விருந்தினர்


நன்றி: ஜெயஸ்ரீ சூர்யநாராயணன் 
 

தேவையான பொருள்கள்:

புளி – சிறிய எலுமிச்சை அளவு
வெங்காயம் – 2
வெல்லம் – பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைக்க: (வெறும் வாணலியில்)
காய்ந்த மிளகாய் – 6, 7
வெந்தயம் – 1 1/2 டீஸ்பூன்
அரிசி – 1/2 டீபூன்

தாளிக்க: நல்லெண்ணெய், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை.

menthi pulusu 1

செய்முறை:

  • புளியை நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.
  • வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், வெந்தயம், அரிசியை வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
  • அடுப்பில், வாணலியில் நல்லெண்ணெயில் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, புளிநீரைச் சேர்க்கவும்.
  • புளிநீர் ஒரு கொதி வந்ததும் அரைத்துவைத்துள்ள பொடியைச் சேர்த்து, மேலும் 2, 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • மெலிதாக அரிந்துவைத்துள்ள வெங்காயத்தில் பாதியைப் போட்டு மேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
  • மீதியிருக்கும் வெங்காயம், வெல்லம் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி பாத்திரத்தை மூடிவிட வேண்டும். [ 😦 எப்ப திறக்கலாம்னு ஜெயஸ்ரீ சொன்னதும்தான் திறக்க முடியும்.]
  • பத்து நிமிடங்கள் சூடான குழம்பில் வெங்காயம் ஊறியபின் திறந்து பரிமாறலாம். [டடண்டடண்டடாங்… திறந்தாச்சு! :)]

menthi pulusu

* வெங்காயத்தைப் பச்சையாகச் சேர்ப்பதுதான் இதில் சிறப்பு.

* வெல்லம் அவசியம் சேர்க்க வேண்டும். [வெல்ல டப்பா எங்கவெச்சேன்னு வழக்கம்போல மறந்துபோச்சு! :)]

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பொங்கல், மற்றும் அரிசி உப்புமாவுக்கு நல்ல ஜோடி.

நீங்க சொன்னப்புறம் வலையில் மெந்திப் புலுசு ன்னு தேடி பாத்தேன். மீன் சேர்த்து செய்வதுதான் ஒரிஜினல் மெந்திப் புலுசு போல இருக்கு. இத நான் ஒரு potluck dinnerல பார்த்து, நல்லா இருந்ததால செய்முறை கேட்டு வாங்கினேன். இதோட பேர் வேற எதாவதாவும் இருக்கலாம்.

[அப்படி எல்லாம் விட்டுட முடியுமா ஜெயஸ்ரீ? உப்புச்சாரே, ‘கருவாடு மைனஸ்’ செஞ்சு அசத்தியிருக்கோம். இதுவும் மெந்தி புலுசு (மீன் மைனஸ்)ன்னு போர்டு வெச்சுடலாம். :)]

நன்றி: எழுத்தாளர் நாஞ்சில்நாடன் சொன்னதாக எழுத்தாளர் ஜெயமோகன்.

”அரைக்கீரை ரொம்ப நல்லதுண்ணு சொல்லுகா ஜெயமோகன். அரைக்கீரையை நல்லா ஆய்ஞ்சு மண்ணுகிண்ணு போக சுத்தம் பண்ணி வாணலிய அடுப்பில ஏத்தி ஒரு கரண்டி தேங்காயெண்ணைய விட்டு அதில போட்டு கொஞ்சம் உப்பு தெளிச்சு நல்லா சுண்டவச்சு அப்டியே ஒரு பாத்திரத்தில கொட்டிட்டு இன்னொரு வாணலிய அடுப்பில வச்சு கொஞ்சம் எண்ணைய விட்டு கடுகு கறிவேப்பில உள்ளி போட்டு தாளிச்சு எடுத்தா சோத்துக்கு தொட்டுகிட நல்லா இருக்கும். மோருக்கு முன்னால ரசத்துக்கு பொருத்தம்….சோத்திலக்கூட போட்டுப் பிசைஞ்சி திங்கலாம்…”

அரைக்கீரை குறித்து இங்கே சொல்லியிருக்கிறேன். எனக்குத் தெரிந்து அரைக்கீரை மதுரை அளவு அதிகமாகவும் விலை மலிவாகவும் ஸ்ரீரங்கத்தில் கூட பார்த்ததில்லை. நினைவுதெரிந்து சின்ன வயதில் விடுமுறைக்கு மதுரைக்குப் போகும்போது, ஜெய்ஹிந்துபுரம் முதல் மெயின் தெருவில் 10 பைசாவுக்கு ஒரு பெரிய பை நிறைய அடைத்துக் கொடுப்பார்கள்.

முளைக்கீரை மாதிரி இதில் வேர் இருந்து படுத்தாது என்றாலும் கொஞ்சம் கட்டை எல்லாம் நீக்க வேண்டியிருக்கும். அநேகமாக பெருமளவு தண்டுப்பகுதியை நான் சேர்த்துக் கொண்டுவிடுவேன். வெறும் இலைப்பகுதியைவிட தண்டும் சேர்ந்தால்தான் கறி/கூட்டு சுவையாக இருக்கும். அதற்கும் தடிமனான தண்டுப்பகுதியையும் தனியாக எடுத்து குழப்பில் போட்டுவிடுவேன். நான் தூக்கி எறியும் பகுதி மிகமிகக் குறைவாகத் தான் இருக்கும்.

இது ஒரு பத்திய உணவு என்று தெரிகிறது. நாஞ்சில் நாடன் ஐயா, இன்னமொரு நூற்றாண்டிரும்!

தேவையான பொருள்கள்:

அரைக்கீரை
பூண்டு
உப்பு

தாளிக்க: எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை

செய்முறை:

  • அரைக்கீரையை பெரிய தண்டுப்பகுதிகளை நீக்கி, தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, உரித்த பூண்டு தாளிக்கவும்.
  • நறுக்கிய அரைக்கீரையைச் சேர்த்து நீர் விடாமல், பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
  • சுண்டியதும் இறக்கி உபயோகிக்கலாம்.

* ஒரு காய்ந்த மிளகாய், சின்னவெங்காயம் 4 உரித்துச் சேர்த்து வதக்கினாலும் சுவையாக இருக்கும். உடலுக்கு நல்லது.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் சாதம், ரசம் சாதம்.
 

நன்றி: எழுத்தாளர் ராமசந்திரன் உஷா.

பத்து நிமிடங்களுக்கு மேல் உட்காரமுடியாமல் முதுகுவலியால் கஷ்டப்பட்டாலும் தொலைப்பேசியியில் குறிப்பைப் பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் ராமச்சந்திரன் உஷாவிற்கு நன்றி. அவர் விரைவிலேயே நலம்பெற்று இன்னும் பல நல்ல குறிப்புகளைப் பகிர்ந்துகொள்வார் என்று நம்புவோம்.

