கார மிக்ஸர் – 1

 
தேவையான பொருள்கள்:

அவல் – 3 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
பயத்தம் பருப்பு –  1 கப்
நிலக்கடலை – 1 கப்
பொட்டுக் கடலை – 1 கப்
முந்திரிப் பருப்பு – 1 கப்
கறிவேப்பிலை – 4 ஈர்க்கு
உப்பு – தேவையான அளவு
காரப் பொடி – தேவையான அளவு
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க
ஓமப்பொடி (அல்லது காராபூந்தி) – 1 1/2 கப்

 

செய்முறை:

  • கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து ஒரு துணியில் உலர்த்திக் காயவைக்கவும். (முழுவதும் காய்ந்திருக்கவேண்டியதில்லை.)
  • முந்திரிப்பருப்பை நாலைந்தாக உடைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும் துளைகளுள்ள ஒரு வடிகட்டி (பெரிய டீ வடிகட்டி, புளி வடிகட்டி) எடுத்து, அதில் கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, நிலக்கடலை, பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பை ஒவ்வொன்றாக, தனித்தனியாக போட்டு, பொரித்து, வடித்தட்டில் போட்டு எண்ணெயை வடிக்கவும்..
  • அவலை முதலிலேயே அந்த வடிகட்டியில் (மாவு, உடைந்த அவல் இல்லாமல்) சலித்துவைத்திருக்கவேண்டும்; கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, பொரித்து எடுக்கவும். சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
  • சிறிது கடலைமாவில் உப்பு, பெருங்காயம், மிளகாய்த் தூள் சேர்த்துக் கலந்து காராபூந்தி அல்லது ஓமப்பொடி அச்சில் பிழிந்துகொள்ளலாம். (மிக்ஸரில் கடலைமாவு சேர்த்த பொருள் இல்லாவிட்டால் சுவைகூடி வராது. அதனால் ஏதாவது ஒன்றாவது செய்து சேர்க்கலாம்; அல்லது அதைமட்டும் கடையில் வாங்கிச் சேர்த்துக்கொள்ளலாம்.)
  • எல்லாவற்றையும் ஒரு வாயகன்ற பெரிய பாத்திரத்தில் போட்டுக்கொண்டே வரவும்.
  • கடைசியில் கறிவேப்பிலையையும் பொரித்து, வடிகட்டவும்.
  • பொரித்த கறிவேப்பிலையுடன் தேவையான உப்புப் பொடி, மிளகாய்ப் பொடி, பெருங்காயம் சேர்த்து நன்கு கையால் நொறுக்கி, அந்தக் கலவையை நன்கு கலக்கவும்.

* எண்ணெயில் பொரிக்கும்போது தீ மிகக் குறைவாக இருந்தால் பருப்புகள், அவல் கடுக்’கென்று ஆகிவிடும். தீ அதிகமாக இருந்தால் கருகிவிடும். மிதமான தீயில் அடுப்பு எரியவேண்டும். அவல் போட்டதுமே பொரிந்துவிடவேண்டும்.

* விரும்புபவர்கள் வேறு மசாலாப் பொடிகளும் சேர்க்கலாம். ஆனால் இதுவே அதிகம் படுத்தாத வகை.

நன்றி: எழுத்தாளர் ராமசந்திரன் உஷா.

பத்து நிமிடங்களுக்கு மேல் உட்காரமுடியாமல் முதுகுவலியால் கஷ்டப்பட்டாலும் தொலைப்பேசியியில் குறிப்பைப் பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் ராமச்சந்திரன் உஷாவிற்கு நன்றி. அவர் விரைவிலேயே நலம்பெற்று இன்னும் பல நல்ல குறிப்புகளைப் பகிர்ந்துகொள்வார் என்று நம்புவோம்.

பிசிபேளாவிற்கு– ஏற்கனவே கவிஞர் ஹரன்பிரசன்னா என் பிசிபேளாக் குறிப்பைப் படித்து :), சரியாகவே இருப்பதாகச் சொல்லிவிட்டாலும்– எழுத்தாளர் உஷா, தன்னுடைய சிறப்புக் குறிப்பை இன்னும் அனுப்பவில்லை என்பதை இந்த வேளையிலே நினைவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன். 🙂
 

தேவையான பொருள்கள்:

தக்காளிக்காய் – 4
எண்ணெய் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
பச்சை மிளகாய் – 1
உளுத்தம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
பெருங்காயம்
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
கொத்தமல்லித் தழை
உப்பு – தேவையான அளவு

thakkaalikkai thuvaiyal chutney

செய்முறை:

  • தக்காளிக்காயை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், என்ற வரிசையில் சேர்த்து சிவக்க வறுத்து எடுத்துவைத்துக் கொள்ளவும்.
  • அத்துடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளிக்காய், தேவையான உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  • வறுத்த பருப்புக் கலவையை, கொத்தமல்லித் தழை சேர்த்து, அப்படியே தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.

* வறுத்த கலவையோடு ஒரு பெரிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி அரைத்து, கடுகு உளுத்தம் பருப்பு தாளித்தால் சட்னி. தோசை, இட்லி, சப்பாத்திக்கு திரும்பத் திரும்ப என்ன சட்னி என்று யோசிக்கவைக்கும். இது வீட்டில் இன்று ஹிட் ஆனது.

இந்த வடைக்கு என்று எதுவும் தனியாக யாரும் பெயர் வைக்கவில்லை போலிருக்கிறது. கார்த்திகையன்று (மட்டும்) செய்வதால் கார்த்திகை வடை என்றே நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

kaarththigai vadai 1

தேவையான பொருள்கள்: 

முழு உளுத்தம் பருப்பு – 2 கப் (கருப்புத் தோலுடன்)
கடலைப் பருப்பு – 1/2 கப்
பயத்தம் பருப்பு – 1/2 கப்
பச்சை மிளகாய் – 10, 12
இஞ்சி – பெரிய துண்டு
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
பெருங்காயம்
உப்பு
எண்ணெய்

kaarththigai vadai 2

செய்முறை:

  • தோல் உளுத்தம் பருப்பை அலசி தண்ணீர்ல் குறைந்தது 8 மணி நேரம் ஊறவைக்கவும். (தோல் தனியாகக் கழண்டு  வரும் அளவு ஊறவேண்டும்.)
  • கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊறவைத்து, நீரை ஒட்ட வடித்து, ஒரு துணியில் காயவிடவும்.
  • பாதி இஞ்சி, பாதி மிளகாயை மட்டும் பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையையும் பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • ஊறின தோல்பருப்பைக் களையவும். முக்கால்வாசித் தோல் மட்டும் நீங்கினால் போதும். கால்வாசி அல்லது விரும்பினால் அதைவிட சிறிது அதிகத் தோலை அப்படியே நீக்காமல் வைத்துக் கொள்ளவும்.
  • களைந்த பருப்புடன், தேவையான உப்பு, பெருங்காயம், மீதிப் பாதி இஞ்சி, பச்சை மிளகாயைச் சேர்த்து, அதிகம் நீர் விடாமல், அதிகம் மசியாமல் கெட்டியாக கரகரப்பாக அரைத்து எடுக்கவும். கிரைண்டரில் இப்படி அரைப்பது சுலபம்.
  • அரைத்த மாவுடன் உலர்த்தி வைத்திருக்கும் பருப்புகளை நன்கு கலந்து கொள்ளவும்.
  • நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து அழுத்தாமல் கலந்து கொள்ளவும். பச்சை மிளகாய்த் துண்டுகள் இடையில் அதிகம் இருந்தால் சுவையாக இருக்கும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கவும்.
  • வாழையிலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் தண்ணீர் துடைத்து, மாவை உருட்டி, வடையாகத் தட்டி, நடுவில் துளை போட்டு, நிதானமான சூட்டில், எண்ணெயில் போடவும்.
  • இருபுறமும் திருப்பிவிட்டு, முழுமையாகச் சத்தம் அடங்கி, மொறுமொறுப்பானதும்,  எடுக்கவும். இடையிடையே கரண்டிக் காம்பால் வடையில் குத்தினால் மேலும் கரகரப்பாகும்.

