கார மிக்ஸர் – 1

 
தேவையான பொருள்கள்:

அவல் – 3 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
பயத்தம் பருப்பு –  1 கப்
நிலக்கடலை – 1 கப்
பொட்டுக் கடலை – 1 கப்
முந்திரிப் பருப்பு – 1 கப்
கறிவேப்பிலை – 4 ஈர்க்கு
உப்பு – தேவையான அளவு
காரப் பொடி – தேவையான அளவு
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க
ஓமப்பொடி (அல்லது காராபூந்தி) – 1 1/2 கப்

 

செய்முறை:

  • கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து ஒரு துணியில் உலர்த்திக் காயவைக்கவும். (முழுவதும் காய்ந்திருக்கவேண்டியதில்லை.)
  • முந்திரிப்பருப்பை நாலைந்தாக உடைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும் துளைகளுள்ள ஒரு வடிகட்டி (பெரிய டீ வடிகட்டி, புளி வடிகட்டி) எடுத்து, அதில் கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, நிலக்கடலை, பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பை ஒவ்வொன்றாக, தனித்தனியாக போட்டு, பொரித்து, வடித்தட்டில் போட்டு எண்ணெயை வடிக்கவும்..
  • அவலை முதலிலேயே அந்த வடிகட்டியில் (மாவு, உடைந்த அவல் இல்லாமல்) சலித்துவைத்திருக்கவேண்டும்; கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, பொரித்து எடுக்கவும். சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
  • சிறிது கடலைமாவில் உப்பு, பெருங்காயம், மிளகாய்த் தூள் சேர்த்துக் கலந்து காராபூந்தி அல்லது ஓமப்பொடி அச்சில் பிழிந்துகொள்ளலாம். (மிக்ஸரில் கடலைமாவு சேர்த்த பொருள் இல்லாவிட்டால் சுவைகூடி வராது. அதனால் ஏதாவது ஒன்றாவது செய்து சேர்க்கலாம்; அல்லது அதைமட்டும் கடையில் வாங்கிச் சேர்த்துக்கொள்ளலாம்.)
  • எல்லாவற்றையும் ஒரு வாயகன்ற பெரிய பாத்திரத்தில் போட்டுக்கொண்டே வரவும்.
  • கடைசியில் கறிவேப்பிலையையும் பொரித்து, வடிகட்டவும்.
  • பொரித்த கறிவேப்பிலையுடன் தேவையான உப்புப் பொடி, மிளகாய்ப் பொடி, பெருங்காயம் சேர்த்து நன்கு கையால் நொறுக்கி, அந்தக் கலவையை நன்கு கலக்கவும்.

* எண்ணெயில் பொரிக்கும்போது தீ மிகக் குறைவாக இருந்தால் பருப்புகள், அவல் கடுக்’கென்று ஆகிவிடும். தீ அதிகமாக இருந்தால் கருகிவிடும். மிதமான தீயில் அடுப்பு எரியவேண்டும். அவல் போட்டதுமே பொரிந்துவிடவேண்டும்.

* விரும்புபவர்கள் வேறு மசாலாப் பொடிகளும் சேர்க்கலாம். ஆனால் இதுவே அதிகம் படுத்தாத வகை.

தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 2 1/2 கப்
அரிசி மாவு – 1 கப்
மஞ்சள் தூள்
டால்டா – 2 டேபிள்ஸ்பூன் (அல்லது எண்ணெய்)
எள் – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
உப்பு
பெருங்காயம்
எண்ணெய்

ribbon murukku

செய்முறை:

  • கடலை மாவையும் அரிசி மாவையும் நன்கு கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவும்.
  • மஞ்சள் தூள், எள், உப்பை மாவில் சேர்க்கவும்.
  • டால்டா அல்லது எண்ணெயைச் சூடாக்கி அதனுடன் சேர்த்து, சிறிது சிறிதாக விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, சூடாக்கி, மாவை ரிப்பன் நாழியில் பிழியவும். (அல்லது மிக்ஸரில் சேர்க்க விரும்பினால் அதைவிட சிறிதான ஆனால் தட்டையான வேறு டிசைன் இருந்தால் பிழிந்து கொள்ளலாம்.)
  • இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து சத்தம் அடங்கியதும் எடுக்கவும்.

தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1/2 கப்
மிளகு – 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் (அல்லது நெய்)
உப்பு
பெருங்காயம்
எண்ணெய்

kaaraa sev 1

செய்முறை:

  • கடலை மாவையும் அரிசி மாவையும் நன்கு கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவும்.
  • மிளகை நைசாக அரைக்காமல் கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
  • மிளகுத் தூள், உப்பு, பெருங்காயத் தூளை மாவில் சேர்க்கவும். (பெருங்காயம் பெரிதாக இருந்தால் அதையும் நீரில் கரைத்தே சேர்க்கவும்.)
  • வெண்னெய் அல்லது நெய்யைச் சூடாக்கி அதனுடன் சேர்த்து, சிறிது சிறிதாக விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, சூடாக்கி, மாவை காராச் சேவு கரண்டியில் தேய்க்கவும். (அல்லது மிக்ஸரில் சேர்க்க விரும்பினால் அவ்வளவு பெருவட்டாக இருப்பது சாப்பிடும் போது தனித்து ருசிக்கும். எனவே ஓமப்பொடிக்கு மேல் சற்றே பெரிதாக தேன்குழல் அச்சில் பிழிந்து கொள்ளலாம்.)
  • இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து சத்தம் அடங்கியதும் எடுக்கவும்.

