பொது


சேவை என்பது ப்ரும்மப் பிரயத்னமாக இருந்த காலத்திற்குப்பின் இன்ஸ்டண்ட் சேவை வந்து வாழ்க்கையை சுலபமாக்கியது. இது ஒரிஜினலுக்கு ஈடே ஆகாது என்றாலும் நிச்சயம் புறக்கணிக்கக் கூடியதும் அல்ல. எப்பொழுதும் Concord சேவை(200 கிராம் 20 ரூபாய்) உபயோகித்துக் கொண்டிருந்தேன்.

MTR Rice Sevai

இப்போது புதிதாக MTR நிறுவனத்தினர்  With Low Glycemic Index என்கிற லேபிளோடு புதிதாக ஒரு இன்ஸ்டண்ட் சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். 200 கிராம் பாக்கெட் 18 ரூபாய். Glycemic Index தொடர்புடைய ஒரு பதிவு.

Concord நன்கு கொதித்த நீரில் ஐந்தாறு நிமிடங்கள் மூடிவைத்து, பின் நீரை வடிக்க வேண்டும், இதில் 5 நிமிடங்கள் அடுப்பிலேயே கொதிக்கவைத்து நீரை வடிக்கவேண்டும் என்பது தவிர இரண்டுக்கும் தயாரிப்பில் அதிகம் வித்தியாசம் இல்லை.

எந்த சேவையாக இருந்தாலும், சேவை தயாரித்தபின் நமக்கு விருப்பமான வகையில் தேங்காய் சேவை, எலுமிச்சை சேவை, புளி சேவை, தயிர் சேவை போன்றவைகளைத் தயாரித்துக் கொள்ளலாம். எல்லாம் தயாராக இருந்தால் ஒரே பாக்கெட்டில் அரை மணி நேரத்தில் நான்கு வகை சேவைகளை குடும்பத்தினர் விருப்பத்திற்கிணங்க செய்துவிடலாம்.

arisi sevai (plain)puLi sevai

elumichchai sevaithEngaai sevai

எல்லாவற்றிலும் எனக்குப் பிடித்தது, சேவையை எதனோடும் கலக்காமல் அப்படியே சுடச் சுட இருக்கும்போது ஒரு டீஸ்பூன் பச்சைத் தேங்காயெண்ணெய் மட்டும் கலந்து மோர்க் குழம்பு அல்லது காரம் சேர்த்த தயிர்ப் பச்சடியுடன் சாப்பிடுவது.

இவர் நம்மாளு உக்காரையின் உடன்பிறந்த சகோதரர் தான். உப்பில் செய்வது. இவர் சுவையில் இனிப்பையே மிஞ்சுவார். ஒரே நாளில் இரண்டையும் செய்வது சுலபமாக இருக்கும்.

தேவையான பொருள்கள்:

பயத்தம்பருப்பு – 2 கப்
கடலைப்பருப்பு – 1/2 கப்
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்

வறுத்துப் பொடிக்க:
தனியா – 2 டேபுள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
க.பருப்பு- 2 டேபிள்ஸ்பூன்
உ.பருப்பு- 2 டேபிள்ஸ்பூன்
 

தாளிக்க: கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை
 

seeyaalam 1seeyaalam 2

செய்முறை:

  • பருப்புகளை நன்கு களைந்து 4 மணிநேரம் ஊறவைத்து சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக- மிக நன்றாக இட்லிமாவுப் பதத்தில் முடிந்தால் கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த மாவை இட்லித் தட்டுகளில் இட்டு வெயிட் போடாமல் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
  • வேகவைத்த இட்லிகளை சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணையைச் சூடாக்கி, மிளகாய், தனியா, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு இவற்றை சிவக்க வறுத்து நைசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  • மீண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, புளியை சற்று நீர்க்கக் கரைத்துவிட்டு, உப்பைப் போடவும்.
  • புளித்தண்ணீர் நன்றாகக் கொதித்தவுடன் இட்லித்துண்டுகளைப் போட்டு நன்றாகக் கிளறவும்.
  • தண்ணீர் நன்றாக வற்றியபின்(அநேகமாக இட்லித் துண்டுகள் நீரை உறிஞ்சிவிடும்.) அரைத்துவைத்துள்ள மசாலாப் பொடியைப் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

seeyaalam 3

* சூடாகச் சாப்பிடவே சுவையாக இருக்கும். ஆனாலும் இந்தச் சீயாளம் மூன்று நான்கு நாள்கள் வரை கெடாது.

