பொங்கல் பண்டிகையன்று செய்யும் இனிப்பு வகை..
தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 1 கப்
பயத்தம் பருப்பு – 1/4 கப்
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
பால் – 1 கப் (*)
வெல்லம் – 2 1/2 கப்
நெய் – 1/4 கப்
ஏலக்காய்ப் பொடி – 1 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 20
கிஸ்மிஸ் – 20
ஜாதிக்காய்ப் பொடி – 1 சிட்டிகை
தேங்காய் – சிறிது
பச்சைக் கற்பூரம் – சிறிது
செய்முறை:
- அரிசி, பருப்புகளைக் கழுவி நீரை வடித்துவிட்டு, லேசாக நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
- பின்னர் பால், 3 கப் தண்ணீருடன் சேர்த்து குக்கரில்(அல்லது பானையில்) குழைய வேக விடவும்.
- வாணலியில் வெல்லத்தை சிறிது நீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
- லேசான பாகு வந்தவுடன் பொங்கலை சேர்த்து நன்கு கிளறவும். இந்த மாதிரி பாகு வைத்துக் கிளறினால் சீக்கிரம் கெடாமல் இருக்கும்.
- இறுதியில் நெய் சேர்த்து, கெட்டியாகிச் சுருண்டு வரும்வரை நன்றாகக் கிளறவும்.
- ஏலக்காய்ப் பொடி, ஜாதிக்காய்ப் பொடி, முந்திரி, கிஸ்மிஸ், மிகச் சிறுசிறு துண்டுகளாகக் கீறிய தேங்காய் எல்லாவற்றையும் 2 டேபிள்ஸ்பூன் நெய்யில் பொரித்துப் போட்டு பச்சைக் கற்பூரம் சேர்த்து இறக்கவும்.
* பாலுக்குப் பதில் தேங்காய்ப் பால் சேர்த்தாலும் அல்லது இரண்டும் சரிசமமாகச் சேர்த்தாலும் மிகவும் ருசியாக இருக்கும்.
சர்க்கரைப் பொங்கலின் குமட்டும் மணத்தை மாடன் உணர்ந்தது. ‘இந்தக் குடுமிப்பயவ இந்த எளவை எப்பிடியேன் திங்கியாவளோ ? சவத்தெளவு, எண்ணை நாத்தமில்லா அடிக்குவு . . . ‘ என்று மாடன் வியந்து கொண்டது.
….
….
நாலு பட்டர்கள் சுமந்து கொண்டு வந்த அண்டாவைப் பார்த்ததும் மாடன் திடுக்கிட்டது. ஒருவேளை இரத்தமாக இருக்கலாம் என்று சிறு நம்பிக்கை ஏற்பட்டது. மறுகணம் அதுவும் போயிற்று. சர்க்கரைப் பொங்கலின் வாடை மாடனைச் சூழ்ந்தது. என்ன இது என அது குழமப, தந்திரி பலி ஏற்கும்படி சைகை காட்டினார். ‘ஆருக்கு, எனக்கா ? ‘ என்று தனக்குள் சொன்னபடி ஒரு கணம் மாடன் சந்தேகப்பட்டது. மறுகணம் அதன் உடம்பு பதற ஆரம்பித்தது.
— மாடன் மோட்சம். (ஜெயமோகன்)
இந்துமதத்தின் மேல் நம்பிக்கை உள்ள ஒருவர், அதன் நடைமுறை யதார்த்தத்தை அதுவும் அந்த வட்டார மொழியில் சொல்லும்போது, இந்தக் கதை கிடைக்கலாம். வெளியிலிருந்து படிப்பவர்களுக்கு நகைச்சுவை கதையாகவும்.
புதன், ஜனவரி 16, 2008 at 9:59 முப
சரி எப்பவுமே தொலைபேசி பேசி செய்றோமே, இந்த வாட்டி வித்தியாசமா இருக்கணுமின்னு இந்த வருச பொங்லுக்கு நம்ம வீட்டுல இதுதான் செய்முறை. ரொம்ப நல்லா வந்திச்சி (நமக்கு நாமே திட்டத்துல கூட பாராட்டிக்கிலன்னா எப்படி) ரெண்டே ரெண்டு சிறு விஷயங்கள தவிர.
