கொழுக்கட்டை


தேவையான பொருள்கள்:

பச்சரிசி மாவு – 1 கப்
தண்ணீர் – 2 கப்
பச்சை மிளகாய் – 3
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு (சுமார் 1 டீஸ்பூன்)
தேங்காய்த் துருவல் – 1 டேபிள்டீஸ்பூன் (விரும்பினால்)
தேங்காயெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க: தேங்காயெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை.

ammani kozhukkattai
 

செய்முறை:

  • பச்சை மிளகாய், உப்பு பெருங்காயத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கப் பச்சரிசி மாவை இரண்டு கப் தண்ணீரில் கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
  • கரைசலுடன் 2 டேபிள்ஸ்பூன் தேங்காயெண்ணெய் விட்டு அடுப்பில் வாணலியில் அடிப்பிடிக்காமல் கைவிடாமல் கிளறவும். (நான்ஸ்டிக் வாணலியில் எளிதாகவும் விரைவாகவும் செய்யலாம்.)
  • மாவு இறுக ஆரம்பிக்கும்போது அரைத்த விழுதையும் சேர்த்துக் கிளறவும். சுமார் 10 நிமிடத்துக்குள் மாவு வெந்து இறுகி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
  • ஆறிய மாவை சுண்டைக்காய் அளவு சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • ஒரு குக்கர் பாத்திரம் அல்லது இட்லிதட்டில் எண்ணெய் தடவி, உருண்டைகளை வைத்து குக்கரில் இட்லிவேக வைப்பதுபோல் வெயிட் போடாமல் ஒரு ஐந்து நிமிடம் மட்டும் வேகவைத்து எடுக்கவும்.
  • அடுப்பை அணைத்த உடனே திறந்து மின்விசிறி அடியில் ஆறவிடவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் தாளித்து, மெதுவாக உருண்டைகளைச் சேர்த்து உடையாமல் நாசுக்காகக் கிளறிவிடவும்.
  • கொழுக்கட்டைகளைச் சேர்த்தபின் ஒரு நிமிடம் மட்டும் அடுப்பில் வைத்திருந்து கிளறி இறக்கிவிடவும்.

* சூடாகவோ ஆறியோ எப்படிச் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.

* கொழுக்கட்டை மாவு மிகுந்தாலும் இந்த மாதிரி செய்யலாம். தேவையான பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம் அரைத்த விழுதை மாவிலேயே நன்கு கலந்துப் பிசைந்து உருண்டைகள் பிடித்து குக்கரில் வேகவைத்து மேலே சொன்னபடி தாளித்துக் கிளறவும்.

தேவையான பொருள்கள்:

சொப்பு செய்ய:
பச்சரிசி – 1 கப்
தண்ணீர் – 2 1/2 கப்
உப்பு – 1 சிட்டிகை
நல்லெண்ணெய் (அல்லது தேங்காயெண்ணெய்)

பூரணம் செய்ய:
உளுத்தம் பருப்பு – 1 கப்
துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை (விரும்பினால்)
காய்ந்த மிளகாய் – 4
பச்சை மிளகாய் – 2
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி
கறிவேப்பிலை
பெருங்காயம்
உப்பு

செய்முறை:

சொப்பு:

  • முதலில் பச்சரிசியை நன்கு கழுவி, 2 1/2 கப் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • அதே தண்ணீரையே விட்டு அரிசியை நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். நனைத்து வைத்த தண்ணீர் மீதமிருந்தால் அதையும் மாவுக் கரைசலிலேயே நீர்க்கக் கலந்து கொள்ளவும். (சொல்ல வருவது, மொத்தம் 1 கப் அரிசிக்கு 2 1/2 கப் தண்ணீர் சேர்ந்திருக்கவேண்டும்.)
  • வாணலியில் மாவுக் கரைசலை விட்டு, இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய், சிட்டிகை உப்பு சேர்த்து நிதானமான தீயில் அடிப்பிடிக்காமல் கிளறவும்.
  • மாவு சேர்ந்து இறுகிவரும் வரை விடாமல் கிளறி (இப்போது பாதி வெந்து நிறம் மாறி இருக்கும்.) இறக்கி, ஒரு துணியில் சுற்றியோ அல்லது பாத்திரத்தில் மூடியோ ஆற வைக்கவும். மாவை திறந்துவைத்து, காயவிடக் கூடாது.

