ஆன்மிகவாதிகள் கூட நாத்திகவாதிகளாகும் பொழுது இதுதான். உலகில் எப்போது கொடுமை நடந்தாலும் அவதரிப்பதாகச் சொன்ன கடவுள்களை எங்கே காணோம்?

ஐயகோ!
தமிழன்னையின்
முள்கிரீடத்தில்
இன்னுமொரு
நெருஞ்சிப்
பூவா?

[– கவிப் பகைவன் ஆசிப் மீரான், நிழல்கள் புத்தக வெளியீட்டில்….]

அன்புள்ள ஹரன் பிரசன்னா,

புத்தகங்கள் எப்போதும் மகிழ்ச்சியளிப்பவைதான் என்றாலும் நாம் அறிந்தவர் எழுதிய புத்தகங்கள் இன்னும் பிரத்யேகமான மகிழ்ச்சியைக் கொண்டுவருபவை. அப்படி எழுதியிருப்பவர் எனக்குத் தெரிந்து பத்திருபது பேர் இணையம் முழுவதும் இருக்கலாம் என்றாலும் அதனினும் பிரத்யேகமானது இந்த நூல் வெளியீடு என்பதைச் சொல்லத் தேவை இல்லை. 

அந்த விதத்தில் உங்கள் கவிதைத் தொகுப்பைக் கையில் எடுத்த நொடியே காணாமல்போனேன் என்று சொல்லவிரும்பாவிடினும்  புல்லரித்தேன் என்பதில் பொய்யில்லை. பக்கங்களைப் புரட்டும்போதுதான் அந்த அனுபவத்திற்கு நான் தயாராக இருந்திருக்கவில்லை என்ற உண்மை புரிந்தது. கடைசியிலிருந்து ஆரம்ப நாள்களை நோக்கி நகர்ந்த– புத்தகத்தின் பக்கங்களைத் திருப்பத் திருப்ப– கவிதைகளை வாசிக்க வாசிக்க- மெதுவாகப் புரிந்துகொண்டேன், நான் திருப்பிக் கொண்டிருப்பது பக்கங்களையோ கவிதைகளையோ  மட்டுமல்ல– என் கடந்த வருடங்களின் ஈடிணையில்லா இணைய நாள்களையும் சேர்த்தேதான் என்பதை.

எப்படிப்பட்ட அனுபவம் என்பதை வார்த்தைகளில் வடிக்க இயலவில்லை. இனி, இந்த உணர்விலிருந்து வெளிவந்து வெறும் வாசகனாக முடிவெடுத்து, திரும்பவும் பலமுறை கவிதைகளினூடாக நடைபயில ஆரம்பித்தாலும், நாலுகால் பாய்ச்சலில் நினைவுகள் பின்னோக்கி ஓடுவதைத் தடுக்கவே முடியவில்லை.

எல்லாக் கவிதைகளின் ஜனனத்திலும் இணையேற்றத்திலும்கூட உடனிருந்தவள் என்ற தகுதியே, என்னை இந்தக் கவிதைத் தொகுப்பிற்கு விமர்சனமோ(!) திறனாய்வோ(?!)  எழுதும் தகுதியை இழக்கச் செய்கிறது. அப்படி எழுதுவது, எழுதிய கவிஞனே விளக்க உரை எழுதக்கூடிய அபத்தத்திற்கு இணையானதாகும் என்பதையும் அறிந்தே இருக்கிறேன் என்பதும் அதை இங்கே பதிவுசெய்வதுகூட இப்பொழுதைக்கு தேவை இல்லாத ஒன்று என்பதை நீங்கள் சொல்ல நினைப்பதை அறிந்தும் சொல்லிவைக்கிறேன்.

என்றாலும், இந்த நெகிழ்ச்சியான நேரத்தில் உங்களை வாழ்த்திச் சொல்லவும் வேண்டிக் கேட்கவும் ஒன்று உண்டு என்றால் அது–  அந்தத் தகுதியின்மை எனக்கு எப்பொழுதும் கிடைக்கக் கூடியதாக இருக்கவேண்டும்; இனி வரும் உங்கள் சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், கவிதை, புதினங்கள் எல்லாவற்றினூடாக நீங்கள் இனியும் நிகழ்த்தப் போகும் இலக்கியப் பயணம் அனைத்திலும்கூட நட்பின் நாதமாக நானும் உடன் வந்தவளாகவே இருக்கவேண்டும் என்பதுதான்.

நலம் ஒன்றே நாடும் நட்புடனும் வாழ்த்துகளுடனும்,
ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.

இப்படி எல்லாம் நான் எழுதுவேன்னு நினைச்சு வந்தவங்க என்னை மன்னிச்சுடுங்க. நீங்க அட்ரஸ் மாறி வந்துட்டீங்க. நிழல்கள் புத்தகத்தை இங்க வாங்கிகிட்டு அப்படியே எஸ்’ ஆயிடுங்க.  நம்ப ரெண்டுபேருக்குமே அதுதான் நல்லது.