பிசிபேளாவிற்கு– ஏற்கனவே கவிஞர் ஹரன்பிரசன்னா என் பிசிபேளாக் குறிப்பைப் படித்து :), சரியாகவே இருப்பதாகச் சொல்லிவிட்டாலும்– எழுத்தாளர் உஷா, தன்னுடைய சிறப்புக் குறிப்பை இன்னும் அனுப்பவில்லை என்பதை இந்த வேளையிலே நினைவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன். 🙂
 

தேவையான பொருள்கள்:

தக்காளிக்காய் – 4
எண்ணெய் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
பச்சை மிளகாய் – 1
உளுத்தம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
பெருங்காயம்
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
கொத்தமல்லித் தழை
உப்பு – தேவையான அளவு

thakkaalikkai thuvaiyal chutney

செய்முறை:

  • தக்காளிக்காயை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், என்ற வரிசையில் சேர்த்து சிவக்க வறுத்து எடுத்துவைத்துக் கொள்ளவும்.
  • அத்துடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளிக்காய், தேவையான உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  • வறுத்த பருப்புக் கலவையை, கொத்தமல்லித் தழை சேர்த்து, அப்படியே தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.

* வறுத்த கலவையோடு ஒரு பெரிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி அரைத்து, கடுகு உளுத்தம் பருப்பு தாளித்தால் சட்னி. தோசை, இட்லி, சப்பாத்திக்கு திரும்பத் திரும்ப என்ன சட்னி என்று யோசிக்கவைக்கும். இது வீட்டில் இன்று ஹிட் ஆனது.

பின்னால் சேர்த்த முன்குறிப்புசாட்

_______________________________________________________________________________

me: ஹாய் கவிஞர், There?
haranprasanna is online.

haranprasanna: (வந்துட்டாங்கப்பா. இன்விசிபிள் மோட் இல்லாத ஜிசாட் ஒழிக!) வணக்கம் ஜெயஸ்ரீ.

me: என்ன செஞ்சுகிட்டிருக்கீங்க? 🙂

haranprasanna: வண்டி துடைத்துக்கொண்டிருக்கிறேன், பார்த்தால் தெரியவில்லையா? கணினி முன்னால் அமர்ந்து ஒரு கவிஞன் என்னசெய்துகொண்டிருப்பான்? இதெல்லாம் ஒரு கேள்வியா? இன்னும் சமுதாயத்தில் எழுப்பவேண்டிய  கேள்விகளும்,  தீர்க்கவேண்டிய  பிரச்சினைகளும்  எவ்வளவோ இருக்க, இப்படிப்பட்ட கேடுகெட்ட கேள்விகளால் தான் தமிழன் இன்னும் முன்னேறாமல் இருக்கிறான். (இன்னும் சாப்பாட்டுக் கூடைக்காரரு வராம அவனவன் பசில தள்ளாடறான்.)

me: கோபமா இருக்கீங்க போலருக்கு? சாப்பிடப் போகலையா? நான் அப்றம் வரேன்.

haranprasanna: நான் என்றைக்கு சாப்பிட்டிருக்கிறேன்? கவிதைகளை சுவாசித்து கவிதைகளையே உண்டு செரிப்பவன் நான். சாப்பிடச் செல்பவர்கள் சாதாரணர்கள். நான் கவிஞன்.

me: (ஏலே, நீ மட்டும் அடுத்தவன் செரிக்கவே முடியாத கவிதையா எழுதித் தள்றியே இதையெல்லாம் கேக்க ஆளில்லையா?) அப்ப எந்நேரமும் கணினி முன்னால உக்காந்து சாப்பிட்டுகிட்டே இருக்கீங்கன்னு சொல்லுங்க. :))

haranprasanna: சமைக்கவே கருக்கலில் கண்விழித்து, சாப்பாட்டுக் குறிப்புகளுக்காக வலைப்பதிந்து, சாப்பிட்டுத் தூங்கும் உங்களுக்கு இவை புரியப் போவதில்லை. (சாப்பிடாம எனக்கு கண் இருட்டுது.)

me: எவ்வளவு பசிச்சாலும் உங்க கவிதை வேண்டாம்னு பிகேஎஸ் சொல்லியிருக்காரே, ஏன்? 🙂

haranprasanna: ஒரு வாசகராக அவர் பரந்துபட்டவராக இருக்கலாம். ஆனால் ரசிகராக அவர் இன்னும் வளரவில்லை என்பதைத்தான் அது காட்டுகிறது. இலக்கியவாதியின் கடமை சிறந்த இலக்கியங்களைப் படைப்பதோடேயே நின்றுபோகிறது. ரசிகன்தான் நாளும் வளர்பவனாக இருக்கவேண்டும். உண்மையான பசியும் உண்மையான தேடலும் வரும்போது அவருக்கு அது சாத்தியமாகலாம். காத்திருக்க வேண்டியதுதான்.

me: ஏன் இப்படி உரைநடைத் தமிழ்ல பேசறீங்க? சகஜமா என்னை மாதிரி பேசினா எனக்கும் பேச இயல்பா இருக்குமில்ல?

haranprasanna: (மவளே, உங்கிட்டேயிருந்து வெட்டிக்க இந்தத் தமிழைத்தானே நம்பியிருக்கேன். உன் உளுத்துப் போன ஸ்ரீரங்கம் தமிழ்ல என் பரணித் தமிழ் தாமிரபரணியைப் போல மாசுபடாம இருக்கவே தமிழன்னைக்கு தினம் நான் அர்ச்சனை செய்றேன்.) என் இயல்பான நடையே அப்படி இருக்க, என்னால் சாதாரணர்களைப் போல் மாற்றிப் பேச இயலாதே. அவரவர் அவரவர் இயல்பிலேயே பேசுவோம். இன்றைக்கு உங்கள் பதிவில் புதிதாக குறிப்பு எதுவும் எழுதவில்லை போலிருக்கிறதே.

me: ஆமாம். 😦 என் பதிவெல்லாம் கூட பார்ப்பீங்களா என்ன? 😉

haranprasanna: தவறாகச் சுட்டியதில் உங்கள் பக்கம் திறந்துவிட்டது. ஒரே நொடியில் மூடிவிட்டேன். நான் அங்கெல்லாம் வந்ததுமில்லை, வரப்போவதுமில்லை.

me: (ம்க்கும். இந்த பந்தால குறைச்சலில்லை.) ரொம்ப போரடிக்குது. இன்னிக்கி உங்களுக்கு என்ன பிடிக்கும்னு சொல்லுங்க. அதையே குறிப்பா போட்டுடலாம்.

haranprasanna: எனக்கு மார்த்தாண்டன், சேரன், கல்யாண்ஜி,…

me: ஐயோ நான் சமையல்ல கேக்கறேன். நீங்க சாப்பிடறதுல கேக்கலை.

haranprasanna: எனில் கவிதை சமையுங்கள் ஜெயஸ்ரீ.

me: அதெல்லாம் கடுமையான ஜுரம் வந்தாத்தான் என்னால முடியும். விளையாடாதீங்க.

