் கட்டுரைகளில் முக்கியமாக நிறைய மனிதவள மேம்பாடு, பிறகு நகைச்சுவை அப்புறம் சில முக்கிய பெண்ணிய கட்டுரைகள் இப்படி. சேலம் பெங்களூர் ரயில் பாதை, மாவின்குருவே[பெண் கரு அழிப்பு பற்றி நக்கலோடு உக்கிரமாகச் சொல்லப்பட்ட கதை. தலைப்பு மறந்து விட்டேன்.] ஆண்களைப் பற்றின நகைச்சுவைக் கட்டுரை அதெல்லாம் யாருக்காவது ஞாபகம் வரலாம். அப்புறம் நீத்தார் வழிபாடு குறித்து திருநாவாய் பற்றி கட்டுரை எழுதினேன். திருவனந்தபுரம் ஆட்டுக்கால் பகவதி கோயில் கண்ணகி சம்பந்தப்பட்டது என்பதை எழுதினேன். மன்னிக்கவும் இனிமேல் எழுத நிறைய இருக்கிறது. இனிமேல் தான் எழுத வேண்டும்.

பி.கு. கருத்தரங்கக்கட்டுரைகளும் சில உண்டு.
கு.ப.ரா. பற்றி சேலத்தில் காலச்சுவடு நடத்திய கருத்தரங்கில்.
பெண் காதல் கற்பு… பாண்டிச்சேரி கருத்தரங்கில்
மற்றும் சில.
உபரித் தகவல். நான் தான் கடைசி நபர் இலக்கிய வட்டாரத்தில். காரணம் எல்லாரும் வெறுக்கக் கூடிய எல்லா அடையாளங்களும் என்னிடம் உண்டு. நான் BSNLநிறுவனத்தின் Chief Accounts Officerம் கூட. சாப்பாடு போடுவது கணக்கெழுதும் உத்தியோகம் தான். மீதியில் எல்லாம் பொருள் இழக்கிறேன். அப்படியே எனக்கு சின்னத்திரை ஜனரஞ்சகப் பத்திரிகைகளை விட இலக்கியப் பத்திரிகைகளில் பைத்தியம் அதிகம். யாரும் கவனிக்காவிட்டாலும் அதில் தான் உயிர் தீவிரம் பெறுகிறது. அதில் திருப்தி வருகிறது. அவற்றில் எழுதுவதே ஆனந்தம். பன்முகம், புதிய கோடாங்கி, கனவு, கணையாழி, விருட்சம் இதிலெல்லாம் தொடர்ந்து எழுதுகிறேன். ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கும் விரைவில் எழுத வேண்டும். நான் தான் சோம்பேறியாக இருக்கிறேன். அவர்கள் மறுப்பதில்லை. ‘பெண்ணே நீ’ யில் சில கட்டுரைகள் எழுதினேன். [தினமணி.காம்-ல் கிடைக்கும்.]

அப்பா! எனக்கே போரடித்து விட்டது. இன்னும் ஒரு வருடத்துக்கு என்னைப் பற்றி ஒன்றும் சொல்ல மாட்டேன்.

அன்புள்ள மாலதி.

மறந்தே போச், திருப்பாவை பிரவசனம் பண்ணுவதுண்டு. அது என் ஆன்மா.

=====

சாபம்

எரிந்து எரிந்து
சாம்பலானான்
ஒரே ஒரு ஆண்.
அவன் சொன்னான்
நான் போதும்
ஆண் இனத்துக்கே
இனி எரிவது எப்போதும்
பெண்ணாகவே இருக்கட்டும்.
சொன்னவன் மன்மதன்.
இவளுக்கோ
ஒரு நேர உபயோகத்துக்கு
வகுத்த அவயவங்கள்
ஆயுள் தண்டனை.
சில மாதத் தேவைக்காக
சிலுவையாய்ச் சுமக்கின்ற
வசீகரப் பால் பண்ணை.
எரிந்து எரிந்து வாழ்வாள்.
வகிடிட்ட இணைமேட்டில்
மடிப்பிட்ட உள் துடையில்
உணர்வெரிக்கும்.
விடுபடல் இல்லாமல்
இடுக்குகள் சிக்கலிடும்.
இன்னமும் போதாமல்
சாபம்.
பின் எப்போதும்
தீவிபத்து எல்லாமே
பெண்ணுக்கே நேர்வானேன்?
வரிக்குதிரை[1999]

0


சிறகு முளைத்த சுமைதாங்கிகள்

காரியாலயம் போகும்
காரிகையர் நாங்கள்
கரியர் விமன்
கஞ்சிக்கும் துணிக்கும்
கணவனை எதிர்பார்க்காத
கவிதைப்பெண்கள்
காப்பு கட்டளை கப்பம்
கணவன் வீட்டில்
கண்டவர்க்கும் சீர்
கடன் வாங்கிச்செய்வோம்
நார்நாராய்க்கிழிக்கும்
நார்களுண்டு எங்களுக்கு
மாமனார் நாத்தனார்
மனம் குன்றி மக்கள்
பிறந்ததுண்டு எங்களுக்கு
எங்களுக்கும் சுகர் வரும்
பி.பி. வரும் நோய்கள் வரும்
கரியர் விமன் என்று
எது விட்டது எங்களை?
பையன் பெயிலானால்
டிப்ரஷன் எங்களுக்கு.
பெண் புறம் போனால்
டிப்ரஷன் எங்களுக்கு
கரியர் மென்னுக்கு
அதெல்லாம் கிடையாது.
ஒரு வாக்கியம் சொல்லி
விட்டு விடலாம்
‘நீ வீட்டில் இருக்கலாமே!’
என்று.
கரியர் விமன் என்றால்
கைப்பை கண்ணில் ஒளி
கைவீசும் சுதந்திரம்
அவற்றின் விலை?
காதல் உண்டா வீட்டுக்குள்
என்றா கேட்டீர்கள்?
காதலா? அது என்ன?
ஓ! அந்தக் கசங்கலா?
கால்களிடைப் பிசுக்கா?
உண்டு.
அது கொண்டு தரும்
கடல் போல வேதனை
கண் கீழ் கருவளையம்
கை கால் நடுக்கம்
கர்ப்பம் கலைப்பு
தன்னைத் தொலைத்துக்கொண்ட
அவமானம்
அத்தனையும் உண்டு.
காதலென்று ஏதோ
நெஞ்சில் விழுமாமே!
அது எங்களுக்குத்
தெரியாது.
அன்றாடம் எங்கள் தேவை
கால் கப் காப்பி
கடும்பசிக்குக் கவளம் சாதம்
சரியான நேரத்தில், சூட்டில்.
கிடைக்காதே!

அத்தனையும் மீறிப்
பளிச்சிட்டால்
தேடிவரும் பட்டங்கள்
‘ஒருமாதிரி’யாய்.
புத்திசாலி என்ற பேர்
எந்நாளும் கிடைக்காது.
அதற்கு நாங்கள்
ஆணாய்ப் பிறக்கவில்லை.

