கார மிக்ஸர் – 1

 
தேவையான பொருள்கள்:

அவல் – 3 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
பயத்தம் பருப்பு –  1 கப்
நிலக்கடலை – 1 கப்
பொட்டுக் கடலை – 1 கப்
முந்திரிப் பருப்பு – 1 கப்
கறிவேப்பிலை – 4 ஈர்க்கு
உப்பு – தேவையான அளவு
காரப் பொடி – தேவையான அளவு
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க
ஓமப்பொடி (அல்லது காராபூந்தி) – 1 1/2 கப்

 

செய்முறை:

  • கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து ஒரு துணியில் உலர்த்திக் காயவைக்கவும். (முழுவதும் காய்ந்திருக்கவேண்டியதில்லை.)
  • முந்திரிப்பருப்பை நாலைந்தாக உடைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும் துளைகளுள்ள ஒரு வடிகட்டி (பெரிய டீ வடிகட்டி, புளி வடிகட்டி) எடுத்து, அதில் கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, நிலக்கடலை, பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பை ஒவ்வொன்றாக, தனித்தனியாக போட்டு, பொரித்து, வடித்தட்டில் போட்டு எண்ணெயை வடிக்கவும்..
  • அவலை முதலிலேயே அந்த வடிகட்டியில் (மாவு, உடைந்த அவல் இல்லாமல்) சலித்துவைத்திருக்கவேண்டும்; கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, பொரித்து எடுக்கவும். சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
  • சிறிது கடலைமாவில் உப்பு, பெருங்காயம், மிளகாய்த் தூள் சேர்த்துக் கலந்து காராபூந்தி அல்லது ஓமப்பொடி அச்சில் பிழிந்துகொள்ளலாம். (மிக்ஸரில் கடலைமாவு சேர்த்த பொருள் இல்லாவிட்டால் சுவைகூடி வராது. அதனால் ஏதாவது ஒன்றாவது செய்து சேர்க்கலாம்; அல்லது அதைமட்டும் கடையில் வாங்கிச் சேர்த்துக்கொள்ளலாம்.)
  • எல்லாவற்றையும் ஒரு வாயகன்ற பெரிய பாத்திரத்தில் போட்டுக்கொண்டே வரவும்.
  • கடைசியில் கறிவேப்பிலையையும் பொரித்து, வடிகட்டவும்.
  • பொரித்த கறிவேப்பிலையுடன் தேவையான உப்புப் பொடி, மிளகாய்ப் பொடி, பெருங்காயம் சேர்த்து நன்கு கையால் நொறுக்கி, அந்தக் கலவையை நன்கு கலக்கவும்.

* எண்ணெயில் பொரிக்கும்போது தீ மிகக் குறைவாக இருந்தால் பருப்புகள், அவல் கடுக்’கென்று ஆகிவிடும். தீ அதிகமாக இருந்தால் கருகிவிடும். மிதமான தீயில் அடுப்பு எரியவேண்டும். அவல் போட்டதுமே பொரிந்துவிடவேண்டும்.

* விரும்புபவர்கள் வேறு மசாலாப் பொடிகளும் சேர்க்கலாம். ஆனால் இதுவே அதிகம் படுத்தாத வகை.

நான் திருமணமாகி, மஹாராஷ்டிரா வந்தபோது, ஊருக்கு வந்து இறங்கியதும் ஊர்த்தலைவர் தன் வீட்டிற்குக் கூட்டிப்போய் கொடுத்ததிலிருந்து இந்த ஆலூ போஹா அறிமுகம். அதற்குப்பின் தொடர்ந்து யார் வீட்டிற்குப் போனாலும் எல்லா உணவுகளோடும் நிச்சயம் இது உண்டு. பத்தே நிமிடங்களில் தயாரித்து, ஒரு சிறிய தட்டில் வைத்துக் கொடுக்கப்படும் இந்த உணவின் சுவை என்னை அவ்வளவு ஈர்த்தது. இதற்காகவே அவர்கள் சூஜி கா அல்வா என்று கொடுக்கும் சர்க்கரைக் குறைவான ரவை கேசரியை மன்னித்திருக்கிறேன். ஆனால் எனக்கு என்னவோ அப்பொழுதெல்லம் எத்தனை பேரிடம் செய்முறை கேட்டும், செய்வதை கூடவே நின்று பார்த்தும், செய்யவே வந்ததில்லை. இனி ஆலூ போஹாவே வாழ்க்கையில் செய்ய முயற்சிக்கக்கூடாது என்று ரங்கமணி சத்தியம் வாங்கும் அளவுக்கெல்லாம் சொதப்பியிருக்கிறேன்.

