பட்சணங்கள்


கார மிக்ஸர் – 1

 
தேவையான பொருள்கள்:

அவல் – 3 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
பயத்தம் பருப்பு –  1 கப்
நிலக்கடலை – 1 கப்
பொட்டுக் கடலை – 1 கப்
முந்திரிப் பருப்பு – 1 கப்
கறிவேப்பிலை – 4 ஈர்க்கு
உப்பு – தேவையான அளவு
காரப் பொடி – தேவையான அளவு
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க
ஓமப்பொடி (அல்லது காராபூந்தி) – 1 1/2 கப்

 

செய்முறை:

  • கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து ஒரு துணியில் உலர்த்திக் காயவைக்கவும். (முழுவதும் காய்ந்திருக்கவேண்டியதில்லை.)
  • முந்திரிப்பருப்பை நாலைந்தாக உடைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும் துளைகளுள்ள ஒரு வடிகட்டி (பெரிய டீ வடிகட்டி, புளி வடிகட்டி) எடுத்து, அதில் கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, நிலக்கடலை, பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பை ஒவ்வொன்றாக, தனித்தனியாக போட்டு, பொரித்து, வடித்தட்டில் போட்டு எண்ணெயை வடிக்கவும்..
  • அவலை முதலிலேயே அந்த வடிகட்டியில் (மாவு, உடைந்த அவல் இல்லாமல்) சலித்துவைத்திருக்கவேண்டும்; கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, பொரித்து எடுக்கவும். சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
  • சிறிது கடலைமாவில் உப்பு, பெருங்காயம், மிளகாய்த் தூள் சேர்த்துக் கலந்து காராபூந்தி அல்லது ஓமப்பொடி அச்சில் பிழிந்துகொள்ளலாம். (மிக்ஸரில் கடலைமாவு சேர்த்த பொருள் இல்லாவிட்டால் சுவைகூடி வராது. அதனால் ஏதாவது ஒன்றாவது செய்து சேர்க்கலாம்; அல்லது அதைமட்டும் கடையில் வாங்கிச் சேர்த்துக்கொள்ளலாம்.)
  • எல்லாவற்றையும் ஒரு வாயகன்ற பெரிய பாத்திரத்தில் போட்டுக்கொண்டே வரவும்.
  • கடைசியில் கறிவேப்பிலையையும் பொரித்து, வடிகட்டவும்.
  • பொரித்த கறிவேப்பிலையுடன் தேவையான உப்புப் பொடி, மிளகாய்ப் பொடி, பெருங்காயம் சேர்த்து நன்கு கையால் நொறுக்கி, அந்தக் கலவையை நன்கு கலக்கவும்.

* எண்ணெயில் பொரிக்கும்போது தீ மிகக் குறைவாக இருந்தால் பருப்புகள், அவல் கடுக்’கென்று ஆகிவிடும். தீ அதிகமாக இருந்தால் கருகிவிடும். மிதமான தீயில் அடுப்பு எரியவேண்டும். அவல் போட்டதுமே பொரிந்துவிடவேண்டும்.

* விரும்புபவர்கள் வேறு மசாலாப் பொடிகளும் சேர்க்கலாம். ஆனால் இதுவே அதிகம் படுத்தாத வகை.

தேவையான பொருள்கள்:

காரா பூந்தி
ஓமப் பொடி
காராச் சேவு
ரிப்பன் பக்கோடா
நிலக்கடலை
பொட்டுக் கடலை
முந்திரிப் பருப்பு
பாதாம் பருப்பு
கறிவேப்பிலை
எண்ணெய்
நெய்
மிளகாய்த் தூள், உப்பு (விரும்பினால்)

kaaraa boondhi

oma podi 2ribbon murukku 2

kaaraa sev 2

nuts (kaara mixer)

செய்முறை:

  • ஓமப்பொடி, காராச் சேவு, ரிப்பன் பக்கோடா இவற்றை தேவையான அளவு எடுத்து ஒடித்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • காராபூந்தியையும் சேர்த்துக் கொள்ளவும்.
  • முந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
  • நிலக்கடலையை எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும் அல்லது எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.
  • பாதாம் பருப்பை அப்படியே அல்லது ஊறவைத்து உலர்த்தி எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.
  • பொட்டுக் கடலையை சிறிது சிறிதாகப் போட்டு எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.
  • கறிவேப்பிலையையும் எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.
  • எல்லாவற்றையும் கைபடாமல் ஒரு கரண்டியால் கலந்து, காற்றுப் புகாத டப்பாவில் வைத்துக் கொள்ளவும்.

