அசோகா – 1 

[“அறுசுவை அரசு” நடராஜய்யர் சகோதரர் ஞானாம்பிகா ஜெயராமய்யர்]

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 100 கிராம்
சர்க்கரை இல்லாத கோவா – 100 கிராம்
சர்க்கரை – 400 கிராம்
சம்பா கோதுமை மாவு – 100 கிராம்
நெய் – 100 கிராம்
ஏலக்காய் – 5
முந்திரிப் பருப்பு – 10
கிஸ்மிஸ் – 10 கிராம்

 

செய்முறை:

  • பயத்தம் பருப்பை கடாயில் பொன்வறுவல் வறுத்து தண்ணீரில் ஊறவைக்கவும்.
  • சிறிதுநேரம் ஊறியபின் நன்றாகக் களைந்துவிட்டு, அதை கெட்டியாக வரும் அளவிற்கு தண்ணீர் வைத்து குக்கரில் வேகவைக்கவும்.
  • வேகவைத்த பருப்பில் சர்க்கரையைப் போட்டு, கடாயில் நன்றாக அல்வா மாதிரி கிளறவேண்டும்.
  • அல்வா நல்ல பதம் வந்ததும் இறக்கி, கோவாவைச் சேர்த்துக் கலந்துவைக்கவும்..
  • மற்றொரு கடாயில் நெய்யை வைத்து நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் போட்டு கொஞ்சம் சிவந்தவுடன் சம்பா கோதுமை மாவு சேர்த்து நன்கு வாசனை வரும் அளவிற்கு வறுத்து, அதனுடன் பருப்பு கோவாக் கலவை, ஆரஞ்சு கலர் சேர்த்துக் கிளறவும்.

இருபது வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூர், கும்பகோணம் போகும்போதெல்லாம் என் தந்தை வாங்கிவருவார். இப்பொழுது எல்லா இடங்களிலும் பிரபலம். முக்கியமாக திருமணம் மாதிரி விசேஷங்களில் மெனுவில் முக்கிய இடம் பெற்றுவிட்டது. 

 

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 1 கப்
பால் – 2 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 1 கப்
கேசரி பவுடர் (விரும்பினால்)
ஏலக்காய்
பச்சைக் கற்பூரம்
முந்திரி, பாதாம் வகைகள்

செய்முறை:

  • பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக்கொள்ளவும்.
  • பால் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேகவிடவும்.
  • குக்கர் திறக்கவந்ததும் சூட்டுடனே வெளியே எடுத்து,  நன்கு மசித்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் சர்க்கரை, மசித்த பயத்தம்பருப்பு கலந்து கிளறத் தொடங்கவும்.
  • முதலில் சர்க்கரையால் நெகிழ்ந்து, பின் கலவை இறுக ஆரம்பிக்கும்.
  • சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்து விடாமல் கிளறவும்.
  • நன்கு சேர்ந்து ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.
  • இறக்குவதற்கு சற்றுமுன் கலர் (நான் சேர்க்கவில்லை.), ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், உடைத்த அல்லது நொறுக்கிய கொட்டைப் பருப்புகள் சேர்க்கவேண்டும்.

* பல தளங்களில் கோதுமை மாவு ஒரு பங்கு சேர்ப்பதாக இருக்கிறது. இது எனக்குச் செய்தி. ஒருவேளை இப்பொழுது திருமணம் மாதிரி பெரிய விசேஷங்களிலும் செய்வதால் அளவிற்காக கோதுமை மாவு சேர்க்கிறார்களா என்று தெரியவில்லை. எதற்கும் சேர்க்காமல் ஒருமுறை செய்துபார்த்து அதன் ஒரிஜினல் சுவையை அனுபவித்துவிட்டு விரும்பினால் மாவு சேர்த்தும் செய்யலாம் என்பது என் அக்கறை கலந்த ஆலோசனை.

* எனக்கு இந்த முறையே வசதியாக இருப்பதாலும் பிடித்திருப்பதாலும் ஒவ்வொரு தீபாவளிக்கு முன்தினமும் (லக்ஷ்மி பூஜைக்கு பயத்தம்பருப்பு சேர்த்து செய்யநினைத்து) இருக்கிற பூஜை, கொண்டாட்ட நெருக்கடியில் விரைவாகச் செய்யமுடிவதாலும் இப்படியே செய்துவருகிறேன்.

* அறுசுவை நடராஜன் குறிப்பு ‘சம்பா‘ கோதுமை மாவு சேர்த்தது; பாலுக்கு பதில் கோவா. அடுத்து வருகிறது.

தேவையான பொருள்கள்:

மைதா – 2 கப்
வெண்ணெய் – 100 கிராம்
பேக்கிங் பவுடர் – 1/4 டீஸ்பூன்
சமையல் சோடா – 1 சிட்டிகை
தயிர் – 2 டீஸ்பூன்
சர்க்கரை – 4 கப்
தண்ணீர் – 2 கப்
எலுமிச்சைச் சாறு
ஏலக்காய் – 5 (அல்லது வேறு எசென்ஸ்)
கேசரிப் பவுடர் அல்லது வேறு கலர் – விரும்பினால்

 

செய்முறை:

  • ஒரு அகலமான பாத்திரத்தில் மைதாவுடன் பேக்கிங் பவுடர், சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்..
  • வெண்ணெய், (ஃப்ரிட்ஜில் இருந்தால் அறைச்சூட்டிற்குக் கொண்டுவரவும்.) தயிர் சேர்த்து நன்கு கையால் பிசிறவும்.
  • தேவைப்படும் அளவு மட்டும் (மிகக் குறைவாகவே தேவைப்படும்.) தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்திற்குப் பிசைந்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு நன்கு அடித்துப் பிசையவும். நல்ல பாடல் கேட்டுக்கொண்டே*** செய்தால் சிரமம் தெரியாது.
  • பிசைந்த மாவை அப்படியே பத்து நிமிடங்களுக்கு வைத்துவிட்டு அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஜீரா தயாரிக்கவும்.
  • சர்க்கரை கரைந்து கையில் ஒட்டும்பதம் வரும்போது (பாகுப் பதம் வந்துவிடக் கூடாது.) அடுப்பை அணைத்து, ஏலப்பொடி, எலுமிச்சைச் சாறு, விரும்பினால் நிறப்பொடி கலந்து ஆறவிடவும்.
  • (பாதுஷாவின் உருவம் அவரவர் விருப்பம்தான். எனவே நான் படத்தில் உள்ளபடி செய்திருப்பதை மட்டும் சொல்கிறேன்.) பிசைந்துவைத்துள்ள மாவில் பாதியை எடுத்து தடித்த சப்பாத்தியாக உருட்டிக்கொள்ளவும்.
  • ஒரு வட்ட மூடியை எடுத்து சப்பாத்தியில் வட்டங்களை வெட்டிக்கொள்ளவும். வட்டங்கள் தவிர்த்து பிற மாவை நீக்கிவிடவும்.
  • இன்னொரு உள்வட்ட மூடியால் அந்த வட்டங்களின் நடுவே லேசாக மேலாக அழுத்தவும். (அடிவரை அழுத்தி உடைத்துவிடக் கூடாது.) ஒரு பிளாஸ்டி ஃபோர்க்கால் வெளிப்பகுதியில் கோடுகளும், உள் வட்டத்தில் புள்ளிகளும் அதிகம் அழுத்தாமல் குத்திக்கொள்ளவும். இப்படியே மொத்த மாவையும் தயாரித்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும், ஒரு சிறு உருண்டையைப் போடவும். உருண்டை கொதித்து, பொரிப்பொரியாக மேலே வந்தால் அதுவே எண்ணெய்ச் சூட்டின் சரியான பதம்.
  • அடுப்பை அணைத்துவிட்டு ஒவ்வொரு பாதுஷாவாக- சுமார் ஏழு அல்லது எட்டு-  மெதுவாக எண்ணெயில் போடவும். போட்டவுடனே அடியில் போய், பின் ஒவ்வொன்றாக மேலே வர ஆரம்பிக்கும்.
  • எல்லா பாதுஷாவும் மேலே வந்துவிட்டதா என்று சரிபார்த்தபின்பே அடுப்பைத் திரும்ப எரியவிட்டு சிம்மில் வைக்கவும்.
  • பொறுமையாக அவ்வப்போது திருப்பிவிட்டு நிதானமாக  இரண்டு பக்கமும் பொன்னிறமாகும்வரை வேகவிட்டு எடுக்கவும். 
  • சில நொடிகள் வடிதட்டில் வைத்து எண்ணெயை வடித்துவிட்டு சூட்டுடனே, ஆறிய பாகில் மெதுவாகப் போடவும்.
  • பதினைந்து இருபது நிமிடங்கள் நன்கு ஊறி, பாதுஷா மிருதுவானவுடன் வேறு பாத்திரத்தில் எடுத்துவைக்கவும்.
  • 

