கார மிக்ஸர் – 1

 
தேவையான பொருள்கள்:

அவல் – 3 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
பயத்தம் பருப்பு –  1 கப்
நிலக்கடலை – 1 கப்
பொட்டுக் கடலை – 1 கப்
முந்திரிப் பருப்பு – 1 கப்
கறிவேப்பிலை – 4 ஈர்க்கு
உப்பு – தேவையான அளவு
காரப் பொடி – தேவையான அளவு
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க
ஓமப்பொடி (அல்லது காராபூந்தி) – 1 1/2 கப்

 

செய்முறை:

  • கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து ஒரு துணியில் உலர்த்திக் காயவைக்கவும். (முழுவதும் காய்ந்திருக்கவேண்டியதில்லை.)
  • முந்திரிப்பருப்பை நாலைந்தாக உடைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும் துளைகளுள்ள ஒரு வடிகட்டி (பெரிய டீ வடிகட்டி, புளி வடிகட்டி) எடுத்து, அதில் கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, நிலக்கடலை, பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பை ஒவ்வொன்றாக, தனித்தனியாக போட்டு, பொரித்து, வடித்தட்டில் போட்டு எண்ணெயை வடிக்கவும்..
  • அவலை முதலிலேயே அந்த வடிகட்டியில் (மாவு, உடைந்த அவல் இல்லாமல்) சலித்துவைத்திருக்கவேண்டும்; கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, பொரித்து எடுக்கவும். சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
  • சிறிது கடலைமாவில் உப்பு, பெருங்காயம், மிளகாய்த் தூள் சேர்த்துக் கலந்து காராபூந்தி அல்லது ஓமப்பொடி அச்சில் பிழிந்துகொள்ளலாம். (மிக்ஸரில் கடலைமாவு சேர்த்த பொருள் இல்லாவிட்டால் சுவைகூடி வராது. அதனால் ஏதாவது ஒன்றாவது செய்து சேர்க்கலாம்; அல்லது அதைமட்டும் கடையில் வாங்கிச் சேர்த்துக்கொள்ளலாம்.)
  • எல்லாவற்றையும் ஒரு வாயகன்ற பெரிய பாத்திரத்தில் போட்டுக்கொண்டே வரவும்.
  • கடைசியில் கறிவேப்பிலையையும் பொரித்து, வடிகட்டவும்.
  • பொரித்த கறிவேப்பிலையுடன் தேவையான உப்புப் பொடி, மிளகாய்ப் பொடி, பெருங்காயம் சேர்த்து நன்கு கையால் நொறுக்கி, அந்தக் கலவையை நன்கு கலக்கவும்.

* எண்ணெயில் பொரிக்கும்போது தீ மிகக் குறைவாக இருந்தால் பருப்புகள், அவல் கடுக்’கென்று ஆகிவிடும். தீ அதிகமாக இருந்தால் கருகிவிடும். மிதமான தீயில் அடுப்பு எரியவேண்டும். அவல் போட்டதுமே பொரிந்துவிடவேண்டும்.

* விரும்புபவர்கள் வேறு மசாலாப் பொடிகளும் சேர்க்கலாம். ஆனால் இதுவே அதிகம் படுத்தாத வகை.

அசோகா – 1 

[“அறுசுவை அரசு” நடராஜய்யர் சகோதரர் ஞானாம்பிகா ஜெயராமய்யர்]

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 100 கிராம்
சர்க்கரை இல்லாத கோவா – 100 கிராம்
சர்க்கரை – 400 கிராம்
சம்பா கோதுமை மாவு – 100 கிராம்
நெய் – 100 கிராம்
ஏலக்காய் – 5
முந்திரிப் பருப்பு – 10
கிஸ்மிஸ் – 10 கிராம்

 

செய்முறை:

  • பயத்தம் பருப்பை கடாயில் பொன்வறுவல் வறுத்து தண்ணீரில் ஊறவைக்கவும்.
  • சிறிதுநேரம் ஊறியபின் நன்றாகக் களைந்துவிட்டு, அதை கெட்டியாக வரும் அளவிற்கு தண்ணீர் வைத்து குக்கரில் வேகவைக்கவும்.
  • வேகவைத்த பருப்பில் சர்க்கரையைப் போட்டு, கடாயில் நன்றாக அல்வா மாதிரி கிளறவேண்டும்.
  • அல்வா நல்ல பதம் வந்ததும் இறக்கி, கோவாவைச் சேர்த்துக் கலந்துவைக்கவும்..
  • மற்றொரு கடாயில் நெய்யை வைத்து நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் போட்டு கொஞ்சம் சிவந்தவுடன் சம்பா கோதுமை மாவு சேர்த்து நன்கு வாசனை வரும் அளவிற்கு வறுத்து, அதனுடன் பருப்பு கோவாக் கலவை, ஆரஞ்சு கலர் சேர்த்துக் கிளறவும்.

இருபது வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூர், கும்பகோணம் போகும்போதெல்லாம் என் தந்தை வாங்கிவருவார். இப்பொழுது எல்லா இடங்களிலும் பிரபலம். முக்கியமாக திருமணம் மாதிரி விசேஷங்களில் மெனுவில் முக்கிய இடம் பெற்றுவிட்டது. 

 

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 1 கப்
பால் – 2 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 1 கப்
கேசரி பவுடர் (விரும்பினால்)
ஏலக்காய்
பச்சைக் கற்பூரம்
முந்திரி, பாதாம் வகைகள்

செய்முறை:

  • பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக்கொள்ளவும்.
  • பால் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேகவிடவும்.
  • குக்கர் திறக்கவந்ததும் சூட்டுடனே வெளியே எடுத்து,  நன்கு மசித்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் சர்க்கரை, மசித்த பயத்தம்பருப்பு கலந்து கிளறத் தொடங்கவும்.
  • முதலில் சர்க்கரையால் நெகிழ்ந்து, பின் கலவை இறுக ஆரம்பிக்கும்.
  • சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்து விடாமல் கிளறவும்.
  • நன்கு சேர்ந்து ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.
  • இறக்குவதற்கு சற்றுமுன் கலர் (நான் சேர்க்கவில்லை.), ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், உடைத்த அல்லது நொறுக்கிய கொட்டைப் பருப்புகள் சேர்க்கவேண்டும்.