kaara mixer

    மேலே உள்ள பட்சணங்களில் சேர்த்துள்ள காரமே(ஓமம், மிளகு, மிளகாய்த் தூள்) போதுமென்றால் அப்படியே விட்டு விடலாம். மேலும் காரம் வேண்டுமென்று நினைப்பவர்கள்– சிறிது நெய்யை உருக்கி, அதில் மிளகாய்த் தூள், உப்பைக் குழைத்துக் கொள்ளவும். நிலக்கடலை, பாதாம், பொட்டுக் கடலை, முந்திரிப்பருப்பை மட்டும் கலந்து அதனோடு இதனையும் சேர்த்துப் பிசிறி, மொத்த மிக்ஸரில் இந்தக் கலவையைக்கலந்துவிட்டால் சீராகக் கலந்துவிடும். தனித்தனியாக இவைகளை மிக்ஸரில் கலக்கப் பார்த்தால் சரியாக வராது.

தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 2 1/2 கப்
அரிசி மாவு – 1 கப்
மஞ்சள் தூள்
டால்டா – 2 டேபிள்ஸ்பூன் (அல்லது எண்ணெய்)
எள் – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
உப்பு
பெருங்காயம்
எண்ணெய்

ribbon murukku

செய்முறை:

  • கடலை மாவையும் அரிசி மாவையும் நன்கு கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவும்.
  • மஞ்சள் தூள், எள், உப்பை மாவில் சேர்க்கவும்.
  • டால்டா அல்லது எண்ணெயைச் சூடாக்கி அதனுடன் சேர்த்து, சிறிது சிறிதாக விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, சூடாக்கி, மாவை ரிப்பன் நாழியில் பிழியவும். (அல்லது மிக்ஸரில் சேர்க்க விரும்பினால் அதைவிட சிறிதான ஆனால் தட்டையான வேறு டிசைன் இருந்தால் பிழிந்து கொள்ளலாம்.)
  • இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து சத்தம் அடங்கியதும் எடுக்கவும்.

தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1/2 கப்
மிளகு – 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் (அல்லது நெய்)
உப்பு
பெருங்காயம்
எண்ணெய்

kaaraa sev 1

செய்முறை:

  • கடலை மாவையும் அரிசி மாவையும் நன்கு கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவும்.
  • மிளகை நைசாக அரைக்காமல் கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
  • மிளகுத் தூள், உப்பு, பெருங்காயத் தூளை மாவில் சேர்க்கவும். (பெருங்காயம் பெரிதாக இருந்தால் அதையும் நீரில் கரைத்தே சேர்க்கவும்.)
  • வெண்னெய் அல்லது நெய்யைச் சூடாக்கி அதனுடன் சேர்த்து, சிறிது சிறிதாக விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, சூடாக்கி, மாவை காராச் சேவு கரண்டியில் தேய்க்கவும். (அல்லது மிக்ஸரில் சேர்க்க விரும்பினால் அவ்வளவு பெருவட்டாக இருப்பது சாப்பிடும் போது தனித்து ருசிக்கும். எனவே ஓமப்பொடிக்கு மேல் சற்றே பெரிதாக தேன்குழல் அச்சில் பிழிந்து கொள்ளலாம்.)
  • இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து சத்தம் அடங்கியதும் எடுக்கவும்.

* அச்சில் பிழிந்திருந்தால், வேண்டிய அளவுக்கு ஒடித்துக் கொள்ளவும்.

* காரம் அதிகம் தேவைப்பட்டால் இன்னும் அதிக மிளகு சேர்த்துக் கொள்ளலாம். மிளகாய்த் தூள் சேர்க்கக் கூடாது.

தேவையான பொருள்கள்:

 கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1 கப்
ஓமம் – 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன் (விரும்பினால்)
உப்பு
பெருங்காயம்
எண்ணெய்

oma podi 1

செய்முறை:

  • கடலை மாவையும் அரிசி மாவையும் நன்கு கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவும்.
  • ஓமத்தை சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து அந்த நீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • ஓமநீர், உப்பு, பெருங்காயத் தூளை மாவில் சேர்க்கவும். (பெருங்காயம் பெரிதாக இருந்தால் அதையும் நீரில் கரைத்தே சேர்க்கவும்.)
  • டால்டா அல்லது எண்ணெயைச் சூடாக்கி அதனுடன் சேர்த்து, சிறிது சிறிதாக விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, சூடாக்கி, மாவை ஓம அச்சில் பிழிந்து, இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து சத்தம் அடங்கியதும் எடுக்கவும். (ஓமப்பொடி மெலிதாக இருப்பதால் உடனே வெந்துவிடும். அதிக கவனம் தேவை.)
  • தேவைக்குத் தகுந்த அளவில் ஒடித்து உபயோகிக்கலாம்.

