உன்பேரைச் சொன்னாலே
உள்நாக்கில் தித்திக்குமே
நீ எங்கே நீ எங்கே

உன்னோடு சென்றாலே
வழியெல்லாம் பூப்பூக்குமே
நீ எங்கே நீ எங்கே

ஒன்றா இரண்டா ஒரு கோடி நியாபகம்
உயிர் தின்னப் பார்க்குதே நண்பா
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
எங்கே நீ என் நண்பா…

வார்த்தைகள் இல்லாமல் வெறும் இசையை மட்டும் கேட்டால் இது சோகப் பாடல் என்று சத்தியம் செய்தாலும் நம்பமுடியாத நம்பிக்கையூட்டும் கார்த்திக் ராஜாவின் இசை. எத்தனையாவது தடவையாகவோ இன்று மீண்டும் சன் டிவி உபயத்தில் “டும் டும் டும்”. மயங்கவைக்கும் இசை, பாடல்கள், மண் வாசனையுடன் அந்த வட்டாரத் தமிழ், வழுக்காத திரைக்கதை, அனைவரது இயல்பான நடிப்பு, எல்லாவற்றையும் விட அசத்தும் ஜோ! (சவீதா, அனு உதவியுடன் தான்).. பார்த்து முடித்ததுமே இன்றைக்கு அல்வா என்று முடிவு செய்துவிட்டேன். சம்பா கோதுமைதான் ஒரு கடையிலும் கிடைக்கவில்லை. மாதுங்கா போனால் தான் கிடைக்குமாம். 😦

திருநெல்வேலி, தாமிரவருணிக்கும், அல்வாவுக்கும், நெல்லையப்பர் கோவிலுக்கும் பேர் போனது. முதலில் அல்வாவைப் பார்த்து விடலாம். நெல் மட்டுமே விளையும் ஒரு தேசத்தில் கோதுமையால் செய்யப்படும் வஸ்துவான அல்வா பிரபலப்படுத்தப் பட்டுள்ளது. ராஜஸ்தானில் இருந்து வந்தவர்கள் பழக்கியிருக்கிறார்கள். அவர்கள் முதலில் செய்து கடை போட்டு விற்க, இப்பொழுது ஊர் முழுக்க பிரதானமாக இருப்பது லாலாக் கடைகள் எனப்படும் அல்வாக் கடைகள்தான். ஆனால் திருநெல்வேலியில் விற்கப்படும் எல்லா அல்வாக் கடைகளிலும் ஒரிஜினல் அல்வா விற்கப்படுவதில்லை. இரண்டே இரண்டு கடைகள்தான் தரமான ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா விற்கிறார்கள். மற்றதெல்லாம் வழக்கம் போல டூப்ளிகேட்டுகள். மைதா மாவு, கோதுமை மாவில் அலுங்காமல் அல்வா செய்து விடுகிறார்கள். வீட்டிற்கு வாங்கிப் போய் வாய்க்குள் போட்டால் வாயை அப்புறம் திறக்கவே முடியாது. அப்படியே ஒட்டிக் கொள்ளும், ஆகவே சரியான கடையாகப் பார்த்து அல்வா வாங்க வேண்டும் இல்லையென்றால் நிஜமாகவே அல்வா கொடுத்து விடுகிறார்கள். அப்படிப் பிரபலமான இரண்டு அல்வாக் கடைகளில் ஒன்று, ‘இருட்டுக் கடை’ எனப்படும் பாடல் பெற்ற (சாமி படத்தில் திருட்டுக் கடை அல்வாதான் என்று பாடலில் இடம் பெற்ற) அல்வாக் கடை. இந்தக் கடை நெல்லையப்பர் கோவிலுக்கு முன்பாக மிகச் சிறியதாக உள்ளது. கடைக்கு பெயர் கிடையாது. லைட்டு கிடையாது, சாயங்காலம் கொஞ்ச நேரம் மட்டும் திறந்து வைத்து விற்பார்களாம். அதற்குள் ஏகக் கூட்டம் வந்து முண்டியடித்து வாங்கிக் கொண்டு போய் விடும்;  அப்புறம் மறுநாள்தான். நாங்கள் அந்தச் சமயத்தில் போகாததால் எங்களுக்கு அந்தக் கடையில் வாங்கும் பாக்யம் கிடைக்கவில்லை. இருட்டுக் கடையையும் , கடையில் அல்வாவை விற்பனைக்காக இறக்கி வைக்கப் பட்டிருக்கும் அல்வாவையும் புகைப் படங்களில் காணலாம் (இதுதான் நான் உங்களுக்கு கொடுக்கும் அல்வா).

— ச.திருமலை

தேவையான பொருள்கள்:

சம்பா கோதுமை – 200 கிராம்
சர்க்கரை – 750 கிராம்
நெய் – 400 கிராம்

சம்பா கோதுமை கிடைத்தபின் செய்து படம் இங்கே சேர்க்கப்படும். அதுவரை ச.திருமலையின் ஆல்பத்திலிருந்து எடுத்த இருட்டுக் கடை திருட்டு (அவரிடம் அனுமதி வாங்காமல் எடுத்ததால்) அல்வாவை வைத்து அட்ஜஸ் செய்து கொள்ளவும்.

thirunelveli iruttuk kadai halwa (ready for sales)

செய்முறை:

  • சம்பா கோதுமையை முதல் நாளே தண்ணீரில் ஊறவைத்து கிரைண்டரில் நன்றாக அரைக்க வேண்டும்.
  • நைசாக அரைக்க அரைக்க கோதுமை பாலாக வர ஆரம்பிக்கும். அதை ஒரு துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.
  • அடுப்பில் அடிகனமான கொஞ்சம் பெரிய வாணலியாக வைத்து, அதில் பாலை ஊற்றிக் காய வைக்கவும்.
  • பால் லேசாகச் சூடானதும், சர்க்கரைச் சேர்த்துக் கிளற ஆரம்பிக்க வேண்டும். கிளறுவதை இனி நிறுத்தவே கூடாது.
  • கலவை கொதித்து, இறுகி, கெட்டியான பதத்திற்கு வரும்போது, சுத்தமான நெய்யைச் சேர்த்துக் கிளற வேண்டும்.
  • விடாமல் கிளறிக்கொண்டே இருந்தால், அல்வா நல்ல குங்குமச் சிவப்பில் வரும்.
  • இறுகலான பக்குவத்தில் பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும், இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தி, ஆறவைத்து உபயோகிக்கலாம்.