* இந்த ‘எங்கள் பக்கத்தி’லேயே ஒரு பக்கத்தில் சீயாளத்துக்கு 1 பங்கு பயத்தம் பருப்பும், 1 பங்கு கடலைப் பருப்பும் போட்டு அரைக்க வேண்டும் என்று சொல்வார்கள். முழுவதுமே பயத்தம் பருப்பிலேயே கூட சிலர் செய்வார்கள். அதெல்லாம் நம் இஷ்டம்தான். பொதுவாக, கடலைப் பருப்பு அதிகம் இருந்தால், நிறைய சீயாளம் காணும். பயத்தம் பருப்பு அதிகம் இருந்தால் நல்ல மணமாக இருக்கும். உள்ளே மெத்தென்று குழலோடி இருக்கும். நடுநிலைவாதிகள் பாதிப் பாதி எடுத்துக் கொள்ளலாம். நான் மேலே சொல்லியிருக்கும் அளவிலேயே செய்வேன்.

* சாதாரண நாள்களில் செய்யும்போது, ஒரேநாளில் சீயாளத்துக்கு இவ்வளவு கஷ்டப்பட முடியாதென்று நினைப்பவர்கள் (உண்மையில் கஷ்டம் எதுவும் இல்லை, நேரம் அதிகம் எடுக்கும் அவ்வளவே.) இட்லிகளை முதலிலேயே செய்து ·ப்ரீசரில் வைத்து, மசாலாப் பொடியும் முதலிலேயே அரைத்துவைத்துக் கொண்டால் தேவைப்படும் பொழுது எடுத்து மைக்ரோவேவ் அவனில் சூடாக்கி, துண்டுகளாக்கி பத்தே நிமிடங்களில் செய்துவிடலாம்.

நவராத்திரி சிறப்புக் கட்டுரை: சிங்கப்பூரில் ஆலயங்கள் – ஜெயந்தி சங்கர்.

தேவையான பொருள்கள்:

சொப்பு செய்ய:
பச்சரிசி – 1 கப்
தண்ணீர் – 2 1/2 கப்
உப்பு – 1 சிட்டிகை
நல்லெண்ணெய் (அல்லது தேங்காயெண்ணெய்)

பூரணம் செய்ய:
உளுத்தம் பருப்பு – 1 கப்
துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை (விரும்பினால்)
காய்ந்த மிளகாய் – 4
பச்சை மிளகாய் – 2
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி
கறிவேப்பிலை
பெருங்காயம்
உப்பு

செய்முறை:

சொப்பு:

  • முதலில் பச்சரிசியை நன்கு கழுவி, 2 1/2 கப் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • அதே தண்ணீரையே விட்டு அரிசியை நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். நனைத்து வைத்த தண்ணீர் மீதமிருந்தால் அதையும் மாவுக் கரைசலிலேயே நீர்க்கக் கலந்து கொள்ளவும். (சொல்ல வருவது, மொத்தம் 1 கப் அரிசிக்கு 2 1/2 கப் தண்ணீர் சேர்ந்திருக்கவேண்டும்.)
  • வாணலியில் மாவுக் கரைசலை விட்டு, இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய், சிட்டிகை உப்பு சேர்த்து நிதானமான தீயில் அடிப்பிடிக்காமல் கிளறவும்.
  • மாவு சேர்ந்து இறுகிவரும் வரை விடாமல் கிளறி (இப்போது பாதி வெந்து நிறம் மாறி இருக்கும்.) இறக்கி, ஒரு துணியில் சுற்றியோ அல்லது பாத்திரத்தில் மூடியோ ஆற வைக்கவும். மாவை திறந்துவைத்து, காயவிடக் கூடாது.