* ஓமம் சேர்த்திருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது.

தேவையான பொருள்கள்:

 கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1/2 கப்
உப்பு
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன் (விரும்பினால்)
டால்டா – 2 டேபிள்ஸ்பூன் (அல்லது எண்ணெய்)
எண்ணெய் 

kaaraa boondhi

செய்முறை:

  • கடலை மாவையும் அரிசி மாவையும் நன்கு கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவும்.
  • உப்பு, மிளகாய்த் தூள், சேர்க்கவும்.
  • டால்டா அல்லது எண்ணெயைச் சூடாக்கி அதனுடன் சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கட்டிகளில்லாமல் பஜ்ஜி மாவை விட சற்றே தளர்ந்த பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை நிதானமான சூட்டில் வைத்துக் கொள்ளவும்.
  • பூந்திக் கரண்டியில் சிறிது எண்ணெய் தடவி,  வாணலி எண்ணெய்க்கு மேலாக நீட்டி, மாவுக் கரைசலை கொஞ்சமாக விட்டு, லேசாகத் தட்டினால் பூந்தி விழ ஆரம்பிக்கும். வாணலிக்கு மிக அருகில் கரண்டியை நீட்டினால் நல்ல உருளையாகவும், சற்றே மேலே வைத்திருந்தால் நீள் உருளையாகவும் விழும். (உன்னோடது ஏன் இப்படி வாலோடு இருக்குன்னு யாரும் கேட்டுடாதீங்க. 🙂 ஜாரிணி இல்லாம புளி வடிகட்டி வெச்சு செஞ்சது. எல்லாரும் இதுவே கரகரப்பா, வித்யாசமா நல்லா இருக்குன்னு சொல்றதால ஜாரிணி வாங்காமலே இருந்துட்டேன். கடைல வாங்கினதான்னு இப்ப யாரும் கேக்க முடியாதில்ல. 🙂 பூந்தியின் பின்நவீனத்துவக் கட்டுடைப்புன்னு புரிஞ்சுண்டவங்க புத்திசாலிகள்.)
  • வாணலி எண்ணெய் முழுவதும் நிறைந்ததும், நிறுத்திவிட்டு, பூந்தியைத் திருப்பிவிடவும். சத்தம் அடங்கி, கரகரப்பாக வேகும் வரை காத்திருந்து வெளியே எடுத்து வடியவிடவும். (லட்டுக்குச் செய்வது போல் சீக்கிரம் எடுத்துவிடக் கூடாது.)

* விரும்பினால், மிக்ஸருக்கு அல்லது தயிர்வடை, ராய்த்தா மாதிரி உணவுகளுக்கு உபயோகிக்க விரும்பினால் கலர் சேர்த்துக் கொள்ளலாம்.

* சிலர் சமையல் சோடா சேர்ப்பார்கள். நான் சேர்ப்பதில்லை. டால்டா அல்லது எண்ணெய் சேர்ப்பதிலேயே மொறுமொறுப்பாக இருக்கும்.

 1.
தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்
பயத்தம் பருப்பு – 3/4 கப்
கடலைப் பருப்பு – 1/4 கப்
எள் – 1 டீஸ்பூன்
உப்பு

mullu murukku_sreejayanthi

செய்முறை:

  • அரிசியைக் களைந்து, நிழலில் உலர்த்தி, மிக்ஸியில் அரைத்து, சலித்துக் கொள்ளவும்.
  • பருப்புகளை சிவக்க வறுத்து, நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • 2 கப் அரிசிமாவிற்கு, ஒரு கப் பருப்பு மாவு, உப்பு, எள், வெண்ணை சேர்த்து, நீர்விட்டுப் பிசைந்து கொள்ளவும்.
  • முள்ளு முறுக்கு அச்சில் சின்னச் சின்ன ஒற்றை இழை முறுக்குகளாக 2 அல்லது 3 ஆகவோ, இரண்டு மூன்று இழை கொண்ட பெரிய முறுக்குகளாகவோ பிழிந்து, நிதானமான சூட்டில், திருப்பிப் போட்டு, இருபுறமும் பொன்னிறமாகப் பொரித்து, ஓசை அடங்கியது எடுக்கவும்.

