கர்நாடக மாநில உணவு. பொதுவாக விருந்து போன்ற நேரங்களில் ஏராளமான சாதம் சாம்பார் என்றெல்லாம் தனித் தனியாக இழுத்துவிட்டுக் கொண்டு கஷ்டப்படுவதை விட இப்படி ஒரே ஐட்டமாகச் செய்வதால் நேரம், இடம், சிரமம் குறைவு. எழுத்தாளர் உஷா, இதைச் செய்துபோட்டு பெரிய இலக்கியவாதிகளை எல்லாம் வாயடைக்க வைத்திருக்கிறார் என்பது உபரித் தகவல். 🙂
தேவையான பொருள்கள்:
அரிசி – 1 1/2 கப்
துவரம்பருப்பு – 1 கப்
கொப்பரைத் தேங்காய் – ஒரு மூடி
கசகசா – 1 டேபிள்ஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயம்
எண்ணை – 1/4 கப்
நெய் – 1 டீஸ்பூன்
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 50 கிராம்
தனியா – 1 கப்
கடலைப் பருப்பு – 3/4 கப்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய், தனியா, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் இவைகளைப் பொன்னிறமாக வறுத்து நைசாக பொடித்துக் கொள்ளவும்.
- கசகசாவை தனியாக வறுத்துக் கொள்ளவும்.
- கொப்பரைத் தேங்காயை, துருவி, சிவக்க வறுத்து, வறுத்துவைத்துள்ள கசகசாவோடு பொடித்துக் கொள்ளவும்.
- புளியை நீர்க்கக் கரைத்துவைத்துக் கொள்ளவும்.
- குக்கரில் அரிசி, பருப்பை கழுவி, சேர்த்து வைத்து, மஞ்சள் தூள், 3 பங்கு தண்ணீர் வைத்து குழைய வேகவிடவும்.
- அடுப்பில் வாணலியில் அரிசி, பருப்புக் கலவையோடு புளித் தண்ணீர், உப்பு சேர்த்து கிளற ஆரம்பிக்கவும். புளி வாசனை அடங்கும்வரை கிளற வேண்டும். அதனால் தேவைப்பட்டால் இன்னும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
- அத்தோடு பொடித்துவைத்துள்ள தேங்காய் கசகசாப் பொடி சேர்க்கவும். தேவையான அளவு மட்டும் (சுமார் 3 அல்லது 4 டீஸ்பூன்) பொடித்துவைத்துள்ள மசாலாப் பொடி சேர்த்து, கிளறி இறக்கவும்.
- எண்ணையில், கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
* கடைசியாக எப்பொழுதும் சொல்லும் ‘நறுக்கிய கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்’ என்ற வாசகம் இதற்குக் கிடையாது. பச்சைக் கொத்தமல்லி சேர்ப்பது, குழம்பு உலகத்திற்கு நம்மைக் கொண்டுபோய் விடும். வறுத்த தனியா, கொப்பரை, கசகசாவின் வாசமும் பருப்பின் குணமுமே இதில் மேலோங்கி இருக்கவேண்டும்.
* அடுப்பிலிருந்து இறக்கியபின் நேரம் ஆக ஆக மிக அதிகமாக இறுகும். எனவே இறக்கும் சமயத்திலேயே மிக மிகத் தளர்வாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
* குக்கர் உள்பாத்திரத்தில் அரிசி, பருப்பை வேகவைப்பதை விட ப்ரஷர்பேனில் நேரடியாக வேகவைத்து, பின் திறந்ததும் அதிலேயே புளித்தண்ணீர், மசாலாவைக் கலந்து கிளறுவது சுலபமாக இருக்கும்.
* கோஸ், கேரட், நூல்கோல், பச்சைப் பட்டாணி, சௌசௌ போன்ற காய்கறிகள், ஏதாவது ஒன்றோ அல்லது எல்லாமேயோ மிக மிக மெல்லிய துண்டுகளாக அரிந்து, அரிசி பருப்போடு சேர்த்து வேகவைக்கலாம். மாறுபட்ட சுவையோடு நன்றாக இருக்கும். (நான் எப்பொழுதும் இப்படியே செய்கிறேன்.)
* மசாலா வாசனை விரும்புபவர்கள், வறுத்து அரைக்கும் பொருள்களோடு இலவங்கப் பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வறுத்து அரைக்கலாம். அநேக ஹோட்டல்களில் இப்படியே பரிமாறுகிறார்கள். (எனக்கு மசாலா வாசனை பிடிக்கும் என்றாலும் இந்த உணவில் அதைச் சேர்ப்பது பிடிக்காது.)
* தேங்காய் கொப்பரையாகக் கிடைக்காவிடில், முற்றிய தேங்காயை உபயோகித்துக் கொள்ளலாம். அல்லது அதை உடைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு வாரத்தில் கொப்பரையாகிவிடும். (கொப்பரையாகி விட்ட தேங்காயை ஃப்ரிட்ஜில் வைத்தால் மீண்டும் தேங்காய் மாதிரி சுலபமாகத் துருவ வரும் என்பது இன்னொரு, ஆனால் இந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லாத குறிப்பு.)
