முன்பெல்லாம் பாட்டி காலத்தில் எங்கள் வீட்டில் நெல்லை மணலோடு சேர்த்து வறுத்து, மணல் சூட்டோடு நெல் பொரிந்ததும் மணலைச் சலித்து, நெல் உமியை சுளகில் புடைத்து நீக்கி, அப்புறம் இருக்கும் பொரியையும் நாங்களெல்லாம் உட்கார்ந்து நெல் இருந்தால் பொறுக்க வேண்டும். வீட்டிலேயே செய்வது மிக மிக அதிக நேரம் எடுக்கும் வேலையாக இருந்தது. இதில் பாட்டியின் ஆசார கெடுபிடி வேறு. இப்போது கடைகளில் கிடைக்கும் பொரியை வாங்கிச் செய்தேன். அதிலும் ஓரளவு நம் திருப்திக்கு, நெல் கலந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டியிருக்கிறது. அவ்வளவுதான்.

தேவையான பொருள்கள்:

நெல் பொரி – 3 கப்
வெல்லம் – 1 கப்
சுக்குப் பொடி – 1/2 டீஸ்பூன்
கொப்பரை அல்லது தேங்காய்
ஏலத்தூள்
நெய்

nelpori urundai (thirukkaarththigai)

செய்முறை:

  • நெல் பொரியை நெல், உமி இல்லாமல் சுத்தமாக்கிக் கொள்ளவும்.
  • கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை சிறிது சிறிதாக மிக மெலிதாகக் கீறி ஒரு டீஸ்பூன் நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் ஒரு பெரிய வாணலியில் வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து வைத்து, நன்கு முற்றிய கெட்டிப் பாகாக வைத்துக் கொள்ளவும். (தண்ணீரில் போட்டு வெளியே எடுத்து தட்டினால் ‘ணங்’ என்று சத்தம் கேட்க வேண்டும்.)
  • பாகு வருவதற்கு முன் ஏலப்பொடி, சுக்குப் பொடி சேர்க்கவும்.
  • பாகு வந்ததும், தேங்காய்த் துண்டுகளைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • நெல் பொரியை வேகமாக பாகில் முழுமையாகக் கலக்கவும்.
  • கையில் நெய் துடைத்துக் கொண்டு, வேண்டிய அளவில் உருண்டைகளாகப் பிடிக்கவும். அதிகம் அழுத்தி, பொரியை உடைக்காமல், மென்மையாக ஆனால் நன்றாக அழுத்தமாகப் பிடித்தால் சேர்ந்தாற்போல் வரும்.
  • 4, 5 உருண்டைகளாக இடையிடையே ஒரு சுளகில் அல்லது முறத்தில் இட்டுச் சுழற்றினால் ஒன்றோடு ஒன்று இடித்து, நன்றாக உள்ளே இறுகிக் கொள்ளும். (பாட்டி காலத்தில் இந்த வேலை எல்லாம் எனக்குத் தான் வரும். சுளகு சுத்தவே இல்லை, உன் உடம்பு தான் சுத்துது என்று கிண்டல் செய்வார்கள்.)
  • பாதி செய்துகொண்டிருக்கும்போதே கலவை இறுகி எடுக்கவரவில்லை என்றால், மீண்டும் அடுப்பில் சிம்’மில் (மட்டும்) வைத்தால் பாகு இளகி எடுக்க வரும். தொடர்ந்து மிச்ச உருண்டைகளையும் பிடிக்கலாம்.
  • ஆறியதும் ஒரு காற்றுப் புகாத டப்பாவில் எடுத்துவைத்து உபயோகிக்கவும்.

கூம்பு:

என் பாட்டியெல்லாம் கையாலேயே முதலில் சாஸ்திரத்திற்கு இரண்டு கூம்பைப் பிடித்துவிடுவார்கள். எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லாததால் கூம்பில் தான் செய்தேன்.

  • கூம்பில் உள்ளே நன்றாக நெய்யைத் தடவிக் கொள்ளவும்.
  • சிறிது கலவையை உள்ளே போட்டு, ஒரு குழிவான(வட்டமான) கரண்டியால் நன்கு அழுத்திவிட்டு, பிறகு இன்னும் கொஞ்சம் கலவையைச் சேர்த்து, மீண்டும் அழுத்த வேண்டும். இதேபோல் சிறிதுசிறிதாக கலவையைச் சேர்த்து அழுத்திக் கொண்டே வரவேண்டும்.
  • கூம்பு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் நமக்கு வேண்டிய உயரம்(அளவிற்கு) அடைத்து விட்டு நிறுத்திக் கொள்ளலாம். அடைத்து முடித்ததும் அப்படியே படுத்தவாக்கில் வைக்கலாம், அல்லது அதில் இருக்கும் வளையத்தை ஒரு ஆணியில் மாட்டலாம். எப்படியும் ஆறும்வரை அதன் வாய்ப்பகுதி திறந்துதான் இருக்க வேண்டும்.
  • இரண்டு மூன்று மணி நேரம் கழித்து, நன்கு ஆறியதும் ஒரு செய்தித்தாளில் கவிழ்த்து வைத்து, ‘டங்’ என்று தட்டினால் ஒன்றிரண்டு தட்டலிலேயே கூம்பு பிரிந்து கீழே விழுந்துவிடும்.