பக்க உணவு


உடலில் இருக்கும் கொழுப்பு, ஊளைச் சதையைக் குறைக்க, மூட்டுவலி போன்ற பல பிரச்சினைகளுக்கு கொள்ளு மிகவும் நல்லது. அடிக்கடி உணவில் சேர்ப்பது, உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது. இந்தப் பொடியில் சாதம் கலந்து கேதுவுக்கு வேண்டுதல் செய்வார்கள். இதற்கு கானாப் பொடி என்றும் பெயர்.

தேவையான பொருள்கள்:

கொள்ளு – 1/2 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 3
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பூண்டு – 4 பல் (விரும்பினால்)
பெருங்காயம்
உப்பு

kollu podi (kaanaa podi)

செய்முறை:

  • துவரம் பருப்பு, கொள்ளு இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாத வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
  • காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், நசுக்கிய பூண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து, காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்துவைக்கவும்.

பெருங்காயம் கட்டிக் காயமாக இருந்தால் (மணம் நன்றாக இருக்கும்) முதலிலேயே சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.

பொடிகள் அளவு அவசரத்துக்கு ஆபத்பாந்தவன் யாருமில்லை. அதிகம் எண்ணெய், காரம், மசாலா இல்லாத எளிமையான உணவும். கூட. நமக்குத் தேவையான மருத்துவ குணங்களுடைய பொருள்களையும் மானாவாரியாக இணைத்துக் கொள்ளலாம் என்பது கூடுதல் நன்மை. இனி, அவ்வப்போது சில பொடிவகைகளும் செய்துபார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

துவரம் பருப்பு – 1 கப்
காய்ந்த மிளகாய் – 2
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 /2 டீஸ்பூன்
பெருங்காயம்
உப்பு

paruppu podi 1

செய்முறை:

  • துவரம் பருப்பை எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும். (பருப்பு எதுவும் கருகிவிடாமல் கைவிடாமல் வறுக்கவும்.)
  • காய்ந்த மிளகாய், மிளகு, சீரகத்தையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • ஆறியதும் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு, உப்பு, பெருங்காயம் சேர்த்து சற்றே கரகரப்பாக அரைத்து காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்துவைக்கவும்.

கூட்டு, கறி செய்யும்போது வேகவைத்த பருப்பு இல்லையென்றால் மாற்றாக ஒன்றிரண்டு டீஸ்பூன் இந்தப் பருப்புப் பொடி சேர்த்து உபயோகிக்கலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். கூட்டு, அப்பள, வடாம் வகைகள் சேரும்.

புளி சேர்க்காமல் தயாரிக்கும் ரசம். புளி ஆகாத ஏதாவது நாட்டு மருந்து சாப்பிடும் நாளில் அல்லது அதிகப் புளி சேர்த்து வேறு குழம்பு, கூட்டு வகைகள் செய்யும்போது ரசத்தை இந்த முறையில் தயாரித்துக் கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:

தக்காளி – 4
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை
பருப்புத் தண்ணீர் – 2 கப்

வறுத்து அரைக்க:

எண்ணெய் – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
மிளகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1/2 டீஸ்பூன் (விரும்பினால்)
தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்

தாளிக்க:  எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

poriththa rasam

செய்முறை:

  • எண்ணெயில் காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகை சிவக்க வறுத்து, தேங்காய்த் துருவல், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒன்றரை கப் தண்ணீரில் இரண்டு தக்காளிப் பழங்களை நன்கு மசித்துக் கொள்ளவும்.
  • மீதமிருக்கும் தக்காளிகளை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூளையும் தக்காளிக் கரைசலுடன் சேர்த்து அடுப்பில் வேகவைக்கவும்.
  • தக்காளி வெந்ததும், பருப்பு வேகவைத்த தண்ணீர், அரைத்த விழுது சேர்த்து பொங்கி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  • சிறிது எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.

விழுது சேர்த்ததும் ரசத்தை அதிகம் கொதிக்கவைக்கக் கூடாது. பொங்கிவந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும். இப்படிச் செய்தால் மண்டி தங்காமல் பரிமாறும்போது அடிவரை கலந்தே பரிமாறலாம். இதனால் அரைத்துவிட்ட பொருள் வீணாகாமல், சுவையும் குறையாமல் இருக்கும்.

மிஷினில் அரைக்கும் வசதி இல்லாதவர்களும் சுலபமாக இந்த முறையில் அரிசி வடாம் செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 4 கப்
ஜவ்வரிசி – 1 கப்
பச்சை மிளகாய் – 10
உப்பு
பெருங்காயம்
எலுமிச்சைச் சாறு

arisi vadaam 3

செய்முறை:

  • முதல்நாள் இரவே அரிசி, ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம், இரண்டு பங்கு தண்ணீரில் ஊறவைக்கவும்.
  • அத்துடன் மேலும் ஒரு பங்கு தண்ணீர், பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் மிக மிக நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் அடிக்கனமான பாத்திரத்தில் மேலும் 3 பங்கு தண்ணீர் வைத்து, சுட ஆரம்பித்ததும், அரைத்த அரிசிக் கலவையைக் கொட்டி, கைவிடாமல் கிளற ஆரம்பிக்கவும்.
  • கட்டிகளாகச் சேர்ந்து வரும். பயப்படத் தேவையில்லை. மேலும் கிளறிக்கொண்டே இருந்தால் நன்கு வெந்து நிறம் மாறி சேர்ந்தாற்போல் கெட்டியாக வந்தபின் மூடிவைத்து, அடுப்பை அணைக்கவும்.
  • மறுநாள் காலை எலுமிச்சைச் சாறு கலந்து, தண்ணீரில் மோர் கலந்து தொட்டுக்கொண்டு ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் தேவைப்படும் வடாம்களைப் பிழிந்துகொள்ளவும்.
  • நன்கு காயவைத்து எடுத்துவைத்து தேவைப்படும்போது பொரித்துக் கொள்ளவும்.

