இலக்கிய முயற்சி :P


“எவஞ்சொன்னது, கமல் மரபைக் கட்டுடைப்பவர்ன்னு?” என்று நான் கேட்கமுடியவில்லை.

வழக்கம்போல் “நான் மரபைப் கட்டுடைப்பவனாக்கும்” என்று மீசைமுறுக்கியிருக்கிறார்.  😦

தீபாவளியன்று விஜய் டிவி “காஃபி வித் அனு”வில் கமல் எழுதி வாசித்தது…

கம்பரே வெண்பா கடினம் என்றுதான் விருத்தம் கையாண்டதான முன்னுரையுடன் “கல்லும் சொல்லாதோ கதை” என்ற ஈற்றடி எடுத்துக் கொடுத்தவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்கள்.

 

மகதலினா கல்பட்டும் தேறினளாம் அவளக்காள்
அகலிகையும் கால்பட்டு மீண்டனளாம் – இகமிதிலே
அல்லலுறும் நவயுகத்து நாயகியர் அகமகிழக்
கல்லும்சொல் லாதோ கதை.

[*முதல் வார்த்தை இன்னதென்று விளங்கவில்லை. என்  சிற்றறிவை  வைத்துக்கொண்டு அனுமானிக்கவும் முடியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும். (இரா.முருகன் அருளால் கிடைத்துவிட்டது.. நன்றி.) தனிச்சொல் ‘இகமிதிலே’ பேராசிரியரால் பாராட்டப்பட்டது.]

 

ஆத்தமா னார்(அ)யலார் பள்ளிப் பறித்தெடுத்து
மூத்தவர்யா மெனக்கூறி அமர்ந்திருக்கும் சூத்திரத்தைச்
சொல்லின்றிக் கூறிவிடும் பழங்கோயில் கேட்டுப்பார்
கல்லும்சொல் லாதோ கதை.

[“ஆத்தமானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்..” என்ற திருவாசக அடியிலிருந்து தான் எடுத்தாண்டதாக கமல் கூறினார்.]

 

ம்ம்ம்.. நல்ல முயற்சி. வெண்பா அதிகம் தெரியாமல் ஆனால் ஓசைநயத்திலேயே சரியாக எழுதுபவர் என்று கமலை பேராசிரியர்  அறிமுகப்படுத்தினார். அப்படிப்பட்ட கமல் கொஞ்சம் மோனையிலும் கவனம் செலுத்தியிருக்கலாமோ… (இப்ப ரொம்ப முக்கியம்!)

 

எத்தனை இடங்களில் பிரிக்கமுடியுமோ பிரித்துவிட்டேன்; அத்தனையும் மீறி இத்தனை இடங்களில் தளைதட்டிய ஒன்றை வெண்பா என்று பேராசிரியர் பாராட்டித் தள்ளினார். இவர்கள்தான் கமலின் வளர்ச்சிக்குப் பிரச்சினை.

 

* சமீபமாக புகழ்ச்சிகளில் நெகிழ்கிற கமலைப் பார்க்கக் கவலையாக இருக்கிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் பாராட்டப்படும் சிறுவர்கள்போல் நடந்துகொள்கிறார்.

* தொ.பரமசிவன் என்கிற தொ.ப எழுதிய ‘மனிதர்களின் தெய்வங்கள்’ குறித்து சிலாகித்தார். வாங்கிப் படிக்கவேண்டும்.

* கடவுளை மொத்தமாக மறுக்கும் நாத்திகர்- வெங்கடாஜலபதியிலிருந்து வெக்காளி, இசக்கிவரை- என்று நான் நினைத்துக்கொண்டிருக்க, ‘அவனோட’ சாமியை ‘அவனை’க் கும்பிட அனுமதிக்கவேண்டும் என்றார். பெருந்தெய்வங்களையும் (தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்னு சொல்வாங்க.. ஆனா அவரைப் பார்க்க திருப்பதிக்குதான் வரச்சொல்வாங்க) பெருவழிபாடுகளையும் (தொப்பையில் காலணாவை வைத்து வீட்டுக் கிணற்றிலேயே தூக்கிப்போட்டுவந்த பிள்ளையாருக்கு பிரமாண்டப் பெருவிழா எடுக்கக் கிளம்பியிருப்பது) மட்டுமே புறக்கணித்தார். டிபிகல் இணைய நாத்திகவாதம். ஏமாற்றம்.

* மதம் அவரவர் படுக்கையறைச் சமாசாரம் மாதிரி; அவரவரோடு அந்தரங்கமாக முடிந்துவிட வேண்டியது என்று சொன்னவர், தான் மட்டும் எப்பொழுதும் பொதுவில் அவருக்குகந்த உடையை படுக்கையறையிலேயே  நிறுத்திக்கொள்ளாமல் (கருப்பு; அதுவும் இந்தமுறை படுகேவலமான டிசைனில் இருந்தது.) ஏன் வரவேண்டும்; இவரும் நாத்திகத்தை மனதுக்குள் அந்தரங்கமாக வைத்துக்கொண்டு, வெளியே பொதுவில் வண்ணமயமான ஆடைகளில் வரலாமே என்ற என் ஆதங்கத்திலிருந்து இன்னும் கேட்க/சொல்ல நினைக்கும் பல விஷயங்களைச் சொல்லாமல் விடுவதற்கு என் கமலபிமானம் மட்டுமே காரணம் என்று யாரும் (சரியாகக்) கணக்குப் போடவேண்டாம். தயவுசெய்து என் வழமையான சோம்பேறித்தனம் மட்டுமே காரணம் எனக் கொள்ளவும்.

எச்சரிக்கை: இந்தப் பதிவிற்கு, “உங்காளை முதல்ல அடுத்தவனுக்குப் புரியற மாதிரி பேசச்சொல்லு”, “I am not surprised. கமலுக்கு உளறிக்கிட்டே இருக்கணும்” மாதிரி மறுமொழிகள் [என்மீதான  :))] தனிநபர் தாக்குதலாகக் கருதப்பட்டு கடுமையாக மட்டுறுத்தப்படும். ஏற்கனவே வீட்டில் கேட்டுக்கேட்டு கோபத்தில் கொலைவெறியில் இருக்கிறேன். எரிச்சலில் எக்குத்தப்பாக எங்காவது யந்திரன் படத்திற்கு ஏடாகூட விமர்சனம் எழுதிவிடும் அபாயம் இருப்பதால்…

மரத்தடி ஆண்டுவிழாப் போட்டி – 2004 க்கு எழுதி மூன்றாம் பரிசு வென்ற வெண்பா (மரபுக் கவிதை)
சுஜாதா சொன்னதற்காக (மட்டும்) ஈற்றடி சற்றே மாற்றியமைக்கப்பட்டது.

-0-

அள்ளி யணைத்தவளு(ம்) அன்னையுமோர் பெண்ணாக
உள்ளில் உயிர்த்த உறவுமட்டும் பெண்ணாகில்
கள்ளிப்பா(ல்) ஊட்டியே காரியம் தீர்ப்பவரைத்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

விந்தைபல கற்றறிந்து விண்ணேர் பருவத்தில்
கந்தக வாசமுடன் கார்துடைத்து சேய்வளர்த்து
கள்ளம் பயின்றுக் கருகிடும் பிஞ்சுகளைத்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

செல்வம் இருக்குமிடம் சேருதிங்கே கல்வியுமே
அல்லாத மானிடர்க்கோ ஆறாக் கொடுமையிது
பள்ளியிலே வாணியைப் பண்டமென விற்பவரைத்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

கல்வியு(ம்) ஆர்வமும் காரியத்தில் நேர்த்தியுடன்
வெல்திறமை கொண்டோரை வீணர்கள் செல்வாக்கால்
மெள்ளவவர் கீழ்தள்ளி மேல்வந்து நிற்பாரேல்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

காதலிலே கட்டுண்டு காதைபல பேசிப்பின்
வாழ்தலென்ற பேச்சுவரில் வக்கணையாய்க் காரணங்கள்
பிள்ளைக் கடனிங்கே பெற்றோர்சொல் கேளலென்பர்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

திருமகளாய் வீட்டில் திகழ்ந்திருக்கும் பெண்ணின்
கருமங்கள் சொல்வ(ர்),அவள் கற்பின் நெறிகளும்;பின்
கள்ளத் தொடுப்பினில் காரிகைகள் தான்கொள்வர்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

வாங்கிடு(ம்) ஊதியத்தை வங்கியிலே சேர்த்தபின்னும்
வீங்கிடு(ம்) உள்பையும் வெட்கமின்றி கர்ப்பம்பார்
கொள்ளத் தயங்கார் குடிகளிடம் லஞ்ச(ம்);அவர்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

கொள்ளை யடிப்பர்தான் கொண்ட தொழிலிலே
உள்ளத்தி(ல்) ஆர்வம் உழைப்புடன் நேர்மையின்றி
கள்ளத் தனம்செய்வர் காரியத்தில் சோம்பிடுவர்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

அதிகாரம் பெற்று(ம்)இல்லை ஆணையிடும் வீரம்
மதியில்லா மந்திரிகள் மாண்புமிகு பாதத்தில்
வெள்ளப் புயல்மரமாய் வேரோடு சாய்வாரைத்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

எண்ணக் கனவுக(ள்) இங்கே யடுக்கினேன்
வண்ண மிதற்கெலாம் வார்ப்பா(ய்) அறிவேன்;நான்
சொல்லிய வண்ணஞ் செயப்போகும் நீயேவிவ்
வெல்லுஞ் சமூகத்தின் சாவி.

