“என்ன சமைச்சடா இன்னிக்கி?”

“என்ன சமைச்சன்னு கேக்காதம்மா. எவ்ளோ சமைச்சன்னு கேளு. ரசம் செஞ்சா அதுபாட்டுக்கு 3 நாளைக்கு வரது!”

“கொஞ்சமா செய்யணும். ரெண்டு பேருக்கு எவ்ளோடா வேண்டியிருக்கும். சீ! ரசத்தை யாராவது 3 நாளைக்கு சேர்த்து செய்வாளா?”

“நீ எழுதியிருக்கற மாதிரி ஈயச் சொம்புலதான் செய்றேன். அதுல செஞ்சா ஏம்மா அவ்ளோ இருக்கு!”

“ஐயய்ய, அதுல செய்னு தான் எழுதியிருக்கேன். அது நிறைய செய்னா எழுதியிருக்கேன். 4 பேர் வந்தாலும் இருக்கட்டும்னு பெருசா வாங்கிக் கொடுத்திருக்கேன். அதுல பாதிக்கும் கீழ செய், போதும் உங்க ரெண்டு பேருக்கு!”

“தப்பு உன்பேர்லதான். பாவம் குழந்தை. ‘ஈயச் சொம்புல செய்’னு எழுதினயே, ‘அன்னன்னிக்கு தேவையான அளவு மட்டும் செய்!’ அப்படீன்னு தெளிவா எழுதினியா?” – அப்பா

“உன் பொண்ணுக்கு கம்ப்யூட்டர் மூளைன்னு நீ அடிக்கடி சொல்லும் போதே நினைச்சேன், பாரு என்ன instruction இருக்கோ, அதை மட்டும் தான் செய்யத் தெரியும். சொந்தமா மூளைன்னு ஒன்னு கிடையாது! என்னம்மா பொண்ணு வளர்த்திருக்க?” – அண்ணா.

“மூனு நாளைக்கு ஒரே ரசமா? உவ்வே..!” – தம்பி.

“நீ சும்மா இருடா, க்ராஸ் டாக்! அம்மா, அப்றம் நீ வாங்கிக் கொடுத்த ஈயப் பாத்திரம் ரொம்ப மெலிசா இருக்கும்மா. அதுக்குள்ள நசுங்கிப் போச்சு! இன்னும் கனமா ஒன்னு வாங்கி வை. அடுத்த தடவை எடுத்துண்டு வரேன், இல்லை யாராவது வந்தா கொடுத்து விடு!”

“அதுக்குள்ள நசுங்கிடுத்தா? கீழ போட்டுட்டியா?”

“நான் ஒன்னும் கீழ போடலை. ஆனா கன்னாபின்னான்னு திடீர்னு நசுங்கியிருக்கு. என்னன்னே தெரியலை. அதுக்கு தான் முக்கியமா ஃபோன் பண்றேன் இப்ப..”

“நல்ல கும்பகோணம் பாத்திரம்டா கண்ணா. அங்கயே போய் ஸ்பெஷலா சொல்லி செஞ்சது. நல்ல கனமா இருந்ததே!”

“அப்ப நான் பொய் சொல்றேனா?”

“பரவாயில்லை விடு, வேற வாங்கிக்கலாம். நசுங்கித் தானே போச்சு. உருகிடலையே? வெறும் பாத்திரத்தை அடுப்புல வெச்சுடாத. உருகிடும். பர்னர் மேல உருகி விழுந்துட்டா, அப்றம அடுப்பும் கெட்டுப் போயிடும்.”

[மேற்படி வசனம் கல்யாணம் ஆகி சமைக்க(?!) ஆரம்பித்து ஒரே மாசத்தில் புலம்பியது. அடுத்தடுத்து மிக மோசமாக இண்டு இடுக்கு விடாமல் எல்லாப் பக்கமும் சொம்பு நசுங்கியது. அடுத்த தடவை அம்மா நேரில் வந்தபோது காரணம் தெரிந்தது.]

eeyam1.JPG

“ஐயய்யோ, ஈயச் சொம்பை கிடுக்கியால எடுப்பியா? துணி use பண்ண மாட்டியா?”