* அதிகமாகச் செய்வதாக இருந்தால் தவணை முறையில் மாவைக் கலந்து செய்யவும்.

2.
3 கப் அரிசியையும்(ஊறவைக்காதது), 1 கப் உளுத்தப் பருப்பையும், 1 கப் பயத்தம் பருப்பையும் தனித் தனியாக வறுத்துக் கொண்டு, நைசாக அரைத்து, சிறிது சூடுபடுத்திய எண்ணெய், உப்பு, சீரகம், காரப் பொடி சேர்த்து முள்ளு முறுக்கு செய்யலாம்.

3.
அரிசி மாவு ஒரு கப், பொட்டுக் கடலை மாவு 4 கப் சேர்த்து, உப்பு, எள் கலந்து முள்ளு முறுக்கு செய்தால் கரகரப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.

4.
4 கப் அரிசி, 3/4 கப் பயத்தம் பருப்பு, 3/4 கப் கடலைப் பருப்பை தனித் தனியாக லேசாக வறுத்து, மிஷினில் அல்லது மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொண்டால் முள்ளு முறுக்கு, ரிப்பன், தட்டை, பஜ்ஜி கூட செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
சீரகம் – 2 டீஸ்பூன்
பெருங்காயம்
உப்பு
வெண்ணை
தேங்காய் எண்ணெய்

செய்முறை:

  • அரிசியைச் சூடு வர சற்று வறுத்துக் கொண்டு, சூடு ஆறியபின் நன்றாகக் களைந்து, நீரை வடியவைத்து பொடித்து, நைசான சல்லடையில் சலித்துக் கொள்ளவும். (வறுத்த அரிசி அதிகமாக ஊறக் கூடாது.)
  • உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து நைசாக மாவாக்கிக் கொள்ளவும்.
  • காயம், உப்பு, இவைகளைக் கரைத்துவிட்டு, வெண்ணை, சீரகத்தையும் சேர்த்து, சிறிது தண்ணீர்விட்டுப் பிசையவும்.
  • கையில் சிறு உருண்டையாக எடுத்து மெதுவாக முறுக்குகளாகச் சுற்றி(ஞே!), எண்ணெயில் நிதானமான சூட்டில், இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து, ஓசை அடங்கியது எடுக்கவும்.

* தண்ணீர் விட்டுப் பிசைந்த மாவு அதிக நேரம் இருந்தால் மாவு புளித்து, முறுக்கு சிவக்க ஆரம்பித்துவிடும். எனவே 2 கப் மாவிற்கு மேல் முறுக்கு தேவைப்பட்டால் 2, 3 தடவையாகப் பிசைந்து கொள்ளவும்.

* சீரகத்திற்குப் பதில் கருப்பு எள்ளைத் தேய்த்தோ அல்லது வெள்ளை எள்ளோ சேர்க்கலாம்.

* பச்சரிசிக்குப் பதில் புழுங்கல் அரிசி ஊறவைத்து, நீரை வடித்து, அதிகம் தண்ணீர் விடாமல் கிரைண்டரில் கெட்டியாக ஆனால் நைசாக அரைத்து, அத்துடன் உளுத்தம் மாவு, சீரகம் எள், வெண்ணை சேர்த்துப் பிசைந்தும் முறுக்குச் சுற்றலாம்.

* வேறு எண்ணெயில் பொரித்தாலும் பிசையும்போது 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டுப் பிசைந்தால், தேங்காய் எண்ணெயில் செய்தது போலவே மணமாக இருக்கும்.

