இருபது வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூர், கும்பகோணம் போகும்போதெல்லாம் என் தந்தை வாங்கிவருவார். இப்பொழுது எல்லா இடங்களிலும் பிரபலம். முக்கியமாக திருமணம் மாதிரி விசேஷங்களில் மெனுவில் முக்கிய இடம் பெற்றுவிட்டது. 

 

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 1 கப்
பால் – 2 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 1 கப்
கேசரி பவுடர் (விரும்பினால்)
ஏலக்காய்
பச்சைக் கற்பூரம்
முந்திரி, பாதாம் வகைகள்

செய்முறை:

  • பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக்கொள்ளவும்.
  • பால் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேகவிடவும்.
  • குக்கர் திறக்கவந்ததும் சூட்டுடனே வெளியே எடுத்து,  நன்கு மசித்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் சர்க்கரை, மசித்த பயத்தம்பருப்பு கலந்து கிளறத் தொடங்கவும்.
  • முதலில் சர்க்கரையால் நெகிழ்ந்து, பின் கலவை இறுக ஆரம்பிக்கும்.
  • சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்து விடாமல் கிளறவும்.
  • நன்கு சேர்ந்து ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.
  • இறக்குவதற்கு சற்றுமுன் கலர் (நான் சேர்க்கவில்லை.), ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், உடைத்த அல்லது நொறுக்கிய கொட்டைப் பருப்புகள் சேர்க்கவேண்டும்.

* பல தளங்களில் கோதுமை மாவு ஒரு பங்கு சேர்ப்பதாக இருக்கிறது. இது எனக்குச் செய்தி. ஒருவேளை இப்பொழுது திருமணம் மாதிரி பெரிய விசேஷங்களிலும் செய்வதால் அளவிற்காக கோதுமை மாவு சேர்க்கிறார்களா என்று தெரியவில்லை. எதற்கும் சேர்க்காமல் ஒருமுறை செய்துபார்த்து அதன் ஒரிஜினல் சுவையை அனுபவித்துவிட்டு விரும்பினால் மாவு சேர்த்தும் செய்யலாம் என்பது என் அக்கறை கலந்த ஆலோசனை.

* எனக்கு இந்த முறையே வசதியாக இருப்பதாலும் பிடித்திருப்பதாலும் ஒவ்வொரு தீபாவளிக்கு முன்தினமும் (லக்ஷ்மி பூஜைக்கு பயத்தம்பருப்பு சேர்த்து செய்யநினைத்து) இருக்கிற பூஜை, கொண்டாட்ட நெருக்கடியில் விரைவாகச் செய்யமுடிவதாலும் இப்படியே செய்துவருகிறேன்.

* அறுசுவை நடராஜன் குறிப்பு ‘சம்பா‘ கோதுமை மாவு சேர்த்தது; பாலுக்கு பதில் கோவா. அடுத்து வருகிறது.

தேவையான பொருள்கள்:

முந்திரிப் பருப்பு – 3/4 கப்
பாதாம் பருப்பு – 3/4 கப்
கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன்
பால் – 3/4 லிட்டர்
சர்க்கரை – 1 1/2 கப்
நெய் – 1 கப்
ஏலக்காய் – 5

munthiri badam cake

செய்முறை:

  • பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து தோல்நீக்கி, காயவைத்துக் கொள்ளவும்
  • முந்திரி, பாதாம் பருப்பை மிக்ஸியில் மென்மையாகப் பொடித்துக்கொள்ளவும்.
  • பாலை அடுப்பில் வைத்து சேர்ந்தாற்போல் திரிதிரியாய் வரும் பதத்திற்குக் காய்ச்சிக்கொள்ளவும். (முற்றிலும் இறுகவேண்டாம்.)
  • அதே நேரத்தில் இன்னொரு அடுப்பில் வாணலியில் சர்க்கரையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, (தேவைப்பட்டால் சர்க்கரை கரைந்ததும் சிறிது பால்சேர்த்து அழுக்கு நீக்கி) ஒற்றைக் கம்பிப் பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
  • பாகு வந்தவுடன் பருப்புப் பொடிகள், கடலைமாவை சிறிது சிறிதாகத் தூவிக் கிளறிக்கொண்டே இருக்கவும்.
  • எல்லாப் பொடியும் கலந்து, கலவை சேர்ந்தாற்போல் வரும்போது, பால்கோவாவையும் கலந்து கிளறவும்.
  • ஏலப்பொடி தூவி, நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்த்து, தொடர்ந்து கிளறவும்.
  • நெய் பிரிந்து, கலவை ஒட்டாமல் சேர்ந்துவரும்போது நெய்தடவிய தட்டில் கொட்டி, லேசான சூடு இருக்கும்போதே வில்லைகள் போட்டு, ஆறியதும் எடுத்துவைக்கவும்.

ஏற்கனவே சொல்லியிருக்கும்  பாகு செலுத்திச் செய்யும் அப்பம் தான் கார்த்திகைக்கும் செய்வார்கள். ஒரு மாறுதலுக்காக இதையும் நான் அடிக்கடி செய்வேன்.

paal appam 1

தேவையான பொருள்கள்:

ரவை – 1 கப்
மைதா – 1 கப்
சர்க்கரை – 1 கப்
பால் – 1 கப்
தேங்காய் – 2 பத்தை
ஏலப்பொடி
எண்ணெய்

செய்முறை:

  • ரவை, மைதா, சர்க்கரை, பால், ஏலப்பொடி எல்லாவற்றையும் சொல்லியிருக்கும் அளவு மட்டும் கலந்து, கையால் கட்டியில்லாமல் கரைத்து, (சர்க்கரையைக் கரைக்க வேண்டாம், அதுவே கரைந்துவிடும்.) அப்படியே 4 மணி நேரம் வைக்கவும்.
  • இரண்டு பத்தை தேங்காயை மெலிதாக, பொடிப் பொடியாகக் கீறிக் கொள்ளவும்.
  • நான்கு மணி நேரம் கழித்து தேங்காயையும் கலவையில் கலந்து, தேவைப்பட்டால் இன்னும் சிறிது பால் கலந்து கெட்டியான அப்ப மாவுப் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, ஒரு கரண்டியால் சிறிது சிறிதாக மாவை எடுத்துவிட்டு, நிதானமான குறைந்த தீயில் இருபுறமும் பொன்னிறமாகச் சிவந்ததும் எடுக்கவும்.

paal appam 2

* சனிக்கிழமை போன்ற நாள்களில் ஒரு டீஸ்பூன் வறுத்த எள்ளும் சேர்த்துக் கொள்ளலாம்.

* அப்பத்திற்கு கொஞ்சம் அதிக எண்ணெயும் அதிகப் பொறுமையும் குறைந்த தீயும் தேவை. எண்ணெயை அதிகம் குடிக்காது. ஆனால் அதிக எண்ணெய் இருந்தால் நன்றாக அசைந்து மூழ்கி, வேகும்.

* புதிதாகச் செய்பவர்கள், பாகு, பதம் என்றெல்லாம் குழம்புபவர்கள், ஆண்கள் கூட இதைச் சுலபமாகச் செய்யலாம். மேலே மொறுமொறுப்பாகவும், உள்ளே மென்மையாகவும் சுவையாக இருக்கும். திகட்டாது.

* அப்பக்குழியிலும் செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

சன்னமான அவல் – 1 கப்
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 1/2 கப்
ஏலப்பொடி
குங்குமப் பூ
பச்சைக் கற்பூரம்

செய்முறை:

  • பாலை சுண்டக் காய்ச்சிக் கொள்ளவும்.
  • சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து, அவலையும் நன்கு சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ கலந்து சாப்பிடலாம்.

மார்கழி 28ஆம் நாள் செய்யும் சாதம். (“கறவைகள் பின்சென்று…..”)