பூரணம்:

uppu kozhukkattai_1 (vinaayagar chathurthi)

  • உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு இவற்றைக் கழுவி, தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.
  • காய்ந்தமிளகாய், இஞ்சி, காயம், உப்பு சேர்த்து அதிகம் நீர் விடாமல் கெட்டியாக, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த விழுதை எண்ணெய் தடவிய இட்லித் தட்டுகளில் வைத்து வெயிட் போடாமல் இட்லிகளாக (பருப்பு உசிலிக்குச் செய்வதுபோல்) 12லிருந்து 15 நிமிடங்களுக்கு குக்கரில் வேகவைத்து இறக்கவும்.
  • வெளியே எடுத்து, இட்லிகள் ஆறியதும் லேசாக உதிர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி, பொடித்துக் கொள்ளவும். (மிக்ஸியில் சுற்றுவதற்கு முன் நன்றாக ஆறியிருக்க வேண்டும் என்பது முக்கியம்.)
  • அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து சிறிது வதக்கி உதிர்த்த பூரணத்தில் சேர்க்கவும். (பச்சை மிளகாய் வாயில் அகப்படக் கூடாதென நினைப்பவர்கள் ஒரு பச்சை மிளகாயை, மாவு அரைக்கும்போதே சேர்த்து அரைத்துச் கொள்ளலாம். ஆனால் அகப்பட்டால் சுவையாக இருக்கும்.)

கொழுக்கட்டை:

uppu kozhukkattai_2 (vinaayagar chathurthi)

  • ஆறிய அரிசி மாவை நன்றாகப் பிசைந்து, பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • சிறிது நல்லெண்ணெய் தொட்டுக் கொண்டு, பலகையில் கையால் உள்ளங்கை அளவு வட்டங்களாகச் செய்யவும்.
  • 2 டீஸ்பூன் பூரணத்தை உள்ளே வைத்து அரை வட்டமாக மூடி, ஓரங்களைக் கையால் அழுத்தி ஒட்டவும். இனிப்புக் கொழுக்கட்டையில் பிளந்தால், பாகு உருகி வெளியே வந்துவிடுவது போல் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை என்பதால் இதில் அதிகம் மெனக்கெடத் தேவை இல்லை.
  • செய்துவைத்த கொழுக்கட்டைகளை எண்ணெய் தடவிய இட்லித் தட்டில் வைத்து, குக்கரில் (இட்லி மாதிரி வெயிட் போடாமல்) பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும்.

பந்து மாதிரி வந்துவிடும். இந்த முறையில் மாவுக்கு கொஞ்சம் இழுவைத் தன்மையும் வந்துவிடும். அதனால் கொழுக்கட்டை செய்யும் போது அதிகம் பிளக்காது. பிளந்தாலும் அந்த இடத்தில் இன்னும் சிறிது மாவு வைத்தாலும் சுலபமாகச் சேர்ந்து கொள்ளும்.

uppu kozhukkattai_3 (vinaayagar chathurthi)

* அரிசிமாவை நான்ஸ்டிக்கில் வைத்துக் கிளறினால் சுலபமாக இருக்கும். மாவு நன்றாக சேர்ந்து வந்தபின்பும் மேலும் 2, 3 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருந்தால்(இது சாதா வாணலியில் அடிப்பிடிக்கும்; கருகும்.) மாவு நன்றாக,

* சிலர் ஊறவைத்து உலர்த்திய அரிசியை மிஷினிலோ மிக்ஸியிலோ வறட்டு மாவாக அரைத்துவைத்துக் கொண்டு, 2 பங்கு தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் மாவைக் கொட்டிக் கிளறுவார்கள். ஆனால் அதில் இருக்கும் கட்டிதட்டிவிடக் கூடிய சாத்தியங்கள் மேற்சொன்ன முறையில் அறவே இல்லை.