 * மிச்சமுள்ள நீர்மோரைக் கலந்தே கலவையை லேசாக மட்டும் நெகிழ்த்தி, ஒரு ஸ்பூனால் வில்லைகளாகவும் செய்துகொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 4 கப்
ஜவ்வரிசி – 1 கப்
பச்சை மிளகாய் – 4
உப்பு
பெருங்காயம்
எலுமிச்சைச் சாறு

செய்முறை:

  • பச்சரிசியைத் தண்ணீரில் களைந்து நிழலில் உலர்த்தி, முக்கால் பதம் காய்ந்ததும் (பிடித்தால் பிடிக்கவரும், உதிர்த்தால் உதிர்க்க வரும்) ஜவ்வரிசியைச் சேர்த்து மிஷினில் அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த மாவில் ஒரு கப் மாவிற்கு 6 கப் தண்ணீர் என்ற அளவில் அடிகனமான பாத்திரத்தில் போட்டு கட்டிகளில்லாமல் கலக்கிக் கொள்ளவும்.
  • அரைத்த விழுதையும் சேர்த்து அடுப்பில் வைத்து நிதானமான தீயில் நன்றாக மாவு வெந்து நிறம் மாறி, குழம்பாகச் சேர்ந்து வரும் வரை கிளறி இறக்கவும்.
  • விரும்பினால் எள் அல்லது சீரகம் சேர்த்துக் கொள்ளலாம்.
  • இறக்கியபின் எலுமிச்சைச் சாறு பிழிந்து கலக்கவும்.
  • பிளாஸ்டிக் பேப்பரில் ஒவ்வொரு கரண்டியாக மாவை வைத்து அப்பளம்போல் பெரிய வட்டங்களாக இழுத்துக் கொள்ளவும்.
  • வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துப் பொரிக்கவும்.
  • அரிசி அப்பளம் போல் இருக்கும்.

தேவையான பொருள்கள்:

ஜவ்வரிசி – 250 கிராம்
பச்சை மிளகாய் – 8
உப்பு
பெருங்காயம்
எலுமிச்சம் பழம் – 2

செய்முறை:

  • பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு அடிகனமான பாத்திரம் அல்லது குக்கரில் தண்ணீர் வைத்து, கொதித்ததும் ஜவ்வரிசியைச் சேர்த்து கட்டி தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
  • நிதானமான சூட்டில் அல்லது சிம்மிலேயே எரியவிட்டு, ஒரு கொதி வந்ததும் அரைத்த மிளகாய் விழுதைச் சேர்க்கவும்.
  • தண்ணீர் தேவையானால் சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • ஜவ்வரிசி பாதி வெந்ததும், மேல் பாகம் கண்ணாடிபோல் ஆகி, உள்ளே சிறிதுமட்டும் வெள்ளை தெரியும்போது மூடிவைத்து, அடுப்பை அணைத்துவிடவும்.
  • உள் சூட்டிலேயே இன்னும் சிறிது வெந்து கலவை ஆறியதும், எலுமிச்சைச் சாறு சேர்த்து சுவைத்துப் பார்த்து திருத்தலாம்.
  • கெட்டியான விழுதாக இருக்கும் இந்தக் கலவையை சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி, பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து, தண்ணீரைத் தொட்டுத் தொட்டு, கையால் பெரிதாக அப்பளமாகத் தட்டவும்.
  • இரண்டு பக்கமும் வெயிலில் காய்ந்ததும் எடுத்துவைத்து விரும்பும்போது எண்ணெயில் பொரிக்கலாம்.

* இந்த வகை அப்பளத்திற்கு ஜவ்வரிசிக்கு மொத்தமாக நீர்விட்டு கொதிக்கவிடக் கூடாது. சிறிது சிறிதாக குளிர்ந்த நீர் விட்டு கொதிக்கவிட்டால்தான் ஜவ்வரிசி ஒட்டாமல் வெந்து, கரையாமல் முத்து முத்தாக இருக்கும்.

தக்காளி ஜவ்வரிசி அப்பளம்:

கால்கிலோ ஜவ்வரிசிக்கு கால் கிலோ தக்காளி சேர்த்துக் கொள்ளவேண்டும். தக்காளியை லேசாக வெந்நீரில் கொதிக்கவிட்டு தோலை நீக்கி, மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொண்டு, மேலே சொன்னபடி தயாரிக்கலாம். கொதிக்கும் ஜவ்வரிசிக் கலவையில் பச்சைமிளகாய் விழுதைச் சேர்க்கும்போது தக்காளி விழுதையும் சேர்க்கவேண்டும். எலுமிச்சைச் சாறு இதற்குத் தேவை இல்லை.