haranprasanna: எத்தனை நாள் தான் இந்தப் பாழும்பெண்கள் சமையலறையைக் கட்டிக் கொண்டு அழப்போகிறார்களோ. (இவ வேற வீட்டுல இன்னிக்கு சமைச்சாளா இல்லையான்னே தெரியலையே. கார்த்தால கோபத்தை அப்படியே எக்ஸ்டெண்ட் பண்ணி பழிவாங்கிட்டாளோ?! இன்னிக்கு மதியச் சாப்பாடு வருமா வராதா?)

me: சமையல் செஞ்சா தப்பா? வீட்டுவேலையை யாராவது ஒருத்தர் செஞ்சுதானே ஆகணும்.

haranprasanna: தாராளமாகச் செய்யலாம். ஆனால் எனக்கு அவர்களிடமோ அவர்கள் பதிவுகளிலோ சொல்ல ஒன்றுமில்லை. அவ்வளவுதான். அப்புறம் நானே சொல்ல நினனத்தேன், உங்கள் பதிவில் குறிப்புகளின் பெயர்களையும் வலதுபக்கம் வரிசையாகக் கொடுக்கலாமே. தேர்ந்தெடுக்க எனக்கு வசதியாக இருக்கும்.

me: என்னென்ன கேடகரில குறிப்புகள் இருக்குன்னு, சைட்ல இருக்கே.

haranprasanna: நான் இன்னும் ஆழமான தேடலைச் சொன்னேன். புளிசேரியின் குறிப்பு எழுதிவிட்டீர்களா என்று பார்த்தேன். இல்லையே.

me: ஓ அதுவா. கறி/கூட்டு இடத்துல க்ளிக்கினா அதுல இருந்தா வரும்.

haranprasanna: இத்தனை தொழில்நுட்பத்தையும்கூட பெண்கள் கேடுகெட்ட சமையல்குறிப்புக்கு உபயோகித்துக் கொள்வதை என்னவென்று சொல்வது? உங்கள் பக்கத்தில் “தேடு” வசதியும் இருந்தால் இன்னும் சுலபமாக இருக்குமே.

me: இருக்கே. Search பெட்டில வேணுங்கற பெயரைத் தட்டி க்ளிக்கினா, இருந்தா வந்துடும். இல்லைன்னா இன்னும் எழுதலைன்னு அர்த்தம். 🙂

haranprasanna: எத்தனை யுகங்கள் ஆனாலும் நீங்களெல்லாம் எழுதித் தீர்க்கப் போவதில்லை.

me: குறிப்பு எழுதினா கேவலமா? எனக்குத் தெரிஞ்சதைத் தானே நான் செய்யமுடியும்.

haranprasanna: தெரிந்ததற்காக அதையே செய்வதும், அதிலிருந்து மீள நினைக்காமல் இருப்பதும் பேதைமை இல்லாமல் வேறு என்ன? உப்பேரிக்கும் புளிசேரிக்கும் கூட குறிப்புகள் எழுதுங்கள். (கேவலமாப் போனாலும் பரவாயில்லைன்னு காலைல கிளம்பும்போதே இனிமே வீட்டுல சண்டையைத் தீர்த்துட்டு தான் கிளம்பணும்.)

me: நீங்க இப்பத்தான் சமையல் குறிப்பு எழுதறேன்னு திட்டறீங்க. நீங்களே இன்னும் சில குறிப்புகளை எழுதச் சொல்றீங்க. என்ன சொல்லவரீங்கன்னே சரியாப் புரியலை.

haranprasanna: என் பேச்சே கவிதை மாதிரி இருப்பதாகச் சொல்கிறீர்களா? :)) 

me: (இது வேறயா? நெனப்புதான பொழப்பக் கெடுக்குது.) உங்களுக்கு நகைச்சுவை நன்னாவே வரது.  

haranprasanna: ஒரு இலக்கியவாதியாக நீங்கள் இலக்கியங்களைப் படைக்கவேண்டும் என்று கூறுகிறேன். ஒரு நண்பனாக நீங்கள் எழுதும் (துப்புக்கெட்ட) பதிவாவது முழுமையாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். அவ்வளவுதான்.

me: சமையல்குறிப்பு எழுதறவளை இலக்கியம் படைன்னா எப்படி முடியும்?

haranprasanna: அக்கார அடிசிலுக்குக் கூட குறிப்பு எழுதிய கவிதை ஒன்று இருக்கிறது. காலையில்தான் படித்தேன். யுகயுகமாய் பெண்களுக்கான பாட்டை அந்தப் பெண் கவிஞர் சொல்கிறார்.

me: அப்டியா? எனக்கும் அனுப்புங்களேன். உங்கள் ஆதர்ச கவிஞர்கள் பேர்ல ஒன்னுகூட பெண்பெயரே இல்லையே. உங்களுக்கு பெண்கவிஞர்களைப் பிடிக்காதோன்னு நினைச்சுட்டேன்.

haranprasanna: பெண்கள் விடுதலை என்ற பெயரில் உடல்மொழி தவிர பிற விஷயங்களைத் தொடுவதில்லை என்ற சலிப்பு எனக்கு இருப்பது உண்மைதான். (ஒரு ஜெயமோகன பில்டப்புக்கு இது உதவும்.) ஆனால் சேமித்து வைத்திருக்கும் கவிதையின் கருப்பொருள் என்னை பிறவெதுவும் யோசிக்கவொட்டாமல் செய்கிறது. (அதைப் படிச்சதிலிருந்து இன்னும் பசியைக் கிளப்பிவிட்டுடுச்சு. இன்னும் சாப்பாட்டைக் காணோமே. பேசாம வீட்டுக்கு ஃபோன் பண்ணி ஒரு சரண்டர் சிக்னல் கொடுத்துடலாமா?)

me: சரி அனுப்புங்க. எனக்கும் புரியுதான்னு பாக்கறேன்.

haranprasanna: சமையல் குறிப்புதானே; அதனால் புரியும். ஆனால் அது சொல்லவரும் விஷயம் உங்களுக்குப் புரிய வாய்ப்பில்லை. இருந்தாலும் தேடி அனுப்புகிறேன். கொஞ்சம் பொறுங்கள். (வயிறு பொறுக்குதில்லையே. அம்மா காலைல பாகற்காய் நறுக்கிண்டிருந்தாளே, பிட்லையா இருக்குமோ?)
Sent at 13:55 PM on Tuesday

=================

தேவையான பொருள்கள்:

தக்காளிக் காய் – 1/2 கிலோ
பச்சை மிளகாய் – 5, 6
தேங்காய் – 1 மூடி
சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்
உப்பு
கொத்தமல்லித் தழை

======================

me: ஐயய்ய, இது என் பதிவிலிருந்து எடுத்த தக்காளிக்காய் கூட்டு இல்லையோ.  ஒண்ணுக்குக் கீழ ஒண்ணா இருக்கவும் கவிதைன்னு நினைச்சுட்டேளா? :))))

haranprasanna: (அடச்சே. பசில இந்தத் தப்பை வேற செஞ்சுட்டேனா! இவ இதைச் சொல்லியே பலநாளுக்கு ஓட்டிக் கொல்வாளே!) சகிக்கவில்லை உங்கள் ஜோக். ஏதோ தவறாகிவிட்டது. சரியாகத் தருகிறேன். காத்திருங்கள். (அந்தக் கூடைக்காரர் இப்படி காக்கவெச்சுட்டாரே. மட்டம் போட்டு கழுத்தறுத்துட்டாரா? வீட்லேருந்து அதை போன் செஞ்சாவது சொல்லலாமில்ல.)
Sent at 14:01 PM on Tuesday

==================
அக்கார அடிசில் கவிதை

ஒருகப் அரிசியுடன்
கால்கப் பயத்தம்பருப்பையும் களைந்து
நீரைவடித்து
நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

இரண்டு லிட்டர்
கூழான கெட்டிப் பாலில்
குழைவாக வேகவைக்கவும்.

