uththappam1.JPG

தேவையான பொருள்கள்:

இட்லி மாவு – 2 கப்
ரவை – 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – 2
கேரட் – 1
குடமிளகாய் – 2
தக்காளி – 2
பச்சைப் பட்டாணி – 1/4 கப்(உரித்தது)
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிது
உப்பு – 1/2 டீஸ்பூன்
சீஸ் – துருவியது (விரும்பினால்)

தாளிக்க – நெய் அல்லது எண்ணை, கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

இவற்றோடு பொறுமை, பொறுமை, பொறுமை.

uthappam2.JPG

செய்முறை:

  • அதிகம் புளிக்காத இட்லி மாவில் உப்பு, ரவையைக் கலந்துகொள்ளவும். ரவை மொறுமொறுப்பைக் கொடுக்கும்.
  • வெங்காயம், குடமிளகாய், தக்காளியை மெல்லிய, நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கேரட்டை பெரிய அளவில் துருவிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்க அஞ்சுபவர்கள் இரண்டாக மட்டும் கீறிக் கொள்ளவும். ஊத்தப்பம் இடையில் கண்ணில் பட்டால் தூர எறிந்துவிடலாம்.
  • வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய் அல்லது எண்ணையைச் சூடாக்கி, கடுகு, சீரகம் பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து மாவில் சேர்க்கவும்.
  • நறுக்கிய காய்கறிகள், பட்டாணி, கொத்தமல்லித் தழையை ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.
  • தோசைக் கல்லில் மாவை கனமாகப் பரத்தி, அதன்மேல் காய்கறிக் கலவையில் சிறிது தூவி சுற்றி நிறைய எண்ணை விட்டு, மூடிவைக்கவும்.
  • குறைந்த சூட்டில் வெகு நிதானமாக வேக வேண்டும். மூடிவைப்பதால் மேல்பகுதி காய்கறிகளும் பாதி வெந்து மாவோடு ஒட்டியிருக்கும். திருப்பும்போது பிரச்சினை தராது.
  • 3 அல்லது 4 நிமிடங்கள் கழித்து மெதுவாகத் திருப்பிப் போட்டு, மீண்டும் சுற்றி எண்ணை விடவும்.
  • இந்தப் பக்கத்தையும் 3 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் மூடி வேகவைத்து, திருப்பிப் போட்டு, மூடியில்லாமல் ஒரு நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

uththappam4.JPG

* அதீதப் பொறுமையும், பொழுதைப் போக்க கையில் ஒரு புத்தகமும் இருந்தால் சமாளிக்கலாம். அநேகமாக காலை 4.30 மணிக்கு கூள மாதாரி படித்து இலக்கியம் வளர்த்தது நானாகத் தான் இருக்கும்.

* மேலே அங்கங்கே தக்காளி கெட்சப் போட்டு, துருவிய சீஸ், மிளகுத் தூள் (அல்லது பீட்ஸா மசாலா)தூவினால் பீட்ஸாவிற்கு கொஞ்சமும் குறைச்சலில்லாமல் இருக்கும்.

* காய்கறிகளை மொத்தமாக மாவில் கலந்தும் செய்யலாம். இது செய்வது சுலபம். 

* முதலில் செய்பவர்கள் கொஞ்சம் சிறிய சைஸ் ஊத்தப்பங்களாக முயற்சி செய்யலாம்.

* அதிகம் எண்ணைவிட்ட அந்த மொறுமொறுப்பான ஊத்தப்பம் கனமான இரும்பு தோசைக் கல்லிலேயே சாத்தியம்.

uththappam5.JPG

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தேங்காய்ச் சட்னி, சின்ன வெங்காயச் சாம்பார்.

மேலே தோசை மிளகாய்ப் பொடி தூவிச் செய்தால், தனியாக தொட்டுக் கொள்ள எதுவும் தேவை இல்லை. அல்லது தயிர் தொட்டுக் கொள்ளலாம். ஃப்ளேவர் பிரமாதமாக இருக்கும்.

uththappam6

அடுப்பில், பணியாரக் குழியில் சிறிது எண்ணை விட்டு, மிஞ்சிய 2 கரண்டி காய்கறி-ஊத்தப்பக் கலவையில் பொடியாக நறுக்கிய இஞ்சி, மிளகுத்தூள் கலந்து குழிகளில் விட்டுச் செய்தது இன்னும் சுவையாக இருந்தது.