தேவையான பொருள்கள்:

அரிசி –  1 கப்
தண்ணீர் – 2 கப்
பால் – 5 கப்
தயிர் –  2 டேபிள்ஸ்பூன்
வெண்ணை –  2 டேபிள்ஸ்பூன். (விருப்பமானால்)
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை –  சிறிது
தாளிக்க –  எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை…

thayir saadham (maarkazhi 28)

செய்முறை:

  • அரிசியைக் களைந்து நீரை வடித்துக் கொள்ளவும்.
  • 2 கப் பால், 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் குழைய வேக விடவும்.
  • சூட்டோடு திறந்து, உப்பு, தயிர் சேர்த்து கரண்டியால் நன்கு மசித்து, சூடான பால் சேர்த்து தளரக் கலக்கவும்.
  • 5 நிமிடங்கள் க்ழித்துத் திறந்தால் சாதம் இறுகியிருக்கும். இன்னும் சிறிது சூடான பால் சேர்த்து மூடி வைக்கவும்
  • மீண்டும் 5 நிமிடங்களில் நிறைய பால், வெண்ணை சேர்த்து மிக மிகத் தளர்வான பதத்தில்* கலக்கவும். அப்போதுதான் சாப்பிடும் நேரத்தில் சரியான பதத்தில் இருக்கும்.
  • எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு,  பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லித் தழை  சேர்த்து கலந்து வைக்கவும்.
  • இந்தத் தயாரிப்பை இரண்டு மணிநேரங்களில் சாப்பிடச் சரியாக இருக்கும். அதற்குமுன் சாப்பிட வேண்டிவந்தால் இன்னும் சிறிது தயிர்சேர்த்து உபயோகிக்கலாம்.

* கலக்கும்போது சரியான பதத்தில் கலந்துவிட்டு சாப்பிடும்போது இறுகியிருப்பதற்காக மீண்டும் தயிரோ, பாலோ சேர்த்துத் தளர்த்தினால் அது சுவையாக இருக்காது.

* தேவைப்பட்டால் கேரட், வெள்ளரியைத் துருவி பரிமாறும் நேரத்தில் சேர்க்கலாம். அல்லது கொட்டை இல்லாத பச்சை திராட்சையையும் சேர்க்கலாம்.

* சாப்பிட இன்னும் 4 மணி நேரங்களுக்கு மேல் ஆகுமென்றால் உபயோகிக்கும் பால் மிதமான சூட்டிலும், மிக அதிக நேரம் ஆகுமென்றால் (பயணங்களுக்கு எடுத்துப் போவது) முற்றிலும் ஆறிய பாலையே உபயோகிக்க வேண்டும். சாதமும் சற்று சூடு ஆறியபின் கலக்க ஆரம்பிக்கலாம். இல்லாவிட்டால் சீக்கிரம் புளித்துவிடும்.

* சாதத்தில் தேங்காயை சிறு சிறு துண்டுகளாக்கிச் சேர்ப்பது வெகுநேரத்திற்கு புளிக்காமல் இருக்க உதவும்.

* தாளிக்கும் எண்ணை மிகமிக லேசானதாக, ஏற்கனவே உபயோகிக்காததாக இருக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் பாலும் வெண்ணையுமே சுவையைக் கூட்டும் என்பதால் கடுகு நனையும் அளவு எண்ணையில் தாளித்தால் போதுமானது. அதிகமான அல்லது கலங்கலான எண்ணை மொத்த தயிர்சாதத்தின் நிறத்தை மட்டுப்படுத்திவிடும் அல்லது கெடுத்துவிடும்.