* இந்த வடை வேக சிறிது அதிக நேரம் எடுக்கும். இரண்டு மூன்று நாள்களுக்குக் கெடாது.

* முழுமையாக தோல்பருப்புதான் சேர்க்கவேண்டுமென்பதில்லை. கால் அல்லது அதற்குக் கொஞ்சம் மேலே தோல் உளுத்தம் பருப்பும், மீதிக்கு தோல் நீக்கிய முழுப் பருப்பும் கூட சேர்த்து, கடைசியில் களையாமல் நீரை மட்டும்  வடித்து, அப்படியே அரைக்கலாம். இது அதிகம் ஊறத் தேவையில்லை. நான்கு மணி நேரத்தில் அரைக்கலாம்.

இது விஜயதசமியன்று ஹயக்ரீவருக்காகச் செய்யப்படும் உணவு. மற்றும் பள்ளிக்கு புதிதாக குழந்தைகளை அனுப்பும்(வித்யாரம்பம்) நாளன்றும் செய்து ஹயக்ரீவரை வழிபடலாம்.

தேவையான பொருள்கள்:

கடலைப் பருப்பு – 1 கப்
பால் – 2 கப்
தேங்காய் – 1 மூடி
வெல்லம் – 1 கப்
நெய் – 1/4 கப்
முந்திரிப் பருப்பு
கிஸ்மிஸ்
ஏலப்பொடி
பச்சைக் கற்பூரம்

hayagreeva

செய்முறை:

  • கடலைப் பருப்பை சிறிது வறுத்து விட்டு குக்கரில் குழைவாக வேகவைத்து, மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் பாலை வைத்து சுண்டக் காய்ச்சி, வெல்லம், தேங்காய்ப் பால், மசித்த கடலைப் பருப்பு, பாதி நெய் விட்டு மிதமான தீயில் கிளறவும்.
  • கலவை இறுகி அல்வா பதம் வந்ததும் மேலும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
  • மீதி நெய்யில் ஒடித்த முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பொரித்துச் சேர்க்கவும்.

* ஒரு கப் கடலைப் பருப்பிற்கு ஒன்றிலிருந்து ஒன்னேகால் கப் சர்க்கரை என்ற அளவில் சர்க்கரையிலும் செய்யலாம்.

-0-
 
திருவஹீந்திரபுரம்:

கடலூரிலிருந்து மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தலம். தேவநாதப் பெருமாள், ஹேமாம்புஜவல்லித் தாயார்; கோயில் 108 திவ்ய க்ஷேத்திரங்களில்(நடுநாட்டுத் திருப்பதி) ஒன்று; கருடநதி, சேஷ தீர்த்தம் என்ற நீர்நிலைகளால் புகழ்பெற்றவை என்றாலும் அதைவிட இங்கிருக்கும் ஆஷாட மலை (ஆஞ்சநேயர் யுத்த நேரத்தில் சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கிச் செல்கையில் கீழே விழுந்த ஒரு துண்டு மலையாதலால், இந்த மலைக்கு மருத்துவ குணம் உள்ளதாகச் சொல்கிறார்கள்.) ஹயக்ரீவரும், நிகமாந்த மஹா தேசிகர் சன்னதியும் மேலும் சிறப்புப் பெற்றவை.

இங்கே தனது இளம்வயதில் கருட மந்திரத்தை ஜபித்து, கருடரை தரிசித்த தேசிகர், அவராலேயே ஹயக்ரீவ மந்திரம் உபதேசிக்கப்பட்டு, விஷ்ணுவை இங்கே ஹயக்ரீவராகக் (ஞானத்திற்கான தெய்வம், சரஸ்வதிக்கே ஞானம் தந்தவர்) கண்டு அருளப்பெற்றவர். தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் பாண்டித்யம் பெற்ற தேசிகர் தன் வாழ்வில் முக்கியமான நாள்களை இங்கே தங்கியும், முக்கிய பாசுரங்களை இங்கே இயற்றவும் செய்தவர். அவர் வாழ்ந்த வீடு இன்றும் தேசிகன் திருமாளிகையாகவும், கட்டிய கிணறும் இன்னும் இங்கே இருக்கிறது.

hayagriva

தேசிகர் புரட்டாசி திருவோணத்தன்று ரத்னாங்கியில் ஒவ்வொரு படியாக மலையேறி ஹயக்ரீவரை தரிசிக்கச் செல்கிறார். ஹயக்ரீவருக்கு ஸ்ரவண பௌர்ணமியும்(அவதார தினம்), நவராத்திரி ஒன்பதாம் நாள் மஹாநவமியும் விசேஷம். விஜயதசமி அன்று அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் தங்கள் மற்றும் தங்கள் குழந்தைகளின் வித்யாரம்பத்தை இங்கே மலையேறி ஹயக்ரீவரை வழிபட்டே துவங்குகின்றனர்.

இவர்களை வணங்கி நாமும் நமது நல்ல செயல்களைத் துவங்கலாம்!

வடகலை தென்கலை பேதங்களா, அதெல்லாம் நான் பார்த்ததேயில்லையே என்று சொல்லும் இளையவர்கள், அதெல்லாம் முந்தி, இப்ப போயே போச்! போயிந்தே, Its gone என்று சொல்லிக் கொண்டிருக்கும் முதியவர்கள் இங்கே சென்றுவரவும். :Lol: :(((

பயத்தம் பருப்பு/ கடலைப் பருப்பு சுண்டலை இந்த முறையிலும் செய்யலாம். ஆனால் இப்போது சொல்வது, செய்வதற்கும் உண்பதற்கும் எளிமையான சுண்டல். முன்னேற்பாடுகள் எதுவும் இல்லாமலே செய்துவிடலாம்.

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு(அல்லது கடலைப் பருப்பு) – 1 கிலோ
தேங்காய்த் துருவல் – 1 கப்
கேரட் துருவல் – 1/4 கப் (விரும்பினால்)
கொத்தமல்லித் தழை
உப்பு

தாளிக்க: எண்ணெய், கடுகு,  இரண்டு காய்ந்த மிளகாய், பெருங்காயம், 2 பச்சை மிளகாய், கறிவேப்பிலை.

payaththam paruppu sundal

செய்முறை:

  • பருப்பை நன்கு கழுவி, ஒன்றரைப் பங்கு தண்ணீர், உப்பு சேர்த்து, குக்கரில் 5 நிமிடம் வெயிட் போடாமல் வேகவிடவும்.
  • திறந்து பார்த்து, பருப்பு அரைப்பதம் மட்டும் வெந்ததும் (கையால் நசுக்கினால் நசுங்க வேண்டும், அவ்வளவே.) நீரை வடித்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில், எண்ணெய் வைத்து கடுகு, இரண்டாகக் கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • வேகவைத்த பருப்பைக் கொட்டி மேலும் ஐந்து நிமிடங்கள் கிளறவும்.
  • தேங்காய்த் துருவல், கேரட் துருவல், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலந்து உபயோகிக்கலாம்.

kadalai paruppu sundal

* பயத்தம் பருப்பு வேகவைக்கும் போது குழைந்துவிடும் என்று அஞ்சுபவர்கள்:

ஒன்றிரண்டு மணி நேரங்கள் பருப்பைத் தன்ணீரில் ஊறவிடவும். ஒரு பாத்திரத்தில் ஒரு பங்கு தண்ணீரைக் கொதிக்க வைத்து, உப்புச் சேர்த்து, பருப்பையும் அதில் கொட்டி, அடுப்பை அணைத்து மூடிவைத்துவிடவும். பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்துத் திறந்தால் சரியான பதத்தில் இருக்கும். கடலைப் பருப்பாக இருந்தால் கொதிக்கிற தண்ணீரில் போட்டு மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்கவைத்து அடுப்பை அணைக்கவும். மிச்ச நீரை வடித்து விடவும்.