தேவையான பொருள்கள்: 

ஜவ்வரிசி – 250 கிராம்
பச்சை மிளகாய் – 4
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சம் பழம் – 1
உப்பு
பெருங்காயம்

javvarisi appalam 1
 

செய்முறை:

  • ஜவ்வரிசியை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
  • குக்கரில் மேலும் ஒரு பங்கு தண்ணீர் வைத்து குழைய வேகவிடவும்.
  • மறுநாள் காலை வெந்த ஜவ்வரிசியுடன் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • எலுமிச்சைச் சாறு, சீரகம் சேர்த்து சுவையை சரிபார்த்துக் கொள்ளவும்.
  • பிளாஸ்டிக் பேப்பரில் ஒரு பெரிய கரண்டி மாவை விட்டு வட்டமாக அப்பள வடிவில் இழுக்கவும்.
  • மறுநாள் அடுத்தப் பக்கமும் திருப்பிப் போட்டு, இருபுறமும் காய்ந்ததும் எடுத்து வைத்து தேவைப்படும்போது பொரிக்கலாம்.

javvarisi appalam  1(fried)

* இது எக்ஸிபிஷன் அப்பளம் போன்ற சுவையுடன் இருக்கும். நமக்கு விருப்பப்பட்ட அளவில் செய்துகொள்ளலாம்.

* வடாம்களுக்குச் சேர்ப்பது போல் அப்பள வகைகளுக்கு புளிப்பு காரம் அதிகம் சேர்க்கத் தேவை இல்லை.

* பொதுவாக வடாம் அப்பளம் வகைகளுக்கு நைலான் ஜவ்வரிசியாக இல்லாமல் மாவு ஜவ்வரிசியாக இருந்தால் நல்லது.

* பொதுவாக ஜவ்வரிசி வடாம் அப்பளம் வகைகளில் அதிகமாக நீர் விட்டால் லேசாக இருக்கும். பொரித்தால் சிவந்து போவதுடன் பல்லிலும் ஒட்டிக்கொள்ளும். அதனால் நன்கு வேகவைத்து கனமாக இழுப்பதே சரியான முறை.

-0-

மைதா ஜவ்வரிசி அப்பளம்:

முதல்நாள் இரவே ஜவ்வரிசியை ஊறவைத்து வேகவைத்து, ஐந்து கப்புக்கு ஒரு கப் அளவு மைதாவை நீரில் கரைத்துச் சேர்த்துக்கிளறி மூடிவைத்துவிட வேண்டும். மறுநாள் காலை மேற்சொன்ன முறையில் பச்சை மிளகாய், உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து தயாரிக்கலாம்.

 

ஓமம் ஜவ்வரிசி அப்பளம் (குட்டீஸ் ஸ்பெஷல்):

பச்சை மிளகாயே சேர்க்காமல், சிறிது தயிர், உப்பு, ஓமம், சிலதுளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

ஜவ்வரிசி – 1கப்
தண்ணீர் – 3 கப்
பச்சை மிளகாய் – 6
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 2 சிட்டிகை
கசகசா – 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சம் பழம் – 1

javvarisi vadaam 1

செய்முறை:

  • இரவில் ஒரு கப் ஜவ்வரிசிக்கு இரண்டு கப் தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.
  • பச்சைமிளகாய், பெருங்காயம், உப்பு மூன்றையும் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • குக்கரில் உள்பாத்திரத்தில் மேலும் ஒரு பங்கு தண்ணீர் வைத்து அரைத்த விழுதைச் சேர்த்து சூடாக்கவும்.
  • தண்ணீர் காய்ந்ததும் ஊறவைத்த ஜவ்வரிசியை(அதன் தண்ணீருடன்) சேர்த்துக் கலந்து, குக்கரை மூடி, வெயிட் போட்டு மிதமான சூட்டில் மேலும் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்களுக்கு வைத்திருந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • மறுநாள் காலையில் கசகசாவை வெறும் வாணலியில் லேசாக வறுத்துச் சேர்க்கவும்.
  • எலுமிச்சைச் சாறு கலந்து சுவையைச் சரிபார்க்கவும். இந்தப் பக்குவத்தில் சிறிது மாவை சாப்பிட்டுப் பார்த்து, தேவையான திருத்தங்களைச் செய்துகொள்ளலாம்.
  • பிளாஸ்டிக் பேப்பரில் ஒரு சிறிய ஸ்பூனால் எடுத்து வரிசையாக விடவும். (வட்டமாக இருக்கத் தேவையில்லை. குழந்தைகள்கூட செய்யலாம்.)
  • வெயிலில் நன்கு காயவைத்து, தேவைப்படும்போது எண்ணெயில் பொரிக்கலாம்.
  • சாதாரண ஜவ்வரிசி வடாத்திற்கு சிறிது தயிர் சேர்த்துச் செய்தால் வெள்ளை வெளேரென்று இருக்கும்.

-0-

இந்த ஜவ்வரிசி வடாத்தை பலவிதமான உபரிமசாலாக்களுடன் செய்யலாம் என்றாலும் முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கே சொல்லியிருக்கிறேன்.