தயிர்சாதம் குறித்த மேலும் இரு குறிப்புகள் 🙂
http://www.maraththadi.com/article.asp?id=429
http://www.maraththadi.com/article.asp?id=2029
 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சொல்லி மாளுமா என்று தெரியவில்லை. வக்கணையாக செய்யப்பட்ட தயிர்சாதத்தை ஹார்லிக்ஸ் மாதிரி அப்படியே சாப்பிடலாம் என்றாலும் முதல் கட்டமாக சிலவற்றைச் சொல்லலாம். ஆவக்காய், எலுமிச்சை இதர ஊறுகாய் வகைகள், சாம்பார், குழம்பு, காய், கூட்டு, துவையல்… எல்லாவற்றையும் முந்திக் கொண்டு மாவடு. இன்னும் முக்கியமாக வேறு எதனோடும் சேராமல் அல்லது தயிர்சாதத்திற்கென்றே பிரத்யேகமாக ஜீவித்திருப்பது மோர்மிளகாய். எனக்குத் தெரிந்து வீட்டைத் தவிர ஹோட்டல்களில் சரவண பவனுக்குத்தான் இதில் முதலிடம். குறிப்புகள் இனி வரும்.

வாழைப்பூ கேள்விப்பட்டிருக்கலாம். அதற்கும் தயிர்சாதத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கும்முன் கொஞ்சம் சொந்தக் கதை. வாழைப்பூ வாங்கி உரிக்கும் நாளிலெல்லாம் எங்களுக்கு பாட்டி சாதம் பிசைந்து கையில் போடுவார். கைக்கு அடியில் வாழைப்பூவின் மடலில் ஊறுகாயை வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்துக்கொண்டால்(மாவடுவாக இருந்தால் ஒரு கடி கடித்து வாயிலேயே வைத்துக் கொள்ளலாம்.), அதில் பாட்டி சாதத்தைப் போட, அது பாட்டுக்கு அளவில்லாமல் உள்ளே இறங்கும்.

மசித்த கீரையில் வத்தக்குழம்பு கலந்த கலவை தயிர் சாதத்தோடு சுவையில் பல எல்லைகளைத் தொடும். பாட்டி வலதுகையால் சாதத்தைக் கையில் போட, நாங்கள் கட்டைவிரலால் அதில் நடுவில் குழித்துக் கொண்டால், இடதுகையால் ஒரு ஸ்பூனில் கீரைக் கலவையை பாட்டி அதில் விட, நாங்கள் சாப்பிட… சொல்ல மறந்த முக்கிய விஷயம், முதல்நாள் கைகளில் மருதாணி இட்டு அழித்திருந்தால் (கடைகளில் வாங்கிய பொடியாக இல்லாமல், பசுமையான இலையை அரைத்து இட்டிருக்க வேண்டும்) அதற்காக இந்திர லோகத்தையே எழுதிவைக்கலாம். வாயருகே சாதத்தைக் கொண்டுவரும் போதெல்லாம், அந்த வாழைப்பூ மடல், தயிர்சாதம், கீரை, வத்தக்குழம்புடன் மருதாணியின் கலவையான வாசனைக்கும் சுவைக்கும் பாட்டியின் வாஞ்சையும் சேர்ந்து, என்னைக் கேட்டால், உலகின் மிகச் சிறந்த மேட்ச் ஃபிக்சிங் இதுதான்.

“மூட நெய்பெய்து முழங்கை வழிவார…”

“அட, அப்படியே அக்கார அடிசிலில் மூட மூட நெய் பெய்தாலும், கையிலிருந்து வாய்க்குப் போவதற்குள் எப்படி வேகமாக முழங்கை வரை நெய் வழியும் என்பதற்கு ஒரு அழகான விளக்கம் படித்தேன். சீக்கிரம் அக்கார அடிசிலை உண்டுவிட்டால், கண்ணன் கிளம்பிவிடுவான் என்று நோன்புப் பெண்கள், சாப்பிடுவது போல் பாசாங்குக்காகக் கையிலெடுத்துவிட்டு, ஆனால் சாப்பிடாமல் அவனோடு பேசியே பொழுதை இழுத்தடித்துக் கழிப்பார்களாம். அதற்குள் கையிலிருக்கும் அக்கார அடிசிலிருந்து நெய் பிரிந்து முழங்கை வரை வந்து விடுமாம்.

