ஃபீலிங்ஸ்


முன்குறிப்பு
தாமதமான பதிவு
சொந்தக் கதை
கொஞ்சம் அதிகமாய் (எனக்கே) போரடிக்கும்

2011 ஜூலை மாதக் கடும் மழைநாளில் (மும்பையாக்கும்) எலக்ட்ரிக் ட்ரெயினில் ‘குர்லா’வில் இறங்கி ‘க்ளக் ப்ளக்’ சாலையில் கல்லூரி என்று குறிப்பிடப்பட்ட அந்தக் கட்டடத்திற்கு இரண்டாவது முறையாகப் போனேன். இது எத்தகைய மெனக்கெடல் என்று மும்பைவாசிகளுக்குத்தான் புரியும். சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ எகனாமிக்ஸ் சேர விபரங்கள் கேட்டபோது TC இல்லாத காரணத்தால் ஏற்கனவே இந்த ஸ்டடிசெண்டரில் மறுத்திருந்தார்கள். “இதுக்குமேல இந்தப் பொண்ணு படிக்கமாட்டா” என்று எப்பொழுதோ சொன்ன ஜோசியக்காரனின் வாக்கை வியந்துகொண்டு திரும்பிவிட்டேன். சிறிதுநாளில் ஐஐடியில் படித்தவர்களுக்கு டிசி கிடையாது என்றாலும் சேர்ந்திருந்ததைப் படித்துவிட்டு   மீண்டும் கிளம்பினேன். எதற்கும் இந்த முறை தீர்மானமாகப் பேசவேண்டும் என்று ரயிலில் செல்லும்போதே 3, 4 தடவை இந்தியிலும் சொல்லிப் பார்த்துவைத்திருந்தேன். ஆனால் அங்கே இருந்தவர், “அதெல்லாம் நேரடியாகச் சேர்பவர்களுக்குச் சரியாக வரும்; இங்கிருந்து நாங்கள் தபாலில் அனுப்பினால் டிசி இல்லையென்றால் எதையுமே பார்க்காமல் அட்மிஷன் இல்லை என்று திருப்பி அனுப்பிவிடுவார்கள். அதுவும் 6 மாதம் கழித்துதான் திரும்பவரும். செலவான பணத்துக்கு நிர்வாகம் பொறுப்பல்ல” என்று நல்ல தமிழிலேயே தெளிவாகச் சொல்லித் திருப்பியனுப்பினார். மீண்டும் ஜோசியனின் வாக்கை வியந்துகொண்டு..

ஆனால் அப்படியே விட குடும்பம் விடவில்லை. மறுநாளே தட்கலில் டிக்கெட் புக்செய்து, கையில் திணித்து சென்னைக்கு அனுப்பிவைத்தார்கள். ஸ்ரீரங்கத்திலிருந்து சென்னை வந்திருந்த அப்பா “எதையாவது கிளப்பிவிட்டுண்டேயிரு!” என்று சிரித்துக்கொண்டே ஸ்டேஷனிலிருந்து அழைத்துப் போனார். என்னுடைய கல்லூரிப் படிப்பு முடித்தவுடன் டிசியை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏதோ கம்ப்யூட்டர் ப்ரொகிராமிங் கோர்ஸுக்காகக் கொடுத்து சேர்ந்து, சிதம்பரத்தில் தம்பியோடு ஒருவாரம் தங்கி அலப்பறை செய்து எழுதிய தேர்வுக்கு ரிசல்ட் வந்து, “நீதான் முதல் மார்க்காம்” என்று அப்பா ஃபோன் செய்தபோது நான் கல்யாணம் ஆகி மாமியார்வீட்டில் இருந்தேன். மார்க் ஷீட் மட்டும் அப்பாவிடம் இருக்கிறது. டிசி என்ற ஒன்றை அவர்கள் தரவில்லை போலிருக்கிறது. யாரும் இத்தனை வருடங்களில் அதை யோசிக்கவுமில்லை.

Pic From Surya Teja Vadapalli FB

குளித்துக் கிளம்பினோம். சென்னைப் பல்கலை அலுவலத்தில் ‘ஒற்றைச் சாளர முறை’ இடத்தில் இருந்தவர் தீர்மானமாக “டிசி இல்லாமல் சேரமுடியாது, (எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் படித்த) அண்ணாமலை பல்கலையில் “தொலைந்துவிட்டது” என்று எழுதிக்கொடுத்து டூப்ளிகேட் டிசி வாங்கிவந்தால்தான் உண்டு” என்று அடித்துப் பேசினார். அவரைவிட அதிகமாக– (பிகேஎஸ் மாதிரி ஃபேன் தலையில்தான் விழவில்லை)– சேர்த்தே ஆகவேண்டும் என்று நானும் அடித்துப் பேசினேன். எதற்கும் ஐஐடி-காரர் பதிவை கையில் பிரிண்ட் எடுத்துப் போயிருந்தேன். ஒன்று நமக்கு அட்மிஷன், இல்லை அவர்களுக்கு கேன்சலேஷன் என்று முடிவோடு அடுத்தடுத்து பெரிய தலைகளைப் பார்க்கத் தயாரானேன். அதற்குள், வந்த முதல் கிராக்கியே வாய்ச்சண்டை என்ற சலிப்பு அவர் முகத்தில் தெரிந்தாலும் திடீரென்று குரலைத் தாழ்த்தி, சரி, பூர்த்திசெய்து தாருங்கள் என்று சொன்னார். நம்பவே முடியாமல் MA என்று  டிக் செய்து, subject இடத்தில் வைணவம் என்று (ஏன் இப்படி எழுதினேன் என்று இன்றும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.) எழுதினேன். அப்பா கூர்ந்து பார்த்துவிட்டு ஒருநொடி ஆச்சரியப்பட்டு அமைதியானார். மற்றவர்களை ஓடியாடி கவனித்துக்கொண்டிருந்த ஒ.சா.மு. அலுவலர் (உண்மையிலேயே அபார சுறுசுறுப்பு) வைணவம் என்பதைப் பார்த்து, எங்கிருந்து வரீங்க என்று கேட்டு பதிலை எதிர்பாராமல் உடனடியாக எங்களுக்கு உட்கார இடம்கொடுத்து, மற்றவர்களைக் கவனிக்கவேண்டிய தனது பலப்பல அலுவல்களுக்கிடையேயும் வதவதவென்றிருந்த அப்ளிகேஷனை 5 நிமிடத்தில் நிரப்ப உதவி (அவர் ஒவ்வொருமுறை அருகில் வந்து ஏதாவது சொல்லும்போதும் ‘அம்மா மின்னலு’ என்று அப்பா காதில் ஓட்டிக்கொண்டேயிருந்தார்.), வந்திருந்த மற்றவர்களிடமெல்லாம் இவங்க எம்.ஏ வைணவம் படிக்கப் போறாங்க என்று சொல்லி பார்வைப் பொருளாக்கி (டென்ஷனாகிவிட்டேன்), வங்கியில் வரிசையில் நிற்கவேண்டியிராமல் அவரே பக்கவாட்டில் கொடுத்து வாங்கி, அடுத்தப் பத்து நிமிடங்களில் புத்தகங்களும் ஐடியும் கைக்குக் கிடைத்தன. புத்தகங்களை நான் வாங்குவதற்குள் அப்பா கவுண்டருக்குள் கைவிட்டு வாங்கிவிட்டார். “கரஸ்னா எல்லாரும் பாஸ் பண்ணினா போதும்னு நினைப்பாங்க. அப்படியில்லாம நல்லாப் படிச்சு நெறைய மார்க் வாங்கு” என்று சொல்லிக் கொடுத்தார். இதில் முக்கியமானது SSLC புத்தகத்தில் அப்பா பெயர்தான் இனிஷியல் என்பதால், இப்பொழுதும் அதையே உபயோகிக்கவேண்டும் என்று ஒ.சா.மு அலுவலர் சொன்னதில் அப்பாவிடம் ஒரு மலர்ந்த மகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது. அதுமட்டுமின்றி இத்தனை வருடப் பழக்கத்தில் மாற்றி எழுதுவிடுவேன் என்பதால் ஒவ்வொரு தேர்விற்கு உள்ளே நுழையும் கடைசிநொடியிலும் அதை நினைவுப்படுத்தி அனுப்பிக்கொண்டிருந்தார்.

