தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப் (அல்லது பிரியாணி அரிசி)
பால் – 500 மிலி
மாங்காய்த் துருவல் – 1 கப் (துருவியது)
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
பெரிய வெங்காயம் – 1 (விரும்பினால்)
குடமிளகாய் – 1
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – சிறு துண்டு
காய்ந்த மிளகாய் – 2
இலவங்கப் பட்டை – 1 (விரும்பினால்)
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
நிலக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 1 சிட்டிகை
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
கொத்தமல்லித் தழை – 1 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

  • பாலைக் காய்ச்சி, பொங்கிவரும்போது எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர் சில துளிகள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்கவைத்து பால் திரிந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • திரிந்த பாலை பனீர் வடிகட்டி அல்லது ஒரு துணியில் போட்டு கையால் ஒட்ட பிழிந்து வடிகட்டி உதிர்த்துக் கொள்ளவும். பிரிந்த நீரையும் எடுத்துவைக்கவும். (உடனடியாக பனீரை உபயோகிக்க இந்த முறை. முறையாக பனீர் செய்யு)
  • அரிசியைக் கழுவி, பனீர் வடித்த நீர் 2 கப் சேர்த்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும்.
  • இஞ்சி, வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • பச்சை மிளகாய், குடமிளகாயை மெலிதான நீளதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் நெய்யைச் சூடாக்கி, கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, நிலக்கடலை, இலவங்கப் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் என்ற வரிசையில் தாளிக்கவும்.
  • தொடர்ந்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை,  வெங்காயம், குடமிளகாய், மாங்காய்த் துருவல், தேங்காய்த் தூருவல் என்ற வரிசையில் ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.
  • தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, இறுதியில் பனீரும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். (உப்பு, மஞ்சளை கலவையிலேயே சேர்த்துவிடுவது, சாதத்தில் அவை சீராகப் பரவ உதவும்.)
  • உதிராக வடித்து வைத்துள்ள சாதத்தை உடைக்காமல் மென்மையாக நன்கு கலந்து, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.

ஆடிப் பெருக்கை முன்னிட்டு வாசிக்க….

கட்டுரை: ஒரு நதியின் நசிவு

கவிதை: நதி நீராலானது மட்டுமல்ல

புளி சேர்க்காமல் தயாரிக்கும் ரசம். புளி ஆகாத ஏதாவது நாட்டு மருந்து சாப்பிடும் நாளில் அல்லது அதிகப் புளி சேர்த்து வேறு குழம்பு, கூட்டு வகைகள் செய்யும்போது ரசத்தை இந்த முறையில் தயாரித்துக் கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:

தக்காளி – 4
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை
பருப்புத் தண்ணீர் – 2 கப்

வறுத்து அரைக்க:

எண்ணெய் – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
மிளகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1/2 டீஸ்பூன் (விரும்பினால்)
தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்

தாளிக்க:  எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

poriththa rasam

செய்முறை:

  • எண்ணெயில் காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகை சிவக்க வறுத்து, தேங்காய்த் துருவல், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒன்றரை கப் தண்ணீரில் இரண்டு தக்காளிப் பழங்களை நன்கு மசித்துக் கொள்ளவும்.
  • மீதமிருக்கும் தக்காளிகளை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூளையும் தக்காளிக் கரைசலுடன் சேர்த்து அடுப்பில் வேகவைக்கவும்.
  • தக்காளி வெந்ததும், பருப்பு வேகவைத்த தண்ணீர், அரைத்த விழுது சேர்த்து பொங்கி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  • சிறிது எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.

விழுது சேர்த்ததும் ரசத்தை அதிகம் கொதிக்கவைக்கக் கூடாது. பொங்கிவந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும். இப்படிச் செய்தால் மண்டி தங்காமல் பரிமாறும்போது அடிவரை கலந்தே பரிமாறலாம். இதனால் அரைத்துவிட்ட பொருள் வீணாகாமல், சுவையும் குறையாமல் இருக்கும்.