ம்ம்ம்.. அப்ப ஒரு கோக் டின் வாங்கிகிட்டு கார்னர் டேபிளை occupy பண்ணிகிட்டு ஒருமணிநேரம் அல்லது சர்வரே விரட்டற வரைக்கும் டாக் பண்ணிகிட்டே இருக்கறதும், எப்பவோ ஒரு தடவை நினைவு வந்தமாதிரி வாயை அதுல வெச்சு இரண்டேஇரண்டு மில்லி உறிஞ்சறதும் கேட்டா Sweet Nothingsனு சொல்லிக்கறதும், அப்படி ஒன்னும் சமீபத்தைய trend இல்ல போல!! :))

யாராவது ஜெயிச்சா, தங்கப்பதக்கம் வாங்கினா, நெகிழ்ச்சில அழுவாங்க. அட, உலக அழகியாவே அறிவிச்சா கூட வாயை ஓ’ மாதிரி வெச்சுகிட்டு, சொல்லிவெச்ச மாதிரி உலகத்துல இருக்கற அவ்ளோ அழகிகளும் அழறாங்க. 

ஆண்டாள் ரெங்கமன்னார்

ஆனாலும் நம்ப பார்ட்டிக்கு ஜெயிச்சப்பறம் இந்தத் தெனாவட்டு ஆகுமா? முப்பது நாளும் பணிவு பக்தின்னு இருந்த பொண்ணான்னு இருக்கு! ஆண்டாள் ஆண்டாள் தான்!! 

-0-

நான் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றிருந்த போது, “பெரும்புதூர் மாமுனிக்கு பின்ஆனாள் வாழியே!” என்று வாழி திருநாமம் ஆண்டாள் பற்றி குறிப்பிடுவது ஏன் என்று சந்தேகம் கேட்டபோது அங்கிருந்தவர்கள் இராமானுஜருக்கு ஆண்டாள் எப்படித் தங்கையானாள் என்று ஒரு கதை சொன்னார்கள்.

ஆண்டாள் தன்பொருட்டு அழகருக்கு செய்துவைக்கிறேன் என்று பிரார்த்தித்துக்கொண்ட 100 தடா ‘அக்கார அடிசிலை’…

நாறு நறும்பொழில்மா
     லிருஞ்சோலை நம்பிக்கு, நான்
நூறு தடாவில்வெண்ணெய்
     வாய்நேர்ந்து பராவிவைத்தேன்,
நூறு தடாநிறைந்த
     அக்கார வடிசில்சொன்னேன்,
ஏறு திருவுடையான்
     இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ.
(– நாச்சியார் திருமொழி)

 

…. கல்யாண குஷியில்:) மறந்திருக்கலாமோவென இராமானுஜர் சிரமப்பட்டு நிறைவேற்றி வைக்கிறார். அதனால், பின்னர் இராமானுஜர் ஸ்ரீவில்லிபுத்தூர் வரும்போது ஆண்டாள் அவரை “அண்ணா!” என்று நெகிழ்ந்து அழைத்துக்கொண்டே எட்டடி முன்னால் ஓடிவந்துவிட்டாளாம். (இப்போதும் மற்ற கோவில்களைப் போல் இல்லாமல் ஸ்ரீவில்லிபுத்தூரில் மூலவருக்கும் உத்ஸவருக்குமான இடைவெளி மிக அதிகமாக, உத்ஸவர் மற்ற கோவில் உத்ஸவர்களைவிட இன்னும் எட்டடி அதிக முன்னாலேயே இருப்பதால் பின்னால் இருக்கும் மூலவரை நன்றாக தரிசிப்பது சிரமமாகவே இருக்கும்.) இந்த உற்சவம் இப்பொழுதும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருடம் ஒருமுறை நடந்துவருகிறது என்று கேள்விப்பட்டேன்