தேர்வு மையங்கள்

ஆனால் படித்துமுடித்தும் (அந்தக் கதை பின்னால்) நினைத்த மாதிரி முதலாண்டுத் தேர்வு எழுதுவது சாத்தியமாகவில்லை. 2012 ஜூன்- 9,10,16,17,22 என 5 தாள்கள். முந்தைய மாதமே கோவிந்த் வடோதரா மாற்றலாகி வந்துவிட, நான் மட்டும் பெண்ணின் பத்தாம் வகுப்பு ரிசல்டுக்காக மும்பையில். எப்படியும் முதல்வருடத்தை அங்கேயே முடித்துவிடலாம் என்று ரிவர்ஸில் கடைசிப் பரிட்சையிலிருந்து படித்துக்கொண்டிருக்க, இடையில் தடைபட்டு ரிசல்ட் வந்து, வடோதரா போய் ஸ்கூல் அட்மிஷன், வீடு பார்த்துத் திரும்பும்போது, ஜூன் 18-ஆம் தேதியே பள்ளி திறக்கிறார்கள் என்பதால் மும்பையைவிட்டு அவசரமாகக் கிளம்பவேண்டியதாயிற்று. இந்தமுறை தேர்வு எழுதவேண்டாம் என்று முடிவுசெய்யப்பட்டது. ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு தேர்வு என்ற ஒன்றை உட்கார்ந்து எழுதப் போகிறேன் என்பதில் இருந்த த்ரில் இப்படி பொசுக்’ என அணைந்ததில் கடுப்பாகி, ஊரில் இருக்கும்வரை முதலிரண்டு தாள்களையாவது எப்படியாவது சத்தமில்லாமல் தள்ளிவிடலாம் என்று முடிவுசெய்தேன். ஏற்கனவே முதலில் கடைசிப் பரிட்சையிலிருந்து படிக்க ஆரம்பித்திருந்தேன். அவை இப்பொழுதைக்குப் பிரயோசனமில்லாமல் போய்விட, உடனடியாக ஏறக்கட்டிவிட்டு வீடு மாற்றும் வேலைகளைக்கூட பார்க்காமல், பெண்ணை தாஜா செய்து சமையல் செய்யவைத்து, 4 நாள்களில் முதல் இரண்டாவது தாள்களில் கவனம் வைத்துப் படித்து, கஷ்டப்பட்டு செண்டரைத் தேடிப்போய்… கோவிந்த் இருந்திருந்தால் முதல் நாளே செண்டரை நேரில்போய் பார்த்துவைத்துக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி அழைத்துப்போகப்பட்டிருப்பேனே என்ற நினைத்த மனதை மிரட்டி அடக்கி– குர்லாவில் இறங்கினால் ஆட்டோக்காரர்கள் உள்பட யாருக்கும் தெரியவில்லை. கொட்டுகிற மழையில் விசாரித்துக்கொண்டே– ஒரு ஆட்டோக்காரரிடம் ஏற்கனவே கேட்டதுதெரியாமல் இரண்டாம் தடவையும் கேட்டுவிட, அடிக்கவே வந்துவிட்டார்- பதறிக்கொண்டே நேர்க்கோடாய்ப் போய் பஸ்ஸ்டாண்ட் க்ரில்லில் உட்கார்ந்திருந்த ஒரு காதலர் ஜோடியைப் பிடித்தேன். இவர்கள் தான் இன்றைய தேதியில் ஊருக்கு உதவுபவர்களாய் இருக்கிறார்கள். நினைத்தமாதிரியே கைகாட்டினார்கள். அட, அட்மிஷனுக்கு விசாரிக்க வந்த கல்லூரியேதான், இப்பொழுது பெயர் மாற்றியிருக்கிறார்கள். உள்ளேபோய் ஹால்டிக்கெட் வாங்கி எண் பார்த்து, இடம் தேடிப்பிடித்து உட்கார்ந்தபோது பெருமையாய் இருந்தது. மூன்றுமணிநேரம் ஓரிடத்தில் அமர்ந்து உலகை மறந்து தேர்வை எழுதிவிட்டு மீண்டும் ட்ரெயின்பிடித்து வீடு திரும்பி பெண் தந்த காபியை அனுபவித்துக் குடித்து முடிப்பதற்குள்… இடையில் ஹைதையில் ட்ரெய்னிங் முடிந்து எதிர்பாராமல் மும்பை வந்த கோவிந்த். 😦 “வீரம் என்பது தைரியம் இல்லை, பயப்படாத மாதிரி நடிப்பது” என்று ஒருமுறை மனதுக்குள் அழுத்தமாகச் சொல்லிக்கொண்டேன்.

“ப்ரொகிராம் போட்டமாதிரி காஸ், ஃபோன், இண்டர்நெட் ஒன்னுமே சரண்டர் பண்ணலையா?”

“உட்கார்ந்த இடத்துலேருந்து நல்லாப் பேசுங்க. எல்லாத்தையும் உங்க பேருல வெச்சுண்டா நான் எப்படி சரண்டர் பண்ணமுடியும்? நீங்க எழுதிக்கொடுத்தாதான் முடியும்னு சொல்லிட்டாங்க..”

“சாமான் எல்லாம் ஒழிக்கலை. எல்லாம் லாஃப்ட்லயே இருக்கு. வீட்டுல எதுவுமே மாறலை.. ரெண்டுநாள்ல லாரி வந்துடும் சாமான் ஏத்த. என்ன பண்ணிண்டிருந்தீங்க ரெண்டுபேரும் ஒருவாரமா?”

“அதுக்காக எல்லாத்தையும் இறக்கி வெச்சா, காலை எங்க வைக்கறது. எல்லாம் ஒழிச்சுதான் திரும்ப மேல வெச்சிருக்கு. அப்படியே வண்டில ஏத்தவேண்டியதுதான்” பொண்ணு கமுக்கமாய் இருந்தாலும் எப்பொழுதுவேண்டுமானாலும் சிரித்துக் காட்டிக்கொடுத்துவிடுவேன் மாதிரி மூஞ்சியை வைத்திருந்தது. வேலை சொல்லி உள்ளே அனுப்பினேன்.

“பாங்க் லாக்கர் நகையை எங்க வெச்சிருக்க?”

Oops! சுத்தமாக மறந்திருந்தேன். To do list-லேயே இது இல்லை. இதன் ஆபரேஷன் முழுப்பொறுப்பும் என்னிடமே என்பதால் எதிராளியைச் சாடமுடியாது. காலில் விழவேண்டியதுதான்…

“விளையாடறீங்களா… அப்பப்ப போய் கொஞ்சம் நகை வெச்சு எடுக்கறதுமாதிரியா? எல்லாத்தையும் எடுத்துண்டு நான் தனியா எப்படி வரமுடியும்? பயமா இருந்தது. எப்படியும் உங்க ஸ்டாஃபெல்லாம் பார்க்க நீ பாங்க் போகும்போது, நானும் வந்து இதை முடிக்கலாம்னுதான்….” பாம்பை அடித்துவிட்டு அதன்மீது நின்றுகொண்டு பாத்ரூமில் கரப்புக்கு பயம் என்று பெண் சொன்னாலும் நம்பும் ஆண்சமூகம்– இதையும் நம்பியது.

1450751_545121375565500_13968540_n
இரண்டாவது தாளுக்கு ஒருமுறைகூட பாடங்களைத் திருப்பிப் பார்க்காமல் மறுநாள் பெண்ணின் ட்யூஷன் செண்டரில் பரிசளிப்பு விழாவுக்கு அப்பாவும் பெண்ணும் கிளம்பியபின் மதியம் சமையலையும் முடித்துவைத்துவிட்டு இரண்டாவது தேர்வுக்கு ஓடினேன். முந்தைய நாள் போல் 12 மணிக்கே கிளம்பி, ரயிலில் புரட்டலாம் என்று நினைத்திருந்தைச் செய்ய முடியாமல் ஒரு மணிநேரத்திற்குமேல் (ஞாயிறென்பதால்) வண்டியே வராமல் பதறித் தவித்து– அந்த டென்ஷனிலும் ஸ்டேஷன் புழுக்கத்திலும் கடும் தலைவலி எட்டிப்பார்க்க… மும்பையில் ரயிலைவிட வேகமாக எந்த வழியிலும் ஓர் இடத்திற்குச் செல்ல வாய்ப்பேயில்லை. இனி போய்ப் பிரயோசனமில்லை, வீட்டுக்குத் திரும்பலாம் என்று நினைக்கும்போது ஒரு வண்டி வந்தது. பிதுங்கும் கூட்டத்தில் ஏறி ஒரு வழியாக குர்லாவில் கீழே தள்ளப்பட்டு, மழைபெய்த ரோட்டில் வீடு தீப்பிடித்ததுபோல் தலை(வலி)தெறிக்க ஓடினேன். போய் அமர்ந்தபோது இதயம் வாய்வழியாக வெளியே வந்துவிடுமோ என்பதுபோல் இறைத்தது. படித்த எதுவுமே நினைவில்லை. இன்னொருமுறை எழுதிக்கொள்ளலாம் என்று நினைத்தே கேள்வித்தாளை வாங்கினேன். நான் சமாளித்துவிடலாம் என்று நினைத்திருந்த பரிபாடல் எல்லாம் காலைவாரிவிட, புருஷசூக்தமும் ஈஸாவாச்யோபநிஷத்தும் கஞ்சத்தனம் இல்லாமல் கைவழியே கரைந்துகொண்டிருந்தன. கடைசி 35 நிமிடங்கள் ஈஸா-விற்கு என்று நேரம் குறித்துகொண்டு எழுத ஆரம்பித்தும், எழுத எழுத சூழ்நிலை மறந்து உபநிஷத்தில் கரைந்து இறுதிப் பாடல்களில் உடல் நடுங்க ஆரம்பித்தது. நல்லவேளையாக ஜாவா குமார், அரவிந்தன் நீலகண்டன், பழைய சண்டை எல்லாம் நினைவு வந்து மீண்டும் தேர்வு அறைக்கு மனம் திரும்பிவிட்டது. 😉  நடுவில் தலைவலி எப்போது எப்படி சரியானது என்றே தெரியவில்லை. வீடுவந்து ராவோடு ராவாக வீட்டுவேலைகளையும், ஒரே பகலில் வெளிவேலைகளையும் அசுரசாதனையாக முடித்து மறுநாள் லாரியில் சாமானை ஏற்றியாகிவிட்டது. #சலாம்மும்பை