* கல் உரல் அல்லது கிரைண்டரில் தான் அரைக்கலாம். மிக்ஸியில் அரைக்கக் கூடாது

* முந்திரி மாதிரி பருப்புகள், கலர் எதுவும் சேர்க்கக் கூடாது.

“இன்னிக்கு ஆத்திலே என்ன தளிகை?”“பொன்னா தளிகையை கேக்கணுமா? பருப்பு, உப்புச்சார், தக்காளி சாத்தமுது நிறைய கொத்துமல்லி போட்டு, வாழைக்காய் கறியமுது, அவியல், பொரிச்ச அப்பளம்.”— புலிநகக் கொன்றை (பி.ஏ. கிருஷ்ணன்)

பொன்னா நாங்குநேரி இல்லையா? நெல்லை மாவட்டத்துல உப்புச்சார் என்பது நீங்க சொன்ன மோர்ச் சாத்துமது மாதிரியேதான். கொஞ்சம் வித்தியாசம்.– நன்றி: ஜெயஸ்ரீ சூர்யநாராயணன்.

 

தேவையான பொருள்கள்:

தயிர் – 1 கப்
அப்பக்கொடி (அல்லது அதளக்காய் வற்றல் அல்லது மணத்தக்காளி வற்றல்)

வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 3
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்

அரைக்க:
தேங்காய்த் துருவல் – அரை கப்
சீரகம் – 1 டீஸ்பூன்

தாளிக்க – கடுகு, கறிவேப்பிலை.

uppuchchaar 3 - mOr kuzambu [2]

செய்முறை:

  • தயிரை நன்கு தண்ணீர் விடாமல் கடைந்து கொள்ளவும்.
  • காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, வெந்தயத்தை வாணலியில் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய் சீரகத்தை பச்சையாக அரைத்துக் கொள்ளவும்.
  • கடைந்த தயிரில் உப்பு, மஞ்சள் தூள், அரைத்த மசாலாக்களைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு, பொங்கிவரும்போது இறக்கவும்.
  • எண்ணையில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அப்பக்கொடியையும் கருக வறுத்துச் சேர்க்கவும்.

* அப்பக் கொடி – இது நெல்லை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கும் ஒரு கொடி வகை. அப்பக் கொடி சேர்ப்பது தான் முக்கியம். கிடைக்காத பட்சத்தில் மணத்தக்காளி வற்றல் வறுத்துச் சேர்க்கலாம்.

ஜெயஸ்ரீ, மிகவும் சுவையாக இருந்தது. அன்புத் தோழி வெந்தயம் சேர்க்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். ஆனால் வெந்தயம் தான் மேலும் சுவை சேர்த்தது. விழுங்கியதும் நாக்கினடியில் அதன் மணமும் கசப்பும் அருமை. மணத்தக்காளி வற்றல், வற்றல் குழம்பை விட இதில் தான் சுவையாக இருந்தது.

என் பக்கத்து இரண்டு கேள்விகள்:

இதில் காய் சேர்க்கக் கூடாதா? (என் பெண்)

தாமரைக் கொடி வற்றலைத் தான் அப்பக்கொடின்னு சொல்லுதாங்களோ? (எங்க கடைக்கார அண்ணாச்சி)

தொடர்புடைய இன்னொரு சுட்டி: அன்புத்தோழி

இதுவும் ஒரு திருநெல்வேலி பக்கக் குழம்பு. நன்றி: ச.திருமலை

தேவையான பொருள்கள்:

புளி – எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை
உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 5
மிளகு – 1 டீஸ்பூன்.

அரைக்க:
தேங்காய் – 1/4 மூடி
மிளகாய் வற்றல் – 2
சீரகம் – 1 டீஸ்பூன்.

தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயம்.
 

thengaai seeraga kuzambu

செய்முறை:

  • புளியைக் கரைத்துக் கொள்ளவும்.
  • காய்ந்த மிளகாய் மிளகை சிறிது எண்ணையில் வறுத்து, பொடிக்கவும்.
  • தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், சீரகத்தை அப்படியே விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணை வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, காயை சேர்த்து வதக்கவும்.
  • அதில் சிறிது தண்ணீர் விட்டு, உப்பு, மஞ்சள் தூள், அரைத்த பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
  • சிறிது கொதித்ததும், புளித் தண்ணீர் சேர்க்கவும்,
  • புளி கொதித்ததும், அரைத்த விழுதையும் போட்டு, மேலும் ஒரு கொதி விட்டு இறக்கவும்.

* தண்ணீர் அதிகமாக இருந்தால், சிறிது அரிசி மாவை கரைத்துச் சேர்க்கலாம்.
 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இந்தக் குழம்புடன் பருப்பு உசிலி நல்ல காம்பினேஷனாக இருக்கும்.

மோர் சாதத்துக்கு இந்தக் குழம்பு அமிர்தமாக இருக்கும். [இருந்தது. :)]