“ஏன்? எனக்கு கிடுக்கி தான் வசதி. இல்லைன்னா கீழ போட்டுடுவேன்.”

“அதான் இப்படி நசுங்கியிருக்கு! ஏம்மா, அடுப்புலேருந்து சூட்டோட எறக்கும்போது ஈயம் இளகியிருக்காதா? நீ கிடுக்கியால பிடிச்சு இறக்கி இறக்கி, அதோட தடம் பதிஞ்சு இப்படி நசுங்கியிருக்கு எல்லாப் பக்கமும், டிசைன் போட்டாப்ல.”

“இதெல்லாம் நீ முதல்லயே தெளிவா சொல்றதில்லையா?”

“ஆமாம் எல்லாம் சொல்லுவா உனக்கு. படிச்ச பொண்ணுக்கு இது தெரியாது?”

“ஆவூன்னா இது ஒன்னு சொல்லிடுங்க. நான் பாடத்துல படிச்ச திருக்குறள், English Grammer- noun, pronoun, Indus Valley Civilization, Akbar Empire, Geography of India, Law of Returns, Bank Reconcilation Statement, Real Analysis ஹிந்தி சாகித்ய கா இதிகாஸ் வரைக்கும் எதுலயும் பொண்ணுங்க ஈயத்தை அடுப்புலேருந்து கிடுக்கியால இறக்கக் கூடாதுன்னு போட்டிருக்கலை.”

“அதுல எல்லாம் போட்டிருக்கலைங்கறதை நானும் ஒத்துக்கறேன். ஆனா அதெல்லாம் நீ படிச்சிருக்கேங்கறயே அதான் என்னால செரிக்கவேஏஏ முடியலை.” – அண்ணன்.

“நீ வாயை மூடு! எங்க, அந்த அடுப்பை சிம்’ல வெச்சுட்டு வா, தெரியுதான்னு உன் தகுதியையும் பாத்துடுவோம்!”

“சரி நிறுத்துங்க போரை! இப்ப வாங்கிண்டு வந்திருக்கறதையாவது பத்ரமா வெச்சுக்கோ. இடுக்கியால பிடிக்காத!”

“ம் பாக்கலாம், ஆனா எனக்கு துணியால இறக்கி பழக்கமில்லையே.. கையைச் சுடாதா?”

“நல்லா இருக்குடீ மாய்மாலம். எங்க காலத்துல மாமியாருக்கு நேர துணியால வெங்கலப் பானையையோ, தோசைக் கல்லையோ பிடிச்சு இறக்கினாலே சிரிப்பா! ஆள் பக்கத்துல இருக்கான்னா, வெறும் கையாலயே சட்டுனு இறக்கிடுவோம். எங்க கையெல்லாம் வெந்தா போச்சு? மன உறுதி கிடையாது இந்தக் காலத்து பொண்ணுகளுக்கு. அம்மாவும் சப்போர்ட்.” – பாட்டி

“ஐயோ, முதல்லயே தெரிஞ்சிருந்தா அந்தக் குடும்பத்துலயே ஒரு பையனுக்கு இவளைத் தள்ளிவிட்டிருக்கலாமே பாட்டி. இவ்ளோ லேட்டா சொல்றியே! உலை வெங்கலப் பானையை வெறும் கையால இவ இறக்கணுமா? கேக்கவே நல்லா இருக்கே. சொக்கா! சொக்கா!! நான் பாக்க கொடுத்து வைக்கலை…” – தம்பி

[அதற்குப்பின் பொன்னைப் போல் பூவைப் போல பாதுகாக்கப் பட்டது புது ஈயச் சொம்பு. கனமான டர்க்கி துண்டால் சுற்றி அரவணைக்கப் பட்டே இறக்கப்பட்டது. ஆனாலும்….]

“…..”

“……”

“வந்திருந்த விருந்தாளிகள் எல்லாம் போயாச்சா?”

“போயாச்சு! நல்லாத்தான் இருந்தது நாலு நாள். நான் தான் கொஞ்சம் டென்ஷனா பேசிட்டேன்.”