புத்திரர்க்கு எங்கள் மேல்
கொள்ளை ஆசை
புதினாத் துவையல்
அம்மா கைப்பாகம்
பிரம்மாதம் என்பார்கள்.
பெண்களுக்கோ எங்கள்
நகை மேல் மோகம்
இந்த மூக்குத்தியில்
அம்மா! நீ எத்தனை அழகு
என்பார்கள்.

கடைசிச்செலவுக்கும்
எங்கள் கைப்பையில்
காசிருக்கும்.
கைப்பை கிடைக்காமல்
கண நேரம் போனாலும்
கடுகி வருவாள் கைகொடுக்க
ஒரு தோழி அவளும்
ஒரு கரியர் உமன்.

ஒன்று மட்டும் நடக்காது.
காரியம் செய்ய வரும்
கணவனின் கைக்கொள்ளி
பிடுங்கி
செத்தபிறகாவது
இவளைச்சுடாதே
என்று சொல்ல
தோழிக்கு முடியாது
முடியவே முடியாது.
வரிக்குதிரை[1999]

0

மெல்லியது

துடைக்கிடை துளைத்த
தோட்டாவும்
அடைபட்ட பேருந்து பயணத்தில்
மேவாடை மறுக்கின்ற
உள்நசிவின் முடிச்சிறுக்கின்
ஊவாமுள் பூனைக்காஞ்சி உறுத்தலும்
உள்மீட்டும் நெருக்க வாசமும்
பள்ளம் பொளியும் எண்ணச்சிற்றுளியும்
கண்விரிய எழுதிவிட்ட
கவிதைக்கிறக்கமும்
எல்லாமுமாகி வருத்துது.
மலரினும் மெல்லியது.
தணல் கொடிப்பூக்கள்[2001]

0

நிலம் என்னும் பொல்லாள்

யோநி குண்டம் பிளந்துவைத்தாள்
பாவியாள் பார்க்கத்தரமல்லாள்.
காலக்கணவன் அவளைக்
கால் மாற்றி உதைத்தான்.
கர்ப்பிணியை வதைத்தான்
கன்று பிரித்தான்.
கான்கிரீட் கனத்தாலே
கடுப்புற்றாள் பால் காம்பில்.
கர்ப்பப்பைப் புற்றாலே
நித்தியமாய் இரத்தவிடாய்.
ஊசியால் விந்தேற்றி அவளில்
உலர்ந்த கருத்தரிப்பு.
பேணுதல்களில்லாமல்
பேறுகள் பலகோடி
உடல் மரத்துப்போகவிட்டான்
உற்றதுணவன் அவளை.
முலைவருடாமல் முகவாய் பிடிக்காமல்
இதழ் சுவைக்காமல்
உடல் மரத்துப்போகவிட்டான்.
ஈரத்தினவுக்கு ஈடு கிடைக்காமல்
சோரத்தில் நின்றுவிட்டாள்.
பகிரங்க வேசியாய்
பால்மாறி நின்றாள்.
பெண்மை மறந்தாள்.
கணவன் மேல் கோபமென்றால்
குழந்தைகள் மேல் குற்றங்கள்.
ஆடையணியட்டும் அவள்.
ஆசை மறக்கட்டும்.
பெண்காமம் பெரிதென்று
காட்டிவிட்டாள். மாற்றட்டும்.
கோள்கள் மேல் ஏறிக்கொண்டு
கொக்கரித்தான் அவள் கணவன்.
புத்தி வரப்போவதில்லை
பதிகளுக்கு எந்நாளும்.
பித்தாட்டம் பத்தினிக்குப்
போதும் நிறுத்தட்டும்.
தணல் கொடிப்பூக்கள் 2001

இந்தக் கவிதை எழுதியபின்பு கொஞ்சம் வளர்ந்திருக்கிறேன். இதில் பத்தினி
வேசி என்று பெண்நிலைப் பாட்டுக்கு விரோதமான சொற்களை உபயோகப்படுத்தி விட்டேன் தெரியாமல். ஆனாலும் பண்ணிய தப்பை மறைக்க விரும்பவில்லை.

0

உறுப்பிலக்கணம்

பெண் போலணிந்த உடை
இரு பாலிலி நான்.
கைவழிப்புணர்ச்சி தான்
கட்டிவரும் எனக்கு.
உடல்மொழி தெரியாது
மதம் உதற வராது.
அன்புண்டு ஆண்டவன் தானில்லையென
அநியாயப்புளுகுக்குப் பயிற்சியெடுக்கவில்லை.
ஒன்றிரண்டு மூன்றுமில்லைநான்காவது
ஐந்தாவது மதங்கள் தேவலாம்
என்று சிறுபான்மையில் ஒளிய
நாட்டம் எதுவுமில்லை.
சட்டமும் சத்தியமும்
சம்பளமும் பேணும்
சாணாத்தி பிழைப்பெனக்கு.
சாதி எதிலுமில்லைஎன்
பிறப்புக்கு, ஏழைப்பிராய
இளமை தந்த சொத்தது.
படிகளில் ஏறிவிட
வடிகால் அமைத்துத்தர
சேக்காளி குழு துருப்புச்சீட்டு
கோட்டைப் பொய் சேராமலே
எனக்கும் அடையாளமுண்டு
அது என் தனிக்கவிதை.
மரமல்லிகைகள்[2003]

0

கூர்வாளைப் படித்தபோது கருத்தில் ஒத்துப்போன இன்னொரு கவிதை ஞாபகம் வந்தது.

என் பிசாசு

ரகசியமாய் ஒரு பிசாசு
சைகை செய்தும் கழுத்தை இறுக்கியும்
என்னை பயமுறுத்துகிறது.
எப்போதும் பிறர் மேல் பார்வை
அதற்கு. எவரும்
கூசிப்போகும்படி கெட்ட
நடவடிக்கை அதற்கு.
என்னை அதிர வைக்கிறது.
திருடத்தூண்டுகிறது.
யாரிடமும் சொல்லிவிட்டால்
அவ்வளவுதான்! என்று
அச்சுறுத்துகிறது.
இதனிடம் தப்பித்து
வெளிவரவே முடிவதில்லை.
பிசாசு இருப்பதை
வெளியே சொல்லிக்கொள்வது
அவ்வளவு சுலபமில்லை.
பிசாசும் நானும் வேறு வேறு
என்பதை நிரூபித்தாக
வேண்டியிருக்கிறது சமயங்களில்.
பிசாசைப்போல சிலநேரம்
நானும் ஆகி வருவது
அந்தரங்க சந்தோஷமாகவும்
அதிர்ச்சிக்குரிய உண்மையாகவும்
ஆகிவிடுகிறது.
நான் தான் பிசாசு என்று
சிலர் குற்றம் சாட்டும்போது
கோபம் பொத்துக்கொண்டு
வருகிறது.
நானாகச் சொல்லிக்கொள்ளும்போது
பிசாசும் நானும் சேர்ந்து
இளித்துக்கொள்ளுகிறோம்.

14.4.2003 கவிதைக் கணத்தில் வாசிக்கப்பட்டது. மரமல்லிகைகள் தொகுப்பில் இருக்கிறது.

0

கருத்தளவில் ஒத்துப்போனது மேற்சொன்னது என்றால் சொல் அளவில் ஒத்ததாக இதைப் போடுகிறேன்.