* விரும்பினால் பாகின் பிசுபிசுப்பு ஆறுவதற்குள் பாதுஷாக்களின் மேல் பொடிப்பொடியாக உடைத்த முந்திரி, பாதாம், பிஸ்தா, வெள்ளரிவிதை, குங்குமப்பூ போன்றவற்றைத் தூவலாம்.

* மேல் அலங்காரங்கள் இல்லாமல் சாதாரண வட்ட பாதுஷாவேகூட செய்துகொள்ளலாம். அது அதிக அளவில் செய்யும்போது வேகமாகச் செய்யவும் உதவும். ஆனால் அவற்றிலும் டூத்பிக் அல்லது ஃபோர்க்கால்- அடிவரை அழுத்தாமல்- மேலாகப் புள்ளிகள் குத்திக்கொள்வது அவசியம். இது எண்ணெய், ஜீரா உள்ளேபோய் முறையே நன்குவேக, சுவையைக்கூட்ட உதவும்.

* மீதமிருக்கும் ஜீராவை பாதுஷாக்களின் மேலாக இன்னும் கொஞ்சம் விடலாம். ஆனால் மீதியிருக்கிறது என்பதற்காக மொத்த ஜீராவையும் அளவுக்கு அதிகமாக விட்டுவிடக் கூடாது. அப்படிச் செய்தால் ஆறியதும் பூத்தாற்போல் இருக்கும் பாதுஷாக்கள் மேலே பாளம் பாளமாக  வெள்ளையாக- அதிகமான ஜீரா தனியாக வந்து சுவையைக் கெடுக்கும். ஜீரா தேவையான அளவு மட்டும் விட்டால் சரியாக பாதுஷாமேல் வெள்ளையாகப் பூத்துக்கொண்டு அழகாகவும், உண்பவருக்கு ஓவர் சர்க்கரை என்ற பீதியில்லாமலும் இருக்கும். ஜீரா மீதமிருந்தால் பாயசம் செய்ய உபயோகிக்கலாம்.

*** இப்பொழுதெல்லாம் பாடல் கேட்கும்போது அதை ரசிக்கமுடியாமல், இளையராஜா, “நீ நல்லவளா கெட்டவளா?” என்று கேட்டுப் போகிறார். [“யாரோ உழைக்க யாரோ அனுபவிக்கறாங்க. ஓசியில டவுண்லோடு பண்ணி இதமா கேக்குறீங்களே… அதெல்லாம் யாரோட உழைப்பு? மனசாட்சியைக் கேளுங்க, பண்றது நியாயமான்னு?” – இளையராஜா, குங்குமம் 08/11/2010 😦 ]

தேவையான பொருள்கள்:

முந்திரிப் பருப்பு – 3/4 கப்
பாதாம் பருப்பு – 3/4 கப்
கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன்
பால் – 3/4 லிட்டர்
சர்க்கரை – 1 1/2 கப்
நெய் – 1 கப்
ஏலக்காய் – 5

munthiri badam cake

செய்முறை:

  • பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து தோல்நீக்கி, காயவைத்துக் கொள்ளவும்
  • முந்திரி, பாதாம் பருப்பை மிக்ஸியில் மென்மையாகப் பொடித்துக்கொள்ளவும்.
  • பாலை அடுப்பில் வைத்து சேர்ந்தாற்போல் திரிதிரியாய் வரும் பதத்திற்குக் காய்ச்சிக்கொள்ளவும். (முற்றிலும் இறுகவேண்டாம்.)
  • அதே நேரத்தில் இன்னொரு அடுப்பில் வாணலியில் சர்க்கரையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, (தேவைப்பட்டால் சர்க்கரை கரைந்ததும் சிறிது பால்சேர்த்து அழுக்கு நீக்கி) ஒற்றைக் கம்பிப் பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
  • பாகு வந்தவுடன் பருப்புப் பொடிகள், கடலைமாவை சிறிது சிறிதாகத் தூவிக் கிளறிக்கொண்டே இருக்கவும்.
  • எல்லாப் பொடியும் கலந்து, கலவை சேர்ந்தாற்போல் வரும்போது, பால்கோவாவையும் கலந்து கிளறவும்.
  • ஏலப்பொடி தூவி, நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்த்து, தொடர்ந்து கிளறவும்.
  • நெய் பிரிந்து, கலவை ஒட்டாமல் சேர்ந்துவரும்போது நெய்தடவிய தட்டில் கொட்டி, லேசான சூடு இருக்கும்போதே வில்லைகள் போட்டு, ஆறியதும் எடுத்துவைக்கவும்.