பூரணம்:

uppu kozhukkattai_1 (vinaayagar chathurthi)

  • உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு இவற்றைக் கழுவி, தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.
  • காய்ந்தமிளகாய், இஞ்சி, காயம், உப்பு சேர்த்து அதிகம் நீர் விடாமல் கெட்டியாக, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த விழுதை எண்ணெய் தடவிய இட்லித் தட்டுகளில் வைத்து வெயிட் போடாமல் இட்லிகளாக (பருப்பு உசிலிக்குச் செய்வதுபோல்) 12லிருந்து 15 நிமிடங்களுக்கு குக்கரில் வேகவைத்து இறக்கவும்.
  • வெளியே எடுத்து, இட்லிகள் ஆறியதும் லேசாக உதிர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி, பொடித்துக் கொள்ளவும். (மிக்ஸியில் சுற்றுவதற்கு முன் நன்றாக ஆறியிருக்க வேண்டும் என்பது முக்கியம்.)
  • அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து சிறிது வதக்கி உதிர்த்த பூரணத்தில் சேர்க்கவும். (பச்சை மிளகாய் வாயில் அகப்படக் கூடாதென நினைப்பவர்கள் ஒரு பச்சை மிளகாயை, மாவு அரைக்கும்போதே சேர்த்து அரைத்துச் கொள்ளலாம். ஆனால் அகப்பட்டால் சுவையாக இருக்கும்.)

கொழுக்கட்டை:

uppu kozhukkattai_2 (vinaayagar chathurthi)

  • ஆறிய அரிசி மாவை நன்றாகப் பிசைந்து, பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • சிறிது நல்லெண்ணெய் தொட்டுக் கொண்டு, பலகையில் கையால் உள்ளங்கை அளவு வட்டங்களாகச் செய்யவும்.
  • 2 டீஸ்பூன் பூரணத்தை உள்ளே வைத்து அரை வட்டமாக மூடி, ஓரங்களைக் கையால் அழுத்தி ஒட்டவும். இனிப்புக் கொழுக்கட்டையில் பிளந்தால், பாகு உருகி வெளியே வந்துவிடுவது போல் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை என்பதால் இதில் அதிகம் மெனக்கெடத் தேவை இல்லை.
  • செய்துவைத்த கொழுக்கட்டைகளை எண்ணெய் தடவிய இட்லித் தட்டில் வைத்து, குக்கரில் (இட்லி மாதிரி வெயிட் போடாமல்) பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும்.

பந்து மாதிரி வந்துவிடும். இந்த முறையில் மாவுக்கு கொஞ்சம் இழுவைத் தன்மையும் வந்துவிடும். அதனால் கொழுக்கட்டை செய்யும் போது அதிகம் பிளக்காது. பிளந்தாலும் அந்த இடத்தில் இன்னும் சிறிது மாவு வைத்தாலும் சுலபமாகச் சேர்ந்து கொள்ளும்.

uppu kozhukkattai_3 (vinaayagar chathurthi)

* அரிசிமாவை நான்ஸ்டிக்கில் வைத்துக் கிளறினால் சுலபமாக இருக்கும். மாவு நன்றாக சேர்ந்து வந்தபின்பும் மேலும் 2, 3 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருந்தால்(இது சாதா வாணலியில் அடிப்பிடிக்கும்; கருகும்.) மாவு நன்றாக,

* சிலர் ஊறவைத்து உலர்த்திய அரிசியை மிஷினிலோ மிக்ஸியிலோ வறட்டு மாவாக அரைத்துவைத்துக் கொண்டு, 2 பங்கு தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் மாவைக் கொட்டிக் கிளறுவார்கள். ஆனால் அதில் இருக்கும் கட்டிதட்டிவிடக் கூடிய சாத்தியங்கள் மேற்சொன்ன முறையில் அறவே இல்லை.