 

 

 

 

 

 

 

 

ன்னில்
எல்லா வாத்தியங்களையும்
இசைக்கப் பார்க்கிறாய்

பிறந்த குழந்தையாய் நீவீறிட்டபோது
கறந்தபாலின் தூய்மையையும்
மிஞ்சிய தாய்மையுடன் என்
மார்சுரந்த பாலருந்த மறுத்தாய்.
வீணையில் வயலினிசை
வேண்டும் என்றே இன்னும் அழுகை

ஓடிப்பிடித்த கதைகளும்
உன் ஒளிந்து விளையாடிய நினைவுகளும் கேட்டு
உச்சிமுகர்ந்தளித்த முத்தம் உணர்ந்தறியாய்.
வீணையில் குட்டிக்கண்ணனின்
குழலினிமை இல்லையென்றொரு குதிப்பு

மீசைவைத்த ஆசைக்கதைகளும்
மீண்டுவந்த காதல்பாதைகளும்
தோழியைப்போல் கேட்டபோதென்
தோளில்சாய்ந்த சுகமறியாய்
வீணையில் நாதஸ்வரத்தின்
நாதமில்லையென்றொரு நகைப்பு

காதல்கிறக்கத்தில் நீயும்
மோனத்திருந்த நேரத்தில்
உள்ளமும் உடலும்
அதன் நீட்சியாய்
உடையும் கூட சற்றேநெகிழ்ந்ததை
உன்னோடு நானும்கூட
உணராதுறைந்து நிற்கையில்
தவறிய தாளத்திற்கு வீணையொரு
மேளமில்லாததே காரணமென்று
காலால் எட்டியோர் உதைப்பு

எப்பொழுதாவது வீணையை
வீணைக்காய் நெருங்கியிருக்கிறாயா?

நாண்மீட்டத் தெரியாதவனின் கைகளில்
நாராசமாய் ஒலிப்பதைவிட
நஷ்டமில்லை வீணைக்கு
நலங்கெட்டுப்
புழுதிப்புனலில் புதைந்திருப்பது

தேடல் எனக்கான நிஜமாய்
அடக்க மாட்டா ஆர்வத்துடனும்
கடக்க மாட்டாக் காதலுடனும்
வரும்பொழுதினில்
தரையமர்ந்து
மடியேந்தி
நெஞ்சின் நெருக்கத்தில் அழுத்தி
இருகைகளால் இசைக்க வேண்டியதில்லை என்னை
நுனிவிரல் தீண்டினாலும் போதும்
நூறு நூறு ஸ்வரப் பிரிகைகளுள்
மூழ்கடிப்பேன் உன்னை
முழுதாய் சுவர்க்கம் சேர்ப்பேன்

அதுவரை
கிடந்துவிட்டுப் போகட்டும் வீணை
கலைமகளின் கைகளிலும்
கவனிப்பாரற்ற மூலையிலும்
மட்டும்.

மரத்தடி குளிர்காலப் போட்டி – 2004 ற்காக எழுதியது.

பி.ச. குப்புசாமி அவர்களின் பொய் பொய் பொய் கவிதை இதை எழுத முக்கியத்  தூண்டுதல் என்பதைச் சொல்லியே ஆகவேண்டும். (பி.ச.குப்புசாமி அவர்களின் மகன்தான் பி.கே.சிவகுமார் என்பதையும் சொல்லவேண்டுமா?)

 

ன்னமும்
முகம் பார்க்கையிலெல்லாம்
கண்ணாடி–
உன் காதல்ரசம் பிரதிபலிக்கும்
என் அழகிற்கான அங்கீகாரம் என்ற
அனிச்சையான என் தலையசைத்தலும்

என் விருப்பத் தேர்வின்
வரிசையிலெல்லாம்
என்றோ எவரெவரிடமோ
கேட்டறிந்துகொண்ட
உன் விருப்பங்களையும்

என் எண்ணங்களுக்காய்
எழுப்பப்படும் கேள்விகளிலெல்லாம்
என்னவாகவிருக்குமென்ற
உன் எண்ணங்களையும்

எட்டிப்பார்க்கும் தொட்டிலிலெல்லாம்
நம் ஆன்மத்துடிப்பிற்கான
அன்பின் முகவரியையும்

இப்படி
இருந்துகொண்டேயிருக்கின்றன
எதிர்ப்படுமெல்லாமிலும்
உனக்கான யோசித்தல்களும்
எல்லாம் வல்லவனிடம்
உன் நல்வாழ்விற்கான
என் யாசித்தல்களும்.

எட்டிய வெற்றியிலெல்லாம்
எதையும் பெரிதாய்ப் பெற்றுவிடவில்லையென்றும்
எழுந்திருக்க முடியா சோகங்களிலெல்லாம்
எதையும் பெரிதாய் இழந்துவிடவில்லையென்றும்
ஏற்ற இறக்கமில்லாச் சமவெளியிலேயே
நடத்திச் செல்கிறது
உன் இழப்பு…

வண்ண விளக்குகளால்
வாழ்க்கை ஒளிரஆரம்பித்தும்
என்றோ ஏற்றிய அகல்விளக்கின்
எண்ணெய் தீர்ந்திருக்குமோவெனெ
பதறியோடி வருகையில்

முன் வந்து, திரிதூண்டி, அங்கே
தீபம் காக்கக் கையணைத்திருக்கும்
உன் தீவிரவாதத்தில்
என் மொழியழிந்து போகிறது.

அரையிருட்டில் படபடக்கும்
ஐந்தாம் வேதத்தின் ஆகமப் பக்கங்களைப்
பார்த்ததிலேயே படித்ததாய்
பரவசப்பட்டுத் திரும்புகிறோம்
அவரவர் ஆசாரங்களுக்குள்.

காதலித்துக் கைப்பிடித்த
கதைகளைச் சொல்லி
காதலென்னும் கதகதப்பை
கடந்தகாலத்திற்குள் கழற்றி எறியாமல்

நீயை விடவும்
உன் நினைவு போர்த்தும்
உச்சிமுதல் உள்ளங்கால் வரை
விரிந்து விரவும் மோகஉடையும்

உன் முத்தஎச்சில் தொட்டழியா
என் வெட்கப் பூச்சும்

சூடாததால் வாடாத
கைமலர்க் கண்ணியும்

தொடாததால் கெடாத
மனக்கன்னிமையும்

இருப்பை நம்பியும்
இறுதிவரை தேடிக்கொண்டே இருக்கும்
ஆத்திகனின் தேடலும்

இல்லையென்று சொல்லிக்கொண்டே
இருப்பிற்கானதாயிருக்கும்
நாத்திகனின் நடுக்கமும்

பெண்மையும் அதன் மென்மையும்
அது தாங்குமிந்த உண்மையும்

உள்ளவரையிலும் உள்ளில்
இரகசியமாய் உறங்கியிருக்குமென்றால்
இறக்கும் இறுதி நொடியிலும்
புதிதாய் விழித்திருக்குமென்றால்

கூறாமல் போனேனென்று
கோபிக்கும் உனக்கும்,
அதனால் (கை)கூடாமற்போன நம் காதலுக்கும்
கோடி நமஸ்காரம்!

[மரத்தடி ஆண்டுவிழாப் போட்டி – 2004 ற்கு எழுதி முதல் பரிசு வென்ற கதை]

 

 ‘அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும், என்
சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன்.
(– கம்பராமாயணம்.)

 

ரு நிறைந்த மனநிலையில் அந்தக் கவிதைத் தொகுப்பைப் பிரிக்க ஆரம்பித்தேன். கவிதைகளின்மேல் ஆர்வம் போய்விட்டாலும், பரிசாக வந்த புத்தகம் என்பதும், அப்பா வருகிறேன் என்று ஃபோன் செய்திருப்பதால் மதியம் தூக்கம் வராமல் இருப்பதும் புத்தகத்தைப் புரட்டக் காரணங்கள். நடுவாக ஏதோ ஒரு பக்கத்துக் கவிதையில் படிக்க ஆரம்பித்து, அங்கேயே கண் நின்றது. மேலே படிக்க ஓடாமல் ‘சீதா’ என்ற பெயரைப் பார்த்ததும் என் வாழ்வில் வந்த அசோக மரத்தின் நினவுகளை வரிசையாக என்று இல்லாமல் முன்னும் பின்னுமாய்ப் புரட்டிப் போட ஆரம்பித்தது.

====

“மஞ்சு, லாயர்ன்னு அப்ப நீ சொல்லிக்கவே முடியாதா? நீ என்ன வேலை செஞ்சிருக்கன்னு உனக்கே புரியுதா? உனக்கென்ன பைத்தியமா?” ஆதங்கத்துடன் கடைசியாகக் கேட்ட உஷாவும், “ஆனா முடிவு ஐம்பது சதம் ஏனோ எனக்குப் பிடிச்சிருக்குப்பா” சொன்ன ராஜரத்னமும் என்னிடம் புன்னகையை பதிலாக வாங்கிப் போய்விட்டார்கள். கேள்வி மட்டும் இன்னும் சுற்றிச் சுற்றி வந்துகொண்டே இருக்கிறது. அப்பாவிடம் இன்று ஒருநாள் வகுப்பில் இருந்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டு, வகுப்புக்குப் போகாமல் கல்லூரியின் அந்த நீள காரிடரின் கைப்பிடிச்சுவரில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். என்னவோ கொஞ்சம் சந்தோஷமும் துக்கமுமாய் கலவையான உணர்ச்சியாக இருந்தது. ஸ்ரீதரன் (எனக்கு மட்டும் ஸ்ரீதர்) படிப்பு முடியும் வரையில் இருவரும் அங்குதான், கிடைக்கும் நேரமெல்லாம் அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம். பக்கத்தில் லைப்ரரிக்கு நுழையும் அனைவருக்கும் அது ஒரு பழகிய காட்சிதான். எப்பொழுதிலிருந்து ஸ்ரீதர் வாழ்க்கையில் நுழைந்தான் என்று எத்தனையோ ஆயிரமாவது தடவையாக மீண்டும் யோசிக்க ஆரம்பித்தேன். அலுத்ததே இல்லை. கை அனிச்சையாய், கீழே விழுந்திருந்த அசோகமரக் குச்சியைத் தரையில் கீறிக் கொண்டிருந்தது.

-o-

ந்துருவிடம் அட்ரஸ் வாங்கிக்கொண்டு திருவானைக்காவலில் அந்த வீட்டின் மணியடித்தோம். உள்ளிருந்து குக்கர் சத்தமும், தொடர்ந்து அரிசியும் பருப்பும் வேகும் கலவையான வாசமும் அதையும் தொடர்ந்து துண்டில் கையைத் துடைத்துக் கொண்டே ஸ்ரீதரனும் வந்தார்கள். காலையில் புதுநபர்கள் யாராக இருக்கும் என்ற ஆச்சரியத்தை மாட்டிக்கொண்டு வந்தவன், சராசரி உயரமாய், பிராமணச் சிவப்பாய் (ஆண்கள் சிவப்பாக இருந்தால் எனக்குப் பிடிக்காது), பூசிய கன்னமாய் ஆரோக்யமாக இருந்தான். அம்மா கொடுப்பதை எல்லாம் படுத்தாமல் சாப்பிட்டுவிடுவான் போலும். அவன் புறங்கையில் ஒட்டியிருந்த கீரைத் துணுக்கு, சமையலில் உதவியாய் இருந்தான் என்பதைச் சொல்லியது. அக்ரமத்துக்குச் சமத்தாய் இருக்கிறானே என்று எரிச்சலாக நான் அந்தத் துணுக்கையே வெறிக்க, ‘அதனால் என்ன’ என்பதுபோல் எந்த அலட்டலும் இல்லாமல் அதைச் சுண்டினான். ‘நீ என்னைபற்றி எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்’ என்பதுபோல் இருந்த அலட்சியம் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் மனதுக்குள் எதுவோ நழுவுவது போல் உணர்ந்தேன்.