தேவையான பொருள்கள்:

பாதாம் பருப்பு – 1 கப்
முந்திரிப் பருப்பு – 10
சர்க்கரை – 1 கப்
நெய் – 1/2 கப்
ஏலக்காய் – 3
ஜாதிக்காய்ப் பொடி
குங்குமப் பூ
கேசரி கலர்
வெள்ளரி விதை – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

  • பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து தோலுரித்துக் கொள்ளவும்.
  • முந்திரிப்பருப்பை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
  • இரண்டு பருப்புகளையும் சிறிது தண்ணீர் சேர்த்து மிகமிக அதிக மென்மையான விழுதாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் சர்க்கரையுடன் அரைகப் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சவும்.
  • சர்க்கரை கரைந்ததும், அரைத்த விழுதையும் சேர்த்து, கைவிடாமல் கிளற ஆரம்பிக்கவும். [சர்க்கரை கரைந்ததும், தேவைப்பட்டால் 2 டீஸ்பூன் பால் சேர்த்து, மேலே வரும் அழுக்கை நீக்கிவிடவும்.]
  • சேர்ந்தாற்போல் வரும்போது 1 டேபிள்ஸ்பூன் பாலில் குங்குமப்பூ, கேசரி கலர், ஏலப்பொடி, ஜாதிக்காய்ப் பொடி, பச்சைக் கற்பூரம் கரைத்து, கலவையில் சேர்க்கவும்.
  • கலவை இறுக ஆரம்பித்ததும் சிறிது சிறிதாக நெய் சேர்த்துக் கிளறவும்.
  • நெய் வெளிவந்து ஒட்டாமல் கலவை வரும்போது, அடுப்பிலிருந்து இறக்கி, வெள்ளரி விதை கலக்கவும். 
  • 

* பொதுவாக பாதாம் அல்வா திகட்டும் இனிப்பாக இல்லாமல் இருக்கவேண்டும். விரும்புபவர்கள் இன்னும் 1/4 கப் சர்க்கரை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அது பாதாமை உணரமுடியாமல் செய்துவிடும். 

* இந்த அல்வாவுக்கு முந்திரி, பாதாம் கொண்டு அலங்கரிப்பது பிள்ளையாரைக் கிள்ளி பிள்ளையாருகே நைவேத்தியம் செய்வதுபோல். அதனால் வெள்ளரி விதை மட்டும் போதும்.

* கிராண்ட் ஸ்வீட்ஸ் பாதாம் அல்வா— பாதாம் பருப்பு 200 கிராம், சர்க்கரை 400 கிராம், நெய் 200 கிராம், முந்திரிப் பருப்பு தேவையில்லை ; ரவைப் பதத்திற்கு அரைக்கவேண்டும்.

* ஆயிரம்தான் பாதாம் பருப்பிலேயே அல்வா செய்தாலும் சுவையில் கோதுமை அல்வாவை அடித்துக்கொள்ள ஆளில்லை. அல்வாக்களில் ராணி கோதுமை அல்வா. எனக்கு பாதாம் பருப்பு, அப்படியே சாப்பிடுவதே சுவையாக இருக்கிறது.

தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 1 கப்
சர்க்கரை – 1 கப்
உப்பு – 1 சிட்டிகை
டால்டா – பொரிக்க (அல்லது நெய்/எண்ணெய்)
முந்திரிப் பருப்பு – 10
கிஸ்மிஸ் – 20
டைமண்ட் கல்கண்டு – 1 டேபிள்ஸ்பூன்
கிராம்பு
ஏலக்காய் – 4
பச்சை கற்பூரம் – 1 சிட்டிகை
மஞ்சள் கலர்

பூந்தி லட்டு

 

செய்முறை:

  • கடலை மாவைக் கட்டிகளில்லாமல் நன்கு சலித்துக்கொள்ளவும்.
  • சிட்டிகை உப்பு சேர்த்து, தேவையான நீர் கலந்து தோசைமாவு பதத்திற்குக் கரைத்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் டால்டாவைக் (அல்லது நெய்யைக்) காயவைக்கவும்.
  • பூந்திக் கரண்டி அல்லது துளைகள் உள்ள வேறு ஏதாவது பாத்திரத்தின் உட்புறமாக சிறிது எண்ணெய் தடவிவிட்டு, காய்ந்த டால்டாவிற்கு நேராகப் பிடித்து, மாவை சிறிதுசிறிதாக விட்டால் முத்துமுத்தாக விழ ஆரம்பிக்கும். (விடும்போது டால்டா நன்கு காய்ந்து, தீ மிதமான சூட்டில் இருக்கவேண்டும். குறைவான சூடோ, தீயோ இருந்தால் பூந்தி ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும்.)
  • வாணலியில் டால்டா நிறைத்து பூந்தி விழுந்ததும் நிறுத்திவிட்டு, திருப்பிவிட்டு வேகவிடவும்.
  • காராபூந்திக்குச் செய்வதுபோல் மிகவும் கரகரப்பாக ஆகும்வரை காத்திருக்காமல், வெந்ததும் சிறிது முன்கூட்டியே மென்மையான பதத்தில் எடுத்து, வடிதட்டில் கொட்டி உபரி டால்டாவை வடிக்கவும்.
  • ஒரு கனமான வாணலி அல்லது உருளியில் சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். ஒற்றைக் கம்பிப் பாகுப் பதத்திற்கு சிறிது கூடவே கொதிக்கவிட்டு ஆனால் இரட்டைக் கம்பிப் பதம் அளவு கெட்டியாகாமல் இறக்கிவிடவும். இறக்குமுன், ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ், ஒன்றிரண்டாக உடைத்த கிராம்பு, மஞ்சள் நிறம் சேர்த்துவிடவும்.
  • பாகில் டைமண்ட் கல்கண்டு, பூந்தியைக் கலந்து, கலவையில் சிறிது சூடு இருக்குப்போதே கையில் நெய்யைத் தடவிக்கொண்டு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துவைக்கவும்.

* காய் (கூம்பு) பிடிக்க நினப்பவர்கள் இங்கே சொல்லியிருப்பதைப் போல் இந்தக் கலவையிலும் காய் பிடித்துக்கொள்ளலாம்.

* ரிஃபைண்ட் எண்ணெயிலும் பூந்தியைப் பொரிக்கலாம். ஆனால் இனிப்புகளுக்கு நெய் அல்லது டால்டாவே சுவையைக் கூட்டிக் கொடுக்கும். நெய், லட்டைக் கொஞ்சம் மென்மைப்படுத்திவிடும். டால்டாவில் பொரிப்பதால் கூடுதல் மொறுமொறுப்புடன் லட்டு சுவையாக இருக்கும்.

* பச்சைக் கற்பூரம் சேர்ப்பதுதான் வீட்டுத் தயாரிப்பு என்பதன் முக்கிய அடையாளம். கொஞ்சம் உம்மாச்சி வாசனையும்.

* கிராம்பு பிடிக்காதவர்கள், ஒற்றைக் கிராம்பை உச்சியில் செருகிவிட்டால் விரும்புபவர்கள் மட்டும் சாப்பிடலாம்; மற்றவர்கள் தவிர்க்கலாம். ஆனால் என்னைப் பொருத்தவரை கிராம்பு தவிர்க்கக் கூடாத, லட்டிற்கு மட்டுமே பிரத்யேகமான முக்கியச் சுவை/வாசனை.