* மிஷின் இல்லாமல், மிக்ஸியிலும் சரியாக அரைக்க முடியாதவர்கள், சல்லடையை ம்யூசியத்தில் தேடுபவர்கள் :), அதைவிட முக்கியமாக மேல்மாவு சரியாக கொழுக்கட்டை செய்ய வரவேண்டுமே என்று கவலைப்படுபவர்களுக்கெல்லாம் மேலே சொன்னதே ஆகச் சுலபமான முறை. தைரியமாகச் செய்து பார்க்கவும்.

* தயாரித்த பூரணம் தீர்ந்து, சொப்பு மாவு மிஞ்சினால் அதில் மணிக் கொழுக்கட்டை செய்யலாம். பூரணம் மிஞ்சினால், சின்ன உருண்டைகளாக்கி, கரைத்த பஜ்ஜிமாவில் தோய்த்து, போண்டோ மாதிரி எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்.

* அரிசி மாவினால் தான் கொழுக்கட்டைக்குச் சொப்பு செய்யவேண்டும் என்பதில்லை. மைதா மாவையும் தண்ணீரில் கரைத்து வேகவைத்துச் செய்யலாம். இன்னும் நன்றாக வரும்.

இனிப்புக் கொழுக்கட்டை

காரடையான் நோன்பு அன்று இனிப்புக் கொழுக்கட்டை செய்வார்கள் என்றாலும் அத்துடன் சேர்த்து இதையும் செய்து பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

அரிசி மாவு – 1 கப்
தண்ணீர் – 1 1/2கப்
துவரை அல்லது தட்டப் பயறு – 1 பிடி
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – தேங்காயெண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

kaaradaiyaan-nonbu-kozukkattaikaaram.JPG

செய்முறை:

  • முதலில் அரிசி மாவை, நிதானமான சூட்டில், சிவக்க வறுத்துக் கொள்ளவும். (அரிசியை சிவக்க வறுத்தும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம். நைசாக அரைத்தால் கொழுக்கட்டை மொழுக்’கென்று இருக்கும். கொஞ்சம் கரகரப்பாக அரைத்தால் சுவையாக இருக்கும்.)
  • அடுப்பில் வாணலியில், எண்ணை விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, சிறு துண்டுகளாக நறுக்கிய பச்சை மிளகாய், தாளிக்கவும்.
  • அத்துடன் தட்டப் பயறைச் சேர்த்து வறுத்து, தண்ணீர் சேர்த்து, பாதிப் பதத்திற்கு வேக வைக்கவும்.
  • அதன்பின் வாணலியில் இருக்கும் தண்ணீர் ஒன்றரை கப் இருக்குமாறு- தேவைப் பட்டால் மேலும் சேர்த்துக் கொள்ளவும். 
  • அதில் தேவையான உப்பு சேர்த்து, மாவைக் கொட்டிக் கிளறி, இறுகியதும் இறக்கவும். (வெல்லத்தோடு மாவைக் கிளறும்போது, அடுப்பில் வெல்லப் பாகு உருகிய நிலையிலேயே இருப்பதால், மாவு நன்றாக இறுகிக் கிளற வரும். ஆனால் இதில் தண்ணீர் சில நேரம் இன்னும் அதிகம் தேவைப் படலாம். தயாராக ஒரு கப் சூடான தண்ணீர் வைத்திருப்பது நல்லது. தேவைப் பட்டால் உபயோகித்துக் கொள்ளலாம்.
  • இட்லித் தட்டில் நெய் அல்லது தேங்காய் எண்ணை தடவி, கொழுக்கட்டையாகவோ, அடைகளாகவோ தட்டி வேக வைத்து எடுக்கவும்.

* நோன்பு தினம் என்பதால் மிகவும் சுத்தமாகச் செய்ய நினைப்பவர்கள், நேரடியாக வாணலியில் தட்டப் பயறை வறுத்து பாதிவரை வேகவைப்பார்கள். இப்படிச் செய்வது மிகுந்த மணமாக இருக்கும். அல்லாமல் ஒரு நான்கு மணி நேரம் முன்னாலேயே பயறை தண்ணீரில் ஊறவைத்தும் செய்யலாம். இது செய்வது சுலபம். 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நோன்பு தினம் என்பதால் தேங்காய்ச் சட்னி. மற்றபடி உப்புமாவிற்குத் தொட்டுக் கொள்ளும் எதுவும், இதற்கும் சரியே.