‘யார்டா ஸ்ரீதர்’, எங்கோ உள்ளிருந்து மென்மையாக வந்த பெண்ணின்(அவன் அம்மா?) குரலுக்கு அதைவிட மென்மையாக ‘தெரியலை’ என்றான். எப்படி அவர்களுக்குள் பேசுவது காதில்விழுகிறது என்று தெரியவில்லை. எங்கள் வீட்டில் ரகசியமே எல்லோரும் சத்தமாகத்தான் பேசுவோம். ‘யார் வேணும்?’ என்றான் அப்பாவிடம். கேள்வியில், ‘சீக்கிரம் சொல்லுங்கள், குளித்து சந்தி செய்து சாப்பிட்டுவிட்டு காலேஜுக்குக் கிளம்பவேண்டும்’ என்பதுபோல் ஒரு கடமை அவசரம் இருந்தது.

“ஐ’யம் ரெங்கராஜன். பிஏ டு கலெக்டர். இவ என் டாட்டர். +2 முடிச்சுட்டா. லா தான் பண்ணனும்னு ஆசைப்படறா, சீட் கிடைச்சுடுத்து..” அப்பா பேச ஆரம்பித்தார். லா என்ற ஒற்றை வார்த்தைக்கு மட்டும் ஒரு பார்வையை என்மேல் வீசிவிட்டு முகத்தை மீண்டும் அப்பாவின்மேல் பொருத்தினான். எனக்கு அதற்குமேல் எதுவுமே சுவாரசியமாகக் காதில் விழவில்லை. இந்தச் சந்திப்பே தேவையில்லாத ஒன்று. உள்ளூரிலேயே இருக்கும் ஒரு சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்க, அதன் ஒரு சீனியர் மாணவனிடம் சென்று விசாரிக்க என்ன இருக்க முடியும் என்று தெரியவில்லை. அபத்தமாக உணர்ந்தேன். முதலிலேயே மறுத்தும் அப்பா கேட்கவில்லை. நான் சாதுவோ பயந்தவளோ இல்லை. எந்தப் பிரச்சனையையும் என்ன என்பதுபோல் நிமிர்ந்து பார்க்கக் கூடியவள். இரண்டு அண்ணன்களுக்குப் பின் ஒரே பெண். கொஞ்சம் மென்மையான மனதுடன் ஆனால் எக்கச்சக்க தைரியசாலி.

சின்னவயதில் ஓர் ஆதரவற்ற பாட்டியை தெருவிலிருந்து வீட்டிற்குக் கூட்டிவந்து அப்பாவிடம் சொல்லி அரசாங்கத்துக்கு மனுப்போட்டு அநாதைப் பென்ஷன் வாங்கிக் கொடுக்க வைத்தேன். ஒரு பைத்தியக்காரியை விடலைகள் கிண்டல்செய்ய, பொறுக்கமுடியாமல் வீட்டிற்கு வந்து அண்ணன்களைக் கூட்டிப்போய் சண்டை போடவைத்தேன். இப்படிப் பல நிகழ்வுகள் அப்பாவிற்கு என்னை எப்படி உருவாக்கவேண்டும் என்ற எண்ணத்தை விதைத்திருந்தது. சட்டப்படிப்பும் அதில் ஒன்று. என் இயல்பான தைரியமும் எண்ணிப்பார்க்க முடியாத சுதந்திரமும்.. அதுவே கூட அப்பாவிற்குக் கொஞ்சம் பயமாக இருந்ததோ என்னவோ. மற்றபடி ஸ்ரீதர் மாதிரி இன்னும் 4 பேரை நானே பார்த்துக் கொள்ள முடியும் என்பதை அவர் அறிவார்.

[மதியம் மெயின்காட்கேட்டில் இருக்கும் சட்டக் கல்லூரியின் ஒரு மலையாள ஆசிரியையும் பார்த்துவிட வேண்டும் என்று சொல்லியிருந்தார். எனக்கோ இதெல்லாம் கேவலமாக இருந்தது. சொல்லிப் பயனில்லை.]

பேசிமுடித்து அப்பா கிளம்புகிறோம் என்று சொன்னபோது அப்பாடா என்று இருந்தது. நான் எதற்காக வந்தேன் என்றே தெரியாமல் எழுந்தேன். ஸ்ரீதரன் மாதிரி பழங்களை என்னால் தாங்கமுடிவதில்லை. காட்டாற்றின் வேகம் நான். என் நண்பர்களிடம் முக்கியமாக சந்துருவிடம் சொல்லி ஒருமுறை இவனைக் கலாய்க்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். “அம்மா குளிக்கறா. அங்க ஷெல்ஃப்ல குங்குமம் இருக்கு. எடுத்துக்குங்க”, நான் எழுந்ததைப் பார்த்து மிகச் சாதாரணமாகச் சொன்னவனைப் பார்த்துத் தூக்கிவாரிப் போட்டது. குங்குமமா? நவராத்திரிக்குத்தான் நானே யாருக்காவது அதுவும் அம்மா சொன்னால் மட்டும் கொடுத்திருக்கிறேன். இதெல்லாம் மிகவும் அதிகமாகவே பட்டது எனக்கு. இவன் மாதிரி சமர்த்துகள் எல்லாம் என் அம்மா கண்ணில் படாமல் இருந்தால் காலத்துக்கும் நல்லது. பாவம் வயிறெரிந்தே செத்துவிடுவாள். என் அண்ணன்களோ நண்பர்களோ எந்தக் காலத்திலும் இந்த அலைவரிசையில் வரமாட்டோம். அப்பாவை முறைத்துவிட்டு, ‘வளர்த்திருக்கா பாரு ஆத்தாக்காரி!’ என்று மனதிற்குள் திட்டிக்கொண்டே விதியே என்று ஷெல்ஃபை நெருங்கி குங்குமச்சொப்பைச் சிரமப்பட்டுத் திறந்தேன். ‘மை ஃபாதர் இஸ் நோ மோர்’ என்று பேச்சுக்கு இடையில் அவன் அப்பாவிடம் சொன்னது ஏனோ லேசாய் நினைவுக்கு வந்தது.

கிளம்பும் போது மீண்டும் ஒரு பார்வை கொடுத்து மீண்டோம். “ஃபர்ஸ்ட் இயர், ந்யூ அட்மிஷனுக்கெல்லாம் என்னிக்கி ரி-ஓப்பன்” என்று அவன் (எதையாவது கேட்டுத் தொலைப்போம் என்ற தொனியில்) என்னிடம் கேட்ட ஒரே கேள்விக்கும் பதில் சொல்லாமல் தவிர்த்தேன். இவனுக்குத் தேதி தெரியாமலா இருக்கும்? ‘எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை’ என்று மனதிற்குள் அழுத்தமாகச் சொல்லிக் கொண்டேன். அவனுக்கும் அப்படியே என்று தெரிந்தது. முதல்வருடப் படிப்பிற்குக் கல்லூரி திறப்பதை எப்படி ‘ரீ-ஓப்பன்’ என்று சொல்லமுடியும் என்று அவன் வார்த்தைகளை ஃப்ரேம் போட்டு அர்த்தம் பார்க்க ஆரம்பித்தேன். டூவீலரை ஸ்டார்ட் செய்து அப்பா ஏறிக்கொண்டதும் அவனுக்கு ஒருமுறை கையசைத்தார். இடது கண்ணோரம், அவன் வாசலிலேயே நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. நிமிர்ந்து பார்க்கவேண்டும் என்ற என் ஆவலைக் கஷ்டப்பட்டு அடக்க வேண்டியிருந்தது. வண்டியை நோக்கி நடந்து வந்தபோது என் கொலுசின் சப்தம் கொஞ்சம் தயங்கித் தயங்கி மென்மையாக சிணுங்கியபடியே ஒலித்ததாக எனக்குத் தோன்றியது. வந்தபோது இருந்த ஜல்ஜல் திமிர் நிச்சயம் அதில் காணாமல் போயிருந்தது.

-o-

Festember, இன்டர்காலேஜ் காம்படீஷன், கர்நாடக சங்கீதத்தில் முதல் பரிசு, மெல்லிசையில் இரண்டாம் பரிசு. கல்லூரியே பாராட்டி முடித்திருந்தது. இது ஆரம்பத்தில் எல்லா கல்வி நிறுவனமும் எனக்குச் செய்வதுதான். பின், தொடர்ந்து நான் வாங்கி வரும் கோப்பைகளையும் பரிசுகளையும் இதிலென்ன அதிசயம் என்று சகஜமாக எடுத்துக்கொள்வார்கள். வீடே அப்படித்தான் ஆகிவிட்டது. நான்குவயதில் மாறுவேடப் போட்டியில் ஜெயித்ததற்கு ஊருக்கெல்லாம் லெட்டர்போட்டாள் அம்மா என்று அண்ணன்கள் சொல்வார்கள். அப்புறம் மேலே மேலே பரிசுகள் வரும்போது வீடு கண்டுகொள்வதில்லை அதிகம். ‘பெருமாள் சன்னதில வெச்சு எடுடி’ என்று பாட்டி இருந்தவரை சொல்லிக்கொண்டிருந்தாள். அதன்பின் வாங்கும் மெடலை, வீட்டுக்கு வந்ததும் புத்தகப் பையிலிருந்து டிஃபன் பாக்ஸ் எடுப்பதுபோல் இயல்பாக வெளியே எடுத்து வைக்க முடிகிறது. பெரிய கொக்கி ஆணியில் ஏன் எதற்கு என்று புரியாத பதக்கச் சரங்கள். ‘மஞ்சுளா ரெங்கராஜன்’ என்ற பெயரை பரிசுகளை அறிவிக்கும்போதெல்லாம் மைக்’குகள் உள்வாங்கி வெளிவிட்டுக் கொண்டிருந்தன.