ஏற்கனவே சொல்லியிருக்கும்  பாகு செலுத்திச் செய்யும் அப்பம் தான் கார்த்திகைக்கும் செய்வார்கள். ஒரு மாறுதலுக்காக இதையும் நான் அடிக்கடி செய்வேன்.

paal appam 1

தேவையான பொருள்கள்:

ரவை – 1 கப்
மைதா – 1 கப்
சர்க்கரை – 1 கப்
பால் – 1 கப்
தேங்காய் – 2 பத்தை
ஏலப்பொடி
எண்ணெய்

செய்முறை:

  • ரவை, மைதா, சர்க்கரை, பால், ஏலப்பொடி எல்லாவற்றையும் சொல்லியிருக்கும் அளவு மட்டும் கலந்து, கையால் கட்டியில்லாமல் கரைத்து, (சர்க்கரையைக் கரைக்க வேண்டாம், அதுவே கரைந்துவிடும்.) அப்படியே 4 மணி நேரம் வைக்கவும்.
  • இரண்டு பத்தை தேங்காயை மெலிதாக, பொடிப் பொடியாகக் கீறிக் கொள்ளவும்.
  • நான்கு மணி நேரம் கழித்து தேங்காயையும் கலவையில் கலந்து, தேவைப்பட்டால் இன்னும் சிறிது பால் கலந்து கெட்டியான அப்ப மாவுப் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, ஒரு கரண்டியால் சிறிது சிறிதாக மாவை எடுத்துவிட்டு, நிதானமான குறைந்த தீயில் இருபுறமும் பொன்னிறமாகச் சிவந்ததும் எடுக்கவும்.

paal appam 2

* சனிக்கிழமை போன்ற நாள்களில் ஒரு டீஸ்பூன் வறுத்த எள்ளும் சேர்த்துக் கொள்ளலாம்.

* அப்பத்திற்கு கொஞ்சம் அதிக எண்ணெயும் அதிகப் பொறுமையும் குறைந்த தீயும் தேவை. எண்ணெயை அதிகம் குடிக்காது. ஆனால் அதிக எண்ணெய் இருந்தால் நன்றாக அசைந்து மூழ்கி, வேகும்.

* புதிதாகச் செய்பவர்கள், பாகு, பதம் என்றெல்லாம் குழம்புபவர்கள், ஆண்கள் கூட இதைச் சுலபமாகச் செய்யலாம். மேலே மொறுமொறுப்பாகவும், உள்ளே மென்மையாகவும் சுவையாக இருக்கும். திகட்டாது.

* அப்பக்குழியிலும் செய்யலாம்.

மைசூர்பா செய்ததன் பரிகாரமாக கால் ஸ்பூன் நெய்யில் தேங்காய் பர்பி.

தேவையான பொருள்கள்:

தேங்காய்த் துருவல் – 1 கப்
சர்க்கரை – 1 கப்
பால் – 2 டேபிள்ஸ்பூன்
கோவா – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
ஏலப்பொடி
முந்திரி, பாதாம், பிஸ்தா –  தலா 4
குங்குமப்பூ

thengaai barfi

செய்முறை:

  • தேங்காயை அதன் அடிப்பாகம்(தோல்) இல்லாமல் வெண்மையான பாகத்தை மட்டும் துருவிக் கொள்ளவும்.
  • துருவிய தேங்காயை 2 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். (பொதுவாக துருவிய தேங்காயை அப்படியே பர்பி செய்தால் சாப்பிடும் போது முதலில் சர்க்கரை வாயில் கரைந்து, கடைசியில் தேங்காயைத் தனியாக சக்கையாய் சாப்பிட வேண்டியிருக்கும். அரைத்தால் அந்தப் பிரச்சினை இல்லை.)
  • அடுப்பில் வாணலியில், அரைத்த தேங்காய் விழுது, சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளற ஆரம்பிக்கவும்.
  • கிளறக் கிளற இறுகி வர ஆரம்பிக்கும்போது கோவா சேர்த்து மேலும் கிளறவும். பர்பி, மிகவும் தூளாக கரகரப்பாக இல்லாமல் இருப்பதற்கு இப்படி சிறிது கோவா சேர்த்தால் மென்மையாக வரும்.
  • வாணலியில் ஒட்டாமல் வரும்போது ஏலப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி அழுத்தாமல் பரத்தவும்.
  • மிகச் சிறிய துண்டுகளாக முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகளை நறுக்கி, குங்குமப்பூவும் சேர்த்து மேலே தூவி, கொஞ்சம் ஆறியதும் வில்லைகள் போடலாம்.

* விரும்பினால் திருமணம், இதர விசேஷங்களுக்கு விதவிதமான கலர் சேர்த்துக் கொள்ளலாம். விதவிதமான டிசைன்களிலும் வெட்டலாம். எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுக்கும்.

இந்தப் பெயரைக் கேட்டாலே சலிப்பில் ஓடிவிடும் அளவுக்கு கோவையில் இருந்த போது இது வீடு நிறைந்து இருக்கும். ஒவ்வொரு முறையும் கடையில் சிரத்தையாக, “‘மைசூர்பாகு’ன்னு சொல்லாதீங்க, ‘மைசூர்பா’ன்னு சொல்லுங்க” என்று திருத்துவார்கள். அப்போது பல ஊர்களில் கிடைக்காமல் இருந்ததால் வெளியூரில் யார் வீட்டுக்குப் போனாலும் சாய்ஸே இல்லாமல் இதை மட்டுமே வாங்கிப் போகவேண்டி இருந்தது. ஆனால் மிகச் சுலபமாகச் செய்யக் கூடிய ஒரு இனிப்பு இந்த மைசூர்பா தான். பல வருடங்களாக, கடையில் வாங்குவதையே நிறுத்திவிட்டேன்.

krishna mysorepa 1

தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 1 கப்
சர்க்கரை – 2 1/2 கப்
நெய் – 2 1/2 கப்

செய்முறை:

  • கடலை மாவை நன்கு சலித்து, மிக லேசாக 2, 3 நிமிடங்கள் மட்டும் வறட்டு வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.
  • நெய்யை லேசான தீயில் நன்றாக உருக்கி வைத்துக் கொள்ளவும்.
  • சர்க்கரையை சிறிது நீர் சேர்த்து, அடுப்பில் சிம்மில் வைத்து, முழுவதையும் கரைய விடவும். கரைவதற்கு முன் சூடு அதிகமானல் பாகு ஆகிவிடலாம். அதனால் தீயை மிகக் குறைந்த அளவிலேயே வைத்து முழுமையாகக் கரைக்க வேண்டும்.
  • சர்க்கரை கரைந்ததும், கடலைமாவை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கட்டிகளில்லாமல் கலந்து கொள்ளவும். சலித்து வறுத்திருப்பதால் பெரிய பிரச்சினை ஆகாமல் கலந்துவிடும்.
  • மாவு கலந்து கொதிக்கத் தொடங்கியதும், நெய்யை நான்கைந்து பாகங்களாக தவணை முறையில் இறுக இறுக சேர்த்துக் கிளறவும்.
  • கடைசியில் எல்லா நெய்யும் சேர்த்தபின், கிளறிக்கொண்டே இருக்கையில் சேர்ந்தாற்போல் நன்கு கெட்டியாக ஒட்டாமல் வரும்போது, இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி ஒரு கரண்டியால் சீராகப் பரத்தி ஓரங்களை அழுத்தி விடவும். சிறிது நெய் தடவிய தட்டையான கரண்டியால் தடவினால் மேல்பாகம் வழவழப்பாகிவிடும்.
  • நன்கு ஆறியதும் கத்தியால் கீறி வில்லைகள் போடலாம். கடைகளில் கிடைப்பதுபோல் நீள் சதுரமாகவோ, வழக்கமான சதுரங்களாகவோ தான் செய்ய வேண்டும் என்றில்லை. பிள்ளையாருக்கான சின்ன மோதக அச்சில் கூட வார்த்து எடுக்கலாம். எல்லாவற்றிற்கும் எவ்வளவு நேரமானலும் கலவை வளைந்து கொடுக்கும். வாயில் கரையும்.

krishna mysorepa 2

* சுத்தமான நெய்யில் மட்டும் தான் செய்ய வேண்டும். மைசூர்பாகிற்க்குச் செய்வது போல் டால்டா உபயோகிக்கக் கூடாது.

