தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி – 1 1/2 கப்
பச்சரிசி – 1 1/2 கப்
உளுத்தம் பருப்பு – 1 கப்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணை – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம்
தேங்காய் – 1/2 கப்
பச்சை மிளகாய் – 8
கறிவேப்பிலை.
செய்முறை:
- பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு, மிளகு, இவற்றை மிக்ஸியில் சன்னமான ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். (மாவரைக்கும் மிஷினில் இது இன்னும் நன்றாக வரும்.)
- முதல்நாள் இரவே கடலைப்பருப்பு, சீரகம், உப்பு, காயம், இவற்றைச் சேர்த்து, வெதுவெதுப்பான நீர் அல்லது மோர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கலந்து, இறுதியில் நல்லெண்ணையும் கலந்து வைக்கவும்.
- மறுநாள் காலை தேங்காய்த் துருவல், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை மாவில் கலந்து கொள்ளவும்.
- அடுப்பில் கனமான வெண்கல உருளி அல்லது வாணலியில் 5 டீஸ்பூன் எண்ணை விட்டு, காய்ந்ததும், 3 கரண்டி மாவை ஊற்றி, அடுப்பை சிம்’மில் வைத்து, மேலே மூடி வைக்கவும். (கரண்டியால் ஓரளவுக்கு மேல் பரத்த வேண்டாம். அது எப்படி வாணலியில் செட் ஆகிறதோ, அப்படியே விட்டு விடலாம்.)
- 5 நிமிடங்கள் ஆனதும் (பெரிதாகப் பொங்கியிருக்கும்.) அதை மெதுவாகத் திருப்பி போட்டு மேலும் 2,3 நிமிடங்கள் திறந்தவாக்கில் வேக விட்டு எடுக்கவும்.
- கொஞ்சம் பொறுமையாகச் செய்தால் மேல்பகுதி சிவந்து கரகரப்பாகவும், அடியில் இட்லியாகவும் சுவையாக இருக்கும்.
* நான் காப்பர் பாட்டம் வாணலியில் செய்தேன். வெண்கல உருளியில் செய்தால் மேலும் சுவையாக இருக்கும்.
* எண்ணைக்குப் பதில் அல்லது எண்ணையுடன் நெய் சிறிது கலந்து உபயோகிப்பதெல்லாம் நம்முடைய உடல் வசதியைப் பொருத்தது.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
விரும்பினால் தேங்காய்ச் சட்னி அல்லது கொத்தமல்லிச் சட்னியுடன் பரிமாறலாம்.
செவ்வாய், ஜூலை 24, 2007 at 5:46 பிப
சே, நம்ம கலைவாணர் பாடியதுப் போல, பட்டன தட்டினா…. அதுப் போல படத்தை கிளிக்கியதும்
தட்டுல தவலை இட்லி வந்து நின்னா எப்படி இருக்கும்?
நாக்கில் ஊறும் எச்சிலுடன்,
உஷா
புதன், ஜூலை 25, 2007 at 9:06 பிப
ஜெயஸ்ரீ
இதுக்கும் காஞ்சீபுரம் இட்லிக்கும் வித்தியாசம் உண்டா?
வியாழன், ஜூலை 26, 2007 at 10:04 முப
பத்மா, என்ன இப்படி கேட்டுட்டீங்க? அநேகம் உண்டு. இதைத் தவலை அல்லது உருளி மாதிரி பாத்திரங்களில் செய்வார்கள். அதனால் தான் இந்தப் பெயர். காஞ்சிபுரம் இட்லி, கோயில் பிரசாதம். அதனால் புழுங்கலரிசி கிடையாது. கொஞ்சம் நெய், சுக்கு வாசனை தூக்கலாக இருக்கும். அதைவிட முக்கியமாக, பூப் பறித்துப் போடும் குடலைகளில் இட்லி மாதிரி அவித்துச் செய்வார்கள். உங்களுக்காக இங்கே அதன் குறிப்பு.
வியாழன், ஜூலை 26, 2007 at 6:57 பிப
Jeyashree
I cook somthing in between the two recipies:)Thats why I was confused. Thanks I make the batter like this one, but cook like the other for convenience. My cooking is modified for time efficiency, and conveneicne.I am like Rachel ray (dinner in 30 minutes)
ஞாயிறு, திசெம்பர் 15, 2013 at 1:04 பிப
தவலை வடை தெரியும். தவலை இட்லி உண்டா? தவலை இட்லி செய்வது எந்த ஊரில் ஆரம்பமானது? (காஞ்சிபுரம் இட்லி, காஞ்சிபுரத்திற்கு உரியது என்பது போல). இன்னொரு கேள்வி. தவலை வடையும் தவலை வடையும் ஒன்றா? இல்லை வேறு வேறா?