தேவையான பொருள்கள்:

பனைவெல்லம் (கருப்பட்டி) – 500 கிராம்
நெய் – 300 கிராம்
நல்லெண்ணெய் – 200 கிராம்
தேன் – 100 கிராம்

வறுத்துப் பொடிக்க:

அரிசித் திப்பிலி – 100 கிராம்
கண்டத்திப்பிலி – 100 கிராம்
சுக்கு – 100 கிராம்
மிளகு – 100 கிராம்
சீரகம் – 100 கிராம்
பரங்கிச் சக்கை – 50 கிராம்
சித்தரத்தை – 50 கிராம்
கசகசா – 50 கிராம்
கிஸ்மிஸ் – 50 கிராம்
இலவங்கம் – 10 கிராம்
ஓமம் – 10 கிராம்
ஜாதிபத்திரி – 10 கிராம்
எள் – 10 கிராம்
ஏலக்காய் – 10
கிராம்பு – 5
விரளி மஞ்சள் – 2

செய்முறை:

  • வறுத்துப் பொடிக்கச் சொல்லியிருக்கும் எல்லாப் பொருள்களையும்- நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்- தனித்தனியாக, குறைந்த தீயில், நிதானமாக, பக்குவமாக (திப்பிலியை வறுத்தபிறகு, அதைக் கையில் எடுத்து ஒடித்தால் ஒடியவேண்டும். இதுவே எல்லாப் பொருளுக்கும் பதம்.) வறுக்கவும்.
  • எல்லாவற்றையும் மிக்ஸியில் மிக மென்மையாகப் பொடித்து சல்லடையில் சலிக்கவும்.
  • அடுப்பில் வாயகன்ற வாணலியில் பனைவெல்லத்தைப் போட்டு, நெய், நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்ச வேண்டும்.
  • வெல்லம் கரைந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
  • சலித்துவைத்துள்ள பொடி, தேன் இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • ஆறியதும் காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்துவைத்தால் சுமார் பத்துமாதங்கள் வரை கெடாது.

* மருந்து பக்குவமாக வர, வெல்லம் அதிகநேரம் அடுப்பில் காயக்கூடாது. ஒருமுறை அடுப்பிலிருந்து இறக்கியபின் மீண்டும் வெல்லத்தை அடுப்பில்வைத்துக் காய்ச்சக் கூடாது.

* மருந்து கையில் ஒட்டாமல் வரும். இதுவே சரியான பதம்.

** எச்சரிக்கை: கர்ப்பகாலத்தின் ஆரம்ப மாதங்களில் இருக்கும் பெண்கள் இதுபோன்ற நாட்டுமருந்து, கிளறின லேகியங்களை (மருத்துவரின் ஆலோசனை இல்லாமல்) உண்பது கூடாது.

அசோகா – 1 

[“அறுசுவை அரசு” நடராஜய்யர் சகோதரர் ஞானாம்பிகா ஜெயராமய்யர்]

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 100 கிராம்
சர்க்கரை இல்லாத கோவா – 100 கிராம்
சர்க்கரை – 400 கிராம்
சம்பா கோதுமை மாவு – 100 கிராம்
நெய் – 100 கிராம்
ஏலக்காய் – 5
முந்திரிப் பருப்பு – 10
கிஸ்மிஸ் – 10 கிராம்

 

செய்முறை:

  • பயத்தம் பருப்பை கடாயில் பொன்வறுவல் வறுத்து தண்ணீரில் ஊறவைக்கவும்.
  • சிறிதுநேரம் ஊறியபின் நன்றாகக் களைந்துவிட்டு, அதை கெட்டியாக வரும் அளவிற்கு தண்ணீர் வைத்து குக்கரில் வேகவைக்கவும்.
  • வேகவைத்த பருப்பில் சர்க்கரையைப் போட்டு, கடாயில் நன்றாக அல்வா மாதிரி கிளறவேண்டும்.
  • அல்வா நல்ல பதம் வந்ததும் இறக்கி, கோவாவைச் சேர்த்துக் கலந்துவைக்கவும்..
  • மற்றொரு கடாயில் நெய்யை வைத்து நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் போட்டு கொஞ்சம் சிவந்தவுடன் சம்பா கோதுமை மாவு சேர்த்து நன்கு வாசனை வரும் அளவிற்கு வறுத்து, அதனுடன் பருப்பு கோவாக் கலவை, ஆரஞ்சு கலர் சேர்த்துக் கிளறவும்.