* அதிகம் நெய்க்கு பயந்தவர்கள், 2 பங்கு மட்டும் நெய் சேர்த்தும் செய்யலாம். பெரிய வித்தியாசம் தெரியாது.
 
** சொல்ல மறந்தது, உடம்பைப் பார்த்துக் கொள்ளவும். அடிக்கடி உணவில் இஞ்சித் துவையல், மிளகு ரசம், கொள்ளுப் பொங்கல் என்று சமைத்துச் சாப்பிடவும். 🙂

தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 1 கப்
நெய் – 1 1/2 கப்
சர்க்கரை – 2
ஏலப்பொடி

[படம் மூன்று நான்கு மாதம் முன்பே செய்த போது எடுத்து வைத்திருந்த நியாபகம். எந்த ஆல்பம் என்று தேடி எடுத்துப் போடுகிறேன்; அல்லது புதிதாகச் செய்துதான் சேர்க்கவேண்டும். :(]

செய்முறை:

  • கடலை மாவை நன்கு கட்டியில்லாமல் சலித்து, வெற்று வாணலியில் மிக லேசாக இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலி அல்லது அடிகனமான உருளியில் சர்க்கரையுடன் 1 கப் தண்ணீர் சேர்த்துக் கரைய விடவும்.
  • இந்த நேரத்தில் இன்னொரு அடுப்பில் நெய்யை உருக்கி வைத்துக் கொள்ளவும்.
  • சர்க்கரை முழுவதும் கரைந்து, ஒற்றைக் கம்பிப் பாகு வந்ததும், கடலை மாவை சிறிது சிறிதாக சேர்த்துக் கொண்டே, கைவிடாமல் கட்டியாகாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
  • எல்லா மாவும் சேர்த்து, கட்டி எதுவும் இல்லாமல் மாவு மொத்தமாக சர்க்கரைக் கலவையில் கலந்ததும், பக்கத்து அடுப்பில் சூடாக, உருகி இருக்கும் நெய்யை(இதன் அடுப்பை சிம்’மிலே வைத்து சூடு குறையாமலே வைத்திருக்கவும்.) ஒவ்வொரு கரண்டியாகச் சேர்க்க ஆரம்பிக்கவும்.
  • நெய்யைச் சேர்க்கும்போதெல்லாம் கலவை சர்’ரென பொங்கும்; கைவிடாமல் கிளறவும்.
  • எல்லா நெய்யும் சேர்த்து முடித்ததும், ஏலப் பொடியும் சேர்த்து, கிளறிக் கொண்டே இருக்கும்போது, நுரை மாதிரி பொங்கி, தானே வெடித்து உடைந்து உடைந்து பொத்தல்கள் வரும். இதுதான் மைசூர்பாகு பதம்.
  • அடுப்பிலிருந்து இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டவும்; சமப்படுத்தும்போது அழுத்தக் கூடாது.
  • லேசாக ஆறியதும் வில்லைகள் போடலாம். மேலாக சர்க்கரை தூவி அலங்கரிக்கலாம். (சூடாக இருக்கும்போது சர்க்கரை தூவினால், சூட்டில சர்க்கரை கரைய ஆரம்பித்துவிடும்.)

* ஹோட்டல் மைசூர்பாகு மாதிரி ஒரு பகுதி சிவப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பினால், கடைசியில் சில விநாடிகள் கலவையை கிளறாமல் கொட்டினால் அடிப்பக்கக் கலவை மட்டும் அதிகம் சிவந்து அப்படிக் கிடைக்கும்.

* நெய் தரமானதாக இருக்க வேண்டும். ஏற்கனவே இறுகி இருக்கும் நெய்யை உருக்குவதை விட புதிதாக வெண்ணெய் வாங்கிக் காய்ச்சி, அந்தச் சூட்டோடு செய்தால் இன்னும் மணமாக இருக்கும்.

* நெய்க்குப் பதிலாக டால்டாவிலும் செய்யலாம். ஆனால் டால்டாவையும் சூடான உருகிய நிலையில் வைத்துத் தான் சேர்க்க வேண்டும்.

 * சிலர் கொதிக்கிற நெய்யில் மொத்த கடலைமாவையும் பொரித்து, சர்க்கரைப் பாகில் கலவையைச் சேர்த்தும் செய்கிறார்கள். நான் இன்னும் செய்து பார்க்கவில்லை. பொதுவாக அனைத்தும் நல்ல கொதி நிலையில் இருந்தால் சரியாக வரும் என்றுதான் தோன்றுகிறது.

இனிப்புகள் செய்ய ஆரம்பிக்கிற யாராவது இதை ஒருமுறையாவது செய்யாமல் இருந்திருப்பார்களா என்பது ஆச்சரியம் தான். அந்த அளவுக்கு பிரபலமான, சுலபமான ஒன்று. எந்தத் தவறும் நேர்ந்துவிடாது என்பதால் யாரும் தைரியமாகச் செய்யலாம்.
 
தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 1 கப்
தேங்காய்த் துருவல் – 1 கப்
பால் – 1 கப்
நெய் – 1 கப்
சர்க்கரை – 3 கப்
ஏலப்பொடி

seven star cake

செய்முறை:

  • கடலை மாவை கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவும்.
  • தேங்காயை அதன் தோல் சேர்ந்துவிடாமல் வெள்ளைப் பகுதியாக மட்டும் துருவி, 1 டேபிள்ஸ்பூன் பால் விட்டு மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு அடிகனமான வாணலியில், காய்ச்சி ஆறிய பாலில் கடலை மாவை கட்டிகளில்லாமல் கலந்து கொள்ளவும்.
  • அத்துடன் நெய், சர்க்கரை, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து அடுப்பில் வைத்து நிதாமான சூட்டில் கிளற ஆரம்பிக்கவும்.
  • கைவிடாமல் கிளறி வாணலியில் ஒட்டாமல், நுரைத்துக் கொண்டு வரும்போது ஏலப்பொடி தூவி, இறக்கவும். இந்தப் பதத்தில் கேக் மாதிரி மென்மையாக வரும்.
  • இன்னும் சிறிது நேரம் இழுத்துக் கிளறியும் இறக்கலாம். இந்தப் பதத்தில் பர்பி மாதிரி இறுக்கமாக வரும். ஆனால் தேங்காய் சேர்த்திருப்பதால் மைசூர்பாகு மாதிரி பாறையாகிவிடும் பயம் இதில் இல்லை. இதுவும் சாப்பிட மென்மையாகவே இருக்கும். சொல்லவருவது, தெரியாமல் பதம் தாண்டி இறக்கிவிட்டாலும் தவறாகிவிடாது. சுவையாகவே இருக்கும். 
  • ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, சிறிது ஆறியதும் வேண்டிய வடிவில் வில்லைகள் போடலாம்.