* மிஷின் இல்லாமல், மிக்ஸியிலும் சரியாக அரைக்க முடியாதவர்கள், சல்லடையை ம்யூசியத்தில் தேடுபவர்கள் :), அதைவிட முக்கியமாக மேல்மாவு சரியாக கொழுக்கட்டை செய்ய வரவேண்டுமே என்று கவலைப்படுபவர்களுக்கெல்லாம் மேலே சொன்னதே ஆகச் சுலபமான முறை. தைரியமாகச் செய்து பார்க்கவும்.

* தயாரித்த பூரணம் தீர்ந்து, சொப்பு மாவு மிஞ்சினால் அதில் மணிக் கொழுக்கட்டை செய்யலாம். பூரணம் மிஞ்சினால், சின்ன உருண்டைகளாக்கி, கரைத்த பஜ்ஜிமாவில் தோய்த்து, போண்டோ மாதிரி எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்.

* அரிசி மாவினால் தான் கொழுக்கட்டைக்குச் சொப்பு செய்யவேண்டும் என்பதில்லை. மைதா மாவையும் தண்ணீரில் கரைத்து வேகவைத்துச் செய்யலாம். இன்னும் நன்றாக வரும்.

இனிப்புக் கொழுக்கட்டை

vinaayagar chathurthi_2006

தேவையான பொருள்கள்:

சொப்பு செய்ய:
பச்சரிசி – 1 கப்
தண்ணீர் – 2 1/2 கப்
உப்பு – 1 சிட்டிகை
நல்லெண்ணெய்
 
பூரணம் செய்ய:
தேங்காய்த் துருவல் – 1 கப்
வெல்லம் – 1 கப்
ஏலப்பொடி

செய்முறை:

சொப்பு:

inippu kozhukkattai_1 (vinaayagar chathurthi)

  • முதலில் பச்சரிசியை நன்கு கழுவி, 2 1/2 கப் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • அதே தண்ணீரையே விட்டு அரிசியை நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். நனைத்து வைத்த தண்ணீர் மீதமிருந்தால் அதையும் மாவுக் கரைசலிலேயே நீர்க்கக் கலந்து கொள்ளவும். (சொல்ல வருவது, மொத்தம் 1 கப் அரிசிக்கு 2 1/2 கப் தண்ணீர் சேர்ந்திருக்கவேண்டும்)
  • வாணலியில் மாவுக் கரைசலை விட்டு, இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய், சிட்டிகை உப்பு சேர்த்து நிதானமான தீயில் அடிப்பிடிக்காமல் கிளறவும்.
  • மாவு சேர்ந்து இறுகிவரும் வரை விடாமல் கிளறி (இப்போது பாதி வெந்து நிறம் மாறி இருக்கும்.) இறக்கி, ஒரு துணியில் சுற்றியோ அல்லது பாத்திரத்தில் மூடியோ ஆற வைக்கவும். மாவை திறந்துவைத்து காயவிடக் கூடாது.

பூரணம்:

inippu kozhukkattai_2 (vinaayagar chathurthi)

  • வெல்லத்தை கால் கப் தண்ணீருடன் அடுப்பில் வைத்து, நல்ல கம்பிப் பாகாக வைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய், ஏலப்பொடி சேர்த்து நன்கு சேர்ந்தாற்போல் வரும்வரை கிளறி இறக்கவும்.