இருபது வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூர், கும்பகோணம் போகும்போதெல்லாம் என் தந்தை வாங்கிவருவார். இப்பொழுது எல்லா இடங்களிலும் பிரபலம். முக்கியமாக திருமணம் மாதிரி விசேஷங்களில் மெனுவில் முக்கிய இடம் பெற்றுவிட்டது. 

 

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 1 கப்
பால் – 2 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 1 கப்
கேசரி பவுடர் (விரும்பினால்)
ஏலக்காய்
பச்சைக் கற்பூரம்
முந்திரி, பாதாம் வகைகள்

செய்முறை:

  • பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக்கொள்ளவும்.
  • பால் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேகவிடவும்.
  • குக்கர் திறக்கவந்ததும் சூட்டுடனே வெளியே எடுத்து,  நன்கு மசித்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் சர்க்கரை, மசித்த பயத்தம்பருப்பு கலந்து கிளறத் தொடங்கவும்.
  • முதலில் சர்க்கரையால் நெகிழ்ந்து, பின் கலவை இறுக ஆரம்பிக்கும்.
  • சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்து விடாமல் கிளறவும்.
  • நன்கு சேர்ந்து ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.
  • இறக்குவதற்கு சற்றுமுன் கலர் (நான் சேர்க்கவில்லை.), ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், உடைத்த அல்லது நொறுக்கிய கொட்டைப் பருப்புகள் சேர்க்கவேண்டும்.

* பல தளங்களில் கோதுமை மாவு ஒரு பங்கு சேர்ப்பதாக இருக்கிறது. இது எனக்குச் செய்தி. ஒருவேளை இப்பொழுது திருமணம் மாதிரி பெரிய விசேஷங்களிலும் செய்வதால் அளவிற்காக கோதுமை மாவு சேர்க்கிறார்களா என்று தெரியவில்லை. எதற்கும் சேர்க்காமல் ஒருமுறை செய்துபார்த்து அதன் ஒரிஜினல் சுவையை அனுபவித்துவிட்டு விரும்பினால் மாவு சேர்த்தும் செய்யலாம் என்பது என் அக்கறை கலந்த ஆலோசனை.

* எனக்கு இந்த முறையே வசதியாக இருப்பதாலும் பிடித்திருப்பதாலும் ஒவ்வொரு தீபாவளிக்கு முன்தினமும் (லக்ஷ்மி பூஜைக்கு பயத்தம்பருப்பு சேர்த்து செய்யநினைத்து) இருக்கிற பூஜை, கொண்டாட்ட நெருக்கடியில் விரைவாகச் செய்யமுடிவதாலும் இப்படியே செய்துவருகிறேன்.

* அறுசுவை நடராஜன் குறிப்பு ‘சம்பா‘ கோதுமை மாவு சேர்த்தது; பாலுக்கு பதில் கோவா. அடுத்து வருகிறது.

தேவையான பொருள்கள்:

முந்திரிப் பருப்பு – 3/4 கப்
பாதாம் பருப்பு – 3/4 கப்
கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன்
பால் – 3/4 லிட்டர்
சர்க்கரை – 1 1/2 கப்
நெய் – 1 கப்
ஏலக்காய் – 5

munthiri badam cake

செய்முறை:

  • பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து தோல்நீக்கி, காயவைத்துக் கொள்ளவும்
  • முந்திரி, பாதாம் பருப்பை மிக்ஸியில் மென்மையாகப் பொடித்துக்கொள்ளவும்.
  • பாலை அடுப்பில் வைத்து சேர்ந்தாற்போல் திரிதிரியாய் வரும் பதத்திற்குக் காய்ச்சிக்கொள்ளவும். (முற்றிலும் இறுகவேண்டாம்.)
  • அதே நேரத்தில் இன்னொரு அடுப்பில் வாணலியில் சர்க்கரையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, (தேவைப்பட்டால் சர்க்கரை கரைந்ததும் சிறிது பால்சேர்த்து அழுக்கு நீக்கி) ஒற்றைக் கம்பிப் பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
  • பாகு வந்தவுடன் பருப்புப் பொடிகள், கடலைமாவை சிறிது சிறிதாகத் தூவிக் கிளறிக்கொண்டே இருக்கவும்.
  • எல்லாப் பொடியும் கலந்து, கலவை சேர்ந்தாற்போல் வரும்போது, பால்கோவாவையும் கலந்து கிளறவும்.
  • ஏலப்பொடி தூவி, நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்த்து, தொடர்ந்து கிளறவும்.
  • நெய் பிரிந்து, கலவை ஒட்டாமல் சேர்ந்துவரும்போது நெய்தடவிய தட்டில் கொட்டி, லேசான சூடு இருக்கும்போதே வில்லைகள் போட்டு, ஆறியதும் எடுத்துவைக்கவும்.

தேவையான பொருள்கள்:

பாதாம் பருப்பு – 1 கப்
முந்திரிப் பருப்பு – 10
சர்க்கரை – 1 கப்
நெய் – 1/2 கப்
ஏலக்காய் – 3
ஜாதிக்காய்ப் பொடி
குங்குமப் பூ
கேசரி கலர்
வெள்ளரி விதை – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

  • பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து தோலுரித்துக் கொள்ளவும்.
  • முந்திரிப்பருப்பை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
  • இரண்டு பருப்புகளையும் சிறிது தண்ணீர் சேர்த்து மிகமிக அதிக மென்மையான விழுதாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் சர்க்கரையுடன் அரைகப் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சவும்.
  • சர்க்கரை கரைந்ததும், அரைத்த விழுதையும் சேர்த்து, கைவிடாமல் கிளற ஆரம்பிக்கவும். [சர்க்கரை கரைந்ததும், தேவைப்பட்டால் 2 டீஸ்பூன் பால் சேர்த்து, மேலே வரும் அழுக்கை நீக்கிவிடவும்.]
  • சேர்ந்தாற்போல் வரும்போது 1 டேபிள்ஸ்பூன் பாலில் குங்குமப்பூ, கேசரி கலர், ஏலப்பொடி, ஜாதிக்காய்ப் பொடி, பச்சைக் கற்பூரம் கரைத்து, கலவையில் சேர்க்கவும்.
  • கலவை இறுக ஆரம்பித்ததும் சிறிது சிறிதாக நெய் சேர்த்துக் கிளறவும்.
  • நெய் வெளிவந்து ஒட்டாமல் கலவை வரும்போது, அடுப்பிலிருந்து இறக்கி, வெள்ளரி விதை கலக்கவும். 
  • 

* பொதுவாக பாதாம் அல்வா திகட்டும் இனிப்பாக இல்லாமல் இருக்கவேண்டும். விரும்புபவர்கள் இன்னும் 1/4 கப் சர்க்கரை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அது பாதாமை உணரமுடியாமல் செய்துவிடும். 

* இந்த அல்வாவுக்கு முந்திரி, பாதாம் கொண்டு அலங்கரிப்பது பிள்ளையாரைக் கிள்ளி பிள்ளையாருகே நைவேத்தியம் செய்வதுபோல். அதனால் வெள்ளரி விதை மட்டும் போதும்.

* கிராண்ட் ஸ்வீட்ஸ் பாதாம் அல்வா— பாதாம் பருப்பு 200 கிராம், சர்க்கரை 400 கிராம், நெய் 200 கிராம், முந்திரிப் பருப்பு தேவையில்லை ; ரவைப் பதத்திற்கு அரைக்கவேண்டும்.

* ஆயிரம்தான் பாதாம் பருப்பிலேயே அல்வா செய்தாலும் சுவையில் கோதுமை அல்வாவை அடித்துக்கொள்ள ஆளில்லை. அல்வாக்களில் ராணி கோதுமை அல்வா. எனக்கு பாதாம் பருப்பு, அப்படியே சாப்பிடுவதே சுவையாக இருக்கிறது.