தேவையான பொருள்கள்:

கெட்டித் தயிர் – 2 கப் (லேசாகப் புளித்தது)
தேங்காய்த் துருவல் – 1 கப்
பச்சை மிளகாய் – 5, 6
துவரம் பருப்பு – 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
மல்லி விதை – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
பெருங்காயம்
மஞ்சள் தூள்
உப்பு
கொத்தமல்லித் தழை

காய்கறி: முருங்கை, பூசணி, வெண்டை, சேம்பு, கத்தரிக்காய், பரங்கிக்காய்…. இவற்றில் ஏதாவது ஒன்று.

தாளிக்க: தேங்காயெண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

mOr kuzhambu [3]

செய்முறை:

  • துவரம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
  • எடுத்துக் கொண்டிருக்கும் காயை முக்கால் பதம் வேகவைத்துக் கொள்ளவும்.
  • ஊறவைத்த பருப்புகள், தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம், மல்லி விதை, சீரகம் எல்லாவற்றையும் சிறிது நீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • தயிரை நன்கு கட்டியில்லாமல் கடைந்து, தேவையான உப்பு, மஞ்சள் தூள், அரைத்த விழுது, வேகவைத்த காய் சேர்த்து நிதானமான தீயில் அடுப்பில் சூடாக்கவும். ஒன்றிரண்டு முறை மட்டும் கிளறி விடவும்.
  • பொங்கி வரும்போது தாமதிக்காமல் அடுப்பிலிருந்து இறக்கி, மல்லித் தழை சேர்க்கவும்.
  • தேங்காயெண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய், பருப்பு சாதம், அரிசி சேவை…

தேவையான பொருள்கள்:

வாழைத் தண்டு – 3 கப் (நறுக்கியது)
தேங்காய் – 1 மூடி
பச்சை மிளகாய் – 5, 6
கெட்டியான மோர் – 1 கப் (புளிக்காதது)
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு
பெருங்காயம்

தாளிக்க: தேங்காயெண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

vaazhiththaNdu (cut)vaazhaiththaNdu mOr koottu

செய்முறை:

  • வாழைத் தண்டை பட்டை, நார் நீக்கி, (கருக்காமல் இருக்க)மோர் கலந்த நீரில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிப் போடவும்.
  • தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் மோர் நீரிலிருந்து பிழிந்த வாழைத்தண்டு, மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேகவைக்கவும். அடிக்கடி திறந்து கிளறிவிடவும்.
  • முக்கால் பதம் வெந்ததும் (சீக்கீரம் வெந்துவிடும்.) அரைத்த விழுதைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்களுக்கு நிதானமான தீயில் வேகவைக்கவும்.
  • இறுதியில் கடைந்த மோர் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
  • தேங்காயெண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, மல்லித் தழை சேர்த்து உபயோகிக்கலாம். (அல்லது சிறிது சாதா எண்ணெயில் தாளித்துவிட்டு, மேலாக பச்சைத் தேங்காயெண்ணெய் சேர்க்கலாம்.)

* இதே போல் சௌசௌ, பூசணி, கோஸ் போன்ற காய்களிலும் தனித் தனியாகச் செய்யலாம். ஆனால் வாழைத் தண்டில் செய்யக் கூடிய மிகக் குறைந்த வகை தயாரிப்புகளில் இது முக்கியமானது.
 
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய், பருப்பு சாதம், எள் சாதம்…

எள் சாதம் தனியாகச் செய்திருக்கிறேன். வாழைத் தண்டு மோர்க் கூட்டும் தனியாகச் செய்திருக்கிறேன். எள் சாதத்திற்கு வாழைத்தண்டு மோர்க் கூட்டு என்பது எனக்குச் செய்தி. இந்த மேட்ச் ஃபிக்சிங் kallyanakamala அவர்கள் சொன்னது. இன்று செய்துபார்த்தேன். நன்றாக இருந்தது.

