தேவையான பொருள்கள்:

பச்சைப் பட்டாணி – 200 கிராம் (அல்லது முக்கால் கப் காய்ந்த பட்டாணி)
பனீர் – 200 கிராம் (அல்லது ஒரு லிட்டர் பால்)
வெங்காயம் – 3 (பெரியது)
தக்காளி – 3 (பெரியது)
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 6 பல்
முந்திரிப்பருப்பு – 6, 7
தனியா – 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலாத் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
நெய் அல்லது வெண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை
எலுமிச்சைச் சாறு – சில துளிகள்

muttar paneer

செய்முறை:

  • பச்சைப் பட்டாணியை (காய்ந்த பச்சைப் பட்டாணியாக இருந்தால் 10 மணிநேரம் நீரில் ஊறவைத்து), குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
  • ஒரு லிட்டர் பாலில் பனீர் தயாரித்துக் கொள்ளவும். (அல்லது கடைகளில் வாங்கலாம்.)
  • 2 வெங்காயம்(மட்டும்), தக்காளியை பெரிய துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வெங்காயத்தை மிகப் பொடியாக அரிந்துகொள்ளவும்.
  • இஞ்சி, உரித்த பூண்டு, முந்திரிப் பருப்பு, தனியா, 1 டீஸ்பூன் மட்டும் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து மிக நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து சீரகம் தாளித்து, வெங்காயத்தைச் சேர்க்கவும்.
  • வெங்காயம் நன்கு பொன்னிறமாகும்வரை வதக்கியவுடன், பனீர் துண்டங்களைச் சேர்த்து வதக்கவும்.
  • அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் தக்காளி விழுது இரண்டும் சேர்த்து மேலும் 2, 3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  • மேலே உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • கொதிக்க ஆரம்பித்ததும் வேகவைத்த பட்டாணியும் சேர்த்து மேலும் 5 நிமிடங்களுக்குக் கொதிக்கவிடவும்.
  • சேர்ந்தாற்போல் வரும் சமயம் இறக்கி, வெண்ணெய் அல்லது நெய் சேர்க்கவும். (ஹோட்டல்களில் சேர்க்கும் அளவு தாளிக்கும் சமயம் வெண்ணெய், எண்ணெய் சேர்க்காமல் ஆனால் மணமாக இருக்க, கடைசியில் இதைச் சேர்க்கிறோம்.)
  • பரிமாறும் சமயம் சில துளிகள் எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லித் தழை கலந்துகொள்ளவும். (ஹோட்டல்களில் உண்ணும்போதும் சில துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்த்துக்கொள்வது, புதிதாகச் செய்த உணர்வையும் சுவையையும் தரும்; அப்படி அல்ல என்பது நமக்குத் தெரியும் என்றாலும். :)]

* இஞ்சி பூண்டு விழுது, தனியாத் தூள், சீரகத் தூள் என்று தயாராக இருந்தால் அதையே உபயோகிக்கலாம். பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பை மட்டும் அரைத்துக் கொள்ளலாம். (ஆனால் பொதுவாக, அவ்வப்போது பொருள்களைச் சேர்த்து அரைப்பது அதிக மணத்தைத் தரும்.)

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சப்பாத்தி, பரோட்டா, நான் வகைகள்…