* பல தளங்களில் கோதுமை மாவு ஒரு பங்கு சேர்ப்பதாக இருக்கிறது. இது எனக்குச் செய்தி. ஒருவேளை இப்பொழுது திருமணம் மாதிரி பெரிய விசேஷங்களிலும் செய்வதால் அளவிற்காக கோதுமை மாவு சேர்க்கிறார்களா என்று தெரியவில்லை. எதற்கும் சேர்க்காமல் ஒருமுறை செய்துபார்த்து அதன் ஒரிஜினல் சுவையை அனுபவித்துவிட்டு விரும்பினால் மாவு சேர்த்தும் செய்யலாம் என்பது என் அக்கறை கலந்த ஆலோசனை.

* எனக்கு இந்த முறையே வசதியாக இருப்பதாலும் பிடித்திருப்பதாலும் ஒவ்வொரு தீபாவளிக்கு முன்தினமும் (லக்ஷ்மி பூஜைக்கு பயத்தம்பருப்பு சேர்த்து செய்யநினைத்து) இருக்கிற பூஜை, கொண்டாட்ட நெருக்கடியில் விரைவாகச் செய்யமுடிவதாலும் இப்படியே செய்துவருகிறேன்.

* அறுசுவை நடராஜன் குறிப்பு ‘சம்பா‘ கோதுமை மாவு சேர்த்தது; பாலுக்கு பதில் கோவா. அடுத்து வருகிறது.

தேவையான பொருள்கள்:

வெந்தயக் கீரை – 2 கப்
வெங்காயம் – 1
பயத்தம் பருப்பு – 3/4 கப் *
தக்காளி – 2 (பெரியது)
பச்சை மிளகாய் – 3
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
உப்பு
மஞ்சள் தூள்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்

தாளிக்க: எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

Methi_daal Missi_roti_(punjab)2

செய்முறை:

  • வெந்தயக் கீரையை தனித் தனி இலையாக உதிர்த்து, தண்ணீரில் அலசி, நீரை வடியவைத்துக் கொள்ளவும்.
  • பயத்தம் பருப்பை முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், இஞ்சியை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் தாளிக்கவும்.
  • அலசிய கீரையைச் சேர்த்து வதக்கினால் ஒரே நிமிடத்தில் சுண்டிவிடும்.
  • நறுக்கிய தக்காளி, அரைத்த விழுது சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.
  • உப்பு, மஞ்சள்தூள், அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி, நிதானமான தீயில் வேக வைக்கவும்.
  • தக்காளி வெந்ததும், வேக வைத்த பயத்தம் பருப்பு, கரம் மசாலா, அரை கப் தண்ணீர் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு, சேர்ந்தாற்போல் வந்ததும் இறக்கவும்.
  • சில துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து சூடாகப் பரிமாறலாம்.

* பயத்தம் பருப்பு அல்லது துவரம் பருப்பு அல்லது இரண்டும் சம அளவில் கலந்தும் உபயோகிக்கலாம்.

* எலுமிச்சைச் சாறுக்குப் பதில் வதக்கியதும் சிறிது புளித்தண்ணீர் சேர்த்தும் கொதிக்கவிடலாம் அல்லது 2 டீஸ்பூன் மாங்காய்த் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சாதம், சப்பாத்தி வகைகள்..

தேவையான பொருள்கள்:

முள்ளங்கி – 1/2 கிலோ
பயத்தம் பருப்பு – 1/4 கப்
காய்ந்த மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள்
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)

தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம்.

mullangi curry

செய்முறை:

  • பயத்தம் பருப்பைக் கழுவி, நீரில் பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  • அந்த நேரத்தில் முள்ளங்கியை (தேவைப்பட்டால்) தோலைச் சீவிக் கொண்டு, கேரட் துருவியில் பெரிய அளவாகத் துருவிக் கொள்ளவும்.
  • துருவிய முள்ளங்கியுடன் நீரை வடித்த பயத்தம் பருப்பு, உப்பு(கவனம்: முள்ளங்கி சுண்டி, அளவில் குறையும்.) சேர்த்துப் பிசிறி பத்து நிமிடங்கள் வைக்கவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு,காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம் தாளிக்கவும்.
  • கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து, அடுப்பை நிதானமான சூட்டில் வைத்து, முள்ளங்கிக் கலவையையும் சேர்த்துக் கிளறி, மூடிவைக்கவும். தண்ணீர் சேர்க்கவேண்டாம்.
  • ஒன்றிரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை திறந்து கிளறிவிட்டு, முள்ளங்கி வெந்து நீர்வற்றியதும் தேங்காய்த் துருவல், நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும். (சுமார் 5, 6 நிமிடங்களிலேயே முடிந்துவிடும்.)

* முள்ளங்கி தவிர, கேரட், கோஸ் போன்ற காய்களிலும் இந்த முறையில் கறி செய்யலாம். ஆனால் இங்கே முக்கியமாக முள்ளங்கியைச் சொல்லியிருப்பதற்குக் காரணம்– சாம்பார், ரொட்டி தவிர முள்ளங்கியை கறி, கூட்டாக செய்வதில் பலருக்கு அதன் மணம் பொருட்டு, ஆட்சேபம் இருக்கிறது. இந்த முறையில் முள்ளங்கியின் மணம் அறவே வராது.

* சின்னச் சின்ன இளமுள்ளங்கியாகத்தான் இருக்கவேண்டுமென்றில்லாமல் எவ்வளவு பெரிய, முற்றல் முள்ளங்கியில் இதைச் செய்தாலும் நன்றாக இருக்கும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

குழம்பு, ரசம் சாதம் என்றெல்லாம் அடுக்குவதற்கு முன், அப்படியே சூடாக கறியை மட்டும் தனியாகச் சாப்பிடலாம். சுவையாக இருக்கும். அதிகம் மசாலா சேர்க்காமல், அதிகம் அடுப்பில் வேகவைக்காமல், முள்ளங்கியின் மண்மணம் வராமல் செய்யக்கூடிய ஆகச் சிறந்த முறை.