வெங்காய ஜவ்வரிசி வடாம்:

மேற்சொன்ன முறையிலேயே பச்சை மிளகாய் அரைக்கும்போது ஒரு பெரிய வெங்காயத்தையும், அதற்கு ஈடாக அதிகம் ஒரு பச்சை மிளகாயும் அரைத்துச் சேர்க்கவேண்டும்.

தக்காளி ஜவ்வரிசி வடாம்:

ஒரு கப்புக்கு இரண்டு பெரிய தக்காளி என்ற விகிதத்தில் பச்சை மிளகாயுடன் அரைத்துக் கலக்கலாம். அல்லது தக்காளியை தனியாக அரைத்து சாறை வடிகட்டி சேர்த்துக் கொள்ளலாம். சாறு சேர்ப்பதால் தண்ணீரைக் குறைத்து உபயோகிக்கவும். இந்த வகைக்கு, எலுமிச்சை சில துளிகள் சேர்த்தால் போதும்.

பூண்டு ஜவ்வரிசி வடாம்:

10 லிருந்து 15 பூண்டுப் பற்களை பச்சைமிளகாயுடன் சேர்த்து அரைக்கவேண்டும்.

பிரண்டை ஜவ்வரிசி வடாம்:

பிஞ்சு பிரண்டையாக எடுத்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி பச்சைமிளகாயுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

வேப்பம்பூ ஜவ்வரிசி வடாம்:

வேப்பம் பூக்களை மரத்திலிருந்து நேரடியாகப் பறித்து அரைக்காமல் அப்படியே கூழோடு கலந்துகொள்ளலாம்.

புதினா கொத்தமல்லி ஜவ்வரிசி வடாம்:

கொத்தமல்லி முக்கால் பங்கும் புதினா கால் பங்கும் இருக்குமாறு கால் கப் எடுத்து பச்சை மிளகாயோடு அரைத்துச் சேர்க்க வேண்டும்.

  •  மிக்ஸியில் இவைகளை விழுதாக அரைக்கமுடியவில்லை என்றால், அவற்றோடு 2 டீஸ்பூன் கூழையே சேர்த்து ஒரு ஓட்டு ஓடவிட்டால் விழுது நைசாக அரைந்துவிடும்.

என் சின்ன வயதில் இந்த ஏப்ரல், மே மாதங்கள் வந்தாலே வீட்டுக்கென்று சில நடவடிக்கைகள், வாசனைகள், பிரச்சினைகள் என்று களைகட்டும். 

அன்றாடம் மாவடு, வேப்பம் பூ, கஸ்தூரி மஞ்சள், வற்றல் வடாம், வடகம், அப்பளம் இவற்றில் ஏதாவது ஒன்றாவது வீட்டில் பெரியவர்களுக்கு வேலை எடுக்கும். இதோடு வருஷசாமான் என்று அப்பொழுதெல்லாம்– புளி, துவரம் பருப்பு, கடுகு, மிளகு, சீரகம், மிளகாய் வற்றல் என்று மொத்தமாக ஒரு வருடத்திற்கான சாமான்களை வாங்கி, சுத்தம் செய்து வெயிலில் உலர்த்தி எடுத்துவைப்பார்கள். ஒரு துணியைக் கீழே விரித்து, பலகையை மடியில் சாய்த்துவைத்துக் கொண்டு கடுகை கொஞ்சம் கொஞ்சமாக சரியவிட்டு சுத்தம் செய்வதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். முழுஆண்டுத் தேர்வு, [இதைத்தான் பிரச்சினை என்று சொன்னேன். :)], மொட்டை மாடி அரசாட்சி, புளியங்கொட்டை கலக்ஷன், லீவுக்கு ஊருக்குப் போவது என்று ஒரே களேபரமான மாதங்கள் இவை இரண்டும்.

இப்பொழுதெல்லாம் வெளியே சாமான்களை காயவைக்கக் கூடிய அளவுக்கு சுற்றுப்புறம் தூய்மையாக இருக்கிறதா என்றே பயமாக இருக்கிறது. சாம்பார் பொடி, ரசப்பொடி சாமான்களைக் கூட நான் வெயிலில் வைப்பதில்லை. வாணலியில் லேசாக வறுத்து அரைத்துவிடுகிறேன்.

வடாத்திற்கு மாவு கிளறியதும் சுடச் சுட மாவை வாயில் போட்டால் லேசாக ஒட்டிக்கொண்டு விர்ரென்று காரம் காதில் ஏறும். மாவு ஆறினாலும் சுகம் தான். பிழிந்த பிறகு ஓஹோ. “வடாம் பிழிஞ்சதை சாப்பிடாத. மாவாவே எவ்வளவு வேணுமோ சாப்பிட்டுட்டு இடத்தைக் காலி பண்ணு; எங்களுக்குப் பிழியற வேலையாவது மிச்சமாகும்” என்று அம்மா திட்டி (பாட்டி அதெல்லாம் எதுவும் சொல்வதில்லை.) தட்டுநிறைய பச்சை மாவை நீட்டினாலும், அது ஓரளவுக்கு மேல இறங்குவதில்லை. பிழிந்தவடிவம் வேறு சுவை என்பதால் இதற்கெல்லாம் அடிபணிய அவசியமுமில்லை. எனக்கென்னவோ அதே மாவில் பிழிந்தாலும் ரிப்பனும், ஓமப்பொடியும், முள்ளு முறுக்கும் தனித்தனிச் சுவையாக இருப்பதாகத் தோன்றும்.