இடைத் தேர்வு ஜனவரி 2013-இல். பல்கலை அலுவலகத்துக்கு தொடர்ந்து ஃபோன் செய்து அவர்கள் வெளியிடும் முன்பே தேதிகளைக் கேட்டு வாங்கினேன். விடுபட்ட 3 தாள்களை– குஜராத்தில் தேர்வுமையம் எந்த ஊர் என்று தீர்மானமாகத் தெரியாததால், தமிழ்நாட்டில் (ஸ்ரீரங்கத்தில் படித்து உருப்படமுடியாது) சேலம் என்று முடிவுசெய்து வாங்கிய டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட் 7. RAC கிடைத்துவிடும் என்று முழுமையாக நம்பினேன் ரயிலில் உட்கார்ந்து படித்துக்கொண்டே போய்விடலாம் என்று மாலை 6 மணி வண்டிக்கு சாப்பாடு தயாரித்துக்கொண்டு கிளம்ப இருக்கையில் மதியம் 1 மணிக்கு தயாரிக்கப்பட்ட சார்ட்டில் WL-1லியே என் நிலை நின்றுவிட்டது. முன்னேற்பாடாக கோவிந்த் ஏற்பாடு செய்திருந்தபடி மறுநாள் அஹமதாபாத் சென்று விமானத்தில் சென்னை- விமானத்திலிருந்து குதித்தோடி முக்கால் மணிநேரத்தில் இரவு 10:25-க்கு தாம்பரத்தில் சேலம் வண்டியைப் பிடிக்கவேண்டிய நெருக்கடியில் சென்னையில் உதவிக்கு அந்நேரத்துக்கு யாரை அழைப்பது என்ற குழப்பி முடிப்பதற்குள்… அப்பா ஶ்ரீரங்கத்திலிருந்து வருகிறேன் என்று சொல்லிவிட்டார். ஆட்டோ பறந்தது என்கிற க்ளிஷே வாக்கியத்திற்கு அன்றுதான் பொருள் தெரிந்தது. அப்பா தேர்வுகளுக்கு முன்னரே தேர்வுமையக் கல்லூரிக்குப் போய் தேர்வெழுதுமிடம், கழிவறை வசதி வரை செக் செய்துவிட்டு வந்தார். எங்கே யார் உட்கார வேண்டுமென்பதையே அரை மணி நேரம் முன்னர் தான் நோட்டீஸில் ஒட்டி, கால் மணி நேரம் முன்னதாகவே கேள்வித்தாள், விபரங்கள் நிரப்ப பதில் தாள் எல்லாவற்றையும் கொடுத்து மிகச் சிறப்பாக நடத்தினார்கள். ஒவ்வொரு நாளும் உட்காரும் இடத்தை மாற்றும் ஸ்ட்ரிக்ட் ஆப்பீசர்களாய் இருந்தார்கள். மும்பையில் வயதானவர்கள் உள்பட எல்லோரும் சூபர்வைஸரிடம் வந்து கேள்வித்தாளை வாங்க, எனக்கு மட்டும் தானே அருகில்வந்து கொடுத்தார்கள். “ஐயோ படிக்கறதுதான் வைணவம்; ஆனா நான் பெரிய பொறுக்கி!” என்று மனசு அலறியது. உண்மையிலேயே கூச்சமாக இருந்தது. நல்லவேளையாக பெரியார் பிறந்த மண்ணான தமிழ்நாட்டில் அந்தப் பிரச்சினை எல்லாம் இல்லை. ஆனால் அதைவிட அதிகமாக என் அருகில் அமர்ந்த ஒருவரை ஹால்டிக்கெட் முதற்கொண்டு தாங்களே கொண்டுவந்து கொடுத்து ஒவ்வொருவராய் வந்து உபசரித்துக் கொண்டிருந்தார்கள். இருக்கிற பரிட்சை டென்ஷனிலும் சூர்யாவிற்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத அவரைப் பார்க்கும்போதெல்லாம் ஏன் சூர்யா நினைவு வருகிறது என்று மண்டைக்குடைச்சலாய் இருந்தது. திருமங்கையாழ்வாரை எழுதிக்கொண்டிருக்கையில் ரொம்பநேரம் குடையவிடாமல் நல்லவேளையாய் ஒரு காவல்துறையாளர் வந்து சல்யூட் அடித்ததில் புரிந்துவிட்டது. ஹாஹ் அந்த போலீஸ் ஹேர்கட்! மதியம் சரியாக 2 மணிக்கு எழுத ஆரம்பிக்கும்போது கரண்ட் போய்விடும் என்றாலும் வியர்க்காத அளவுக்கு அந்தக் காலக் கட்டடம் மிக வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் இருந்தது. என்றாலும் இந்தக் கல்லூரியின் கழிவறை வசதி குறித்து அவசியம் பின்னர் எழுதவேண்டும். குடும்ப நினைவே இல்லாமல் சௌகரியமாய் அம்மா சமைத்துபோட அண்ணன், அப்பா என்று அருமையான 15 நாள்களும் 3 தேர்வுகளும்…. ஆனால் அப்படியே நிம்மதியாக இருந்துவிடமுடியவில்லை. முதல் தடவை அட்மிஷனுக்காகச் சென்னை சென்றிருந்தபோது, எல்லா விதங்களிலும் பெண்ணை பார்த்துக்கொள்ள முடிந்த கோவிந்திற்கு அப்பாற்பட்டதாயிருந்தது பெண்ணின் நீளமான தலைமுடி. மும்பையின் காலை 6 மணி அவசரத்தில் எதிர்வீட்டு ‘ஆண்ட்டி’யிடம் போய்த்தான் பின்னிக்கொள்ள வேண்டியிருந்தது. இந்த முறை முடிக்குறைப்பு செய்துவிட்டதால் அந்தப் பிரச்சினையும் இல்லை என்று இருந்த நிம்மதியில் பெரிய கல்லாய், ட்ரெயினிங் என்று கோவிந்த் மும்பை கிளம்பவேண்டியிருக்க, இரண்டு நாள்களுக்குப் பெண்ணை அவசரமாக நண்பர் வீட்டில் விடவேண்டியிருந்தது. எங்கள் வாழ்நாளில் நாங்கள் இப்படிச் செய்வோம் என நினைத்ததில்லை. :((

அதனால் ஜூன் 2013-இல் நடக்கவிருந்த இரண்டாம் வருடத் தேர்வுகளை தேர்வுமையம் எந்த ஊரில் இருந்தாலும் குஜாராத்திலேயே எழுதுவது என்று தீர்மானித்தேன். இந்த ஒருவருடப் பழக்கத்தில் சென்னை பல்கலைக்கழகம் எந்த மாதம் எந்தக் கிழமைகளில் ஆரம்பித்து முடிப்பார்கள் என்று முன்னதாகவே ஊகிக்க முடிந்ததால் எங்கு நடந்தாலும் இருந்து தங்கி எழுத உதவியாக அப்பா முன்கூட்டியே வந்துவிட்டார். தேர்வுநாள் காலை வரை காபி, டிபன், வேலைக்காரிக்குப் பாத்திரம் ஒழித்துபோடுவது என்று வேலைகளைக் கட்டியழாமல் முன்னதாக ஒரு நாள் இரவாவது பாடங்களைத் திருப்பிப் பார்க்க நேரம் வேண்டும் என்று முடிவுசெய்து ஒவ்வொரு வாரமும் முதல்நாளே பர்தோலி (Bardoli) சென்று அறையெடுத்துத் தங்கி அடுத்தடுத்த இரண்டு வார சனி, ஞாயிறு தேர்வுகளையும், கடைசியில் இருந்த ஒரேயொரு தேர்வை மட்டும் அன்று அதிகாலையில் கிளம்பிப் போயும் எழுதினேன். கடைசிநாள் சனிக்கிழமை காலை 6 மணிக்குக் கிளம்பி 7:30 மணிக்குள் 160 கிலோமீட்டரைக்  கடந்து டிரைவர் சாதனை படைத்தார். இந்தப் பள்ளிக்கும் முதல்வாரமே குடும்பத்தோடு பார்த்துவரச் சென்றிருந்தோம். அந்த ஊர் பாங்க் மேனேஜர் தவறுதலாக எங்களை முற்றிலும் பிரம்மாண்டமான ஒரு இஸ்லாமிய மதராஸாவுக்குக் கூட்டிப்போய்விட்டார். பழக்கமில்லாத அந்தச் சூழ்நிலையே அச்சமூட்டுவதாக இருந்தது. ஸ்கூல் பெயர்ப் பொருத்தம் சரியில்லை, இதுவாயிருக்காது என்று மல்லுக்கட்டி, ஒருவாறு வெளியே விசாரித்து, சற்றுத் தள்ளி அதே பகுதியில் இருந்த MA Memon என்கிற சிறிய இஸ்லாமியப் பள்ளிக்கூடத்தைச் சரியாகப் பிடித்து விசாரித்தோம். நிர்வகிப்பவர் எங்களை வரவேற்றுப் பேசினாலும் அஹமதாபாத்தில் இல்லாமல் இங்கே இருப்பதற்கு எங்கள் அதிருப்தியைச் சொன்னபோது அவர் சற்றே வெகுண்டார்.  மிக விரும்பி சென்னைப் பல்கலையிடமிருந்து இந்த வாய்ப்பைப் பெற்றுச் செய்துவருவதாகக் கூறினார். அன்றுதான் மதியம் ஹால்டிக்கெட் இணையத்தில் வெளியிட்டிருக்க அன்றே மாலையே நான் அதை எடுத்துவந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியபட்டார். எப்பொழுதுமே இணையத்தில்தான் குடித்தனம் என்பதை அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார். கையில் வாங்கிப் பார்த்தவர், என் பிரிவு வைணவம் என்பதில் முகம் சுருங்கினார். இன்னொருவரிடம் தீவிரமாக குஜராத்தியில் உரையாடினார். “ஐயோ நான் காஃபிராகிவிட்டேனா” என்று ஏற்கனவே மதராஸாவுக்குள் நுழைந்து வந்த அதிர்ச்சியில் மனதுக்குள் அலறிக்கொண்டிருந்தேன். ஆனால் நடந்தது என்னவென்றால், ஒவ்வொரு நாளும் என்னை முதல் பென்ச்சில் உட்காரவைத்து, முதலில் எனக்குக் கேள்வி, விடை மற்றும் நிரப்பவேண்டிய மற்ற தாள்களைக் கையில் தந்து, பாதி எழுதிக்கொண்டிருக்கும்போதே தாள் சுலபமாக இருக்கிறதா என்று அக்கறையாக விசாரித்து, கூட வந்திருந்த என் அப்பாவை (இவர் அன்றாடம் காலையில் இட்டுக்கொண்ட ஸ்ரீசூர்ணம் கூட கலைக்காமல் வருவார்) வரவேற்று மூன்று மணிநேரமும் லைப்ரரியில் அமரவைத்து, கடைசிநாள் வரை உபசாரம் செய்தார்கள். பொதுவாக எல்லோருக்குமே நல்ல வரவேற்பும் தேர்வு நடத்துவதில் சிறந்த கண்காணிப்பும் இருந்தது. முன்பு தில்லியில் தேர்வுகள் எழுதியிருந்த ஒருவர் மொபைல் ஃபோன்களைக் கூட இங்கே அனுமதிக்காததைத் திட்டிக்கொண்டேயிருந்தார். மற்ற செண்டர்களில் எழுதும்போது குறிப்புகளை மொபைலில் எழுதிக்கொண்டுவந்துதான் தேர்வு எழுதுவார்களாம். மிக அதிகமான எண்ணிக்கையில் எம்பிஏ மாணவர்களே இருந்தனர். அதற்கு அடுத்ததாக சைக்காலஜி. தவிர மற்ற பிரிவினர். அத்தனை பேரிலும் நான் தாமதமாக உள்ளே நுழைந்தாலும் மற்றவர்களுக்குக் கொடுப்பதை நிறுத்திவிட்டு, என்னுடய தாள்களை முதலில் தேடிப்பிடித்து எடுத்துக் கொடுத்தார்கள்.  உபசரிப்பில் சந்தேகப்பட்ட சிலர் தனியாக என்னிடம் நான் யார் என்றும் விசாரித்தார்கள். பொறம்போக்கு என்பதற்கு ஹிந்தியில் வார்த்தை தெரியாததால், ஜெயஶ்ரீ என்றுமட்டும் சொல்லிவைத்தேன். ஏன் முதல் அறிமுகத்தில் முகம் சுருங்கினார் என்று கடைசிநாளில் தெரிந்தது. தமிழ்நாட்டில் இருக்கும் தேர்வுமையங்களுக்கு கேள்வித்தாள்கள் தபாலில் வந்து தேர்வுநேரத்தில் சீல் உடைத்துத் தருவதுபோல் இல்லாமல் இங்கே தேர்வுக்கு அரை மணி நேரம் முன்பாக பல்கலையிலிருந்து ஈமெயிலில் கேள்வித்தாள்களை அனுப்புகிறார்கள். இவர்கள் அவற்றை தேவையான எண்ணிக்கையில் ப்ரிண்ட் எடுத்து சரியாக தேர்வு நேரத்தில் விநியோகிக்கிறார்கள். என் கேள்வித்தாள் மட்டும் அவர்கள் அறியாத தமிழில் இருப்பதால் சரியாகப் போகவேண்டுமே என்று யோசித்ததாகச் சொன்னார்கள்.