வீம்பு

கத்தியைத் தூக்கிப்போட்டு
கவனமாய் நுழைந்தாய் நீ
என் ஊர்களில்

நான் காத்திருந்த விண்ணாகி
நிலவைப் பரிசளித்தேன்.
என்றும் குறையாத நிலவை.

இடைவெளியில்
என் பூவனங்கள் காயாமல்
நினைவுகளின் பாசனம்.
ஓரிருமுறை என்னை
மீட்டிச்சென்ற உன்
நினைவுகள்.

எல்லாம் இன்று சரியானது.
திருப்தி தான்
ஆனாலும் ஒரு கேள்வி.
இருபது வருடங்களுக்குக்
கத்தியை ஏன் சுமந்தாய்?

இந்தக் கவிதை குறித்து அவ்வை மண்ணில் பெண் எழுத்தாளர்கள் என்ற தொகுப்பில் க. மோகனரங்கன் சிலாகித்திருந்தார் அது மாலதிமைத்ரியால் எழுதப்பட்டது என்று நினைத்து. அது என்னுடைய தணல்கொடிப்பூக்கள் தொகுப்பில்[2001] உள்ளது.

0

நிஜமாகவே இது சானிட்டரி நாப்கின் கவிதை.

காதோடு வந்த ரகசியம்
கரும்பாலே ஒரு நியமனம்.
வலிமின்னல் வாட்டங்களில்
தான் பெரியவள் என்ற பலம்
தனக்குத்தானே
ஒரு ஹோலி
பிரத்யேகமாக ஒட்டும்
வண்ணப்பண்டிகை
கள்ளமில்லாமலே கறை
ஒளிக்கின்ற
பிள்ளைத்தனத்தில் துவளல்.
அவசிய அதிகப்படி
தற்காப்பில் கவன மழை.
இடைநாபி ஒசிந்து
உள்வாங்கும் மயில் நளினம்.
ஆசைப்பேரருவி கொட்டல்
நாடி நரம்பு தமனிகளில்
நசையேற்றித்
தாமிறங்கும்
சிவப்பு இரத்தப் பொட்டலங்கள்.
மேனியிலே வந்து
ஈஷிக்கொள்ளும் காமம்
சதிர் ஆட்டுவிக்கும்
மோகம் மயக்கம்
காதலனைப் பூசிக்கொள்ளப்
பேருவகை
அத்தனையும் அந்த நாளில்.
காட்டாற்று வெள்ளம் நின்று
மடு வெளிறி கூந்தலாற்றி
நிற்கிற
ஐந்தாவது நாள்
அழகு! ஐயோ!அற்புதம்
அசௌகரியம் அங்கு ஏது?

கவிஞர் சுகுமாரன் ஷவர சுகம் குறித்து எழுதிய inspiration இது. வரிக்குதிரை தொகுப்பில் உள்ளது. இன்னமும் கருத்திலேயே வில்லங்கம் வைத்த கவிதைகள் நிறைய எழுதியிருக்கிறேன். இப்போதைக்கு இது போதாது?

===========================================

எங்களுக்குள் மிகச் சில கடிதத் தொடர்புகளுக்குப் பிறகு தன் பெண்ணைப் பார்க்க US செல்வதாக ஒரு கடிதம் எழுதியதோடு எங்கள் தொடர்பு நின்றிருக்கிறது. 😦 மீண்டும் இன்று திருப்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

மாலதி கவிதைகள் குறித்த கட்டுரை திண்ணையில்.. 

திண்ணையில் மாலதி

  

babies.jpg

இந்த வாரம் கிட்டிய சுட்டிகள்…

மும்பையில் மாடுயுலர் கிச்சன் சம்பந்தப் பட்ட ஒரு கடைக்குப் போய் படம் எடுத்துப் போடவேண்டும் என்பது நீண்ட நாள் பெண்டிங் வேலை. ஒரு intro வாக இங்கே. ஹூம்ம்… நாங்களெல்லாம் இப்பொழுதைக்கு படம்தான் பார்க்க முடியும். வங்கியாகப் பார்த்து விதவிதமாய்.. வித்யாசமாய்.. அழுக்கழுக்காய்.. அபத்தமாய்… ‘எப்படிக் கொடுத்தாலும் செய்யத் தெரியும் என் வைஃப்க்கு’ மாதிரி சான்றிதழ்களோடு போய்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

எங்க வீட்டு oven’க்கு வாய் இருந்தா அழும்னு சொல்லுவேன்.  ஆனா இங்க ஒரு oven அழாம சமத்தா தான் பிறந்து வளர்ந்த கதையைச் சொல்ல ஆரம்பிச்சிருக்கு. சாக்லேட் எல்லாம் பிசிபிசுன்னு கைல ஒட்டி, படபடன்னு சோளமாப் பொரிஞ்சு.. முட்டை வெடிச்சு… அப்றம் ஜாலிதான்!
பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 |…. 

ஒரு நாளைக்கு ஒருத்தருக்கு 6 கிராம் தான் தேவையாம். அப்ப மூணு பேருக்கு ஒரு மாசத்துக்கு.. 3*6*30 = 540 கிராம். 😦 நாம் எவ்வளவு வாங்குகிறோம்? அதைத் தவிர வெளியில் எவ்வளவு உணவு வாங்கிச் சாப்பிடுகிறோம்? தலையைச் சுத்துது! (சுத்தாம என்ன செய்யும்?)

எது கூடாதுன்னு படிச்சு நொந்து போன கையோட, எதெது நல்லதுன்னு படிச்சுக்கலாம்…

வனப்பைக் கூட்டும் தேங்காய்

150 ரூ பீஸ் + 100ரூ மருந்தும் செலவழிப்பது ஏன்?

என்ன, எப்போது, எங்கே, எவ்வளவு உண்ண வேண்டும்.

naga-jolokiar.jpg

இந்த வாரம் கிட்டிய சுட்டிகள்…

# :))

# நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க. இதை எல்லாம் செய்ய எனக்கு ஒரு முழு மாசம் நெட் பிச்சுக்கணும். (சிஃபி அண்ணங்க காதுல விழுந்துடப் போகுது!  நல்ல நாள்லயே கேக்க வேணாம்; ஆஹான்னு கிளம்பிடுவாங்க!) ஆனா அதெல்லாம் நெட் கனெக்ஷன் போனா சரி; எங்களை மாதிரி நாளைக்கு 5 மணிநேரம் மின்சாரமே போனா?!?!?! — “நவி மும்பை”வாசி.

#
===
அந்நியன்: “சப்பாத்தி கேக்கறது ஒரு தப்பா?”

ஷங்கர்: “தப்பு ஒண்ணும் இல்லீங்க!”

அந்நியன்: “மும்பையை ஜாலியா சுத்திப் பாக்க வந்தவங்க கிட்ட சப்பாத்தி கேக்கறது தப்பா?”

ஷங்கர்: “தப்பு மாதிரி தாங்க தெரியுது!”

அந்நியன்: “ஒரு வேளைக்கே 3000 சப்பாத்தி கேக்கறது?”

ஷங்கர்: “பெரிய தப்பு தாங்க!”