0

சே சே ஜெயஸ்ரீ அந்த மாதிரி ஆள் இல்லைன்னு என்னை சரியாப் புரிஞ்சுண்டு, மேல இருந்த எதையும் படிச்சு நேரத்தை வீணாக்காம, நேர ஸ்கிரீன் ஸ்க்ரோல் செஞ்சு பதிவோட இந்த இடத்துக்கே வந்தவங்க… வாங்க. என்னைப் புரிஞ்சுகிட்ட உங்களை நான் ஏமாத்தப் போறதில்லை.

நான் சொல்ல வந்தது இதுதான்:

அந்தக் கவிதைத் தொகுப்பு முழுமையானதில்ல. அது புத்தகத்தோட தலைப்புக்கு ஏத்தமாதிரி கவிஞரோட சில நிழல் பிம்பங்களைத்தான் காண்பிச்சிருக்கு. தானும் ஒரு பின் நவீனத்துவ பெருச்சாளிக் கவிஞர்னு பேர் எடுக்க, கூட்டப்பட்ட அல்லது குறைக்கப்பட்ட நீள அகலத்தோடான பிம்பங்கள் அவை. எல்லாத்துலயும் ஒரு பின் நவீனத்துவ கருமை படர்ந்து பாதாள பைரவியா நமக்கெல்லாம் புரியாம இருக்கலாம்.

கவிதைகள் குழப்பலாம்; ஆனா தன் பிம்பத்துல குழப்பம் எதுவும் வரக்கூடாதுன்னு கவிஞர் முன்ஜாக்கிரதையா தன் பழைய கவிதைகளை அப்படியே மறைச்சு ட்ரங்க்பெட்டிக்குள்ள போட்டு  பரண்மேல ஏத்திட்டாரு. நாமளும் அதை அப்படியே விட்டுடமுடியுமா?

 அதனால நிழல்களை நம்பாம நிஜங்களைத் தேடறவங்க– பின் நவீனத்துவத்துவக்கு முன்னான- அரிதாரங்கள் இல்லாத– ஒரு (காதல்) கவிஞர் உதயமான உண்மை முகத்தை, அதோட வர்ணங்கள், சமன்பாடுகளோட பார்க்க நினைக்கறவங்களுக்கு இங்க கொஞ்சம் கவிதை(!!)களுக்குள்ளிருந்து சாம்பிள் வரிகள் மட்டும்…..  (இதெல்லாம் மரத்தடி.காம்ல காணாமப் போச்சு! வேறு எங்கும் கிளைகள் இல்லை என்பதால தமிழுக்கு நான் செய்ற தொண்டா இதை எல்லாம் தோண்டி எடுத்து…..) 

 

மெத்தைக்குக் கீழே
கத்தை கத்தையாய்
காற்றே சுவாசிக்காத
கவிதைகள் நிறைந்த
காகிதங்கள் கிறுக்கல்களாய்.
……
…..

அட அது நான் ஓட்றது இல்லைங்க. அவரோட ‘காதல் சுகமானது?’ (கேள்விக்குறி ரொம்ப முக்கியம்!) கவிதைலயே தன்னைப்பத்தி அம்மணிக்கு வாக்குமூலம் கொடுத்திருக்காரு.
 
 

வெற்றுக் காகிதத்தின்
வரட்டு வார்த்தைகள்
முத்த பதிலினால்
முளைவிடுமாதலால்
மரப்பாச்சி பொம்மையையும்
மனிதனாக்கும்
அக்காதல் வித்தையை
காற்றில் அனுப்பு
காத்திருக்கிறேன் நான்.
…..

— “காதலுமது”

தோடாஆஆ…
 

 

கடலை போடறது கேட்டிருப்பீங்க. கவிஞர் கடலை தட்றாக.

காதல் கடலை
தானாய் வெடித்தால்
சுகப்பிரசவம்
அல்லாதுபோனால்
அதை உடைக்கத்
தடி எதற்கு?
தட்டல் போதும்

— “சடுகுடு”

 

பிரிவில் உணர்கிறேனடி
பாசத்தின் பரிணாம வளர்ச்சி
காதலாகிப்போனதை

அடீ புடீன்னெல்லாம் கூப்பிட்டு ஒளறலைன்னா அது காதல்கவிதையே இல்லை போல. கொடுமை! (நிஜமாவே இப்படி எல்லாம் எழுதினா எந்தப் பெண்ணாவது திரும்பியாவது பார்க்குமா, இல்லை தலைதெறிக்க ஓடுமான்னே சந்தேகமா இருக்கு!)

பூவரசம் பெண்ணே
காற்றில் என் காதல் அனுப்புகிறேன்
மேகத்தின் வழி உன் மோகம் அனுப்பு

என்னா டீலிங்கு! என்னா டீலிங்கு!!