இந்த நிகழ்வை ஸ்ரீரங்கம் கோயிலொழுகும் இவ்வாறு குறிப்பிட்டு உறுதிசெய்கிறது…
 

…. உடையவரும் பெரியபெருமாளுடைய அநுமதியுடனே திருவரங்கத்திலிருந்து புறப்பட்டு சுந்தரத் தோளுடையான் எழுந்தருளியிருக்கும் திருமாலிருஞ்சோலைக்குச் சென்று (இது அழகர் கோயில்) மங்களாசாஸனம் செய்தருளினார். அங்கு ஆண்டாள் விபவாவதாரத்திலே பாரித்தபடி, அக்குடியில் பிறந்த தாம் ஆண்டாளுடைய எண்ணத்தை நிறைவேற்றும்விதமாக 100 தடா வெண்ணெய், 100 தடா அக்காரஅடிசில் ஸமர்ப்பித்தருளினார்.
……………………………
…………………………….
அதன்பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றடைந்து…

…ஆண்டாளும் தாம் வாய்நேர்ந்த படியே அழகருக்கு 100 தடா அக்காரஅடிசிலைத் தம்பொருட்டு ஸமர்பித்த இராமானுசரை
‘எம் கோயில் அண்ணரே’ வாரும் என்று அழைத்தருளினாள்.

ஆண்டாள் குறித்து படித்த இன்னொரு சுவாரசியமான சுட்டி

இந்தப் பகுதி மரத்தடி ஹரன்பிரசன்னாவிற்கு சமர்ப்பணம். 🙂

-o-

இனி அக்கார அடிசில்… இது மார்கழி மாதம் 27ஆம் நாள் செய்யும் இனிப்பு வகை…

தேவையான பொருள்கள்:

அரிசி – 1 கப்
பயத்தம் பருப்பு – 1/4 கப்
வெல்லம் – 2  1/2 கப்
ஏலப்பொடி – 2 டீஸ்பூன்
பச்சைக் கற்பூரம் – சிறிது
மற்றும்
பால் பால் பால் பால்…
நெய் நெய் நெய் நெய்…

செய்முறை:

  • அரிசி மற்றும் பயத்தம் பருப்பைக் கழுவி, நன்கு நீரை வடித்துவிட்டு, வாணலியில் 2 டீஸ்பூன் நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
  • பின் 5 கப் பால் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேக விட வேண்டும்.
  • வாணலியில் வெல்லத்துடன் சிறிது நீர் சேர்த்து, கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.
  • வாணலியில் குழைய வேகவைத்த அரிசிக் கலவை, வடிகட்டிய வெல்லக் கரைசலுடன் மேலும் 2 கப் பால் சேர்த்து சிறுதீயில் கிளற ஆரம்பிக்க வேண்டும்.
  • இறுக இறுக மேலும் மேலும் பால் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
  • சிறிது நேரம் சென்றபின் நெய்யைச் சேர்க்க ஆரம்பிக்க வேண்டும்.
  • நெய், நெய், நெய் மேலும் நெய்…போதும் என்று [நாம்:-)] முடிவு செய்யும் போது ஏலப்பொடி, பச்சைக்கற்பூரம் சேர்த்துக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கலாம்.

akkaara adisil (maargazhi 27)

* “நெய்யுண்ணோம்.. பாலுண்ணோம்” என்று மார்கழி 2ம் நாள் ஆரம்பித்த நோன்பை, “…அதன்பின்னே பால்சோறு, மூட நெய் பெய்து முழங்கை வழிவார..” என்று கூறி 25 நாள்களாகத் தவறவிட்ட நெய் பாலையெல்லாம் மார்கழி 27ம் நாள் கணக்கில் ஆண்டாள் எழுதிவிட்டாள். பாலிலேயே அரிசி சமைக்கப்பட வேண்டும். அதுவே மூடப்படும் அளவு அதன்மேல் நெய் ஊற்றப்பட வேண்டும். சமைத்தபின் அக்கார அடிசிலைக் கையில் எடுத்தால் நெய் முழங்கை வழிவார ஒழுக வேண்டும். இது ஆண்டாள் இந்தப் பாட்டில் தந்திருக்கும் ரெசிபி.