* அச்சில் பிழிந்திருந்தால், வேண்டிய அளவுக்கு ஒடித்துக் கொள்ளவும்.

* காரம் அதிகம் தேவைப்பட்டால் இன்னும் அதிக மிளகு சேர்த்துக் கொள்ளலாம். மிளகாய்த் தூள் சேர்க்கக் கூடாது.

தேவையான பொருள்கள்:

 கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1 கப்
ஓமம் – 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன் (விரும்பினால்)
உப்பு
பெருங்காயம்
எண்ணெய்

oma podi 1

செய்முறை:

  • கடலை மாவையும் அரிசி மாவையும் நன்கு கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவும்.
  • ஓமத்தை சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து அந்த நீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • ஓமநீர், உப்பு, பெருங்காயத் தூளை மாவில் சேர்க்கவும். (பெருங்காயம் பெரிதாக இருந்தால் அதையும் நீரில் கரைத்தே சேர்க்கவும்.)
  • டால்டா அல்லது எண்ணெயைச் சூடாக்கி அதனுடன் சேர்த்து, சிறிது சிறிதாக விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, சூடாக்கி, மாவை ஓம அச்சில் பிழிந்து, இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து சத்தம் அடங்கியதும் எடுக்கவும். (ஓமப்பொடி மெலிதாக இருப்பதால் உடனே வெந்துவிடும். அதிக கவனம் தேவை.)
  • தேவைக்குத் தகுந்த அளவில் ஒடித்து உபயோகிக்கலாம்.

* ஓமம் சேர்த்திருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது.

தேவையான பொருள்கள்:

 கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1/2 கப்
உப்பு
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன் (விரும்பினால்)
டால்டா – 2 டேபிள்ஸ்பூன் (அல்லது எண்ணெய்)
எண்ணெய் 

kaaraa boondhi

செய்முறை:

  • கடலை மாவையும் அரிசி மாவையும் நன்கு கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவும்.
  • உப்பு, மிளகாய்த் தூள், சேர்க்கவும்.
  • டால்டா அல்லது எண்ணெயைச் சூடாக்கி அதனுடன் சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கட்டிகளில்லாமல் பஜ்ஜி மாவை விட சற்றே தளர்ந்த பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை நிதானமான சூட்டில் வைத்துக் கொள்ளவும்.
  • பூந்திக் கரண்டியில் சிறிது எண்ணெய் தடவி,  வாணலி எண்ணெய்க்கு மேலாக நீட்டி, மாவுக் கரைசலை கொஞ்சமாக விட்டு, லேசாகத் தட்டினால் பூந்தி விழ ஆரம்பிக்கும். வாணலிக்கு மிக அருகில் கரண்டியை நீட்டினால் நல்ல உருளையாகவும், சற்றே மேலே வைத்திருந்தால் நீள் உருளையாகவும் விழும். (உன்னோடது ஏன் இப்படி வாலோடு இருக்குன்னு யாரும் கேட்டுடாதீங்க. 🙂 ஜாரிணி இல்லாம புளி வடிகட்டி வெச்சு செஞ்சது. எல்லாரும் இதுவே கரகரப்பா, வித்யாசமா நல்லா இருக்குன்னு சொல்றதால ஜாரிணி வாங்காமலே இருந்துட்டேன். கடைல வாங்கினதான்னு இப்ப யாரும் கேக்க முடியாதில்ல. 🙂 பூந்தியின் பின்நவீனத்துவக் கட்டுடைப்புன்னு புரிஞ்சுண்டவங்க புத்திசாலிகள்.)
  • வாணலி எண்ணெய் முழுவதும் நிறைந்ததும், நிறுத்திவிட்டு, பூந்தியைத் திருப்பிவிடவும். சத்தம் அடங்கி, கரகரப்பாக வேகும் வரை காத்திருந்து வெளியே எடுத்து வடியவிடவும். (லட்டுக்குச் செய்வது போல் சீக்கிரம் எடுத்துவிடக் கூடாது.)

* விரும்பினால், மிக்ஸருக்கு அல்லது தயிர்வடை, ராய்த்தா மாதிரி உணவுகளுக்கு உபயோகிக்க விரும்பினால் கலர் சேர்த்துக் கொள்ளலாம்.

* சிலர் சமையல் சோடா சேர்ப்பார்கள். நான் சேர்ப்பதில்லை. டால்டா அல்லது எண்ணெய் சேர்ப்பதிலேயே மொறுமொறுப்பாக இருக்கும்.