இப்படியாக சுண்டைக்காய் கால்பணம்… கதையென குடும்ப இஸ்திரியான என் தேர்வு எழுது படலங்கள் நிறைவடைந்தன. ஆனால் இந்தத் தேர்வுகளுக்குப் படித்துத் தயார் செய்வதற்குள்…

(அதெல்லாம் அப்புறம்தான்…)

==

MA Vaishnavism 2013 Degree Certificate1

டிஸ்டிங்ஷன் மார்க் வாங்கியும் முதலாண்டுத் தேர்வை மாற்றல் காரணமாக மும்பையில் மே மாதம் எழுத முடியாமல்  வடோதரா போய் அக்டோபர் மாதம் எழுதியதால் “முதல் வகுப்பு” என்று மட்டுமே போட்டிருக்கிறார்களாம். விசாரித்தால், தேர்வு மனுவிலேயே அடியில் குட்டியாக இதுபற்றிக் குறிப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஹூம், நாம் எப்போது அதையெல்லாம் படித்திருக்கிறோம், படித்திருந்தால் மட்டும் என்ன மாறியிருக்கப் போகிறது? 😦

ஆதௌகீர்த்தனாரம்பத்திலிருந்தே வைகுண்ட ஏகாதசி என்பது உள்ளூர்க்காரர்களுக்கு– முக்கியமாக வீட்டுப் பெண்களுக்கு உண்டானதல்ல என்றே இருந்துவந்திருக்கிறது. அப்பொழுதெல்லாம் கோயில் நிர்வாகத்தில் ஏதும் பிரச்சினை இல்லை. ஆனால் ஏகாதசி 20 நாளும் வீடு– ஊர்பேர்கூட தெரியாத விருந்தினரால் ஜேஜே என்று இருக்கும். ‘பெருமாள் சேவிக்க வந்திருக்கோம்’ என்ற ஒற்றைப் பதம் போதுமாயிருந்தது பாட்டிக்கு யாரையும் வீட்டில் தங்க அனுமதிக்க. வருகிறவர்களில் ஆசாரம் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொள்ளாதவர்கள் மற்றும் ‘மாமிக்கு தோஷமில்லை’ என்பவர்களால் பிரச்சினை அதிகமில்லை. வீட்டில் காசு இல்லாவிட்டாலும் இல்லை என்று சொல்லாமல் சமைத்துப் போடும் சாமர்த்தியம் பாட்டிக்கும் அம்மாவுக்கும் இருந்தது.

ஆனால் ஆசாரக்காரர்களுக்கு (ஒருவர் தொட்டு அடுத்தவர் சாப்பிடமாட்டார்கள் என்று) நீண்ட ரேழி முழுவதும் தனித்தனியாக கும்முட்டி அடுப்பு, சருகுத் தொன்னைகளில் அவர்கள் கேட்கிற மளிகைச் சாமான்கள் எல்லாம் எடுத்துத் தருவது, அவர்கள் ‘சுத்தபத்தமாய்’ சமைத்துச் சாப்பிட்டபின் அந்த இடத்தைச் சுத்தம் செய்துவைப்பது, (உண்மையில் 6, 7 குடும்பங்களுக்கு தனித்தனியாக சாமான் வழங்கி சமைக்கவைப்பதைவிட நாமே ஒரே தடவையாக 50 பேருக்கு சமைப்பது சுலபம் என்பது இப்பொழுதைய அம்மாவின் கூற்று.), பாலுக்கு தோஷமில்லை என்று பத்துப் பதினைந்து தடவை காபி போட்டுக்கொடுத்துக்கொண்டேயிருப்பது… “கோவில்ல வேட்டுப்போட்டுட்டானே, சித்த என் புடைவையைமட்டும் பிழிஞ்சு உலர்த்திடேன்டிம்மா, உள்ளூர்க்காரிதானே, உனக்கு இந்த வருஷம் இல்லைன்னா அடுத்த வருஷம்… ரெங்கன் உனக்கு ஒரு கொறையும் வெக்கமாட்டான்” என்று அவசரமாக ஓடிக்கொண்டே அவர்கள் கூறும் ஆசியோடு கூடிய ஆணைகளைச் சிரமேற்கொண்டு கிணற்றில் நீர் இறைத்து,  9 கஜம் சின்னாளப்பட்டுகளையும், 8 முழம் வேட்டிகளையும், துண்டுகளையெல்லாம் தூக்கமுடியாமல் தூக்கித் தோய்த்து, கையால்(?!) பிழிந்து, அவர்கள் ஆசாரம் கெட்டுவிடாமல் மேலே கொடியில் குடும்பவாரியாகப் பிரித்துக் குச்சியால் உலர்த்தி… அரைப்பரிட்சை நெருங்கிக்கொண்டிருக்கும் எங்களை மொட்டை மாடிக்கு அனுப்பி, படிக்கிறதுகளா என்று அவ்வப்போது பார்த்துக்கொண்டு, வழக்கமான வீட்டு வேலைகளையும் செய்துகொண்டு.. பாட்டிக்கும் அம்மாவுக்கும் இதில் தனியாக வைகுண்ட ஏகாதசி, அரையர் சேவை என்பதெல்லாம் எதுவும் கிடையாது. அதிசயமாய் பாட்டி என்னைத் துணைக்கு(?!) கூட்டிக்கொண்டு சில அரையர் சேவைகளுக்குப் போயிருக்கலாம். அம்மாவிற்கு அதுவும் இல்லை. அதிகபட்சமாய் ஒருவர் மாற்றி ஒருவர் மட்டும் இலவசமாய் ஆர்யபடாள் வாசலில் மோகினி அலங்காரம், ஏகாதசி காலையில் மணல்வெளியில் ரத்னங்கி கம் வைகுண்டவாசல், யாராவது பட்டர் அல்லது கோயில்காரர்கள் மிஞ்சிப்போய் பாஸ் கொடுத்தால் கடைசிக்கு முதல்நாள் முத்தங்கி அல்லது கடைசி நாள் நீண்ட வரிசையில் இலவச தரிசனம் என்பதோடு முடிந்துவிடும்.

எங்களுக்கெல்லாம் அந்த 20 நாளும் சமர்த்தாக இருந்து, “பரவாயில்லையே பத்தானி நன்னா வளர்த்திருக்கா பேத்தி பேரன்களையெல்லாம்” என்று பேர் வாங்கிக் கொடுப்பது வருடாந்திரக் கடமை. முக்கியமாய் வைகுண்ட ஏகாதசி 3 நாளில் நம்வீட்டுக்குள்ளேயே நாம் தொலைந்துபோய்விடுவோம்.

Muththangi 9th day

இப்பொழுது அப்படியெல்லாம் இல்லை. யாரும் யார் வீட்டுக்கும் தேவையில்லாமல் செல்வதில்லை, சென்றாலும் அதிக வேலைகள் கொடுப்பதில்லை. பிள்ளைகள் பரிட்சை என்றால் பேசுவதே பிழை. அதனால் ஊர் கொண்டாட்டங்களில் உள்ளூர்க்காரர்களுக்கு அவ்வளவு பிரச்சினை இல்லை. ஆனால் அதிலும் அப்பொழுதைப் போலவே இப்பொழுதும்  பலருக்கு பலவிதமான நடைமுறைச் சிக்கல்கள் இருக்கலாம். முக்கியமாய் கணக்கில்லாமல் பெருகிவிட்ட கூட்டத்தால் கோயிலுக்குச் செல்வது, அவர்கள் விதிக்கும் கட்டணங்களைச் செலுத்துவது பலருக்கு சாத்தியமில்லாமலிருக்கலாம். அதைக் கணக்கில் கொள்ளாமல் நிர்வாகம் மேலும் மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதாகக் கேள்விப்படுகிறேன்.