இரண்டும் இன்னும் அரைகப்புமாய் வெல்லத்தை
வாணலியில் நீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டி
வேகவைத்த அரிசிக்கலவையும்
இரண்டு லிட்டர் பாலும்
இரண்டு லிட்டர் நெய்யும்
ஏலக்காய்ப் பொடியும்
இரு சிட்டிகை பச்சைக் கற்பூரமும்
சேர்த்துக் கலந்து கொதிக்கவிடுங்கள்

இப்போது நீங்கள்
அக்கார அடிசில் தயாரிப்பதில்
நிபுணராகி இருக்கிறீர்கள்

வாணலியில் கொதிக்கும் பண்டத்தில்
நெய்யும் பாலும் மேலெடுக்கும் வாசத்தில்
மாமியாரின் சர்க்கரை வியாதி
மாமனாரின் இரத்த அழுத்தம்
கணவன் அவ்வப்போது சொல்லும் நெஞ்சுவலி
மகனுக்கு இந்த வயதிலேயே வைக்கும் தொப்பை
மளிகைக்காரனின் நாலுமாதக் கடன்பாக்கியென
பிரச்சினைகளில் நீங்கள் உங்களைத் தொலைக்காதிருந்தால்
வருத்தப்பட்டுக் கொள்ளுங்கள்
நீங்கள் தேர்ந்த சமையல்காரர்.
========================
Sent at 14:05 PM on Tuesday

haranprasanna: என்ன பேச்சையே காணம்?

me: படிச்சுகிட்டிருக்கேன்..

haranprasanna: எப்படி கவிதை? பெண்கள் இன்றைக்கு எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள் பார்த்தீர்களா?

me: ம்

haranprasanna: எத்தனை கவிதை படித்தால் தான் நீங்களெல்லாம் திருந்தப் போகிறீர்கள்?

me: எதுக்கு என்னைத் திட்டறீங்க? நான் யோசிச்சுகிட்டிருக்கேன்.

haranprasanna: தேர்ந்த சமையல்காரர் என்றால் பெருமைதானே படவேண்டும், நாம் வெட்டியாய் படுசுமாராய் சமைப்பதற்கே பெருமையாய் பதிவெல்லாம் வைத்திருக்கிறோமே, ஏன் கவிதையில் வருத்தப்படச் சொல்லியிருக்கிறார்கள் என்றெல்லாம் யோசிக்கிறீர்களா? 

me: இல்லை…. 

haranprasanna: வீட்டில் இருக்கிறவர்களுக்கெல்லாம் உடல்நிலை சரியில்லை, கடன்பாக்கிக்காக வெல்லாம் வருத்தப்படச் சொல்லியிருப்பார்களோ என்று யோசிக்கிறீர்களா?

me: இல்லை…

haranprasanna: உங்களைப் போன்ற பேதைகளுக்கு அப்படியெல்லாம்தான் யோசனை போகும். உண்மையில் கவிதையின் முடிச்சு அங்குதான் இருக்கிறது.

me: ஹை, ப்ரசன்னா, I got it! இந்தக் கவிதை உங்களுக்கு அடையாளம் தெரியலையா?

haranprasanna: தான் வாழும் வாழ்க்கையில் ஒரு பெருமையான அங்கீகாரம் இருக்கும் சூழ்நிலையில் ஒரு பெண்ணிற்கு மேலே இருக்கும் குடும்பம் சார்ந்த பிரச்சினைகள் எல்லாம் கவனத்தில் வந்திருக்கவேண்டும்…

me: இது யார் எழுதினதுன்னு சொல்லுங்க பார்க்கலாம்…

haranprasanna: சாமானை அள்ளிக்கொட்டி சமையல்காரராக மட்டும் இருக்கிறார் என்பது அந்தக் குடும்பத்தில் அவளது பிடிப்பு விட்டுப்போன மனநிலைக்கான குறியீடு. வாழ்ந்து உணர்ந்து, அதை வார்த்தைகளிலும் சொல்லத் தெரிவதால்தான் அது வன்மையான கவிதையாக வந்திருக்கிறது.

me: ஐயய்ய, சும்மா கீழ குனிஞ்சு தட்டிகிட்டு நீங்க சொல்றதையே சொல்லிகிட்டிருக்காம, கொஞ்சம் நான் தட்டறதையும் படிங்க..

haranprasanna: சுஜாதா சொல்வது சரி. கவிதைக்கு கோபமும் சோகமும் தேவை.

me: (அடடா அடங்கமாட்டாங்க போல இருக்கே…)

haranprasanna: உங்களைப் போல் திமிராகவும் வெட்டியாகவும் நேரத்தைத் தேய்ப்பவர்களுக்கு கவிதையும் வேறெந்த இலக்கியமும் கூட கைவராது.

me: ப்ரசன்னாஆஆஅ…. இது நிஜமாவே நேரத்தை தேய்க்கறவங்க எழுதின கவிதைதான். 🙂

haranprasanna: அப்படியா? எப்படித் தெரியும்? யார் எழுதியது? (வரவர என்னைவிட இவளெல்லாம் இலக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களை விரல்நுனில வெச்சிருக்காளே… இவளை நம்பக் கூடாது… உதாரை ஏத்த வேண்டியதுதான்.) மேலும் ஜெயஸ்ரீ, நீங்கள் என்னை பெயர் சொல்லி அழைப்பதைவிட கவிஞர் என்று அழைப்பதையே விரும்புகிறேன்.

me: நாசமாப் போச்சு. தான் எழுதின கவிதையும் அதன் வடிவமும் மறந்து போனவங்களெல்லாம் கவிஞரா? (யோவ், பீடத்துலேருந்து இறங்கவே மாட்டியாலே நீ?)

haranprasanna: புரியவில்லை!!

me: இந்த கெத்துல எல்லாம் குறைச்சலில்லை. மேட்டர்ல கோட்டை விட்டுட்டீங்க. இந்த அக்கார அடிசில் கவிதை நான் எழுதினது. உங்க கவிதையை ஃபார்மட்டா வெச்சு.