தேவையான பொருள்கள்:

பாகற்காய் – 1/4 கிலோ
கொத்துக்கடலை – ஒரு கைப்பிடி
புளி – சிறிய எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு – 1/4 கப்
தேங்காய் – 1/2 கப்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – சிறு கட்டி (விரும்பினால்)  

வறுக்க:
எண்ணெய்
காய்ந்த மிளகாய் – 4
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
தனியா – 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க: நல்லெண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

paakaRkaai pitlai

செய்முறை:

  • வெள்ளைக் கொத்துக்கடலை அல்லது சிறிய அளவு கருப்புக் கொத்துக்கடலை உபயோகிக்கலாம். ஊறவைத்த கொத்துக்கடலை, துவரம் பருப்பை குக்கரில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.
  • பாகற்காயை முற்றலாக இருக்கும் குடல் பகுதிகளை நீக்கி, சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • புளியை நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.
  • 2 டீஸ்பூன் எண்ணெயில், காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வெந்தயம், மிளகு, தனியா என்ற வரிசையில் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தேங்காயுடன் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • நறுக்கிய பாகற்காயுடன் வேகவைத்த கொத்துக்கடலை, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நிதானமான சூட்டில் புளிநீரில் வேகவைக்கவும்.
  • காய் வெந்ததும், வேகவைத்த துவரம் பருப்பு, அரைத்த விழுதைச் சேர்த்து சிம்மில் ஐந்து நிமிடங்கள் கொதிக்கவைக்கவும்.
  • விரும்பினால் வெல்லம் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள்  வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்.
  • இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சூடான நெய்(நல்லெண்ணெய்), பருப்பு சாதம்…
 

தேவையான பொருள்கள்:

இஞ்சி – 1/2 கப் (தோல்சீவி நறுக்கியது)
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 1
உளுத்தம் பருப்பு – 1 1/2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – 4 ஈர்க்கு
பெருங்காயம்
புளி – சிறு நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்

inji thuvaiyal 1inji thuvaiyal

செய்முறை:

  • இஞ்சியைத் தோல்சீவி, நன்றாகக் கழுவி, சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும்.
  • இஞ்சித் துண்டுகள், கறிவேப்பிலை சேர்த்து மேலும் சிறிதுநேரம் பச்சை வாசனை போகும்வரை வதக்கி இறக்கவும்.
  • தேங்காயைத் துருவல், புளி, பச்சைமிளகாயைக் கலந்து ஆறவைக்கவும்
  • ஆறியதும், உப்பு சேர்த்து சிறிது சிறிதாக நீர்தெளித்து கெட்டியாக கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

* வழக்கமாகச் சொல்வதுதான் என்றாலும்– காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும். இஞ்சி கறிவேப்பிலையை தனியாக வதக்கி, தேங்காய்த் துருவல் புளி, உப்பு, வறுத்ததிலிருந்து காய்ந்தமிளகாய் மட்டும் சேர்த்து அம்மியில் வைத்து கரகரப்பாக அரைத்து கடைசியில் வறுத்த உளுத்தம் பருப்பையும் வைத்து ஒன்றிரண்டாக அரைபடுமாறு ஒரு ஓட்டு அரைத்து எடுத்தால் சுவையாக இருக்கும். கல் உப்பு உபயோகிப்பது இன்னும் சுகம்.
 
* இந்தத் துவையலில் நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளிப்பது நல்லது என்று மருத்துவ உணவுக் குறிப்பு சொல்கிறது.

* விரும்பினால் அரை டீஸ்பூன் கடலைப் பருப்பு அல்லது துவரம் பருப்பும் சேர்த்து வறுத்துக் கொள்ளலாம்.

* பிரயாணங்களுக்கு எடுத்துச் செல்லும்போது தேங்காயையும் நன்கு வதக்கியே அரைத்து எடுத்துச் செல்லலாம். சீக்கிரம் கெடாது.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நல்லெண்ணெய் கலந்த சாதம், தயிர் சாதம், பொங்கல், உப்புமா….