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 1 கப்
ரவை – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2, 3
இஞ்சி – சிறு துண்டு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம்

தாளிக்க: எண்ணெய், சீரகம்.

pesarattu 1

செய்முறை:

  • பயத்தம் பருப்பை 3 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
  • இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். தோசை மாவு பதத்திற்கு ஆனால் மிக மிக நைசாக அரைத்து அத்துடன் ரவையையும் கலந்து கொள்ளவும்.
  • ஒரு டீஸ்பூன் எண்ணெயில் சீரகம் தாளித்துக் கொட்டவும்.
  • அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கி, நிதானமான சூட்டில் ஒரு கரண்டி மாவை நடுவில் விட்டு, வழக்கமாக தோசைவார்ப்பது போல் வட்டமாக இழுத்து மிக மெலிதாகப் பரத்தவும்.
  • சுற்றி சிறிதளவு மட்டுமே எண்ணெய் விட்டு ஒரு நிமிடம் வேகவிடவும்.
  • திருப்பிப் போட்டு, தேவை என்றால் மட்டும் மீண்டும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.

* அடுத்தடுத்த தோசை வார்ப்பதற்கு முன் கல்லில் சிறிது நீர் தெளித்துக் கொள்ளவும். அப்பொழுதுதான் தோசை சிரமமில்லாமல் மெலிதாக இழுத்து வார்க்க முடியும்.

* எவ்வளவு மெலிதாக வேண்டுமானாலும் இந்த மாவை இழுத்து வார்க்க முடியும். சுலபமாகத் திருப்ப முடியும்.

* பொதுவாக பச்சரிசி 2 டீஸ்பூன் சேர்த்து அரைத்து செய்வார்கள். அதைவிட ரவை சேர்ப்பது மொறுமொறுப்பாக வரும்.

* எண்ணெய் குறைவாக விட்டால் போதும். அதிக எண்ணெயை ஏற்காது.

* ரவை, பச்சரிசி எதுவுமே சேர்க்காமலும் மிக மிக மென்மையான ஸ்பான்ச் தோசைகள் வார்க்கலாம்.

* பச்சை மிளகாயைத் தவிர்த்துவிட்டு இரண்டு முந்திரிப்பருப்பை சேர்த்து அரைத்து தோசை செய்தால் சின்னக் குழந்தைகளுக்கும் ஆரம்பத்திலேயே கொடுக்க ஆரம்பிக்கலாம். உண்ணவும், செரிக்கவும் எளிதானது. மிக மிக லேசான இனிப்புச் சுவையுடன் இருக்கும். (ஒரு டேபிள்ஸ்பூன் பருப்பு மட்டும் நனைத்து மிக்ஸியின் சட்னி jar லியே அரைத்து என் பெண்ணிற்கு ஒரு வயதுக்கு மேல் ஆனதும் செய்து கொடுத்திருக்கிறேன்.)

* முடிந்தவரை இதுபோல் எண்ணெய் அதிகம் தேவைப்படாமலே சுலபமாக திருப்பக் கூடிய தோசைகளை மட்டுமாவது இரும்பு தோசைக்கல்லிலேயே தயாரிக்கலாம் என்பது என் கருத்து. இரும்பு வாணலியை உபயோகிப்பது முற்றிலும் நின்றுபோய்விட்ட இந்தக் காலத்தில் தோசைக் கல் மட்டுமாவது உபயோகத்தில் இருப்பது நல்லது.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தக்காளிச் சட்னி, இஞ்சிச் சட்னி
 

இந்த வடைக்கு என்று எதுவும் தனியாக யாரும் பெயர் வைக்கவில்லை போலிருக்கிறது. கார்த்திகையன்று (மட்டும்) செய்வதால் கார்த்திகை வடை என்றே நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

kaarththigai vadai 1

தேவையான பொருள்கள்: 

முழு உளுத்தம் பருப்பு – 2 கப் (கருப்புத் தோலுடன்)
கடலைப் பருப்பு – 1/2 கப்
பயத்தம் பருப்பு – 1/2 கப்
பச்சை மிளகாய் – 10, 12
இஞ்சி – பெரிய துண்டு
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
பெருங்காயம்
உப்பு
எண்ணெய்

kaarththigai vadai 2

செய்முறை:

  • தோல் உளுத்தம் பருப்பை அலசி தண்ணீர்ல் குறைந்தது 8 மணி நேரம் ஊறவைக்கவும். (தோல் தனியாகக் கழண்டு  வரும் அளவு ஊறவேண்டும்.)
  • கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊறவைத்து, நீரை ஒட்ட வடித்து, ஒரு துணியில் காயவிடவும்.
  • பாதி இஞ்சி, பாதி மிளகாயை மட்டும் பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையையும் பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • ஊறின தோல்பருப்பைக் களையவும். முக்கால்வாசித் தோல் மட்டும் நீங்கினால் போதும். கால்வாசி அல்லது விரும்பினால் அதைவிட சிறிது அதிகத் தோலை அப்படியே நீக்காமல் வைத்துக் கொள்ளவும்.
  • களைந்த பருப்புடன், தேவையான உப்பு, பெருங்காயம், மீதிப் பாதி இஞ்சி, பச்சை மிளகாயைச் சேர்த்து, அதிகம் நீர் விடாமல், அதிகம் மசியாமல் கெட்டியாக கரகரப்பாக அரைத்து எடுக்கவும். கிரைண்டரில் இப்படி அரைப்பது சுலபம்.
  • அரைத்த மாவுடன் உலர்த்தி வைத்திருக்கும் பருப்புகளை நன்கு கலந்து கொள்ளவும்.
  • நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து அழுத்தாமல் கலந்து கொள்ளவும். பச்சை மிளகாய்த் துண்டுகள் இடையில் அதிகம் இருந்தால் சுவையாக இருக்கும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கவும்.
  • வாழையிலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் தண்ணீர் துடைத்து, மாவை உருட்டி, வடையாகத் தட்டி, நடுவில் துளை போட்டு, நிதானமான சூட்டில், எண்ணெயில் போடவும்.
  • இருபுறமும் திருப்பிவிட்டு, முழுமையாகச் சத்தம் அடங்கி, மொறுமொறுப்பானதும்,  எடுக்கவும். இடையிடையே கரண்டிக் காம்பால் வடையில் குத்தினால் மேலும் கரகரப்பாகும்.