முதல்வர் அறைக்கு வெளியே எல்லோரும் சுற்றிநின்றிருக்கும்போது அந்தப் பக்கம் போன ஸ்ரீதரன் “கங்கிராட்ஸ்!” என்றான். சொல்லவே வந்தானா, வந்தபோது சொல்கிறானா என்பதையும் சொல்லிவிட்டால் தேவலாம். “தேங்ஸ், எப்படி இருக்கீங்க?”, கேட்டு வைத்தேன். உள்ளே மீண்டும் என்னவோ நழுவிக் கொண்டிருந்தது. உடன் நின்றவர்களைப் பார்த்துவிட்டு, “எனக்கு க்ளாஸ் இருக்கு. அப்பறம் பார்க்கலாம்”, இரக்கமேயில்லாமல் சொல்லிவிட்டுப் போனான். அவன் போன முதல் ஐந்து நிமிடங்களுக்கு, சரியாக மற்றவர்களோடு கலக்க முடியாத தடுமாற்றமாக இருந்தது. சே!

கல்லூரி வாஷ்ரூம் கண்ணாடியில்- ‘அப்பறம் பார்க்கலாம்’ என்று அவனைப்போல் சொல்லிப் பார்த்தேன். ‘எப்போடா?’ என்று அவனைத் திருப்பிக் கேட்டேன். ‘உனக்குக் கிறுக்குதான் பிடிச்சிருக்கு’ என்று எனக்கே சொல்லிக்கொண்டேன். கொஞ்சம் அழகாகத்தான் இருக்கிறேன் என்று தோன்றியது. வகுப்பிற்கு வந்து, முதல்வருக்குக் காண்பிக்க எடுத்து வந்த பரிசுகளை ஆசையாகக் கட்டிக் கொண்டேன். இதற்குமேல் ஏகத்துக்கு வாங்கியாயிற்று. இதெல்லாம் ஜுஜுபி. ஆனாலும் ரொம்ப ஸ்பெஷலாகத் தோன்றியது.

நினைத்த அளவுக்குப் படுத்தாமல் அந்த ‘அப்பறம்’ அன்றைக்கே லைப்ரரி வாசலில் வந்தது. வெளியே வந்தவனும், அந்தவழியாகப் போன நானும் ஒரு தயக்கப் பார்வை பார்த்துக் கொண்டோம்.

“வந்ததுமே காலேஜக் கலக்கறீங்க”, மௌனம் பேசியது.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. கர்நாடிக் என்னிக்கும் எனக்குப் பிரச்சனையில்லை. என் குரலே ஜட்ஜஸ்க்கு பிடிச்சுடும். சினிமாப் பாட்டுதான்- என் குரலுக்கு சித்ரா பாட்டை எடுத்தது தப்பு. கேட்டுப் பழகினவங்களுக்கு என் குரல் மாற்றா இருந்திருக்கும். ம்யூசிக் மாடுலேஷன் எல்லாம் வேற சொதப்பி, செகண்ட் ப்ரைஸ் ஆயிடுத்து. நான் கொஞ்சம் யோசிச்சி வேற யாரோட ஸோலோவாவது பாடியிருக்கலாம். ப்ச்!”

அவன் கவனித்த மாதிரியோ கவலைப்பட்ட மாதிரியோ தெரியவில்லை. எனக்கு இதெல்லாம் ஒன்றும் புரிவதில்லை; தேவையுமில்லை என்பதுபோல் இருந்தான். கொஞ்சம் அதிகமாகப் பேசிவிட்டேனோ என்று அவமானமாக இருந்தது. ஒரு வார்த்தைக்கு ஒன்பது வார்த்தை ஏன் ஒளறினேன் என்று தெரியவில்லை. நான் வாயைத்திறக்கும் முன் என்னைப் பாராட்டும் கூட்டத்தைத்தான் நான் பார்த்திருக்கிறேன். இவன் எனக்குப் புதுசு; அல்லது அவனுக்கு நான். அப்படியென்றால் நான் கலக்குகிறேன் என்று சொன்னது கிண்டலா?

அதற்குள் கல்லூரி முடிந்து நிறையபேர் லைப்ரரிக்குள் வருவதும் போவதுமாக இருக்க, ‘குறுக்கே நிற்கவேண்டாம்; அங்கே உட்காரலாம்’ என்பதுபோல் அந்தக் காரிடரின் கைப்பிடிச்சுவரைக் காண்பித்தான். என் வாழ்க்கையையே திருப்பிப் போடப் போகிற அந்தச் சுவரை நோக்கி நடந்தேன்.

நடக்கும்போது, நாய்க்குட்டிபோல் அவன் சொன்னபேச்சு கேட்கிறேனோ என்று தோன்றியது. ‘வேலை இருக்கிறது; போகவேண்டும்’ என்று சொல்லிக் கிளம்பியிருக்கலாம். [என் திமிரே, எங்கே போய்த் தொலைத்தாய்? இந்தப் பருப்புசாதத்திடமிருந்து என்னைக் காப்பாற்று!]

“அப்புறம் படிப்பு எப்படி இருக்கு?..” நேராக படிப்பைப் பற்றி ஆரம்பித்த பேச்சு வேறு எங்குமே தடம் புரளவில்லை. பேசினான்; பேசினான்; பேசிக்கொண்டே போனான். இவ்வளவு பேசுவானா என்றே எனக்கு மலைப்பாக இருந்தது. அடித்துவைத்த சித்திரம்போல் அசையாமல் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். முதல்பார்வையில் அவனை எடைபோட்ட என் தவறை நானே மன்னிக்க முடியாது. மருத்துவத்தில் சேர்ந்த மாணவர்கள் கொஞ்சநாள்களுக்கு முதலில் எங்கு போனாலும் ஸ்டெத்தைத் தூக்கிக்கொண்டு அலைவதுபோல, சட்டக்கல்லூரிகள் எடுத்துப் போக எதுவுமில்லையென்றாலும் சாதாரண வார்த்தைகளுக்கெல்லாம்கூட ‘ஆன் வாட் லோகஸ்டான்டி..’ என்று பேச்சில் சட்டப் பிரயோகங்களை உபயோகிக்க ஆரம்பிக்கும். அப்படி எல்லா இயல்புகளையும் உடைத்துக்கொண்டு சுற்றி இருக்கும் சாதரணங்களுக்கு நடுவில் எளிமையான தோற்றம் வைத்துக்கொண்டு மிக மிக அசாதரணமானவாகத் தெரிந்தான். உள்ளுக்குள் எல்லாவற்றிலும் தீர்மானமாக இருக்கும் இவனைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேனோவென்று தோன்றியது.

சட்டம் அறிதலில் இருக்கும் தணியா ஆசையைச் சொன்னேன். கோழைகளைப் பார்த்தால் எரிச்சல் வருவதைச் சொன்னேன். கொடுமைகளுக்குக் கைகட்ட முடியாத ஆற்றாமையைச் சொன்னேன். கம்யூனிஸ்ட் தலைவர் பாப்பா உமாநாத் பெண் நிர்மலா உமாநாத்- சிதம்பரம் பத்மினி வழக்கில் ஆஜரானவர் இங்குதான் படித்தார் என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் சொல்லிக்கொண்டே போனேன். முதன்முறையாக எதிராளிக்குச் சமமாக என்னால் பேசமுடியவில்லை என்பதை உணர்ந்தேன். ஆனால் அப்படி அவனுக்குமுன் அறிவு குறைவாய் இருப்பதே சுகமாய் இருந்தது. இருக்கும் கொஞ்ச அறிவையும் அழித்து எல்லாவற்றையும் புதிதாக அவனிடம் கற்கவேண்டும் என்ற ஆசை வந்தது.

முக்கால்மணி நேரமாகப் பேசிக்கொண்டிருந்திருக்கிறோம். சிலர் விநோதமாகப் பார்த்துவிட்டுப் போனார்கள். பேச்சை மெதுவாக பெர்சனலுக்குத் திருப்ப எண்ணி, “அப்பா இல்லையா? அம்மா என்ன செய்றாங்க?” என்றேன். கொஞ்சம் ஆங்கிலம் குறைந்து பிராமணத் தமிழில் சகஜமானோம்.

“அன்னிக்கே உங்கப்பாகிட்ட சொன்னேனே எல்லாம்.”

திடுக்கிட்டேன். “சாரி, நான் அன்னிக்கி கவனிக்கலை”.

“ஆமா, எங்க பேச்சை கவனிக்காம சுவத்துல மாட்டியிருந்த என் குட்டிப்பாப்பா ஃபோட்டோவே பார்த்துண்டிருந்தீங்க”, (முதல் முறையாக) சிரித்துக்கொண்டே சொன்னான். அடித்து ஆடுவது என்பது இதுதானா? அவமானத்தில் தலைகுப்புற விழுந்தேன். எனக்கே அன்று என்ன செய்திருக்கிறேன் என்று தெரியவில்லை. ‘அப்படியா!’ என்று கேட்டால் நம்புவானா? ‘உனக்கு எப்படி அது தெரியும்? என்னையே பாத்துண்டிருந்தியா?’, திருப்பிக் கேட்டு, கேவலப்படுத்தவேண்டும் போல் மனசு தவித்தது.

தான் 2 வயதுக் குழந்தை, அக்காவிற்கு நான்கு வயது இருக்கும்போது சிமெண்ட் ஃபாக்டரியில் வேலைபார்த்த அப்பா இறந்தது, பள்ளியிறுதி மட்டுமே படித்திருந்த அம்மாவிற்கு கம்பெனி, கடைநிலை ஊழியர் வேலை கொடுத்தது, ஆனாலும் அம்மா தளராமல் மேலே டைப்ரைட்டிங் எல்லாம் படித்து க்ளார்க் ஆகி குவார்ட்டர்ஸில் தங்கி தங்களை வளர்த்தது, அத்தை பையன் புண்ணியத்துக்கு அக்காவைக் கல்யாணம் செய்துகொண்டு காம்ரூன் போனது, அம்மா சுகரில் உடல்நிலை மோசமாகி வாலண்டரி ரிடையர்மெண்டில் வந்த பணத்தில் சமாளித்து படித்துக் கொண்டிருப்பது, அப்பா, அம்மா மேல் இருந்த நன்மதிப்பில் கம்பெனி இவன் படிப்பு முடிந்ததும் வேலை தருவதாகச் சொல்லியிருப்பது, அதிக பணச்செலவு இல்லாதததும், லேபர் வெல்ஃபேர் ஆஃபீஸர் ஆக வேண்டும் என்ற கனவிற்காகவும் சட்டம் படிப்பது, ஒரு புத்தகம் வாங்காமல் லைப்ரரியையும், ஆசிரியர்களும் உதவுவது வரை.. எல்லாம் என் அப்பாவிற்கு சொன்னதுபோல் இல்லாமல் உணர்வுபூர்வமாக, விஸ்தாரமாகச் சொல்லி முடித்தான். அம்மா பாசம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அத்தோடு நிறுத்தியிருக்கலாம்.