போகிப் பண்டிகையன்று இனிப்புப் போளி தயாரிக்கும்போது அதே முறையில் சுலபமாக இந்தப் போளியையும் செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

மேல்மாவு:

மைதா – 1 1/2 கப்
கோதுமை மாவு – 1/4 கப்(*)
ரவை – 2 டேபிள்ஸ்பூன்
கேசரிப் பவுடர் – 1 சிட்டிகை (விரும்பினால்)
எண்ணை – 1/2 கப்
சமையல் சோடா – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை

பூரணம்:
 
கடலைப்பருப்பு – 2 கப்
தேங்காய் – 1
கசகசா – 2 டீஸ்பூன்
உருளைக் கிழங்கு – 1 (விரும்பினால்)
பச்சை மிளகாய் – 8
பெருங்காயம் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிது
நெய் – தேவையான அளவு

செய்முறை:

  • மேல்மாவு பொருள்கள் அனைத்தையும் சிறிது எண்ணை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பின் சிறிது சிறிதாக நீர் சேர்த்து பிசைந்துவர வேண்டும். ரொட்டிக்கு மாவு பிசைவதை விட சிறிது தளர்வாக வந்ததும், மீதி எண்ணையையும் சேர்த்துப் பிசைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • கடலைப்பருப்பை முக்கால் பதத்திற்குமேல் வேகவைத்து(*) நீரைவடித்துக் கொள்ளவும்.
  • வெந்த கடலைப்பருப்போடு தேங்காய், பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.
  • உருளைக் கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
  • வாணலியில் நெய் அல்லது எண்ணையைச் சூடாக்கி, கசகசா, பெருங்காயம், அரைத்த விழுது, வேகவைத்த உருளைக் கிழங்கு, உப்பு, அரிந்த கொத்தமல்லித் தழை சேர்த்து இறுக்கமாகக் கிளறி இறக்கவும்.
  • மேல்மாவு, பூரணமாவு இரண்டையும் சிறுசிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.
  • மேல்மாவு உருண்டையை நடுவில் குழித்து கிண்ணம் மாதிரி செய்து, பூரண உருண்டையை வைத்து முழுவதும் வெளித் தெரியாமல் மூடி, சப்பாத்திப் பலகையில் வைத்து மெதுவாக சிறிசிறு அப்பள வடிவில் மெலிதாகப் பரத்தவும். பலகையில் மாவைத் தூவிக்கொண்டு அப்பளமிட்டால் சுலபமாக இருக்கும்.
  • இட்ட போளிகளை நெய் அல்லது எண்ணை தடவி தோசைக்கல்லில் போட்டு சீரான சூட்டில் பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.

* கடலைப் பருப்பை 4 மணிநேரம் ஊறவைத்து நீரை ஒட்ட வடித்து மற்ற சாமான்களோடு அரைத்தும் செய்யலாம்.

* சிலர் முழுவதுமே கோதுமை மாவு உபயோகிப்பார்கள். இதற்கு கோதுமை மாவில் மேல்மாவைப் பிசைந்து உரலில் போட்டு இடித்து பின் வாழையிலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் எண்ணை தடவி அப்பளமாகத் தட்ட வேண்டும்.

* கடலைப் பருப்பை ஊறவைக்கவோ, வேகவைக்கவோ நேரமில்லையென்றால் தேங்காய் பச்சை மிளகாயை மட்டும் அரைத்துக் கொள்ளலாம். கடலை மாவை லேசாக நெய்யில் வறுத்துக் கொள்ள வேண்டும். எண்ணையைச் சூடாக்கி, கசகசா, பெருங்காயம், அரைத்த விழுது, மசித்த உருளைக் கிழங்கு, உப்பு, வறுத்த மாவையும் சேர்த்துக் கொட்டி கிளறி கொத்தமல்லித் தழை சேர்த்து, ஆறியபிறகு உருண்டைகளாக்கியும் போளி செய்யலாம். ருசியாக இருக்கும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

கொத்தமல்லிச் சட்னி (2)