* இந்த வடை வேக சிறிது அதிக நேரம் எடுக்கும். இரண்டு மூன்று நாள்களுக்குக் கெடாது.

* முழுமையாக தோல்பருப்புதான் சேர்க்கவேண்டுமென்பதில்லை. கால் அல்லது அதற்குக் கொஞ்சம் மேலே தோல் உளுத்தம் பருப்பும், மீதிக்கு தோல் நீக்கிய முழுப் பருப்பும் கூட சேர்த்து, கடைசியில் களையாமல் நீரை மட்டும்  வடித்து, அப்படியே அரைக்கலாம். இது அதிகம் ஊறத் தேவையில்லை. நான்கு மணி நேரத்தில் அரைக்கலாம்.

நாங்கள் கிராமத்திற்குப் போகும்போது பஸ் ஸ்டாண்ட்(டில் காத்திருக்கும் நேரத்தில்) புளியமரத்திலிருந்து கொழுந்தைப் பறித்துவந்து குழம்பு, துவையல், ரசம், பச்சடி எல்லாமே செய்திருக்கிறோம். இந்த ஆந்திரச் சுண்டல் புதுமையாக இருந்தது.

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 1/2 கிலோ
பச்சை மிளகாய் – 3, 4
புளியங்கொழுந்து – 1 கப்
எண்ணெய்
உப்பு
கொத்தமல்லித் தழை

செய்முறை:

  • பயத்தம் பருப்பை உப்பு சேர்த்து அரை வேக்காடாக சுண்டல் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், கடுகு, காயம், உளுத்தம் பருப்பு தாளித்து, பச்சை மிளகாய், புளியங்கொழுந்து சேர்த்து வதக்கவும்.
  • அத்துடன் வேகவைத்த பயத்தம் பருப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
  • நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.

* இத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கி சப்பாத்தி வகைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

பயத்தம் பருப்பு/ கடலைப் பருப்பு சுண்டலை இந்த முறையிலும் செய்யலாம். ஆனால் இப்போது சொல்வது, செய்வதற்கும் உண்பதற்கும் எளிமையான சுண்டல். முன்னேற்பாடுகள் எதுவும் இல்லாமலே செய்துவிடலாம்.

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு(அல்லது கடலைப் பருப்பு) – 1 கிலோ
தேங்காய்த் துருவல் – 1 கப்
கேரட் துருவல் – 1/4 கப் (விரும்பினால்)
கொத்தமல்லித் தழை
உப்பு

தாளிக்க: எண்ணெய், கடுகு,  இரண்டு காய்ந்த மிளகாய், பெருங்காயம், 2 பச்சை மிளகாய், கறிவேப்பிலை.

payaththam paruppu sundal

செய்முறை:

  • பருப்பை நன்கு கழுவி, ஒன்றரைப் பங்கு தண்ணீர், உப்பு சேர்த்து, குக்கரில் 5 நிமிடம் வெயிட் போடாமல் வேகவிடவும்.
  • திறந்து பார்த்து, பருப்பு அரைப்பதம் மட்டும் வெந்ததும் (கையால் நசுக்கினால் நசுங்க வேண்டும், அவ்வளவே.) நீரை வடித்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில், எண்ணெய் வைத்து கடுகு, இரண்டாகக் கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • வேகவைத்த பருப்பைக் கொட்டி மேலும் ஐந்து நிமிடங்கள் கிளறவும்.
  • தேங்காய்த் துருவல், கேரட் துருவல், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலந்து உபயோகிக்கலாம்.

kadalai paruppu sundal

* பயத்தம் பருப்பு வேகவைக்கும் போது குழைந்துவிடும் என்று அஞ்சுபவர்கள்:

ஒன்றிரண்டு மணி நேரங்கள் பருப்பைத் தன்ணீரில் ஊறவிடவும். ஒரு பாத்திரத்தில் ஒரு பங்கு தண்ணீரைக் கொதிக்க வைத்து, உப்புச் சேர்த்து, பருப்பையும் அதில் கொட்டி, அடுப்பை அணைத்து மூடிவைத்துவிடவும். பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்துத் திறந்தால் சரியான பதத்தில் இருக்கும். கடலைப் பருப்பாக இருந்தால் கொதிக்கிற தண்ணீரில் போட்டு மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்கவைத்து அடுப்பை அணைக்கவும். மிச்ச நீரை வடித்து விடவும்.

அல்லது

தண்ணீரில் ஊறவைக்காமல், குக்கரிலும் வைக்காமல், நேரடியாக ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றரைப் பங்கு தண்ணீர் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும், சிம்மில் வைத்து, அதில் பருப்புடன் உப்புச் சேர்த்து வேகவிடவும். அடிக்கடி திறந்து பார்த்து, அரைப்பதம் வெந்ததும், (பத்தே நிமிடங்களில் ஆகிவிடும்.) இறக்கி நீரை வடியவிடவும். நம் கை மீறி எதுவும் நடக்காது.

சரி, எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தும் பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மட்டுமல்ல, தட்டப் பயறு, பச்சைப் பயறு போன்ற மென்மையான பயறுகள் கூட குக்கரில் வைத்ததில் லேசாகக் குழைந்து விட்டது. இனிமேலும் வாணலியில் போட்டு வதக்கினால் மேலும் நிலைமை மோசமாகும் என்றால் என்ன செய்வது? சிம்ப்பிள்! இறக்கிய உடனே, வெந்த பயறிலிருந்து நீரை வடித்துவிட்டு  நேராக குளிர்ந்த நீர்க் குழாயடியில் நீட்டவும் அல்லது குளிர்ந்த நீரை நிறைய சேர்த்து வடிகட்டவும். பயறு ஒன்றோடென்று ஒட்டாமல் கொஞ்சம் கடினத் தன்மை அடையும். பின்னர் சமாளிப்பது சுலபம். எதற்கும் பயறுகளை குக்கர் அடங்கியதும் உடனே திறந்துபார்த்துவிடுவது நல்லது.