“இந்தப் பாட்டு, கூத்து ப்ரைஸ் வாங்கறதெல்லாம் ஸ்கூல்லைஃப் ஃபாண்டஸியா இருக்கணும். காலேஜ்ல, அதுவும் சட்டம் மாதிரி படிப்புக்கெல்லாம் நிறைய டெடிகேஷன் வேணும். நீங்க சொல்ற லட்சியங்கள் எல்லாம் உண்மையாவே உங்களுக்கு இருந்தா மத்த எல்லாத்தையும் நிறுத்தி, அந்த நேரத்துலயும் சப்ஜெக்ட் நாலெட்ஜ் இம்ப்ரூவ் பண்ணப்பாருங்க.”

“இல்லை, நான் நல்லா படிப்பேன்!” எல்கேஜி பெண்ணைப் போல் கூவினேன். அவனைப் போல சன்னமாகப் பேசப் பழகவேண்டும் என்று நாக்கைக் கடித்தேன். என் படிப்பையும் ஆர்வத்தையும் குறைத்து மதிப்பிட்டுவிட்டானே என்ற எரிச்சல் எட்டிப் பார்த்தது. Extra curricular activities வைத்திருக்கிறவர்கள் மதிப்பெண் வாங்கமாட்டார்கள் என்ற மூடநம்பிக்கை ஒழியாதா?

“படிப்புன்னா இனிமே ஸ்கூல் மாதிரி எவ்வளவு மார்க் வாங்கறீங்கன்னு இல்லை. எடுத்த சப்ஜெக்ட்ல எவ்வளவு நாலெட்ஜ் acquire பண்றீங்கங்கறதுதான். மத்த ஆக்டிவிடிஸ் குறைஞ்சா இதுல சாதிக்கலாம். காலைல கூட்டத்தோட உங்களைப் பார்த்ததுலேருந்து சொல்லணும்னு நினைச்சேன். இப்ப சொல்லிட்டேன்.” எழுந்தான். இதைச் சொல்லத்தான் என்னோடு இவ்வளவு நேரம் பேசினானா? [பின், போட்டிக்குப் பாடியதைப் பாடச்சொல்லிக் கேட்பான் என்றா எதிர்பார்க்க முடியும்?]

அட்வைஸ்! வேறு யாராவது சொல்லியிருந்தால் எப்படி எதிர்வினை செய்திருப்பேன் என்று தெரியவில்லை. ஆனால் அவன் சொன்னது தாங்கமுடியாததாக இருந்தது. எதிர்ப்பாக இன்னும் நிறைய எல்லாவற்றிலும் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்று வீரசபதம் செய்துகொண்டே வீட்டுக்கு போனேன். மாறாக அன்றைக்கே எல்லாவற்றிற்கும் மங்களம்பாடினேன். பாட்டு வாத்தியார், ஸ்கூல் தமிழ் டீச்சர், அம்மா என்று ஆளாளுக்கு காரணம் புரியாமல் அவ்வப்போது ஷிஃப்ட் போட்டுப் புலம்பிக்கொண்டே இருந்தார்கள்.

அதன்பின் நடந்தவை அதிரடி மாற்றங்கள். யாரோடும் ஐந்து நிமிடத்திற்குமேல் பேச ஒன்றுமில்லைபோல் தாங்கமுடியாத கொடுமையாக இருந்து, எல்லோரையும் தவிர்த்தேன். கொஞ்சம் விட்டு விட்டு சந்தித்துப் பேசிய நாங்கள் பின்னர் ஏதோ புரிந்தாற்போல தினமும் கைப்பிடிச்சுவரில் கூடினோம்.

புதுவருடத்திற்கு நானே சொந்தமாக ஒரு வாழ்த்து வரைந்தேன். எப்பொழுதும், வரையும் ஓவியத்தோடு கலந்த உணர்வில் வண்ணங்களைக் குழைப்பவள், முதல்முறையாக வரைபவனுக்கான எண்ணங்களில் குழைந்து வரைந்திருந்தேன். முடிவில், ‘வேறு வேலையில்லையா?’ என்று திட்டுவானோ என்று பயந்து மறைத்துவிட்டு கடையில் வாங்கிக் கொடுத்தேன். அப்படியும் விதி விரட்டிய ஒருநாளில் அவன் நல்ல மூடில் இருக்கும் போது மிகவும் தயங்கித் தயங்கி ஹாண்ட்பேகிலிருந்து ஒரு பேப்பரை எடுத்துக் காண்பித்தேன்.

தனிமை நீக்கித்
தனிமை திணித்தாய்

என்று எழுதியிருந்தது. “என்ன இது?” என்று ஆவலாகக் கேட்டான். “ஸ்கூல் படிக்கும் போது நிறைய கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டின்னு பரிசு வாங்கியிருக்கேன். தமிழ் டீச்சருக்கு நான் செல்லம். இப்பல்லாம் எழுதறதில்லை. புக்ஸ் படிக்கறதோட சரி. இது, உங்களைப் பத்தி செகண்ட் ஹவர்ல பாதி க்ளாஸ்ல நினைச்சுப் பார்த்தேன். ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா உடனே தோணினத எழுதணும்னு நினைச்சு எழுதினேன். இது முழுக்கவிதை இல்லை. சும்மா ரெண்டே லைன். நல்லா இருக்கா?” உருகப் போகிறான், உலக இலக்கியம் இதுதான் என்று சொல்வான் என்றெல்லாம் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது.

‘புரியலையே!’ என்று கட்டைவிரல் நகத்தால் நெற்றியைக் கீறிக்கொண்டான். காற்றுப் போன பலூனாகிப் போனேன். “I meant..” என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்து, அவன் கண்களைப் பார்க்க முடியாமல் கொஞ்சம் பயமும் வெட்கமுமாகி, தமிழுக்கு மாறி.. “நீங்க வந்ததிலேருந்தே I never felt alone..”

கொஞ்சம் பொறுமை இழந்திருந்தான். முகம் இறுகியிருந்தது. “ம்!” என்ற அவன் ஒற்றை எழுத்து உச்சரிப்பில் ஒட்டுமொத்த ஆண்மையையும் உணர்ந்து மிரண்டேன்.

மேலே சொல்லவராமல் உலக மொழிகள் எல்லாம் ஒத்துழைக்காமல் துரோகம் செய்வதாகப் பட்டது. என்ன எழவுக்கு இந்தப் பேச்சை ஆரம்பித்தேன் என்று என்னையே நொந்தேன். இனி பாதியில் இவனிடமிருந்து தப்ப முடியாது. கொஞ்சம் நிறுத்தி, தயங்கி, தலையைக் குனிந்துகொண்டே, “ஆனா என்கூட இருந்த மத்த எல்லாரையும் நீங்க வந்ததும் தவிர்த்து ரொம்பத் தனியாயிட்டேன். அதான் சொல்ல நினைச்சேன்.” ஒருவழியாக மெல்லிய குரலில் சொல்லி முடித்து வியர்த்தபோது நாக்கு மேலன்னத்தில் ஒட்டியிருந்தது. அவன் எதுவுமே சொல்லவில்லை. எனக்கு மொத்த இரத்தமும் சூடாகி நெற்றிக்குப் பாய்ந்திருந்தது. எங்களுக்கிடையில் இருந்த அந்த அரை நிமிட மௌனம் தாங்கமுடியாத கொடுமை. அவனுக்குப் பிடிக்கவில்லை என்று புரிந்தது. எந்த நிமிடமும் என் இயல்புக்கு மாறாக அழுதுவிடுவேனோ? அழும்போது வரும்கண்ணீரை எப்படித் துடைத்துக் கொள்வது என்று யாராவது சொல்லிக் கொடுக்கவேண்டும். எனக்கு அனுபவமில்லாதது. கொஞ்சம் கோபம் குறைந்து தணிந்த குரலில், “இதை எதுக்கு இப்படி புரியாம சுத்திவளைச்சு சொல்லணும்? இந்தக் கவிதை கண்றாவி எல்லாம் உங்களுக்கே கொஞ்சம் absurd-ஆ தெரியலை? இதை எழுத எவ்வளவு நேரம் யோசிச்சீங்க?..”

நான் வாங்கிய பரிசுகளும் பாரதியும் ஷெல்டனும் கைகொட்டிச் சிரித்தார்கள். எனக்குச் சம்மதமில்லாமலேயே என் நிலையிலிருந்து நான் இப்படியெல்லாம் இறங்கிக் கொண்டிருந்த காரணம் புரியவில்லை. கடகடவென்று கண்களிலிருந்து நீர்பெருகி கையில் டொக்கென்று விழுந்தது. பதறிப்போனான். “இப்ப எதுக்கு அழறீங்க? See மஞ்சு, எனக்கு இதெல்லாம் கொஞ்சம் புரியறதில்லை. அவ்ளோதான். மத்தபடி இது கவிதைதானோ என்னவோ; எனக்குத் தெரியலை. ஆனா என்கிட்ட ஏதாவது பேசணும்னா நேராவே சொன்னாதான் எனக்குப் புரியும்.” சும்மா மேலுக்கு என்னைச் சமாதானம் செய்கிறான் என்று அடுத்த இரண்டு நிமிட மௌனத்திற்குப்பின் அவன் பேசியதில் புரிந்தது.

“இந்தக் கவிதை, கதை, பட்டிமன்றம், வழக்காடுமன்றம், இலக்கியம், லேகியம் இதெல்லாம் எனக்குக் கொஞ்சம் அலர்ஜி. புரியறதுமில்லை. சட்டத்துக்கு ஆங்கில அறிவு எவ்வளவு வேணும்னு உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை. ட்ராஃப்டிங்லயே உங்க திறமை தெரியணும். அப்படி உங்க இங்லீஷ் டெவலப் செஞ்சுண்டீங்கன்னா ஐ’ வில் பீ ஹாப்பி.”

