நேயர் விருப்பம். 🙂 

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1/2 கிலோ
நல்லெண்ணை – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – 2 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 25 (விரும்பினால்)
வெள்ளை எள் – 2 டீஸ்பூன்
 

வறுத்துப் பொடிக்க
நல்லெண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 10
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி விரை – 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிது

புளிக்காய்ச்சல் தயாரிக்க
புளி – 100 கிராம் அல்லது ஒரு கிரிக்கெட் பந்து அளவு. 🙂
நல்லெண்ணை – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 8
உளுத்தம் பருப்பு –  1 டேபிள்டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
நிலக்கடலை – 50 கிராம்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
வெள்ளை எள் – 2 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை:

  • புளியை கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் நல்லெண்ணை விட்டு, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, கொத்தமல்லி விரை, வெந்தயம், பெருங்காயம் என்ற வரிசையில் சேர்த்து நன்கு சிவப்பாக வறுத்து, பொடித்துக் கொள்ளவும்.
  • மீண்டும் வாணலியில் நல்லெண்ணை விட்டு, கடுகு, மூன்று நான்காய் கிள்ளிப் போட்ட காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, வெந்தயம், வெள்ளை எள், பெருங்காயம், கறிவேப்பிலை என்ற வரிசையில் சிவக்க வறுத்து, பின் புளிக் கரைசலைச் சேர்க்கவும்.
  • உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மிக நிதானமான தீயில் வதக்கவும்.
  • புளிக்கரைசல் இறுகி, எண்ணை பிரிந்து வரும்வரை வதக்கி, எடுத்துவைத்துக் கொள்ளவும்.
  • சாதத்தை உதிர் உதிராகச் சமைத்து, ஒரு அகலமான பாத்திரம் அல்லது தாம்பாளத்தில் கொட்டி ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணை சேர்த்து ஆறவிடவும். இப்படிச் செய்வதால் சாதம் மேலும் ஒட்டாமல் தவிர்க்கலாம்.
  • மேலும் ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணையைச் சூடாக்கி, கடுகு, முந்திரிப்பருப்பு, வெள்ளை எள், கறிவேப்பிலை தாளித்து, சாதத்தில் சேர்க்கவும்.
  • கொஞ்சம் கொஞ்சமாக, புளிக் காய்ச்சலையும், அரைத்து வைத்துள்ள பொடியையும் மாற்றி மாற்றிச் சேர்த்துக் கலக்கவும்.

* எப்பொழுதும் புளிக்காய்ச்சல் தயாரிக்க, மிகப் பெரிய வாணலியாக எடுத்துக் கொள்ளவும். கொதிக்கும்போது நிறைய வெளியே தெறிக்காமல் இருக்க இது அவசியம். அடுப்பும்  அடுப்பு சார்ந்த இடமும் சுத்தப்படுத்துவது மிகப் படுத்தலான வேலை. 

* புளிக்காய்ச்சலை சாதத்தோடு கலக்கும் இந்தச் சமயத்தில், ஒருவேளை உப்பு குறைவாக இருந்தால் மேலும் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம்.

* புளியோதரை தயாரிக்கும் போது அதன் காரம், சாப்பிட்டுப் பார்த்தால் அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் தற்பொழுது மேலே உரைக்கும் காரம் சாதத்தில் இறங்கி, சாப்பிடும் நேரத்தில் சரியாக இருக்கும். 

* பொதுவாகவே அனைத்து வகைப் புளியோதரைகளும், கலந்து ஒரு 4 மணிநேரமாவது வைத்திருந்து, பிறகு சாப்பிட்டால்தான் ருசியாக இருக்கும். மறுநாள் என்றால் அற்புதமான சுவையோடு இருக்கும்.

* இந்த முறையில் எவ்வளவு சாதத்திற்கு, எவ்வளவு பொடி அல்லது புளிக்காய்ச்சல் தேவை இருக்கும் என்று எப்பொழுதுமே சரியான ஒரு அளவைச் சொல்ல முடியாது. அவரவர் ருசிக்குத் தக்க முன்னேபின்னே தான் தேவை இருக்கும். ஒருவேளை வறுத்துப் பொடித்த பொடி குறைவாக இருந்தால் கவலை இல்லை. இட்லி மிளகாய்ப் பொடி தூவி சமாளிக்கலாம். (அதிலும் உப்பு சேர்த்திருக்கிறோம் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.) ஆனால் புளிக் காய்ச்சல் மட்டும் கொஞ்சம் அதிகமாகவே செய்துவைத்துக் கொண்டு கலக்க ஆரம்பிப்பது தான் சரி. 

-0-

பாலக்காடு:

மேலே கூறியவற்றிலிருந்து அதிக வித்தியாசம் இல்லை.