அல்லது

தண்ணீரில் ஊறவைக்காமல், குக்கரிலும் வைக்காமல், நேரடியாக ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றரைப் பங்கு தண்ணீர் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும், சிம்மில் வைத்து, அதில் பருப்புடன் உப்புச் சேர்த்து வேகவிடவும். அடிக்கடி திறந்து பார்த்து, அரைப்பதம் வெந்ததும், (பத்தே நிமிடங்களில் ஆகிவிடும்.) இறக்கி நீரை வடியவிடவும். நம் கை மீறி எதுவும் நடக்காது.

சரி, எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தும் பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மட்டுமல்ல, தட்டப் பயறு, பச்சைப் பயறு போன்ற மென்மையான பயறுகள் கூட குக்கரில் வைத்ததில் லேசாகக் குழைந்து விட்டது. இனிமேலும் வாணலியில் போட்டு வதக்கினால் மேலும் நிலைமை மோசமாகும் என்றால் என்ன செய்வது? சிம்ப்பிள்! இறக்கிய உடனே, வெந்த பயறிலிருந்து நீரை வடித்துவிட்டு  நேராக குளிர்ந்த நீர்க் குழாயடியில் நீட்டவும் அல்லது குளிர்ந்த நீரை நிறைய சேர்த்து வடிகட்டவும். பயறு ஒன்றோடென்று ஒட்டாமல் கொஞ்சம் கடினத் தன்மை அடையும். பின்னர் சமாளிப்பது சுலபம். எதற்கும் பயறுகளை குக்கர் அடங்கியதும் உடனே திறந்துபார்த்துவிடுவது நல்லது.

-0-

வெல்லச் சுண்டல்:

* பயத்தம் பருப்பை வாணலியில் வறுத்து, தண்ணீர் சேர்த்து முக்கால் பதம் வேகவைக்கவும். ஒரு கப் பயத்தம் பருப்பிற்கு ஒரு கப் வெல்லம் சேர்த்துக் கிளறி, நீர் வற்றியதும் தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, நெய் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

* ஒரு கப் பயத்தம் பருப்போடு ஒரு கப் கேரட் துருவலும் சேர்த்துச் செய்தால் ஒன்றரை கப் வெல்லம் போட்டுக் கிளறலாம்.

* கால் கிலோ கடலைப் பருப்பை வாணலியில் வறுத்து, நீர் விட்டு முக்கால் பதம் வேகவைத்து, 200 கிராம் சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறுகியதும் ஏலப்பொடி, சிறிது நெய் சேர்த்துக் கிளறி இறக்கலாம்.

இவர் நம்மாளு உக்காரையின் உடன்பிறந்த சகோதரர் தான். உப்பில் செய்வது. இவர் சுவையில் இனிப்பையே மிஞ்சுவார். ஒரே நாளில் இரண்டையும் செய்வது சுலபமாக இருக்கும்.

தேவையான பொருள்கள்:

பயத்தம்பருப்பு – 2 கப்
கடலைப்பருப்பு – 1/2 கப்
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்

வறுத்துப் பொடிக்க:
தனியா – 2 டேபுள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
க.பருப்பு- 2 டேபிள்ஸ்பூன்
உ.பருப்பு- 2 டேபிள்ஸ்பூன்
 

தாளிக்க: கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை
 

seeyaalam 1seeyaalam 2

செய்முறை:

  • பருப்புகளை நன்கு களைந்து 4 மணிநேரம் ஊறவைத்து சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக- மிக நன்றாக இட்லிமாவுப் பதத்தில் முடிந்தால் கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த மாவை இட்லித் தட்டுகளில் இட்டு வெயிட் போடாமல் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
  • வேகவைத்த இட்லிகளை சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணையைச் சூடாக்கி, மிளகாய், தனியா, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு இவற்றை சிவக்க வறுத்து நைசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  • மீண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, புளியை சற்று நீர்க்கக் கரைத்துவிட்டு, உப்பைப் போடவும்.
  • புளித்தண்ணீர் நன்றாகக் கொதித்தவுடன் இட்லித்துண்டுகளைப் போட்டு நன்றாகக் கிளறவும்.
  • தண்ணீர் நன்றாக வற்றியபின்(அநேகமாக இட்லித் துண்டுகள் நீரை உறிஞ்சிவிடும்.) அரைத்துவைத்துள்ள மசாலாப் பொடியைப் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

seeyaalam 3

* சூடாகச் சாப்பிடவே சுவையாக இருக்கும். ஆனாலும் இந்தச் சீயாளம் மூன்று நான்கு நாள்கள் வரை கெடாது.

* இந்த ‘எங்கள் பக்கத்தி’லேயே ஒரு பக்கத்தில் சீயாளத்துக்கு 1 பங்கு பயத்தம் பருப்பும், 1 பங்கு கடலைப் பருப்பும் போட்டு அரைக்க வேண்டும் என்று சொல்வார்கள். முழுவதுமே பயத்தம் பருப்பிலேயே கூட சிலர் செய்வார்கள். அதெல்லாம் நம் இஷ்டம்தான். பொதுவாக, கடலைப் பருப்பு அதிகம் இருந்தால், நிறைய சீயாளம் காணும். பயத்தம் பருப்பு அதிகம் இருந்தால் நல்ல மணமாக இருக்கும். உள்ளே மெத்தென்று குழலோடி இருக்கும். நடுநிலைவாதிகள் பாதிப் பாதி எடுத்துக் கொள்ளலாம். நான் மேலே சொல்லியிருக்கும் அளவிலேயே செய்வேன்.

* சாதாரண நாள்களில் செய்யும்போது, ஒரேநாளில் சீயாளத்துக்கு இவ்வளவு கஷ்டப்பட முடியாதென்று நினைப்பவர்கள் (உண்மையில் கஷ்டம் எதுவும் இல்லை, நேரம் அதிகம் எடுக்கும் அவ்வளவே.) இட்லிகளை முதலிலேயே செய்து ·ப்ரீசரில் வைத்து, மசாலாப் பொடியும் முதலிலேயே அரைத்துவைத்துக் கொண்டால் தேவைப்படும் பொழுது எடுத்து மைக்ரோவேவ் அவனில் சூடாக்கி, துண்டுகளாக்கி பத்தே நிமிடங்களில் செய்துவிடலாம்.

நவராத்திரி சிறப்புக் கட்டுரை: சிங்கப்பூரில் ஆலயங்கள் – ஜெயந்தி சங்கர்.

இதை ஏற்கனவே மரத்தடிக் குழுமத்தில் இட்டிருக்கிறேன். அங்கே ரசனை இல்லாதவர்களால் கண்டுகொள்ளப்படாமல் போனது. (Grrr..) பின்னர் ஜி.ராவின் பதிவில் பின்னூட்டமாக இட, கைப்புள்ளயும் ஜோசஃப் சாரும் “junk பாஷை, ஒன்றும் புரியவில்லை” என்று சொல்லிவிட்டார்கள். :(( அதனால் முடிந்தவரை புரிகிற மொழியில்….

-0-

என்னவோ எல்லோரும் நவராத்திரி என்றாலே சுண்டல் என்று தான் நினைக்கறார்கள். நிஜத்தில் ஒரு நான்கைந்து நாள்கள் தான் சுண்டல் செய்வோம். அநேகமாக முதல் நாள் ஏதாவது பழமாகத் தான் இருக்கும். ஏனென்றால் அன்று அதிகம் யாரும் வீட்டுக்கு வர மாட்டார்கள்.

ஆனால் எங்கள் பக்கத்தில் (இந்த ‘எங்கள் பக்கத்தில்’ என்பது என்னவென்று எனக்கே சரியாக define செய்யத் தெரியவில்லை. அப்புறம் சொல்கிறேன் என்று அப்போது சொல்லியிருந்ததையே இப்போதும் சொல்கிறேன்.) நவராத்திரி வெள்ளிக்கிழமை வந்தால் உக்காரை, சனிக்கிழமை எள்ளுருண்டை (அல்லது எள்ளுப் பொடி), ஞாயிற்றுக்கிழமை கோதுமை அப்பம் இப்படித்தான் செய்வார்கள்.