பெரியவர்கள் இரண்டுபேரும் பாலுக்கு பூனையை காவல் வைத்துவிட்டு காலி அண்டா குண்டா உழக்கு எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு கீழே போய்விடுவார்கள். அப்புறம்தான் நம் வேலையே(பரிட்சைக்குப் படிப்பதுதான்) ஆரம்பிக்கும். மலர்ந்தும் மலராத பாதி மலர்போல காய்ந்தும் காயாத கால் காய்ச்சல், அரைக் காய்ச்சல் வடாம், முக்கால் காய்ச்சல் வடாம்களை அந்த நாளில் இழந்துவிட்டால் இனி அடுத்த வருடம் உச்சிவெயிலில்தான் கிடைக்கும். சும்மா நச் நச் என்று லாகிரியாக இருக்கும். இதில் நம்வீட்டு வடாத்தைவிட அக்கம்பக்க மொட்டைமாடி வடாம்கள்தான் மேலும் சுவையாக இருப்பதோடு அந்த சீசன் முழுமைக்கும் குறையாமல் கிடைக்க அதுவே வழி. திருட்டு வடாம்தான் என்றாலும் அந்தந்த வீட்டு வாரிசோடு சேர்ந்து எடுக்கும்போது அதில் இருக்கும் திருட்டுக் கறை அழிந்து அது ஒரு உடன்படிக்கை என்ற அளவில் ஆகிவிடும். 🙂

இப்பொழுதெல்லாம் இந்த வடாம் மாவு, அப்பள மாவு, இலைவடாம் இவையெல்லாம் தயாரிக்க இல்லாவிட்டாலும் பச்சையாக சாப்பிடவாவது செய்தால் பரவாயில்லை என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை. காயவைக்கப் போவதில்லை என்றால் சீசனே தேவையில்லை. கொட்டும் மழையிலும் செய்துகொள்ளலாம்.

-0-

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கிலோ
ஜவ்வரிசி – 200 கிராம்
பச்சை மிளகாய் – 100 கிராம்
எலுமிச்சம் பழம் – 3 (பெரியது)
உப்பு – தேவையான அளவு (சுமார் ஒரு கைப்பிடி)
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்

 arisi vadaam 1
 

செய்முறை:

  • பச்சரிசி, ஜவ்வரிசி இரண்டையும் நன்கு சுத்தம் செய்து மிஷினில் நைசாக அரைத்து வாங்கவும்.
  • அடி கனமான குண்டான் அல்லது பிரஷர் குக்கரில் 12 கப் தண்ணீர்விட்டு கொதிக்கவிட வேண்டும்.
  • கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்த மாவை மொத்தமாகக் கொட்டி, கைவிடாமல் கிளறவேண்டும்.
  • சுமார் பத்து நிமிடங்களுக்குள் மாவு வெந்து நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து இறுக மூடிவைக்கவும்.
  • காம்பில்லாத பச்சை மிளகாயுடன் உப்பு சேர்த்து நைசாக அரைத்து, சிறிதளவு தண்ணீரில் கரைத்து பெரிய சக்கை இல்லாமல் வடிகட்டிக் கொள்ளவும்.
  • மிளகாய்க் கரைசல், எலுமிச்சைச் சாறு இரண்டையும் கிளறிய மாவில் கொட்டி நன்கு கலக்கவேண்டும். [இந்த நிலையில் சுவையை சோதித்து தேவைப்பட்டால் திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.]
  • சுத்தமான(?!) மொட்டைமாடித் தளத்தில் துணி அல்லது பிளாஸ்டிக் பேப்பரை விரித்து காற்றில் பறக்காமலிருக்க நான்கு பக்கமும் கற்களை வைக்கவும்.
  • கை ஒட்டாமலிருக்க, ஒரு பாத்திரத்தில் மோர்கலந்த தண்ணீரைத் தொட்டுக்கொண்டு உழக்கில் மாவை அடைத்து, ஓமப்பொடி, ரிப்பன், முள்ளுமுறுக்கு என்று விரும்பிய வடிவத்தில் வடகம் இடலாம்.
  • வெயிலில் 3, 4 நாள் காயவைத்து (ஒடித்தால் டக்கென்று ஒடியவேண்டும்.) காற்றுப் புகாத டப்பாவில் எடுத்துவைக்கவும்.
  • தேவைப்படும்போது எண்ணெயை நன்கு சுடவைத்து, மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
  • 2 டீஸ்பூன் கசகசாவையும் பொடித்துக் கலந்துகொண்டால் நல்ல மணமும் சுவையும் இருக்கும்.
  • எல்லா மாவையும் உப்பும் காரமும் கலந்து செய்யாமல் குழந்தைகளுக்காக கொஞ்சம் மாவில் சர்க்கரை, பழ எசன்ஸ், கலர் சேர்த்துச் செய்யலாம்.