* விருந்து போன்ற சமயங்களில் செய்வதானால் நெய்யில் சிறிது முந்திரிப் பருப்பு வறுத்தும் போடலாம்.
* கடைசியாக ஆனால் முக்கியமாக, கர்நாடக மக்கள் பொதுவாக எல்லா உணவுகளிலும் கடைசியில் சிறு கட்டி வெல்லம் சேர்ப்பார்கள். விரும்புபவர்கள் சேர்த்துக் கொள்ளலாம். (எனக்குப் பிடிக்காது.)
சுலப முறை: (என் முறை என்றே படிக்கவும்.)
ஒவ்வொரு முறையும் இவ்வளவு மெனக்கெடத் நேரமில்லாதவர்கள்–
காய்ந்த மிளகாய் – 50 கிராம்
தனியா – 1 கப்
கடலைப் பருப்பு – 3/4 கப்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
கொப்பரைத் தேங்காய் – 1 (துருவியது)
கசகசா – 2 டேபிள்ஸ்பூன்
விரும்பினால்…
இலவங்கப் பட்டை – 4 துண்டு
ஏலக்காய் – 4
கிராம்பு – 4
மராட்டி மொக்கு – 10
- இவைகளை வறுத்துப் பொடித்து, தயாராக வைத்துக் கொண்டால், அரிசி, பருப்பை வேகவைத்து, புளித்தண்ணீர், தேவையான அளவு மசாலாப் பொடி கலந்து, கிளறி இறக்குவது சுலபம். பொடியில் தேங்காய் சேர்த்திருப்பதால், ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் எந்த ஊர் தட்பவெப்பத்திற்கும் கவலை இல்லாமல் இருக்கலாம்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
உருளைக் கிழங்கு, வாழை, சேனை போன்ற ஏதாவது காய்கறி ரோஸ்ட், பிசிபேளாவில் சேர்க்காத காய்கறியில்(like வெள்ளரி) செய்த தயிர்ப் பச்சடிகள், அப்பளம், வடாம், சிப்ஸ் வகை.
என் தேர்வு எப்பொழுதும், சுடச் சுட பாதி ஈரத்துடன் சீறிப் பொரியும் மலையாளப் பப்படம்.
புதன், மார்ச் 14, 2007 at 12:49 முப
ஜெயஸ்ரீ, எதுக்கு இவ்ளோ மெனக்கெடல்? வழக்கமா வைக்கிற சாம்பார்ல, சாதத்தைப் போட்டுக் கலந்தா சாம்பார் சாதம் என்கிற பிசிபேளாபாத்..
அப்படி இல்லையா?
புதன், மார்ச் 14, 2007 at 3:47 முப
என்ன ரொம்ப நாளா ஆளக்காணோம்… சரி, அப்பறமா எல்லாத்தையும் படிச்சுட்டு திரும்பி வரேன்.
புதன், மார்ச் 14, 2007 at 9:32 முப
பிரகாசரு, நல்ல பிள்ளையா வாயத் தொறந்து கேட்டீங்க.
//* கடைசியாக எப்பொழுதும் சொல்லும் ‘நறுக்கிய கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்’ என்ற வாசகம் இதற்குக் கிடையாது. பச்சைக் கொத்தமல்லி சேர்ப்பது, குழம்பு உலகத்திற்கு நம்மைக் கொண்டுபோய் விடும். வறுத்த தனியா, கொப்பரை, கசகசாவின் வாசமும் பருப்பின் குணமுமே இதில் மேலோங்கி இருக்கவேண்டும்.//
இப்படி ஒரு பாயிண்ட் எழுதியிருக்கேனே பாக்கலையா? குழம்பு உலகத்துக்கே போகக் கூடாதுன்னா சாம்பார் உலகத்துக்குப் போகலாமா? அடுக்குமா? ஏற்கனவே சின்ன வெங்காய சாம்பார் செய்முறை சொல்லியிருக்கேன். இருந்தாலும் சாம்பார்’னு தனியா ஒரு பதிவு போட்டா இன்னும் நல்லாப் புரியும்.