கொழுக்கட்டை:

inippu kozhukkattai_3 (vinaayagar chathurthi)

  • ஆறிய அரிசி மாவை நன்றாகப் பிசைந்து, பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • நல்லெண்ணெய் தொட்டுக் கொண்டு கையில் மாவை வட்டமாகத் தட்டி, நடுவில் குழித்து, தேங்காய் பூரணத்தை ஒரு டீஸ்பூன் உள்ளே வைத்து நாலுபக்கமும் சேர்த்து மூடவும். மேலே கிரீடம் போல் இழுத்துவிடவும். அதிக அரிசிமாவு உச்சியில் இருந்தால் அதை எடுத்து விடலாம்.
  • எல்லாப் பக்கமும் ஒரே மாதிரி நன்றாக மூடியிருக்கவேண்டியது முக்கியம்.
  • செய்துவைத்த கொழுக்கட்டைகளை எண்ணெய் தடவிய இட்லித் தட்டில் வைத்து, குக்கரில் (இட்லி மாதிரி வெயிட் போடாமல்) பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும்.

inippu kozhukkattai_4 (vinaayagar chathurthi)

* அரிசிமாவை நான்ஸ்டிக்கில் வைத்துக் கிளறினால் சுலபமாக இருக்கும். மாவு நன்றாக சேர்ந்து வந்தபின்பும் மேலும் 2, 3 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருந்தால்(இது சாதா வாணலியில் அடிப்பிடிக்கும்; கருகும்.) மாவு நன்றாக, பந்து மாதிரி வந்துவிடும். இந்த முறையில் மாவுக்கு கொஞ்சம் இழுவைத் தன்மையும் வந்துவிடும். அதனால் கொழுக்கட்டை செய்யும் போது பிளக்காது. பிளந்தாலும் அந்த இடத்தில் இன்னும் சிறிது மாவு வைத்தாலும் சுலபமாகச் சேர்ந்து கொள்ளும்.

* சிலர் ஊறவைத்து உலர்த்திய அரிசியை மிஷினிலோ மிக்ஸியிலோ வறட்டு மாவாக அரைத்துவைத்துக் கொண்டு, 2 பங்கு தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் மாவைக் கொட்டிக் கிளறுவார்கள். ஆனால் அதில் இருக்கும் கட்டிதட்டிவிடக் கூடிய சாத்தியங்கள் மேற்சொன்ன முறையில் அறவே இல்லை.

* மிஷின் இல்லாமல், மிக்ஸியிலும் சரியாக அரைக்க முடியாதவர்கள், சல்லடையை ம்யூசியத்தில் தேடுபவர்கள், அதைவிட முக்கியமாக மேல்மாவு சரியாக கொழுக்கட்டை செய்ய வரவேண்டுமே என்று கவலைப்படுபவர்களுக்கெல்லாம் மேலே சொன்னதே ஆகச் சுலபமான முறை. தைரியமாகச் செய்து பார்க்கவும்.

* சிலர் பூரணத்திற்கு வெல்லம் குறைவாகச் சேர்ப்பார்கள். ஆனால் வெளியே இருக்கும் மேல்மாவு சப்பையாக இருப்பதால் பூரணம் நிறைந்த இனிப்புடன் இருப்பதே சாப்பிடும்போது சரியாக இருக்கும்.

* மேலே சொன்ன அளவில் சுமார் 50 கொழுக்கட்டைகள் வந்தன.

* பூரணத்தில் ஏலப்பொடி தவிர நம் விருப்பம் போல் முந்திரி, அரைத்த கடலைப்பருப்பு, கிஸ்மிஸ் என்றெல்லாம் சேர்த்துக் கொள்ளலாம். சனிதசைக்காக விநாயகருக்கு கொழுக்கட்டை செய்பவர்கள், இரண்டு டீஸ்பூன் எள் வறுத்தும் சேர்ப்பார்கள்.

* தேங்காய்ப் பூரணத்திற்குப் பதில் வறுத்த அரைத்த எள் ஒரு கப், வெல்லம் அரையிலிருந்து முக்கால் கப் சேர்த்து எள் கொழுக்கட்டையும் செய்யலாம்.