மீண்டும் இரண்டரை வருடங்கள் முன்பு ஹாங்காங்கிலிருந்து மும்பையில் விடிகாலை 3 மணிக்கு இறங்கியதிலிருந்து எதுவும் ஓடவில்லை. விடிந்ததும் விடியாததுமாக பெண்ணுக்கு ஸ்கூல் அட்மிஷனுக்கு ஓடிப் போய் அப்ளிகேஷன் வாங்கி, பள்ளிகள் பண்ணும் பாவனைகளை(இந்தியப் பள்ளிகளின் பாவனைகள் எனக்குப் புதிது; அதிர்ச்சி) செரிக்கமுடியாமல் டென்ஷனாகி… “எனக்குப் பசிக்கவேயில்லை. வேலை முடியறவரைக்கும் யாரும் கிட்டயே வராதீங்க,” என்று உட்கார்ந்துவிட்டேன். “அப்படியெல்லாம் உன்னை விட்டுடமுடியுமா? மஹாராஷ்டிரா உன்னை வரவேற்கிறது” என்று சொல்லிக்கொண்டே ஸ்கூல் கேண்டீனில் வாங்கிய ஆலூ போஹா தட்டை ரங்கமணி நீட்டியதும், ஒரே ‘நியாபகம் வருதே நியாபகம் வருதே…’. வித்யாசமாய் நிலக்கடலை எல்லாம் சேர்த்திருந்தார்கள்.

ஏன் இதைத் தயாரிக்க இவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று இப்போது ஆச்சரியமாக இருக்கிறது.

தேவையான பொருள்கள்:

சன்ன அவல் – 1 கப்
வெங்காயம் – 1 (பெரியது)
உருளைக் கிழங்கு – 1 (பெரியது)
பச்சை மிளகாய் – 2, 3
எலுமிச்சை – அரை மூடி
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை
தேங்காய்த் துருவல்

தாளிக்க:
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
நிலக்கடலை – 12, 15 (விரும்பினால்)
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை

 aloo poha

செய்முறை:

  • வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கை தோல் சீவியோ சீவாமலோ(நான் தோலை நீக்குவதில்லை.) பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில், எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • அடுப்பை சிம்மில் வைத்து, அரிந்த வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • உருளைக் கிழங்கோடு, தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மேலும் 3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  • உருளை வதங்கும் நேரத்தில், அவலை நீரில் சில நொடிகளுக்குள் அலசி நன்கு வடியவிடவும். அதிகம் தண்ணீரில் அவல் ஊறிவிடக் கூடாது.
  • வடித்த அவலையும் சேர்த்து மென்மையாகக் கிளறிவிடவும்.
  • அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சைச் சாறு பிழிந்து கலக்கவும்.
  • கேரட் துருவியில் தேங்காயை சன்னமாகத் துருவி, நறுக்கிய கொத்தமல்லித் தழையும் சேர்த்து பரிமாறவும்.

* உப்பு, மஞ்சள்தூளை முதலிலேயே சேர்த்தால்தான் அவலில்  அவை சிரமமில்லாமல் முழுமையாகக் கலக்கும். 

* கெட்டி அவலிலும் செய்யலாம். கெட்டி அவல் 4,5 நிமிடங்கள் ஊறினால் சரியாக இருக்கும். ஆனால் சன்ன அவல் தண்ணீரில் அதிகம் இருந்துவிடாமல் உடனடியாக வடித்து அடுப்பில் சேர்த்துக் கிளறிவிடவேண்டும்.

இப்போதும், “ஆலூ போஹா என்று கேட்காதீர்கள், அவல் உப்புமா என்றேஏ க்கேட்டு வாங்குங்கள்!!” என்று டேபிளுக்கு வரும்போதே ரங்கமணி கிண்டலும் தங்கமினி ‘கிக்கிக்கி’ சிரிப்பும் இருக்கிறது. உண்மையிலேயே நன்றாக இருந்தாலும் எதோ குறைகிறது. தமிழச்சி கைக்கு இவ்வளவுதான் வரும் என்று அலம்பிக் கொண்டிருக்கிறேன்.