“ஐயய்யோ ஏன்டா?”

“என்னம்மா பின்ன, நான் பத்திரமா பாத்துண்டாலும் வரவங்க எல்லாம் ஹெல்ப் பண்றேன்னு ஆளாளுக்கு ரசப் பாத்திரத்தை கிடுக்கியால எடுத்து இதுவும் டிசைனா போச்சு!”

“அதுக்காக வார்த்தையைக் கொட்டுவயா? நல்லா கவனிச்சுட்டு, கடைசில ஒரு வார்த்தை சொன்னதுதான் நிக்கும்! உனக்கும் கொஞ்சம் பொறுமை கிடையாது.”

“விட்டா சர்டிஃபிகேட் கொடுக்க ஆரம்பிப்பியா? நான் ஒன்னும் வார்த்தையை எல்லாம் கொட்டலை. வர விருந்தாளிகள் எல்லாம் ஆளுக்கு ஒரு தடம் வெச்சுட்டுப் போறாங்க என் ரசப் பாத்திரத்துல”ன்னு சிரிச்சுகிட்டே தான் சொன்னேன்.

“ஆங், இது போதுமே. மோப்பக் குழையும் அனிச்சம்…” – தம்பி

“ஆஹா வந்துட்டாரு வள்ளுவரு. எங்க தில் இருந்தா முழுக்குறளும் விடு, பார்ப்போம் உன் தமிழ் அறிவை!”

“சரி விடு. இன்னும் அவனோட சரிக்குச் சரி சண்டை. நசுங்கினா என்ன வேற வாங்கிக்கக் கூடாதா? மங்கள் மெட்டல்லயாவது கூலி சேதாரம் உண்டு. நம்ப காரைக்குடியான் கடைல எடைக்கு எடை அப்படியே ஈயம் தரான். கொண்டுவா, அடுத்த தடவை மாத்திக்கலாம். அன்னிக்கி கூட பாப்பா நல்லா இருக்கான்னு விசாரிச்சான்.”

“‘பாப்பாவால தான் நான் நல்லா இருக்கேன்’னும் சொன்னான். Btw, இது எத்தனாவது ஈயச் சொம்போ?!” –  தம்பி.

-0-

“……”

“……”

“சொல்லவந்ததை முக்கியமா சொல்லிடறேன். ஈயப் பாத்திரம் சமையலுக்கு உபயோகிச்சா ரொம்பக் கெடுதலாம். இனிமே செய்யாத!”

“மங்கையர் மலரா?”

“எதுல வந்தா என்ன, சொன்னா சரின்னு கேளேன்! அப்பாவாட்டம் மங்கையர் மலர்னா மட்டம்னு நினைக்காத!”

“நான் அப்படி எல்லாம் நினைக்கலை.  ஆனா அதுக்காக மாத்தி மாத்தி புக்ல போடறதை எல்லாம் படிச்சுட்டு நம்பளை மாத்திகிட்டே இருக்க முடியாது.”

“அதுக்கில்லைமா..”

“அறுக்காம வேற பேசலாம்!”

“……”

“……”

-0-

“…..”

“ஈயப் பாத்திரத்துல செஞ்சா எவ்வளவோ கெடுதல்னு சொல்றாங்க. வேற try பண்ணேன்டா”

“அப்பா, யூ டூ?!”

“இல்லை, நீயே ஒரு தடவை அதைப் படிச்சுட்டாவது செய்றதை நிறுத்தலாமே…”

“காஃபி கெடுதல்னு எல்லா புக்லயும் போடறான். என்னிக்காவது நிறுத்தியிருக்கோமா? காலைல நாலரை மணிக்கு என்னை எழுப்பி ஸ்பெஷல் காஃபி கிடைக்கும்னு ஸ்ரீரங்கம் பஸ் ஸ்டாண்டுக்கு வாக்கிங் கூட்டுகிட்டுப் போய் வாங்கித் தரீங்க. மாமியாராத்துல பொண்ணுக்கு காலைல ரெண்டாவது காஃபி கொடுக்கறாளான்னு கவலைப்பட்டு இங்க நீங்க சாப்பிடாம இருக்கீங்கன்னு வீட்டுல எல்லாரும் கிண்டல் பண்றாங்க. நல்லதாப் போச்சுன்னு விட வேண்டியது தானே? அன்றாட வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா!”