அந்நியன்: “அப்றம் ஏன்டா…”

இல்லை“ங்கறாங்க ஜெயந்தி. Well done Jayanthi!!

===

# முயற்சி பண்ணிப் பாருங்களேன்.. 🙂
 

# போய் டீ குடிச்சிட்டு வாங்க… அதுக்கு முன்னாடி கடைசி பத்தியையும் தெளிவா படிச்சு உள்வாங்கிக்குங்க! :))

# இந்தக் குறிப்பு நம்ப ரெகுலர் வாசகி ஜெயஸ்ரீக்கு.. 🙂 என்னை மாதிரியே சமையல் குறிப்பு தலைப்பை மட்டும் தெளிவா வெச்சுட்டு, உள்ள தேவையான பொருள்கள், செய்முறை எல்லாம் சரியா சொல்லாம விட்டுட்டாரே, நீங்க அங்கெல்லாம் போய் கேக்கமாட்டீங்களா ஜெயஸ்ரீ? :அப்பாவி:

# ம்ம்ம்…”this posting is just fun posting” ன்னு சொல்லிட்டாரு கடைசில. ஆனாலும் கட்டாயம் படிக்கணும்.

# “ராஜ மிளகாய்“னு பேரைக் கேட்டதும் ஏதோ வைரமுத்து கள்ளிக்காட்டுல போட்ட செடியாக்கும்னு நினைச்சுட்டேன். பார்த்தா இந்த இனிப்பான செய்தி! 

# கடைசியா, ஆரம்பமே ஒரு இனிப்போடவாம்!… ஒரு கூட்டமாத்தேன் கிளம்பியிருக்காய்ங்க!

இப்பொழுது சப்பாத்தி, தோசை, இட்லி, டோக்ளா, கஞ்சிமாவு இவைகள் தயாரிக்கும்போது சோயா மாவையும் குறிப்பிட்ட அளவு(மட்டும்) உணவில் சேர்த்துக் கொள்ள மருத்துவர்கள் வற்புறுத்துகிறார்கள். காரணம் அதன் தன்மை.

ஏழரைச் சனி சும்மா போகாது என்பது போல ஒருவனுக்கு நீரழிவு வியாதி வந்தால், கூடவே இதய நோய் மற்றும் சிறுநீரக நோய்களையும் கூட்டி வந்து விடும். இதில் யாரும் விதி விலக்காக இருக்க முடியாது. நீரழிவு நோயாளிகளுக்கு சிறுநீரகங்கள் செயலிழந்து விடும் ஆபத்து எப்போதும் மிக அருகிலேயே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாள் ஆக ஆக பாதிப்புகள் கூடுமே தவிர நிச்சயம் குறையாது. 

இந்நிலையில் டைப்-2 வகை நீரழிவு நோயாளிகளுக்கு சோயா சிறப்பான அளவுக்கு கைகொடுக்கும் விஷயம் தெரிய வந்துள்ளது. இல்லீனாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நீரழிவு நோய் பாதித்த சிலருக்கு சோயா புரோட்டீன் சத்தும், மற்றவர்களுக்கு மிருக புரோட்டீன் சத்தும் தரப்பட்டன. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு இவர்களை சோதனை செய்து பார்த்தனர். அப்போது சோயா புரோட்டீன் சாப்பிட்ட நோயாளிகளுக்கு சிறுநீரில்ல் காணப்படும் புரோட்டீன் 10 சதவீதம் குறைந்து போய் இருந்தது. ஆனால் மிருக புரோட்டீன் சாப்பிட்ட நோயாளிகளுக்கு புரோட்டீன் அளவு உயர்ந்து கொண்டே போனது. இந்த இடத்தில் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அதாவது சோயாவானது, சிறுநீரில் உள்ள புரோட்டீன் அளவைக் குறைக்கும் வேலையைச் செய்யாமல் அதை நிலைநிறுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபடுகிறது.

சோயா மறைமுகமாக 2 வகைகளில் நன்மை செய்கிறது. அதாவது ஒன்று சிறுநீரகங்களின் செயல்பாட்டை ஊக்கப்படுத்தும் கொழுப்பான எச்டிஎல் கொழுப்பை 4 சதவீதம் கூடுதலாக உண்டாக்குகிறது. மற்றெhன்று நல்ல கொழுப்பான எச்டி.எல்; அளவு அதிகாpத்தால் இது இதயத்துக்கும் நல்லதுதான் என்பது அனைவரும் அறிந்ததே. இது விஷயத்தில் மேற்கொண்டு தொடர்ச்சியாக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. 

— நன்றி: தினகரன். 

இளமையை மீட்கும் அதிசய உணவாக சோயா உள்ளது. பெண்களுக்கு உண்டான ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டை நீக்க சோயா நல்ல உணவாகும்.

சோயா குறித்து பக்கம்1| பக்கம்2| இணையத் தளம்

சோயா வாங்கி வறுத்து அரைத்துக் கொள்ளலாம் அல்லது சோயா மாவு வாங்கிக் கலந்து கொள்ளலாம் அல்லது தரமான கம்பெனிகள் தயாரித்துத் தரும் வேறு கலவை மாவை வாங்கியும் உபயோகிக்கலாம்.

atta-mix.JPG

எனக்குத் தெரிந்து Saffola Atta Mix கடைகளில் கிடைக்கிறது. With the Goodness of Oats, Barley, Fiber and Soya Protein என்ற taglineல் வரும் இதில் ஒருவரது ஒரு நாளைய தேவை 2 டேபிள்ஸ்பூன் என்று சொல்கிறார்கள். சுவையில் பெரிய வித்தியாசம் தெரியவில்லை.

sim4.jpg

காதல் நெருப்பின் நடனம்..
உயிரை உருக்கி தொலையும் பயணம்

காதல் நீரின் சலனம்..
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

காதல் மாய உலகம்..
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்..
 

இந்தக் காதல் எனக்குப் புரிவதில்லை. 🙂 ஆனால் சமீபத்தியப் பாடல்களில் பாடல், இசை, படமாக்கம், புதிய குரல்கள், முக்கியமாக பாவனா என்று பலவிஷயங்களால் இந்தப் பாடல் கொஞ்சம் திரும்பிப் பார்க்கவும் திரும்பத் திரும்ப முணுமுணுக்கவும் வைப்பதும் உண்மை. இன்று ஏனோ ப்ரியாவைப் பற்றியும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

ப்ரியா– மரத்தடியின் உபதலைவி என்ற பதவி வகித்திருக்கிறார் என்றாலும் “காதல் பிசாசு” என்றே அறியப்படுபவர். அவர் கவிதை தட்டக் கணினியைத் தொடும்நொடியிலேயே, மரத்தடியில் கைத்தட்டவும் விசிலடிக்கவும் ஆரம்பித்திருக்கிறது ஒரு கூட்டம். 🙂

உபதலைவி பிரியா உம் பாட்டு – இந்த
உலகமெல்லாம் மகிழுதம்மா கேட்டு
மரத்தடில ஒந்தெறமக் காட்டு
தங்காச்சி பாட்டு – பசங்க
பிகிலு வுட்டாப் போட்டுடுவேன் பூட்டு
நண்டுப்புடி போட்டு!