* தயாரித்த பூரணம் தீர்ந்து, சொப்பு மாவு மிஞ்சினால் அதில் மணிக் கொழுக்கட்டை செய்யலாம். பூரணம் மிஞ்சினால், சின்ன உருண்டைகளாக்கி, கரைத்த உளுத்த மாவில் தோய்த்து சுகியன் மாதிரி எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்.

* அரிசி மாவினால் தான் கொழுக்கட்டைக்கு சொப்பு செய்யவேண்டும் என்பதில்லை. மைதா மாவையும் தண்ணீரில் கரைத்து வேகவைத்துச் செய்யலாம். இன்னும் நன்றாக வரும்.

உப்புக் கொழுக்கட்டை

காரடையான் நோன்பு அன்று இனிப்புக் கொழுக்கட்டை செய்வார்கள் என்றாலும் அத்துடன் சேர்த்து இதையும் செய்து பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

அரிசி மாவு – 1 கப்
தண்ணீர் – 1 1/2கப்
துவரை அல்லது தட்டப் பயறு – 1 பிடி
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – தேங்காயெண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

kaaradaiyaan-nonbu-kozukkattaikaaram.JPG

செய்முறை:

  • முதலில் அரிசி மாவை, நிதானமான சூட்டில், சிவக்க வறுத்துக் கொள்ளவும். (அரிசியை சிவக்க வறுத்தும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம். நைசாக அரைத்தால் கொழுக்கட்டை மொழுக்’கென்று இருக்கும். கொஞ்சம் கரகரப்பாக அரைத்தால் சுவையாக இருக்கும்.)
  • அடுப்பில் வாணலியில், எண்ணை விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, சிறு துண்டுகளாக நறுக்கிய பச்சை மிளகாய், தாளிக்கவும்.
  • அத்துடன் தட்டப் பயறைச் சேர்த்து வறுத்து, தண்ணீர் சேர்த்து, பாதிப் பதத்திற்கு வேக வைக்கவும்.
  • அதன்பின் வாணலியில் இருக்கும் தண்ணீர் ஒன்றரை கப் இருக்குமாறு- தேவைப் பட்டால் மேலும் சேர்த்துக் கொள்ளவும். 
  • அதில் தேவையான உப்பு சேர்த்து, மாவைக் கொட்டிக் கிளறி, இறுகியதும் இறக்கவும். (வெல்லத்தோடு மாவைக் கிளறும்போது, அடுப்பில் வெல்லப் பாகு உருகிய நிலையிலேயே இருப்பதால், மாவு நன்றாக இறுகிக் கிளற வரும். ஆனால் இதில் தண்ணீர் சில நேரம் இன்னும் அதிகம் தேவைப் படலாம். தயாராக ஒரு கப் சூடான தண்ணீர் வைத்திருப்பது நல்லது. தேவைப் பட்டால் உபயோகித்துக் கொள்ளலாம்.
  • இட்லித் தட்டில் நெய் அல்லது தேங்காய் எண்ணை தடவி, கொழுக்கட்டையாகவோ, அடைகளாகவோ தட்டி வேக வைத்து எடுக்கவும்.

* நோன்பு தினம் என்பதால் மிகவும் சுத்தமாகச் செய்ய நினைப்பவர்கள், நேரடியாக வாணலியில் தட்டப் பயறை வறுத்து பாதிவரை வேகவைப்பார்கள். இப்படிச் செய்வது மிகுந்த மணமாக இருக்கும். அல்லாமல் ஒரு நான்கு மணி நேரம் முன்னாலேயே பயறை தண்ணீரில் ஊறவைத்தும் செய்யலாம். இது செய்வது சுலபம். 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நோன்பு தினம் என்பதால் தேங்காய்ச் சட்னி. மற்றபடி உப்புமாவிற்குத் தொட்டுக் கொள்ளும் எதுவும், இதற்கும் சரியே.