அ) வெல்லம் துருவி 2.5 கப்பா? அத மட்டும் குத்து மதிப்பா போட்டு கொஞ்சம் இனிப்பு கம்மியா வந்திச்சி.. (heart healthy pongal அப்படீன்னு பேரு)
ஆ) சிட்டிகைன்னா என்னன்னு தெரியாம கொஞ்சம் அதிகமா ஜாதிக்காய் பொடி (செய்து) போட்டேன். வாசனை தூக்கோ தூக்கு.
*
உங்களுக்கும் குடும்பத்தில் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
புதன், ஜனவரி 16, 2008 at 9:14 பிப
hello jash,
BELATED HAPPY PONGAL WISHES.very nice o see ur pongal receipy. ur friend Ramakannan from mysore
வியாழன், ஜனவரி 24, 2008 at 12:21 பிப
ramakannan, நன்றி.
முகமூடி,
அ) துருவிய வெல்லம். பெரிய கட்டியாக (படத்தில் இருப்பதுபோல்) இருந்தால் துருவி மெனக்கெட வேண்டாம். ஒரு காகிதம் அல்லது செய்தித்தாள் பேப்பரில் 30 செகண்ட் மைக்ரோவேவில் வைத்தால் தளர்ந்துவிடும்.
ஆ) சிட்டிகை – https://mykitchenpitch.wordpress.com/measures/
கட்டைவிரல், ஆள்காட்டி விரல் நடுவில் சிறிது எடுத்தால் சரியாக இருக்கும். விரல்கள் நார்மல் சைஸ். 🙂
ஜாதிக்காய் பரவாயில்லை, பச்சைக் கற்பூரம் அதிகமானால் கசக்கும்.
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
சனி, மார்ச் 8, 2008 at 10:51 பிப
ஜெயஸ்ரீ மேடம்,
//இந்துமதத்தின் மேல் நம்பிக்கை உள்ள ஒருவர், //
இப்படி யாரை சொல்கிறீர்கள்? ஜெயமோகனையா? அவரது பதிவுகள் எதுவும் நீங்கள் படிப்பதில்லையா? யாரையும் யாரும் புகழலாம். தலையில் தூக்கிவைத்துக் கொள்ளலாம். But be moderate in having opinion about others’ stands. உதவிக்கு எதற்கும் உங்கள் இன்னொரு “அபிமான” எழுத்தாளர் சுஜாதாவின் கருத்தையும் யோசியுங்கள்.
//வெளியிலிருந்து படிப்பவர்களுக்கு நகைச்சுவை கதையாகவும்.//
ம்ம்ம்… இப்போது நீங்கள் உள்ளேயா வெளியேயா? சில சமயம் இணையத்தில் பிம்பங்கள் தெளிவாகத் தெரிவதில்லை. 🙂 நீங்கள் மரத்தடி ஜெயஸ்ரீதானே? 🙂
உங்கள் ஜெயமோகன் குறித்து தனிநபர் தாக்குதல் எதுவும் நான் நடத்திவிடவில்லை. என் அற்ப சந்தேகத்தைத்தான் கேட்டிருக்கிறேன். பின்னூட்டத்தை பிரசுரிக்கவும். 🙂
செவ்வாய், மார்ச் 11, 2008 at 9:22 பிப
மாடன் மோட்சம் கதை இங்கே இருக்கிறது.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=10304062&format=html
அவர் நக்கலுக்கு எழுதினாரோ, நகைச்சுவைக்கு எழுதினாரோ, எந்தக் கருத்தியலைச் சொல்ல எழுதினாரோ.. எப்படி இருந்தாலும் அடிப்படைல Let us assume.. என்று ஆரம்பித்து கணிதம் நிரூபிப்பது மாதிரி ஆரம்பத்திலேருந்து கடைசி வரி வரை ஒரு விஷயம் assume செஞ்சுகிட்டிருக்காரு. அது மாடனுக்கு(ம்) சில எல்லைகள் உண்டு, மந்திரங்களுக்கு பலன் உண்டு. மறுக்கமுடியாத காட்டா அந்தக் கதையோட கடைசி வரி..
“அசையவே முடியவில்லை. பாவி அய்யன் மந்திரத்தால் தன்னை யந்திர பீடத்தோடு சேர்த்துக் கட்டிவிட்டதை மாடன் பயங்கரமான பீதியுடன் உணர்ந்தது.”