என்று இவருக்காக கானா எடுத்துவிட்டு தைரியம் கொடுத்திருக்கிறார் ஆசாத் அண்ணன்.

ப்ரியாவின் உற்சாக பதில் கானாதான் முதன்முதலில் நான் படித்த இவரது முதல் கடிதம்.

மரத்தடில கூடுது பார் கூட்டம் – இங்க
மணிக்கணக்கா தமிழுக்காவ நாட்டம்
மனசுக்குள்ள போட்டு வச்சோம் தோட்டம்
நண்பர் மலர்த் தோட்டம்
நம்ம எழுத்துக்கில்ல என்னக்குமே வாட்டம்
இனிமே வாட்டம்!

சரி, கானா எல்லாம் எழுதுபவர் போலிருக்கிறது என்றுதான் முதலில் நினைத்தேன். சந்தம், மெட்டு, தத்தகாரம்- எப்படியும் அழையுங்கள்- இவைகளுக்குக் கட்டுப்பட்டு எழுதுவதெல்லாம் இவருக்கு தண்ணி பட்ட பாடு என்று பிறகுதான் தெரிந்தது. வார்த்தைகள் உணர்வுகளுக்காகவோ, உணர்வுகள் வார்த்தைகளுக்காகவோ சமரசம் செய்து கொண்டதே இல்லை. அப்படியே அடித்துச் செதுக்கியது போல் கவிதைகள் வரும்.

இவரது கவிதைகள் இன்று பேசப்படுகிற பெண்ணியம் என்கிற கட்டுப்பாடுகளுக்குள் எல்லாம் அடங்காத, ஈகோவை எல்லாம் துடைத்துப் போட்ட முழுச் சரணாகதிதான்.

sim2.jpg

ஒரு காதலர் தினத்திற்காக எழுதிய வெண்பாக்கள்… 

புல்லின் பனித்துளியாய்ப் படரும் நுதற்றுளிகள்
நில்லா துருளுமடா நின்றன் நெடுமார்பில்
வெல்லத் திறமுமற்றேன் வெட்கச் சமரிதிலே
மெல்லத் திரும்பியெனை மெல்.

கவிஞர் தாமரைக்கெல்லாம் கொஞ்சமும் குறைவில்லாத அல்லது என்னைப் பொருத்த வரை, வாய்ப்புக் கிடைத்தால் அவரைவிடவே சிறக்கக் கூடிய கவிதாயினி என்பது என் எண்ணம். எதுவுமே எழுதாமல் சும்மா நாளைக் கடத்தியவரை சாட்’டில் கடிந்துகொண்ட ஹரியண்ணா (ஹரிகிருஷ்ணன்), ‘சோம்பேறிப் பெண்ணே சொடுக்கு!’ என்ற ஈற்றடிக்கு வெண்பா எழுதிவரச் சொன்னார். என்னிடம், ‘”சோம்பேறி’க்குச் சரியான எதுகை கிடைப்பது கடினம், பாவம் ப்ரியா, பார்க்கலாம் என்ன செய்றான்னு” என்றும் சொல்லிவைத்திருந்தார். எனக்கு நம்பிக்கை இருந்தது. 🙂

sim141.jpg

நேற்றும் நினைத்திருந்தேன் நாளை முடித்திடுவேன்
ஆற்றாக் கருமங்கள் என்பவளே – காற்றிலையேல்
காம்பேறிப் பூத்துவிடக் கண்சுணங்கு மோமலர்கள்
சோம்பேறிப் பெண்ணே சொடுக்கு.

முற்றெதுகை.:) அதுதான் ப்ரியா.

[இதற்கு சற்றும் சளைக்காத எதுகையோடு ஆசாத் அண்ணனும் அப்போது எழுதியிருந்தார்.

அச்சுதன் தாள்போற்றி அஞ்சாமற் சொல்லெடுத்து
மெச்சும் கவிவீணை மீட்டிடுநீ – நச்சுமிழும்
பாம்பேறி நின்ற பரந்தாமன் பார்த்திருப்பான்;
சோம்பேறிப் பெண்ணே சொடுக்கு!
]

sim5.jpg

ஒரு சராசரிப் பெண் தாய்வீட்டில் வாழ்ந்த வாழ்க்கையை, அதன்மேல் வைக்கும் காதலை மெல்லிய நினைவுக்கூட்டலாய்ச் சொல்ல நினைத்து நம்மையும் நம் அப்பா அம்மாவின் மடி வரை அழைத்துப் போய்ச் சிணுங்குகிறார்.. 

பன்னிரண்டாம் வகுப்பினிலே தேறாமல் போயிருந்தால்
வடிப்பதற்குப் பதில் வாழ்ந்திருக்கலாம் கவிதையை!

சமையல் குறிப்பு வலைப்பதிவு என்பதால் அதற்குத் தகுந்த மாதிரி உவமை சொல்லலாம். நம்ப ‘ஆச்சி மசாலா’ சண்டே சமையல் மாதிரி, ஃபைவ் ஸ்டார் சமையல், கிராமத்துச் சமையல், ஆரோக்யச் சமையல், மைக்ரோவேவ் சமையல் வரை, எல்லா விதக் காதல் கவிதைகளும் இவரே அநாயாசமாக எழுதியிருக்கிறார் என்றால் நம்புவீர்களா? அதனால் கீழே..

 #
சென்மத்துக்கும் ஆசயய்யா…

sim3.jpg

சல்பேட்டா காச்சகொள்ளோ சலசலன்னு சிலுக்குதுய்யா
கல்கோனா முட்டாயாட்டம் கண்ணு ரெண்டும் மினுக்குதுய்யா
என்னாத்துக்கோ ஏம் மன்ஸு எனங்கெட்டு எளகுதுய்யா
சொன்னா கூடோ பிரியாத சொகம்மா வலிக்குதுய்யா!

பேட்டக்கெல்லா பேதி தர்ர பேமானியா இர்ந்த என்ன
சேட்டயெல்லா காட்டாமேயே சொக்க வச்சிப் பாக்குறய்யா
நெத நெதமும் நெகுந்து போயி நெஞ்சுக்குள்ள குளுந்து போயி
கத கதயா கனவுக்குள்ள கலரு படம் காட்டுறய்யா!

வெத வெதமா சீல கட்டி வெக்கம் மட்டும் ஓரங்கட்டி
கதவடச்சிக் கதபேச கெனாக்காண வக்கிறய்யா!
“கய்தே ஏங்கண்ணம்மா காப்பித் தண்ணி கொண்டாம்மே!”
காதுக்குள்ளோ கேக்க ஒரு தேதி பாத்து சொல்லுய்யா!
மெய்யாலும் சொல்லிப்போட்டேன் மாமா நீ கேட்டுப்புடு
பொய்யி இல்ல பொட்டப்புள்ள லவ்வு மட்டும் பாத்துக்கிடு!

ஒனக்காவ ஒல கொதிக்க ஒம்புள்ள மடியிருக்க
மாமா ஒம் மன்ஸுக்குள்ளோ மணக்க வச்ச மீன்கொயம்பா
சோக்கா நா குடியிருக்க சென்மத்துக்கும் ஆசயய்யா!!
 