-0-

வெல்லச் சுண்டல்:

* பயத்தம் பருப்பை வாணலியில் வறுத்து, தண்ணீர் சேர்த்து முக்கால் பதம் வேகவைக்கவும். ஒரு கப் பயத்தம் பருப்பிற்கு ஒரு கப் வெல்லம் சேர்த்துக் கிளறி, நீர் வற்றியதும் தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, நெய் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

* ஒரு கப் பயத்தம் பருப்போடு ஒரு கப் கேரட் துருவலும் சேர்த்துச் செய்தால் ஒன்றரை கப் வெல்லம் போட்டுக் கிளறலாம்.

* கால் கிலோ கடலைப் பருப்பை வாணலியில் வறுத்து, நீர் விட்டு முக்கால் பதம் வேகவைத்து, 200 கிராம் சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறுகியதும் ஏலப்பொடி, சிறிது நெய் சேர்த்துக் கிளறி இறக்கலாம்.

இவர் நம்மாளு உக்காரையின் உடன்பிறந்த சகோதரர் தான். உப்பில் செய்வது. இவர் சுவையில் இனிப்பையே மிஞ்சுவார். ஒரே நாளில் இரண்டையும் செய்வது சுலபமாக இருக்கும்.

தேவையான பொருள்கள்:

பயத்தம்பருப்பு – 2 கப்
கடலைப்பருப்பு – 1/2 கப்
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்

வறுத்துப் பொடிக்க:
தனியா – 2 டேபுள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
க.பருப்பு- 2 டேபிள்ஸ்பூன்
உ.பருப்பு- 2 டேபிள்ஸ்பூன்
 

தாளிக்க: கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை
 

seeyaalam 1seeyaalam 2

செய்முறை:

  • பருப்புகளை நன்கு களைந்து 4 மணிநேரம் ஊறவைத்து சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக- மிக நன்றாக இட்லிமாவுப் பதத்தில் முடிந்தால் கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த மாவை இட்லித் தட்டுகளில் இட்டு வெயிட் போடாமல் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
  • வேகவைத்த இட்லிகளை சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணையைச் சூடாக்கி, மிளகாய், தனியா, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு இவற்றை சிவக்க வறுத்து நைசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  • மீண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, புளியை சற்று நீர்க்கக் கரைத்துவிட்டு, உப்பைப் போடவும்.
  • புளித்தண்ணீர் நன்றாகக் கொதித்தவுடன் இட்லித்துண்டுகளைப் போட்டு நன்றாகக் கிளறவும்.
  • தண்ணீர் நன்றாக வற்றியபின்(அநேகமாக இட்லித் துண்டுகள் நீரை உறிஞ்சிவிடும்.) அரைத்துவைத்துள்ள மசாலாப் பொடியைப் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

seeyaalam 3

* சூடாகச் சாப்பிடவே சுவையாக இருக்கும். ஆனாலும் இந்தச் சீயாளம் மூன்று நான்கு நாள்கள் வரை கெடாது.

* இந்த ‘எங்கள் பக்கத்தி’லேயே ஒரு பக்கத்தில் சீயாளத்துக்கு 1 பங்கு பயத்தம் பருப்பும், 1 பங்கு கடலைப் பருப்பும் போட்டு அரைக்க வேண்டும் என்று சொல்வார்கள். முழுவதுமே பயத்தம் பருப்பிலேயே கூட சிலர் செய்வார்கள். அதெல்லாம் நம் இஷ்டம்தான். பொதுவாக, கடலைப் பருப்பு அதிகம் இருந்தால், நிறைய சீயாளம் காணும். பயத்தம் பருப்பு அதிகம் இருந்தால் நல்ல மணமாக இருக்கும். உள்ளே மெத்தென்று குழலோடி இருக்கும். நடுநிலைவாதிகள் பாதிப் பாதி எடுத்துக் கொள்ளலாம். நான் மேலே சொல்லியிருக்கும் அளவிலேயே செய்வேன்.

* சாதாரண நாள்களில் செய்யும்போது, ஒரேநாளில் சீயாளத்துக்கு இவ்வளவு கஷ்டப்பட முடியாதென்று நினைப்பவர்கள் (உண்மையில் கஷ்டம் எதுவும் இல்லை, நேரம் அதிகம் எடுக்கும் அவ்வளவே.) இட்லிகளை முதலிலேயே செய்து ·ப்ரீசரில் வைத்து, மசாலாப் பொடியும் முதலிலேயே அரைத்துவைத்துக் கொண்டால் தேவைப்படும் பொழுது எடுத்து மைக்ரோவேவ் அவனில் சூடாக்கி, துண்டுகளாக்கி பத்தே நிமிடங்களில் செய்துவிடலாம்.

நவராத்திரி சிறப்புக் கட்டுரை: சிங்கப்பூரில் ஆலயங்கள் – ஜெயந்தி சங்கர்.

இதை ஏற்கனவே மரத்தடிக் குழுமத்தில் இட்டிருக்கிறேன். அங்கே ரசனை இல்லாதவர்களால் கண்டுகொள்ளப்படாமல் போனது. (Grrr..) பின்னர் ஜி.ராவின் பதிவில் பின்னூட்டமாக இட, கைப்புள்ளயும் ஜோசஃப் சாரும் “junk பாஷை, ஒன்றும் புரியவில்லை” என்று சொல்லிவிட்டார்கள். :(( அதனால் முடிந்தவரை புரிகிற மொழியில்….

-0-

என்னவோ எல்லோரும் நவராத்திரி என்றாலே சுண்டல் என்று தான் நினைக்கறார்கள். நிஜத்தில் ஒரு நான்கைந்து நாள்கள் தான் சுண்டல் செய்வோம். அநேகமாக முதல் நாள் ஏதாவது பழமாகத் தான் இருக்கும். ஏனென்றால் அன்று அதிகம் யாரும் வீட்டுக்கு வர மாட்டார்கள்.