நம்ப பாபா கூட இந்தப் பதிவுக்கு “Bisebele bath – The making of Sambar Rice”னு snap judgement கொடுத்து கேவலப்படுத்திட்டாரு. 🙂 இதுக்கெல்லாம் ஏதாவது செக்ஷன் இருக்கான்னு பாக்கணும். 🙂
புதன், மார்ச் 14, 2007 at 9:34 முப
சொக்காயி ஆராம்சே வாங்க. நீங்க எங்க போறீங்க, நான் தான் எங்க போறேன்? 🙂
வியாழன், மார்ச் 15, 2007 at 3:57 பிப
இதை பிசிபேளாபாத் என்று எங்க வீட்டுப்பக்கம் வந்து சொல்லிடாதீங்க 🙂 டிபிகல் கர்நாடகா ஸ்டைல் அனுப்புகிறேன். நான் செய்துப் போட்டு, தின்ன ஓரே” ஒரு இலக்கியவாதி” இதைவிட எங்கண்ணி சூப்பரா சமைப்பாங்க, அதாவது இது சுமார் என்று சொல்லிவிட்டார் (ன்)
அவர் என்னுடைய என்னுடைய எழுத்துக்கும் அதே நற்சான்றிதழ் தந்துக் கொண்டு இருந்ததால், போயிட்டு போகட்டும் என்று இருந்து விட்டேன்.:-)))
வியாழன், மார்ச் 15, 2007 at 6:01 பிப
உஷா, :))) அப்படி வாங்க வழிக்கு. நான் இதே பிசிபேளாவை கர்நாடக மக்கள்கிட்ட கேட்டு அவங்களுக்கு சமைச்சும் போட்டு பேஷ் வாங்கியிருக்கேன். ஆனா முக்கியமான விஷயம், அவங்க இலக்கியவாதி இல்லை. :)))
//இதைவிட எங்கண்ணி சூப்பரா சமைப்பாங்க, அதாவது இது சுமார் என்று சொல்லிவிட்டார் (ன்)//
அப்ப அவங்க அண்ணிகிட்டயே கேட்டுக்கட்டுமா? 🙂 என்கிட்ட, ‘எழுத்து முன்னபின்ன இருந்தாலும், பிசிபேளா பரவாயில்லை!’ன்னு சொன்னாரே(னே)! சரி சரி கர்நாடக பாணியை ஆனா ரொம்ப வெல்லம் போடாம 😦 அவசியம் சொல்லுங்க. இங்க அதையும் ஏத்தலாம்.
புதன், மார்ச் 21, 2007 at 10:37 பிப
ஜோர் !!
மசாலா (பட்டை, லவங்க வகையாறாக்கள்) பிடிக்காத ஒரே காரணத்தால் பிசிபேளா பண்ணுவதே இல்லை. மசாலா இல்லாமல் பண்ணினால் நன்றாக வருமோ வராதோ என்று வேறு பயம். உங்க சமையல் குறிப்புப்படி பண்ணினது நன்றாக இருந்தது. சாப்பிட்ட கையோட வந்து ரெசிபி டைப் பண்ண கைக்கு நன்றி சொல்லிடறேன். நன்றி !!
வியாழன், மார்ச் 22, 2007 at 8:08 முப
சொக்காயி, welcome. :)) from அதே கைகள்!
பூரி என்னாச்சு?
திங்கள், மார்ச் 26, 2007 at 6:23 முப
பூரி எண்ணெய் புகை வந்துடுமோன்னு பயந்துண்டே ஓரளவு சுமாரான வேகத்தில் போட்டு எடுத்துட்டேன். அதற்கும் நன்றி! (பரவால்ல, நல்லாவே நன்றிய கேட்டு வாங்கிக்கறீங்க!!)
திங்கள், மார்ச் 26, 2007 at 10:43 முப
சே சே புகை விட முடியாத ஊரெல்லாம் ஒரு ஊரா?
“சொர்க்கமே என்றாலும்… அது நம்மூரு போல…!” :))
வெள்ளி, மார்ச் 30, 2007 at 12:22 முப
அதானே… புகை விட முடியாத ஊரெல்லாம் ஒரு ஊரா? 🙂
வெள்ளி, மார்ச் 30, 2007 at 8:53 முப
Prakash, ‘புகை’ என்ற வார்த்தையை கூகிள் alert ல் வைத்திருக்கிறீர்களா? 🙂 ஏனோ தட்டும்போது இந்தப் பின்னூட்டம் உங்கள் கண்ணில் படும் என்று என் மனதில் பட்டது. :)) பொய்க்கவில்லை.
ஞாயிறு, ஏப்ரல் 6, 2008 at 8:52 பிப
ஒரு டவுட் இதுக்கு தக்காளி சேர்க்கக்கூடாதா?? இல்லை அதுதான் சாம்பாருக்கும் பிசிபேளாவிற்கும் உள்ள வேறுபாடா??
வெள்ளி, ஏப்ரல் 11, 2008 at 5:32 பிப
ambika, இதுக்கு தக்காளி கிடையாது. அதுவும் ஒரு வேறுபாடு. 🙂
திங்கள், திசெம்பர் 8, 2008 at 10:07 முப
Jayashree, great recepie, thanks a lot 🙂
ஞாயிறு, மே 9, 2010 at 10:55 பிப
என்னங்க இது, பிஸிபேளாபாத் செய்ய ரெசிபி பார்க்க வந்தா இது ஒரேடியா ‘பிஸிபேளாபாத் – சாம்பார் சாதம் = ஆறு வித்தியாசங்கள்’ கணக்கா எழுதிருக்கீங்க?! செஞ்சி சாப்பிட்டுட்டு வரேன்..
வெள்ளி, ஓகஸ்ட் 26, 2011 at 2:32 பிப
பிஸிபேளா பாத் செய்முறையில் பூரிக்கு என்ன வேலை?
இன்றைக்கு உங்கள் பக்குவம் பார்த்து பிஸிபெளா பாத் எங்கள் வீட்டில்.. விடாது ஜெயஸ்ரீ..குவைத் போனாலும்