தேவையான பொருள்கள்:

சன்னமான அவல் – 1 கப்
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 1/2 கப்
ஏலப்பொடி
குங்குமப் பூ
பச்சைக் கற்பூரம்

செய்முறை:

  • பாலை சுண்டக் காய்ச்சிக் கொள்ளவும்.
  • சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து, அவலையும் நன்கு சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ கலந்து சாப்பிடலாம்.

தேவையான பொருள்கள்:

கெட்டி அவல் – 1 கப்
பால் – 1/2 லிட்டர்
தேங்காய்ப் பால் – 1/2 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலப் பொடி
முந்திரி
கிஸ்மிஸ்
பச்சைக் கற்பூரம்
நெய்

aval paayasam_sreejayanthi

செய்முறை:

  • அவலை நெய்யில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
  • பாலைக் காய்ச்சி, அதில் அவல் சேர்த்து வேக விடவும்.
  • அவல் வெந்ததும், சட்டென குளிர்ந்த நீர் அரை கப் சேர்க்கவும். இப்படிச் செய்வதால் அவல் ஒட்டாமல் குழையாமல் இருக்கும்.
  • மீண்டும் கொதிக்க ஆரம்பிக்கும்போது, சர்க்கரை சேர்த்துக் கரைய விடவும்.
  • சேர்ந்து வரும்போது தேங்காய்ப் பால் சேர்த்து, பொங்கிவரும்போது இறக்கவும்.
  • நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் பொரித்துச் சேர்க்கவும்.

* இதை சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்த்தும் செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
 

தேவையான பொருள்கள்:

அவல் – 1 கப்
சர்க்கரை – 1 1/2 கப்
ஏலப்பொடி
கேசரிப் பவுடர்
பச்சைக் கற்பூரம்
நெய்
முந்திரி
கிஸ்மிஸ்

செய்முறை:

  • அடுப்பில் வாணலியில் நெய் விட்டு, அவலைப் பொரித்துக் கொள்ளவும்.
  • அதில் ஒரு கப் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
  • அவல் வெந்தவுடன், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
  • அல்வாப் பதமாக சேர்ந்துவரும்போது, பாலில் கேசரிப் பவுடர், ஏலப்பொடி, குங்குமப்பூ கலந்து சேர்த்துக் கிளறி இறக்கவும்.
  • நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் பொரித்துச் சேர்க்கவும்.

தேவையான பொருள்கள்:

அவல் – 1 1/2 கப்
வெல்லம் – 1 1/2 கப்
பயத்தம் பருப்பு – 1 கப்
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
ஏலப்பொடி
முந்திரி
கிஸ்மிஸ்
நெய்

செய்முறை:

  • அவலை வறட்டு வாணலியில் கைவிடாமல் வறுத்து, லேசாகப் பொரிய ஆரம்பித்ததும், இறக்கிவிடவும்.
  • ஆறியதும் மிக்ஸியில் பொடித்து, ஏலப்பொடி சேர்க்கவும்.
  • பயத்தம் பருப்பை இலையிலையாக வேகவைத்து(குழையக் கூடாது.) நீரை வடிகட்டவும்.
  • அவல்பொடியில் சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து, வெந்நீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். (கையால் உருட்டினால் உருட்டவும், விட்டால் உதிரவும் செய்யுமாறு இருக்கவேண்டும்.)
  • வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து முற்றிய பாகாகக் காய்ச்சவும். (தண்ணீரில் சிறிது விட்டு உருட்டினால், கெட்டியான உருண்டையாக வர வேண்டும்.)
  • பாகு தயாரானதும், தேங்காய்த் துருவல், வெந்த பருப்பு, ஏலப்பொடி இவற்றை அவல் மாவில் கலந்து, அதில் பாகைச் செலுத்தி, நன்றாகக் கலந்துவைத்து விடவும்.
  • ஒரு மணி நேரத்தில் உதிர் உதிராக அருமையான புட்டு தயாராகி இருக்கும்.
  • நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் வறுத்து இத்துடன் சேர்க்கவும்.