#
அன்பான, வெற்றிபெற்ற காதல் வாழ்க்கையைப் பதிவு செய்யும் ஆர்ப்பட்டமில்லாத அமைதியான நடையில் ஒரு முயற்சி..

sim6.jpg

தத்தளித்துப் போராடும் தாவிப் பறந்தோடும்
தத்தைமொழி தோற்றுவிடத் தீந்தமிழில் தேடியுனை
நத்தும் மனக்கதவம் தட்டித் திறவாயோ
தத்தம் உனக்கே உயிர்.

#
நகரத்து நடுத்தரவர்க்கப் பெண்ணின் சராசரி வாழ்க்கையில் காதலை உணரும் தருணத்தைக் கண்முன் கொண்டுவரும் முத்தக் கவிதை

sim7.jpg

ஒருநூறு தோழமை நம்
உடனிருந்து உரையாட
அவரெவரும் அறியாமல்
அணைகடக்கும் அனல் முத்தம்!

இடை குறுக்கிக் காலடக்கி
மணவறையில் அமர்கையிலே
செவிமடலில் நீ சுவைத்த
சின்னதொரு சுக முத்தம்!!

#
எப்போ வருவீக?
[சும்மா பறவை முனியம்மா ரேஞ்சுக்கு… :)]

sim13.jpg

மஞ்சக் குளிக்கையிலும் மாராப்பு இழுக்கையிலும்
மார் மேல வெரல் படவும் மருகுனேன் எதுக்காக
மாமா நீ தீண்டுமுன்ன மருதமல்லி தொட்டாலும்
மாஞ்சுருவேன் மனமொடஞ்சி தெரியாதோ மன்னவனே!

கம்மா வறண்டதுபோல் கண்ணும் வறண்டுருச்சி
சும்மா இருக்குறதும் சொணமுள்ளப் போலாச்சி
அம்மா பொலம்புறா “பாதகத்தி படுபாவி
எம்மா நாளுடி நீ ஏங்கி வளிபாப்ப?”

நாளா பொழுதா நா நஞ்சித்தா நூலானேன்
தாளாமத் தாந்தெனமும் தகவலுக்கு ஏங்கி நின்னேன்
பாளாப் போன இந்த நாயித்துக் கெளமையில
ஆலாப் பறந்து நின்னேன் அரச் சொல்லு கடுதாசிக்கி

செவ்வாக் கெளமையில சேதி சொல்ல வந்துருவிய
புதங் கெளமைக்கித்தான் புதுச் சேல தந்துருவிய
வியாளக் கெளமயில வெரசாக் கைபுடிச்சு
வெள்ளிக் கெளமைக்கு வெக்கத்தத் தொரத்துவிய

சத்தம் போடாம அத்தக்கித் தெரியாம
சனிக் கெளமைக்கு சந்தைக்குக் கூட்டிப்போயி
முத்து வளவியும் மூணு மொளம் முல்லப் பூவும்
மீசக்குள்ள சிரிச்சிக்கிட்டே முளுசாத் தருவீக

வாரம் முச்சூடும் வளிமறந்து தொலச்சிப் புட்டு
வேதனையில் வெளக்கேத்திப் பொழுத ஓட்டிப் புட்டேன்
வேதனயத் தெரியுமா வெட்டிப் பய வாரத்துக்கு
வந்துருச்சு மறுபடியும் நாயித்துக் கெளமை மட்டும்!

[மேற்படி ‘எப்போ வருவீக?!” கவிதைக்கு ‘வெரசா வந்துடுவேன்’ என்று எசப்பாட்டு படித்தவர் மரத்தடி ஓனர் குமரேசன்.

வளிபாக்கும் ராசாத்தி மனசொடிஞ்சி போகாத
ஆத்தா பொலம்புறா’ன்னு தெனந்தோறும் வேகாத
வெரசா நான் வந்துடுவேன், வேதனையத் தீர்த்துடுவேன்
உம்மடிமேல படுத்து மீசைக்குள்ள தான் சிரிப்பேன்..

மார்மேல படுத்ததை நெனச்சி ராவெல்லாம் போயாச்சி
மறுபடியும் எப்ப நடக்குமின்னு மனசெல்லாம் கனவாச்சி..
இந்த ஏக்கம் சீக்கிரமா தீர்ந்திடுமே-வெட்டி பய
வாரம் முழுசும் வெள்ளிக்கெழமையா ஆயிடுமே..

எல்லாக் கிழமைகளையும் கவிதாயினி குறிப்பிட்டாலும் கவிஞர் வசதியாக வெட்கம் தொலைத்த வெள்ளிக்கிழமையை மட்டுமே வாரம் முழுவதும் வேண்டுமென்கிற குசும்பை ரசிக்காமல் இருக்கமுடியவில்லை. அதுசரி! ஆனால் அன்னார் 29 ஜனவரி 2007 அன்று தான் திருமணம் செய்திருக்கிறார். [இவ்வளவு வெரசாவா?:)))] வாழ்த்துகள் கும்ஸ்!]

#
பற்றிக் கொள்ளவேணும்
 
புதுக்கவிதையில்

sim8.jpg

மிகநீண்ட பொருளற்ற ஊடல்களின் முத்தாய்ப்பாய்
கோபங்கூத்தாடக் குரல் கமறும் போதுகளிலும்
கருவங்குறையாமலே
காதலையமிழ்த்தித் தேய்ந்து மறையும்
நலவிசாரிப்புகள்

ப்ரியா மரத்தடி தாண்டி அறியப்படவில்லை அல்லது மரத்தடியிலேயே கூட புதிதாக வந்த பலர் அறியாதவராகவும், தொடர்ந்து எழுதாதவராகவும் இருப்பதில் எனக்கு அதிக வருத்தம்.

கடைசியாக, புதுக்கவிதையில் கழிவிரக்கமா இல்லையா என்று இனம்பிரிக்க முடியாத யதார்த்தக் கவிதையுடன், ஒரு பெருமூச்சையும் விட்டுவிட்டு வேறு வேலையைப் பார்க்கலாம்; அல்லது நாமும் இந்த  எழவெடுத்த சுழலில் சிக்கிக் கொள்ளலாம். 😦

#
சுழல்

sim92.jpg

கண்ணோரச் சாடைகளும்
இறுக்கிப் பிணைத்த விரல்களும்
தெரிவிக்க முயன்ற
அருகாமைக்கான விழைவுகளை
உணராமலே போன நாட்களில்
உயிர்விட்டது
நுண்ணிய வெளிப்பாடுகளுக்கான முனைப்பு

எதிர்பார்ப்பும் காதலும்
குழைத்துப் புனைந்த எனது சொற்கள்
கேளாது நிராகரித்த
உன் செவிச்சுவர் மோதித்
தெறித்த ஒவ்வொரு முறையும்
ஏமாற்றத்தின் நிறமாய்ச் சாம்பி
சுயவெறுப்பு பூசிக் கொண்டது என் நேசம்

எஞ்சியிருப்பது சக பயணியென்ற
தோழமை மட்டுமேயென
ஆசுவாசித்து விலகி நின்றிட

எங்கிருந்தோ வழிதவறிய மேகம்
பொழிந்த நிமிட மழையாய்
வெளிப்படும் உன் பிரியம்
அதற்கேயான கவர்ச்சிகளோடும் நிச்சயமின்மையோடும்
ஈர்க்கிறது எனை மீண்டும்
உயிர்வாதை நிரம்பிய நாட்களின் சுழலுக்குள்

காதலர்தின 🙂 வாழ்த்துகள் ப்ரியா!!!