உக்காரை ஒரு மரபு சார்ந்த உணவு. முக்கியமாக தீபாவளிக்கும் அந்தக் காலங்களில் இதைச் செய்வார்களாம். ரொம்ப அந்தக் கால ஐட்டம். ஸ்ரீரங்கத்துலயே எனக்குத் தெரிந்து மொத்தம் ஒரு பத்து பேர் வீட்டில் கூட  செய்வார்களா என்று தெரியவில்லை. பொதுவாக எல்லோர் வீட்டிலும் அன்று அரிசிப் புட்டு தான் செய்வார்கள். நாங்கள் அதை ‘மென்னியடைச்சான் பொடி’ என்று தான் சொல்வோம். அப்படியே தொண்டையை அடைக்கும். படுமோசமாக இருக்கும். 😦

இனி உக்காரை..

தேவையான பொருள்கள்:

பயத்தம்பருப்பு – 1 கப்
கடலைப்பருப்பு – 1 கப்
உப்பு – 1 சிட்டிகை
வெல்லம் – 2 கப்
நெய் – 4 தேக்கரண்டி
மு.பருப்பு – 50கிராம்
தேங்காய்
ஏலப்பொடி.

ukkaarai 1

செய்முறை:

  • பருப்புகளை நன்கு களைந்து 4 மணிநேரம் ஊறவைத்து சிட்டிகை உப்பு சேர்த்து  முடிந்தால் கிரைண்டரில் நன்றாக- மிக நன்றாக இட்லி மாவுப் பதத்தில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த மாவை இட்லித் தட்டுகளில் இட்டு, வெயிட் போடாமல் 10 நிமிடம் வேகவைத்து எடுத்து நன்கு ஆறவிடவும்.
  • இட்லிகள் நன்கு ஆறியபின், மிக்ஸியில் இரண்டு இரண்டு இட்லிகளாக உடைத்துப் போட்டு ஒரு சுற்று சுற்றினாலே பொடியாக உதிர்ந்துவிடும். இட்லிகள் நன்கு ஆறியிருக்க வேண்டியது முக்கியம். (சின்ன வயதில், மிக்ஸியில்லாத காலத்தில் நெய்யைத் தொட்டுக் கொண்டு கை விரல்களால் திரித்துத் திரித்து சிறு கட்டி கூட இல்லாமல் பாட்டி மெனக்கெட்டு உதிர்த்தது நினைவிருக்கிறது.)
  • வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து *முற்றிய பாகாகக்* காய்ச்சி ஏலப்பொடி சேர்க்கவும்.
  • பின், அடுப்பை சிம்மில் வைத்து, உதிர்த்த பொடியைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். ஒன்றாகக் கலக்கும் வரை அடுப்பு எரிந்தால் போதும்.
  • தேங்காயை மிக மிகச் சன்னமாக நறுக்கி கால் கப் எடுத்துக் கொள்ளவும்.
  • நெய்யைச் சூடாக்கி, உடைத்த முந்திரி, தேங்காய்த் துணுக்குகளைப் பொரித்துச் சேர்க்கவும்.
  • ஆறியதும் ஒரு பாத்திரத்தில் அடைத்து வைத்து ஒரு நான்கு மணி நேரம் கழித்துப் பார்த்தால் உதிர் உதிராக இருக்கும்; எடுத்து உபயோகிக்கலாம்.

ukkaarai 2

* இட்லி உதிர்ப்பதற்கு முன் நன்கு ஆறியிருக்க வேண்டும், பாகு மிக முற்றியதாக இருக்க வேண்டும் என்பதும் உதிர் உதிரான நல்ல உக்காரைக்கு மிக முக்கியம்.

ukkaarai 3

சில சாதாரணக் குறிப்புகள்:

* இந்த ‘எங்கள் பக்கத்தி’லேயே ஒரு பக்கத்தில் உக்காரைக்கு 2 பங்கு பயத்தம் பருப்பும், 1 பங்கு கடலைப் பருப்பும் போட்டு அரைக்க வேண்டும் என்று சொல்வார்கள். முழுவதுமே பயத்தம் பருப்பிலேயே கூட சிலர் செய்வார்கள். அதெல்லாம் நம் இஷ்டம்தான். பொதுவாக, கடலைப் பருப்பு அதிகம் இருந்தால், நிறைய உக்காரை காணும்; நல்ல உதிராக வரும். பயத்தம் பருப்பு அதிகம் இருந்தால் நல்ல மணமாக இருக்கும். நடுநிலைவாதிகள் பாதிப்பாதி எடுத்துக் கொள்ளலாம்.

* சாதாரண நாள்களில் செய்யும்போது, ஒரேநாளில் உக்காரைக்கு இவ்வளவு கஷ்டப்பட முடியாதென்று நினைப்பவர்கள் (உண்மையில் கஷ்டம் எதுவும் இல்லை, நேரம் அதிகம் எடுக்கும் அவ்வளவே.) இட்லிகளை முதலிலேயே செய்து ·ப்ரீசரில் வைத்துவிட்டு, தேவைப்படும் பொழுது பாகு காய்ச்சி (காய்ச்சிக் கொண்டிருக்கும்போதே இட்லிகளைப் பொடித்து) இதை பத்தே நிமிடங்களில் செய்துவிடலாம்.

சந்தோஷமான குறிப்புகள்:

* இந்த உக்காரை மூன்று நான்கு நாள்கள் வரை கெடாது. முக்கியமாக, செய்தவுடனே (பக்கி மாதிரி ) சாப்பிடுவதைவிட ஒருநாள் கழித்துச் சாப்பிட்டால் சுவை மிகுதியாக இருக்கும். (புளியோதரை மாதிரி.)

* எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது.

மிக முக்கியமான குறிப்புகள்: 🙂

* உக்காரையில் தேங்காய், முந்திரி தவிர வீட்டில் புத்தாண்டிற்கு வந்த ட்ரை ·ப்ரூட்ஸ், மிஞ்சிக் கிடக்கும் கிஸ்மிஸ் எல்லாவற்றையும் அதன் தலையில் பொரித்துக் கொட்டக் கூடாது. புனிதம் போய்விடும். 🙂

* ஏற்கனவே எப்படி நான் அக்கார அடிசிலை, சர்க்கரைப் பொங்கல் என்றோ, பாயசம் என்றோ சொல்லிக் கேவலப்படுத்தக் கூடாது என்று சொல்லியிருக்கிறேனோ அதே மாதிரி இந்த ‘உக்காரை’யை ‘புட்டு’ என்றோ, அடுத்ததாக எழுதப் போகிற சீயாளத்தை ‘டோக்ளா’ என்றோ சொல்பவர்களை பசிக்காத புலி தின்னட்டும். 🙂 உக்காரையை வழக்கு மொழியில் ஒக்கோரை என்றும் சிலர் சொல்வர்(நானும்தான்). அது பரவாயில்லை.

-0-

இல்லை, அரிசிப்புட்டுதான் உசத்தி என்று சொல்பவர்கள், உக்காரையை செய்து சாப்பிட்டுப் பார்த்துவிட்டு தகுந்த வாதங்களோடு வர வேண்டும். நான் ரெடி! 🙂

ஆனால் புட்டு தான் அப்படி(!) இருக்குமே தவிர, எங்கள் பக்கத்தில் சீமந்தம் முடிந்து மறுநாள் பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்குக் கிளம்பும்போது மாமியார், இந்தப் புட்டுடன் ‘உருண்டை’ என்ற ஒன்றை செய்து இரண்டையும் கலந்து கட்டிக்கொடுத்து மருமகளை அனுப்புவார்கள். அந்த உருண்டை நிஜமாவே அபாரமாக இருக்கும். அதுவும் அப்படித்தான், உடனே சாப்பிடக் கூடாது. புட்டில் ஊற விட்டுவிட வேண்டும். அப்புறம் ஆழ்வார்

….. என்னைத் தன் வாரமாக்கி வைத்தாய்
வைத்ததன்றி என்னுள் புகுந்தாய்….’