ஆனால் எங்கள் பக்கத்தில் (இந்த ‘எங்கள் பக்கத்தில்’ என்பது என்னவென்று எனக்கே சரியாக define செய்யத் தெரியவில்லை. அப்புறம் சொல்கிறேன் என்று அப்போது சொல்லியிருந்ததையே இப்போதும் சொல்கிறேன்.) நவராத்திரி வெள்ளிக்கிழமை வந்தால் உக்காரை, சனிக்கிழமை எள்ளுருண்டை (அல்லது எள்ளுப் பொடி), ஞாயிற்றுக்கிழமை கோதுமை அப்பம் இப்படித்தான் செய்வார்கள்.

உக்காரை ஒரு மரபு சார்ந்த உணவு. முக்கியமாக தீபாவளிக்கும் அந்தக் காலங்களில் இதைச் செய்வார்களாம். ரொம்ப அந்தக் கால ஐட்டம். ஸ்ரீரங்கத்துலயே எனக்குத் தெரிந்து மொத்தம் ஒரு பத்து பேர் வீட்டில் கூட  செய்வார்களா என்று தெரியவில்லை. பொதுவாக எல்லோர் வீட்டிலும் அன்று அரிசிப் புட்டு தான் செய்வார்கள். நாங்கள் அதை ‘மென்னியடைச்சான் பொடி’ என்று தான் சொல்வோம். அப்படியே தொண்டையை அடைக்கும். படுமோசமாக இருக்கும். 😦

இனி உக்காரை..

தேவையான பொருள்கள்:

பயத்தம்பருப்பு – 1 கப்
கடலைப்பருப்பு – 1 கப்
உப்பு – 1 சிட்டிகை
வெல்லம் – 2 கப்
நெய் – 4 தேக்கரண்டி
மு.பருப்பு – 50கிராம்
தேங்காய்
ஏலப்பொடி.

ukkaarai 1

செய்முறை:

  • பருப்புகளை நன்கு களைந்து 4 மணிநேரம் ஊறவைத்து சிட்டிகை உப்பு சேர்த்து  முடிந்தால் கிரைண்டரில் நன்றாக- மிக நன்றாக இட்லி மாவுப் பதத்தில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த மாவை இட்லித் தட்டுகளில் இட்டு, வெயிட் போடாமல் 10 நிமிடம் வேகவைத்து எடுத்து நன்கு ஆறவிடவும்.
  • இட்லிகள் நன்கு ஆறியபின், மிக்ஸியில் இரண்டு இரண்டு இட்லிகளாக உடைத்துப் போட்டு ஒரு சுற்று சுற்றினாலே பொடியாக உதிர்ந்துவிடும். இட்லிகள் நன்கு ஆறியிருக்க வேண்டியது முக்கியம். (சின்ன வயதில், மிக்ஸியில்லாத காலத்தில் நெய்யைத் தொட்டுக் கொண்டு கை விரல்களால் திரித்துத் திரித்து சிறு கட்டி கூட இல்லாமல் பாட்டி மெனக்கெட்டு உதிர்த்தது நினைவிருக்கிறது.)
  • வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து *முற்றிய பாகாகக்* காய்ச்சி ஏலப்பொடி சேர்க்கவும்.
  • பின், அடுப்பை சிம்மில் வைத்து, உதிர்த்த பொடியைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். ஒன்றாகக் கலக்கும் வரை அடுப்பு எரிந்தால் போதும்.
  • தேங்காயை மிக மிகச் சன்னமாக நறுக்கி கால் கப் எடுத்துக் கொள்ளவும்.
  • நெய்யைச் சூடாக்கி, உடைத்த முந்திரி, தேங்காய்த் துணுக்குகளைப் பொரித்துச் சேர்க்கவும்.
  • ஆறியதும் ஒரு பாத்திரத்தில் அடைத்து வைத்து ஒரு நான்கு மணி நேரம் கழித்துப் பார்த்தால் உதிர் உதிராக இருக்கும்; எடுத்து உபயோகிக்கலாம்.

ukkaarai 2

* இட்லி உதிர்ப்பதற்கு முன் நன்கு ஆறியிருக்க வேண்டும், பாகு மிக முற்றியதாக இருக்க வேண்டும் என்பதும் உதிர் உதிரான நல்ல உக்காரைக்கு மிக முக்கியம்.

ukkaarai 3

சில சாதாரணக் குறிப்புகள்:

* இந்த ‘எங்கள் பக்கத்தி’லேயே ஒரு பக்கத்தில் உக்காரைக்கு 2 பங்கு பயத்தம் பருப்பும், 1 பங்கு கடலைப் பருப்பும் போட்டு அரைக்க வேண்டும் என்று சொல்வார்கள். முழுவதுமே பயத்தம் பருப்பிலேயே கூட சிலர் செய்வார்கள். அதெல்லாம் நம் இஷ்டம்தான். பொதுவாக, கடலைப் பருப்பு அதிகம் இருந்தால், நிறைய உக்காரை காணும்; நல்ல உதிராக வரும். பயத்தம் பருப்பு அதிகம் இருந்தால் நல்ல மணமாக இருக்கும். நடுநிலைவாதிகள் பாதிப்பாதி எடுத்துக் கொள்ளலாம்.

* சாதாரண நாள்களில் செய்யும்போது, ஒரேநாளில் உக்காரைக்கு இவ்வளவு கஷ்டப்பட முடியாதென்று நினைப்பவர்கள் (உண்மையில் கஷ்டம் எதுவும் இல்லை, நேரம் அதிகம் எடுக்கும் அவ்வளவே.) இட்லிகளை முதலிலேயே செய்து ·ப்ரீசரில் வைத்துவிட்டு, தேவைப்படும் பொழுது பாகு காய்ச்சி (காய்ச்சிக் கொண்டிருக்கும்போதே இட்லிகளைப் பொடித்து) இதை பத்தே நிமிடங்களில் செய்துவிடலாம்.