அப்புறம் சொல்ல நினைப்பது… :))

sim10.jpgsim.jpg

இந்த வாரம் கிட்டிய சுட்டிகள்…  

# நமது வெளித் தோற்றத்துக்கு மட்டுமே கவனம் செலுத்திவிட்டு, ஒரு பிரச்சினை என்று வருகிறவரை உள்ளே என்னென்ன ரகளை நடக்கிறதென்றே தெரியாமல் இருந்து விடுகிறோம். உள் உறுப்புகள் வேலை செய்வதைப் பற்றி படிக்கும்போதெல்லாம், ‘அப்ப இதெல்லாம் நமக்குள்ளயும் சரியா நடக்குதா அன்றாடம்?!’ என்று [மூளையும் சேர்த்து தான் :)]மலைப்பாக இருக்கும். கூடவே கடவுளுக்கு நன்றி சொல்லவும் மறப்பதில்லை. சும்மா சமையல் குறிப்பாக எழுதித் தள்ளி, சமைத்து உள்ளே தள்ளினாலும், இந்த வயித்தெரிச்சலைப் பற்றி நினைத்தே பார்த்ததில்லை. பசங்க பரவாயில்லை, கலக்கறாங்க பதிவில். மொத்தமாகவே நல்ல வலைப்பதிவும் கூட.

#

All of those numbers are up 20-30% from last month, so we’re really excited about how things are going.

நான் வலைபதிய ஆரம்பிச்ச ஒரே காரணத்தால தான் இந்த மாசம் இப்படி ஆகிப்போச்சா? ரொம்பப் புகழாதீங்க Matt. எனக்கு ஜல்ப்பாயிடும்.

# நான் கூட ஏதோ நவீன கவிதையோ என்று நினைத்து தான் படிக்க ஆரம்பித்தேன். பார்த்தால் அதிகம் இல்லை ஜெண்டில்மேன், சின்ன விருந்துதான் என்று சொல்லி வியர்க்க வைக்கறார். படம் போட்டால்தான் ஒத்துக்கொள்வோம் என்று ஒரு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் போட்டால் என்ன?

# “முதுகுல மச்சம் இருக்கா, ரொம்ப அதிர்ஷ்டமா இருப்ப!”, “அவிட்ட நட்சத்திரம்; தவிட்டுப் பானை எல்லாம் தங்கம்!”, “அப்பா ஜாடையா இருந்தா அதிர்ஷ்டம்தான்!” இப்படி எல்லாம் சும்மா மற்றவர்கள் நம்மைத் தட்டிவிட்டால் அதைக் கேட்டு எப்படி நமக்கு நாமே புளகாங்கிதம்(?!) அடைய முடியுமோ- அடையத் தேவை இல்லையோ- அந்த மாதிரிதான் இதற்கும். நம் முதுகை நாமே அவ்வப்போது தட்டிக்கொள்ள வேண்டியதுதான். அதற்காக இப்படியா? ரொம்ப ஓவர்.

வீட்டு மூலிகை தோட்டக் கையேடு– பாரதம் ஆரோக்கியமான தேசமாக உருவாக இந்தக் கையேடு பயனளிக்கும் என நம்பலாம் என்று சொல்கிறார். நல்ல யோசனைதான். எங்கள் ஒன்றுவிட்ட பெரியம்மா ஒருவர் மாதுளை மரத்தை ஊன் இருக்க உயிரை எடுத்துவிடுவார். அத்தனையும் மருந்து என்று சொல்வார். உண்மைதான் போலிருக்கிறது. எத்தனை மரங்கள் நடுகிறோம் என்பதோடு என்னென்ன மரம், செடிகள் நடுகிறோம் என்பதற்கும் கூட ஒரு செக் வைத்துக் கொள்ளலாம்.

venkaayam.JPG

இந்த வாரம் கிட்டிய சுட்டிகள்… 

#  என்னை மாதிரி தொலைக்காட்சி சீரியல் பார்க்காம, ப்லாக் படிச்சுட்டு மட்டும் தூங்கப் போனா ஒன்னும் தப்பில்லையே? 🙂 சுருக்கமா சொல்லியிருந்தாலும் சரியாச் சொல்லியிருக்காரு.

# நிர்மலா, உஷாவின் கேள்விகளுக்கு இங்கே ஒருவேளை பதில் இருக்கலாம். எப்படி இருந்தாலும் இந்தப் பதிவும் கல்வெட்டின் பின்னூட்டமும் ஒருமுறை கவனிக்கப் பட வேண்டியவை. நன்றி இருவருக்கும். 

#  தேள் கொட்டினாலும் கவலையில்லை; தேனீ கொட்டினாலும் கவலையில்லை!  வெங்காயம்!!

# காலை எழுந்தவுடன்….

மினீம்ம்மா! அந்தப் பாத்திரம் தேய்க்கற ப்ரஷ்ஷை ஒருக்கா மைக்ரோவேவ் அவன்ல வெச்சு எடுத்துட்டு, தேய்ப்பியாம்!  🙂

# …… being real and considerate and reciprocal, by not leaving empty (fake) comments, or letting statistics be my goal, by not over-participating or spending TOO much time on my blog but taking good care of my family instead, by being honest and discreet, by not posting pointless posts but providing good information, I want to be a good witness to those who find me here….

Bloggingல 13 விஷயம் சொல்றேன், கேட்டுக்கோன்னு விட்டு சுழட்டியிருக்காங்களே…  இவ்ளோ யோசிக்க வேண்டியிருக்கா?  போன மாசம் இந்த நாளைக்கு சமத்தா ஃப்ரீயாத்தானே இருந்தேன், ஆழம் தெரியாம காலை விட்டுட்டனா? :(( போதும் இந்த வாரத்துக்கு; நிறுத்திக்கறேன்.!!

    sujathas.jpg

அது என்ன, சமையல் குறிப்புகள் பதிவில் சுஜாதா பற்றி என்று கேட்கலாம். இலக்கியம்(தான்) காலத்தின் கண்ணாடியாமே. சாப்பாடெல்லாம் இல்லையாமே! 🙂 அதனால் எந்தக் காலத்தில் இந்தக் குறிப்புகளை எல்லாம் எழுதினேன் என்று தெரிந்துகொள்வதற்காக அல்லது இதை எல்லாம் எழுதிய காலத்தில் என்னவெல்லாம் இலக்கிய உலகில் நடந்தது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக அவ்வப்போது இதுபோன்ற சுட்டிகள் தருவதாக எண்ணம். சொந்தமாக எதுவும் எழுதப்போவதில்லை என்பதால் இலக்கியவாதிகள் அஞ்சேல்!!