என்று பெருமாளைப் பாடின மாதிரி அப்படியே புட்டுடைய சிறப்புகள் உருண்டைகளுக்குள்ளும் உருண்டைகளின் சிறப்புகள் புட்டுக்குள்ளும் நுழைந்து ஆஹா.. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! என்னமோ போங்க! இப்பல்லாம் all lazy மாமியார்ஸ், இதெல்லாம் செய்யறதேயில்லை. சும்மா ஒரு மட்டைத் தேங்காயைக் கட்டி அனுப்பிடறாங்க. Very bad!

நவராத்திரி நாயகி: சமயபுரம் மாரியம்மன் – ஷைலஜா. 

பஜ்ஜி குறித்த முந்தைய பதிவு

தேவையான பொருள்கள்:

கடலைப் பருப்பு – 1 கப்
பச்சரிசி – 1/3 கப்
துவரம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
காய்ந்த மிளகாய் – 5 அல்லது 6
பெருங்காயம்
எண்ணெய்
உப்பு – தேவையான அளவு.

பஜ்ஜி மிளகாய் (அதிகக் காரமில்லாத பெரிய சைஸ் மிளகாய்)

milagaai bajji 1

செய்முறை:

  • கடலைப் பருப்பு, துவரம் பருப்பு அரிசியைச் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • ஊறியதும் பெருங்காயம், காய்ந்த மிளகாய், சேர்த்து மிக மென்மையாக இட்லிமாவு பதத்திற்கு அரைக்கவும். கிரைண்டரில் அரைத்தால் நலம். மிக்ஸியும் பரவாயில்லை.
  • அரைத்து எடுப்பதற்கு முன் உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • மிளகாய்களை ஓர் ஊசியால் ஆங்காங்கே துளைகள் செய்து, நான்கு மணி நேரம் உப்புத் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடித்து எடுத்து வைக்கவும். இப்படிச் செய்வதால் மிளகாய் அதிகம் காராமல் இருக்கும்.
  • வழக்கமான முறையில் பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு, இரண்டு பக்கமும் பொரிந்து பஜ்ஜி உப்பி வந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும்.

* தோய்த்திருக்கும் மேல்மாவு அடர்த்தியாக இல்லாமல், மெலிதாக மூடியிருந்தால் பாதி வேகும்போதே வெளியே எடுத்துவிடவும். அடுத்த தவணை பஜ்ஜியை எண்ணெயில் போட்டுவிட்டு, இவை ஆறியதும் மீண்டும் மாவில் தோய்த்து எண்ணெயில் நன்றாகப் பொரித்து எடுக்கவும். இப்படிச் செய்வதால் கனமான பஜ்ஜி கிடைக்கும்.

ஸ்டஃப்ட் மிளகாய்:

milagaai bajji 2

பூரணம் செய்ய: (ஏதாவது ஒன்று)

1. புளி, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயம்
2. உருளைக் கிழங்கு, வெங்காயம், சீரகப் பொடி, கொத்தமல்லித் தழை, எலுமிச்சைச் சாறு
2. கொத்தமல்லிச் சட்னி (காரம் இல்லாமல்)
3. வெங்காயச் சட்னி (காரம் இல்லாமல்)
4. புதினாச் சட்னி (காரமில்லாமல்)

milagaai bajji 3

  • மிளகாய்களை ஜாக்கிரதையாக கத்தியால் காம்புக்குக் கீழிலிருந்து அடிக்கு முன்புவரை நடுவில் ஒரு கீறல் போடவும்.
  • உள்விதை, தண்டை நீக்கிவிடவும்.
  • நீர்த்த புளித் தண்ணீரைக் கொதிக்கவைத்து. அதில் மிளகாய்களைப் போட்டு மூடிவைக்கவும்.
  • ஒரு நிமிடம் கழித்து நீரை வடித்துவிட்டால் காரம் போயிருக்கும்.
  • சிறிது கடலை மாவில் உப்பு, ஓமம் அல்லது சீரகம் கலந்து உள்ளே அடைக்கலாம். அல்லது கடலை மாவிலேயே புளித் தண்ணீர், உப்பு, ஓமம் (அல்லது சீரகம்) சேர்த்துக் கலந்து உள்ளே அடைக்கலாம். உள்ளேயும் கடலை மாவு விரும்பாதவர்கள், வேகவைத்த உருளைக் கிழங்கை, மசித்து, மெலிதாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, சீரக்ப் பொடி, உப்பு கலந்து ஸ்டஃப் செய்யலாம். அல்லது காரம் இல்லாத/ குறைந்த காரமுள்ள வெங்காயச் சட்னி, கொத்தமல்லிச் சட்னி அல்லது புதினாச் சட்னியை உள்ளே சிறிது தடவியும் வைக்கலாம்.

பிரட்:

பிரட் ஸ்லைஸ்களை ஓரம் நீக்கி, அதன் அளவைப் பொருத்து நான்காக அல்லது இரண்டாக வெட்டிக் கொள்ளவும். ப்ரட்டில் செய்யும் போது கொத்தமல்லி அல்லது புதினா சட்னியை ஒரு பக்கத்தில் தடவி, இன்னொரு ப்ரட்டை வைத்து மூடி மாவில் தோய்த்து எண்ணையில் போடவும்.
 

குடமிளகாய்:
 
குடமிளகாயை ஒன்றரை அங்குலத் துண்டுகளாக நறுக்கி, அதன் உள்பகுதியில் ஏதாவது காரமில்லாத சட்னியைத் தடவி, மாவில் தோய்த்துப் போடலாம்.
 

அப்பளம்:

அப்பளங்களை 4 அல்லது 6 பாகமாக உடைத்துக் கொள்ளவும். மசாலா அப்பளமாக இருந்தால் அப்படியே இரண்டு துண்டுகளை சேர்த்து மாவில் தோய்த்துப் போடலாம். சாதா அப்பளமாக இருந்தால் ஏதாவது சட்னி அல்லது நெய்யில் இட்லி மிளகாய்ப் பொடியைக் குழைத்து, ஒரு அப்பளத் துண்டில் தடவி, மற்றொரு துண்டால் மூடி, மாவில் தோய்க்கவும். இது எங்கள் வீட்டில் அதிகம் பேர் வாங்கிய பஜ்ஜி.
 

பனீர்:

பனீர் துண்டுகளை கெட்டியான சட்னியில் பிரட்டி, மாவில் தோய்த்துப் போடலாம். என்னைப் பொருத்த வரை கொத்தமல்லிச் சட்னி அதிகம் பொருந்துகிறது.
 

பேபி கார்ன்:

பேபி கார்னை உப்புக் கலந்த கொதிக்கும் நீரில் பத்து நிமிடங்கள் போட்டு வைத்து நீரை வடிக்கவும். மேலாக பூரணம் செய்ய 1ல் சொல்லியிருப்பதை மெலிதாகத் தடவி, மாவில் தோய்த்துப் போடலாம். அல்லது எலுமிச்சை மூடியை மேலாகத் தேய்த்து, அதன்மேல் மிளகாய்த் தூள் தூவி, பின்னர் மாவில் தோய்த்துப் போடலாம்.பேபி கார்னிலும் மிகச் சிறிய அளவு இருப்பவை மட்டுமே ஏற்றதாக இருக்கிறது. அல்லது கொஞ்சம் பெரிதாக இருந்தால் நீளவாட்டில் குறுக்கே வெட்டி உபயோகிக்கலாம். 
 

கோஸ்:

கோஸ் இலைகளை தனித் தனியாகப் பிரித்து, தண்டுப் பகுதியை நீக்கி, அந்த இடத்தில் இலையை இரண்டாக்கி, ஒவ்வொன்றிலும் சிறிது கொத்தமல்லிச் சட்னியை தடவி மடித்து, மாவில் தோய்த்துப் போடலாம். இது உண்மையிலே எதிர்பாராத அளவு சுவையாக இருக்கிறது.
 