haranprasanna: என் கவிதையின் வடிவமா? எப்போது எழுதினேன்? (இவ்ளோ மோசமா எழுதித் தொலைச்சிருக்கேனா?)

me: உங்க CuSO4 கவிதை.

haranprasanna: தலைப்பே சகிக்கவில்லையே. என்னுடையதாக இருக்க முடியாது. (இவகிட்ட என் பழைய ட்ரங்க்பெட்டில போட்ட கவிதை எல்லாம் இருக்கு. எதையெதை எப்ப எடுத்து வெளில விடுவாளோ!)

me: நீங்க பூர்வாசிரமத்துல துப்பாய்ல கெமிஸ்டா வேலைபாத்து குப்பை கொட்டின காலத்துல எழுதினது. இருங்க நானும் எடுத்துத் தரேன்.
Sent at 14:16 PM on Tuesday

======================
CuSO4 கவிதை

தாதுகள் நீக்கப்பட்ட
மீத்தூய் நீரால் நன்கு கழுவி
நன்கு உலர்த்தப்பட்ட
ஒரு கண்ணாடிக் குடுவையை எடுத்துக்கொள்ளுங்கள்

10 கிராம் தாமிரசல்பேட்டை
துல்லியமாக நிறையிட்டு
குடுவைக்குள் இடுங்கள்.

1000 மில்லி லிட்டர் மீத்தூய்நீரைச் சேர்த்து
தூய கண்ணாடிக்குச்சியால் கலக்குங்கள்

இப்போது நீங்கள்
1% தாமிரசல்பேட் கரைசல் தயாரிப்பதில்
நிபுணனாகி இருக்கிறீர்கள்

ஊடுருவிச் செல்லும் ஒளியில்
நீல நிறத்தடம் மனதைக் கொள்ளை கொள்ளும் நேரத்தில்
குடுவைக்குள் செயற்கை கடல்
துள்ளும் மீன்கள், உயிருடன் சிப்பி
நீல மேற்பரப்பில் சூரிய எதிரொளி, அதில்
தரையிறங்கும் இறக்கை விரித்த கரும்பறவையென
பிணை நினைவுகளில் உங்களைத் தொலைக்காதிருந்தால்
பெருமை பட்டுக்கொள்ளுங்கள்…
நீங்கள் வேதியியல் உலகக்காரர்
========================
Sent at 14:19 PM on Tuesday

என்ன அந்தப் பக்கமும் பேச்சையே காணோம்? 🙂

haranprasanna: (கீழ சைக்கிள் மணிச்சத்தம் கேக்குதே. நம்பாள் தானோ? அதானே பாத்தேன். எவ்ளோ சண்டைன்னாலும் வீட்டுல நமக்கு சாப்பாடெல்லாம் குறை வெச்சதில்லையே. நல்லவேளை கிறுக்குத்தனமா அவசரப்பட்டு ·போன்பண்ணி மன்னிப்பெல்லாம் கேட்காம இருந்தேன். இனி இந்தக் கழுத்தறுப்பைக் கழட்டிவிட வேண்டியதுதான் பாக்கி.) உங்களுக்கு வீட்டில் வேலையே இருக்காதா? இங்கே உட்கார்ந்து என்னுடன் செலவழித்துக் கொண்டிருக்கிறீர்களே, பாவம்.

me: நான் சமைச்சு முடிச்சிட்டேன். வேலைகளை முடிச்சுட்டு வெட்டி நேரத்தைத் தான் உங்களோட செலவழிக்கறது.

haranprasanna: என்ன சமையல்? சொல்ல மறந்துவிட்டேன். உங்கள் தக்காளிக்காய் கூட்டை எங்கள் வீட்டில் தக்காளிப் பழத்தில் செய்வார்கள். உண்மையாகவே சுவையாக இருக்கும். அந்தப் பதிவில் ramakannan என்பவர் கேட்டிருக்கும் சந்தேகம் சரியே.

me: ஆ, என் வலைப்பதிவை ஒரே ஒரு நொடி மட்டும் திறந்துபார்த்து¢ட்டு நீங்க அள்ளிவிடற விஷயங்கள், கேட்கற சந்தேகங்கள் எல்லாம் என்னை ஆச்சரியப்படுத்றது. (மணிக்கணக்கா பதிவை பிரிச்சு மேய்ஞ்சுட்டு பீலாவா விடற?)

haranprasanna: இலக்கியவாதியும் கவிஞனுமானவன் தன்னைச் சுற்றி நடப்பவைகளை சில நொடித் துளிகளில் துல்லியமாக அவதானித்து, கிரகித்து, தேவையான நேரத்தில் சரியான கோணத்தில் எடுத்துவைக்கத் தெரிந்தவனாக இருக்கவேண்டும். (ஆஹா, இன்னிக்கு நாம நினைச்சமாதிரியே பாகற்காய் பிட்லைதான்.)

me: ஆனா தக்காளிப்பழத்துல கூட்டு செஞ்சா அது தக்காளி கொத்சு, இல்லை டால் ஃப்ரை மாதிரி தானே? 

haranprasanna: எது சொன்னாலும் எதிர்த்து எல்லாம் தெரிந்த மாதிரி பேசுவதை நிறுத்துங்கள் ஜெயஸ்ரீ. உங்களுக்கு இலக்கியத்தில் ஒன்றரையணா பரிச்சயம் இருப்பது போல் எனக்கு சமையலிலும் அனுபவம் உண்டு. துபாயில் நான் கவிதை உண்டு வாழ்ந்த காலத்தும் என் அறைத் தோழனாக இருந்த ஒரு அஞ்ஞானிக்கு மட்டும் சமைத்துப் போட்டிருக்கிறேன். நீங்கள் தக்காளிக்காய் சேர்த்து செய்த அதே உணவுக்குறிப்பை தக்காளிப் பழம் உபயோகித்துச் செய்துபாருங்கள். பயத்தம்பருப்பு இலையிலையாக முக்கால் பதம் மட்டும் வெந்து குழையாமல் இருக்கவேண்டும் என்பதை மட்டும் நினைவுவைத்துக் கொள்ளுங்கள்.

me: உங்கண்ணி கூட நல்லா சமைப்பாங்கன்னு சொல்வீங்களே. இதெல்லாம் அவங்ககிட்ட கத்துகிட்டீங்களா?

haranprasanna: அதெல்லாம் முன்காலத்தில். என் கல்யாணத்திற்குப் பிறகு அண்ணி சுமாராகத் தான் சமைக்கிறார்.

me: ப்ரசன்னா, நிஜமாவே நான் எழுதியிருக்கற கவிதை நல்லாவா இருக்கு? சும்மா தோணித்து. கிறுக்கினேன்.

haranprasanna: (இவ எழுதினதுன்னு தெரியாம புகழ்ந்து தொலைச்சுட்டேன். சே, பசி எல்லாத்தையும் மறக்கடிச்சிடுச்சு!) கவிதை வெகுசுமார் தான். கவிதையே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு அத்தைப்பாட்டித்தனம் தான் எழுத்தில் இருக்கிறது. அதன் (என் கவிதையின்) வடிவத்தால் மட்டுமே வன்மை பெறுகிறது.