“சரி, பார்த்துக்க, உனக்குத் தெரியாதது இல்ல”

-0-

“எப்படி இருக்க?”

“உன்போல அண்ணன் ஒரு கோயில் இருக்க, நான் பரம சௌக்கியம் வழக்கம் போல.”

“உன் ரசச் சொம்பும் சௌக்கியமா?”

“என் சொம்பு… :))) அது எப்பவுமே விருந்தினர் வருகைப் பதிவேடு தான், வழக்கம் போல!”

“:)))))))))))”

“:)))))))))))”

“அப்ப இந்த தடவையும் மாத்திடுவன்னு சொல்லு!”

“பின்ன?”

“பாவம் அம்மா தான் பொலம்பிண்டே இருக்கா. நீ நிறுத்தினா என்ன? இல்லை அதுல செய்யறதில்லைன்னு பொய்யாவது சொல்லேன்.”

“உனக்கு விஷயமே தெரியாதா? எனக்கெல்லாம் சரி சரின்னு அடங்கிப் போனா வாழ்க்கை ரொம்ப போரடிக்கும். சும்மாவானும் யாரையாவது எதிர்த்துகிட்டோ அடங்காமலோ இருக்கணும்.”

“:))))… திருந்த மாட்ட நீ!”

-0-

“….”

“Again அம்மா, இந்த வாரப் பத்திரிகைல வர மேட்டருக்கெல்லாம் அதிர்ச்சியாகி, என்னால என்னை தடால் தடால்னு மாத்திக்க முடியாது!”

“ஏன் முடியாது?”

“ஏம்மா, எனக்கு நினைவு தெரிஞ்சே கடலை எண்ணைல சமைச்சுகிட்டிருந்தீங்க. அதுபாட்டுக்கு எண்ணை பொங்கும். பாட்டி வாழை மட்டையை எல்லாம் போட்டு அடக்குவா. அப்றம் பாமாயில் தான் நல்லதுன்னு போட்டிருக்குன்னு அதுல சமைச்சுப் போட்டு கொன்னீங்க. அப்றம் எவனோ சொன்னான்னு ரிஃபைண்ட் சன் ஃப்ளவர். இப்ப இதயம் நல்லெண்ணை. லேட்டஸ்டா, எண்ணையை விதம் விதமா மாத்தி மாத்தி உபயோகிக்கணுமாம். ஒரே எண்னையை தொடர்ந்து உபயோகிக்கக் கூடாதாம். அப்ப இதுக்கு முன்னாடி உங்க லாஜிக்படி தப்பா சாப்டவங்கள்ல்லாம் செத்தா போயிட்டாங்க?”

“விதண்டாவாதம் செஞ்சா பதிலே இல்லை”

“சரி விடு. பாட்டி எல்லாம்  முழுக்க முழுக்க ஈயப் பாத்திரம் அல்லது உள்ள ஈயம் பூசின பித்தளைப் பாத்திரத்துல தானே செஞ்சா? கடைசி வரைக்கும் கண்ணாடி கூட போடாம, பல்லு விழாம பட்டையக் கிளப்பலை? ஒரு ஜூரம் காய்ச்சல்னு வந்திருக்குமா? இதை இத்தோட விடு!”

“அதான் தெரியுமே, நான் சொன்ன பேச்சு நீ என்னிக்கி கேட்டிருக்க?”

“நான் கேப்பேன். ஆனா என் நாக்கு கேக்காது. வேற பாத்திரத்துல ரசம் செஞ்சா எனக்குப் பிடிக்கலை. புளித் தண்ணியாட்டாம் இருக்கு. புரிஞ்சுக்க. மேட்டர் ஓவர்.”

“….”