காளான்:

சிப்பிக் காளானை அப்படியே மாவில் தோய்த்து பஜ்ஜி போடலாம் என்று சொல்கிறார்கள். நான் செய்ததில்லை.
 

வாழைப்பழம்:

வாழைப்பழத்தை வட்ட வட்டமாக நறுக்கி பஜ்ஜி செய்கிறார்கள். நான் என்றுமே செய்வதாக இல்லை. விரும்புபவர்கள் முயற்சித்துப் பார்க்கவும்.
 

* மேலே சொல்லியிருப்பவைகளை, சின்னக் குழந்தைகளுக்கு எந்தச் சட்னியும் வைக்காமலும் செய்து கொடுக்கலாம். பஜ்ஜியின் காரமே அவர்களுக்கு அதிகமாக இருக்கும்.

-0-

காலிஃப்ளவர் பஜ்ஜி

தேவையான பொருள்கள்:

காலிஃப்ளவர் – 1
கடலை மாவு –  1/2 கப்
மைதா மாவு – 1/2 கப்
அரிசி மாவு – 1/4 கப்
டால்டா – 1 டீஸ்பூன்
ஓமம் –  1/2 டீஸ்பூன் (விரும்பினால்)
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்

cauliflower bajji

 செய்முறை:

  • காலிஃப்ளவர் பூவை காம்புடன் பெரிய பெரிய கிளையாக எடுத்துக் கொள்ளவும்.
  • நீரைக் கொதிக்க வைத்த உப்பு சேர்த்து பூக்களை அதில் போட்டு மேலும் 2 நிமிடன்கள் கொதிக்கவிட்டு 5 நிமிடங்களுக்கு மூடி வைத்து நீரை வடிகட்டவும்.
  • கடலை மாவு, மைதா, அரிசி மாவு, உப்பு, டால்டா, மிளகாய்த் தூள் கலந்து முதலில் கையால் நன்கு கலந்து பின்பு தேவையான நீர் விட்டு இட்லிமாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்துக் காய்ந்ததும், பூக்களை மாவில் தோய்த்து பொரித்தெடுக்கவும்.

* வழக்கமான பஜ்ஜி மாவிலும் இதைச் செய்யலாம்.

* சின்னச் சின்ன பூக்களாக உதிர்த்து, மாவில் கலந்து பக்கோடா மாதிரி கொத்தாகவும் போடலாம். ஆனால் பக்கோடாவிற்கு இருப்பது போல் பஜ்ஜி மாவு இறுக்கமாக இல்லாமல் தளர்வாகத் தான் இருக்க வேண்டும்.

* பஜ்ஜிக்கு நறுக்கி வைத்து மிஞ்சிய கலவையான காய்களை அப்படியே இரவு, புளியைக் கரைத்து குழம்பு வைக்கும்போது காயாகப் போட்டு, மிஞ்சிய கடலை மாவுக் கலவையைக் குழம்பிலேயே கரைத்து விட்டதில் வந்த கதம்பப் புளிக் குழம்பு, எந்த சமையல் குறிப்புக்கும் அடங்காத அபார சுவை; அவரவர் சமையலறைக்கே பிரத்யேகமான, குறிப்பாகச் சொல்ல முடியாத சில சமையலில் இதுவும் அடங்கும்.

பஜ்ஜி கட்டுரைத் தொடரின் இன்னொரு பார்வை…

தமிழ்நாட்டில் பெண்பார்க்கச் செல்பவர்களுக்குக் கொடுக்கப் படும் முக்கிய உணவு. : ) எப்பொழுதிலிருந்து அந்த இடத்தை இது பிடித்தது, ஏன் அவர்களுக்கு பஜ்ஜியை தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை மக்கள் வந்ததும் வேகமாகத் தயாரிக்க முடிவதும், ஒரே வகையில் வெரைட்டி காண்பிக்க முடிவதும் காரணமாக இருக்கலாம். தமிழ்நாட்டின் நடைபாதைத் தள்ளுவண்டிகளில் அன்றாடம் அதிகம் விற்பனை ஆவதும் இதுவாகத் தான் இருக்கும்.

தேவையான பொருள்கள்:

கடலைப் பருப்பு – 1 கப்
பச்சரிசி – 1/3 கப்
துவரம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
காய்ந்த மிளகாய் – 4 அல்லது 5
பெருங்காயம்
எண்ணெய்
உப்பு – தேவையான அளவு.

கத்திரிக்காய், வாழைக்காய், வெங்காயம், உருளைக் கிழங்கு, சௌசௌ போன்ற காய்கறிகள்….

bajji 1

செய்முறை:

  • கடலைப் பருப்பு, துவரம் பருப்பு அரிசியைச் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • ஊறியதும் பெருங்காயம், காய்ந்த மிளகாய், சேர்த்து மிக மென்மையாக இட்லிமாவு பதத்திற்கு அரைக்கவும். கிரைண்டரில் அரைத்தால் நலம். மிக்ஸியும் பரவாயில்லை.
  • அரைத்து எடுப்பதற்கு முன் உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • காய்கறிகளை தயாராக நறுக்கிக் கொள்ளவும். கத்திரிக்காய், உருளைக் கிழங்கு, வெங்காயம், சௌசௌ போன்ற உருளையான காய்களை மெல்லிய வட்டமாக நறுக்கவும். வாழைக்காயை இரண்டாக வெட்டி, அகலமான இரண்டு பக்கங்களில் மட்டும் தோல்சீவி, நீளவாக்கில இரண்டு பக்கமும் தோலோடு மெலிதாக நறுக்கவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து நன்கு சூடாக்கவும். பஜ்ஜிக்கு எண்ணெய் குறைவாகக் காய்ந்திருந்தால் சரியாக வேகாமல் எண்ணெயைக் குடித்து சவசவவென்றிருக்கும். அதிகம் காய்ந்திருந்தால் மேலாகக் கருகி, உள்ளே காய் வேகாமல் இருந்துவிடும். சரியான பதத்தில் எண்ணெய் சுட்டதும் அடுப்பை நிதானமான சூட்டில் வைக்கவும்.
  • நறுக்கித் தயாராக வைத்திருக்கும் காய்கறிகளை ஒவ்வொன்றாக மாவில் தோய்த்து, எண்ணெயில் போடவும்.
  • இரண்டு பக்கமும் பொன்னிறமாகப் பொரிந்து பஜ்ஜி உப்பிவந்ததும் எண்ணெயை வடித்து வெளியே எடுக்கவும். 

bajji 2 

*  வெங்காயம், சௌசௌ போன்ற காய்கள் கொஞ்சம் இனிப்பாக இருப்பது பிடிக்கவில்லையென்றால் குடமிளகாயை வட்டமாக நறுக்கி, அதையும் அவைகளோடு சேர்த்து தோய்த்துப் போடலாம்.

* தோய்ந்திருக்கும் மாவு அடர்த்தியாக இல்லாமல், மெலிதாக மூடியிருந்தால் பாதி வேகும்போதே வெளியே எடுத்துவிடவும். அடுத்த தவணை பஜ்ஜியை எண்ணெயில் போட்டு எடுத்துவிட்டு, இவை ஆறியதும் மீண்டும் மாவில் தோய்த்து எண்ணெயில் நன்றாகப் பொரித்து எடுக்கவும். முக்கியமாக அப்பளம் போன்றவைகளுக்கு இந்தப் பிரச்சினை வரலாம்.

* வீட்டிலேயே பருப்புகளை ஊறவைத்து அரைப்பது மிகச் சிறந்த முறை. ஊறவைத்து செய்ய நேரமில்லை என்றால் கடலைப் பருப்பு, துவரம் பருப்பை வாணலியில் வறுத்து 5 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து, மிக்சியில் நைசாக அரைத்து, அரிசி மாவு கலந்து செய்யலாம்.