1.
தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி – 2 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
பொட்டுக் கடலை – 4 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு –  4 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 4 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
எள் – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை
காரப் பொடி
பெருங்காயம்
உப்பு
வெண்ணை
எண்ணெய்

thattai1_sreejayanthi

செய்முறை:

  • புழுங்கல் அரிசியை நன்கு களைந்து, நீரில் ஊறவைத்து, கெட்டியாக ஆனால் நைசாக கிரைண்டரில் அரைக்கவும்.
  • இத்துடன் உளுத்தம் மாவு(வறுத்து அரைத்தது), உப்பு, பெருங்காயப் பொடி, பயத்தம் பருப்பு கடலைப் பருப்பு, பொட்டுக் கடலை, தேங்காய்த் துருவல், வெண்ணை சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
  • பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து அழுத்தாமல் லேசாகக் கலந்துகொள்ளவும்.
  • பிளாஸ்டிக் பேப்பர் அல்லது வெள்ளைத் துணியில் மெல்லிய வட்டமாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

2.
புழுங்கல் அரிசியோடு பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம், ஒரு துண்டு இஞ்சி, இவைகளை நைசாக அரைத்து, உளுத்தம் மாவு, வெண்ணை சேர்த்து மெலிதாகத் தட்டினால் கரகரப்பாக இருக்கும். கறிவேப்பிலை மல்லித் தழையும் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம்.

thattai2_sreejayanthi

3.
புழுங்கல் அரிசி மாவுடன், உளுத்தம் மாவு, வெண்ணை, உப்பு, எள், பெருங்காயத் தூள், காரத் தூள் சேர்க்கும்போது ஊறவைத்து நீரை ஒட்ட வடித்த பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நறுக்கிய நிலக்கடலை, முந்திரிப் பருப்பு, வெள்ளரி விதை, பரங்கிவிதை, பெரிய ஜவ்வரிசி இவைகளில் சிலவற்றையோ, எல்லாவற்றையுமோ சேர்த்தும் தட்டலாம்.

4.
புழுங்கல் அரிசிக்குப் பதில் பச்சரிசியைக் களைந்து அரை மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்தி, மிக்ஸியில் அரைத்துச் சலித்த மாவையும் உபயோகிக்கலாம்.

* தேன்குழல், ரிப்பன், தட்டை போன்றவை நமுத்துப் போகாமல் மொறுமொறுவென்று இருக்க, மாவை வெந்நீர் ஊற்றிப் பிசைந்து செய்யலாம்.

* தட்டைகளை வேகமாகத் தட்ட, பிளாஸ்டிக் ஷீட்டில் அடியில் எண்ணெய் தடவி, உருண்டையை வைத்து, மேலேயும் ஒரு எண்ணெய் தடவிய ஷீட்டை வைத்து, டபராவால் தேய்த்தால் வேகமாகச் செய்துவிடலாம்.

1.
ஒரு கப் பயத்தம் பருப்பை ஒரு கப் தண்ணீரில் குக்கரில் வேகவைத்து, நன்றாக மசித்து, அத்துடம் 4 கப் பச்சரிசி மாவு கலந்து, தேவையான உப்புத் தூள், எள் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து தேன்குழல் செய்யலாம்.

2.
ஒரு கப் பயத்தம் பருப்பு, ஒரு கப் கடலைப் பருப்பு, ஒரு கப் உளுத்தம் பருப்பை தனித்தனியாக வறுத்து, மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு கப் பருப்பு மாவிற்கு இரண்டு கப் அரிசி மாவு, 2 டேபிள்ஸ்பூன் வெண்ணை, ஓமம் அரைத்து வடிகட்டிய நீர், உப்பு சேர்த்து தேவையான நீர் விட்டுப் பிசைந்து தேன்குழல் அச்சில் பிழிந்து எண்ணெயில் பொரிக்கலாம்.

3.
3 கப் அரிசியையும்(ஊறவைக்காதது), 1 கப் உளுத்தப் பருப்பையும் தனித் தனியாக வறுத்துக் கொண்டு, நைசாக அரைத்து, சிறிது சூடுபடுத்திய எண்ணெய், உப்பு, சீரகம் சேர்த்து தேன்குழல் செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

அரிசி மாவு – 2 1/2 கப்
உளுத்தம் மாவு – 1/2 கப்
பச்சை மிளகாய் – 10
எள் – 1 டீஸ்பூன்
தேங்காய்ப் பால்
பெருங்காயம்
வெண்ணை
உப்பு
எண்ணெய்

செய்முறை:

  • பச்சை மிளகாய், உப்பு, காயம் இவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரிசி மாவையும் வறுத்து அரைத்த உளுத்தம் மாவையும் நைசாகச் சலித்துக் கொள்ளவும்.
  • அதில் அரைத்த விழுது, வெண்ணை சேர்த்து நன்றாக சீராகப் பிசிறிக் கொள்ளவும்.
  • அதோடு எள் சேர்த்து, சிறுகச் சிறுக தேங்காய்ப் பால் விட்டு சீடைகளாக உருட்டும் பதத்திற்கு மாவைப் பிசையவும்.
  • மாவை சீடை உருண்டைகளாக உருட்டி ஒன்றிரண்டு மணி நேரம் அப்படியே வைக்கவும்.
  • பின்னர் சூடான எண்ணெயில் வாணலி கொள்ளும் வரையில் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். எடுக்கும்போது சலசலவென சத்தம் கேட்க வேண்டும்.