அப்படியெல்லாம் பால், நெய்யைக் கொட்ட நாம் ஆயர்பாடியிலோ, ஸ்ரீவில்லிபுத்தூரிலோ இல்லை என்பது முதல் காரணமென்றாலும், நமது தேகம் தாங்காது என்பது அதைவிட முக்கியமான காரணம். உங்கள் வீட்டுக்காரர்களிட(மு)ம் நல்லநாளில் தயவுசெய்து எனக்குத் திட்டு வாங்கித் தராதீர்கள். அவ்வளவு பால் நெய் தேவையில்லை. அவரவர் விருப்பம் போல் சேர்த்துக் கொள்ளவும். அதனால்தான் தேவையான பொருள்களில் பால் மற்றும் நெய்யின் அளவைக் குறிப்பிடவில்லை.

* குக்கரில் வைக்கும் போது 5 கப் பாலிற்குப் பதிலாக 3 கப் பால் மற்றும் 2 கப் நீராகக் கலந்து வைக்கலாம். ஆனால் பின்னால் கிளறும் போது பால்தான் சேர்க்க வேண்டும்.

* வாணலியில் கிளற ஆரம்பிக்கும் முன்பே வெல்லக் கரைசல், வேக வைத்த சாதக்கலவை, பால் ஆகியவற்றைக் கட்டியில்லாமல் கரைத்துக் கொண்டுவிடுதல் நலம். இல்லாவிட்டால் பின்னால் சமாளிப்பது சிரமம்.

கிளறும்போது கடைபிடிக்கவேண்டிய அனுஷ்டானங்கள்:

வாயால் பாடும் கனகதாரா, ‘உதயா’ உளறல்களைத் தற்காலிகமாக நிறுத்திவிடுவது,

காதால் கேட்கும் தொலைபேசி அழைப்பெல்லாம் wrong call (அல்லது எனக்கில்லை) என்று திடமாக நம்புதல்,

யாதொரு சம்பந்தமுமில்லாமல் திடீரென இடையில் பெண் கேட்கும் ‘How come you loved appa? என்ற விடையே இல்லாத கேள்விகளுக்கு விடையை மனதால் சிந்திக்க முற்படாதிருத்தல்,

“அக்காரவடிசல்(வழக்குமொழியில்) எல்லாம் எங்கம்மா பண்ணனும், இன்னும் நாக்குலயே இருக்கு!” என்று பக்கவாட்டிலிருந்து நம்மைச் சீண்டப்பார்க்கும் பேச்சுகளுக்கு, “பாசுரம் ஒண்ணும் உருப்படியா நாக்குல நிக்காட்டாலும் இதுவாவது நிக்குதே!…. இவ்ளோ வாயாகாது!!” என்று திருப்பிச் சொல்ல நினைப்பதைச் சற்று நேரத்திற்கு ஒத்திப் போடுவது [அதற்காக சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் இருக்கக் கூடாது. கொஞ்சம் postpone செய்து சாப்பிட ஆரம்பிக்கும்முன் அவசியம் சொல்லிவிட வேண்டும். :)]

ஏன் இவ்வளவு புலனடக்கம் தேவை என்று புரியாதவர்களுக்கு இனி பதில்…

* பால் சேர்த்திருப்பதால் மிக விரைவில் வேகவேகமாக அடிப்பிடிக்க ஆரம்பிக்கும். அதற்கு வாய்ப்பே கொடுக்காமல் மிகச் சிறிய தீயில் விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின்னால் நிச்சயம் கையொடு தோள் வலிக்கும்.

* கொதிக்கும் வேகத்தில் ‘க்ளக் க்ளக்’ என்று வெளியில் தெறிக்கும்; நம் கையிலும். சமாளிக்க வேண்டியதுதான். வெளிப்புறத்தைத் துடைக்க வேண்டிய வேலை தனி.

* அதிக நேரம் கிளற முடியாது என்று நினைப்பவர்கள் சர்க்கரை சேர்க்காத condensed milk மற்றும் சிறிதளவு பால் மட்டும் கலந்து விரைவில் முடித்து விடலாம். ஆனால் சர்க்கரை கலக்காத condensed milk என்பது மிக முக்கியம். சுவையிலும் கொஞ்சம் compromise செய்த கணக்குதான் இந்த முறை.

