பங்குனி உத்திர நாளில் பொதுவாக அக்கார அடிசில் அல்லது சர்க்கரைப் பொங்கல் தான் செய்வோம். ஸ்ரீரங்கத்தில் அநேகம் பேர் பெருமாள் தாயாரை சேர்த்தித் திருக்கோலத்தில் தரிசிக்கும் வரை எதுவும் சாப்பிடாமல், அதன்பின்னும் அன்று முழுவதும் இனிப்பான உணவு மட்டுமே உண்பார்கள்.

பங்குனி உத்திரத் திருநாள் குறித்து ஒரு பதிவு.

அர்ச்சனை செய்த கல்கண்டு அதிகமாகச் சேர்ந்துவிட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல், ஒருமுறை கொஞ்சம் தயங்கியே கல்கண்டு பாத் செய்துபார்த்து, பிடித்துப் போனதால் பொங்கல் செய்வதற்காகவே கல்கண்டு வாங்க ஆரம்பித்து விட்டேன். நிறைய திருமணங்களில் இந்தப் பொங்கலை இப்போது இரவு விருந்துக்குச் செய்கிறார்கள். சர்க்கரை, வெல்லத்தைவிட கல்கண்டு மிக வித்தியாசமான சுவையோடு கொஞ்சம் ராயலாக நன்றாக இருக்கும்.

தேவையான பொருள்கள்:

அரிசி – 1 கப்
பாசிப் பருப்பு – 1/4 கப்
பால் – 1 கப்
கல்கண்டு – 2 கப்
நெய் – 1/2 கப்
கேசரிப் பவுடர்
முந்திரி
கிஸ்மிஸ்
ஏலப்பொடி
பச்சைக் கற்பூரம்
குங்குமப் பூ.

செய்முறை:

  • அரிசி, பருப்பைக் கழுவி, பாலும் தண்ணீரும் சேர்த்து 3 பங்கு இருப்பது போல் வைத்து, குக்கரில் நன்கு குழைய வேகவிடவும்.
  • 2 டேபிள்ஸ்பூன் நெய்யில் கிஸ்மிஸ், முந்திரியை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலி அல்லது அடிகனமான பாத்திரத்தில் அரை கப் தண்ணீரோடு கல்கண்டையும் போட்டு, பாகு காய்ச்சவும். (முடிந்தவரை பெரிய சைஸ் கல்கண்டாக இருந்தால் உடைத்துக் கொள்ளவும். இல்லாவிட்டால் கரைவதற்குள் போரடிக்கும்.)
  • ஏலப்பொடி கேசரிப் பவுடர் சேர்க்கவும்.
  • பாகு லேசாக வந்தவுடன், பொங்கலை அழுத்தமாகக் கரண்டியால் ஓரளவு மசித்து, பாகில் சேர்க்கவும்.
  • மீதி நெய்யையும் சேர்த்து, இறுகிச் சுருண்டு கெட்டியாக வரும்போது இறக்கவும்.
  • நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ், பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ சேர்க்கவும்.

சூடாகச் சாப்பிட, சுவையாக இருக்கும்.