1.
தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்
உளுத்தம் மாவு – 4 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
வெண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி
உப்பு
எண்ணெய்

uppu cheedai_sreejayanthi

செய்முறை:

  • அரிசியை லேசாக, சற்று சிவந்த நிறந்த்திற்கு வறுத்து, கரகரப்பாக அரைத்து சலித்துக் கொள்ளவும்.
  • உளுத்தம் பருப்பைச் சிவக்க வறுத்து, நைசாக அரைத்து, சலித்துக் கொள்ளவும்.
  • கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
  • சீரகம், மிளகை சுத்தம் செய்து, ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய், சில் இல்லாமல் நன்றாகத் துருவி லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  • எல்லாவற்றையும் ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, அத்துடன் உப்பு, பெருங்காயம் சிறிது நீரில் கரைத்துச் சேர்க்கவும்.
  • வெண்ணய் அல்லது நெய் விட்டு, சிறிது சிறிதாக நீர் சேர்த்துப் பிசையவும்.
  • பிளாஸ்டிக் பேப்பர் அல்லது தட்டில் சீடைகளாக உருட்டிப் போட்டு, வாணலியில் நிதானமான தீயில் பொன்னிறமாக ஓசை அடங்கும்வரை பொரித்து எடுக்கவும்.
     

2.
தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்
உளுத்தம் மாவு – 4 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
வெண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
எள் – 2 டீஸ்பூன்
காரப் பொடி
உப்புப் பொடி
பெருங்காயப் பொடி
உப்பு
எண்ணெய்

செய்முறை:

  • அரிசியைச் சுத்தம் செய்து, நீரில் கழுவி, அரை மணி நேரம் ஊறவைத்து, லேசாக துணியில் உலரவைத்து, மிக்ஸியில் அரைத்து, கட்டியில்லாமல் சலித்து, வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.
  • உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து மிக்ஸியில் அரைத்து நைஸ் சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.
  • மாவில் பத்திற்கு ஒன்று என்ற அளவில் உளுத்தம் மாவு சேர்த்தால் சரியாக இருக்கும்.)
  • எள்ளை கல், மண் தூசி இல்லாமல் சுத்தமாக்கிச் சேர்க்கவும்.
  • கடலைப் பருப்பை சுத்தம் செய்து, ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து மாவில் சேர்க்கவும்.
  • காரப் பொடி, உப்புப் பொடி, பெருங்காயப் பொடி, வெண்ணை சேர்த்து, நீர் விட்டுப் பிசையவும்.
  • பிளாஸ்டிக் பேப்பர் அல்லது தட்டில் சீடையை உருட்டிப் போட்டுக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெயில் 20, 25 சீடைகளாகப் போட்டு, நிதானமான தீயில் பொன்னிறமாகப் பொரித்து, ஓசை அடங்கியதும் எடுக்கவும்.

-0-

* அரிசியை கரகரப்பாக அரைத்து, நன்றாகச் சலிக்காவிடில், அதிலுள்ள கற்கள் மண்களாகி ஒவ்வொரு துகளுக்கும் வெடிக்கும்.

* உளுத்தம் மாவுக்கும் அஃதே.

* எள்ளை நன்றாக கல் சோதித்துவிடுவது நல்லது. இல்லாவிடில் கண்டுபிடிக்க முடியாது.

* கடலைப் பருப்பு, மிளகு, சீரகத்தையும் நன்றாக சுத்தம் செய்தபின்பே உபயோகிக்கவும்.

* தேங்காய்த் துருவல் சேர்ப்பதாக இருந்தால், அதில் பெரிய சில்லுகள் இல்லாமல் நன்றாகத் துருவிக் கொள்ளவும். வாணலியில் சிறிது வறுத்துக் கொள்வதும் நல்லது.