me: (அதானே பாத்தேன். இந்தத் திமிர் இல்லைன்னா எப்படி?) துபாயிலும் கவிதை உண்டே வாழ்ந்தேன்னு நீங்க சொன்னதும் நியாபகம் வருது. காலைல ஒரு அருமையான கவிதை படிச்சேன். படிச்சபோதே உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கணும்னு நினைச்……..

haranprasanna: (சாப்பாட்டுக் கூடையே ட்ராஃபிக் ஜாம்ல மாட்டி இப்பத்தான் ஒருவழியா வந்திருக்கு. தின்ன முடியுதா பார் நிம்மதியா.) பிறகு பேசலாம் ஜெயஸ்ரீ. ஒரு கஸ்டமர் வந்திருக்கிறார். எனக்கு கடமை கவிதையைவிட முக்கியம் என்பதும் நீங்கள் அறிந்ததே. அவசியம் தக்காளிப்பழக் கூட்டு செய்துபார்த்துச் சொல்லுங்கள். வணக்கம்.
Sent at 14:36 PM on Tuesday

haranprasanna is offline. You can still send this person messages and they will receive them the next time they are online.
_____________________________________________________________

செய்துபார்த்து தனியில் சொல்வதற்குப் பதில், நன்றாக இருப்பதாக வீட்டினர் சொன்னதில் உணர்ச்சிவசப்பட்டும், பழக்க தோஷத்திலும் பதிவில் போட்டுவிட்டேன். இதனால் கவிஞர் இமேஜிற்கு ஏதாவது பங்கம் வந்துவிடுமா? 😦 இப்போது என்ன செய்வது, எடுக்கவா, இருக்கவா?

நன்றி: கவிஞர் ஹரன்பிரசன்னா.

தேவையான பொருள்கள்:

தக்காளி – 1/2 கிலோ
பச்சை மிளகாய் – 5, 6
தேங்காய் – 1 மூடி
சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்
உப்பு
கொத்தமல்லித் தழை

தாளிக்க – எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

thakkaali koottu

செய்முறை:

  • பயத்தம் பருப்பை முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும்.
  • தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது நீர்விட்டு மூடி வேகவைக்கவும்.
  • முக்கால் பதம் வெந்ததும் அரைத்த விழுது, வேகவைத்த பயத்தம் பருப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
  • கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

* நீரைக் குறைத்து கால் கப் பால் அல்லது தேங்காய்ப் பால் சேர்ப்பதால் காரல் இருந்தால் மறைந்து சுவையும் மணமும் அதிகரிக்கும். நான் சேர்த்திருக்கிறேன்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் சாதம், சப்பாத்தி வகைகள்…

“இன்னிக்கு ஆத்திலே என்ன தளிகை?”“பொன்னா தளிகையை கேக்கணுமா? பருப்பு, உப்புச்சார், தக்காளி சாத்தமுது நிறைய கொத்துமல்லி போட்டு, வாழைக்காய் கறியமுது, அவியல், பொரிச்ச அப்பளம்.”— புலிநகக் கொன்றை (பி.ஏ. கிருஷ்ணன்)

பொன்னா நாங்குநேரி இல்லையா? நெல்லை மாவட்டத்துல உப்புச்சார் என்பது நீங்க சொன்ன மோர்ச் சாத்துமது மாதிரியேதான். கொஞ்சம் வித்தியாசம்.– நன்றி: ஜெயஸ்ரீ சூர்யநாராயணன்.

 

தேவையான பொருள்கள்:

தயிர் – 1 கப்
அப்பக்கொடி (அல்லது அதளக்காய் வற்றல் அல்லது மணத்தக்காளி வற்றல்)

வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 3
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்

அரைக்க:
தேங்காய்த் துருவல் – அரை கப்
சீரகம் – 1 டீஸ்பூன்

தாளிக்க – கடுகு, கறிவேப்பிலை.

uppuchchaar 3 - mOr kuzambu [2]

செய்முறை:

  • தயிரை நன்கு தண்ணீர் விடாமல் கடைந்து கொள்ளவும்.
  • காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, வெந்தயத்தை வாணலியில் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய் சீரகத்தை பச்சையாக அரைத்துக் கொள்ளவும்.
  • கடைந்த தயிரில் உப்பு, மஞ்சள் தூள், அரைத்த மசாலாக்களைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு, பொங்கிவரும்போது இறக்கவும்.
  • எண்ணையில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அப்பக்கொடியையும் கருக வறுத்துச் சேர்க்கவும்.

* அப்பக் கொடி – இது நெல்லை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கும் ஒரு கொடி வகை. அப்பக் கொடி சேர்ப்பது தான் முக்கியம். கிடைக்காத பட்சத்தில் மணத்தக்காளி வற்றல் வறுத்துச் சேர்க்கலாம்.

ஜெயஸ்ரீ, மிகவும் சுவையாக இருந்தது. அன்புத் தோழி வெந்தயம் சேர்க்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். ஆனால் வெந்தயம் தான் மேலும் சுவை சேர்த்தது. விழுங்கியதும் நாக்கினடியில் அதன் மணமும் கசப்பும் அருமை. மணத்தக்காளி வற்றல், வற்றல் குழம்பை விட இதில் தான் சுவையாக இருந்தது.

என் பக்கத்து இரண்டு கேள்விகள்:

இதில் காய் சேர்க்கக் கூடாதா? (என் பெண்)

தாமரைக் கொடி வற்றலைத் தான் அப்பக்கொடின்னு சொல்லுதாங்களோ? (எங்க கடைக்கார அண்ணாச்சி)

தொடர்புடைய இன்னொரு சுட்டி: அன்புத்தோழி

இதுவும் ஒரு திருநெல்வேலி பக்கக் குழம்பு. நன்றி: ச.திருமலை

தேவையான பொருள்கள்:

புளி – எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை
உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 5
மிளகு – 1 டீஸ்பூன்.

அரைக்க:
தேங்காய் – 1/4 மூடி
மிளகாய் வற்றல் – 2
சீரகம் – 1 டீஸ்பூன்.

தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயம்.
 

thengaai seeraga kuzambu

செய்முறை:

  • புளியைக் கரைத்துக் கொள்ளவும்.
  • காய்ந்த மிளகாய் மிளகை சிறிது எண்ணையில் வறுத்து, பொடிக்கவும்.
  • தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், சீரகத்தை அப்படியே விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணை வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, காயை சேர்த்து வதக்கவும்.
  • அதில் சிறிது தண்ணீர் விட்டு, உப்பு, மஞ்சள் தூள், அரைத்த பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
  • சிறிது கொதித்ததும், புளித் தண்ணீர் சேர்க்கவும்,
  • புளி கொதித்ததும், அரைத்த விழுதையும் போட்டு, மேலும் ஒரு கொதி விட்டு இறக்கவும்.