சந்தோஷமான குறிப்புகள்:

* இந்த உக்காரை மூன்று நான்கு நாள்கள் வரை கெடாது. முக்கியமாக, செய்தவுடனே (பக்கி மாதிரி ) சாப்பிடுவதைவிட ஒருநாள் கழித்துச் சாப்பிட்டால் சுவை மிகுதியாக இருக்கும். (புளியோதரை மாதிரி.)

* எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது.

மிக முக்கியமான குறிப்புகள்: 🙂

* உக்காரையில் தேங்காய், முந்திரி தவிர வீட்டில் புத்தாண்டிற்கு வந்த ட்ரை ·ப்ரூட்ஸ், மிஞ்சிக் கிடக்கும் கிஸ்மிஸ் எல்லாவற்றையும் அதன் தலையில் பொரித்துக் கொட்டக் கூடாது. புனிதம் போய்விடும். 🙂

* ஏற்கனவே எப்படி நான் அக்கார அடிசிலை, சர்க்கரைப் பொங்கல் என்றோ, பாயசம் என்றோ சொல்லிக் கேவலப்படுத்தக் கூடாது என்று சொல்லியிருக்கிறேனோ அதே மாதிரி இந்த ‘உக்காரை’யை ‘புட்டு’ என்றோ, அடுத்ததாக எழுதப் போகிற சீயாளத்தை ‘டோக்ளா’ என்றோ சொல்பவர்களை பசிக்காத புலி தின்னட்டும். 🙂 உக்காரையை வழக்கு மொழியில் ஒக்கோரை என்றும் சிலர் சொல்வர்(நானும்தான்). அது பரவாயில்லை.

-0-

இல்லை, அரிசிப்புட்டுதான் உசத்தி என்று சொல்பவர்கள், உக்காரையை செய்து சாப்பிட்டுப் பார்த்துவிட்டு தகுந்த வாதங்களோடு வர வேண்டும். நான் ரெடி! 🙂

ஆனால் புட்டு தான் அப்படி(!) இருக்குமே தவிர, எங்கள் பக்கத்தில் சீமந்தம் முடிந்து மறுநாள் பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்குக் கிளம்பும்போது மாமியார், இந்தப் புட்டுடன் ‘உருண்டை’ என்ற ஒன்றை செய்து இரண்டையும் கலந்து கட்டிக்கொடுத்து மருமகளை அனுப்புவார்கள். அந்த உருண்டை நிஜமாவே அபாரமாக இருக்கும். அதுவும் அப்படித்தான், உடனே சாப்பிடக் கூடாது. புட்டில் ஊற விட்டுவிட வேண்டும். அப்புறம் ஆழ்வார்

….. என்னைத் தன் வாரமாக்கி வைத்தாய்
வைத்ததன்றி என்னுள் புகுந்தாய்….’

என்று பெருமாளைப் பாடின மாதிரி அப்படியே புட்டுடைய சிறப்புகள் உருண்டைகளுக்குள்ளும் உருண்டைகளின் சிறப்புகள் புட்டுக்குள்ளும் நுழைந்து ஆஹா.. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! என்னமோ போங்க! இப்பல்லாம் all lazy மாமியார்ஸ், இதெல்லாம் செய்யறதேயில்லை. சும்மா ஒரு மட்டைத் தேங்காயைக் கட்டி அனுப்பிடறாங்க. Very bad!

நவராத்திரி நாயகி: சமயபுரம் மாரியம்மன் – ஷைலஜா. 

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 1/2 கப்
வெங்காயம் – 2 (பெரியது)
தக்காளி – 3, 4
வெங்காய இலை – 1 கட்டு (விரும்பினால்)
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 3,4 பல்
மஞ்சள் தூள்
சாம்பார்ப் பொடி – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
 

தாளிக்க:
எண்ணெய்
கடுகு
காய்ந்த மிளகாய் – 1
பிரிஞ்சி இலை – 1
சீரகம் – 2 டீஸ்பூன்
பெருங்காயம்
 

payaththam paruppu dhal fry 2

செய்முறை:

  • பயத்தம் பருப்பை, சாம்பார்ப் பொடி. மஞ்சள் தூள், சேர்த்து முக்கால் பதத்திற்கு மட்டும் வேகவைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை மெலிதாக அரிந்து கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, காய்ந்த மிளகாய், பிரிஞ்சி இலை, சீரகம், பெருங்காயம் தாளிக்கவும்.
  • பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் வெங்காய இலையைச் சேர்த்து ஒரு நிமிடம் (சுண்டும் வரை) வதக்கவும்.
  • பொடியாக அரிந்த தக்காளியை உப்புடன் சேர்த்து வதக்கவும். 
  • வேகவைத்த பருப்பும் சேர்த்து தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.
  • மிகத் தளர்வான பதத்தில் ஆனால் சேர்ந்தாற்போல் வந்ததும், கரம் மசாலாத் தூள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
  • ஒரு டீஸ்பூன் நெய், மல்லித் தழை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

* இஞ்சி, பூண்டை மட்டும் அரைத்தும் சேர்க்கலாம்.

* சாம்பார்ப் பொடி இல்லாதவர்கள் அரை டீஸ்பூன் மிளகாய்த் தூள், ஒரு டீஸ்பூன் தனியாத் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

* கரம் மசாலாத் தூள் விரும்பாதவர்கள் சாம்பார்ப் பொடி அல்லது பச்சை மிளகாயை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

* பொதுவாக எந்த ‘தால்’ வகையிலும் சாம்பார்ப் பொடியை பருப்பு வேகவைக்கும்போதே சேர்த்தால் ‘தால்’ அதிகம் நிறம் மாறாமல் இருக்கும். இறுதியில் சேர்த்தால் மஞ்சள் நிறம் கலங்கி இருக்கும். தக்காளி சேர்ப்பதால் நிறம் மாறும். அது அழகான மாற்றம், பரவாயில்லை.  🙂

* விரும்புபவர்கள் இஞ்சி பூண்டு அரைக்கும்போது சின்ன வெங்காயம் ஐந்தாறு சேர்த்து அரைத்துவிடலாம். மணமாக இருக்கும். 