* பொதுவாக மாவை முதல்நாள் இரவின் கடைசிவேலையாக கிளறிவைத்துவிட்டு, மறுநாள் அதிகாலையில், பச்சைமிளகாய்க் கரைசல், எலுமிச்சைச் சாறைக் கலந்து வெயில் ஏறுவதற்கு முன்பே பிழிந்துவிடுவது சரியானது. இந்த முறையில் வடாம் சீக்கிரம் காய்ந்து பிரிக்கவரும். காலையிலே எழுந்துதான் கிளறினால் வேலையும் அதிகம். சூட்டில் பிழிவதும் சிரமம்; பிளாஸ்டிக் பேப்பரில் சூடோடு பிழிவது நல்லதுமில்லை.

 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

கலவை சாதங்கள், சாம்பார்/குழம்பு சாதம், ரசம் சாதம், புலவு, பிரியாணி வகைகள்… இப்படி எல்லாம் அடுக்கத் தேவையில்லை. சும்மாவே சாப்பிடலாம். 🙂

தேவையான பொருள்கள்:

மாங்காய் – 1 (சிறியது)
வெல்லம் – 1 கப்
புளி – நெல்லிக்காய் அளவு
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துண்டுகள் – 2 டேபிள்ஸ்பூன்
ஏலப்பொடி – 1 சிட்டிகை
உப்பு – 1 சிட்டிகை
மிளகாய்த் தூள் – 1 சிட்டிகை
கார்ன் ஃப்ளோர் = 1/2 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்

தாளிக்க: நெய், கடுகு, வேப்பம்பூ.

maangaai pachchadi (veppam poo, ugadhi)

செய்முறை:

  • மாங்காய், தேங்காயை சிறிசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • புளியை நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு, கடலைப் பருப்பு, தேங்காய்த் துண்டுகளை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
  • கரைத்து வைத்துள்ள புளி, மாங்காய்த் துண்டுகளைச் சேர்த்து 5 நிமிடத்திற்கு கொதிக்கவிடவும்.
  • மாங்காய் வெந்ததும் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து நிதானமான தீயில் வெல்லத்தைக் கரையவிடவும்.
  • வெல்லம் கரைந்ததும் சிறிது நீரில் கார்ன் ஃப்ளோரைக் கலந்து சேர்க்கவும்.
  • சேர்ந்தாற்போல் வந்ததும் ஏலப்பொடி, உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
  • நெய்யில் கடுகு, வேப்பம்பூ தாளித்துச் சேர்க்கவும்.

[எனக்கு ஜனவரி மாசம் அவங்கள்லாம் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து சொல்லாட்டாலும்கூட [:)] அதையெல்லாம் மனசுல வெச்சுக்காம– நம்ப முதல்வர் மாதிரி பெருந்தன்மையாக்கும் நான்– ஆந்திர நண்பர்களுக்கு உகாதி வாழ்த்துச் சொன்னேன். பச்சடி என் ரெசிபியும் கேட்டதால் சொன்னேன். “Good. ஆனா வாழைப்பழம் போடமாட்டியா”ன்னு கேட்டாங்க. “செல்லாது செல்லாது” மாதிரி ஒரு லுக் வேற. ஐயய்யோ, வேலையிருக்குன்னு தலைதெறிக்க ஓடிவந்துட்டேன். ஏதோ ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கொண்டாடறாரேன்னு நாமளும் உகாதி கொண்டாடினா ரொம்ம்பப் படுத்தாறாய்ங்க…]

* விரும்புபவர்கள் வாழைப்பழம், பலாப்பழத் துண்டுகளும் சேர்த்து, அறுசுவையும் முக்கனியும் சேர்ந்த உணவு என்று அல்டாப்பு விட்டுக் கொள்ளலாம். [முடியலை..]

அனைவருக்கும் உகாதி, குடிபாட்வா (गुढीपाडवा) வாழ்த்துகள்.

தேவையான பொருள்கள்:

புளிக்காத தயிர் – 1 கப்
கடலை மாவு – 1/2 கப்
வெங்காயம் – 1
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க
கொத்தமல்லித் தழை

தாளிக்க: எண்ணெய், காய்ந்த மிளகாய், கடுகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை

onion pakodas (for kadi)
செய்முறை:

  • கடலை மாவில், தேவையான உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து தண்ணீர் கலந்து பஜ்ஜிமாவு பதத்திற்கு நன்கு கலந்துகொள்ளவும். விரல்களால் நன்கு குழைந்துபோகுமாறு கலக்கவேண்டும்.
  • வெங்காயத்தை சற்றே அகல நீளத்தில் நறுக்கிக் கொள்ளவும்.
  • தயிரை ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கடைந்து வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை கடலை மாவில் தோய்த்து எண்ணெயில் பஜ்ஜி மாதிரி பொரித்து எடுக்கவும்.
  • மிச்சமுள்ள கடலைமாவை(4 டீஸ்பூன் கரைத்த மாவு இருந்தால் போதுமானது.) தயிரில் சேர்க்கவும். கரைத்த மாவு தீர்ந்திருந்தால் தனியாக இரண்டு டீஸ்பூன் கடலை மாவை தயிரில்ல் சேர்த்து நன்கு கட்டிகளில்லாமல் கலந்துகொள்ளவும்.
  • தயிர்க் கலவையில் தேவையான உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து, நன்கு கலந்து அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்கவைக்கவும். மிகவும் இறுகிவிட்டால் இன்னும் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம்.
  • கடலைமாவு வெந்து குழம்பு சேர்ந்தாற்போல் வந்ததும் பொரித்து வைத்துள்ள பக்கோடாவைச் சேர்த்து சிம்மில் மேலும் இரண்டு நிமிடம் கொதிக்கவைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • சிறிது எண்ணெயில் கடுகு, சீரகம், 4, 5 காய்ந்த மிளகாய், உரித்த பூண்டு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.
  • நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.

kadi pakoda (punjab)

 

* மிக அதிக அளவில் ஆறியதும் இறுகும்; பகோடாவும் குழம்பின் நீரை இழுத்துக்கொள்ளும் என்பதால் தயாரிக்கும்போதே சிறிது நீர்க்க இருந்தால் நல்லது.