தேவையான பொருள்கள்:

புடலங்காய்க் குடல் – 2 கப்
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2, 3
பச்சை மிளகாய் – 1
உளுத்தம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
பெருங்காயம்
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
கொத்தமல்லித் தழை
உப்பு – தேவையான அளவு

pudalangaai kudal

செய்முறை:

  • புடலங்காய் நறுக்கும்போது, உள்ளிருந்து நீக்கிய குடல் பகுதியை எடுத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், புளி, என்ற வரிசையில் சேர்த்து சிவக்க வறுத்து எடுத்துவைத்துக் கொள்ளவும்.
  • தனியாக பச்சை மிளகாய், கறிவேப்பிலையுடன் புடலைக் குடலையும் நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கினால், லேசாகச் சுண்டி, தண்ணீர் விட்டிருக்கும்.
  • வறுத்த பருப்புக் கலவையை உப்பு சேர்த்து, அப்படியே தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.
  • அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித் தழை, வதக்கிய குடல் பகுதியைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றினால் துவையல்.

* இதே மாதிரி பரங்கிக்காய்க் குடல், பொடியாக நறுக்கிய சௌசௌ தோல், இளம் பீர்க்கங்காய் தோல், போன்றவற்றிலும் தனித்தனியாகவோ, இவைகளில் இரண்டு மூன்றை சேர்த்தோ செய்யலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் சாதம், தேங்காய் சாதம். தயிர்சாதம்…..

புளி சேர்க்காமல் தேங்காய் சேர்த்து அரைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்தால், சட்னி மாதிரி பொங்கல், உப்புமா, சப்பாத்தி வகைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

மைசூர்பா செய்ததன் பரிகாரமாக கால் ஸ்பூன் நெய்யில் தேங்காய் பர்பி.

தேவையான பொருள்கள்:

தேங்காய்த் துருவல் – 1 கப்
சர்க்கரை – 1 கப்
பால் – 2 டேபிள்ஸ்பூன்
கோவா – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
ஏலப்பொடி
முந்திரி, பாதாம், பிஸ்தா –  தலா 4
குங்குமப்பூ

thengaai barfi

செய்முறை:

  • தேங்காயை அதன் அடிப்பாகம்(தோல்) இல்லாமல் வெண்மையான பாகத்தை மட்டும் துருவிக் கொள்ளவும்.
  • துருவிய தேங்காயை 2 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். (பொதுவாக துருவிய தேங்காயை அப்படியே பர்பி செய்தால் சாப்பிடும் போது முதலில் சர்க்கரை வாயில் கரைந்து, கடைசியில் தேங்காயைத் தனியாக சக்கையாய் சாப்பிட வேண்டியிருக்கும். அரைத்தால் அந்தப் பிரச்சினை இல்லை.)
  • அடுப்பில் வாணலியில், அரைத்த தேங்காய் விழுது, சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளற ஆரம்பிக்கவும்.
  • கிளறக் கிளற இறுகி வர ஆரம்பிக்கும்போது கோவா சேர்த்து மேலும் கிளறவும். பர்பி, மிகவும் தூளாக கரகரப்பாக இல்லாமல் இருப்பதற்கு இப்படி சிறிது கோவா சேர்த்தால் மென்மையாக வரும்.
  • வாணலியில் ஒட்டாமல் வரும்போது ஏலப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி அழுத்தாமல் பரத்தவும்.
  • மிகச் சிறிய துண்டுகளாக முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகளை நறுக்கி, குங்குமப்பூவும் சேர்த்து மேலே தூவி, கொஞ்சம் ஆறியதும் வில்லைகள் போடலாம்.