* வாயில் போட்டதும் மைசூர் பாகா, தேங்காய் பர்பியா என்று நாக்கு ஒரு நொடி குழம்பும். குழம்பட்டும். 🙂 ஆனால் இரண்டையும் விட இந்த ஸ்வீட் சுவையாக இருக்கும். புதிதாகச் செய்பவர்கள் இதிலிருந்து ஆரம்பித்தால் ஸ்வீட் செய்வதில் ஒரு தைரியம் வரும்.

உன்பேரைச் சொன்னாலே
உள்நாக்கில் தித்திக்குமே
நீ எங்கே நீ எங்கே

உன்னோடு சென்றாலே
வழியெல்லாம் பூப்பூக்குமே
நீ எங்கே நீ எங்கே

ஒன்றா இரண்டா ஒரு கோடி நியாபகம்
உயிர் தின்னப் பார்க்குதே நண்பா
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
எங்கே நீ என் நண்பா…

வார்த்தைகள் இல்லாமல் வெறும் இசையை மட்டும் கேட்டால் இது சோகப் பாடல் என்று சத்தியம் செய்தாலும் நம்பமுடியாத நம்பிக்கையூட்டும் கார்த்திக் ராஜாவின் இசை. எத்தனையாவது தடவையாகவோ இன்று மீண்டும் சன் டிவி உபயத்தில் “டும் டும் டும்”. மயங்கவைக்கும் இசை, பாடல்கள், மண் வாசனையுடன் அந்த வட்டாரத் தமிழ், வழுக்காத திரைக்கதை, அனைவரது இயல்பான நடிப்பு, எல்லாவற்றையும் விட அசத்தும் ஜோ! (சவீதா, அனு உதவியுடன் தான்).. பார்த்து முடித்ததுமே இன்றைக்கு அல்வா என்று முடிவு செய்துவிட்டேன். சம்பா கோதுமைதான் ஒரு கடையிலும் கிடைக்கவில்லை. மாதுங்கா போனால் தான் கிடைக்குமாம். 😦

திருநெல்வேலி, தாமிரவருணிக்கும், அல்வாவுக்கும், நெல்லையப்பர் கோவிலுக்கும் பேர் போனது. முதலில் அல்வாவைப் பார்த்து விடலாம். நெல் மட்டுமே விளையும் ஒரு தேசத்தில் கோதுமையால் செய்யப்படும் வஸ்துவான அல்வா பிரபலப்படுத்தப் பட்டுள்ளது. ராஜஸ்தானில் இருந்து வந்தவர்கள் பழக்கியிருக்கிறார்கள். அவர்கள் முதலில் செய்து கடை போட்டு விற்க, இப்பொழுது ஊர் முழுக்க பிரதானமாக இருப்பது லாலாக் கடைகள் எனப்படும் அல்வாக் கடைகள்தான். ஆனால் திருநெல்வேலியில் விற்கப்படும் எல்லா அல்வாக் கடைகளிலும் ஒரிஜினல் அல்வா விற்கப்படுவதில்லை. இரண்டே இரண்டு கடைகள்தான் தரமான ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா விற்கிறார்கள். மற்றதெல்லாம் வழக்கம் போல டூப்ளிகேட்டுகள். மைதா மாவு, கோதுமை மாவில் அலுங்காமல் அல்வா செய்து விடுகிறார்கள். வீட்டிற்கு வாங்கிப் போய் வாய்க்குள் போட்டால் வாயை அப்புறம் திறக்கவே முடியாது. அப்படியே ஒட்டிக் கொள்ளும், ஆகவே சரியான கடையாகப் பார்த்து அல்வா வாங்க வேண்டும் இல்லையென்றால் நிஜமாகவே அல்வா கொடுத்து விடுகிறார்கள். அப்படிப் பிரபலமான இரண்டு அல்வாக் கடைகளில் ஒன்று, ‘இருட்டுக் கடை’ எனப்படும் பாடல் பெற்ற (சாமி படத்தில் திருட்டுக் கடை அல்வாதான் என்று பாடலில் இடம் பெற்ற) அல்வாக் கடை. இந்தக் கடை நெல்லையப்பர் கோவிலுக்கு முன்பாக மிகச் சிறியதாக உள்ளது. கடைக்கு பெயர் கிடையாது. லைட்டு கிடையாது, சாயங்காலம் கொஞ்ச நேரம் மட்டும் திறந்து வைத்து விற்பார்களாம். அதற்குள் ஏகக் கூட்டம் வந்து முண்டியடித்து வாங்கிக் கொண்டு போய் விடும்;  அப்புறம் மறுநாள்தான். நாங்கள் அந்தச் சமயத்தில் போகாததால் எங்களுக்கு அந்தக் கடையில் வாங்கும் பாக்யம் கிடைக்கவில்லை. இருட்டுக் கடையையும் , கடையில் அல்வாவை விற்பனைக்காக இறக்கி வைக்கப் பட்டிருக்கும் அல்வாவையும் புகைப் படங்களில் காணலாம் (இதுதான் நான் உங்களுக்கு கொடுக்கும் அல்வா).

— ச.திருமலை

தேவையான பொருள்கள்:

சம்பா கோதுமை – 200 கிராம்
சர்க்கரை – 750 கிராம்
நெய் – 400 கிராம்

சம்பா கோதுமை கிடைத்தபின் செய்து படம் இங்கே சேர்க்கப்படும். அதுவரை ச.திருமலையின் ஆல்பத்திலிருந்து எடுத்த இருட்டுக் கடை திருட்டு (அவரிடம் அனுமதி வாங்காமல் எடுத்ததால்) அல்வாவை வைத்து அட்ஜஸ் செய்து கொள்ளவும்.

thirunelveli iruttuk kadai halwa (ready for sales)

செய்முறை:

  • சம்பா கோதுமையை முதல் நாளே தண்ணீரில் ஊறவைத்து கிரைண்டரில் நன்றாக அரைக்க வேண்டும்.
  • நைசாக அரைக்க அரைக்க கோதுமை பாலாக வர ஆரம்பிக்கும். அதை ஒரு துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.
  • அடுப்பில் அடிகனமான கொஞ்சம் பெரிய வாணலியாக வைத்து, அதில் பாலை ஊற்றிக் காய வைக்கவும்.
  • பால் லேசாகச் சூடானதும், சர்க்கரைச் சேர்த்துக் கிளற ஆரம்பிக்க வேண்டும். கிளறுவதை இனி நிறுத்தவே கூடாது.
  • கலவை கொதித்து, இறுகி, கெட்டியான பதத்திற்கு வரும்போது, சுத்தமான நெய்யைச் சேர்த்துக் கிளற வேண்டும்.
  • விடாமல் கிளறிக்கொண்டே இருந்தால், அல்வா நல்ல குங்குமச் சிவப்பில் வரும்.
  • இறுகலான பக்குவத்தில் பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும், இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தி, ஆறவைத்து உபயோகிக்கலாம்.