* தண்ணீர் அதிகமாக இருந்தால், சிறிது அரிசி மாவை கரைத்துச் சேர்க்கலாம்.
 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இந்தக் குழம்புடன் பருப்பு உசிலி நல்ல காம்பினேஷனாக இருக்கும்.

மோர் சாதத்துக்கு இந்தக் குழம்பு அமிர்தமாக இருக்கும். [இருந்தது. :)]

நன்றி: பிரேமலதா. (இடையில கலர்ஃபுல்லா பேசியிருக்கறதெல்லாம் நானே.)

[யெக்கா, உப்புச்சார்ல கருவாடு போடணும். உங்களுக்கு ஒத்துவராது. ஒருவேளை மருவிய உப்புச்சார் கருவாடு இல்லாம வலம் வருதோ என்னமோ. கிடைச்சா அனுபவிங்க. சாகறதுக்கு முன்னாடி அனுபவிக்க வேண்டிய ஒன்று. ரெம்பநாள் வெஜிடேரியனிசம் கடைபிடிச்ச காலங்கள்ல கூட கருவாட்டை எடுத்துப்போட்டுட்டு உப்புச்சாரை மொக்கு மொக்குன்னு மொக்கிருக்கேன். கருவாடு இல்லாட்டி உப்புச்சார் உப்புச்சாரே கிடையாது. (உங்களுக்கு கொடுத்துவைச்சது அவ்வளவுதான்) இருந்தாலும் மருவிய உப்புச்சார் கிடைச்சா கண்டிப்பா விடாதீங்க.]

மருவிய உப்புச்சார்: (கருவாடு மைனஸ்)  🙂

1.
தேவையான பொருள்கள்:

புளி – எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் – 6, 7
சின்ன வெங்காயம் – 25
மஞ்சள் தூள்
உப்பு – தேவையான அளவு
கடலை எண்ணை

தாளிக்க: எண்ணை, கடுகு, சீரகம், பெருங்காயம்

செய்முறை:

  • புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்
  • சின்ன வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும். (ஒரு பேப்பரில் வைத்து மைக்ரோவேவ் அவனில் ஒரு 20 அல்லது 30 விநாடிகள்(மட்டும்) வைத்து எடுத்தால் கையோடு தோல் வந்துவிடும். தண்ணீரில் 5 நிமிடம் ஊறவைத்தும் சுலபமாக உரிக்கலாம். ஆனால் சுவை சற்றே வேறுபடும். எப்படி இருந்தாலும் ரங்கமணியை இதற்கு எதிர்பார்ப்பதில்லை என்பதே மேட்டர்.)
  • பச்சை மிளகாயைக் கீறி சின்ன வெங்காயத்தோடு புளித் தண்ணீரில் சேர்த்து நன்கு நொறுங்கப் பிசையவும். [இன்னும் கை எரியுது. 😦 தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணை துடைத்துக் கொள்ளவும்.]
  • அடுப்பில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணையைச் சுடவைத்து, கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து புளிக் கரைசலைச் சேர்க்கவும். [பிரேமலதா, நீங்களோ திருமலையோ கடுகு எல்லாம் தாளிக்கவே சொல்லலையே. இதுக்கு அதெல்லாம் கிடையாதா? ஆனா நான் செஞ்சேன்.]
  • மேலும் 2 டீஸ்பூன் எண்ணை சேர்த்து, நன்கு கொதித்ததும் இறக்கவும்.

-0-

2.
தேவையான பொருள்கள்:

புளி – எலுமிச்சை அளவு
கொண்டைக் கடலை – 1/2 கப்(காய்ந்தது)
பச்சை மிளகாய் – 6, 7
சின்ன வெங்காயம் – 25
கத்தரிக்காய் – 4, 5  (பச்சை, பிஞ்சு என்றால் நன்றாக இருக்கும்.)
மஞ்சள் தூள்
உப்பு – தேவையான அளவு
கடலை எண்ணை.

தாளிக்க: எண்ணை, கடுகு, சீரகம், பெருங்காயம்.

uppuchchaar 2

செய்முறை:

  • புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்
  • சின்ன வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும். (மேலே சொல்லியுள்ளபடி செய்யலாம்.)
  • பச்சை மிளகாயைக் கீறி சின்ன வெங்காயத்தோடு புளித் தண்ணீரில் சேர்த்து நன்கு நொறுங்கப் பிசையவும். [மேலே உள்ள குறிப்பைப் பார்க்கவும்.]
  • கத்தரிக்காயை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • கொண்டைக்கடலையை ஒரு பாத்திரத்தில் (மண்சட்டி என்றால் நன்றாக ஒரேமாதிரியாக வறுக்கலாம்) போட்டு (எண்ணையில்லாமல்) வறுக்கவும். இதிலேயே ஓரளவு நன்றாக வெந்துவிடும்.
  • அடுப்பில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணையைச் சுடவைத்து, கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, வெங்காயம், கத்திரிக்காயைச் சேர்த்து வதக்கவும்.
  • அத்துடன் பயறு, புளிக்கலவையை சேர்த்துக் கொதிக்க விடவும். புளிக்கலவையை ஊற்றியபின் கரண்டி போடமல் இருக்கவேண்டும். பயறு வேகாதாம். (வறுத்த பயறு புளிக்கலவையில் வேகவேண்டும். வறுபட்டதினால் சீக்கிரம் வெந்துவிடும். குக்கரில் வேகவைக்கத் தேவையில்லை.) [நான் கொஞ்சம் நம்பிக்கை இல்லாம எதுக்கும் இருக்கட்டும்னு கொண்டைக்கடலையை ஒரு விசில் குக்கர்ல வெச்சுட்டேன். சாரி!]
  • தேவையான அளவு உப்பு போட்டு, மேலும் சிறிது எண்ணையை ஊற்றவும்.
  • பயறு வெந்ததும் (கரண்டி போடமல் தெரிந்து கொள்ளவேண்டுமாம்!), புளி நன்றாகக் காய்ந்ததும் இறக்கிவிடவும்.

* மண்சட்டியில் செய்தால் சுவையாக இருக்கும்.

* கத்திரிக்காய்க்குப் பதில் தனியாக வெண்டைக்காய் மட்டும் போட்டும் செய்யலாம்.

மேட்ச் ஃபிக்ஸிங் கார்னர்:

சாதம், கிண்டிய உருண்டைச் சோறு, சோளச் சோறு, கேப்பைக்களி (சோளச் சோறுக்கும் கேப்பைக் களிக்கும் செய்வதானால் அரிசிமாவைக் கரைத்து புளிக் கலவையில் சேர்க்க வேண்டும். சிறிது மிளகாயும் புளியும் அதிகமாயிருக்க வேண்டும், to compensate for the dulling effect caused by அரிசிமாவு.)

