தலை”மை“ப் பண்புக்கு அஞ்சுபவர்கள் அடிக்கடி உணவில் சேர்க்கவேண்டிய துவையல். ஆனால் எழுத்துலகின் ‘பிதாமகன்‘ வேடத்திற்குப் பொருந்துவதாக நினைப்பவர்கள், தனக்கும் எழுத்தெல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம், முதலில் கெட்டப் மட்டுமாவது வரட்டும் என்று விரும்புபவர்கள், இதைத் தவிர்த்தல் நலம். [பெண்கள் இலக்கியவாதிகளே ஆனாலும் இந்த மாதிரி எல்லாம் ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிடமாட்டார்கள் என்று நம்புவோம். :)] வயிற்றில் பிரச்சினை, அல்லது உடல்நலமில்லாதிருந்து மீளும்போது பசியை அதிகரிக்கச் செய்யும் அருமருந்து கறிவேப்பிலை.

தேவையான பொருள்கள்:

கறிவேப்பிலை – 2 கப்
தேங்காய்த் துருவல் – 1/4 கப்
புளி – நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் – 3
உளுத்தம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது (விரும்பினால்)
பச்சை மிளகாய் – 1
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு

karuveppilai thuvaiyal

செய்முறை:

  • அதிகம் முற்றலில்லாத கறிவேப்பிலையாக உதிர்த்து 2 கப் எடுத்து, நீரில் அலசி வடித்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம் என்ற வரிசையில் சிவக்க வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு, புளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை லேசாக மட்டும் வதக்கிக் கொள்ளவும்.
  • மிக்ஸியில் கறிவேப்பிலைக் கலவையை தேங்காய்த் துருவல், தேவையான உப்பு, கொத்தமல்லி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
  • எடுப்பதற்கு முன் வறுத்து வைத்திருக்கும் காய்ந்த மிளகாய், பருப்புகளைச் சேர்த்து ஒரு ஓட்டு ஓட்டி(ஒன்றிரண்டாக உடைபட்டால் போதும்) எடுத்து வைக்கவும்.

* தேங்காய் சேர்க்க விரும்பாதவர்கள் ஒரு கேரட் சேர்த்துக் கொள்ளலாம். கேரட்டில் உள்ள கேரட்டின் சத்து லேசாக வதக்குவதாலேயே வெளிப்படுகிறது என்பதாலும் லேசாக பச்சை வாசனை போகவும், அதையும் கறிவேப்பிலையோடு சேர்த்து வதக்கிவிட்டு அரைப்பது நல்லது. நான் அதிகம் துவையல், அடை மாதிரி உணவுகளில் தேங்காய்க்குப் பதில் கேரட் (அல்லது இரண்டும் பாதிப் பாதி அளவு சேர்த்து) தான் உபயோகிக்கிறேன். தேங்காய் சேர்ப்பதைவிட சுவையாக இருக்கும்.

* தேங்காய் சேர்க்காமல் நன்றாக கறிவேப்பிலையை வதக்கி அரைத்துக்கொண்டால், பிரயாணங்களுக்கு தயிர்சாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். கெட்டுப் போகாது.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பருப்பு சேர்த்த, அதிகம் மசாலா சேர்க்காத கூட்டு வகைகள் தொட்டுக்கொண்டு சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

தயிர் சாதத்துடன் சேரும்.