ன்னில்
எல்லா வாத்தியங்களையும்
இசைக்கப் பார்க்கிறாய்

பிறந்த குழந்தையாய் நீவீறிட்டபோது
கறந்தபாலின் தூய்மையையும்
மிஞ்சிய தாய்மையுடன் என்
மார்சுரந்த பாலருந்த மறுத்தாய்.
வீணையில் வயலினிசை
வேண்டும் என்றே இன்னும் அழுகை

ஓடிப்பிடித்த கதைகளும்
உன் ஒளிந்து விளையாடிய நினைவுகளும் கேட்டு
உச்சிமுகர்ந்தளித்த முத்தம் உணர்ந்தறியாய்.
வீணையில் குட்டிக்கண்ணனின்
குழலினிமை இல்லையென்றொரு குதிப்பு

மீசைவைத்த ஆசைக்கதைகளும்
மீண்டுவந்த காதல்பாதைகளும்
தோழியைப்போல் கேட்டபோதென்
தோளில்சாய்ந்த சுகமறியாய்
வீணையில் நாதஸ்வரத்தின்
நாதமில்லையென்றொரு நகைப்பு

காதல்கிறக்கத்தில் நீயும்
மோனத்திருந்த நேரத்தில்
உள்ளமும் உடலும்
அதன் நீட்சியாய்
உடையும் கூட சற்றேநெகிழ்ந்ததை
உன்னோடு நானும்கூட
உணராதுறைந்து நிற்கையில்
தவறிய தாளத்திற்கு வீணையொரு
மேளமில்லாததே காரணமென்று
காலால் எட்டியோர் உதைப்பு

எப்பொழுதாவது வீணையை
வீணைக்காய் நெருங்கியிருக்கிறாயா?

நாண்மீட்டத் தெரியாதவனின் கைகளில்
நாராசமாய் ஒலிப்பதைவிட
நஷ்டமில்லை வீணைக்கு
நலங்கெட்டுப்
புழுதிப்புனலில் புதைந்திருப்பது

தேடல் எனக்கான நிஜமாய்
அடக்க மாட்டா ஆர்வத்துடனும்
கடக்க மாட்டாக் காதலுடனும்
வரும்பொழுதினில்
தரையமர்ந்து
மடியேந்தி
நெஞ்சின் நெருக்கத்தில் அழுத்தி
இருகைகளால் இசைக்க வேண்டியதில்லை என்னை
நுனிவிரல் தீண்டினாலும் போதும்
நூறு நூறு ஸ்வரப் பிரிகைகளுள்
மூழ்கடிப்பேன் உன்னை
முழுதாய் சுவர்க்கம் சேர்ப்பேன்

அதுவரை
கிடந்துவிட்டுப் போகட்டும் வீணை
கலைமகளின் கைகளிலும்
கவனிப்பாரற்ற மூலையிலும்
மட்டும்.

மரத்தடி குளிர்காலப் போட்டி – 2004 ற்காக எழுதியது.

பி.ச. குப்புசாமி அவர்களின் பொய் பொய் பொய் கவிதை இதை எழுத முக்கியத்  தூண்டுதல் என்பதைச் சொல்லியே ஆகவேண்டும். (பி.ச.குப்புசாமி அவர்களின் மகன்தான் பி.கே.சிவகுமார் என்பதையும் சொல்லவேண்டுமா?)

 

ன்னமும்
முகம் பார்க்கையிலெல்லாம்
கண்ணாடி–
உன் காதல்ரசம் பிரதிபலிக்கும்
என் அழகிற்கான அங்கீகாரம் என்ற
அனிச்சையான என் தலையசைத்தலும்

என் விருப்பத் தேர்வின்
வரிசையிலெல்லாம்
என்றோ எவரெவரிடமோ
கேட்டறிந்துகொண்ட
உன் விருப்பங்களையும்

என் எண்ணங்களுக்காய்
எழுப்பப்படும் கேள்விகளிலெல்லாம்
என்னவாகவிருக்குமென்ற
உன் எண்ணங்களையும்

எட்டிப்பார்க்கும் தொட்டிலிலெல்லாம்
நம் ஆன்மத்துடிப்பிற்கான
அன்பின் முகவரியையும்

இப்படி
இருந்துகொண்டேயிருக்கின்றன
எதிர்ப்படுமெல்லாமிலும்
உனக்கான யோசித்தல்களும்
எல்லாம் வல்லவனிடம்
உன் நல்வாழ்விற்கான
என் யாசித்தல்களும்.

எட்டிய வெற்றியிலெல்லாம்
எதையும் பெரிதாய்ப் பெற்றுவிடவில்லையென்றும்
எழுந்திருக்க முடியா சோகங்களிலெல்லாம்
எதையும் பெரிதாய் இழந்துவிடவில்லையென்றும்
ஏற்ற இறக்கமில்லாச் சமவெளியிலேயே
நடத்திச் செல்கிறது
உன் இழப்பு…

வண்ண விளக்குகளால்
வாழ்க்கை ஒளிரஆரம்பித்தும்
என்றோ ஏற்றிய அகல்விளக்கின்
எண்ணெய் தீர்ந்திருக்குமோவெனெ
பதறியோடி வருகையில்

முன் வந்து, திரிதூண்டி, அங்கே
தீபம் காக்கக் கையணைத்திருக்கும்
உன் தீவிரவாதத்தில்
என் மொழியழிந்து போகிறது.

அரையிருட்டில் படபடக்கும்
ஐந்தாம் வேதத்தின் ஆகமப் பக்கங்களைப்
பார்த்ததிலேயே படித்ததாய்
பரவசப்பட்டுத் திரும்புகிறோம்
அவரவர் ஆசாரங்களுக்குள்.

காதலித்துக் கைப்பிடித்த
கதைகளைச் சொல்லி
காதலென்னும் கதகதப்பை
கடந்தகாலத்திற்குள் கழற்றி எறியாமல்

நீயை விடவும்
உன் நினைவு போர்த்தும்
உச்சிமுதல் உள்ளங்கால் வரை
விரிந்து விரவும் மோகஉடையும்

உன் முத்தஎச்சில் தொட்டழியா
என் வெட்கப் பூச்சும்

சூடாததால் வாடாத
கைமலர்க் கண்ணியும்

தொடாததால் கெடாத
மனக்கன்னிமையும்

இருப்பை நம்பியும்
இறுதிவரை தேடிக்கொண்டே இருக்கும்
ஆத்திகனின் தேடலும்

இல்லையென்று சொல்லிக்கொண்டே
இருப்பிற்கானதாயிருக்கும்
நாத்திகனின் நடுக்கமும்

பெண்மையும் அதன் மென்மையும்
அது தாங்குமிந்த உண்மையும்

உள்ளவரையிலும் உள்ளில்
இரகசியமாய் உறங்கியிருக்குமென்றால்
இறக்கும் இறுதி நொடியிலும்
புதிதாய் விழித்திருக்குமென்றால்

கூறாமல் போனேனென்று
கோபிக்கும் உனக்கும்,
அதனால் (கை)கூடாமற்போன நம் காதலுக்கும்
கோடி நமஸ்காரம்!