* உப்பு, பெருங்காயப் பொடி போன்றவைகளை நேரடியாகச் சேர்க்காமல், நீரில் கரைத்துச் சேர்த்தால் வெடிக்காது.

* சீடை உருட்டியதும், ஒரு குண்டூசியால் ஒவ்வொரு சீடையிலும் குத்தியபின், காய்ந்த எண்ணெயில் போட்டால், சீடை வெடிக்காது.

தேவையான பொருள்கள்:

முழு உளுந்து – 2 கப்
சீரகம் –  2 டீஸ்பூன்
மிளகு – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்.

செய்முறை:

  • மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
  • உளுந்தைக் நீரில் கழுவி, 15 அல்லது 20 நிமிடங்கள் மட்டும் ஊறவைக்கவும்.
  • தண்ணீர் சேர்க்காமல், சாதாரணமாக வடைக்கு அரைப்பதை விடவே அதிக நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • அதில் உடைத்த மிளகு, சீரகம், உப்பு சேர்த்துப் பிசையவும்..
  • வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, எண்ணை தடவிய இலை அல்லது ப்ளாஸ்டிக் பேப்பரில் தட்டையாகத் தட்டி, நடுவில் துளை இட்டு, காய்ந்துகொண்டிருக்கும் எண்ணெயில் நன்கு பொரித்தெடுக்கவும்.

* அரைத்து அதிக நேரம் வைத்திருந்தால் நிறம் மாறிவிடும். உடனே செய்துவிட வேண்டும்.

* சாப்பிட தட்டை மாதிரி கடினமாக இருக்கும். பலநாள்களுக்குக் கெடாது.

* துளை வழியாக நூலில் மாலையாகக் கட்டி அனுமாருக்குச் சாற்றலாம்.
 

இது ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி, பகல் பத்து, இராப் பத்து இருபது நாள்களில் மட்டும் கோவிலில் கிடைக்கும் சிறப்புப் பட்சணம்..

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1/2 கிலோ
நெய் – 1/2 கிலோ
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • அரிசியை முதல்நாளே ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடித்துக் கொள்ளவும்.
  • பிறகு அதை மிக்ஸியில் அரைத்து மாவாக்கி சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • சலித்த மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஈரப் பதத்துடன் கையால் நன்கு அழுத்தி அடைத்து வைத்துவிட வேண்டும்.
  • சலித்ததில் கடைசியாக மிச்சம் இருக்கும் மெல்லிய ரவை போன்ற கப்பியை உப்புப் போட்டு தண்ணீர் விட்டு கஞ்சியாகக் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இவைகளை முதல்நாளே செய்துவைத்துக் கொண்டால் தான் மாவு புளிப்பாக இருக்கும்.
  • அடுத்த நாள், முதல்நாள் தயார் செய்துவைத்துள்ள கஞ்சியை அடைத்து வைத்துள்ள மாவில் கொட்டி கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
  • தேவைப்பட்டால் சிறிது உப்பும், தண்ணீரும் சேர்த்துக் கொள்ளவும்.
  • பிசைந்த மாவை ஒரு வெள்ளைத் துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் தட்டை மாதிரித் தட்ட வேண்டும். தட்டையை விட சற்று தடிமனாகத் தட்ட வேண்டும்.
  • வாணலியில் நெய்யைச் சூடாக்கி, அப்பங்களைப் பொன்னிறமாக, நன்றாக ஓசை அடங்கும் வரை மிதமான சூட்டில் பொரித்து எடுத்து, நெய்யை வடித்தபின் உபயோகிக்கவும்.

[இதைவிடக் கடினமான ‘உருப்படி’ என்ற ஒரு ஐட்டம் இருக்கிறது. அது ஏகாதசித் திருநாள் சாற்றுமுறை கடைசி இரண்டு நாள்கள் மட்டுமே கிடைக்கும்.] 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சில பண்டங்களுக்கு தொட்டுக் கொள்ள வேறு சில பண்டங்கள் தேவை இருக்கலாம். சில பண்டங்களுக்கு அதைச் சாப்பிடுவதற்கான சூழ்நிலை மிக முக்கியம். டிசம்பர் ஜனவரி அரையாண்டுத் தேர்வு நிர்ப்பந்தங்கள்… வீடு முழுவதும் கால் வைக்க இடமில்லாமல் அறிந்ததும் அறியாததுமாக திருநாள் சேவிக்க வந்து தங்கியிருக்கும் தாத்தா பாட்டிகள்…(பலரை யாரென்று என் பாட்டிக்கே தெரியாத அளவு சத்திரமாக வீடு இருக்கும்.) வீதியிலேயே ஒரே ஒருவர் மட்டும் கார் வைத்திருக்கும் காலத்தில் ‘சர்.. சர்..’ என்று தெருவில் கடந்துபோகும் கார்கள் (ரோட்டுக்குப் போயிடாதமா, காரும் வண்டியுமா வருது; ஆத்தோரமாவே விளையாடு என்று அரைமணிக்கொரு அட்வைஸ் சத்தம் வீட்டுக்குள்ளிருந்து)… சாவகாசமாய் நடந்துபோகும் போலீஸ்காரர்கள் (ஒரே பயம்தான் போங்க!).. புதிது புதிதாய் கூட்டம் கூட்டமாய அலங்காரமாய் நடமாடும் மனிதர்கள்…