Govindarajur Rajarethinam
1. ஏகாதசி திருவிழா பகல் பத்து உற்சவத்தில் கிளி மண்டபத்தில் சென்று அரங்கரை தரிசிக்கும் பாக்கியம் மட்டும் கிடைத்து வந்தது. அதற்கும் இந்த வருடம் வந்தது வினை. நாழி கேட்டான் வாசலுக்குள் நுழைவதற்கே இயலாத வண்ணம் முத்தங்கி சேவை தரிசன வரிசையினை வைத்து கிளி மண்டபம் நேரிடையாக செல்லும் பக்தர்களுக்கு தடை ஏற்படுத்தி விட்டது கோவில் நிர்வாகம். ஒவ்வொரு வருடமும் ஏகாதசி திருவிழாவில் உள்ளுரில் உள்ள சாதாரண மக்கள் கலந்து கொண்டு அரங்கரை தரிசிக்கும் நிலையினை எப்பொழுதுதான் நிர்வாகம் ஏற்படுத்தும்? சென்ற அரசில் கூட இந்த அளவிற்கு கட்டுபாடுகள் கெடுபிடிகள் இல்லை என்பது நிதர்சனம் முதல்வருக்கு தெரிந்து இத்தகைய செயல்கள் நடைபெறுகிறதா அல்லது நிர்வாகம் மற்றும் காவல் துறையின் தன்னிச்சையான செயல்பாடுகளா என்பது தெரிய வில்லை.

2. இன்று (8-1-2014) மதியம் ‘திருக்கோவில் அறிவிப்பு’ என்று தெருக்கள் தோறும் டாம் டாம் மூலம் அறிவிப்பு செய்ய பட்டதை கேட்க நேர்ந்தது. ஏகாதசி திருவிழா வின் முக்கிய விழா நாட்களான மோகினி அலங்காரம் மற்றும் ஏகாதசி ஆகிய இரு தினங்களிலும் ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா கோபுரம் தவிர மற்ற இரு திருக்கோவில் நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் அனுமதிக்கபடமாட்டர்கள் என்பதே அந்த அறிவிப்பு. மோகினி அலங்காரம் அன்று கோவில் உள்ளே தரிசனம் செய்ய இயலாத நிலையில் உள்ளவர்கள் மணல் வெளியில் நம்பெருமாள் உலா வரும்பொழுது தரிசிக்க எதுவாக வெள்ளை கோபுரம் மற்றும் தாயார் சந்நிதி கோபுரம் வழியாக சென்று இதுவரை தரிசனம் செய்து வந்த நிலையில் இந்த அறிவிப்பின் மூலம் ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா கோபுர வாயிலில் பெரும் நெருக்கடி ஏற்படும் நிலை உள்ளதை நிர்வாகம் உணர்ந்ததாக தெரிய வில்லை. மேலும் ஏகாதசி அன்று முதல் நாள் இரவில் கோவில் உள்ளே சென்று தங்கி இருந்து சொர்க்க வாயில் வழியாக வர இயலாத முதியவர்கள், குழந்தைகளுடன் உள்ளவர்கள், தாய்மார்கள் அதி காலை திருக்கொட்டகையில் சாதாரா மரியாதையின் பொழுது வெள்ளை கோபுரம் மற்றும் வடக்கு வாசல் கோபுரம் வழியாக ஆயிரக்கால் மண்டபம் வந்து இதுவரை தரிசனம் செய்து வந்த உள்ளூர் மக்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு பேரதிர்ச்சியாக உள்ளது. சொர்க்க வாசல் செல்ல விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா கோபுர வரிசையில் வரிசையில் நின்றது போக நேரடியாக ஆயிரங்கால் மண்டபம் மட்டும் சென்று நம் பெருமாளை மட்டும் தரிசனம் செய்ய விழையும் பக்தர்களும் அதே வரிசையில்தான் நின்று செல்ல வேண்டும் என்பது ஒரே பகுதியில் நெருக்கடி ஏற்படுத்தும் செயலாக உள்ளது. ஆயிரங்கால் மண்டபம் மட்டும் சென்று நம்பெருமாளை மட்டும் தரிசனம் செய்ய விழையும் பக்தர்கள் திருக்கோவில் பக்கம் வர வேண்டாம் என்பதற்கே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என கருதுகிறேன். இது தொடர்பாக திருக்கோவில் நிர்வாகத்தின் சரியான விளக்கத்தினை பெற்று பதிவிட்டால் அனைவருக்கும் நலமாக இருக்கும்.

இவை அங்கிருப்பவர் சொல்லியவை, நான் நேரில் பார்க்கவில்லை. எனினும் அங்கிருக்கும் மற்றவர்களும் சொல்வதை வைத்துச் சொல்ல நினைப்பதெல்லாம்…

மேன்மேலும் பெருகுகின்ற கூட்டத்திற்காக நிர்வாகம் சிலபல மாற்றங்களைச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமே. ஆனால் அதில் சாமான்யர்கள் பாதிக்கப்படாமல், மேலும் பலரும் பயன்பெறும்படி அந்த மாற்றங்கள் இருக்கவேண்டும். அதுவே சிறந்த நிர்வாகமாக இருக்கமுடியும்.

படம்(பகல்பத்து  9ஆம் திருநாள் முத்தங்கி) Sivakumar N Vellala

“எவஞ்சொன்னது, கமல் மரபைக் கட்டுடைப்பவர்ன்னு?” என்று நான் கேட்கமுடியவில்லை.

வழக்கம்போல் “நான் மரபைப் கட்டுடைப்பவனாக்கும்” என்று மீசைமுறுக்கியிருக்கிறார்.  😦

தீபாவளியன்று விஜய் டிவி “காஃபி வித் அனு”வில் கமல் எழுதி வாசித்தது…

கம்பரே வெண்பா கடினம் என்றுதான் விருத்தம் கையாண்டதான முன்னுரையுடன் “கல்லும் சொல்லாதோ கதை” என்ற ஈற்றடி எடுத்துக் கொடுத்தவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்கள்.

 

மகதலினா கல்பட்டும் தேறினளாம் அவளக்காள்
அகலிகையும் கால்பட்டு மீண்டனளாம் – இகமிதிலே
அல்லலுறும் நவயுகத்து நாயகியர் அகமகிழக்
கல்லும்சொல் லாதோ கதை.

[*முதல் வார்த்தை இன்னதென்று விளங்கவில்லை. என்  சிற்றறிவை  வைத்துக்கொண்டு அனுமானிக்கவும் முடியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும். (இரா.முருகன் அருளால் கிடைத்துவிட்டது.. நன்றி.) தனிச்சொல் ‘இகமிதிலே’ பேராசிரியரால் பாராட்டப்பட்டது.]

 

ஆத்தமா னார்(அ)யலார் பள்ளிப் பறித்தெடுத்து
மூத்தவர்யா மெனக்கூறி அமர்ந்திருக்கும் சூத்திரத்தைச்
சொல்லின்றிக் கூறிவிடும் பழங்கோயில் கேட்டுப்பார்
கல்லும்சொல் லாதோ கதை.

[“ஆத்தமானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்..” என்ற திருவாசக அடியிலிருந்து தான் எடுத்தாண்டதாக கமல் கூறினார்.]

 

ம்ம்ம்.. நல்ல முயற்சி. வெண்பா அதிகம் தெரியாமல் ஆனால் ஓசைநயத்திலேயே சரியாக எழுதுபவர் என்று கமலை பேராசிரியர்  அறிமுகப்படுத்தினார். அப்படிப்பட்ட கமல் கொஞ்சம் மோனையிலும் கவனம் செலுத்தியிருக்கலாமோ… (இப்ப ரொம்ப முக்கியம்!)

 

எத்தனை இடங்களில் பிரிக்கமுடியுமோ பிரித்துவிட்டேன்; அத்தனையும் மீறி இத்தனை இடங்களில் தளைதட்டிய ஒன்றை வெண்பா என்று பேராசிரியர் பாராட்டித் தள்ளினார். இவர்கள்தான் கமலின் வளர்ச்சிக்குப் பிரச்சினை.

 

* சமீபமாக புகழ்ச்சிகளில் நெகிழ்கிற கமலைப் பார்க்கக் கவலையாக இருக்கிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் பாராட்டப்படும் சிறுவர்கள்போல் நடந்துகொள்கிறார்.

* தொ.பரமசிவன் என்கிற தொ.ப எழுதிய ‘மனிதர்களின் தெய்வங்கள்’ குறித்து சிலாகித்தார். வாங்கிப் படிக்கவேண்டும்.

* கடவுளை மொத்தமாக மறுக்கும் நாத்திகர்- வெங்கடாஜலபதியிலிருந்து வெக்காளி, இசக்கிவரை- என்று நான் நினைத்துக்கொண்டிருக்க, ‘அவனோட’ சாமியை ‘அவனை’க் கும்பிட அனுமதிக்கவேண்டும் என்றார். பெருந்தெய்வங்களையும் (தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்னு சொல்வாங்க.. ஆனா அவரைப் பார்க்க திருப்பதிக்குதான் வரச்சொல்வாங்க) பெருவழிபாடுகளையும் (தொப்பையில் காலணாவை வைத்து வீட்டுக் கிணற்றிலேயே தூக்கிப்போட்டுவந்த பிள்ளையாருக்கு பிரமாண்டப் பெருவிழா எடுக்கக் கிளம்பியிருப்பது) மட்டுமே புறக்கணித்தார். டிபிகல் இணைய நாத்திகவாதம். ஏமாற்றம்.