நல்லவேளையாக ‘..against nature, you transformed a butterfly into larva..’ என்றெல்லாம் நான் ஆங்கிலத்தில் அவனைப்பற்றி ஒளறியிருந்த முழுநீள (அ)கவிதைகளைக் காண்பிக்கவில்லை என்று நிம்மதியானேன். அப்புறம் இந்தச் சந்திப்பை மட்டும் எப்போது நினைத்தாலும் சிரிக்காமல் இருந்ததுமில்லை. ஆனாலும் நான் எப்படி இருந்தால் அவனுக்கு சந்தோஷம் என்று சொல்லி எடுத்துக்கொண்ட உரிமையில் பூரித்தேன். ‘உன்னை சந்தோஷப்படுத்துவதைவிட வேறு என்ன வேலை’ என்று சொல்லிக்கொண்டேன். உண்மையிலேயே இதெல்லாம் அபத்தம்தான் என்று தோன்றியது. நல்ல பேச்சை ஒளறியே கெடுத்தேன் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, நான் கொடுத்த பேப்பர் தன் சட்டைப்பையில் பத்திரமாக இருக்கிறதா என்று ஒருமுறை தொட்டுப்பார்த்துக் கொண்டு கிளம்பினான்.

இப்படியாக என் மற்றபிற இயக்கங்கள் எல்லாம் நின்றுபோய் வாழ்க்கையே சட்டமும் சட்டம் சார்ந்த திணையுமாய் ஆக அந்த 2 வருடங்கள் ஓடிப்போய் ஸ்ரீதர் படித்துமுடித்து சிமெண்ட் ஃபாக்டரியில் அப்போதைக்குக் காலியாக இருந்த பெர்சனல் ஆஃபீஸராய்ச் சேர்ந்து மீண்டும் குவார்ட்டர்ஸ் மாறி இருந்தான். ஒரு நாள் புதிதாக வாங்கிய கைனடிக்கில் என்னைத்தான் முதல் ரவுண்ட் அழைத்துப்போக வேண்டும் என்று(அதைச் சொல்லமாட்டான்; அழுத்தம்) மூன்றாவது வருடம் காலேஜுக்கு வந்தான். மேலே labour welfare ஸ்பெஷலைஸ் செய்வதைச் சொன்னான். கொஞ்சம் பிரிந்து சந்தித்ததில் அதிக நெருக்கமாக உணர்ந்தோம். சட்டம், படிப்பு என்று இல்லாமல் எல்லா விஷயமும் அவசர அவசரமாக, தடையே இல்லாமல் பகிர்ந்துகொண்டோம். எப்பொழுதும்போல் படிப்பைப் பற்றியே பேசாமல் கொஞ்சம் வேறு தேடலோடும் என்னோடு பேசுகிறான் என்று தோன்றியது. வேலைபார்ப்பதில் புருஷ லட்சணம் கூடி இருந்தான். நான் இன்னும் இன்னும் என்னை இழந்துகொண்டிருந்தேன்.

அதன்பின் வாரம் ஒரு ஃபோன், மாதம் ஒருமுறை விசிட் என்று கருணை காண்பித்தான். சந்திப்பைவிட அதற்காகக் காத்திருப்பது சுகமாக இருந்தது. “எப்படி இப்படி கண்ட்ரோலா இருக்கீங்க? இண்டெலக்சுவல் லவ்வா?” என்று உஷா என்னிடம் கேட்டதற்கு, ராஜரத்னம், “காதல்ல படிக்காத பட்டிக்காட்டான், இண்டெலக்சுவல் காதல்னெல்லாம் கிடையாது. எல்லாமே மூட்டைலேருந்து மொத்தமா கொட்டின கத்திரிக்கா காதல்தான். என்ன, நம்பள மாதிரி இல்லாம ஒருத்தருக்கொருத்தர் சாதிச்சுக்காட்டணும் ஓடறாங்க போல இருக்கு” என்று உஷாவிடம் தத்துவம் உதிர்த்துவிட்டு என்னிடம் நக்கலாக, “மஞ்சுளா, அடுத்ததடவை சொல்லிவை பையன்கிட்ட, ரொம்ப நடிக்கவேணாம், தரை இறங்கச் சொன்னேன்னு”. கொஞ்சம் ரசங்குறைந்த பேச்சாக இருந்தாலும் அதன்பின்னே இருந்த உண்மை என்னை நடுக்கியது. ஏன் இப்படி இருக்கிறோம் எல்லோரையும்போல் இல்லாமல். உடனே பார்க்கவேண்டும் போல் இருந்தது. அவனுக்கும் அப்படி இருக்குமா? அதைச் சொல்லமுடியாமல் எது தடுக்கிறது?

-o-

மூன்றாம் வருடம் முடிந்து நான்காம் வருடம் ஆரம்பித்த ஒரு மாதத்தில்தான் அப்படி, தனியாக அப்பாவை அனுப்பிவிட்டு அரையடிச்சுவரில் அசோகமரக் குச்சியால் கீறிக்கொண்டிருந்தேன். எதிர்பாராத நிமிடத்தில் ஸ்ரீதர் வந்துகொண்டிருந்தான். அதுவரை எல்லோருக்கும் புன்னகையைப் பதிலாக்க முடிந்த என்னால் அவனைப் பார்த்ததும் எப்படி இருக்கவேண்டும் என்று தெரியவில்லை. இப்போது முடிவு வந்துவிட்டது எங்கள் எல்லா மௌனத்துக்கும். முழுப் பெண்ணாய் உணர்ந்தேன் அவன்முன். வேகமாக என்னருகில் வண்டியை நிறுத்தியவன், “நீயும் என் உயிரை வாங்கறதுன்னு முடிவுபண்ணிட்டியா?,” திட்டியபடியே பக்கத்தில் வந்து அமர்ந்தான். அதிகம் களைப்பாக இருந்தான். அவனை அறியாமலே முதல்முறையாக என்னை ஒருமையில் அழைக்கிறான். எனக்குள் ஏகத்துக்குக் நொறுங்கி சிதைந்து கலைந்து பின் சேர்ந்தேன். அத்தனை துக்கமும் விலகியதுபோல் இருந்தது அவன் எடுத்துக்கொண்ட உரிமை. பதில் சொல்லாமல் ‘எப்படி இருக்காங்க அம்மா?’ என்றேன். இப்போது அவனிடம் எனக்கு தைரியம் வந்திருந்தது.

ஏழெட்டு நாள்கள் முன்பு வழுக்கிவிழுந்த அவன் அம்மா தலையில் அடிபட்டு, சுகரும் அதிகரிக்க பின், டாக்டரால் பதில்சொல்லமுடியாத பக்கவாதத்திற்குப் போயிருந்தாள். ஸ்ரீதர் வாழ்க்கையே ஒருமுறை நின்று மீண்டும் புரியாமல் இன்னும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் ஆவதை எனக்குச் சொல்ல வீட்டுக்கு ஃபோன் செய்தால் அப்பா எடுத்து என் அழிச்சாட்டியத்தையும் நான் இங்கு இருப்பதையும் சொல்லி கோபத்தில் ஃபோனை வைத்திருக்கிறார். அடித்துப் பிடித்து ஓடிவந்திருக்கிறான். “உங்கம்மாவைப் பாத்துக்க உதவிக்கு அந்த சொந்தக்காரப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறியான்னு உங்கக்கா ஃபோன்ல கேட்டாங்கன்னு சொன்னீங்களே, செஞ்சுப்பீங்களா?”

கோப உச்சிக்குப் போனான். “அறிவு இருக்கா உனக்கு? கல்யாண வயசா எனக்கு? என்னை ஒரு வார்த்தை கேக்காம படிப்ப டிஸ்கன்டின்யூ செய்வியா? உன்னை மாதிரி உணர்ச்சிவசப்படற கூட்டம் வாழ்க்கைக்கு லாயக்கில்லை.”

இத்தனை நாள் எனக்கு அவனிடம் இருந்த பயமெல்லாம் காணாமல் போயிருந்தது. தலைக்குமேல் வெள்ளம் போல் தைரியமாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். என்னிடம் கோபித்துக் காரியம் ஆகாது என்று புரிந்து குரலை இறக்கி, தானும் இறங்கி வந்தான். “எவ்ளோ ஆசை வெச்சிருந்த படிப்புல. எவ்ளோ கஷ்டப்பட்டிருப்ப. நானே உன்னைப் பத்தி எவ்ளோ கனவு கண்டேன்! ஏன் இப்படி செஞ்ச என்னக் கூட ஒரு வார்த்தை கேக்காம?”

“உனது கண்களில் எனது கனவினைக் காணப்போகிறேன்..” மெல்ல அடிக்குரலில் உள்ளுக்குள் மகிழ்ச்சியும் வெளியே திமிருமாகப் பாட ஆரம்பித்தேன். ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்.. எல்லாம் சொல்லவே ஓர்நாள் போதுமா..’ வேறொரு சமயமாக இருந்தால் சினிமா பாட்டிற்கே சாத்தியிருப்பான். எனக்கே இப்படிப் பாடுவது செயற்கையாக இருந்திருக்கும். இன்று ஒன்றும் சொல்லாமல் அவன் இதற்குமுன் பார்த்திராத என் தைரியத்தில் கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு அடங்கிக் கொண்டிருந்தான். “உங்கப்பா முகத்துலயே நான் முழிக்க முடியாம செஞ்சிருக்க மஞ்சு. என்ன செய்யப் போறேன்னு தெரியலை.” தன்மையாகப் பேசினான். அவன் என்னை ஒருமையில் பேசப்பேச நான் செத்துக் கொண்டிருந்தேன். அப்பா ஆசையையெல்லாம் நிறைவேற்றி ஆனால் இவன் கிடைக்கவில்லையென்றால் அப்புறம் என் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை. வேறு யாருடனாவது நான் என்னை நினைத்துக்கூடப் பார்க்க முடியுமா? ஏன் புரியாத மாதிரி நடிக்கிறான்?

