தேவையான பொருள்கள்:
தக்காளி – 4 (பெரியது)
பச்சை மிளகாய் – 2, 3
இஞ்சி – சிறு துண்டு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
ரசப் பொடி – 1/2 டீஸ்பூன்
பருப்பு வேகவைத்த நீர் – 2 கப்
தேங்காய்ப் பால் – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
கொத்தமல்லித் தழை
எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க: நெய் (எண்ணெய்), கடுகு, சீரகம், கறிவேப்பிலை.
செய்முறை:
-
துவரம் பருப்பு வேகவைத்த நீர் இரண்டு கப் எடுத்துவைத்துக் கொள்ளவும்.
-
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து தக்காளிகளை முழுதாகப் போட்டு, 5 நிமிடங்களுக்கு மூடிவைக்கவும்.
-
தக்காளிகளை மேல்தோலை நீக்கி, அந்தத் தண்ணீரிலேயே கையால் நன்கு மசித்துக் கொள்ளவும்.
-
மேலும் ஒரு கப் தண்ணீர், துண்டாக நறுக்கிய(அல்லது நசுக்கிய) இஞ்சி, குறுக்கே கீறிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து அடுப்பில் கொதிக்கவைக்கவும்.
-
தக்காளி பச்சை வாசனை போனதும் ரசப் பொடி சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் மட்டும் கொதிக்கவைத்து பருப்பு நீரையும் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.
-
ரசம் நுரைக்கக் கொதித்து, பொங்கி மேலே வரும்போது கெட்டியான தேங்காய்ப் பால் சேர்த்து, அடுப்பை அணைக்கவும்.
-
கொத்தமல்லித் தழை சேர்த்து, நெய் அல்லது எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். .
-
பரிமாறும் நேரம் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.
* இந்த ரசம் வண்டல் இல்லாமல் அடிவரை கலந்து பரிமாறலாம். வீணாக்காமல் முழுமையாக உபயோகிக்கலாம்.
* பச்சை மிளகாய், எலுமிச்சை, பருப்பு நீரின் மணம் அதிகமாக இருந்தால் சுவைக்கும். நன்கு வேகவைத்த துவரம்பருப்பையும் சிறிது எடுத்து, நன்றாக மசித்து, கொதிக்கும் ரசத்தில் கலந்துகொள்ளலாம்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
இந்த ரசம் சாதத்திற்கு, சாதா கறி வகைகள், அப்பளம், வடாம் தவிர உருளை, வாழை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்ற ஏதாவது ஒன்றில் செய்த பொடிமாஸ் அல்லது ரோஸ்ட் கறி வகைகள் நன்றாக இருக்கும்.
செவ்வாய், மார்ச் 11, 2008 at 11:50 முப
பொடி போடாமல் எப்படிப்பண்ணுவது?
து.பருப்புக்கு பதில் பாசிப்பருப்பு போட்டால் எடுபடுமா?
நன்றி
ஜயராமன்
செவ்வாய், மார்ச் 11, 2008 at 4:16 பிப
தக்காளியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி விட்டுப்போட்டுப்பாருங்கள். சில பேர் மிகவும் விரும்புவார்கள்.
கமலா
செவ்வாய், மார்ச் 11, 2008 at 4:38 பிப
பருப்பு தக்காளி ரசமா ! ஜோர் ஜோர் !!
இதில் தேங்காய்ப்பால் சேர்த்து நான் செய்ததில்லை.
இனி செய்து பார்க்கவேண்டும். (செய்யச்சொல்லி சாப்பிடவேண்டும்/கப்பில் ஊற்றி குடிக்கவேண்டும்)
தக்காளி, பருப்பு, எலுமிச்சை இவைகளின் சுவையை
தேங்காய் அடக்கி அது ஒரு தினுசா ஆகிவிடும் என
நினைக்கிறேன்.
ஸைட் டிஷ் இதற்கு சூடான உளுந்து வடை அல்லது ஆமை வடை
அமக்களமாக இருக்கும்.
ஹூம் ! எப்ப இவ பண்ணிப் போடப்போறாளோ !
சுப்பு தாத்தா
தஞ்சை.
http://arthamullavalaipathivugal.blogspot.com
செவ்வாய், மார்ச் 11, 2008 at 8:40 பிப
இந்த எலுமிச்சை ரசம் நான் செய்யும்போது பல தடவை சொதப்பிவிடும்.(வாசனை இருக்காது, சப்புன்னு இருக்கும். எல்லாம் சரியாக இருந்தாலும் ஏதோ குறைவது போல் இருக்கும்).தேங்காய் பால், இஞ்சி சேர்த்து செய்ததில்லை. இப்போ செஞ்சு பாத்துட்டு சொல்கிறேன்.நன்றி.
செவ்வாய், மார்ச் 11, 2008 at 9:30 பிப
ஜயராமன், பொடி சேர்த்திருக்கிறேனே. பச்சை மிளகாய் அதிகம் சேர்ப்பதால் பொடியின் அளவு குறைவு. அவ்வளவுதான்.
kalyanakamala, நான் சில குழம்புகளுக்கு அப்படித்தான் செய்வேன். ரசத்திலும் செய்து பார்த்திருக்கிறேன். சுவை நன்றாக இருக்கும், ஆனால் சற்றே ரசம் திடமாக குழம்பினார்போல் ஆகிவிடுகிறது.
சுப்பு தாத்தா, நானும் அப்படி நினைத்தேன். ஆனால் தேங்காய் சுவையை அடக்கவில்லை. நீங்கள் சொல்லியிருக்கும் சைட் டிஷ் இரண்டும் சூப்பர். 🙂
Uma kumar, தக்காளி அதிகம் சேர்த்து, எலுமிசைச் சாறு, அதிக பச்சை மிளகாய், பெருங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, மல்லி… வாசனை எப்படி தப்ப முடியும்? சப்பென்று இருப்பதற்கு அதிகம் விளாவி விடுகிறீர்களோ என்று மட்டும் பாருங்கள்.
செவ்வாய், மார்ச் 11, 2008 at 11:24 பிப
ஐயோ அம்மணீ,
// ஜயராமன், பொடி சேர்த்திருக்கிறேனே. பச்சை மிளகாய் அதிகம் சேர்ப்பதால் பொடியின் அளவு குறைவு. அவ்வளவுதான். //
ரசப்பொடி உபயோகிக்காமல் எப்படி பண்றதுண்ணு கேட்டேன்!! கொஞ்சம் தெரிஞ்சா, சொன்னா நன்னா இருக்கும்.
நன்றி
ஜயராமன்
புதன், மார்ச் 12, 2008 at 11:03 முப
ஜயராமன், :)) தமிழ் விளையாடிட்டு. 😦 ரசப்பொடி இல்லாம வெறும் இஞ்சி, பச்சைமிளகாய் மட்டும் போட்டு செஞ்சா நல்லா இருக்காது. எங்கம்மா இதுல பருப்புப் பொடி போட்டு செஞ்சு பாத்திருக்கேன். அதுல மல்லி வாசனை இருக்காதே, அப்றம் அது என்ன ரசம்? நான் போய் சத்தமில்லாம கால் டீஸ்பூன் மல்லித் தூள் கலந்துடுவேன்.
என் ஆலோசனை, குறைந்தது மிளகாய்த் தூள், மல்லித்தூள் மட்டுமாவது இரண்டும் சேர்த்து ஒரு கால் டீஸ்பூன் சேர்க்கணும்.
துவரம் பருப்புக்கு பதில் பயத்தம் பருப்பு உபயோகிக்கலாம்.