* மதம் அவரவர் படுக்கையறைச் சமாசாரம் மாதிரி; அவரவரோடு அந்தரங்கமாக முடிந்துவிட வேண்டியது என்று சொன்னவர், தான் மட்டும் எப்பொழுதும் பொதுவில் அவருக்குகந்த உடையை படுக்கையறையிலேயே  நிறுத்திக்கொள்ளாமல் (கருப்பு; அதுவும் இந்தமுறை படுகேவலமான டிசைனில் இருந்தது.) ஏன் வரவேண்டும்; இவரும் நாத்திகத்தை மனதுக்குள் அந்தரங்கமாக வைத்துக்கொண்டு, வெளியே பொதுவில் வண்ணமயமான ஆடைகளில் வரலாமே என்ற என் ஆதங்கத்திலிருந்து இன்னும் கேட்க/சொல்ல நினைக்கும் பல விஷயங்களைச் சொல்லாமல் விடுவதற்கு என் கமலபிமானம் மட்டுமே காரணம் என்று யாரும் (சரியாகக்) கணக்குப் போடவேண்டாம். தயவுசெய்து என் வழமையான சோம்பேறித்தனம் மட்டுமே காரணம் எனக் கொள்ளவும்.

எச்சரிக்கை: இந்தப் பதிவிற்கு, “உங்காளை முதல்ல அடுத்தவனுக்குப் புரியற மாதிரி பேசச்சொல்லு”, “I am not surprised. கமலுக்கு உளறிக்கிட்டே இருக்கணும்” மாதிரி மறுமொழிகள் [என்மீதான  :))] தனிநபர் தாக்குதலாகக் கருதப்பட்டு கடுமையாக மட்டுறுத்தப்படும். ஏற்கனவே வீட்டில் கேட்டுக்கேட்டு கோபத்தில் கொலைவெறியில் இருக்கிறேன். எரிச்சலில் எக்குத்தப்பாக எங்காவது யந்திரன் படத்திற்கு ஏடாகூட விமர்சனம் எழுதிவிடும் அபாயம் இருப்பதால்…

தேவையான பொருள்கள்:

மைதா – 2 கப்
வெண்ணெய் – 100 கிராம்
பேக்கிங் பவுடர் – 1/4 டீஸ்பூன்
சமையல் சோடா – 1 சிட்டிகை
தயிர் – 2 டீஸ்பூன்
சர்க்கரை – 4 கப்
தண்ணீர் – 2 கப்
எலுமிச்சைச் சாறு
ஏலக்காய் – 5 (அல்லது வேறு எசென்ஸ்)
கேசரிப் பவுடர் அல்லது வேறு கலர் – விரும்பினால்

 

செய்முறை:

  • ஒரு அகலமான பாத்திரத்தில் மைதாவுடன் பேக்கிங் பவுடர், சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்..
  • வெண்ணெய், (ஃப்ரிட்ஜில் இருந்தால் அறைச்சூட்டிற்குக் கொண்டுவரவும்.) தயிர் சேர்த்து நன்கு கையால் பிசிறவும்.
  • தேவைப்படும் அளவு மட்டும் (மிகக் குறைவாகவே தேவைப்படும்.) தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்திற்குப் பிசைந்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு நன்கு அடித்துப் பிசையவும். நல்ல பாடல் கேட்டுக்கொண்டே*** செய்தால் சிரமம் தெரியாது.
  • பிசைந்த மாவை அப்படியே பத்து நிமிடங்களுக்கு வைத்துவிட்டு அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஜீரா தயாரிக்கவும்.
  • சர்க்கரை கரைந்து கையில் ஒட்டும்பதம் வரும்போது (பாகுப் பதம் வந்துவிடக் கூடாது.) அடுப்பை அணைத்து, ஏலப்பொடி, எலுமிச்சைச் சாறு, விரும்பினால் நிறப்பொடி கலந்து ஆறவிடவும்.
  • (பாதுஷாவின் உருவம் அவரவர் விருப்பம்தான். எனவே நான் படத்தில் உள்ளபடி செய்திருப்பதை மட்டும் சொல்கிறேன்.) பிசைந்துவைத்துள்ள மாவில் பாதியை எடுத்து தடித்த சப்பாத்தியாக உருட்டிக்கொள்ளவும்.
  • ஒரு வட்ட மூடியை எடுத்து சப்பாத்தியில் வட்டங்களை வெட்டிக்கொள்ளவும். வட்டங்கள் தவிர்த்து பிற மாவை நீக்கிவிடவும்.
  • இன்னொரு உள்வட்ட மூடியால் அந்த வட்டங்களின் நடுவே லேசாக மேலாக அழுத்தவும். (அடிவரை அழுத்தி உடைத்துவிடக் கூடாது.) ஒரு பிளாஸ்டி ஃபோர்க்கால் வெளிப்பகுதியில் கோடுகளும், உள் வட்டத்தில் புள்ளிகளும் அதிகம் அழுத்தாமல் குத்திக்கொள்ளவும். இப்படியே மொத்த மாவையும் தயாரித்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும், ஒரு சிறு உருண்டையைப் போடவும். உருண்டை கொதித்து, பொரிப்பொரியாக மேலே வந்தால் அதுவே எண்ணெய்ச் சூட்டின் சரியான பதம்.
  • அடுப்பை அணைத்துவிட்டு ஒவ்வொரு பாதுஷாவாக- சுமார் ஏழு அல்லது எட்டு-  மெதுவாக எண்ணெயில் போடவும். போட்டவுடனே அடியில் போய், பின் ஒவ்வொன்றாக மேலே வர ஆரம்பிக்கும்.
  • எல்லா பாதுஷாவும் மேலே வந்துவிட்டதா என்று சரிபார்த்தபின்பே அடுப்பைத் திரும்ப எரியவிட்டு சிம்மில் வைக்கவும்.
  • பொறுமையாக அவ்வப்போது திருப்பிவிட்டு நிதானமாக  இரண்டு பக்கமும் பொன்னிறமாகும்வரை வேகவிட்டு எடுக்கவும். 
  • சில நொடிகள் வடிதட்டில் வைத்து எண்ணெயை வடித்துவிட்டு சூட்டுடனே, ஆறிய பாகில் மெதுவாகப் போடவும்.
  • பதினைந்து இருபது நிமிடங்கள் நன்கு ஊறி, பாதுஷா மிருதுவானவுடன் வேறு பாத்திரத்தில் எடுத்துவைக்கவும்.
  • 

* விரும்பினால் பாகின் பிசுபிசுப்பு ஆறுவதற்குள் பாதுஷாக்களின் மேல் பொடிப்பொடியாக உடைத்த முந்திரி, பாதாம், பிஸ்தா, வெள்ளரிவிதை, குங்குமப்பூ போன்றவற்றைத் தூவலாம்.

* மேல் அலங்காரங்கள் இல்லாமல் சாதாரண வட்ட பாதுஷாவேகூட செய்துகொள்ளலாம். அது அதிக அளவில் செய்யும்போது வேகமாகச் செய்யவும் உதவும். ஆனால் அவற்றிலும் டூத்பிக் அல்லது ஃபோர்க்கால்- அடிவரை அழுத்தாமல்- மேலாகப் புள்ளிகள் குத்திக்கொள்வது அவசியம். இது எண்ணெய், ஜீரா உள்ளேபோய் முறையே நன்குவேக, சுவையைக்கூட்ட உதவும்.

* மீதமிருக்கும் ஜீராவை பாதுஷாக்களின் மேலாக இன்னும் கொஞ்சம் விடலாம். ஆனால் மீதியிருக்கிறது என்பதற்காக மொத்த ஜீராவையும் அளவுக்கு அதிகமாக விட்டுவிடக் கூடாது. அப்படிச் செய்தால் ஆறியதும் பூத்தாற்போல் இருக்கும் பாதுஷாக்கள் மேலே பாளம் பாளமாக  வெள்ளையாக- அதிகமான ஜீரா தனியாக வந்து சுவையைக் கெடுக்கும். ஜீரா தேவையான அளவு மட்டும் விட்டால் சரியாக பாதுஷாமேல் வெள்ளையாகப் பூத்துக்கொண்டு அழகாகவும், உண்பவருக்கு ஓவர் சர்க்கரை என்ற பீதியில்லாமலும் இருக்கும். ஜீரா மீதமிருந்தால் பாயசம் செய்ய உபயோகிக்கலாம்.

*** இப்பொழுதெல்லாம் பாடல் கேட்கும்போது அதை ரசிக்கமுடியாமல், இளையராஜா, “நீ நல்லவளா கெட்டவளா?” என்று கேட்டுப் போகிறார். [“யாரோ உழைக்க யாரோ அனுபவிக்கறாங்க. ஓசியில டவுண்லோடு பண்ணி இதமா கேக்குறீங்களே… அதெல்லாம் யாரோட உழைப்பு? மனசாட்சியைக் கேளுங்க, பண்றது நியாயமான்னு?” – இளையராஜா, குங்குமம் 08/11/2010 😦 ]

மரத்தடி ஆண்டுவிழாப் போட்டி – 2004 க்கு எழுதி மூன்றாம் பரிசு வென்ற வெண்பா (மரபுக் கவிதை)
சுஜாதா சொன்னதற்காக (மட்டும்) ஈற்றடி சற்றே மாற்றியமைக்கப்பட்டது.