“மூட நெய்பெய்து முழங்கை வழிவார…”

“அட, அப்படியே அக்கார அடிசிலில் மூட மூட நெய் பெய்தாலும், கையிலிருந்து வாய்க்குப் போவதற்குள் எப்படி வேகமாக முழங்கை வரை நெய் வழியும் என்பதற்கு ஒரு அழகான விளக்கம் படித்தேன். சீக்கிரம் அக்கார அடிசிலை உண்டுவிட்டால், கண்ணன் கிளம்பிவிடுவான் என்று நோன்புப் பெண்கள், சாப்பிடுவது போல் பாசாங்குக்காகக் கையிலெடுத்துவிட்டு, ஆனால் சாப்பிடாமல் அவனோடு பேசியே பொழுதை இழுத்தடித்துக் கழிப்பார்களாம். அதற்குள் கையிலிருக்கும் அக்கார அடிசிலிருந்து நெய் பிரிந்து முழங்கை வரை வந்து விடுமாம்.

ம்ம்ம்.. அப்ப ஒரு கோக் டின் வாங்கிகிட்டு கார்னர் டேபிளை occupy பண்ணிகிட்டு ஒருமணிநேரம் அல்லது சர்வரே விரட்டற வரைக்கும் டாக் பண்ணிகிட்டே இருக்கறதும், எப்பவோ ஒரு தடவை நினைவு வந்தமாதிரி வாயை அதுல வெச்சு இரண்டேஇரண்டு மில்லி உறிஞ்சறதும் கேட்டா Sweet Nothingsனு சொல்லிக்கறதும், அப்படி ஒன்னும் சமீபத்தைய trend இல்ல போல!! :))

யாராவது ஜெயிச்சா, தங்கப்பதக்கம் வாங்கினா, நெகிழ்ச்சில அழுவாங்க. அட, உலக அழகியாவே அறிவிச்சா கூட வாயை ஓ’ மாதிரி வெச்சுகிட்டு, சொல்லிவெச்ச மாதிரி உலகத்துல இருக்கற அவ்ளோ அழகிகளும் அழறாங்க. 

ஆண்டாள் ரெங்கமன்னார்

ஆனாலும் நம்ப பார்ட்டிக்கு ஜெயிச்சப்பறம் இந்தத் தெனாவட்டு ஆகுமா? முப்பது நாளும் பணிவு பக்தின்னு இருந்த பொண்ணான்னு இருக்கு! ஆண்டாள் ஆண்டாள் தான்!! 

-0-

நான் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றிருந்த போது, “பெரும்புதூர் மாமுனிக்கு பின்ஆனாள் வாழியே!” என்று வாழி திருநாமம் ஆண்டாள் பற்றி குறிப்பிடுவது ஏன் என்று சந்தேகம் கேட்டபோது அங்கிருந்தவர்கள் இராமானுஜருக்கு ஆண்டாள் எப்படித் தங்கையானாள் என்று ஒரு கதை சொன்னார்கள்.

ஆண்டாள் தன்பொருட்டு அழகருக்கு செய்துவைக்கிறேன் என்று பிரார்த்தித்துக்கொண்ட 100 தடா ‘அக்கார அடிசிலை’…

நாறு நறும்பொழில்மா
     லிருஞ்சோலை நம்பிக்கு, நான்
நூறு தடாவில்வெண்ணெய்
     வாய்நேர்ந்து பராவிவைத்தேன்,
நூறு தடாநிறைந்த
     அக்கார வடிசில்சொன்னேன்,
ஏறு திருவுடையான்
     இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ.
(– நாச்சியார் திருமொழி)

 

…. கல்யாண குஷியில்:) மறந்திருக்கலாமோவென இராமானுஜர் சிரமப்பட்டு நிறைவேற்றி வைக்கிறார். அதனால், பின்னர் இராமானுஜர் ஸ்ரீவில்லிபுத்தூர் வரும்போது ஆண்டாள் அவரை “அண்ணா!” என்று நெகிழ்ந்து அழைத்துக்கொண்டே எட்டடி முன்னால் ஓடிவந்துவிட்டாளாம். (இப்போதும் மற்ற கோவில்களைப் போல் இல்லாமல் ஸ்ரீவில்லிபுத்தூரில் மூலவருக்கும் உத்ஸவருக்குமான இடைவெளி மிக அதிகமாக, உத்ஸவர் மற்ற கோவில் உத்ஸவர்களைவிட இன்னும் எட்டடி அதிக முன்னாலேயே இருப்பதால் பின்னால் இருக்கும் மூலவரை நன்றாக தரிசிப்பது சிரமமாகவே இருக்கும்.) இந்த உற்சவம் இப்பொழுதும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருடம் ஒருமுறை நடந்துவருகிறது என்று கேள்விப்பட்டேன்