காரடையான் நோன்பு குறித்து…. சுட்டி 1| சுட்டி 2

தேவையான பொருள்கள்:

அரிசி மாவு – 1 கப்
தண்ணீர் – 1 கப்
வெல்லம் – 1 கப்
துவரை அல்லது தட்டப் பயறு – 1 பிடி
தேங்காய் – சிறிது
ஏலப் பொடி – 1/2 டீஸ்பூன்
நெய் – தேவையான அளவு

செய்முறை:

kaaradaiyaan-nonbu-kozukkattaiinippu.JPG

 

  • முதலில் அரிசி மாவை, நிதானமான சூட்டில், சிவக்க வறுத்துக் கொள்ளவும். (அரிசியை சிவக்க வறுத்தும், மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம். நைசாக அரைத்தால் கொழுக்கட்டை மொழுக்’கென்று இருக்கும். கொஞ்சம் கரகரப்பாக அரைத்தால் சுவையாக இருக்கும்.)
  • தேங்காயை, சிறுசிறு துண்டுகளாகக் கீறிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில், தட்டப் பயறை வறுத்து, தண்ணீர் சேர்த்து, கொதித்கவைத்து, பயறு பாதிவரை வேக வைக்கவும்.
  • அதன்பின் வாணலியில் இருக்கும் தண்ணீர் ஒரு கப் இருக்குமாறு- தேவைப் பட்டால் மேலும் சேர்த்துக் கொள்ளவும்.
  • அத்துடன் வெல்லம் சேர்த்து, கரைந்ததும், தேங்காய்த் துண்டுகள், ஏலப்பொடி சேர்த்து, மாவைக் கொட்டிக் கிளறி இறக்கவும்.
  • இட்லித் தட்டில் நெய் தடவி, கொழுக்கட்டையாகவோ, அடை மாதிரி தட்டியோ வேகவைத்து எடுக்கவும்.

* நோன்பு தினம் என்பதால் மிகவும் சுத்தமாகச் செய்ய நினைப்பவர்கள், நேரடியாக வாணலியில் தட்டப் பயறை வறுத்து பாதிவரை வேகவைப்பார்கள். இப்படிச் செய்வது மிகுந்த மணமாக இருக்கும். அல்லாமல் ஒரு நான்கு மணி நேரம் முன்னாலேயே பயறை தண்ணீரில் ஊறவைத்தும் செய்யலாம். இது செய்வது சுலபம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சுடச் சுட இதைச் சாப்பிட, இதற்குத் தொட்டுக் கொள்ள வெண்ணை என்று கண்டுபிடித்தவருக்கு அபார ரசனை இருந்திருக்க வேண்டும். சூப்பர் காம்பினேஷன்.

நன்றாக இருக்கிறதே, இன்னும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னால், ஒவ்வொரு தடவையும் பாட்டி, “அவ்ளோதானே, இதென்ன பிரமாதமா, திரும்ப இன்னொரு நாள் செஞ்சுட்டா போச்சு!” என்று சொல்வார். ஆனால் சில உணவுகள் அந்தந்தப் பண்டிகை தவிர வேறு நாள்களில் செய்யக் கைவருவதே இல்லை. நமக்கும் கேட்கத் தோன்றுவதில்லை. அதுபோல் இந்த நோன்புக் கொழுக்கட்டைக்கும் இன்னொரு நாள் என்பது இனி அடுத்த வருட மாசி மாதக் கடைசி நாள் தான்.

இதில் எனக்குப் பிடித்த இன்னொரு மிக முக்கிய விஷயம், அண்ணன் தம்பியை எல்லாம் அப்படி ஓரமாக உட்காரவைத்துவிட்டு நமக்கு வீட்டில் முதல் மரியாதை நடக்கும். வேண்டுமென்றே, செய்தவை ஆறிப் போகும்வரை, நேரத்தை இழுத்தடித்து சாப்பிடுவேன். 🙂

காரடையான் நோன்புக் கொழுக்கட்டை (காரம்)