* விரும்பினால் திருமணம், இதர விசேஷங்களுக்கு விதவிதமான கலர் சேர்த்துக் கொள்ளலாம். விதவிதமான டிசைன்களிலும் வெட்டலாம். எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுக்கும்.

vinaayagar chathurthi_2006

தேவையான பொருள்கள்:

சொப்பு செய்ய:
பச்சரிசி – 1 கப்
தண்ணீர் – 2 1/2 கப்
உப்பு – 1 சிட்டிகை
நல்லெண்ணெய்
 
பூரணம் செய்ய:
தேங்காய்த் துருவல் – 1 கப்
வெல்லம் – 1 கப்
ஏலப்பொடி

செய்முறை:

சொப்பு:

inippu kozhukkattai_1 (vinaayagar chathurthi)

  • முதலில் பச்சரிசியை நன்கு கழுவி, 2 1/2 கப் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • அதே தண்ணீரையே விட்டு அரிசியை நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். நனைத்து வைத்த தண்ணீர் மீதமிருந்தால் அதையும் மாவுக் கரைசலிலேயே நீர்க்கக் கலந்து கொள்ளவும். (சொல்ல வருவது, மொத்தம் 1 கப் அரிசிக்கு 2 1/2 கப் தண்ணீர் சேர்ந்திருக்கவேண்டும்)
  • வாணலியில் மாவுக் கரைசலை விட்டு, இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய், சிட்டிகை உப்பு சேர்த்து நிதானமான தீயில் அடிப்பிடிக்காமல் கிளறவும்.
  • மாவு சேர்ந்து இறுகிவரும் வரை விடாமல் கிளறி (இப்போது பாதி வெந்து நிறம் மாறி இருக்கும்.) இறக்கி, ஒரு துணியில் சுற்றியோ அல்லது பாத்திரத்தில் மூடியோ ஆற வைக்கவும். மாவை திறந்துவைத்து காயவிடக் கூடாது.

பூரணம்:

inippu kozhukkattai_2 (vinaayagar chathurthi)

  • வெல்லத்தை கால் கப் தண்ணீருடன் அடுப்பில் வைத்து, நல்ல கம்பிப் பாகாக வைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய், ஏலப்பொடி சேர்த்து நன்கு சேர்ந்தாற்போல் வரும்வரை கிளறி இறக்கவும்.

கொழுக்கட்டை:

inippu kozhukkattai_3 (vinaayagar chathurthi)

  • ஆறிய அரிசி மாவை நன்றாகப் பிசைந்து, பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • நல்லெண்ணெய் தொட்டுக் கொண்டு கையில் மாவை வட்டமாகத் தட்டி, நடுவில் குழித்து, தேங்காய் பூரணத்தை ஒரு டீஸ்பூன் உள்ளே வைத்து நாலுபக்கமும் சேர்த்து மூடவும். மேலே கிரீடம் போல் இழுத்துவிடவும். அதிக அரிசிமாவு உச்சியில் இருந்தால் அதை எடுத்து விடலாம்.
  • எல்லாப் பக்கமும் ஒரே மாதிரி நன்றாக மூடியிருக்கவேண்டியது முக்கியம்.
  • செய்துவைத்த கொழுக்கட்டைகளை எண்ணெய் தடவிய இட்லித் தட்டில் வைத்து, குக்கரில் (இட்லி மாதிரி வெயிட் போடாமல்) பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும்.

inippu kozhukkattai_4 (vinaayagar chathurthi)

* அரிசிமாவை நான்ஸ்டிக்கில் வைத்துக் கிளறினால் சுலபமாக இருக்கும். மாவு நன்றாக சேர்ந்து வந்தபின்பும் மேலும் 2, 3 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருந்தால்(இது சாதா வாணலியில் அடிப்பிடிக்கும்; கருகும்.) மாவு நன்றாக, பந்து மாதிரி வந்துவிடும். இந்த முறையில் மாவுக்கு கொஞ்சம் இழுவைத் தன்மையும் வந்துவிடும். அதனால் கொழுக்கட்டை செய்யும் போது பிளக்காது. பிளந்தாலும் அந்த இடத்தில் இன்னும் சிறிது மாவு வைத்தாலும் சுலபமாகச் சேர்ந்து கொள்ளும்.

* சிலர் ஊறவைத்து உலர்த்திய அரிசியை மிஷினிலோ மிக்ஸியிலோ வறட்டு மாவாக அரைத்துவைத்துக் கொண்டு, 2 பங்கு தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் மாவைக் கொட்டிக் கிளறுவார்கள். ஆனால் அதில் இருக்கும் கட்டிதட்டிவிடக் கூடிய சாத்தியங்கள் மேற்சொன்ன முறையில் அறவே இல்லை.