* பின்வருகிற அளவுகளில் மொத்தமாக மிஷினிலும் அரைத்துவைத்துக் கொள்ளலாம். அவ்வப்போது தேவையான அளவு மாவை உப்பு பெருங்காயம் சேர்த்துக் கரைத்துச் செய்யலாம்.

1. கடலைப் பருப்பு – 3 கப், பச்சரிசி – 1/2 கப், காய்ந்த மிளகாய் – 12

2. பச்சரிசி 1 1/2 கப், துவரம் பருப்பு – 1 கப், கடலைப் பருப்பு – 1 கப், உளுத்தம் பருப்பு – 1/2 கப், காய்ந்த மிளகாய் – 12

* சட்டென பஜ்ஜி தயாரிக்க கடலை மாவு ஒரு கப், அரிசி மாவு ஒரு டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கரைத்தும் செய்யலாம். அதிகம் பேர் அப்படித் தான் செய்கிறார்கள்.

* பஜ்ஜி கரகரப்பாக இருக்க சமையல் சோடா சேர்ப்பதை விட இரண்டு டீஸ்பூன் டால்டா அல்லது 1 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃளோர் சேர்த்துக் கொள்ளலாம்.

* கரகரப்பாக இல்லாமல் மெத்தென்று இருக்க மைதா மாவு 2 டேபிள்ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம். இது ஆறிய பின்னும் சுவையாக இருக்கும்.

* இட்லி அல்லது தோசை மாவு இருந்தாலும் ஒரு கரண்டி கலந்து கொள்ளலாம்.

* பஜ்ஜி கடையில் செய்வதைப் போல் நிறமாக இருக்க விரும்புபவர்கள் கலர் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது காஷ்மீர் மிளகாய்த் தூள் சேர்த்து உபயோகித்தாலும் அடர் சிவப்பாக இருக்கும். என்னுடையது அதுவே.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தேங்காய்ச் சட்னி…

நல்ல மழை…

சுடச் சுட செய்து தட்டில் எடுத்து வந்து கையில் கொடுக்க அம்மா அல்லது மாமியார் [ஒருவேளை அவர்களைக் கேட்டால் மருமகள் என்று சொல்லலாம். :)]…

“போரடிக்குதுன்னு நீ சொன்னியேன்னு தான் வேலையை எல்லாம் போட்டுட்டு சீக்கிரமே வந்தேன்” என்று (பொய்) சொல்லிக் கொண்டு எதிர்பாராத நாளில் மாலையிலேயே கிரிக்கெட் மேட்ச் பார்க்க வரும் கணவன்…

பேசுவதற்கு சூடான விஷயங்கள்..

“C6 block கட்டிடமே என்னமோ இடிஞ்சு விழுந்துடுச்சுன்றாங்க. காலனியே அங்க இருக்கு, நீ பஜ்ஜி போட்டுகிட்டிருக்க?”

“எதுக்கு இவ்ளோ அதிர்ச்சி? ரெண்டு வருஷமா அதைத் தானே நான் அலறிகிட்டிருக்கேன். கன்ஸ்ட்ரக்ஷன் படு கேவலம். எல்லாரும் சாப்பிட்டுட்டாங்கன்னு நான் சொல்லும்போதெல்லாம் ஆளாளுக்கு வானமாமலை ஜீயரைச் சுத்தி நிக்கிற அடிப்பொடிகள் மாதிரி உஸ் உஸ்னு என் வாயை அடைச்சாங்க. இன்னிக்கு என்னவோ நடக்க முடியாதது நடந்த மாதிரி…. எனக்கு அதிர்ச்சியெல்லாம் இல்லை. நல்லவேளை, யாருக்கும் ஒன்னும் ஆகலை, வீட்டுக்குள்ள இருந்திருக்காங்க. இதுக்கு மேல இதுக்கெல்லாம் என்னால ரியாக்ஷனும் காமிக்க முடியாது! நான் அங்க ஒன்னும் சொல்லாம வந்ததுக்கே எனக்கு நன்றி சொல்லுங்க. தேவை இல்லைன்னு தான் உங்களுக்கும் ஃபோன்ல சொல்லலை.”

“நீ போய்ப் பாக்கலையா?”

“பின்ன பார்க்காம? ஃபர்ஸ்ட் ஃப்ளோர் வாசல் கதவுலேருந்து மாடிப்படி வரைக்கும் முழுக் காரிடரும் மொத்தமா விழுந்திருக்கு. லட்சக்கணக்குல காலனில திருட்டுப் போனப்ப ஒரு FIR ஃபைல் பண்ண என்ன பிகு செஞ்சாங்க போலீஸ் ஸ்டேஷன்ல, இப்ப ஊருக்கு முன்னாடி வந்து நிக்கறாங்க. நான் போறதுக்குள்ளயே Fire Brigades, Police, Media… எல்லாரும் வந்தாச்சு. ஒரு மாசத்துக்குள்ள காலி செய்யணுமாம். இல்லைன்னா சீல் வெப்போம்னு ஆர்டர்..”

“உனக்கு பயமா இல்லையா இந்த பில்டிங்ல இருக்க? கூலா பஜ்ஜி சாப்பிடற, அலட்டிக்காம கம்ப்யூட்டர்ல வேற வந்து உக்கார்ற?”

“இல்லையே சூடாத் தான் பஜ்ஜி சாப்பிடறேன். உங்களுக்கு பயமா இருந்தா ப்ளாட்ஃபார்ம்ல போய்ப் படுங்க. நானெல்லாம் தமிழச்சி. உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்…” ஐயோ!! மேற்குப் பதிப்பகம் கிட்டேயிருந்து பின்னூட்டம் வந்திருக்கா?? தலை சுத்துதே..!!!

மிளகாய் பஜ்ஜி இன்னபிற….

பஜ்ஜி குறித்த சுவாரசியமான கட்டுரைத் தொடர்…

 1.
தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்
பயத்தம் பருப்பு – 3/4 கப்
கடலைப் பருப்பு – 1/4 கப்
எள் – 1 டீஸ்பூன்
உப்பு

mullu murukku_sreejayanthi

செய்முறை:

  • அரிசியைக் களைந்து, நிழலில் உலர்த்தி, மிக்ஸியில் அரைத்து, சலித்துக் கொள்ளவும்.
  • பருப்புகளை சிவக்க வறுத்து, நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • 2 கப் அரிசிமாவிற்கு, ஒரு கப் பருப்பு மாவு, உப்பு, எள், வெண்ணை சேர்த்து, நீர்விட்டுப் பிசைந்து கொள்ளவும்.
  • முள்ளு முறுக்கு அச்சில் சின்னச் சின்ன ஒற்றை இழை முறுக்குகளாக 2 அல்லது 3 ஆகவோ, இரண்டு மூன்று இழை கொண்ட பெரிய முறுக்குகளாகவோ பிழிந்து, நிதானமான சூட்டில், திருப்பிப் போட்டு, இருபுறமும் பொன்னிறமாகப் பொரித்து, ஓசை அடங்கியது எடுக்கவும்.

* அதிகமாகச் செய்வதாக இருந்தால் தவணை முறையில் மாவைக் கலந்து செய்யவும்.

2.
3 கப் அரிசியையும்(ஊறவைக்காதது), 1 கப் உளுத்தப் பருப்பையும், 1 கப் பயத்தம் பருப்பையும் தனித் தனியாக வறுத்துக் கொண்டு, நைசாக அரைத்து, சிறிது சூடுபடுத்திய எண்ணெய், உப்பு, சீரகம், காரப் பொடி சேர்த்து முள்ளு முறுக்கு செய்யலாம்.

3.
அரிசி மாவு ஒரு கப், பொட்டுக் கடலை மாவு 4 கப் சேர்த்து, உப்பு, எள் கலந்து முள்ளு முறுக்கு செய்தால் கரகரப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.

4.
4 கப் அரிசி, 3/4 கப் பயத்தம் பருப்பு, 3/4 கப் கடலைப் பருப்பை தனித் தனியாக லேசாக வறுத்து, மிஷினில் அல்லது மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொண்டால் முள்ளு முறுக்கு, ரிப்பன், தட்டை, பஜ்ஜி கூட செய்யலாம்.