* கல் உரல் அல்லது கிரைண்டரில் தான் அரைக்கலாம். மிக்ஸியில் அரைக்கக் கூடாது

* முந்திரி மாதிரி பருப்புகள், கலர் எதுவும் சேர்க்கக் கூடாது.

தேவையான பொருள்கள்:

முந்திரி பருப்பு – 300 கிராம்
சர்க்கரை – 200 கிராம்
நெய் – 1 கப்
ஏலப்பொடி

munthiri paruppu cake

செய்முறை:

  • முந்திரிப் பருப்பை மிக நைசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் சிறிது தண்ணீருடன் சர்க்கரையைச் சேர்த்து கொதிக்க விட்டு கெட்டிப் பாகாகக் காய்ச்சவும்.
  • பாகு காய்ந்ததும் சிறிது சிறிதாக பருப்புத் தூளை தூவிக் கொண்டே கட்டி தட்டாமல் கிளறவும்.
  • கலவை கொதித்து இறுகி வரும்போது ஏலப்பொடி சேர்த்து, பின் சிறிது சிறிதாக நெய்யைச் சேர்க்க ஆரம்பித்து விடாமல் கிளறவும்.
  • எல்லா நெய்யும் சேர்த்தபின், கலவை சேர்ந்தாற்போல், நுரைத்து வந்தவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தவும்.
  • லேசாக ஆறியதும், வெண்ணை பேப்பர் அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் நெய் தடவி அதன் மேற்புறத்தை வழவழப்பாகத் தடவி, வில்லைகள் போடவும். (கலவையை பெரிய தட்டில் மெல்லியதாகப் பரவுவது போல் (அரை செ.மீ உயரம் மட்டும்) கொட்டினால் கடையில் விற்கும் முந்திரி கேக் போன்றே இருக்கும்.)

* விரும்புபவர்கள் மேலே வெள்ளித் தாள் ஒட்டிக் கொள்ளலாம். நான் செய்வதில்லை.

* இந்த முறையில் முழுமையாக பாதாம் பருப்பிலோ அல்லது பாதி முந்திரி பாதி பாதாம் என்றோ எடுத்தும் செய்யலாம்.

* கோவா சேர்த்துக் கிளறுவது மிகுந்த மணமாகவும் சுவையாக இருக்கும். முக்கால் லிட்டர் பாலைக் காய்ச்சி முழுமையாக கோவா ஆவதற்கு முன் சேர்ந்தாற்போல் வரும்போதே இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை 300 கிராமாக(கோவாவிற்கும் சேர்த்து) எடுத்துக் கொண்டு மேற்சொன்னபடி பாகு காய்ச்சி, பருப்புத் தூளைப் போட்டுக் கிளறும் போதே இந்த கோவாவையும் சேர்த்துக் கிளற வேண்டும். 

தீபாவளியன்று காலையில் சூடான பஜ்ஜிக்கு துணையாகச் செய்ய, அவசர விருந்தாளி என்று குறைந்த நேரத்தில் செய்திட பல நேரங்களில் கைகொடுக்கும் சுலபமான இனிப்பு வகை உணவு.

ravai kesari 1

தேவையான பொருள்கள்:

ரவை – 1 கப்
தண்ணீர் – 2 1/2 கப்
சர்க்கரை – 1 3/4 கப்
நெய் – 3/4 கப்
கேசரி கலர்
ஏலப்பொடி
முந்திரிப் பருப்பு
கிஸ்மிஸ்

ravai kesari 3

செய்முறை:

  • அடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு கிஸ்மிஸ், முந்திரியை நன்கு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
  • மீண்டும் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு ரவை வாசனை போகும் வரை வறுக்கவும்.
  • இரண்டரை கப் தண்னீரைச் சேர்த்து அடுப்பை நிதானமாக வைத்து நன்கு வேகவைக்கவும்.
  • ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை, கேசரி கலரைச் சேர்த்துக் கிளறவும். சர்க்கரையால் கலவை மீண்டும் தளரும்.
  • ஒட்டாமல் சேர்ந்து வரும்வரை இடையில் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கொண்டே கிளறவும்.
  • இறக்கும் முன் மிச்சமுள்ள நெய், ஏலப்பொடி தூவி இறக்கவும்.
  • பொரித்து வைத்திருக்கும் கிஸ்மிஸ், முந்திரியில் பாதியைக் கலந்து கொள்ளவும்.

ravai kesari 2

* இறக்கிய கேசரியை ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, மேலே மீதி கிஸ்மிஸ் முந்திரி தூவி, வில்லைகள் போடலாம். அல்லது விருந்துகளின் இறுதியில் dessert உணவு மாதிரி தருவதாக இருந்தால் இப்படிச் செய்யலாம்; ஒரு குழிக் கரண்டியில் நெய் தடவி, ஒவ்வொரு முறையும் ஒரு முந்திரி, சில கிஸ்மிஸ்களை அடியில் போட்டு, அந்தக் கரண்டியால் சூடான கேசரியை எடுத்து கப்பில் போட்டால் ஒரே அளவாகவும் மேல்ப்பகுதி அலங்கரித்தும் இருக்கும். 5, 6 தடவைக்கு ஒருமுறை தேவைப்பட்டால் கரண்டியில் சிறிது நெய் தடவினால் ஒட்டாமல் விழும்.

* கேசரிக்கு கிஸ்மிஸ் பழைய ஸ்டைல். ஒரு திருமணத்தில் டூட்டிஃப்ரூட்டியைப் பார்த்டேன். கிஸ்மிஸ் மாதிரி இடையில் புளிக்காமல் சுவையாக இருந்தது.

* கேசரிக்கு மிகக் குறைவாக இனிப்பு வேண்டுபவர்கள் பலர் ஒன்றரை கப் சர்க்கரை சேர்க்கிறார்கள். அதிகம் தேவை என்று சிலர் 2 கப். நான் எப்பொழுதுமே நடுவில்  1 3/4 கப். வடஇந்தியர்கள் ஒரு கப் ரவைக்கு ஒரு கப் சர்க்கரை மட்டும் சேர்ப்பதைத் தான் தாங்க முடியவில்லை என்றால் அல்வா என்று சொல்லிவிட்டு அநியாயத்துக்கு ‘சூஜி கா அல்வா’ என்று கேசரியை நீட்டுகிற(அல்வா கொடுப்பது என்பது இதுதானா?) செயலை நெஞ்சு பொறுக்குதில்லையே. 🙂 கேசரியில் சர்க்கரை அதிகமாகிவிட்டால் பாயசம் மாதிரி தளர்ந்தும், ஆறியதும் பாகு இறுகி நொசநொச என்றும் ஆகிவிடும். தவறுதலாக சர்க்கரை அதிகமானால்(எப்படி ஆகும்?) சிறிது கோதுமை மாவை நன்கு வறுத்துச் சேர்க்கவும்.