“எனக்கு அதெல்லாம் வேணாம்; நீங்கதான் வேணும்.” கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தான். இதுவரை காதலிக்கிறேன் என்றெல்லாம் நாங்கள் சொல்லிக்கொள்ளத் தேவை இருந்தது கிடையாது. திருமணம் தீர்மானிக்கப்பட்ட ஒன்றுபோன்ற புரிதல் இருவருக்கும் இருந்தது. சரியான பருவத்தில் திருமணம் என்றால் எங்களுக்குள் ஜாதியில் இருந்த உட்பிரிவு வேறுபாட்டிற்கே என் வீடும் ஊரும் ஓர் ஆட்டம் போட்டிருக்கும். இப்போது என்னுடையது இடி விழுந்த வீடாக இருந்தது. செய்தி கிடைத்து நான் மருத்துவமனைக்கு அவன் அம்மாவைப் பார்க்க என் அப்பாவோடு போயிருந்தபோது 4 நாள் தாடியோடு இருந்தான்; எல்லாம் சொன்னான். அவனை அச்சில் எடுத்தாற்போன்ற அவன் அம்மாவைப் பார்த்ததும் நெகிழ்ந்து போனேன். எது நடந்தாலும் தைரியத்தையும் ஸ்ரீதரையும் இழந்துவிடக் கூடாது; உலகம் எப்படியோ நாசமாகப் போகட்டும், நாமென்ன புரட்டிவிடப் போகிறோம் என்று மட்டும்தான் தோன்றியது.

“சரி, அம்மாவ ரெண்டுநாள்ல டிஸ்சார்ஜ் செஞ்சுடுவாங்க. அப்பறம் யார் பாத்துக்குவாங்க.. அம்மா நிலைமை, லீவு, பணப்பிரச்சனைன்னு எல்லாம் என்னை அழுத்துது. எங்க அத்தைதான் இப்ப இருக்காங்க. அக்காவுக்கு ஃப்ளைட் கிடைக்கலை. இன்னும் ரெண்டுநாள்ல வருவா. அப்புறம் இதைப் பத்தி பேசலாம். புரிஞ்சுக்க. இப்ப என்னால ஒண்ணும் யோசிக்கக் கூட முடியல மஞ்சு. பிரின்சிபால பார்த்து ஒரு வார்த்தை சொல்லிட்டுக் கிளம்பலாம்”, முதல்முறையாக தன் இடக்கையால் என் கைப்பிடித்து (வாட்ச் கூட கட்டாமல் வந்திருந்தான்.) நடந்தான். எனக்கென்னவோ அதில் நிம்மதியை உணர்கிறான் என்றுதான் தோன்றியது. பேசாமல் நடந்தோம். எனக்கு இதயமே நின்றிருந்தது. மாடிப்படித் திருப்பத்தில், “நல்லாப் பாடற.. எனக்குத்தான் இதுக்கெல்லாம் தகுதி இருக்கான்னு தெரியலை” கிசுகிசுப்பாய்ச் சொன்னான்.

மகிழ்ச்சி மீறுதே.. வானைத் தாண்டுதே.. சாகத் தோன்றுதே..

-o-

ரிசப்ஷனில் ஆளே அடையாளம் தெரியாமல் மேக்அப் போட்டுக்கொண்டு, உன்னிகிருஷ்ணனுக்கு ஒரிஜினில் நகுமோவுக்குச் சீட்டுக் கொடுத்து பாடச் சொல்லி, புதுப்புருஷன் பக்கத்தில் மாலையும் கழுத்துமாய் நின்றுகொண்டே உன்னியை சைட் அடிக்க வேண்டும் என்ற கல்யாணக் கனவுகள் எல்லாம் தகர்ந்து அடுத்த இருபதாம் நாளில் அவர்கள் குலதெய்வம் சங்கரன் கோவிலில் 15 பேர் சாட்சியாக திருமணம் என்று ஒன்று நடந்தது. இந்த இருபது நாளைக்குள் இந்திய சினிமா மற்றும் தொலைக்காட்சி வரலாற்றையே மிஞ்சக் கூடிய தாலி செண்டிமென்டில் என்னையே நம்பமுடியாமல் நான் தவித்துக் கொண்டிருந்தேன்.

அப்புறம் ஒரு வருடம் ஓட்டமாய் ஓடியது. அப்பா ஒருமுறை அதிர்ச்சியில் படுத்து எழுந்தார். என்னைப் போல் அம்மா தைரியம் என்பதால் (அல்லது அம்மாவைப் போல் நான்?) சமாளித்தாள். அண்ணன்கள் சிறு அதிர்வில் அடங்கினார்கள். எல்லோரையும் ஸ்ரீதரின் நல்ல குணம் கட்டிப் போட்டது. உறவுகளுக்கு பதில் சொல்லவே அதிகம் பயந்தார்கள் என்று தோன்றியது. இரண்டு மாதம் முன்பு மாமியார் இறந்தார். இறந்ததற்கு வந்த நாத்தனர் தன் மாமியார் (ஸ்ரீதரின் அத்தை) எங்களுடன் இருப்பார் என்று சொன்னாள். பணம் காசுக்குக் குறைவில்லை. ஆனால் பிள்ளை வெளிநாட்டில் இருப்பதால் தனியாய் இருக்க பயந்து எங்களுடன் இருக்கிறேன் என்று வந்தார்; மிகவும் உதவியாக இருந்து வருகிறார். வரிசையாக, புதிதுபுதிதான கடமைகளும் பழக்கமில்லாத வேலைகளும் அழுத்தினாலும் உணரமுடியாத மாதிரி எல்லாவற்றையும் ஸ்ரீதரின் காதல் மூழ்கடித்தது.

மேல்படிப்பு முடித்து லேபர் வெல்ஃபேர் ஆஃபீஸரானபின் முழுமூச்சாக வேலையில் இறங்கினான். வேலை தாண்டியும் எப்பொழுதும் தொழிலாளர்களின் மேல் இருந்த அக்கறை மற்ற எல்லாவற்றையும் முந்த, அரசியல் கட்சிகளாகப் பிரிந்து இருந்த தொழிலாளிகளும் கட்சிகளும் கூட இவனிடம் ஒரேமாதிரி தான் பழகினார்கள். ஊரிலிருந்த கட்சித் தலைமைகள் நேர்மைக்கு முன் வாயடைத்தன.

சரஸ்வதிபூஜையன்று அலுவலகத்துக்கு, பூஜைக்குக் கூட்டிப்போன இடத்தில் எல்லோரையும் பாடச் சொன்னார்கள். மேலதிகாரியின் பெங்காலி பெண்டாட்டி பொருந்தா மேக்கப்புடனும், சில கிக்கிபிக்கி சிரிப்புக்கு நடுவிலும் எதையோ பாட, சில தொழிலாளிகளின் மனைவிகளும் வெட்கத்தோடு பாடுவார்கள் என்ற சூழ்நிலை இருந்தது. பக்கத்தில் மிஸஸ் ரெட்டியுடன் பேசிக்கொண்டே, இந்தக் கூட்டத்திற்கு எந்த மாதிரிப் பாடல் எடுபடும் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, ஸ்ரீதர் அருகில்வந்து ‘பாடவேண்டாம்’ என்று எனக்கு மட்டும் கேட்கிறார்போல் சொன்னான். ‘முன்னால பாடின சர்க்கார் வைஃபுக்கு embarassing-ஆ இருக்கும்; இனி பாடப்போறவங்களும் தயங்கலாம். ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட்” சொல்லிவிட்டு தூரத்தில் நண்பர்களுடன் பாண்ட்பாக்கெட்டில் கைவிட்டுக் கொண்டு சிரித்துப் பேசிக் கொண்டிருப்பவனைப் பெருமையுடன் பார்த்தேன். எப்படியெல்லாம் மற்றவர்களுக்காகச் சிந்திக்கிறான்.

நேற்று தன் பிறந்தநாள் என்று தெரிந்தும் ஓர் இறந்த தொழிலாளியை காடுவரை சென்று எரியூட்டியபின் லேட்டாக வந்தான். வந்தும் சாப்பிடாமல் அமர்ந்திருந்தான். எனக்குக் கவலையாக இருந்தது. எதையாவது சொல்லி முதலில் பேசவைக்க வேண்டும். “கலாப்ரியாவோட கவிதை ஒண்ணு.. ‘உயிர்த்தெழுதல்’னு..” ஆரம்பித்த அடுத்த நொடி “வெளில போ!” ஆத்திரம் அத்தனையும் அடுக்கடுக்காய் அழுந்த மடித்த கனத்தோடு அவனிடமிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன. அதிர்ந்தேன். அவமானமாக இருந்தது. பர்வதம் அத்தை சாப்பிட்டுப் படுத்துவிட்டிருந்தாள். பெட்ரூமுக்குப் போய், ‘அம்மா ஊரில் இல்லை நான் மட்டுமாவது வந்து மாப்பிள்ளையைப் பார்க்கிறேன்’ என்று சொல்லியிருந்த அப்பாவை வரவேண்டாம் என்று ஃபோன் செய்தேன். பேசாமல் படுத்துக் கொண்டேன். அழத் தெரிந்தவர்கள் பாக்கியவான்கள். எனக்குத் தெரியவில்லை.

அரைமணிநேரம் கழித்து அறைக்குள் வந்தவன், மன்னிப்புக் கேட்பதற்கோ, தன்னிலை விளக்கமாகவோ பேச ஆரம்பித்தான். “அந்தக் குடும்பத்தைப் பாத்ததும் எனக்கு எங்கம்மாவும் இப்படித்தானே நின்னிருப்பான்னு தோணிடுத்து. என்னால தாங்கவே முடியலை மஞ்சு. ஏற்கனவே சிமெண்டு ஃபேக்டரி தூசு; அதுல குடிப்பான் போல இருக்கு, குடல் நுரையீரல் எல்லாம் போய்.. காப்பாத்த முடியலை. சின்னச் சின்னதா மூணு குழந்தைங்க. என்னால மத்தவங்க மாதிரி வேலை வேற, குடும்பம் வேறன்னு பிரிக்க முடியலை. நாட்டுக்கு ராஜா பத்துலேருந்து அஞ்சு மணி வரைக்கும் மட்டுமா ராஜா? ராணுவக்காரன் மாதிரி எப்பவும் அலர்ட்டாதான் என்னால இருக்கமுடியும். அதே எண்ணத்தோட வளர்ந்துட்டேன். இந்த மாதிரி கவிதை எழுதி இரங்கற்பா படிக்கறதவிட நீ புருஷன் போன அந்தப் பொண்ணப்பார்த்து பேசி ஏதாவது வேலை சம்பந்தமா என்ன தெரியும்னு கேட்டு உதவினா நல்லாயிருக்கும். ஆணா நான் செய்யறதவிட நீ அதிகம் செய்யமுடியும் இந்தமாதிரி குடும்பங்களுக்கு.”