அதிகம் மசாலா சேர்க்காமல், எளிமையான கூட்டு. அநேகமாக எல்லாக் காய்களிலும் இதைச் செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

காய் – 1/2 கிலோ
பயத்தம் பருப்பு – 1/2 கப்
கடலைப்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கறி மசாலாப் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை

தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

beans payaththam paruppu koottu

செய்முறை:

  • பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பை தண்ணீரில் கழுவிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • பருப்புகளுடன் ஒரு கப் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிம்மில் வைத்து மூடி வைத்து பாதியளவு வேக வைக்கவும்.
  • இந்த நேரத்தில் காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் காயையும் சேர்த்து, தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவும். காய் வெந்திருக்கும் நேரத்தில் பருப்பு  இலைப் பதமாக வெந்திருக்கும்.
  • கறி மசாலாப் பொடி அல்லது ரசப் பொடி சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதிக்கவைத்து தளர்வான பதத்தில் இறக்கவும். (ஆறியதும் அதிகம் இறுகும்.)
  • மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

vellarikkai  payaththam paruppu koottu

* பருப்பை குக்கரிலும் வேக வைக்கலாம். ஆனால் அதிகம் வெந்து குழைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகம் வெந்தால் கூட்டோடு சேர்க்கும்போது மாவாகக் கரைந்துவிடும். மேலும் வாணலியில் தனியாக வேகவைக்கும்போது மணமும், சுவையும் நிச்சயம் அதிகமாக இருக்கும்.

* பயத்தம் பருப்போடு தான் கடலைப் பருப்பையும் சேர்க்க வேண்டுமென்பதில்லை. நான் தாளிக்கும் போதே அத்தனை கடலைப் பருப்பையும் சிவக்க வறுத்துவிடுவேன். நன்றாக இருக்கும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

ரசம் சாதம், தயிர் சாதம், துவையல் சாதம், பொடி கலந்த சாதம், பருப்பு சேர்க்காத குழம்பு((மருந்துக் குழம்புகள், மோர்க் குழம்பு தவிர்த்து)  சாதங்களுடன் சேரும்.

துவையல் சாதம் தவிர மற்றவற்றிற்குச் செய்யும்போது, இறக்குவதற்கு முன் இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.

போகிப் பண்டிகையன்று இனிப்புப் போளி தயாரிக்கும்போது அதே முறையில் சுலபமாக இந்தப் போளியையும் செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

மேல்மாவு:

மைதா – 1 1/2 கப்
கோதுமை மாவு – 1/4 கப்(*)
ரவை – 2 டேபிள்ஸ்பூன்
கேசரிப் பவுடர் – 1 சிட்டிகை (விரும்பினால்)
எண்ணை – 1/2 கப்
சமையல் சோடா – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை

பூரணம்:
 
கடலைப்பருப்பு – 2 கப்
தேங்காய் – 1
கசகசா – 2 டீஸ்பூன்
உருளைக் கிழங்கு – 1 (விரும்பினால்)
பச்சை மிளகாய் – 8
பெருங்காயம் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிது
நெய் – தேவையான அளவு

செய்முறை:

  • மேல்மாவு பொருள்கள் அனைத்தையும் சிறிது எண்ணை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பின் சிறிது சிறிதாக நீர் சேர்த்து பிசைந்துவர வேண்டும். ரொட்டிக்கு மாவு பிசைவதை விட சிறிது தளர்வாக வந்ததும், மீதி எண்ணையையும் சேர்த்துப் பிசைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • கடலைப்பருப்பை முக்கால் பதத்திற்குமேல் வேகவைத்து(*) நீரைவடித்துக் கொள்ளவும்.
  • வெந்த கடலைப்பருப்போடு தேங்காய், பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.
  • உருளைக் கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
  • வாணலியில் நெய் அல்லது எண்ணையைச் சூடாக்கி, கசகசா, பெருங்காயம், அரைத்த விழுது, வேகவைத்த உருளைக் கிழங்கு, உப்பு, அரிந்த கொத்தமல்லித் தழை சேர்த்து இறுக்கமாகக் கிளறி இறக்கவும்.
  • மேல்மாவு, பூரணமாவு இரண்டையும் சிறுசிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.
  • மேல்மாவு உருண்டையை நடுவில் குழித்து கிண்ணம் மாதிரி செய்து, பூரண உருண்டையை வைத்து முழுவதும் வெளித் தெரியாமல் மூடி, சப்பாத்திப் பலகையில் வைத்து மெதுவாக சிறிசிறு அப்பள வடிவில் மெலிதாகப் பரத்தவும். பலகையில் மாவைத் தூவிக்கொண்டு அப்பளமிட்டால் சுலபமாக இருக்கும்.
  • இட்ட போளிகளை நெய் அல்லது எண்ணை தடவி தோசைக்கல்லில் போட்டு சீரான சூட்டில் பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.

* கடலைப் பருப்பை 4 மணிநேரம் ஊறவைத்து நீரை ஒட்ட வடித்து மற்ற சாமான்களோடு அரைத்தும் செய்யலாம்.

* சிலர் முழுவதுமே கோதுமை மாவு உபயோகிப்பார்கள். இதற்கு கோதுமை மாவில் மேல்மாவைப் பிசைந்து உரலில் போட்டு இடித்து பின் வாழையிலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் எண்ணை தடவி அப்பளமாகத் தட்ட வேண்டும்.

* கடலைப் பருப்பை ஊறவைக்கவோ, வேகவைக்கவோ நேரமில்லையென்றால் தேங்காய் பச்சை மிளகாயை மட்டும் அரைத்துக் கொள்ளலாம். கடலை மாவை லேசாக நெய்யில் வறுத்துக் கொள்ள வேண்டும். எண்ணையைச் சூடாக்கி, கசகசா, பெருங்காயம், அரைத்த விழுது, மசித்த உருளைக் கிழங்கு, உப்பு, வறுத்த மாவையும் சேர்த்துக் கொட்டி கிளறி கொத்தமல்லித் தழை சேர்த்து, ஆறியபிறகு உருண்டைகளாக்கியும் போளி செய்யலாம். ருசியாக இருக்கும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

கொத்தமல்லிச் சட்னி (2)

சாம்பார், குழம்பு, கறிவகைகள் சிலவற்றிற்கும் இந்தப் பொடியைப் பயன்படுத்தலாம்.

தேவையான பொருள்கள்:

காய்ந்த மிளகாய் –  300 கிராம்
தனியா – 3 கப்
துவரம் பருப்பு – 1  1/2கப்
கடலைப் பருப்பு –  1  1/2 கப்
மிளகு – 1 கப்
சீரகம் – 1/2 கப்
வெந்தயம் –  3 டீஸ்பூன்
கடுகு – 2 டீஸ்பூன்
பெருங்காயம் –  50 கிராம் கட்டி
விரளி மஞ்சள் – 10

sambar podi

செய்முறை:

  • விரளி மஞ்சளை சிறு சிறு துண்டுகளாக்கி வெயிலில் காயவைத்துக் கொள்ளவும். வெயில் இல்லாத காலங்களில்/இடங்களில் லேசாக வாணலியில் வறுத்துக் கொள்ளலாம். ஈரப்பதம் இருந்தால் மிக்ஸியில் அரைக்க வராது; பொடி சீக்கிரம் கெட்டுவிடும்.
  • தனியா, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு இவற்றை தனித் தனியாக எண்ணை விடாமல் வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  • கட்டிப் பெருங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு ஸ்பூன் எண்ணையில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • கடைசியில் மிளகாயை சிட்டிகை உப்பு(வறுக்கும்போது கமறாமல் இருக்க) சேர்த்து வறுக்கவும்.
  • எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைத்து, காற்றுப் புகாத பாட்டிலில்/டப்பாவில் எடுத்துவைக்கவும்.