“இதுக்கெல்லாம் பேசாம இருந்தா எப்படி தாயீ? கொஞ்சம் சிரிங்க… இப்ப Smoking is injurious to healthன்னு பிரிண்ட் போட்ட பாக்கெட்டையே மக்கள் பிரிச்சு ஊதறதில்லையா? அந்த மாதிரி தான். வேணும்னா அடுத்த பாத்திரம் வாங்கும்போது பேர் வெட்டற மாதிரி நீயும் Poisonousனு பாத்திரத்துல வெட்டிக் கொடுத்துடு. நான் அதை வெச்சு சமைச்சுக்கறேன்.”

“செய்ய மாட்டயான்ன நீ? எப்படியோ போ! பாலாஜி மெட்டல்ஸ்ல நிறைய புது ஸ்டாக் ஈயப் பாத்திரம் வந்திருக்காம். பார்த்து வெச்சிருக்கேன். இருக்கட்டும்; பொண்ணே வந்து அவளுக்கு வேணுங்கற டிசைன், அளவுல வாங்கிக்கட்டும்னு சொல்லிவெச்சிருக்கேன். எல்லாமே புதுப்புது டிசைனா வரவழைச்சிருக்கான். நன்னா இருக்கு, வெள்ளிப் பாத்திரமாட்டம்!”

“ச்சோ ச்வீட். இப்பத்தான் ஒரு பொறுப்புள்ள அம்மாவா behave பண்ற.. :))”

“….”
 
 

-0-

“ஊருக்கு வர டிக்கெட் ரிசர்வ் பண்ணியாச்சா? குழந்தையை எப்ப பார்போம்னு இருக்கு”

“எனக்கு எப்படா யார் தலைலயாவது கட்டிட்டு இருப்போம்னு இருக்கு”

“ஏன் பாவம் அப்படி சொல்ற? கொண்டுவந்து விடு. நாங்க வெச்சுக்கறோம். உன்னையெல்லாமே நாங்க சமாளிச்சிருக்கோம். ஆண்ட்றவுக்கு(ஆண்டு நிறைவு) பட்டுப் பாவாடை வாங்கியாச்சு. நீங்க வந்ததும் தான் குழந்தையை அளவெடுத்து தைக்கணும்.”

“சரி”

“அதைவிட உனக்கு சந்தோஷமான ந்யூஸ். மங்கள் மெட்டல்ல இப்ப புதுசா, ஈயப் பாத்திரம் வாங்கினா அடில காப்பர் பாட்டம் போட்டுத் தரான்… சூடு வேகமா பரவுமாம்… மறந்து அடுப்புல வெச்சாலும் சூட்டை எல்லாம் காப்பர் வாங்கிக்குமாம்… பாத்திரம் உருகாதாம்… நீ வந்ததும் போய் பாக்கலாம்…”

“ஐயோ, நானே சொல்ல நினைச்சேன். என் பாத்திரங்களையும் நீயே எடுத்துக்க. நான் இப்பல்லாம் அதுல சமைக்கறதில்ல”

“ஏன்???!!!!”

eeyam2.JPG

“டாக்டர், குழந்தைக்கு ஒரு வயசு ஆகப் போறது. சாதம் எல்லாம் கொடுக்க ஆரம்பிக்கலாம்னு சொல்லியிருக்கார். 4 நாளா ரசம் சாதம் கொடுக்க ஆரம்பிச்சிருக்கேன் என் பொண்ணுக்கு. எல்லா ரசப் பாத்திரத்தையும் கொண்டுவந்து உங்கிட்ட போட்டுடப் போறென். எனக்கு வீட்டுலயே வேண்டாம் இனிமே இந்தப் பாத்திரமெல்லாம்!!”

[இதுக்கெல்லாம் ‘சிறுகதை’னு லேபிள் ஒட்டினா, சிறுகதை இலக்கிய உம்மாச்சி கண்ணைக் குத்திடுமா? :(]

Health Effects | Lead Poisoning

முன்னால் சொல்லவிட்டுப் போன பின்குறிப்பு: ஆமாங்கய்யா, ஆமாம், இது அக்மார்க் உள்குத்துப் பதிவு! (சே, ஒரு பொறவி இலக்கியவாதியை இப்படி கேவலப்படுத்தறாய்ங்களே!..)