சின்னவயதில் அம்மா செய்ததையும் அக்கம் பக்கத்தில் செய்ததையும் காது வழி ஞானத்தையும் வைத்து மேலே உள்ளதை எழுதியிருக்கிறேன். அம்மாவுக்கு சோளச் சோறும் கேப்பக் களியும் சரியா வராது. அதனால் எங்கள் வீட்டில் சாதம் தான் பெரும்பாலும். அக்கம் பக்கத்தில் சோளச் சோறும் உப்புச்சாரும் என்றால் எனக்கு ஸ்பெஷல் அழைப்பு வரும். அங்கு போய் சாப்பிட்டுவிட்டு வருவேன். கேப்பைக் களிக்கு மகிழிக் கீரைதான் சரியான மேட்ச் என்பதால், கேப்பைக் களியுடன் உப்புச்சார் வைக்கும்போது என்னை ஸ்பெஷலாக அழைக்க மாட்டார்கள், நானாகக் கண்டுபிடித்தால் மட்டுமே கிடைக்கும். இந்த முறை ஊருக்குப் போயிருந்த போது யாராவது சோளச் சோறு (கேப்பைக் களியெல்லாம் கிடைக்குமென்ற நம்பிக்கையேயில்லை) செய்கிறார்களா என்று கேட்டுப் பார்த்தேன். இல்லையென்று பதில் வந்துவிட்டது. சோளச்சோறு இல்லையென்றால் உப்புச்சாரும் அதிகமாக நடமாடாது. I will be surprised if anyone still makes it anymore in our street in our village. மத்த தெருக்களைப் பற்றி எனக்குத் தெரியாது. (பிரேமலதா நல்லா இருந்தது. அதே முக்கியமான மேட்டர்.) 

நன்றி: ச.திருமலை
 

தேவையான பொருள்கள்:

புளி – எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை
காய்கறி.

தாளிக்க – எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம்.

வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 5, 6
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வெந்தயம் 1/2 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
எள் – 1 டீஸ்பூன்
அரிசி – 1 டீஸ்பூன்.

uppuchchaar 1

செய்முறை:

  • புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, வெந்தயம், மிளகு, எள், அரிசி இவைகளை வாணலியில் எண்ணெய் விடாமல் நன்றாக ஆனால் கருகாமல் வறுத்து மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
  • கத்தரிக்காய், வெண்டைக்காய் அல்லது பாகற்காய் மாதிரி ஏதாவது ஒரு காய் நறுக்கி வைத்துக் கொள்ளவும். பாகற்காயாக இருந்தால் நன்றாக எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் கறிவேப்பிலை தாளித்து, புளி நீரைச் சேர்க்கவும்.
  • காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • நன்கு கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள பொடியையைச் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.

* இதில் மோர் சேர்த்தால் அது மோர் உப்புச்சார்.

 “தாயார் சன்னதியில் தரிசனம் முடித்துக்கொண்டு திரும்புகையில் மடைப்பள்ளிப் பிரசாதக் கடையில் சுறுசுறுப்பாக விற்பனை நடந்து கொண்டிருந்தது. சர்க்கரைப் பொங்கல் கேட்டேன். தீர்ந்துவிட்டது என்றார்கள். புளியோதரை இருந்தது. வாங்கிக் கொண்டேன். ஒரு சிறிய தொன்னைப் புளியோதரை ஆறரை ரூபாய். ஆனால் அமிர்தம் தான். திருவல்லிக்கேணி கோவிலில் சர்க்கரைப் பொங்கல் தான் ரொம்ப விசேஷம் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். அதைத் தூக்கியடிப்பதாக இருக்கிறது புளியோதரை. இதுவரை ருசிக்காதவர்கள் வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்கள்.”

 — ரா.கி.ரங்கராஜன் (நாலு மூலை)

ஒருமுறை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு ஆசை அடங்காமல் மீண்டும் கோயில் உள்வரை போய் வாங்கிச் சாப்பிட்டேன். பிரசாதம் எல்லாம் கொஞ்சமாகத் தான் சாப்பிடவேண்டும் என்று பக்கத்திலிருந்தவர்கள் செய்த நக்கலை எல்லாம் அலட்சியம் செய்து எண்சாண் உடம்புக்கு நாவே பிரதானம் என்று செயல்பட்டேன். விலை கொஞ்சம் அதிகம் என்று தோன்றியதும் உண்மை. மேலே உள்ள வரிகளைப் படித்தபோது நான் தனியாள் இல்லை என்று ஒரு பெருமை.

கீழே இருக்கும் சமையல் குறிப்பைச் சொல்லி இருப்பவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இருக்கும் திரு. சம்பத் என்பவர். அவருக்கு நன்றி!

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 5 கப்
நல்லெண்ணை – 50 கிராம்
மிளகு – 200 கிராம்

புளிக்காய்ச்சல் தயாரிக்க
புளி – 100 கிராம்
நல்லெண்ணை – 100 கிராம்
கடலைப் பருப்பு – 100 கிராம்
உளுத்தம் பருப்பு – 100 கிராம்
வெந்தயம் – 10 கிராம்
சீரகம் – 5 கிராம்
கடுகு – 10 கிராம்
பெருங்காயம் – சிறிது
முந்திரிப்பருப்பு – 50 கிராம்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள் – 10 கிராம்

செய்முறை:

  • புளிக்காய்ச்சலை முதல்நாளே செய்துவைக்க வேண்டும்.
  • புளியை கெட்டியாகக் கரைத்துவைத்துக் கொள்ளவும்.
  • நல்லெண்ணைய வாணலியில் வைத்து, அடுப்பை மெதுவாக எரிய விடவேண்டும்.
  • எண்ணை காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்ற வரிசையில் போட்டு நன்றாகச் சிவக்க வறுக்கவும்.
  • பின்னர் அதில் முந்திரிப் பருப்பையும் வறுத்துக் கொண்டு, கெட்டியாக கரைத்துவைத்துள்ள புளியைச் சேர்க்கவும்.
  • 2 நிமிடம் கொதித்தவுடன், உப்பு, மஞ்சள்பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
  • புளிநீர் பாதியாக வற்றும்வரைக் கொதிக்கவிட்டு, இறக்கி எடுத்துவைக்கவும். [மறுநாள் புளிக்காய்ச்சலைத் திறந்ததுமே கும்’மென்று மணமாக இருக்கவேண்டும். சரியாகக் காய்ச்சவில்லை என்றால் புளியின் பச்சை வாசனை வரும்.]
  • மறுநாள் பச்சரிசியை உதிர் உதிராகச் சமைத்து, ஒரு அகலமான தட்டில் அல்லது பாத்திரத்தில் பரத்தி இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணை சேர்த்து ஆறவிட வேண்டும்.
  • சாதம் ஆறியதும், கொஞ்சம் கொஞ்சமாக புளிக்காய்ச்சலைக் கலக்க வேண்டும்.
  • பின்னர் தேவையான அளவு பொடி செய்யப்பட்ட மிளகை, 50 கிராம் நல்லெண்ணையோடு கலந்து, அதையும் சாதக் கலவையில் சேர்த்துக் கலக்க வேண்டும்.