என்றாலும் இலக்கிய(த்தரமான) சுட்டிகளைக் கொண்டுள்ளதால் என் வலைப்பதிவும் ஒரு இலக்கியப் பதிவே என்ற அங்கீகாரத்தைத் தருமாறு இலக்கியவாதிகளை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். 🙂

சாதாத் தமிழன் குமுதத்தில் படித்துவிட்டு அப்படியே குடும்பக் கவலைகளில் மறந்துபோகப் போகிற ஒரு சாதாரண கதையை எப்படி வலைப்பதிவுத் தமிழர்கள் சுற்றிச் சுழற்றி அடிக்கிறார்கள் என்று என் வலைப்பதிவு சாராத(‘பால்மணம் மாறாத…’ என்று படித்தாலும் சரியே!) நண்பர்களுக்கு எடுத்துச் சொல்ல–

சொன்னாலும், ‘அப்படியா? amazing! unbelievable!! sounds absurd!! அது ஒரு சாதா கதையாச்சே, என்ன கதை, நானும்கூட படிச்சேன் மறந்திடுச்சு.. அவுட்லைன் சொல்லு.. உன் பொழுது இப்படித்தான் வெட்டியா போகுதா?” என்று நம்பாமல் ஆங்கில வார்த்தைகளை எடுத்துப் போட்டு, அதிகமாக அலட்டித் தோள்குலுக்கும் அரசியல் தெரியாத/ புரியாத அப்பாவிகளுக்கு–

“பொதுவா அங்க என்னதான் பேசுவீ(வா)ங்க, எனக்கும் aggregators link (திரட்டி, சுட்டின்னெல்லாம் அவங்க சொல்ல இன்னும் காலம் ஆகும்.) குடேன்!” என்று ஆர்வமுடன் கேட்பவர்களுக்கு/ இனியும் கேட்கப் போகிறவர்களுக்கு ஒரு curtain raiser ஆக–

இந்தப் பதிவு சமர்ப்பணம். _/\_

இனி சுட்டிகள் வேட்டை…

Original Sujatha story:
http://www.kumudam.com/magazine/Kumudam/2007-01-03/pg23.php
or
http://kuilbala.googlepages.com/sujatha

11/01/2007
http://balabharathi.blogspot.com/2007/01/blog-post_11.html
http://kuzhali.blogspot.com/2007/01/blog-post_116857732000747315.html

12/01/2007
http://adhvaithi.blogspot.com/2007/01/blog-post_12.html

13/01/2007
http://karaiyoram.blogspot.com/2007/01/blog-post.html

14/01/2007
http://potteakadai.blogspot.com/2007/01/blog-post_14.html

15/01/2007
http://snakebed.blogspot.com/2007/01/blog-post.html
http://govikannan.blogspot.com/2007/01/blog-post_16.html
http://sivacalgary.blogspot.com/2007/01/blog-post_14.html
http://sivacalgary.blogspot.com/2007/01/blog-post_15.html
http://saathveegan.blogspot.com/2007/01/3007.html
http://mugamoodi.blogspot.com/2007/01/blog-post.html

16/01/2007
http://madippakkam.blogspot.com/2007/01/blog-post_16.html
http://poar-parai.blogspot.com/2007/01/blog-post_16.html
http://penathal.blogspot.com/2007/01/blog-post.html
http://chinnavan.blogspot.com/2007/01/blog-post.html

17/01/2007
http://valai.blogspirit.com/archive/2007/01/17/sujatha.html
http://nunippul.blogspot.com/2007/01/blog-post_16.html
http://tvpravi.blogspot.com/2007/01/blog-post_17.html
http://vinmathi.blogspot.com/2007/01/blog-post_17.html
http://ullal.blogspot.com/2007/01/blog-post_17.html

18/01/2007
http://naagariika-naadoodi.blogspot.com/2007/01/blog-post_18.html

 22/01/2007
http://theyn.blogspot.com/2007/01/blog-post_22.html
https://mykitchenpitch.wordpress.com/2007/01/22/sujatha-vaaththiyaar/  🙂

16/02/2007
http://saral.wordpress.com/2007/02/16/சுஜாதாவின்-சுயசாதிப்-பற்/

சு.ரா வின் கதைக்கு வந்த எதிர்வினைகளை எல்லாம் ஒரு புத்தகமாக்கி இருக்கிறார்களாமே, அந்த வகையில் சுஜாதாவின் கதைக்கு வந்த எதிர்வினைகளின் தொகுப்பு என்பதால் இந்தப் பதிவு ஒரு மின்னூல். 🙂

எல்லோரும் வாத்தியார் வாத்தியார் என்று சொல்லிக் கொண்டிருந்த போதெல்லாம், ‘யார் வாத்தியா? யாருக்கு வாத்தியார்? அவரால முடிஞ்சா என்னை ஒரு கதை எழுதவைக்க முடியுதான்னு பாக்கட்டுமே!” என்று சவடால் பேசியிருக்கிறேன். ஆனாலும் என்னுடைய சமையல் குறிப்புப் பதிவுக்கு இலக்கிய அந்தஸ்து தந்தவரே… ஒரு சாதாக் கதையை அதுவும் குமுதத்துக்கு எழுதி, இத்தனை பேரை எசக்கதை எழுத வைத்த சுஜாதா சாரே! நான் ஒத்துக் கொள்கிறேன்… நீரே வாத்தியார்!!!

இந்த வாரம் கிட்டிய சுட்டிகள்… 

# அப்படியே ரா’வா அடிக்கச் சொல்றாங்க! செஞ்சுட்டா போச்சு!!

# “Shame, Shame, Puppy Shame.. !!!” நான் சொல்லலை. மேனகா காந்தி சொல்றாங்கன்னு வாக்கீசர் சொல்றாரு. :((

# அதுசரிங்ணா, மேல இருக்கற க்ரீமை எடுத்துட்டா, கீழ இருக்கற தேங்காத் தண்ணி எதுக்கு உபயோகம்? என்னவோ போங்க. போகட்டும், பீட்ரூட் சிவப்பும் தக்காளிச் சிவப்பும் ஒரே சிவப்பா? நீங்க stale bread உபயோகிக்க, சொல்லியிருக்கற வழிமுறைய செய்யறதுக்கு இந்தியாவுல ஆகுற கரண்ட் செலவுக்கு, அதைத் தூக்கியே போட்டுடலாம்.ரொம்பத்தான் படுத்தறீங்க சஞ்சூ!!

# வரவர என் நிலைமையும் மைக்கேல் மதன காம ராசன்ல வர காமேஸ்வரன் மீன் மேட்டர் மாதிரி ஆகிப் போச்சு! I mean, இதைப் பத்தி யாராவது பேசினாலே என்னைப் பத்தித்தான் பேசறாங்களோன்னு டென்ஷன் ஆயிடறேன். 😦

# ஹையா ஜாலி! அதெல்லாம் டீ குடிக்கறவங்களுக்குத் தான். என்னை மாதிரி காபில குளிக்கறவங்களுக்கு இல்லை. ஆனா இவங்க என்னவோ சொல்றாங்களேன்னு சொல்றீங்களா? அதுதான் எனக்குப் புரியலையே. அதுவும் ஜாலிதான்!!