இத்தனை அமர்க்களத்தில், நாம் சாப்பிடுவது முக்கியமல்ல. நாம் சாப்பிடுகிறோம் என்பது மற்றவர்களுக்குத் தெரியவேண்டும் என்பது மிக முக்கியம்.:) வாசலுக்கு எடுத்து வந்ததுமே, “எனக்குடீ..” என்று ஒரு சிறு வட்டம் சூழ வேண்டும். தட்டையை மாதிரி கையால் உடைக்க முடியாது. கடினமாக இருக்கும். நமது கவுன் சிந்தடிக் என்ற சாக்கில் எதிரில் இருப்பவனில் எவனாவது இளிச்சவாயன் சட்டை நுனியில் வைத்து இன்னொரு இளிச்சவாயன் காக்காய் கடி(இதற்கு ஏன் இந்தப் பெயர்?) கடிக்கவேண்டும். இது கொஞ்சம் சிரமம். யார் வீட்டிலிருந்தாவது யாராவது பெருசு பார்த்துவிட்டால் “எச்சலா பண்றீங்க!!” என்று எட்டு ஊருக்குக் கேட்பதுபோல் திட்டு விழும். அப்படியே அவனை சட்டையோடு தரதரவென்று இழுத்துக்கொண்டு வந்து நம்வீட்டு வாசல் கல்படி உயரத்துக்கு அவனை உட்காரவைத்து (கிட்டத்தட்ட ஸ்கூட்டர் ஓட்டுகிற மாதிரி போஸில்), செல்வர் அப்பம் மூடிய சட்டைக்கு மேல் கருங்கல்லால் அடித்தால் உள்ளே சிலபல துண்டுகளும் கொஞ்சம் பொடியாயும் சிதறி இருக்கும். யாருக்கு எந்த அளவு பெரிய துண்டு என்பது அவர்கள் நமக்கு அன்றைய தேதியில் எவ்வளவு தூரம் நண்பர்கள் என்பதைப் பொருத்தது. இது வானிலை அறிக்கை மாதிரி- அன்றாடம் மாறக் கூடியதுதான். சட்டைக்காரனுக்கு ஒரு துண்டோடு பொடியும் இலவசம். நமக்குக் கிடைப்பது சிறு துண்டு தான் என்றாலும் அதன் சுவையே ஓஹோ!

முதலில் வாயில் போட்டதும் எதுவும் பெரிதாக உறைக்காது. சிறிது சிறிதாக உப்புச் சுவையும் நெய்யும் மட்டும் பிரிந்து பிரிந்து உமிழ்நீரில் கலக்க ஆரம்பிக்கும். (உமிழ்நீர் சுரப்பதால் சுவையாக இருக்கிறதா? சுவையாக இருப்பதால் நீர் சுரக்கிறதா?) பரமானந்தமாக இருக்கும். ஏதோ ஒரு ஏமாந்த நொடியில் அப்பம் சிதைந்து, வாயில் கரைந்து, கடித்து முழுங்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவோம். இவ்வளவு சுவையாக இருந்தும் எப்பொழுதுமே முழு செல்வர் அப்பத்திற்கு ஆசைப்பட்டதேயில்லை. ‘எல்லாத்தையும் தெருவுக்குத் தூக்கிண்டு போகணும்’ என்ற மனநிலையே இருந்தது.  இந்தச் சூழ்நிலை இப்போது கிடைக்காது என்பதாலோ என்னவோ இதன்மேல் இப்போதெல்லாம் மொத்தமாகவே ஆர்வம் போய்விட்டது.