* பலருக்கு கேசரியில் பால் சேர்ப்பது பிடித்திருக்கிறது. எனக்கு பாலின் ஃப்ளேவர் இதில் வருவதில் விருப்பமில்லை. நான் சேர்க்கவில்லை. விரும்புபவர்கள் தண்ணீரைக் குறைத்துக் கொண்டு ஒரு கப் கெட்டியான பால் சேர்த்துக் கொள்ளலாம்.

# 2.

புதிதாகச் செய்பவர்கள், ரவை கட்டி தட்டிவிடும் என்று அஞ்சுபவர்கள், கேசரி பொலபொலவென உதிராக வரவேண்டும் என்று நினைப்பவர்கள், அந்தப் பதினைந்து நிமிட நேரம் கூட கவனிக்க நேரமில்லாமல் வேறு வேலை இருப்பவர்கள் கீழே சொல்லியுள்ள மாதிரியும் செய்யலாம்.

  • ஒரு கப் ரவையை 1/2 கப் நெய்யில் பொரித்த மாதிரி பச்சை வாசனை போகும்வரை வறுத்துக் கொள்ளவும்.
  • வறுத்த ரவையுடன் ஒரு கப் சூடான பால், கேசரி கலர், ஏலப்பொடியும் கலந்து வைக்கவும்.
  • குக்கர் உள்பாத்திரத்தில் தேவையான சர்க்கரையை 1 1/2 கப் தண்ணீரில் கலந்து, அடுப்பில் வைத்து, சர்க்கரை கரைந்ததும்(பாகு ஆகிவிட வேண்டாம்.) பால் சேர்த்த ரவையையும் சேர்த்துக் கலந்து, குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடலாம். மீதி நெய், வறுத்த முந்திரி இத்யாதிகளைக் கலந்து பரிமாறலாம். இந்த முறையில் ரைஸ் குக்கரிலும் செய்யலாம். கேசரி உதிர் உதிராக வரும். அளவு நிறைய செய்யும்போது இந்த முறை வசதியானதும் கூட.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பஜ்ஜி, போண்டா, கார மிக்ஸர்,

இது விஜயதசமியன்று ஹயக்ரீவருக்காகச் செய்யப்படும் உணவு. மற்றும் பள்ளிக்கு புதிதாக குழந்தைகளை அனுப்பும்(வித்யாரம்பம்) நாளன்றும் செய்து ஹயக்ரீவரை வழிபடலாம்.

தேவையான பொருள்கள்:

கடலைப் பருப்பு – 1 கப்
பால் – 2 கப்
தேங்காய் – 1 மூடி
வெல்லம் – 1 கப்
நெய் – 1/4 கப்
முந்திரிப் பருப்பு
கிஸ்மிஸ்
ஏலப்பொடி
பச்சைக் கற்பூரம்

hayagreeva

செய்முறை:

  • கடலைப் பருப்பை சிறிது வறுத்து விட்டு குக்கரில் குழைவாக வேகவைத்து, மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் பாலை வைத்து சுண்டக் காய்ச்சி, வெல்லம், தேங்காய்ப் பால், மசித்த கடலைப் பருப்பு, பாதி நெய் விட்டு மிதமான தீயில் கிளறவும்.
  • கலவை இறுகி அல்வா பதம் வந்ததும் மேலும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
  • மீதி நெய்யில் ஒடித்த முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பொரித்துச் சேர்க்கவும்.

* ஒரு கப் கடலைப் பருப்பிற்கு ஒன்றிலிருந்து ஒன்னேகால் கப் சர்க்கரை என்ற அளவில் சர்க்கரையிலும் செய்யலாம்.

-0-
 
திருவஹீந்திரபுரம்:

கடலூரிலிருந்து மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தலம். தேவநாதப் பெருமாள், ஹேமாம்புஜவல்லித் தாயார்; கோயில் 108 திவ்ய க்ஷேத்திரங்களில்(நடுநாட்டுத் திருப்பதி) ஒன்று; கருடநதி, சேஷ தீர்த்தம் என்ற நீர்நிலைகளால் புகழ்பெற்றவை என்றாலும் அதைவிட இங்கிருக்கும் ஆஷாட மலை (ஆஞ்சநேயர் யுத்த நேரத்தில் சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கிச் செல்கையில் கீழே விழுந்த ஒரு துண்டு மலையாதலால், இந்த மலைக்கு மருத்துவ குணம் உள்ளதாகச் சொல்கிறார்கள்.) ஹயக்ரீவரும், நிகமாந்த மஹா தேசிகர் சன்னதியும் மேலும் சிறப்புப் பெற்றவை.

இங்கே தனது இளம்வயதில் கருட மந்திரத்தை ஜபித்து, கருடரை தரிசித்த தேசிகர், அவராலேயே ஹயக்ரீவ மந்திரம் உபதேசிக்கப்பட்டு, விஷ்ணுவை இங்கே ஹயக்ரீவராகக் (ஞானத்திற்கான தெய்வம், சரஸ்வதிக்கே ஞானம் தந்தவர்) கண்டு அருளப்பெற்றவர். தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் பாண்டித்யம் பெற்ற தேசிகர் தன் வாழ்வில் முக்கியமான நாள்களை இங்கே தங்கியும், முக்கிய பாசுரங்களை இங்கே இயற்றவும் செய்தவர். அவர் வாழ்ந்த வீடு இன்றும் தேசிகன் திருமாளிகையாகவும், கட்டிய கிணறும் இன்னும் இங்கே இருக்கிறது.

hayagriva

தேசிகர் புரட்டாசி திருவோணத்தன்று ரத்னாங்கியில் ஒவ்வொரு படியாக மலையேறி ஹயக்ரீவரை தரிசிக்கச் செல்கிறார். ஹயக்ரீவருக்கு ஸ்ரவண பௌர்ணமியும்(அவதார தினம்), நவராத்திரி ஒன்பதாம் நாள் மஹாநவமியும் விசேஷம். விஜயதசமி அன்று அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் தங்கள் மற்றும் தங்கள் குழந்தைகளின் வித்யாரம்பத்தை இங்கே மலையேறி ஹயக்ரீவரை வழிபட்டே துவங்குகின்றனர்.

இவர்களை வணங்கி நாமும் நமது நல்ல செயல்களைத் துவங்கலாம்!

வடகலை தென்கலை பேதங்களா, அதெல்லாம் நான் பார்த்ததேயில்லையே என்று சொல்லும் இளையவர்கள், அதெல்லாம் முந்தி, இப்ப போயே போச்! போயிந்தே, Its gone என்று சொல்லிக் கொண்டிருக்கும் முதியவர்கள் இங்கே சென்றுவரவும். :Lol: :(((