* எந்த வெங்காயமுமே இல்லாமலும் இதைத் தயாரிக்கலாம்.

* ஆறியதும் அதிகமாக இறுகும்.

                                                                                                                                                                                                             .
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சூடான நெய் கலந்த சாதம், சப்பாத்தி வகைகள்…

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 1/2 கப்
வெங்காயம் – 2 (பெரியது)
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள்
மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை

தாளிக்க:
எண்ணெய்
கடுகு
கிராம்பு – 3, 4
பிரிஞ்சி இலை – 1
சீரகம் – 2 டீஸ்பூன்
பெருங்காயம்
  

payaththam paruppu dhal fry 1

செய்முறை:

  • பயத்தம் பருப்பை, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சேர்த்து முக்கால் பதத்திற்கு மட்டும் வேகவைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை மெலிதாக அரிந்து கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, காய்ந்த மிளகாய், கிராம்பு, சீரகம், பெருங்காயம் தாளிக்கவும்.
  • பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் வேகவைத்த பருப்பும் உப்பும் சேர்த்து தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.
  • மிகத் தளர்வான பதத்தில் ஆனால் சேர்ந்தாற்போல் வந்ததும், கரம் மசாலாத் தூள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
  • ஒரு டீஸ்பூன் நெய், மல்லித் தழை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

* அநேகமாக ஹோட்டல்களில் பரிமாறப்படும் ‘தால்’ இந்த முறையிலேயே தான் இருக்கும். விரும்பினால் சில துளிகள் எலுமிச்சைச் சாறு பிழிந்து கொள்ளலாம்.

* கரம் மசாலாத் தூள் விரும்பாதவர்கள் மிளகாய்த் தூள் அல்லது பச்சை மிளகாயை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

* பொதுவாக எந்த ‘தால்’ வகையிலும் மிளகாய்த் தூளை பருப்பு வேகவைக்கும்போதே சேர்த்தால் ‘தால்’ அதிகம் நிறம் மாறாமல் இருக்கும். இறுதியில் சேர்த்தால் மஞ்சள் நிறம் கலங்கி இருக்கும்.
 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சூடான நெய் கலந்த சாதம், சப்பாத்தி வகைகள்…

அதிகம் மசாலா சேர்க்காமல், எளிமையான கூட்டு. அநேகமாக எல்லாக் காய்களிலும் இதைச் செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

காய் – 1/2 கிலோ
பயத்தம் பருப்பு – 1/2 கப்
கடலைப்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கறி மசாலாப் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை

தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

beans payaththam paruppu koottu

செய்முறை:

  • பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பை தண்ணீரில் கழுவிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • பருப்புகளுடன் ஒரு கப் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிம்மில் வைத்து மூடி வைத்து பாதியளவு வேக வைக்கவும்.
  • இந்த நேரத்தில் காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் காயையும் சேர்த்து, தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவும். காய் வெந்திருக்கும் நேரத்தில் பருப்பு  இலைப் பதமாக வெந்திருக்கும்.
  • கறி மசாலாப் பொடி அல்லது ரசப் பொடி சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதிக்கவைத்து தளர்வான பதத்தில் இறக்கவும். (ஆறியதும் அதிகம் இறுகும்.)
  • மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

vellarikkai  payaththam paruppu koottu

* பருப்பை குக்கரிலும் வேக வைக்கலாம். ஆனால் அதிகம் வெந்து குழைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகம் வெந்தால் கூட்டோடு சேர்க்கும்போது மாவாகக் கரைந்துவிடும். மேலும் வாணலியில் தனியாக வேகவைக்கும்போது மணமும், சுவையும் நிச்சயம் அதிகமாக இருக்கும்.

* பயத்தம் பருப்போடு தான் கடலைப் பருப்பையும் சேர்க்க வேண்டுமென்பதில்லை. நான் தாளிக்கும் போதே அத்தனை கடலைப் பருப்பையும் சிவக்க வறுத்துவிடுவேன். நன்றாக இருக்கும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

ரசம் சாதம், தயிர் சாதம், துவையல் சாதம், பொடி கலந்த சாதம், பருப்பு சேர்க்காத குழம்பு((மருந்துக் குழம்புகள், மோர்க் குழம்பு தவிர்த்து)  சாதங்களுடன் சேரும்.

துவையல் சாதம் தவிர மற்றவற்றிற்குச் செய்யும்போது, இறக்குவதற்கு முன் இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.

பொங்கல் பண்டிகையன்று செய்வது…

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப்
பயத்தம் பருப்பு – 1/4 கப்
நெய் – 1/4 கப்
மிளகு –  2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
இஞ்சி –  ஒரு துண்டு
முந்திரிப் பருப்பு – 10
உப்பு –  தேவையான அளவு

ஹோட்டல் சுவைக்கு:

பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை –  சிறிது
மஞ்சள் தூள் –  1 சிட்டிகை

venpongal

செய்முறை:

  • பயத்தம் பருப்பைக் கழுவி லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  • கழுவிய அரிசியோடு சேர்த்து குக்கரில் குழைய வேக விடவும்.
  • வாணலியில் நெய் விட்டு பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, சீரகம், முந்திரிப் பருப்பு தாளித்து அடுப்பை அணைத்து, பொங்கலை அதில் கொட்டி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி சூடாகப் பரிமாறவும்.

*  சாதாரண நாள்களில் பாதி நெய்யும், பாதி ரிஃபைண்ட் எண்ணையும் கலந்து செய்யலாம். உண்மையில் எண்ணணயில் தாளித்து, கடைசியில் நெய்யை சூடாக இருக்கும் பொங்கலில் கலந்து செய்வதே சுவை அதிகமாக இருக்கிறது.

venpongal.JPG

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தேங்காய்ச் சட்னி, தக்காளிக் கொத்சு, கத்திரிக்காய் புளிக் கொத்சு, சின்ன வெங்காயச் சாம்பார், கதம்பச் சாம்பார், தாளகக் குழம்பு தவிர ஓரளவு அனைத்து குழம்பு, சாம்பார்களும்…