இந்த நிகழ்வை ஸ்ரீரங்கம் கோயிலொழுகும் இவ்வாறு குறிப்பிட்டு உறுதிசெய்கிறது…
 

…. உடையவரும் பெரியபெருமாளுடைய அநுமதியுடனே திருவரங்கத்திலிருந்து புறப்பட்டு சுந்தரத் தோளுடையான் எழுந்தருளியிருக்கும் திருமாலிருஞ்சோலைக்குச் சென்று (இது அழகர் கோயில்) மங்களாசாஸனம் செய்தருளினார். அங்கு ஆண்டாள் விபவாவதாரத்திலே பாரித்தபடி, அக்குடியில் பிறந்த தாம் ஆண்டாளுடைய எண்ணத்தை நிறைவேற்றும்விதமாக 100 தடா வெண்ணெய், 100 தடா அக்காரஅடிசில் ஸமர்ப்பித்தருளினார்.
……………………………
…………………………….
அதன்பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றடைந்து…

…ஆண்டாளும் தாம் வாய்நேர்ந்த படியே அழகருக்கு 100 தடா அக்காரஅடிசிலைத் தம்பொருட்டு ஸமர்பித்த இராமானுசரை
‘எம் கோயில் அண்ணரே’ வாரும் என்று அழைத்தருளினாள்.

ஆண்டாள் குறித்து படித்த இன்னொரு சுவாரசியமான சுட்டி

இந்தப் பகுதி மரத்தடி ஹரன்பிரசன்னாவிற்கு சமர்ப்பணம். 🙂

-o-

இனி அக்கார அடிசில்… இது மார்கழி மாதம் 27ஆம் நாள் செய்யும் இனிப்பு வகை…

தேவையான பொருள்கள்:

அரிசி – 1 கப்
பயத்தம் பருப்பு – 1/4 கப்
வெல்லம் – 2  1/2 கப்
ஏலப்பொடி – 2 டீஸ்பூன்
பச்சைக் கற்பூரம் – சிறிது
மற்றும்
பால் பால் பால் பால்…
நெய் நெய் நெய் நெய்…

செய்முறை:

  • அரிசி மற்றும் பயத்தம் பருப்பைக் கழுவி, நன்கு நீரை வடித்துவிட்டு, வாணலியில் 2 டீஸ்பூன் நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
  • பின் 5 கப் பால் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேக விட வேண்டும்.
  • வாணலியில் வெல்லத்துடன் சிறிது நீர் சேர்த்து, கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.
  • வாணலியில் குழைய வேகவைத்த அரிசிக் கலவை, வடிகட்டிய வெல்லக் கரைசலுடன் மேலும் 2 கப் பால் சேர்த்து சிறுதீயில் கிளற ஆரம்பிக்க வேண்டும்.
  • இறுக இறுக மேலும் மேலும் பால் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
  • சிறிது நேரம் சென்றபின் நெய்யைச் சேர்க்க ஆரம்பிக்க வேண்டும்.
  • நெய், நெய், நெய் மேலும் நெய்…போதும் என்று [நாம்:-)] முடிவு செய்யும் போது ஏலப்பொடி, பச்சைக்கற்பூரம் சேர்த்துக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கலாம்.

akkaara adisil (maargazhi 27)

* “நெய்யுண்ணோம்.. பாலுண்ணோம்” என்று மார்கழி 2ம் நாள் ஆரம்பித்த நோன்பை, “…அதன்பின்னே பால்சோறு, மூட நெய் பெய்து முழங்கை வழிவார..” என்று கூறி 25 நாள்களாகத் தவறவிட்ட நெய் பாலையெல்லாம் மார்கழி 27ம் நாள் கணக்கில் ஆண்டாள் எழுதிவிட்டாள். பாலிலேயே அரிசி சமைக்கப்பட வேண்டும். அதுவே மூடப்படும் அளவு அதன்மேல் நெய் ஊற்றப்பட வேண்டும். சமைத்தபின் அக்கார அடிசிலைக் கையில் எடுத்தால் நெய் முழங்கை வழிவார ஒழுக வேண்டும். இது ஆண்டாள் இந்தப் பாட்டில் தந்திருக்கும் ரெசிபி.