பிரிவின் வெம்மையில் கவிதை சொல்கிறேன்
கட்டி அணைத்து என் கவிதை நிறுத்து

வந்துட்டாங்கய்யா பால்வெளிக் கவிஞர் வைரமுத்துவுக்கே போட்டியா…

— “காதல்”

 

காதல் விதை விதைக்கப்பட்டிருந்தால்
தவிர்த்திருந்திருக்கலாம்
காதல் மரமே நடப்பட்டபோது
நெஞ்சம் கொஞ்சம்
மிரண்டுதான் போனது!
அ·றிணைகளுக்கு
உயர்திணைகளின்
அவஸ்தை புரியாதோ?

— “குற்றச்சாட்டுகள்”

நெஜமாவெ முடியலடே…

 

இருபதில் இதழ் சுவைத்தபோது
இதயத்துள் மோகம் இருந்தது
முப்பதில் முயங்கியபோது…
நாற்பதின் நகக்கீறல்களில்…
ஐம்பதில் ஆசைகொண்டபோது…
அறுபதில்…

அப்பல்லாம் என்னாச்சுன்னு தெரியணுமா? அதுக்கு “அந்தி” கவிதை படிக்கணும். ஃஃஃஃ

 

காமம் தொலைத்தலினும்
எளிதும்
இனிதும்
உயிர்தொலைத்தல்

— “காமம்”

டீலா நோ டீலா…
 

 

எந்தவித முகாந்தரமுமில்லாமல்
காரணங்களைத் தேடிச் சொல்லி
விலகிய நாளிலும்
உள்ளங்கையில் உடல்வாசம் இருந்தது

— ‘மீண்டுமொரு கனத்த இரவு”

இப்பல்லாம் எக்கச்சக்க விலை கொடுத்து வாங்கற பெர்ஃப்யூமே அரைமணி நேரத்துக்கு மேல தாண்ட மாட்டேங்குது!

 

 

கடுகினுள்ளே
மோகத்தின் முத்தம் முடிந்து
காமத்தின் யுத்தம் கழிந்து
ஞான வெடிப்பு
கருத்து விளைச்சல்

— “ஞானம்”

பழம் நீயப்பா!….

 

 

செய்வினைக்கே தகர்ந்தேனெனில்
செய்யப்பாட்டு வினையில்..?

— “முத்தம்” 

கடைசியா சொல்ல விரும்பிக்கறேன். நம்ப பால்வெளிக் கவிஞர் வைரமுத்து, ஜீன்ஸ் படத்துக்கு பாட்டு எழுதவிட்டுத்தான் தமிழ்கூறும் நல்லுலகுக்கே “இரட்டைக்கிளவி” இலக்கணக் குறிப்பு புரிஞ்சதாம். அதுமாதிரி செய்வினை, செய்யப்பாட்டு வினை எல்லாம் தெரிஞ்சுக்க விரும்பினா, (மரத்தடி மக்கள் எல்லாம் ஏற்கனவே படிச்சு பாஸாயிட்டங்க!) “முத்தம்” கவிதையைப் படிச்சே ஆகணும்.

 

இன்னும், பாத்ரூம் கண்ணாடில வெந்நீர்பட்டு ஆவிபடிஞ்சா என்ன செய்யணும்? லேருந்து,

“புணரும் நாயை பொழுதுபோகாத சிறுவன் இன்னிக்கு மட்டும் ஏன் கல்லால அடிக்கலை?” …

“மூக்கு நுனில ஈ எப்ப எங்க என்னிக்கி வந்து உக்கார்ந்துச்சு; அப்றம் என்னாச்சு” … வரைக்கும் பல விஷயங்களுக்கு பதில்தெரிய நீங்க செய்யவேண்டியதெல்லாம் இதுதான்!

  • A. காதல் வந்ததும் இவிங்க இப்படி எல்லாம் கவிதை எழுதக் கிளம்பிடறாய்ங்களா
  • B. கவிதை எழுதக் கிளம்பினதும் இப்படி காதல் காஜல்னு ஒளற ஆரம்பிக்கறாங்களா

 

உங்க சரியான பதிலை [trunkbox (ஸ்பேஸ்) A(அல்லது B) (ஸ்பேஸ்)உங்கள் பெயர்] எழுதி haranprasanna at gmail dot com க்கு அனுப்புங்க அல்லது sms பண்ணுங்க.சரியான விடை எழுதறவங்கள்ல 10 பேருக்கு குலுக்கல் முறைல இவரோட “ட்ரங்க்பெட்டி கவிதைகள்” மின்னூலை அனுப்பிவைப்பாங்க.

குலுக்கல்ல தேர்ந்தெடுக்கப்படாத 99990 பேர் கவலைப்படாதீங்க. Vasan Eye Care மாதிரி, “நாங்க இருக்கோம்.” (மெயில், Buzz, facebook, orkut, twitter எல்லா வண்டிலயும் ஏத்தி அனுப்பிடமாட்டமா?)

இப்படிக்கு,
கவித்தொலைவி
மார்க்கெடிங் டேமேஜர் ஆஃப் மார்க்கெடிங் மேனேஜர்.