* மிஷின் இல்லாமல், மிக்ஸியிலும் சரியாக அரைக்க முடியாதவர்கள், சல்லடையை ம்யூசியத்தில் தேடுபவர்கள், அதைவிட முக்கியமாக மேல்மாவு சரியாக கொழுக்கட்டை செய்ய வரவேண்டுமே என்று கவலைப்படுபவர்களுக்கெல்லாம் மேலே சொன்னதே ஆகச் சுலபமான முறை. தைரியமாகச் செய்து பார்க்கவும்.

* சிலர் பூரணத்திற்கு வெல்லம் குறைவாகச் சேர்ப்பார்கள். ஆனால் வெளியே இருக்கும் மேல்மாவு சப்பையாக இருப்பதால் பூரணம் நிறைந்த இனிப்புடன் இருப்பதே சாப்பிடும்போது சரியாக இருக்கும்.

* மேலே சொன்ன அளவில் சுமார் 50 கொழுக்கட்டைகள் வந்தன.

* பூரணத்தில் ஏலப்பொடி தவிர நம் விருப்பம் போல் முந்திரி, அரைத்த கடலைப்பருப்பு, கிஸ்மிஸ் என்றெல்லாம் சேர்த்துக் கொள்ளலாம். சனிதசைக்காக விநாயகருக்கு கொழுக்கட்டை செய்பவர்கள், இரண்டு டீஸ்பூன் எள் வறுத்தும் சேர்ப்பார்கள்.

* தேங்காய்ப் பூரணத்திற்குப் பதில் வறுத்த அரைத்த எள் ஒரு கப், வெல்லம் அரையிலிருந்து முக்கால் கப் சேர்த்து எள் கொழுக்கட்டையும் செய்யலாம்.

* தயாரித்த பூரணம் தீர்ந்து, சொப்பு மாவு மிஞ்சினால் அதில் மணிக் கொழுக்கட்டை செய்யலாம். பூரணம் மிஞ்சினால், சின்ன உருண்டைகளாக்கி, கரைத்த உளுத்த மாவில் தோய்த்து சுகியன் மாதிரி எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்.

* அரிசி மாவினால் தான் கொழுக்கட்டைக்கு சொப்பு செய்யவேண்டும் என்பதில்லை. மைதா மாவையும் தண்ணீரில் கரைத்து வேகவைத்துச் செய்யலாம். இன்னும் நன்றாக வரும்.

உப்புக் கொழுக்கட்டை

எனக்குத் தெரிந்து மற்ற குழம்பு வகைகள் இல்லாவிட்டாலும், இந்த மோர்க் குழம்பு மட்டும் எல்லா மாநிலங்களுக்குமென்று பிரத்யேகமாக ஒரு வகை இருக்கிறது. இன்று காளன். மற்றவை அப்புறம்.

தேவையான பொருள்கள்:

கெட்டியான தயிர் – 1 1/2 கப்
காய் – 15, 20 துண்டுகள் (பெரிது)
தேங்காய்த் துருவல் – 1 கப்
பச்சை மிளகாய் – 6, 7
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு (விரும்பினால்)
மஞ்சள் தூள்
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
தேங்காயெண்ணை
கொத்தமல்லித் தழை.

தாளிக்க: தேங்காயெண்ணை, கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

kaaLan - mOr kuzhambu 1 (kerala)

செய்முறை:

