ன்னில்
எல்லா வாத்தியங்களையும்
இசைக்கப் பார்க்கிறாய்

பிறந்த குழந்தையாய் நீவீறிட்டபோது
கறந்தபாலின் தூய்மையையும்
மிஞ்சிய தாய்மையுடன் என்
மார்சுரந்த பாலருந்த மறுத்தாய்.
வீணையில் வயலினிசை
வேண்டும் என்றே இன்னும் அழுகை

ஓடிப்பிடித்த கதைகளும்
உன் ஒளிந்து விளையாடிய நினைவுகளும் கேட்டு
உச்சிமுகர்ந்தளித்த முத்தம் உணர்ந்தறியாய்.
வீணையில் குட்டிக்கண்ணனின்
குழலினிமை இல்லையென்றொரு குதிப்பு

மீசைவைத்த ஆசைக்கதைகளும்
மீண்டுவந்த காதல்பாதைகளும்
தோழியைப்போல் கேட்டபோதென்
தோளில்சாய்ந்த சுகமறியாய்
வீணையில் நாதஸ்வரத்தின்
நாதமில்லையென்றொரு நகைப்பு

காதல்கிறக்கத்தில் நீயும்
மோனத்திருந்த நேரத்தில்
உள்ளமும் உடலும்
அதன் நீட்சியாய்
உடையும் கூட சற்றேநெகிழ்ந்ததை
உன்னோடு நானும்கூட
உணராதுறைந்து நிற்கையில்
தவறிய தாளத்திற்கு வீணையொரு
மேளமில்லாததே காரணமென்று
காலால் எட்டியோர் உதைப்பு

எப்பொழுதாவது வீணையை
வீணைக்காய் நெருங்கியிருக்கிறாயா?

நாண்மீட்டத் தெரியாதவனின் கைகளில்
நாராசமாய் ஒலிப்பதைவிட
நஷ்டமில்லை வீணைக்கு
நலங்கெட்டுப்
புழுதிப்புனலில் புதைந்திருப்பது

தேடல் எனக்கான நிஜமாய்
அடக்க மாட்டா ஆர்வத்துடனும்
கடக்க மாட்டாக் காதலுடனும்
வரும்பொழுதினில்
தரையமர்ந்து
மடியேந்தி
நெஞ்சின் நெருக்கத்தில் அழுத்தி
இருகைகளால் இசைக்க வேண்டியதில்லை என்னை
நுனிவிரல் தீண்டினாலும் போதும்
நூறு நூறு ஸ்வரப் பிரிகைகளுள்
மூழ்கடிப்பேன் உன்னை
முழுதாய் சுவர்க்கம் சேர்ப்பேன்

அதுவரை
கிடந்துவிட்டுப் போகட்டும் வீணை
கலைமகளின் கைகளிலும்
கவனிப்பாரற்ற மூலையிலும்
மட்டும்.