-0-

அள்ளி யணைத்தவளு(ம்) அன்னையுமோர் பெண்ணாக
உள்ளில் உயிர்த்த உறவுமட்டும் பெண்ணாகில்
கள்ளிப்பா(ல்) ஊட்டியே காரியம் தீர்ப்பவரைத்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

விந்தைபல கற்றறிந்து விண்ணேர் பருவத்தில்
கந்தக வாசமுடன் கார்துடைத்து சேய்வளர்த்து
கள்ளம் பயின்றுக் கருகிடும் பிஞ்சுகளைத்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

செல்வம் இருக்குமிடம் சேருதிங்கே கல்வியுமே
அல்லாத மானிடர்க்கோ ஆறாக் கொடுமையிது
பள்ளியிலே வாணியைப் பண்டமென விற்பவரைத்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

கல்வியு(ம்) ஆர்வமும் காரியத்தில் நேர்த்தியுடன்
வெல்திறமை கொண்டோரை வீணர்கள் செல்வாக்கால்
மெள்ளவவர் கீழ்தள்ளி மேல்வந்து நிற்பாரேல்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

காதலிலே கட்டுண்டு காதைபல பேசிப்பின்
வாழ்தலென்ற பேச்சுவரில் வக்கணையாய்க் காரணங்கள்
பிள்ளைக் கடனிங்கே பெற்றோர்சொல் கேளலென்பர்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

திருமகளாய் வீட்டில் திகழ்ந்திருக்கும் பெண்ணின்
கருமங்கள் சொல்வ(ர்),அவள் கற்பின் நெறிகளும்;பின்
கள்ளத் தொடுப்பினில் காரிகைகள் தான்கொள்வர்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

வாங்கிடு(ம்) ஊதியத்தை வங்கியிலே சேர்த்தபின்னும்
வீங்கிடு(ம்) உள்பையும் வெட்கமின்றி கர்ப்பம்பார்
கொள்ளத் தயங்கார் குடிகளிடம் லஞ்ச(ம்);அவர்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

கொள்ளை யடிப்பர்தான் கொண்ட தொழிலிலே
உள்ளத்தி(ல்) ஆர்வம் உழைப்புடன் நேர்மையின்றி
கள்ளத் தனம்செய்வர் காரியத்தில் சோம்பிடுவர்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

அதிகாரம் பெற்று(ம்)இல்லை ஆணையிடும் வீரம்
மதியில்லா மந்திரிகள் மாண்புமிகு பாதத்தில்
வெள்ளப் புயல்மரமாய் வேரோடு சாய்வாரைத்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

எண்ணக் கனவுக(ள்) இங்கே யடுக்கினேன்
வண்ண மிதற்கெலாம் வார்ப்பா(ய்) அறிவேன்;நான்
சொல்லிய வண்ணஞ் செயப்போகும் நீயேவிவ்
வெல்லுஞ் சமூகத்தின் சாவி.

எத்தனைபேருக்கு Google Knol குறித்துத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை என்றாலும் இத்தனை நாள் கழித்தாவது அதுகுறித்துச் சொல்லவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.

கூகிள் எத்தனையோ புதிது புதிதாக அறிமுகப்படுத்தினாலும், மாநில மொழிகளைத் தட்ட ஒன்றை அறிமுகப்படுத்தும்போது அது சமையல்குறிப்புப் போட்டியைத் தேர்ந்தெடுத்ததுதான் என்னையும் திரும்பிப்பார்க்கவைத்தது என்று சொன்னால் அது மிகையான பொய். அப்படி ஒரு நிகழ்வையே எனக்கு அறிமுகப்படுத்திய பெருமை பிரகாஷைச் சேரும். வழமைபோலவே ஒருமுறை திறந்துபார்த்து இதெல்லாம் போரடிக்கும்வேலை என்று ஒதுக்கிவிட்டாலும் சஞ்சவ் கபூர் என்ற பெயர் கொஞ்சம் உறுத்திக்கொண்டே இருந்ததும் உண்மை.

திடீரென்று 19-ஆம் தேதி மாலை ஞானோதயம் வந்து (மாதக் கடைசிநாளான 30-ஆம் தேதி தான் பொதுவாக போட்டிகள் முடியும் என்ற பொதுப்புத்தியில்) இன்னும் 10 நாளைக்குள் ஏதாவது தட்டி அனுப்பிவைக்கலாம் என்று திறந்துபார்த்தால் 20-ஆம் தேதியே கடைசி. :(( இன்னும் ஒரு நாளைக்குள் ஏதாவது செய்யலாம் என்று நினைக்கமுடியாதவாறு அன்று மும்பையில் பாலமுரளிகிருஷ்ணா கச்சேரி. சஞ்சீவ் கபூரை பாமுகி வென்றார்.

மறுநாள் கச்சேரி hangover முடிந்து பெட்டி திறக்கும்போது பத்துமணிநேரத்துக்குள் எதுவும் செய்யக்கூடுமாறு உடலும் மூளையும் ஒத்துழைக்கவில்லை. தடக்கென்று ஒரு யோசனை. என் புகைப்படங்கள் கோப்பை திறந்து பல நாள்களாக எழுதவேண்டும் என்று எடுத்துவைத்து, எழுதாமலே விட்டுப்போயிருந்த காமாசோமா ஐட்டங்களை எல்லாம்– google knol பக்கமே தமிழில் தட்டத்தான் என்றாலும் (நமக்கெதற்கு அதெல்லாம்?)– கலப்பையில் தட்டித் தட்டி வெட்டி ஒட்டித் தள்ளினேன். படம் எடுக்காமல் வெறுமே குறிப்பு மட்டுமே தட்டி வைத்திருந்தவைகளையும் சேர்த்துக்கொண்டேன். ஒரு போட்டி என்று தெரிந்தும் மிகச் சாதாரணமான குறிப்புகளை அனுப்பி ஜட்ஜை கேவலப்படுத்துவதற்காக ஒரு மானசீக மன்னிப்பும், “ஆமா, இதெல்லாம் அவங்க இங்லீஷ்லயோ ஹிந்திலயோ ட்ரான்ஸ்லேட் பண்ணி படிச்சா பார்க்கப் போறாங்க? வேற யாராவது இதெல்லாம் தேர்ந்தெடுப்பாங்களா இருக்கும்,” என்று மனதுக்குச் சமாதானமும் சொல்லிகொண்டேன்.

கூகிளிடமிருந்து, போட்டியில் பங்கேற்றதற்காக நான் மேற்கொண்ட சிரமங்களுக்கு (பின்ன?) பாராட்டும் நன்றியும், எனக்குப் பரிசு கிடைக்காததற்கு வருத்தமும்(ஓ!) தெரிவித்த உணர்ச்சிக்கலவையான கடிதக் காவியம் கிடைத்தது. பரிசுகிடைத்த குறிப்பை நான் செய்துபார்த்தே தீரவேண்டும் என்று ஓடோடிப் போய் பார்த்ததில் அது ‘மதுரை கோழி சூப்’. ஆஹா, தோற்றது நாமானாலும் ஜெயித்தது நமது மதுரை மண் என்று புளகித்துப் போனேன். அப்படி ஒரு சம்பவம் நடந்ததையே வீட்டில் மறைத்தும் மறந்தும் சந்தோஷமாக இருந்துவந்தேன். அப்படியே இருந்திருந்தால் எல்லாம் நன்றாக இருந்திருக்கும்.

ஒரு நல்லநாளில், குடும்பமே விடுமுறையை அனுபவித்து குஷியாக கும்மாளமிட்டுக்கொண்டிருந்த நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளில் ஒன்றாக என் ஒரு குறிப்பும் (அது எது என்று கடைசிவரை கூகிள் சொல்லவில்லை.) இருப்பதாகச் சொல்லி ஒரு டீஷர்ட்டை பார்சல் அனுப்பிவைத்திருந்தார்கள். பரிசே கிடைக்காததைவிட கொடிது ஆறுதல் பரிசு பெறுவது என்பது என் சித்தாந்தமானாலும் அன்றுதான் அதன் பலனை நேரில் கண்டு நொந்தேன். அதுவரை சஞ்சீவ் கபூர் என்ற பெயர் ஆகாத ஒன்றாக இருந்ததுமாறி கோவிந்துக்கு அந்தப் பெயர் ஒரு புத்திசாலியினுடையதாகவும், எதையும் சரியாக எடைபோடத் தெரிந்தவருடையதாகவும் போனதில் வியப்பெதுவுமில்லை.

ஆனால் நானே அதையெல்லாம் புறக்கணித்து, என் தோல்வியை(மட்டும்) பிரகாஷுக்கு சமர்ப்பணம் செய்துவிட்டு, இந்த டீஷர்ட்டை எந்தப் பேண்டுக்கு மேட்ச் ஃபிக்சிங் செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்ததை, தோல்விக்கான வருத்தமான போஸ் என்று நினைத்து, வழமையாக இதுபோன்ற தருணங்களில் அப்பாவுடன் சேர்ந்து கன்னாபின்னாவென்று காலைவாரும் பெண், “நீ தோக்கலைம்மா.., உன் ரெசிப்ப்பி தோத்துப் போச்சு!…” என்று என்னைத் தேற்றி ஆற்றுப்படுத்தியதற்கும், அடுத்தநிமிடமே நான் நிமிர்ந்துபார்த்தபோது அந்த டீஷர்ட் அவளுடைய வார்ட்ரோபிற்குள் போய்விட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இன்னமும் என்னால் நம்பமுடியவில்லை.

அடுத்த பத்துநாளில் என் மெயில்பெட்டிக்கு ஒரு செய்தி. “உங்கள் குறிப்புகள் பத்தாயிரத்துக்குமேல் பார்வையிடப்பட்டு இருக்கிறது. நீங்கள் எந்த மொழியில் எழுதுகிறீர்கள்?” என்று மொழியே தெரியாதவரிடமிருந்து ஒரே ஒரு மறுமொழி. “அடக்கொடுமையே இன்னுமா இந்தச் சமுதாயம் சமையல்குறிப்பு படிச்சு சீரழிஞ்சுகிட்டிருக்கு?!” என்று பெரிய இலக்கியவாதி, முற்போக்கு மாதிரி விசனப்பட்டுத் திறந்துபார்த்தால் எல்லாப் பதிவுகளும் 200, 300 என்று வட்டமான எண்களையே ஹிட் எண்ணிக்கையாகக் காண்பித்தன. மொத்தம் 11 ஆயிரத்துச் சொச்சம் ஹிட் என்று சாத்தியமில்லாத ஒன்றைக் காட்டிக்கொண்டிருந்தது. [சமையல் குறிப்பை அடியோடு வெறுத்த (சுஜாதா)சாரிடம் ஐயங்கார் புளியோதரைக்கு 10000 ஹிட் ஆனதும் சொல்லிக் கடுப்படிக்க நினைத்தேன். நடக்கவில்லை. :(( அன்றாடம் உச்சத்திலேயே இருக்கும் ஐயங்கார் புளியோதரையின் ஹிட்டே இந்த 3 வருடங்களில் 17 ஆயிரத்துச் சொச்சத்தில்தான் இருக்கிறது என்ற முரணையும் சொல்லவேண்டியிருக்கிறது.) இதுகுறித்து பலமுறை நினைத்தும் எழுதமுடியாமல் போய்விட்டது.