//ம்ம்ம்… இப்போது நீங்கள் உள்ளேயா வெளியேயா? சில சமயம் இணையத்தில் பிம்பங்கள் தெளிவாகத் தெரிவதில்லை. நீங்கள் மரத்தடி ஜெயஸ்ரீதானே?//
சந்தேகமில்லாமல் அதே மரத்தடி ஜெயஸ்ரீதான். ஆனால் எதையும் எங்கும் மாற்றிச் சொல்லியிருப்பதாக எனக்குத் தெரியவில்லையே. ஏதாவது உணவுக்குறிப்பு சொல்லும்போது அதுகுறித்து எங்காவது இலக்கியங்களில் இருந்தால் எடுத்துப் போடலாம் என்று ஒரு ஸ்டைல். பொதுவாக சர்க்கரைப் பொங்கலை புகழ்ந்து வரும் வரிகளை விட என்னைக் கவர்ந்த இந்தக் கதையும், வித்யாசமாக அதன் சுவையை மறுக்கும் இந்தப் பகுதியும் சேர்க்கலாம் என்று நினைத்தேன். சேர்த்திருக்கிறேன். அவ்வளவுதான். மற்றபடி தலையில் தூக்கிவைத்துக் கொள்வது என்ற பதம் எல்லாம் அதிகம். யாரையும் எதற்காகவும் தலையில் தூக்கிவைத்துக் கொள்ள முடிவதில்லை என்ற என் குணம்தான் பலநேரங்களில் என் பலமாகவும், சில நேரங்களில் என் பலவீனமாகவும் இருந்து வந்திருக்கிறது.
உள்ளேயா வெளியேயா என்றால் எனக்குச் சொல்லத் தெரியவில்லை, முதலில் எழுத்தின் நடை அழகோடும் இயைந்து ஓடும் நகைச்சுவையோடும் அனுபவித்துப் படித்த என்னால் இறுதியில் இயல்பாக இருக்கமுடியவில்லை. ஸ்ரீரங்கத்தில் வளர்ந்தாலும் எல்லா சின்ன பெரிய விஷயங்களுக்கும் ஊருக்கு வெளியே காவலுக்கு இருக்கும் முனீஸ்வரனுக்குத் தான் சர்க்கரை பொங்கலுக்குத் தருவோம். என் மாமியார் வீட்டிலும் பல தலைமுறைகளாய் அடையவளஞ்சான் முனியப்பனுக்கு வாராவாரம் சர்க்கரைப் பொங்கல்தான். அதைவிட எங்கள் வீடுகளில் “சோணை” என்ற தெய்வத்தை வழிபடும் வழக்கமும் இருந்திருக்கிறது. வீட்டில் யாருக்காவது பிரசவம் என்றால் சோணைக்கு ‘தண்ணி’ வாங்கிக் கொடுக்கும் பழக்கம் உண்டு. எனக்கு இரண்டு முறையும் இதற்காக மதுரை பக்கத்து ஊர்க்காரர் ஒருவருக்கு என் பாட்டி பணம் கொடுத்ததை நான் பார்த்திருக்கிறேன். பாரிஸ் வைன் வாங்கினா குடிக்கமாட்டாரா என்றுகூட கேட்டிருக்கிறேன். பாட்டிக்குப் பிறகு ‘அது’ எங்கே இருக்கிறது என்றே குடும்பத்தில் யாருக்கும் தெரியவில்லை. என்னவோ இந்தக் கதையைப் படித்ததும் மனம் கனத்ததுதான் உண்மை.
இதுகுறித்து(இந்துமதம் பற்றியா, ஜெயமோகன் பற்றியா?) சுஜாதாவின் கருத்து என்று எதைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. விபரமாக எடுத்துச் சொன்னால் யோசிக்கலாம்.
//ஜெயமோகன் குறித்து தனிநபர் தாக்குதல் எதுவும் நான் நடத்திவிடவில்லை//
:)) ஜெயமோகன் எல்லாம் சாதாரண பதிவர்கள் வகையிலோ, தனிநபர் தாக்குதல் லிஸ்டிலோ வரமாட்டார்கள். அங்கே தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது. சாண் என்ன. முழம் என்ன, நீங்கள் சொந்தப் பெயரிலேயே சொல்ல நினைப்பதைச் சொல்லலாம். 🙂
வியாழன், செப்ரெம்பர் 23, 2010 at 2:33 பிப
[…] படம், சமையல் குறிப்பு நன்றி: ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் […]