* வாணலியில் முதலில் தாளித்து, அதில் தயிர்கலவையைச் சேர்த்தும் குழம்பைக் கொதிக்கவைக்கலாம்.

* வெங்காயத்துடன் விரும்பினால் உருளை போன்ற காய்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

* மசாலா வாசனை விரும்பினால் கரம் மசாலாத் தூள் ஒரு டீஸ்பூன் பகோடா மாவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சாதம், புலவு, தேங்காய்ச் சாதம், இடியாப்பம், சப்பாத்தி, பூரி….

தேவையான பொருள்கள்:

வெந்தயக் கீரை – 2 கப்
வெங்காயம் – 1
பயத்தம் பருப்பு – 3/4 கப் *
தக்காளி – 2 (பெரியது)
பச்சை மிளகாய் – 3
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
உப்பு
மஞ்சள் தூள்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்

தாளிக்க: எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

Methi_daal Missi_roti_(punjab)2

செய்முறை:

  • வெந்தயக் கீரையை தனித் தனி இலையாக உதிர்த்து, தண்ணீரில் அலசி, நீரை வடியவைத்துக் கொள்ளவும்.
  • பயத்தம் பருப்பை முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், இஞ்சியை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் தாளிக்கவும்.
  • அலசிய கீரையைச் சேர்த்து வதக்கினால் ஒரே நிமிடத்தில் சுண்டிவிடும்.
  • நறுக்கிய தக்காளி, அரைத்த விழுது சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.
  • உப்பு, மஞ்சள்தூள், அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி, நிதானமான தீயில் வேக வைக்கவும்.
  • தக்காளி வெந்ததும், வேக வைத்த பயத்தம் பருப்பு, கரம் மசாலா, அரை கப் தண்ணீர் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு, சேர்ந்தாற்போல் வந்ததும் இறக்கவும்.
  • சில துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து சூடாகப் பரிமாறலாம்.

* பயத்தம் பருப்பு அல்லது துவரம் பருப்பு அல்லது இரண்டும் சம அளவில் கலந்தும் உபயோகிக்கலாம்.

* எலுமிச்சைச் சாறுக்குப் பதில் வதக்கியதும் சிறிது புளித்தண்ணீர் சேர்த்தும் கொதிக்கவிடலாம் அல்லது 2 டீஸ்பூன் மாங்காய்த் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சாதம், சப்பாத்தி வகைகள்..

மிகக் கொஞ்சமாய் காய், சுவை குறைந்த கடுமையான காய் அல்லது கீரை வகைகள், பருப்பு வேக வைக்க நேரமின்மை, தேங்காய் அதிகம் சேர்க்க விரும்பாமை இப்படி பல காரணங்களுக்காக, இந்தக் கூட்டில் சேர்த்திருக்கும் மசாலாவை உபயோகிப்பது நல்லது. எல்லாக் குறைகளையும் மறைத்து, அடர்த்தியான கிரேவியுடன் மிகுந்த மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

தேவையான பொருள்கள்:
குடமிளகாய் – 1/4 கிலோ
வெள்ளைக் கொத்துக்கடலை – 1/2 கப்
தக்காளி – 2, 3 (விரும்பினால்) **
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை

வறுத்து அரைக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3, 4
துவரம் பருப்பு – 1 1/2 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
மல்லி விதை – 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை.

kudamilagai koththukkadalai stew

செய்முறை:

  • வெள்ளைக் கொத்துக்கடலையை தண்ணீரில் குறைந்தது 10 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.
  • குடமிளகாயை, காம்பு, குடலை நீக்கி, துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • எண்ணெயில் காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மல்லி விதை என்ற வரிசையில் சேர்த்து, நன்கு சிவக்க வறுத்து, தேங்காயுடன் மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் தாளித்து, நறுக்கிய தக்காளி, குடமிளகாயைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  • வேகவைத்த கொத்துக் கடலை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மூடி, மிளகாயை முக்கால் பதம் வேகவைத்துக் கொள்ளவும். (சட்டென வெந்துவிடும். குடமிளகாய் அதிகம் வெந்தால் சுவையாக இருக்காது.)
  • அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து மேலும் ஒரு கப் அல்லது தேவைப்பட்டால் அதற்கும் மேல் தண்ணீர் சேர்க்கவும். இந்த விழுது, அதிகத் தண்ணீர் இழுக்கும்.
  • 3, 4 நிமிடங்கள் சிம்மில் வைத்து, கலவை கொதித்து கெட்டியாகி, அடர்த்தியான கிரேவியாக வந்ததும், இறக்கி, மல்லித் தழை கலந்து உபயோகிக்கலாம்.
  • * இந்தத் தயாரிப்பை குடமிளகாய் கொத்துக்கடலைக்கு மட்டும் இங்கே சொல்லியிருந்தாலும் பொதுவாக எந்த ஒரு தனி காயுடனும், விரும்பினால் அதனொத்த பயறுடனும் சேர்த்தோ சேர்க்கமலோ செய்யலாம். கீரை வகைகளுடனும்  மிகப் பொருந்தும்.