* வறுத்துப் பொடிக்கும் பொருள்களில் மாற்றம்
கொத்தமல்லி விரை – 1 கப்
கடலைப் பருப்பு – 3/4 கப்

* புளிக்காய்ச்சலுக்குத் தாளிக்கும் சமயம் புளிக் கரைசலை விடுவதற்கு முன், மற்ற சாமான்களோடு பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய இஞ்சியும் சிறிது சேர்த்து வதக்க வேண்டும். விரும்பினால் புளிக்காய்ச்சலுக்கு மட்டும் ரிஃபைண்ட் ஆயில் உபயோகித்துக் கொள்ளலாம். (நல்லவேளை, சேச்சி தேங்காயெண்ணை என்று சொல்லவில்லை.)

* இஞ்சி, பச்சை மிளகாய் சேர்ப்பதாலோ என்னவோ, இந்தப் புளியோதரை இன்னும் அதிக ஃப்ரெஷ்ஷாக இருப்பதுபோல் எனக்கு ஓர் உணர்வு. கொத்தமல்லி விரை, கடலைப்பருப்பு அதிகம் சேர்ப்பதால் கொஞ்சம் சுவையும் மணமும் தூக்கலாகவே இருக்கும்.

-0-

ஆந்திரா: (புளிஹோரா அன்னமு)

பச்சரிசி – 1/2 கிலோ
நெய் அல்லது வெண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
 

வறுத்துப் பொடிக்க
நல்லெண்ணை – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 12
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி விரை – 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
பெருங்காயம் – சிறிது

புளிக்காய்ச்சல் தயாரிக்க
புளி – 100 கிராம்
நல்லெண்ணை – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

தாளிக்க
நல்லெண்ணை – 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு –  2 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
நிலக்கடலை –  50 கிராம்
முந்திரிப் பருப்பு – 25 (விரும்பினால்)
வெந்தயம் – 2 டீஸ்பூன்
வெள்ளை எள் – 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் – சிறிது
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

  • மேலே ‘வறுத்துப் பொடிக்க’க் குறிப்பிட்டுள்ள பொருள்களை வறுத்து, நன்றாகப் பொடிசெய்து கொள்ளவும்.
  • வாணலியில், தாளிக்கக் குறித்திருக்கும் பொருள்களை தாளித்து, அத்துடன் கெட்டியாகக் கரைத்த புளிக் கரைசலைச் சேர்க்கவும்.
  • உப்பு மஞ்சள் தூளுடன், அரைத்து வைத்திருக்கும் பொடியையும் சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்கவிட வேண்டும்.
  • உதிர் உதிராக சமைத்த சாதம், சூடாக இருக்கும்போதே வெண்ணை அல்லது நெய் சேர்த்து ஆறவிட வேண்டும்.
  • எண்ணையில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, சாதத்தில் சேர்க்கவும்.
  • சாதம் ஆறியதும், புளிக்காய்ச்சலையும் தேவையான அளவு சேர்த்துக் கலக்க வேண்டும்.

* இதில் முக்கியமாக என்னைக் கவர்ந்தது, அங்கங்கே காய்ந்த மிளகாய் அகப்பட்டுப் படுத்தாமல், எல்லாமே அரைபட்டிருப்பதால், கொஞ்சம் வேடிக்கை பார்த்துக் கொண்டோ, விஸ்தாரமாகப் பேசிக்கொண்டோ அலட்சியமாகச் சாப்பிடலாம். சுவையில் பெரிய மாறுதல் இல்லாமல், கொஞ்சம் நெய் வாசனையோடு நன்றாகவே இருந்தது.

-0-

ரெடி மிக்ஸ்:

ரெடி மிக்ஸ் புளியோதரைப் பொடி வாங்கிச் செய்பவர்களும் சுவையான புளியோதரை செய்யலாம்.

MTR Puliogareல் வழமையான கன்னட உணவுகளைப் போல சர்க்கரையும் வெல்லமும் சேர்த்திருப்பார்கள். 😦 தேங்காய் கூட(ரொம்பத்தான்!). அந்தச் சுவை பிடிக்காதவர்கள் அதைத் தவிர்த்துவிடலாம்.

வேறு எந்த ப்ராண்டாக இருந்தாலும், சாதத்தில் ரெடி மிக்ஸ் கலப்பதோடு, நம் பங்குக்கு, 2 டீஸ்பூன் நல்லெண்ணையில், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வெந்தயம், நிலக்கடலை, வெள்ளை எள், முந்திரி(விரும்பினால்), கறிவேப்பிலை தாளித்துக் கலந்தால் பெரிய வித்தியாசம் இல்லாமல் இருக்கும். 

-0-

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பொரித்த வடாம், அப்பளம், சிப்ஸ் வகைகள்…

காரம் என்றால் காத தூரம் ஓடுபவர்களுக்கு, தயிர்ப் பச்சடி வகை.