திங்கள், நவம்பர் 5th, 2007


இந்தப் பெயரைக் கேட்டாலே சலிப்பில் ஓடிவிடும் அளவுக்கு கோவையில் இருந்த போது இது வீடு நிறைந்து இருக்கும். ஒவ்வொரு முறையும் கடையில் சிரத்தையாக, “‘மைசூர்பாகு’ன்னு சொல்லாதீங்க, ‘மைசூர்பா’ன்னு சொல்லுங்க” என்று திருத்துவார்கள். அப்போது பல ஊர்களில் கிடைக்காமல் இருந்ததால் வெளியூரில் யார் வீட்டுக்குப் போனாலும் சாய்ஸே இல்லாமல் இதை மட்டுமே வாங்கிப் போகவேண்டி இருந்தது. ஆனால் மிகச் சுலபமாகச் செய்யக் கூடிய ஒரு இனிப்பு இந்த மைசூர்பா தான். பல வருடங்களாக, கடையில் வாங்குவதையே நிறுத்திவிட்டேன்.

krishna mysorepa 1

தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 1 கப்
சர்க்கரை – 2 1/2 கப்
நெய் – 2 1/2 கப்

செய்முறை:

  • கடலை மாவை நன்கு சலித்து, மிக லேசாக 2, 3 நிமிடங்கள் மட்டும் வறட்டு வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.
  • நெய்யை லேசான தீயில் நன்றாக உருக்கி வைத்துக் கொள்ளவும்.
  • சர்க்கரையை சிறிது நீர் சேர்த்து, அடுப்பில் சிம்மில் வைத்து, முழுவதையும் கரைய விடவும். கரைவதற்கு முன் சூடு அதிகமானல் பாகு ஆகிவிடலாம். அதனால் தீயை மிகக் குறைந்த அளவிலேயே வைத்து முழுமையாகக் கரைக்க வேண்டும்.
  • சர்க்கரை கரைந்ததும், கடலைமாவை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கட்டிகளில்லாமல் கலந்து கொள்ளவும். சலித்து வறுத்திருப்பதால் பெரிய பிரச்சினை ஆகாமல் கலந்துவிடும்.
  • மாவு கலந்து கொதிக்கத் தொடங்கியதும், நெய்யை நான்கைந்து பாகங்களாக தவணை முறையில் இறுக இறுக சேர்த்துக் கிளறவும்.
  • கடைசியில் எல்லா நெய்யும் சேர்த்தபின், கிளறிக்கொண்டே இருக்கையில் சேர்ந்தாற்போல் நன்கு கெட்டியாக ஒட்டாமல் வரும்போது, இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி ஒரு கரண்டியால் சீராகப் பரத்தி ஓரங்களை அழுத்தி விடவும். சிறிது நெய் தடவிய தட்டையான கரண்டியால் தடவினால் மேல்பாகம் வழவழப்பாகிவிடும்.
  • நன்கு ஆறியதும் கத்தியால் கீறி வில்லைகள் போடலாம். கடைகளில் கிடைப்பதுபோல் நீள் சதுரமாகவோ, வழக்கமான சதுரங்களாகவோ தான் செய்ய வேண்டும் என்றில்லை. பிள்ளையாருக்கான சின்ன மோதக அச்சில் கூட வார்த்து எடுக்கலாம். எல்லாவற்றிற்கும் எவ்வளவு நேரமானலும் கலவை வளைந்து கொடுக்கும். வாயில் கரையும்.

krishna mysorepa 2

* சுத்தமான நெய்யில் மட்டும் தான் செய்ய வேண்டும். மைசூர்பாகிற்க்குச் செய்வது போல் டால்டா உபயோகிக்கக் கூடாது.

* அதிகம் நெய்க்கு பயந்தவர்கள், 2 பங்கு மட்டும் நெய் சேர்த்தும் செய்யலாம். பெரிய வித்தியாசம் தெரியாது.
 
** சொல்ல மறந்தது, உடம்பைப் பார்த்துக் கொள்ளவும். அடிக்கடி உணவில் இஞ்சித் துவையல், மிளகு ரசம், கொள்ளுப் பொங்கல் என்று சமைத்துச் சாப்பிடவும். 🙂

தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 1 கப்
நெய் – 1 1/2 கப்
சர்க்கரை – 2
ஏலப்பொடி

[படம் மூன்று நான்கு மாதம் முன்பே செய்த போது எடுத்து வைத்திருந்த நியாபகம். எந்த ஆல்பம் என்று தேடி எடுத்துப் போடுகிறேன்; அல்லது புதிதாகச் செய்துதான் சேர்க்கவேண்டும். :(]

செய்முறை:

  • கடலை மாவை நன்கு கட்டியில்லாமல் சலித்து, வெற்று வாணலியில் மிக லேசாக இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலி அல்லது அடிகனமான உருளியில் சர்க்கரையுடன் 1 கப் தண்ணீர் சேர்த்துக் கரைய விடவும்.
  • இந்த நேரத்தில் இன்னொரு அடுப்பில் நெய்யை உருக்கி வைத்துக் கொள்ளவும்.
  • சர்க்கரை முழுவதும் கரைந்து, ஒற்றைக் கம்பிப் பாகு வந்ததும், கடலை மாவை சிறிது சிறிதாக சேர்த்துக் கொண்டே, கைவிடாமல் கட்டியாகாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
  • எல்லா மாவும் சேர்த்து, கட்டி எதுவும் இல்லாமல் மாவு மொத்தமாக சர்க்கரைக் கலவையில் கலந்ததும், பக்கத்து அடுப்பில் சூடாக, உருகி இருக்கும் நெய்யை(இதன் அடுப்பை சிம்’மிலே வைத்து சூடு குறையாமலே வைத்திருக்கவும்.) ஒவ்வொரு கரண்டியாகச் சேர்க்க ஆரம்பிக்கவும்.
  • நெய்யைச் சேர்க்கும்போதெல்லாம் கலவை சர்’ரென பொங்கும்; கைவிடாமல் கிளறவும்.
  • எல்லா நெய்யும் சேர்த்து முடித்ததும், ஏலப் பொடியும் சேர்த்து, கிளறிக் கொண்டே இருக்கும்போது, நுரை மாதிரி பொங்கி, தானே வெடித்து உடைந்து உடைந்து பொத்தல்கள் வரும். இதுதான் மைசூர்பாகு பதம்.
  • அடுப்பிலிருந்து இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டவும்; சமப்படுத்தும்போது அழுத்தக் கூடாது.
  • லேசாக ஆறியதும் வில்லைகள் போடலாம். மேலாக சர்க்கரை தூவி அலங்கரிக்கலாம். (சூடாக இருக்கும்போது சர்க்கரை தூவினால், சூட்டில சர்க்கரை கரைய ஆரம்பித்துவிடும்.)

* ஹோட்டல் மைசூர்பாகு மாதிரி ஒரு பகுதி சிவப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பினால், கடைசியில் சில விநாடிகள் கலவையை கிளறாமல் கொட்டினால் அடிப்பக்கக் கலவை மட்டும் அதிகம் சிவந்து அப்படிக் கிடைக்கும்.

* நெய் தரமானதாக இருக்க வேண்டும். ஏற்கனவே இறுகி இருக்கும் நெய்யை உருக்குவதை விட புதிதாக வெண்ணெய் வாங்கிக் காய்ச்சி, அந்தச் சூட்டோடு செய்தால் இன்னும் மணமாக இருக்கும்.

* நெய்க்குப் பதிலாக டால்டாவிலும் செய்யலாம். ஆனால் டால்டாவையும் சூடான உருகிய நிலையில் வைத்துத் தான் சேர்க்க வேண்டும்.

 * சிலர் கொதிக்கிற நெய்யில் மொத்த கடலைமாவையும் பொரித்து, சர்க்கரைப் பாகில் கலவையைச் சேர்த்தும் செய்கிறார்கள். நான் இன்னும் செய்து பார்க்கவில்லை. பொதுவாக அனைத்தும் நல்ல கொதி நிலையில் இருந்தால் சரியாக வரும் என்றுதான் தோன்றுகிறது.

இனிப்புகள் செய்ய ஆரம்பிக்கிற யாராவது இதை ஒருமுறையாவது செய்யாமல் இருந்திருப்பார்களா என்பது ஆச்சரியம் தான். அந்த அளவுக்கு பிரபலமான, சுலபமான ஒன்று. எந்தத் தவறும் நேர்ந்துவிடாது என்பதால் யாரும் தைரியமாகச் செய்யலாம்.
 
தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 1 கப்
தேங்காய்த் துருவல் – 1 கப்
பால் – 1 கப்
நெய் – 1 கப்
சர்க்கரை – 3 கப்
ஏலப்பொடி

seven star cake

செய்முறை:

  • கடலை மாவை கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவும்.
  • தேங்காயை அதன் தோல் சேர்ந்துவிடாமல் வெள்ளைப் பகுதியாக மட்டும் துருவி, 1 டேபிள்ஸ்பூன் பால் விட்டு மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு அடிகனமான வாணலியில், காய்ச்சி ஆறிய பாலில் கடலை மாவை கட்டிகளில்லாமல் கலந்து கொள்ளவும்.
  • அத்துடன் நெய், சர்க்கரை, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து அடுப்பில் வைத்து நிதாமான சூட்டில் கிளற ஆரம்பிக்கவும்.
  • கைவிடாமல் கிளறி வாணலியில் ஒட்டாமல், நுரைத்துக் கொண்டு வரும்போது ஏலப்பொடி தூவி, இறக்கவும். இந்தப் பதத்தில் கேக் மாதிரி மென்மையாக வரும்.
  • இன்னும் சிறிது நேரம் இழுத்துக் கிளறியும் இறக்கலாம். இந்தப் பதத்தில் பர்பி மாதிரி இறுக்கமாக வரும். ஆனால் தேங்காய் சேர்த்திருப்பதால் மைசூர்பாகு மாதிரி பாறையாகிவிடும் பயம் இதில் இல்லை. இதுவும் சாப்பிட மென்மையாகவே இருக்கும். சொல்லவருவது, தெரியாமல் பதம் தாண்டி இறக்கிவிட்டாலும் தவறாகிவிடாது. சுவையாகவே இருக்கும். 
  • ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, சிறிது ஆறியதும் வேண்டிய வடிவில் வில்லைகள் போடலாம்.

* வாயில் போட்டதும் மைசூர் பாகா, தேங்காய் பர்பியா என்று நாக்கு ஒரு நொடி குழம்பும். குழம்பட்டும். 🙂 ஆனால் இரண்டையும் விட இந்த ஸ்வீட் சுவையாக இருக்கும். புதிதாகச் செய்பவர்கள் இதிலிருந்து ஆரம்பித்தால் ஸ்வீட் செய்வதில் ஒரு தைரியம் வரும்.