அப்படியெல்லாம் பால், நெய்யைக் கொட்ட நாம் ஆயர்பாடியிலோ, ஸ்ரீவில்லிபுத்தூரிலோ இல்லை என்பது முதல் காரணமென்றாலும், நமது தேகம் தாங்காது என்பது அதைவிட முக்கியமான காரணம். உங்கள் வீட்டுக்காரர்களிட(மு)ம் நல்லநாளில் தயவுசெய்து எனக்குத் திட்டு வாங்கித் தராதீர்கள். அவ்வளவு பால் நெய் தேவையில்லை. அவரவர் விருப்பம் போல் சேர்த்துக் கொள்ளவும். அதனால்தான் தேவையான பொருள்களில் பால் மற்றும் நெய்யின் அளவைக் குறிப்பிடவில்லை.

* குக்கரில் வைக்கும் போது 5 கப் பாலிற்குப் பதிலாக 3 கப் பால் மற்றும் 2 கப் நீராகக் கலந்து வைக்கலாம். ஆனால் பின்னால் கிளறும் போது பால்தான் சேர்க்க வேண்டும்.

* வாணலியில் கிளற ஆரம்பிக்கும் முன்பே வெல்லக் கரைசல், வேக வைத்த சாதக்கலவை, பால் ஆகியவற்றைக் கட்டியில்லாமல் கரைத்துக் கொண்டுவிடுதல் நலம். இல்லாவிட்டால் பின்னால் சமாளிப்பது சிரமம்.

கிளறும்போது கடைபிடிக்கவேண்டிய அனுஷ்டானங்கள்:

வாயால் பாடும் கனகதாரா, ‘உதயா’ உளறல்களைத் தற்காலிகமாக நிறுத்திவிடுவது,

காதால் கேட்கும் தொலைபேசி அழைப்பெல்லாம் wrong call (அல்லது எனக்கில்லை) என்று திடமாக நம்புதல்,

யாதொரு சம்பந்தமுமில்லாமல் திடீரென இடையில் பெண் கேட்கும் ‘How come you loved appa? என்ற விடையே இல்லாத கேள்விகளுக்கு விடையை மனதால் சிந்திக்க முற்படாதிருத்தல்,

“அக்காரவடிசல்(வழக்குமொழியில்) எல்லாம் எங்கம்மா பண்ணனும், இன்னும் நாக்குலயே இருக்கு!” என்று பக்கவாட்டிலிருந்து நம்மைச் சீண்டப்பார்க்கும் பேச்சுகளுக்கு, “பாசுரம் ஒண்ணும் உருப்படியா நாக்குல நிக்காட்டாலும் இதுவாவது நிக்குதே!…. இவ்ளோ வாயாகாது!!” என்று திருப்பிச் சொல்ல நினைப்பதைச் சற்று நேரத்திற்கு ஒத்திப் போடுவது [அதற்காக சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் இருக்கக் கூடாது. கொஞ்சம் postpone செய்து சாப்பிட ஆரம்பிக்கும்முன் அவசியம் சொல்லிவிட வேண்டும். :)]

ஏன் இவ்வளவு புலனடக்கம் தேவை என்று புரியாதவர்களுக்கு இனி பதில்…

* பால் சேர்த்திருப்பதால் மிக விரைவில் வேகவேகமாக அடிப்பிடிக்க ஆரம்பிக்கும். அதற்கு வாய்ப்பே கொடுக்காமல் மிகச் சிறிய தீயில் விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின்னால் நிச்சயம் கையொடு தோள் வலிக்கும்.

* கொதிக்கும் வேகத்தில் ‘க்ளக் க்ளக்’ என்று வெளியில் தெறிக்கும்; நம் கையிலும். சமாளிக்க வேண்டியதுதான். வெளிப்புறத்தைத் துடைக்க வேண்டிய வேலை தனி.