  • மிக லேசாகப் புளித்த, கெட்டியான (கொஞ்சம் க்ரீமியாகவும் இருந்தால் சுவையாக இருக்கும்) தயிரை தண்ணீர் சேர்க்காமல் கடைந்து கொள்ளவும்.
  • ஏதாவது காயை முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும்.
  • முற்றிய தேங்காயிலிருந்து எடுத்த தேங்காய்த் துருவல், (ஆனால் கொப்பரை மாதிரி காயாயதாக அல்லது துருவல் ஃப்ரிட்ஜில் வைத்ததாக இல்லாமல், புதிதாக உடைத்த தேங்காயாக இருந்தால் சரியாக இருக்கும்.) பச்சை மிளகாய், சீரகம், இஞ்சியை மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • கடைந்த தயிரில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், வேகவைத்த காய், அரைத்த விழுது சேர்த்து அடுப்பில் நிதானமான தீயில் வைக்கவும்.
  • மெதுவாகச் சூடேறி, பொங்கி வரும்போது பச்சைத் தேங்காயெண்ணை 2 டேபிள்ஸ்பூன் சேர்த்து, அடுப்பை அணைத்துவிடவும்.
  • வாணலியில் எண்ணையில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறலாம்.

* வெண்டை, கத்தரி, முருங்கை, வாழை, சேனை, சேப்பங்கிழங்கு என்று நாட்டுக் காயான எதையும் உபயோகிக்கலாம். எனக்குப் பிடித்தது பூசணிக்காய்.

* இன்னும் காரம் தேவை என்று தோன்றினால் தாளிக்கும்போது ஒரு காய்ந்த மிளகாய் அல்லது மிளகுத் தூள் சேர்த்துக் கொள்ளலாம். பொதுவாக நான் செய்வதில்லை.

* வாழை சேனை மட்டும் சேர்த்துச் செய்தால் தான் காளன். இது மோர்க் காளன் என்று சிலர் சொல்கிறார்கள். எப்படியும் இது மோர்க் குழம்பில் ஒரு வகை. அவ்வளவே. அப்புறம் நான் எப்பொழுதும் மோர்க் குழம்பு செய்வதும் இந்த முறையே. 

* அடுப்பில் வைக்காமலே மஞ்சள் தூள், உப்பு, காய், அரைத்த விழுது எல்லாம் சேர்த்து பச்சை மோர்க் குழம்பும் செய்கிறார்கள்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் பருப்பு கலந்த சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். எந்தக் காரக் கறி அல்லது பருப்பு உசிலியுடனும் சேரும். குழம்பிலிருக்கும் காய் தயிர்சாதத்திற்கு சுவையாக இருக்கும்.

அடை, இடியாப்பம், ஆப்பம் வகைகளுக்கும் இந்தக் குழம்பை தொட்டுக் கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப்
நெய் – 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 1 கப்
காய்ந்த மிளகாய் – 2
பச்சை மிளகாய் – 2, 3
கறிவேப்பிலை.
தோசை மிளகாய்ப் பொடி – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க – தேங்காய் எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சீரகம், பெருங்காயம்.
 

thengaai saadham

செய்முறை:

  • அரிசியை அளவாகத் தண்ணீர் வைத்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்தால் மேலும் ஒட்டாமல் இருக்கும்.
  • வாணலியில் தேங்காய் எண்ணை, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சீரகம், பெருங்காயம், இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • துருவிய தேங்காயையும் சேர்த்து லேசாக இளம் சிவப்பாகும் வரை வதக்கி, சாதத்தில் கொட்டி தேவையான உப்பும் சேர்த்து, சாதம் உடையாமல் கலக்கவும்.

* இது போன்ற வகை கலந்த சாதங்களுக்குத் தாளிக்கும்போது 1/2 டீஸ்பூன் எள் அல்லது சாதம் கலந்தபின் கடைசியில் 1/2 டீஸ்பூன் தோசை மிளகாய்ப் பொடி கலந்தால் மிகுந்த மணமாகவும் சுவையாகவும் இருக்கும். வழக்கம்போல் இதன் காப்பிரைட் எனக்கே சொந்தம். 🙂

* விருந்தினர் அல்லது பார்ட்டி மாதிரி நேரங்களில் நிலக்கடலைக்குப் பதில் முந்திரிப் பருப்பு உபயோகிக்கலாம். குழந்தைகளுக்கானதாக இருந்தால் கிஸ்மிஸ் கூட.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பொரித்த அப்பளம், வடாம், குருமா வகை.

