தேவையான பொருள்கள்:
தக்காளிக்காய் – 1/4 கிலோ
கத்தரிக்காய் – 1/4 கிலோ
நிலக்கடலை – ஒரு கைப்பிடி
வேகவைத்த துவரம் பருப்பு – 1/4 கப்
பால் (அல்லது தேங்காய்ப் பால்) – அரை கப்
மஞ்சள் தூள்
உப்பு
கொத்தமல்லித் தழை
வறுத்து அரைக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4, 5
தனியா – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 1/4 கப்
தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.
செய்முறை:
-
துவரம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.
-
நிலக்கடலையை ஒரு மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும் அல்லது துவரம் பருப்போடு குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
-
தக்காளிக் காய், கத்தரிக்காயை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
-
சிறிது எண்ணெயில் காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா என்ற வரிசையில் சேர்த்து, சிவக்க வறுத்து தேங்காயோடு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
-
அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
-
நறுக்கிய தக்காளிக் காய், ஊறவைத்த நிலக்கடலையைச் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
-
கத்தரிக்காய், தேவையான உப்பு, மஞ்சள் தூள், சிறிது நீர் சேர்த்துக் கலந்து, மூடி, வேகவைக்கவும்.
-
கத்தரிக்காய் முக்கால் பதம் வெந்ததும், அரைத்த விழுது சேர்த்து, அரை கப் பால் அல்லது தேங்காய்ப் பால், தேவைப்பட்டால் இன்னும் நீர் சேர்த்து மேலும் இரண்டு மூன்று நிமிடங்களுக்கு சிம்மில் வைத்துக் கொதிக்கவிடவும்.
- வேகவைத்து மசித்த துவரம் பருப்பு கலந்து மேலும் ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
- நறுக்கிய மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.
* இதே முறையில் நாட்டுக் காய்கறிகளான பாகற்காய், புடலங்காய், கொத்தவரங்காய், அவரைக்காய், போன்ற காய்களிலும், பீன்ஸ், சௌசௌ, கோஸ் போன்ற காய்களிலும் விரும்பினால் பொருத்தமான பயறுகள் சேர்த்துச் செய்யலாம்.
* நிலக்கடலை தவிர வேறு பயறுகளாக இருந்தால் எட்டுமணி நேரம் ஊறவைத்து குக்கரில் பருப்போடு வேகவைத்துச் சேர்க்க வேண்டும். இந்த முறையில், அரைத்துவிடும் பொருள்களில் 7, 8 பச்சை நிலக்கடலையும் சேர்த்து அரைக்கலாம். சுவையாக இருக்கும்.
* ஊறவைத்த பயறு தயாராக இல்லாதபொழுது ஒரு கைப்பிடி கடலைப் பருப்பையே நேரடியாக காயோடு வேகவைத்துக் கொள்ளலாம்.
வெள்ளி, மார்ச் 28, 2008 at 1:54 பிப
//தக்காளிக் காய், கத்தரிக்காயை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
//
இந்த கத்ரிக்காய் கண்டிப்பா தேவையா? கர்ர்ர்ர்ர்ர். :))
வெள்ளி, மார்ச் 28, 2008 at 4:25 பிப
தேவையில்லை ambi. வேற கத்ரிக்காய்கூட யூஸ் பண்ணிக்கலாம். :))
திங்கள், மார்ச் 31, 2008 at 5:26 பிப
உங்கள் பதிவில் பொரித்த குழம்பு/கூட்டு பற்றி எழுதவே இல்லை போலிருக்கிறதே?உங்களுக்குப் பிடிக்காதா?அந்தக் காலத்தில் திருச்சி மாயவரம் லாட்ஜில் செவ்வாய்க்கிழமை இரவு முருங்கைக்காய் சேர்த்து ஒரு பொரித்த குழம்பு போடுவார்கள் பாருங்கள்!அன்று மட்டும் உள்ளே சென்று தரையில் அமர்ந்து சாப்பிடுவேன். அமிர்தம்தான்.அது போலவே என்னால் மறக்கமுடியாத ஒரு சுவை-தினமும் இரவில் திருச்சி கடை வீதியில் ஒரு வாட்ச் கடை மூடியதும் ஒருவர் அங்கு கலந்த சாதமெல்லாம் விற்பனை செய்வார்.நானும் புலவர் கீரனும் அங்கே எத்தனை நாட்கள் சாப்பிட்டிருக்கிறோம்!”அந்த நாள் ஞாபகம்—“
செவ்வாய், ஏப்ரல் 1, 2008 at 11:49 முப
சொக்கர், எனக்குப் பிடிக்காததுன்னு எதுவும் இல்லை. பொரிச்ச குழம்பும் மோர்க் குழம்பு மாதிரி பல வெர்ஷன் இருக்கு. என் பிரச்சினை, பல உணவுகள் செய்யும்போது படம் எடுக்க நேரமில்லாம போய் விட்டுப் போயிடுது. இனி வாரம் ஒரு குழம்பு ரசமாவது போடணும்.
திருச்சி கடை வீதில கலந்த சாதம் விற்பனை இப்ப இல்லைன்னு நினைக்கறேன்.
புதன், ஏப்ரல் 2, 2008 at 3:02 பிப
நான் எழுதியது நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய விஷயம்.அதெல்லாம் இப்போதும் இருக்கும் என எதிர்பார்க்க முடியுமா?