* அதிக நேரம் கிளற முடியாது என்று நினைப்பவர்கள் சர்க்கரை சேர்க்காத condensed milk மற்றும் சிறிதளவு பால் மட்டும் கலந்து விரைவில் முடித்து விடலாம். ஆனால் சர்க்கரை கலக்காத condensed milk என்பது மிக முக்கியம். சுவையிலும் கொஞ்சம் compromise செய்த கணக்குதான் இந்த முறை.

இறக்கும் முன்:

* எக்காரணம் கொண்டும் நமது பவிஷைக் காட்ட முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் போன்ற தூவல்களைச் சேர்த்துக் கேவலப்படுத்தக் கூடாது. இது சர்க்கரைப் பொங்கல் இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். சாப்பிடும் போது வாயில் இது போன்ற எந்த உப தொந்தரவுகளும் ஏற்பட விடக்கூடாது.

* பச்சைக்கற்பூரம் மிகமிகச் சிறிதளவே சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கசந்து மொத்தமும் பாழாகிவிடும்.

* வெல்லம் சிறிது கருப்பாக இருந்தால், சிட்டிகை கேசரிப்பவுடர் சேர்த்து பொய் make-up செய்யலாம்.

* சர்க்கரைப் பொங்கல் போல் இறுக்கமாகவும் இல்லாமல், பாயசம் போல் நீர்த்தும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட consistencyல் இருக்க வேண்டும். எடுக்கவோ குடிக்கவோ என்று கேட்பதற்கு இடமளிக்க முடியாமல் கையால் எடுக்கவும் முடியாமல், பாயசம் போல குடிக்கவும் முடியாமல் ஸ்பூனால் மட்டுமே எடுத்து சாப்பிட வேண்டிய திடத்தில் அவசியம் இருக்க வேண்டும்.

* எவ்வளவுக்கெவ்வளவு நெய் சேர்க்கிறோமோ அவ்வளவு சுவையாக இருக்கும் என்பதில் இரண்டாம் கருத்தே இல்லை. ஆனால் அப்படிச் சேர்க்கவில்லையென்றாலும், சாப்பிடும் முன், ஒரு கப்பில் போட்டு மைக்ரோவேவ் அவனில் சில நொடிகள் வைக்க, ஜிகுஜிகுவென்று வாசனையுடன், விட்டிருக்கும் சொல்ப நெய்யும் உருகி மேலே வர…. பார்ப்பதற்கு மூட நெய்பெய்தது போன்ற தோற்றத்தையும் சுவையையும் நிச்சயம் தரும். 

* ‘ஏன் கிளற அவ்வளவு கஷ்டப்பட வேண்டும், Non-stick ல் சுலபமாகச் செய்யலாமே?’ என்று கேட்கலாம். ஆமாம் மிகமிகச் சுலபமாகச் செய்யலாம். ஆனால்.. ஸ்ரீரங்கம் கோவிலில் உணவு சமைக்க எல்லாவற்றிற்கும் தங்கம், வெள்ளி அல்லது புதுப்புது மண் பாத்திரங்கள் மட்டுமே உபயோகிப்பார்கள். அதனால் கொஞ்சம் எல்லாவற்றிலும் லேசாக(மிக மிக லேசாக) ‘அடிப்பிடித்த’ வாசனை வரும். அது வந்தால்தான் எனக்கெல்லாம் திருப்தியாக இருக்கும். ஒருமுறை நான்-ஸ்டிக்கில் செய்து பார்த்து அளவுகளும் சுவையும் சரியாக இருந்தும் என்னால் திருப்தியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே non-stick ல் சமைப்பது சுகம். ‘மற்றவை’ ஸ்ரீரங்க சுகம்!!

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இந்த உணவுக்கு மேட்ச் ஃபிக்ஸ் செய்யத் தேவை எதுவும் இல்லை. (உள்ளிருக்கும் பட்சத்தில் பக்தி தானே சேர்ந்துகொள்ளும்.) ஆனால் உண்பவர்களுக்கு துணைக்கு ஒருவரல்ல, நிறையப் பேர் தேவை. தான் மட்டும் தனித்தோ, மிச்சமிருப்பதை ஃபிர்ட்ஜில் வைத்தோ உண்ணாது, எல்லோருடனும் பகிர்ந்து உண்ண வேண்டும்.

“கூடியிருந்து குளிர்ந்து.. “

நன்றி: மரத்தடி.காம்