keerai stew

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இந்த முறையில் செய்யும் மற்ற காய்கறிகள், பொதுவான சாப்பாட்டுக்கு உபயோகிக்கலாம் என்றாலும் பிரத்யேகமாக இந்த குடமிளகாய், கொத்துக்கடலை ஸ்டூ, ஃப்ரைடு ரைஸ் போன்ற தக்காளி சாதம், புளியோதரை, எலுமிச்சை, தேங்காய் சாத வகைகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். அதே மாதிரி செய்யப்படும் அரிசி சேவை வகைகளுக்கும்.
 
** எலுமிச்சை, புளியோதரை போன்ற புளிப்பு சேர்ந்த சாத வகைக்களுக்குச் செய்யும்போது, இந்தக் கூட்டில் தக்காளி சேர்க்காமல் செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

கெட்டித் தயிர் – 2 கப் (லேசாகப் புளித்தது)
தேங்காய்த் துருவல் – 1 கப்
பச்சை மிளகாய் – 5, 6
துவரம் பருப்பு – 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
மல்லி விதை – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
பெருங்காயம்
மஞ்சள் தூள்
உப்பு
கொத்தமல்லித் தழை

காய்கறி: முருங்கை, பூசணி, வெண்டை, சேம்பு, கத்தரிக்காய், பரங்கிக்காய்…. இவற்றில் ஏதாவது ஒன்று.

தாளிக்க: தேங்காயெண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

mOr kuzhambu [3]

செய்முறை:

  • துவரம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
  • எடுத்துக் கொண்டிருக்கும் காயை முக்கால் பதம் வேகவைத்துக் கொள்ளவும்.
  • ஊறவைத்த பருப்புகள், தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம், மல்லி விதை, சீரகம் எல்லாவற்றையும் சிறிது நீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • தயிரை நன்கு கட்டியில்லாமல் கடைந்து, தேவையான உப்பு, மஞ்சள் தூள், அரைத்த விழுது, வேகவைத்த காய் சேர்த்து நிதானமான தீயில் அடுப்பில் சூடாக்கவும். ஒன்றிரண்டு முறை மட்டும் கிளறி விடவும்.
  • பொங்கி வரும்போது தாமதிக்காமல் அடுப்பிலிருந்து இறக்கி, மல்லித் தழை சேர்க்கவும்.
  • தேங்காயெண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய், பருப்பு சாதம், அரிசி சேவை…

தேவையான பொருள்கள்:

வாழைத் தண்டு – 3 கப் (நறுக்கியது)
தேங்காய் – 1 மூடி
பச்சை மிளகாய் – 5, 6
கெட்டியான மோர் – 1 கப் (புளிக்காதது)
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு
பெருங்காயம்

தாளிக்க: தேங்காயெண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

vaazhiththaNdu (cut)vaazhaiththaNdu mOr koottu

செய்முறை:

  • வாழைத் தண்டை பட்டை, நார் நீக்கி, (கருக்காமல் இருக்க)மோர் கலந்த நீரில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிப் போடவும்.
  • தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் மோர் நீரிலிருந்து பிழிந்த வாழைத்தண்டு, மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேகவைக்கவும். அடிக்கடி திறந்து கிளறிவிடவும்.
  • முக்கால் பதம் வெந்ததும் (சீக்கீரம் வெந்துவிடும்.) அரைத்த விழுதைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்களுக்கு நிதானமான தீயில் வேகவைக்கவும்.
  • இறுதியில் கடைந்த மோர் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
  • தேங்காயெண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, மல்லித் தழை சேர்த்து உபயோகிக்கலாம். (அல்லது சிறிது சாதா எண்ணெயில் தாளித்துவிட்டு, மேலாக பச்சைத் தேங்காயெண்ணெய் சேர்க்கலாம்.)

* இதே போல் சௌசௌ, பூசணி, கோஸ் போன்ற காய்களிலும் தனித் தனியாகச் செய்யலாம். ஆனால் வாழைத் தண்டில் செய்யக் கூடிய மிகக் குறைந்த வகை தயாரிப்புகளில் இது முக்கியமானது.
 
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய், பருப்பு சாதம், எள் சாதம்…

எள் சாதம் தனியாகச் செய்திருக்கிறேன். வாழைத் தண்டு மோர்க் கூட்டும் தனியாகச் செய்திருக்கிறேன். எள் சாதத்திற்கு வாழைத்தண்டு மோர்க் கூட்டு என்பது எனக்குச் செய்தி. இந்த மேட்ச் ஃபிக்சிங் kallyanakamala அவர்கள் சொன்னது. இன்று செய்துபார்த்தேன். நன்றாக இருந்தது.

அடுத்த பக்கம் »