அது ஆயிற்று கிட்டத்தட்ட 10 மாதங்கள். இன்று ஒருவர் ‘திரளி அடை’ குறித்துத் தேடி என் வலைப்பதிவை வந்தடைந்த மறுமொழி கேட்டு நானே நினைவுவந்து அங்கே போய்ப் பார்த்தால் மொத்த ஹிட் 72016 என்றும் தனிப்பட்ட முறையில் பதிவுகளுக்கான ஹிட் எல்லாம் 1000, 2000, 3000… என்று போகிறது. ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் மாதிரி கூகிளைத் தெரிஞ்சுகிட்டேன்.

நீதி: அலட்டிக்கொள்ளாமல் ஹிட் அதிகம் காட்ட, அணுகவேண்டிய முகவரி, Google Knol.

பி.கு: ஊருக்குப் போய்விட்டு வந்தபின் என் அந்தச் சமையல் குறிப்புகளை இங்கே போடுவேன்.

நாமளே ஏதோ அள்ளித் தெளிச்ச கோலம். காலை அவசரம் என்றால் என்னவென்று மும்பைக்காரர்களுக்குத்தான் தெரியும். ஆறரை மணிக்கு இரண்டுபேரையும் வெளியில் தள்ளுவது சாதாரண விஷயமில்லை. வீட்டுக்குள்ளேயே எதிரில் ஒருவரை ஒருவர் பார்த்தால்கூட பேசிக்கொள்ள மாட்டோம். ஃபோன் வந்தால் ஒருவரை ஒருவர் முறைத்துக்கொள்வோம். வலைப்பதிவுக்காக எந்த தொழில்நுட்பக் குறிப்பும் தெரியாமல், கோணம், வெளிச்சம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கோணல்மாணலாக ஒரு க்ளிக் எடுக்கவே அடித்துப் பிடித்து மூன்று முழு நிமிடங்கள் செலவழித்து (கேமிராவை வெளியே எடுக்க, புகைப்படம் எடுக்க, திரும்ப அதனிடதில் வைக்க) பேருக்கு படம் என்று ஒன்று (bsubra மாதிரி நேயர்களுக்காக) எடுத்துப் போட்டுவருகிறேன். உண்மையில் அந்த மூன்று நிமிடம் கூட பல நேரங்களில் கிடைக்காமல்தான் பல படங்களும், அதனால் பல பதிவுகளும் ஏற்றமுடியாமல் நின்றுபோகிறது. எல்லாப் படங்களுக்கும் பின்னால் உற்றுக்கேட்டால்,

“இன்னிக்கு 6:40 டிரெயின் மிஸ் பண்ணப்போறேன்”
“என் வாட்டர் பாட்டில் இன்னும் வைக்கலை”
“எல்லார் வீட்டுலயும் சாமிக்கு நைவேத்தியம் பண்ணுவாங்க; நம்ப வீட்டுல கேமராவுக்கு”
“அவனவன் படம் பாக்கறதோட தப்பிச்சுடறாங்க. நமக்குத் தான் கொடுமை”

மாதிரி முணுமுணுப்பு, சிணுங்கல், சண்டை என்று வகைவகையாகக் கேட்கலாம். சரி, நம்ப பிரச்சினை நமக்கு.

-0-

சென்ற முறை ஸ்ரீரங்கம் போயிருந்தபோது யதேச்சையாக அம்மா அடுக்கியிருந்த புத்தகங்களிலிருது மெலிதாக ஒன்றை– பெண்கள் மலர் என்று போட்டிருந்தது, நானும் பெண்தானே– எந்த சுவாரசியமும் இல்லாமல் எடுத்துப் புரட்டினேன். ஏதோ தினசரியின் இணைப்புப் புத்தகம். சமையல் குறிப்பு பக்கத்தில் படம்.. ரொம்ப பரிச்சயமானதாக… அட என் இந்த வலைப்பதிவிலிருந்து எடுத்தது. கொஞ்சம் ஆர்வமாக அதே பெயரில் இருக்கும் இன்னும் சில புத்தகங்களைப் புரட்டினால் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இந்த வலைப்பதிவுப் படங்கள். மாதிரிக்கு ஒரு பக்கத்தை மட்டும் புகைபடம் எடுத்துக்கொண்டு வந்தாலும், வந்தபின் கணினி பழுதானதில் இங்கே பதியும் அளவுக்கு அந்த விஷயம் பின்பு தீவிரம் குறைந்துவிட்டது.

peNgaL malar

இதிலிருக்கும் படங்களுக்கான இந்த வலைப்பதிவின் சுட்டிகள்…
 

 https://mykitchenpitch.wordpress.com/2007/09/11/inippu-kozhukkattai-vinaayagar-chathurthi/

https://mykitchenpitch.wordpress.com/2007/10/17/payaththam-paruppu-kadalai-paruppu-sundal-navaraaththiri/

-0-

தட்ஸ்தமிழ்.காம் feederல் வைத்துப் படிப்பது அதன் உடனடி செய்திகளுக்காக. எப்பொழுதாவது தலைப்பு ஆர்வம் எடுத்து உள்ளே சொடுக்கினால் படுகேவலமான பின்னூட்டங்களால் நிரம்பிவழியும். கொஞ்சம் இழப்பாக இருந்தாலும் அவர்கள் மறுமொழி மட்டுறுத்தல் வைக்காமல் இனி திறப்பதில்லை என்று பிடிவாதமாக படிப்பதை நிறுத்திவிட்டேன். அப்போது திடீரெனக் கிடைத்தது அதற்கு இணையாக அல்லது அதைவிட அருமையாக tamilvanan.com  லேனாவின் ஒருபக்கக் கட்டுரைகளை விரும்பிப் படிப்பேன். ஒரு சமயம் என் மாமா சிரத்தையாக அவைகளைத் தொகுத்து எடுத்துவைத்து எனக்குக் கொடுத்திருக்கிறார். இணையத்திலேயே கிடைப்பதற்காக சென்றவாரம் மிகவும் மகிழ்ந்துபோனேன். அப்புறம்தான் வரிசையில் சமையல்குறிப்பும்வர அதில் நான் எடுத்தபடம். சந்தேகப்பட்டு கீழே இருக்கும் வேறு சில பழைய குறிப்புகளையும் சுட்டிப் பார்த்தால் பல இடங்களில் இந்த வலைப்பதிவிலிருந்து எடுத்த படங்கள். இரண்டை மட்டும் மாதிரிக்கு கீழே இந்த வலைப்பதிவின் சுட்டிகளுடன் கொடுத்திருக்கிறேன்.

tv_vatralkuzhambu tv_chettinadu

http://www.tamilvanan.com/content/2009/02/27/samayal-6/
https://mykitchenpitch.wordpress.com/2007/04/18/vatral-kuzambu-2-manaththakkaali-vaththak-kuzambu/

http://www.tamilvanan.com/content/2008/11/07/20081107-chettinadu-samayal/
https://mykitchenpitch.wordpress.com/2007/08/08/paagarkkaai-curry/

-0-

‘அம்மாவின் சமையல்’ என்ற பெயரில் ஒரு வேர்ட்பிரஸ் பதிவு (எனக்குப்)புதிது. டேஷ்போர்டில் பார்த்துவிட்டு ஆர்வமாக உள்ளே போனால் முதல் பக்கத்திலேயே என் படங்கள் முகத்தில் அறைகின்றன.

top10_paavakkai kuzhambu top10_vaazhaiththandu

http://top10samayal.wordpress.com/2009/02/12/bitter-guard-kuzhambu/
https://mykitchenpitch.wordpress.com/2007/08/08/uppuchchaar-1/

http://top10samayal.wordpress.com/2009/02/17/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/

https://mykitchenpitch.wordpress.com/2008/03/29/vaazhaiththandu-mor-koottu/

 

இப்போதெல்லாம் படங்களில் top10samaiyal என்ற லேபிளுடனேனே வருகின்றன என்பது கூடுதல் ……

top10_morkuzhambu

http://top10samayal.wordpress.com/2009/03/06/morkuzhambu/
https://mykitchenpitch.wordpress.com/2008/04/01/mor-kuzhambu/

 

இன்றைக்குப் பார்த்த பதிவில் கொஞ்சம் பெரியதாகவே லேபிள்….

top10_potato fry

http://top10samayal.wordpress.com/2009/03/20/potato-fry/
https://mykitchenpitch.wordpress.com/2007/02/07/chinna-urulai-kizangu-roast/

வாழ்க!

பி.கு: பல ஆங்கிலப் பதிவுகளில் அறிவிக்காமலே என் படங்களைப் பார்த்ததால் தான் வலப்பக்கம் நிரந்தரக் குறிப்பு 1 சேர்த்தேன். அப்புறமும் தமிழ் (படிக்கத்) தெரியாதவர்கள் எடுத்துப் போட்டுக்கொள்கிறார்கள் என்று விட்டுவிடுவேன்.

ஃபீலிங்ஸ் என்று ஒரு புது ‘வகை’  ஆரம்பித்து இந்தப் பதிவைச் சேர்த்திருக்கிறேன். ஆனாலும் என் ஃபீலிங்ஸ் என்ன என்று எனக்கே தெரியவில்லை. 😦