இறக்கும் முன்:

* எக்காரணம் கொண்டும் நமது பவிஷைக் காட்ட முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் போன்ற தூவல்களைச் சேர்த்துக் கேவலப்படுத்தக் கூடாது. இது சர்க்கரைப் பொங்கல் இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். சாப்பிடும் போது வாயில் இது போன்ற எந்த உப தொந்தரவுகளும் ஏற்பட விடக்கூடாது.

* பச்சைக்கற்பூரம் மிகமிகச் சிறிதளவே சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கசந்து மொத்தமும் பாழாகிவிடும்.

* வெல்லம் சிறிது கருப்பாக இருந்தால், சிட்டிகை கேசரிப்பவுடர் சேர்த்து பொய் make-up செய்யலாம்.

* சர்க்கரைப் பொங்கல் போல் இறுக்கமாகவும் இல்லாமல், பாயசம் போல் நீர்த்தும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட consistencyல் இருக்க வேண்டும். எடுக்கவோ குடிக்கவோ என்று கேட்பதற்கு இடமளிக்க முடியாமல் கையால் எடுக்கவும் முடியாமல், பாயசம் போல குடிக்கவும் முடியாமல் ஸ்பூனால் மட்டுமே எடுத்து சாப்பிட வேண்டிய திடத்தில் அவசியம் இருக்க வேண்டும்.

* எவ்வளவுக்கெவ்வளவு நெய் சேர்க்கிறோமோ அவ்வளவு சுவையாக இருக்கும் என்பதில் இரண்டாம் கருத்தே இல்லை. ஆனால் அப்படிச் சேர்க்கவில்லையென்றாலும், சாப்பிடும் முன், ஒரு கப்பில் போட்டு மைக்ரோவேவ் அவனில் சில நொடிகள் வைக்க, ஜிகுஜிகுவென்று வாசனையுடன், விட்டிருக்கும் சொல்ப நெய்யும் உருகி மேலே வர…. பார்ப்பதற்கு மூட நெய்பெய்தது போன்ற தோற்றத்தையும் சுவையையும் நிச்சயம் தரும். 

* ‘ஏன் கிளற அவ்வளவு கஷ்டப்பட வேண்டும், Non-stick ல் சுலபமாகச் செய்யலாமே?’ என்று கேட்கலாம். ஆமாம் மிகமிகச் சுலபமாகச் செய்யலாம். ஆனால்.. ஸ்ரீரங்கம் கோவிலில் உணவு சமைக்க எல்லாவற்றிற்கும் தங்கம், வெள்ளி அல்லது புதுப்புது மண் பாத்திரங்கள் மட்டுமே உபயோகிப்பார்கள். அதனால் கொஞ்சம் எல்லாவற்றிலும் லேசாக(மிக மிக லேசாக) ‘அடிப்பிடித்த’ வாசனை வரும். அது வந்தால்தான் எனக்கெல்லாம் திருப்தியாக இருக்கும். ஒருமுறை நான்-ஸ்டிக்கில் செய்து பார்த்து அளவுகளும் சுவையும் சரியாக இருந்தும் என்னால் திருப்தியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே non-stick ல் சமைப்பது சுகம். ‘மற்றவை’ ஸ்ரீரங்க சுகம்!!

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இந்த உணவுக்கு மேட்ச் ஃபிக்ஸ் செய்யத் தேவை எதுவும் இல்லை. (உள்ளிருக்கும் பட்சத்தில் பக்தி தானே சேர்ந்துகொள்ளும்.) ஆனால் உண்பவர்களுக்கு துணைக்கு ஒருவரல்ல, நிறையப் பேர் தேவை. தான் மட்டும் தனித்தோ, மிச்சமிருப்பதை ஃபிர்ட்ஜில் வைத்தோ உண்ணாது, எல்லோருடனும் பகிர்ந்து உண்ண வேண்டும்.

“கூடியிருந்து குளிர்ந்து.. “

நன்றி: மரத்தடி.காம்