பொங்கல் பண்டிகையன்று செய்யும் இனிப்பு வகை..

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப்
பயத்தம் பருப்பு – 1/4 கப்
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
பால் – 1 கப் (*)
வெல்லம்  – 2 1/2 கப்
நெய் – 1/4 கப்
ஏலக்காய்ப் பொடி – 1 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 20
கிஸ்மிஸ் – 20
ஜாதிக்காய்ப் பொடி – 1 சிட்டிகை
தேங்காய் – சிறிது
பச்சைக் கற்பூரம் – சிறிது

 sarkkarai-pongal11.JPG

 

செய்முறை:

  • அரிசி, பருப்புகளைக் கழுவி நீரை வடித்துவிட்டு, லேசாக நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் பால், 3 கப் தண்ணீருடன் சேர்த்து குக்கரில்(அல்லது பானையில்) குழைய வேக விடவும்.
  • வாணலியில் வெல்லத்தை சிறிது நீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
  • லேசான பாகு வந்தவுடன் பொங்கலை சேர்த்து நன்கு கிளறவும். இந்த மாதிரி பாகு வைத்துக் கிளறினால் சீக்கிரம் கெடாமல் இருக்கும்.
  • இறுதியில் நெய் சேர்த்து, கெட்டியாகிச் சுருண்டு வரும்வரை நன்றாகக் கிளறவும்.
  • ஏலக்காய்ப் பொடி, ஜாதிக்காய்ப் பொடி, முந்திரி, கிஸ்மிஸ், மிகச் சிறுசிறு துண்டுகளாகக் கீறிய தேங்காய் எல்லாவற்றையும் 2 டேபிள்ஸ்பூன் நெய்யில் பொரித்துப் போட்டு பச்சைக் கற்பூரம் சேர்த்து இறக்கவும்.

* பாலுக்குப் பதில் தேங்காய்ப் பால் சேர்த்தாலும் அல்லது இரண்டும் சரிசமமாகச் சேர்த்தாலும் மிகவும் ருசியாக இருக்கும்.

sarkkarai pongal

சர்க்கரைப் பொங்கலின் குமட்டும் மணத்தை மாடன் உணர்ந்தது. ‘இந்தக் குடுமிப்பயவ இந்த எளவை எப்பிடியேன் திங்கியாவளோ ? சவத்தெளவு, எண்ணை நாத்தமில்லா அடிக்குவு . . . ‘ என்று மாடன் வியந்து கொண்டது.

….

….

நாலு பட்டர்கள் சுமந்து கொண்டு வந்த அண்டாவைப் பார்த்ததும் மாடன் திடுக்கிட்டது. ஒருவேளை இரத்தமாக இருக்கலாம் என்று சிறு நம்பிக்கை ஏற்பட்டது. மறுகணம் அதுவும் போயிற்று. சர்க்கரைப் பொங்கலின் வாடை மாடனைச் சூழ்ந்தது. என்ன இது என அது குழமப, தந்திரி பலி ஏற்கும்படி சைகை காட்டினார். ‘ஆருக்கு, எனக்கா ? ‘ என்று தனக்குள் சொன்னபடி ஒரு கணம் மாடன் சந்தேகப்பட்டது. மறுகணம் அதன் உடம்பு பதற ஆரம்பித்தது.

— மாடன் மோட்சம். (ஜெயமோகன்)

இந்துமதத்தின் மேல் நம்பிக்கை உள்ள ஒருவர், அதன் நடைமுறை யதார்த்தத்தை அதுவும் அந்த வட்டார மொழியில் சொல்லும்போது, இந்தக் கதை கிடைக்கலாம். வெளியிலிருந்து படிப்பவர்களுக்கு நகைச்சுவை கதையாகவும்.