போகிப் பண்டிகை, பொங்கல், கனுப் பொங்கல் நாள்களில் கிட்டத்தட்ட அனைத்துவிதமான நாட்டுக் காய்கறிகள், பச்சைப் பயறுகளையும் சமையலில் உபயோகித்துவிடுவோம். இப்போது காய்கறிக் கடைகளிலேயே எல்லாவற்றையும் நறுக்கிக் கலந்து தயாராகவும் கிடைக்கிறது. ஆனால் தனித் தனியாக வாங்கிச் செய்தால் நம் விருப்பப்படி தேவையான அளவுகளில் தேவையான நீளத்தில் நறுக்கிச் செய்யலாம்.

போகிப் பண்டிகைக்கு அவியல்…

தேவையான பொருள்கள்:

அவரை, கத்தரி, கொத்தவரங்காய், பரங்கி, பூசணி, புடலை, சேனை, வாழை, தட்டங்காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு……

பச்சைப் பட்டாணி, பச்சை மொச்சை, பச்சைக் காராமணி, நிலக்கடலை….

உருளைக் கிழங்கு, பீன்ஸ், கேரட், கோஸ், குடமிளகாய், முருங்கை,….(விரும்பினால் மட்டும். சிலர் நாட்டுக்காய் தவிர மற்றவை இந்த நாள்களில் சேர்ப்பதில்லை. ஆனால் பொதுவாக அவியலுக்கு இவையும் சுவை சேர்க்கும்.)

தேங்காய் –  1 (பெரிது)
பச்சை மிளகாய் – 10-12
சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப் பால் – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தயிர் –  2-3 கப்
தேங்காய் எண்ணை – 1/4 கப்

aviyal 1  aviyal 2
 
செய்முறை:

  • காய்களைக் கழுவி, பெரிய அளவுத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  • கத்தரிக்காய், முருங்கையை முக்கால் பதத்திற்கு வேகவைக்கவும்.
  • மற்ற அனைத்து காய், பயிறுகளையும் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நீர் சேர்க்காமல் குக்கரில் வேகவிடவும்.
  • தேங்காயைத் துருவி, பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த காய்கறிகள், அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போய், கலவை நன்றாக இறுகும்வரை கிளறவும்.
  • புளிப்பில்லாத கெட்டித் தயிராக எடுத்துக் கொள்ளவும். தயிர் கெட்டியாக இல்லாவிட்டால் மெல்லிய துணியில் அல்லது பனீர் வடிகட்டியில் வடிகட்டி ஓரளவு நீரைப் பிரித்துவிடவும்.
  • தேங்காய்ப் பால், தயிரையும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அடுப்பை அணைத்துவிடவும்.
  • மீதி தேங்காயெண்ணையைச் சேர்த்து, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

aviyal

* அவியல் தயாரிக்கும்போதே தண்ணீர் சேர்க்காமல், கெட்டியான தயிரில் செய்தால், வேறு மாவு சேர்க்கத் தேவை இல்லை. திட்டமான பதத்தில் வரும். சமாளிக்க முடியாத தளர்வாக இருந்தால் மட்டுமே அரிசி மாவு கரைத்து விடலாம். இது சுவையில் கொஞ்சம் சமரசமே.

(இன்று Vashi Fine Arts தயாரித்து அளித்த “தஞ்சாவூர் Vs பாலக்காடு” என்ற நாடகம் பார்க்கச் சென்றிருந்தோம். நடந்த அடிதடிகளைப் பார்த்தால்(நாடகக் கதையில்தான்) இதில் இன்னும் சில நுண்ணிய வேறுபாடுகள் இருக்கலாம். தெரிந்துகொண்டு update செய்கிறேன். சுவையைப் பொருத்தவரை ஓஓ… நான் கொறைச்சு பாலக்காடு பக்கம் சாய்வெனாக்கும்!.)

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய், பருப்புடன் கலந்த சாதம்(கூடவே பொரித்த அப்பளமும், வடையும் இருந்தால் கலக்கலாக இருக்கும்..), அடை,….