அவ்வளவுதான். பாய்ந்து கட்டிப்பிடித்து இழுத்துக் கொண்டேன். எவ்வளவு பெரியவன் இவன்; எப்படிப்பட்டவனைப் பிடித்திருக்கிறேன். காதல் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து.. காலையிலிருந்து துளிர்விட்ட எண்ணம் மேலெழுந்தது. காலையில் ஸ்ரீதர் க்ளாஸ்மேட் ப்ரதீப் வாழ்த்துச் சொல்ல வந்திருந்தான். குடும்பமே வயசுக்கு வந்ததும் வக்கீலாகிவிடும் பரம்பரை. வாய் ஒயாத பேச்சுக்கிடையில் “மஞ்சுளா, இப்படியே உக்கார்ந்திருந்தா நீ குண்டடிச்சுடுவ. சோஷியல் சர்வீசா ஃப்ரீ லா கன்சல்டன்சி செஞ்சு தரோம் எங்க ஃபேமிலி. பெண்கள் பிரிவுக்கு டெம்பரரியா பொறுப்பு எடுத்துக்க முடியுமா? சில பேப்பர் உனக்கு excemption கிடைக்கும். போஸ்டல்ல லா கிராஜுவேஷன் முடிச்சா முழுக்க நீயே பார்த்துக்கலாம். உன் ஆர்வமும் பேப்பர் முடிக்காட்டாலும் உன் திறமையும் டெடிகேஷனும் தெரிஞ்சே இதை எங்கப்பாகிட்ட சொல்லிட்டு உனக்குத் தரேன்.” பழைய ஆசைகள் கிளப்பப்பட்டதுபோல் உணர்ந்தேன். நாளையிலிருந்து புதிதாக பழையதையெல்லாம் ஆரம்பிக்கலாம். அத்தை உதவிக்கு இருக்கிறாள். ஸ்ரீதரிடம் சொல்ல நேரம் அமைந்தது என்று சந்தோஷப்பட்டேன்.

“ப்ச், நான் உன் ஆசையெல்லாம் தெரிஞ்சுதான் ஆரம்பத்துலேருந்து உன்னைவிட்டு விலகியே இருக்கணும்னு நினைச்சேன். ஆனா ஒரு மோசமான சூழ்நிலைல நீ முடிவெடுத்து நாம் சேர்ந்துட்டோம். ஏற்கனவே ஒரு வருஷம் என்ன வாழ்ந்தோம்னே தெரியாம ஓடிப் போயிடுச்சு. எல்லாத்தையும் ஓரமா வை. எவ்வளவு வேணுமோ வீட்டிலேருந்தே படி. இங்கயே என்னல்லாம் செய்யமுடியுமோ செய். முதல்ல ஒரு குழந்தை பெத்துக்கலாம். இரண்டு வருஷத்துல இன்னொன்னு தத்து எடுத்துக்கலாம். எங்கயும் வேலைக்குன்னு வெளில கமிட் பண்ணிக்காத. நீ வீட்டுல இருக்கேன்னா என்னால முழு நானா என் வேலைகளைச் செய்யமுடியும். எனக்கும் என் குழந்தைகளுக்கும் எப்பவும் நீ வேணும். சின்னவயசுல எங்கம்மா வேலைக்குப் போய் நாங்க இழந்ததுதான் அதிகம். நம்ப குழந்தைகளுக்கு அது தேவையில்லை. என்ன சொல்ற..” நெருக்கினான்.

குழந்தை என்ற வார்த்தையில் சொக்கிப்போனேன். முதல்சந்திப்பில் ஸ்ரீதர் வீட்டில் அவன் ஃபோட்டோவையே பார்த்துக்கொண்டிருந்தேன் என்று சொன்னது ஞாபகம் வந்தது. அவனையே வாங்கிச் சுமந்து, ‘இந்தா!’ என்று அவனுக்கே கொடுக்கப் போகிறேன். அப்புறம் தெரியும் நான் யாரென்று. யுக யுகமாய் அவ்வளவு உயிரினங்களும் செய்துகொண்டு வரும் சாதாரண விஷயம்தான் பெற்றுப் போடுவது என்றெல்லாம் தோணவேயில்லை. நான் மட்டும் ஏதோ பெரிய சாதனை செய்யப் போகிறேன் போல் தோன்றியது. “பாப்பா யார் மாதிரி இருக்குமோ?.. நாளைக்கு நீ சும்மா லீவு போடணும் எனக்காக, சரியா?.. ப்ரதீப் திரும்ப கேட்டா, ‘போடா, நான் பாப்பா பண்ணப்போறேன், வரலை’ன்னு சொல்லிடுவேன்.. உன் பர்த் டே நாளைக்கு செலிப்ரேட் பண்ணிக்கலாம்.. போனாப் போறது, நாளைக்கு ஒருநாள் உன்னைப் பாப்பாவா வெச்சுக்கறேன்.. டெலிவரி வரைக்கும் உன்கூடவே இந்த வீட்டுலதான் இருப்பேன்” முத்தங்களுக்கு நடுவில் பிதற்ற ஆரம்பித்தேன். இவ்வளவு நாள்களாக ஒவ்வொன்றாய் உள்ளே நழுவிக்கொண்டிருந்தது போக, குழந்தை எண்ணம் ஒட்டுமொத்தமாக என்னை உருவிப்போட்டது. மாமியாரின் இறப்பிற்குப்பின் சிறிது நீண்ட இடைவேளைக்குப்பின் முதல்முறையாய் மீண்டும் ஒருவரிடம் ஒருவரை இழந்துகொண்டிருந்தோம்.

மறுநாள் லீவுபோட்டு, முதல்வாரமே வாங்கிவைத்திருந்த கவிதைத் தொகுப்பைக் கொடுத்தான். “யார் எழுதியிருக்காங்கன்னெல்லாம் தெரியாது. சாலிடா நிறைய கவிதை இருந்தது இந்த புக்ல. வாங்கிட்டேன். உனக்குப் பிடிக்குமான்னு தெரியாது.” தயங்கிக் கொண்டே கொடுத்தான். ரசனை ஒத்துப் போகாமல் கணவன் மனைவி வாழமுடியாது என்று எந்த முட்டாள் சொன்னது? என் ரசனையை ஒத்த எந்த இலக்கியவாதியையும்விட, புரியாவிட்டாலும் என் ரசனையை மதிக்கும் இவன் உயர்ந்தவன் என்றே தோன்றியது. அப்பாவிற்கு ஃபோன் செய்து, நேற்று பார்க்கமுடியாததற்கு சாரி சொல்லி இன்று மதியம் வரச்சொன்னான். அத்தை வற்புறுத்தியதால் கோவில், அப்புறம் ஷாப்பிங் என்று சுற்றிவிட்டு வந்து சாப்பிட்டு நிம்மதியாக மதியம் தூங்குகிறான். நான் தான் தூக்கம் வராமல் பக்கத்து நாற்காலியில் புத்தகத்தை எடுத்துப் பிரித்துவைத்துக் கொண்டு படிக்காமல் பழைய நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருக்கிறேன். நான் பார்த்துக்கொண்டிருப்பது உள்ளுணர்வில் உணர்ந்தோ என்னவோ விழிப்பு வந்து திரும்பிப்படுக்கிறான். சமீபத்தில் அம்மாவுக்குக் ‘காரியங்கள்’ செய்ததில் கொஞ்சம் இளைத்திருக்கிறான். கண்கள் சிவந்து ஒரு திருப்தியான தூக்கத்திற்குப் பின்னான தெளிவில் இருந்தவனின் கண்களைப் பார்த்து மயங்கித் தடுமாறித்தான் போனேன்.

“கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டஅப்
பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே”

திருப்பாணாழ்வார் வந்து, ‘கொஞ்சிக்கோ!‘ என்று அடியெடுத்துக் கொடுத்துப் போனார். என் மனதைப் படித்தவன்போல் சிரித்துக் கொண்டே இடதுகையால் தனக்குப் பக்கத்தில் படுக்கையில் தட்டி ‘வந்து படு’ என்று சைகை செய்தான். பொய்க்கோபமாக டேபிள் மேலிருந்த பென்சிலைத் தூக்கி அவன்மேல் எறிந்தேன். வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டது.

ஜன்னல் வழியாக, படுத்துக்கொண்டே தலையைத் தூக்கிப் பார்த்த ஸ்ரீதர், அப்பா வருவது தெரிய, ‘மாமாவப் பாத்தே நாளாச்சு’, மரியாதையும் பாசமுமாக ஒரு தற்காலிகப் படபடப்போடு எழுந்து லுங்கியைச் சரிசெய்துகொண்டே வாசலுக்கு நடக்கையில்…

அதற்கும் முன்பாகப் பர்வதம் அத்தை ‘வாங்கோ, இருக்கா ரெண்டுபேரும்’ என்று தேவைக்கதிகமாக சிரித்துகொண்டே கதவைத் திறந்துவிட நெருங்குகையில்…

மிச்சப்பணத்தை வாங்கிக்கொண்டு ஆட்டோவை அனுப்பிவிட்டு, கைநிறைய பரிசுப் பைகளோடு வாசலிலிலிருந்தே அப்பாவின் பார்வை மட்டும் அனைவரையும் தாண்டிக்கொண்டு தன் பெண்ணைக் காண, துடிப்போடு வீட்டின் உள்துழாவும் போது…

உற்சாகமாகவும் சந்தோஷமுமாகவும் எழுந்த நான் புத்தகத்தில் படித்துக்கொண்டிருந்த பக்கத்தில் அடையாளம் வைக்கும்முன், கவிதையின்மேல் ஒருமுறை அவசரப் பார்வையை ஓட்டினேன்..

===
“சீதா கல்யாண வைபோகமே
ராமா கல்யாண வைபோகமே

சிவதனுசு நகர்த்திப்
பந்தெடுத்த சீதையை–
பின் எப்பொழுதுமே
பார்க்க முடிந்ததில்லை
ஜனகனால்.”
===

முற்றும்.